பௌத்தக் கதைகள் - பிச்சைச் சோறு

பௌத்தக் கதைகள் முகப்பு

பௌத்தக் கதைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி

பிச்சைச் சோறு

சித்தார்த்த குமாரன் அரண்மனையை விட்டு வெளிவந்து துறவியாய் விட்டார். அரசபோகங்களும் இன்ப நலங்களும் அவருக்குப் பிறப்புரிமையாக இருந்தும், அவைகளை வேண்டாமென்று உதறித் தள்ளினார். தாய் தந்தை மனைவி மக்கள் அரசுரிமை யாவும் துறந்து வந்துவிட்டார். இன்ப நலங்களைக் குறைவு இல்லாமல் துய்த்துவந்த அவர், தமது இருபத்தொன்பதாவது அகவையிலே (வயதிலே) , மனித வாழ்க்கையின் வளமைப் பருவத்திலே, இல்லற வாழ்க்கையைப் புறக்கணித்துத் துறவு பூண்டார். ஆண்மையை விளக்கும் அழகிய மீசையையும் தாடியையும், தலைமுடியையும் சிரைத்து ஆடையணிகளை நீக்கிக் - காவியுடை உடுத்துத் துறவுக்கோலம் பூண்டார். கால்நடையாகவே நெடுந்தூரம் நடந்து சென்றார். ராஜகிருக நகரத்தையடைந்து நகரவாயிலைக் கடந்து ஊருக்குள்ளே சென்றார். வீதிகளில் இவரைக் கண்டோர் இவருடைய உடல் தோற்றத்தையும் முகப் பொலிவையும் கண்டு இமைகொட்டாமல் இவரையே பார்த்தார்கள். இவர் மண்ணுலகத்தில் வாழும் மனிதன் தானோ என்று ஐயுற்றார்கள். கடைத்தெருவில் பொருள்களை வாங்குவோரும் விற்போரும், தொழிற்சாலைகளில் தொழில் செய்வோரும், ஏனைய மக்களும் இவரை நெடுநேரம் பார்த்த வண்ணம் வியப்படைந்து நின்றனர். துறவுக்கோலம் பூண்ட சித்தார்த்தர், நேற்று வரையில் அரண்மனையில் அரச போகத்தில் இருந்தவர். இன்று கையில் திருவோடு ஏந்தி வீடு வீடாகச் சென்று பிச்சை ஏற்கிறார். வீட்டிலுள்ளவர் தங்களிடம் இருக்கும் மிகுதி உணவை அவருக்கு அளிக்கின்றனர்.

நகரத்தில், பிம்பிசார அரசனுடைய சேவகர்கள் - முகப்பொலிவும், அழகான தோற்றமும் உள்ள இந்தப் புதிய துறவியைக் கண்டு வியப்படைந்து அரசரிடம் சென்று இவரைப் பற்றிக் கூறினார்கள். பிம்பிசார அரசன் அரண்மனையின் மாடியில் சென்று இவரைப் பார்த்தான். பார்த்த பிறகு தனக்குள் ஏதோ நினைத்து, "இந்த ஆள் எங்கு சென்று என்ன செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்," என்று கட்டளையிட்டு அனுப்பினான்.

வீதியிலே வீடுதோறும் சென்று ஓட்டிலே பிச்சை ஏற்ற புதிய துறவி தமக்குப் போதுமான உணவு கிடைத்ததும் வந்தவழியே திரும்பி நடந்து நகரவாயிலைக் கடந்து வெளிவந்தார். நகரத்திற்கு அப்பால் உள்ள பண்டவ மலையை நோக்கி நடந்தார். மலையடி வாரத்தையடைந்ததும் கிழக்குப்புறமாக அமர்ந்து தாம் கொண்டு வந்த பிச்சைச் சோற்றைச் சாப்பிடத் தொடங்கினார். பாலும் தேனும், பாகும் பருப்பும், மணமும் சுவையும் உள்ள அறுசுவை உணவும் அரண்மனையிலே உணவாகக் கொண்டு பழகிய அரசகுமாரன் - சுத்தோதன மன்னனுடைய ஒரே செல்வக் குமாரன் - தாமாகவே துறவியாகி வீடு வீடாகப் பிச்சைச் சோறு வாங்கி அதை முதன் முதலாக உண்ணத் தொடங்குகிறார்! ஒரு கவளம் கையில் எடுத்து வாயில் வைக்கிறார். வாய் குமட்டுகிறது. இந்த உணவை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது; குடலைப் புரட்டுகிறது. அவர் இதுவரையில் பிச்சைச் சோற்றைக் கண்ணாலும் பார்த்ததில்லை. இப்போது இதைக் கண்டு இதை உண்ண மனம் மறுக்கிறது. வாயும் வயிறும் உண்ண மறுக்கிறதைக் கண்டு இந்தத் துறவி - புத்த நிலையையடையப் போகிறவர் - தம் மனத்திற்கு இவ்வாறு அறிவுரை கூறினார்:-

"சித்தார்த்த! நீ செல்வம் கொழித்த சிறந்த அரசகுடும்பத்திலே பிறந்து வேளைதோறும் அறுசுவை உணவுகளை உண்ணவும், தின்னவும் பழகினாய். சாலி நெல் அரிசியால் சமைத்த மணமும், சுவையும் உள்ள சோற்றை உண்டனை. அமிர்தம் போன்ற சுவையுடைய பாலும், தேனும், பாகும், பருப்பும் உட்கொண்டனை. இப்படியிருந்த நீ கந்தையை உடுத்தியிருந்த ஒரு துறவியைக் கண்டு, "நானும், இவரைப் போலத் துறவு பூண்டு, உணவை இரந்துண்டு வாழும் நால் எப்போது வரும்; அந்த நிலையை எப்போது அடையப்பெறுவேன்' என்று நினைத்து ஏங்கினாய். இப்போது நீ இல்லற வாழ்க்கையை விட்டு, நீ விரும்பிய துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறாய்! பிச்சைச் சோற்றைச் சாப்பிட ஏன் மறுக்கிறாய்? இதை ஏன் வெறுக்கிறாய்? நீ செய்வது முறையல்லவே. துறவிகள் உண்ண வேண்டியது பிச்சைச் சோறுதானே."

இவ்வாறு இவர் தமக்குள் சொல்லிக் கொண்டபோது, இவர் மனத்தில் இருந்த வெறுப்பு உணர்ச்சி மறைந்தது. இந்த உணவை - இந்தப் பிச்சைச் சோற்றை- முதன் முதலாக மன அமைதியோடு உட்கொண்டார்.

இவற்றை எல்லாம் மறைந்து இருந்து பார்த்திருந்த அரசரின் சேவகர்கள் விரைந்து சென்று பிம்பிசார அரசனுக்குக் கூறினார்கள். அரசரும் உடனே புறப்பட்டுச் சித்தார்த்தர் இருந்த பண்டவ மலைக்கு வந்தார். வந்து, இவருடைய உடல் பொலிவையும், முகத்தின் அமைதியையும் அறிவையும் கண்டு, இவர் அரசகுமாரன் என்பதை அறிந்து கொண்டார். பிறகு இவ்வாறு கூறினார்:

"தாங்கள் யார்? ஏன் தங்களுக்கு இந்தத் துறவு வாழ்க்கை? உயர் குலத்திலே பிறந்த தாங்கள் ஏன் வீடுகள் தோறும் பிச்சை ஏற்று உண்ண வேண்டும். இந்தத் துன்ப வாழ்க்கையை விடுங்கள். என் நாட்டிலே ஒரு பகுதியைத் தங்களுக்கு அளிக்கிறேன். தாங்கள் சுகமே இருந்து அரசாட்சி செய்துகொண்டிருக்கலாம்."

இதைக் கேட்ட சித்தார்த்தர் கூறுகிறார்: "மன்னரே! அரசர் மரபிலே, உயர்ந்த குலத்திலே பிறந்தவன்தான் நான். துய்ப்பதற்காக நிறைந்த செல்வமும் வேண்டிய பல இன்பங்களும் ஆட்சி செய்யக் கபிலவஸ்து நகரமும் எனக்கு இருக்கின்றன. என் தந்தை சுத்தோதன அரசர் நான் அரண்மனையில் இருந்து அரசபோகங்களைத் துய்க்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார். ஆனால், அரசே! இன்ப நலங்களை நுகர்ந்துகொண்டு ஐம்புலன்களைத் திருப்திப் படுத்திக் கொண்டு காலம் கழிக்க என் மனம் விரும்பவில்லை. உயர்ந்த அறிவை, பூரண மெய்ஞ்ஞானத்தை அடைவதற்காக இல்லற இன்ப வாழ்க்கையைத் துறந்து வந்தேன். ஆகவே தாங்கள் அளிப்பதாகக் கூறும் அரச நிலையும் இன்ப வாழ்க்கையும் எனக்கு வேண்டா."

பிம்பிசார அரசர், அரச நிலையையும் இன்ப வாழ்க்கையையும் ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அழைத்தார். சித்தார்த்தர் அதனை மீண்டும் மீண்டும் உறுதியோடு மறுத்தார்.

சித்தார்த்தருடைய துறவு உள்ளத்தைக் கண்ட பிம்பிசார அரசர், வியப்படைந்தார்; இவரது மனஉறுதியைக் கண்டு தமக்குள் மெச்சினார்.

"தாங்கள் புத்த நிலையை அடையப்போவது உறுதி. புத்த பதவியையடைந்த பிறகு தாங்கள் முதன் முதலாக அடியேன் நாட்டிற்கு எழுந்தருள வேண்டும்," என்று அரசர் கேட்டுக் கொண்டார். அரசர் பேசும்போது அவரையறியாமலே அவருடைய தலை வணங்கிற்று; கைகள் கூப்பின.

சித்தார்த்தர் அவ்வாறே செய்வதாக விடையளித்தார். பிம்பிசாரர் விடை பெற்றுக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். வரும் வழியில் அரசருக்குச் சித்தார்த்தரைப் பற்றிய எண்ணமே இருந்தது. "நிறைந்த இன்ப நலங்களையும், உயர்ந்த அரச நிலையையும் வேண்டுமென்றே மனதறிந்து உதறித் தள்ளிய தூய துறவி இவர். இப்படிப்பட்ட உண்மைத் துறவிகளைக் காண்பது அருமையிலும் அருமை. இவர் கட்டாயம் புத்த நிலையையடைவார். இவர் எண்ணம் நிறைவேறட்டும். இவர் முயற்சி வெல்வதாக." தம்முள் இவ்வாறு நினைத்துக் கொண்டே பிம்பிசார அரசர் அரண்மனையையடைந்தார்.