லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி மற்றும் அவர்கள் பெற்றோர்கள். இவர்கள் எம் குடும்பத்தார்.
குரளிசைக்காவியத்தில் பாடிய அயிரம் பேரும் - சிறார் முதல் முதியோர் வரை - மற்றும் மொழிபெயர்த்த இருவரும் எம் உறவினர்.
மொழி, குடி, நாடு, இனம், பால் வேறுபாடின்றி குரளிசைக்காவியப் படைப்பின் அருமைபாராட்டும் அனைவரும் எம் மக்கள்.
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
(கூறாமை நோக்கக் குறிப்பறிவான் - ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் நினைத்ததை அறிகின்றவன்; எஞ்ஞான்றும் - எக்காலமும்; மாறாநீர் - வற்றாத நீர் (சூழ்ந்த); வையகம் - பூமி(யில்); கணி - சான்றோன்.)
புத்தர் தமது போதனைகளை, தம் சீடர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப அமைத்தார். தம் முன் இருப்போரின் உள்ளத்தை புரிந்து கொண்டு சரியான உபாயம் மூலம் அவர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
https://youtu.be/VlryFEkOlNE?si=AF2JIUIuyHFvK2YC
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
"அளத்தற்கியலாத பாரமிதைகளை அளவில்லாமல் நிறைத்து,
நடுக்கமில்லாத புத்தபெருமானாகிய கதிரவன் தோன்றினார்,"
என்று மணிமேகலையில் (காதை 26, 45-46) குறிப்பிடப்படுகிறது. (மேற்குறிப்பிட்டது உரையில் வரும் விளக்கம்)
பாரமிதை என்பதன் பொருள் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குரிய பண்புகள். இந்த பாரமிதைகள் பத்தில் ஒன்று - ஒழுக்கம் (சீலம்).
பௌத்த மரபில் அதற்கான உவமானம்:
கவரிமானின் அடர்ந்த மயிர் கொண்ட வால் எங்கேனும் சிக்கிக் கொண்டால் அது அதனை வெடுக்கென்று பிடுங்கிக் கொள்ளாமல் பொறுமையாக விடுவித்துக் கொள்ளவே முயற்சிக்கும் (ஏனென்றால் அந்த மயிர் இழக்க நேரிட்டால், அது குளிர் பிரதேசத்தில் வாழ்கின்றபடியால், அதன் உயிருக்கே ஆபத்து உண்டாகும்).
அது போலவே ஒழுக்கத்தை முழுமையாக்குவதென்பது நமது உடல், சொல், உள்ளம் மூலமாக செய்யும் செயற்பாடுகள் எவ்வாறு உலகில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை நன்று அறிந்து செயல்படுவதாகும். நமது உரிமைகளை - அவை நமக்கு கிடைக்காவிட்டாலும் சரி - அவற்றை வன்முறையால் பெற்றுக்கொள்ளக் கூடாது.
ஆதாரம்: Paramita: The Ten Perfections
A commentary on Similes in the Pali Canon, by Helmuth Hecker
"உயிரே போனாலும் ஒழுக்கம் தவற மாட்டார்கள் மாண்புடையோர்" என்று குரளின் பொருள் கொள்ளலாம்.
https://youtu.be/c3k71hoBE4w?si=U7D4giGqLwAMNmlh
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
(செவிச்செல்வம்: கேள்வியறிவு, செவியால் கேட்டுச் சேர்த்த அறிவு)
தம்மஸ்ஸாவன சுத்தம்
அங்குத்தர நிக்காயம் AN 5.202
“தர்மத்தை கேட்பதால் ஐந்து நன்மைகள் கிடைக்கும். எந்த ஐந்து?
1. முன்பு கேட்காததை ஒருவர் கேட்கிறார்.
2. முன்பு கேட்டதை தெளிவுபடுத்துகிறார்.
3. சந்தேகங்களை நீக்குகிறார்.
4. தம் கருத்துகளை நேராக்குகிறார்.
5. தம் மனம் அமைதியாகிறது.
இவை தான் தர்மத்தை கேட்பதன் ஐந்து நன்மைகள்.”
https://youtu.be/zfPDipVmB0c?si=0jF3k1yquAKE9xyZ
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
(நோற்பார்- தவஞ் செய்வார். இன்னா-துன்பம்)
பாரமிதைகளில் ஒன்று பொறுமை (khanti).
போதிசத்துவர் எவ்வாறு தம் முன்பிறவிகளில் பொறுமையை முழுமையாக்கினார்?
கந்திவாதி ஜாதக கதைச் சுருக்கம் (Khantivādi Jātaka #313)
போதிசத்தர் ஒரு காலத்தில் காசி நாட்டில் மிகுந்த செல்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இறந்த பிறகு, அவர் தம் பெரும் செல்வத்தை தானமாக வழங்கி, இமயமலை பகுதியில் ஒரு துறவியானார். பின்னர் மீண்டும் காசிக்கு திரும்பி, அரசனின் பூங்காவில் தங்கினார்; அங்கு அரசனின் தளபதி அவரை கவனித்துக் கொண்டார்.
ஒருநாள், காசி நாட்டு அரசன் கலாபு, தன் அரண்மனை பெண்களுடன் குதூகலிக்க அந்த பூங்காவிற்கு வந்தான். மது அருந்திய நிலையில் தூக்கத்தில் ஆழ்ந்தான். அந்தப் பெண்கள் அரசன் தூங்கிவிட்டபடியால் பூங்காவில் சுற்றித் திரிந்து, அந்த துறவியை சந்தித்து, அவரிடம் உபதேசம் செய்யுமாறு கேட்டனர். துறவி பொறுமை பற்றி போதித்தார்.
அரசன் விழித்தபின், தன் பெண்களைத் தேடிச் சென்று துறவியின் அருகில் இருப்பதைக் கண்டு சீற்றம் கொண்டான். அவர் பொறுமையைப் பற்றி போதித்ததாகக் கேள்விப்பட்டதும், அரசன் துறவியின் பொறுமையை சோதிக்க உத்தரவிட்டான். துறவி பலவகையான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அமைதியாக இருந்ததால், அரசன் மேலும் கோபமடைந்து, அவரது கை கால்களை வெட்ட உத்தரவிட்டான். அப்போதும் துறவி பொறுமையை இழக்கவில்லை, அரசன் மீது கோபப் படவில்லை.
அரசன் பூங்காவை விட்டு வெளியேறியபோது, பூமி பிளந்து, அவீசி நரகத்தில் விழுந்தான். தளபதி, நடந்ததை அறிந்து, துறவியிடம் மன்னிப்புக் கேட்க விரைந்தார். துறவி எந்தவிதமான விரோதமும் இல்லையெனக் கூறி, அரசனுக்கு தம் அன்பை செலுத்தி உயிரை விட்டார்.
இந்த கதையில் வந்த கலாபு என்ற காசி நாட்டு அரசன் தேவதத்தன். தளபதி சாரிபுத்திரர். துறவி போதிசத்துவர்.
பொறுமையின் சிகரத்தை வர்ணிக்கும் பிரபலமான ஜாதகக் கதை இது.
https://youtu.be/vQbJ1R5tjyI?si=kWryt8BqGQ0blr7n
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
(ஒன்றாக-நிச்சயமாக; மற்றதன் பின்சாரப் - மற்றது, அதன்+பின்+சாரும்)
தம்மபதம்
வன்முறை என்றால் அனைவரும் நடுங்குவார்கள்; அனைவரும் மரணத்துக்கு பயப்படுகிறார்கள். அனைவருக்கும் தங்கள் உயிர் மேல் பிரியமுண்டு. தம்மை மற்றவர்களின் இடத்திலிருந்து பார்த்தபின் ஒருவர் கொள்ளக்கூடாது; மற்றவர்களை கொள்ள வைக்கவும் கூடாது.
(தம்மபதம் 129/130)
மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத ஒருவன், ஒரே ஒரு தவறைச் செய்கிறான்— அது பொய் பேசுவது என்றால், அவன் எந்த தீமை செய்வதற்கும் தயங்க மாட்டான்.
(தம்மபதம் 176)
https://youtu.be/5K_nBUU3NHg?si=aTFJ92IkeUbDr0if
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
(அருள்-இரக்கம்; உழல்தல்-அலைதல்)
தீக நிகாயம் 31 சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
தொடர்ந்து சூதாடினால் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன:
1. சூதாட்டத்தில் ஒருவர் வெற்றி பெற்றால் அவரை வெறுப்பார்கள்.
2. அவர் தோல்வியடைந்தால், 'பணத்தை இழந்துவிட்டேன்!' என்று புலம்புவார்.
3. உடனுக்குடன் செல்வம் குறைகிறது.
4. ஒரு சபையில் அல்லது நீதி மன்றத்தில் சூதாடுபவனின் பேச்சை மதிப்பாரில்லை.
5. நண்பரும், சகாக்களும் அவரை துச்சப்படுத்துவார்கள்.
6. அவருக்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள், ஏனெனில் சூதாடுபவன் நல்ல கணவனாக மாட்டான் என மக்கள் கூறுவர்.
தொடர்ந்து சூதாடும் பழக்கத்தால் ஏற்படும் ஆறு பாதிப்புகள் இவை.
https://youtu.be/r4uDxFIbjOc?si=cc3QVi0pCF2wqTs6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(எய்து-தல் - அணுகுதல்.
எய்தாப் பழி - வேண்டாத, ஆனால் தவிர்க்க முடியாத பழி.)
பகவான் புத்தரின் எண் வழி மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும்.
ஒழுக்கம் (சீலம்) என்ற தலைப்பில் வருவன:
நல்வாய்மை Right Speech
நான்கு வகையான தவறான பேச்சு உள்ளன. இவற்றை தவிர்க்க வேண்டும்.
1. ஏமாற்றுப் பேச்சு அல்லது பொய்ப் பேச்சு.
2. கடுமையான பேச்சு
3. வம்புப் பேச்சு
4. விதண்டைப் (வெட்டிப்) பேச்சு
நற்செயல் Right Action
நற்செயல் என்றால் என்ன?
1. கொலை செய்வதைத் தவிர்த்தல்,
2. திருடுவதைத் தவிர்த்தல்,
3. தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடாமல் இருத்தல். இவையே நற்செயல்கள்."
— SN 45.8
நல்வாழ்க்கை (நற்சீவனோபாயம்) Right Livelihood
புத்தர் தமது சீடர்களிடம், மற்ற உயிர்களுக்குத் தீங்கு பயக்கும் எந்தத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறிப்பாகக் கீழ்க்காணும் இந்த ஐந்து தொழில்களைச் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்:
1. இறைச்சியைக் கொண்டு தொழில் செய்தல் அதவது கசாப்புக்கடை நடத்துவது.
2. நச்சுப் பொருட்களை வைத்துத் தொழில் செய்தல்.
3. ஆயுத வியாபாரம் செய்தல்.
4. மனித அடிமை வியாபாரம் செய்வது, விபச்சாரத் செயல்பாடுகளில் ஈடுபடுவது.
5. மது போன்ற போதைதரும் பொருட்களில் வணிகம் செய்வது.
மேலும் புத்தர் தனது சீடர்கள் வஞ்சகத்தோடும், கபடத்தோடும், வற்புறுத்தியும், சூழ்ச்சி செய்தும் அல்லது பிற நேர்மையற்ற வழிகளிலும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது என்கிறார்.
https://youtu.be/z4RPgQSe4JI?si=pqe1AVkMFKWCEbiK
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
(தவம் - புண்ணியம்
வியன் - அகன்ற)
இந்தக் குரள் மழை பற்றியது என்றாலும் தானத்துக்கும் புண்ணியத்திற்கும் உள்ள மதிப்பையும் வலியுறுத்துகிறது.
ஆன்மீக நோக்கத்துடன் தம் உடலை வருத்திக் கொள்வதை தவம் என்றும் கூறுவர். புத்தர் அதனை பயனற்றது என்றார். துறவு பூண்ட பிறகு ஆறு வருடங்கள் தன் உடலை வருத்திக் கொண்டார். ஆனால் எந்த பயனும் தரவில்லை. அதனால் அதனை கைவிட்டார். இளவரசராக வாழ்ந்த காலத்தில் அளவில்லாத புலன் இன்பங்களை அனுபவித்தார். அதுவும் திருப்தி தரவில்லை. எனவே பௌத்த பாதை இரண்டு விளிம்புகளையும் கைவிட்ட ஒரு நடுப் பாதை. தவம் என்றால் புண்ணியம் என்றும் பொருள் படும். அந்தப் பொருள் இங்கு பொருந்தும்.
புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒன்று என்று புத்தர் கூறினார்.
மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்.
1. தானம் செய்தல்
2. ஒழுக்கத்தோடு வாழ்தல். தானம் செய்வதை விட மேன்மையானது.
3. நற் கடைப்பிடி அதாவது மன கவனத்தோடு இருத்தல். (மனதில் தோன்றும் தீய எண்ணப் போக்குகளை உடனே கை விடுவது. நல்ல எண்ணங்களை வளர்ப்பது.) மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளை விட மேன்மையான புண்ணியம் சேர்க்கும் வழி இது.
https://youtu.be/XFu3Md3nHA4?feature=shared
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(எஞ்ஞான்றும்-எக்காலமும்;
தவா-தவறாமல்:
ஈன்தல்-கருவுயிர்த்தல்
வித்து-விதை)
ஆசைக்கும் பிறப்பிற்கும் உள்ள தொடர்பை இந்த மணிமேகலை வரிகளில் காணலாம்:
..
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப...
மணிமேகலை 30,110-117
பொருள்:
இன்பம் துன்பம் போன்ற நுகர்ச்சிகளின் (feelings) காரணமாக வேட்கை (craving) தோன்றுகிறது.
வேட்கையின் காரணமாக பற்றும் (clinging),
பற்றியின் காரணமாக பவமும் (கருமத்தொகுதி being),
பவம் காரணமாக பிறப்பும் (தோற்றம் birth),
பிறப்பின் காரணமாக துன்பம் (suffering நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்கள்) தோன்றுகிறது.
இதிலிருந்து ஆசை (வேட்கை, பற்று) பிறப்பின் காரணம் என்று அறிந்து கொள்ளலாம். (திரிபிடக ஆதாரம் சங்யுத்த நிகாயம் 12.1)
https://youtu.be/BHGjMl3DgKI?feature=shared
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(ஈனும்-தரும்;இன்னா-துன்பம்; கோள்-துணிபு/கொள்கை)
நல்லூற்றம் (Right Intention) மார்க்கத்தின் இரண்டாம் பிரிவாகும். ஊற்றம் என்றால் அறிவு.
இந்தப் பிரிவைப் பகுத்தாய்ந்த புத்தர், மூன்று விதமான நல்லூற்றம் இருப்பதாகக் கூறுகிறார்:
1. துறவு பற்றிய எண்ணம், பற்று நீக்கும், புலன் இன்பங்கள் நாடுவதை கட்டுப்படுத்தும் நோக்கம்.
2. வெறுப்புக் கொள்ளாமல் இருத்தல் அல்லது நட்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற நோக்கம்.
3. தீமை செய்யாமல் இருத்தல் (அகிம்சை) அல்லது இரக்கத்தோடு இருக்கும் நோக்கம்.
இந்த இரண்டாம் பிரிவாகிய நல்லூற்றம், விஷ வேர்களான காமம் (பேராசை) மற்றும் வெகுளியை (வெறுப்பு) தணிக்க உதவுகிறது.
https://youtu.be/ydWvT2uVnxE?feature=shared
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
(உண்ணற்க-உண்ண வேண்டாம் ஒரு போதும்;
அற்கு-தல்-நிலைபெறுதல்;
உணில்-அப்படி உண்டால்;
எண்ணப்படு-தல் -மதிக்கப்படுதல்)
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். — மு. வரதராசன்
எந்நேரமும் அக்கறையுடன், மனத் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று புத்தர் கூறினார். ஆனால் மது அருந்தும் போது அந்த மனத் தெளிவு கெடுகிறது. மனத் தெளிவு இல்லாத போது சரியானது எது, தவறானது எது என்று பாகுபடுத்த முடியாமல் போகிறது.
தீக நிகாயம் 31 சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
மதுபானம் அருந்துவதால் உள்ள ஆபத்து
வழக்கமாக மதுபானம் அருந்துவதால் உண்டாகும் ஆறு ஆபத்துக்களிவை:
1. செல்வம் நாசமாதல்.
2. சண்டை சச்சரவு அதிகரித்தல்.
3. நோய் பிணி உண்டாதல்.
4. கெட்ட பெயரெடுத்தல்.
5. நாணமற்ற செயலில் ஈடுபடுதல்.
6. புத்திஞானக் கெடுதல்.
https://youtu.be/nzrOE4LLBPE?feature=shared
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
(பணிவு-செருக்கின்மை, அடக்கம்;
தகைத்து-தன்மையுடையது)
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும். — மு. வரதராசன்
மங்கள சுத்தத்தில் (சுத்த நிபாதம் Snp 2.4) 38 மங்களங்கள் கூறப்பட்டுள்ளன. அதன் நடுப்பகுதியில் வரும் சில வரிகள்:
பாலி மொழியில்:
Gāravo ca nivāto ca,
santuṭṭhi ca kataññutā;
Kālena dhammassavanaṁ,
etaṁ maṅgalamuttamaṁ.
தமிழில்:
மதித்தல், பணிதல்,
திருப்தியாதல், செய்ந்நன்றியறிதல்,
சரியான நேரத்தில் அறவுரை கேட்டல்
இவை உத்தமமான மங்களங்கள்.
"Gāravo ca nivāto ca"
Gāravo காரவோ என்றால் மரியாதைகாட்டுதல், கௌரவிப்பது.
nivāto நிவாதொ என்றால் பணிதல், செருக்கின்மை
பகவான் புத்தர் செருக்கு ஒரு மிக ஆபத்தான மன மாசு என்றார். நான் நான் என்று அகம்பாவத்தை, தலை கனத்தை தூக்கி விடும் இந்த செருக்குக்கு பரிகாரம் தான் பணிவு.
அவமரியாதையுடனும் செருக்குடனும் இருப்போர் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஞானம் உள்ளவர்கள் அவர்களுடன் சேர விருப்பப்பட மாட்டார்கள். ஞானம் உள்ளவர்களுக்கு அப்படிப்பட்டவர்கள் தேவையில்லை. ஆனால் ஞானமுள்ள ஒருவரிடம், அறிவு உள்ள ஒருவரிடம் மரியாதை காட்டும் போது, அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் விருப்பம் காட்டும் போது அதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
மரியாதையும் பணிவும் இருக்கும் போது பௌத்தப் பாதையில் முன்னேறலாம். ஆசிரியர்கள் நமக்கு கற்பிக்க விருப்பப்படுவார்கள்.
(தர்ம உரைகளிலிருந்து தொகுத்தது)
https://youtu.be/JxSfVLcPmXA?feature=shared
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
(இனிதீன்றல்-இனிது+ஈன்றல்
எவன்கொலோ-எதனாலோ?)
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
— மு. வரதராசன்
சுத்த நிபாதம் Snp 3.3 சுபாசித சுத்தம் (நன்றாகப் பேசுவது)
(சுருக்கம்)
பகவான் புத்தர் கூறினார்:
“துறவிகளே, நான்கு நற்பண்புகளை இயல்பாகக்கொண்ட பேச்சு நற்பேச்சாகும், குற்றம் குறையற்ற பேச்சாகும் சான்றோர்களால் கண்டிக்கப்படாத பேச்சாகும். அந்த நான்கு பண்புகள் யாவை?
1. ஒரு துறவி எப்போதும் நன்மை பயக்கும் நல்ல பேச்சே பேசுகிறார், தீமை பயக்கும் மோசமான பேச்சு பேசுவதில்லை;
2. நேர்மையான நியாயமான பேச்சே பேசுகிறார், நேர்மையற்ற அநியாயமான பேச்சு பேசுவதில்லை;
3. பிரியம் உண்டாக்கும் இனிமையான பேச்சே பேசுகிறார், வெறுப்பூட்டும் கடுமையான பேச்சு பேசுவதில்லை;
4. உண்மையான பேச்சே பேசுகிறார், பொய்யான பேச்சு பேசுவதில்லை.
இந்த நான்கு பண்புகளையும் கொண்ட பேச்சு நற்பேச்சாகும், குற்றம் குறையற்ற பேச்சாகும், சான்றோர்களால் கண்டிக்கப்படாத பேச்சாகும்.
அப்போது மதிப்பிற்குரிய வங்கீசர், தமது இருக்கையிலிருந்து எழுந்து, மேலாடையை சரி செய்து தோலின் மீது போர்த்திக்கொண்டு, தமது இரு கைகளையும் நெஞ்சுக்கு எதிரே தாமரை மொக்கு போல குவித்து வைத்து புத்தரை வணங்கி, புத்தரின் அனுமதியோடு, கீழ்க்கண்ட உள்ளம் கவரும் பாடல்களைக் கூறினார்:
"தன்னையும் துன்புறுத்திக் கொள்ளாத, மற்றவர்களுக்கும் தீங்கிழைக்காத பேச்சே பேசுவோமாக. அந்த பேச்சே உண்மையில் நல்ல பேச்சாகும்.
பிரியமூட்டும் இனிமையான பேச்சே பேசுவோமாக. மற்றவர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் பேச்சு, யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காத பேச்சு, அனைவருக்கும் இனிமையாக இருக்கும் பேச்சே பேசுவோமாக.
உண்மையில், வாய்மையே மரணத்தை வெல்லும் பேச்சாகும்; இது தொன்மையான கோட்பாடாகும், இலட்சியமாகும், தம்மமாகும்- மெய்ம்மையில் உறுதியாக நிலைபெற்று அமைதியில் திளைத்திருப்போர் மொழிவது இதுவேயாகும்.
போதி மர நிழலில் மெய்ஞானம் உணர்வு பெற்ற புத்தர் பேசும் பேச்சு, கட்டுகள் தளைகள் அற்று பேரமைதியை அடைவதற்கான பேச்சு, துக்கம் துயரமாகிய சுமைக்கு முடிவு காண்கின்ற பேச்சு - அது விஞ்சவொண்ணா நற்பேச்சு, ஒப்பும் உயர்வுமற்ற நற்பேச்சு."
(ஓ. ரா. ந. கிருஷ்ணன் மொழிபெயர்ப்பு)
https://youtu.be/pr-ZuZYtGes?feature=shared
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
- மு. க உரை
புத்தர் கூறினார்:
"....நீங்களும் நானும் (பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற) சஞ்சார (Saṃsāra) சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றிச் சுற்றி வந்துள்ளோம்."
பௌத்த மரபில் எப்போது இந்த பயணத்தை தொடங்கினோம் என்பது ஒதுக்கப்பட வேண்டிய கேள்வி. எப்போது தொடங்கினோம், யார் தொடக்கி வைத்தார்கள் என்பதை தெரிந்து எந்த பயனும் இல்லை. இப்போது பிறவி எடுத்து விட்டோம். அதனால் துன்பம் அனுபவிக்கின்றோம். இந்த துன்பத்தை எப்படி முடிப்பது என்பது தான் முக்கியமான கேள்வி. அதை உன்னதமான எண் வழி மார்க்கம் மூலமாக, ஒவ்வொருவரின் சொந்த முயற்சி கொண்டு மட்டுமே முடிக்க முடியும். மற்ற சில தர்மங்களில்/மதங்களில் இந்தப் பயணத்தை ஒரு கடவுள் நம்மை படைத்து தொடக்கி வைத்ததாக சொல்வார்கள். ஆனால் அந்த கடவுளை யார் படைத்தது என்று கேட்டால், அது ஒதுக்க வேண்டிய கேள்வி என்பார்கள்.
பௌத்த மரபில் தோன்றச்செய்யும் கடவுள் என்ற கருத்துக்கு தேவை ஏற்படவில்லை. பௌத்த மரபிலும் தேவலோகங்கள் இருக்கின்றன. அங்கு வாழ்வோரை சில சமயம் கடவுள் என்று கூட சொல்வதுண்டு. ஆனால் அவர்களும் சஞ்சார சக்கரத்தில் சிக்கியவர்கள் தான். ஒரு நாள் மரணம் எய்துவார்கள். மீண்டும் எங்கே பிறப்பார்கள் என்பது அவர் அவர்களின் கன்மத்தை பொறுத்தது.
புத்தரின் ஒன்பது பண்புகளை நினைவு கூறல்:
பாலி மொழியில்:
இதிபிஸோ பகவா
1. அரஹம்,
2. சம்மா-சம்புத்தோ,
3. விச்சா சரண சம்பண்ணோ,
4. சுகதோ,
5. லோகவிது,
6. அனுத்தரோ புரிச தம்ம சாரதி,
7. சத்தா தேவ மனுஸ்ஸானம்,
8. புத்தோ,
9. பகவா'தி.
சம்மா-சம்புத்தோ என்றால் எந்த ஆசிரியரின் உதவியும் இல்லாமல், தன் சொந்த முயற்சியால் முழுமையாக விழிப்புற்று, நான்கு உன்னத உண்மைகளை உய்த்துணர்ந்து உலகுக்கு போதித்தவர். இருள் சூழ்ந்த உலகத்தில் வெளிச்சத்திற்கு முதலில் வழிகாட்டியது புக்தரே. எனவே அவர் ஆதி.
பகவா என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர். எனவே புத்தர் பகவா என்றும் அழைக்கப்பட்டார்.
அகராதியிலிருந்து பகவன் என்றால் புத்தரை குறிக்கும், முழுமையாக ஞானம் பெற்ற அருகரையும் குறிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பகவன் pakavaṉ , n. பகவான். 1. See பகவான், ....... 3. Arhat; அருகன். (திவா.) 4. Buddha; புத்தன். (திவா.) 5. Brahmā; பிரமன். (பிங்.) 6. Viṣṇu; திருமால். ........
எனவே ஆதி பகவன் புத்தர் என்று கருதலாம்.
https://youtu.be/8UkMzvl1gv4?feature=shared
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
(நடுவின்றி-நேர்மையின்றி
நன்பொருள்-நேர்மையான வழியில் பெற்ற பொருள்
வெஃகல்-பேராசை
பொன்று-தல்-அழிதல்.
குற்றம்-பழி)
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
— மு. வரதராசன்
தம்மப்பதம் 335
இந்த உலகில் உள்ள இழிந்த ஆசைகளுக்கும் பற்றுகளுக்கும் அடிமையாகிவிட்டவனுக்கு
துக்கங்கள் கனமழை பெற்ற புல்லைப் போல அதிகரிக்கின்றன.
தம்மப்பதம் 336
இந்த உலகில் கடக்க மிகவும் கடினமான இழிந்த ஆசைகளை வெல்லும் ஒருவனிடமிருந்து துக்கங்கள், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் ஓடிவிடுவது போல, மறைந்து விடுகின்றன.
https://youtu.be/MfAf9nI8wAk?feature=shared
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(அளவிறந்து-அளவு கடந்து)
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்
— மு. க உரை
விபாக சுத்தம் (அங்குத்தர நிகாயம் AN8:40)
(வினைப்பயன்)
புத்த பகவான் கூறுகிறார்:
"திருடுதலில் ஈடுபடுவது, அதை வளர்ப்பது, அதில் தொடர்ந்து செயல்படுவது—அது நரகத்திற்கும், மறுபிறப்பில் சாதாரண விலங்காகவும், பசி தீராத பேய்களின் உலகத்திற்கும் வழிவகுக்கும். திருடுதலால் ஏற்படும் விளைவுகளில் மிகச் சிறியது, ஒருவர் மீண்டும் மனிதராக பிறக்கும்போது, அவருடைய செல்வத்தை இழப்பதற்கு அது வழிவகுக்கும்."
https://youtu.be/7JGP-CcV7B0?si=AGvYR-sjVlkgXUBU
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
(இடுக்கண் படினும் - இக்கட்டு வந்தாலும்; நடுக்கற்ற-நடுக்கம் இல்லாத; காட்சியவர்-தெளிவினை உடையார்)
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
— மு. வரதராசன்
அனாதபிண்டிகர் புத்த சாசனத்தில் ஒரு தலைச்சிறந்த இல்லறத்தார். அவர் இயற்பெயர் சுதத்தர். ஆனால் அவர் புகலிடம் இல்லாதவர்க்கு (அனாதைகளுக்கு) தொடர்ந்து உணவு தானம் (பிண்டி) தந்தமையால் அவரை அனைவரும் அனாதபிண்டிகர் என்று அழைத்தனர்.
அவர் ஒரு செல்வந்தர். மேலும் சோதாபன்ன ஞான நிலையை அடைந்த தூய்மையானவர்.
அனாதபிண்டிகர், ஜேதவன மகாவிகாரையை அமைப்பதற்காக மட்டுமே 54 கோடி நிதி செலவிட்டார். புத்தர் ஜேதவனத்தில் தங்கும் போதெல்லாம் தினமும் மூன்று வேளை மிகுந்த மரியாதையுடன் புத்தரிடம் தரிசனத்திற்கு வந்தார். செல்லும்போதெல்லாம், 'இளைய பிக்குகள், சாமணர்கள் என் கைகளைக் கவனித்து, 'அவர் என்ன கொண்டு வந்தார்,' என்று பார்ப்பார்கள்' என்று நினைத்து, ஒருபோதும் வெருங்கையோடு செல்வதில்லை.
காலைப்பொழுது அரிசி கஞ்சி எடுத்துச் செல்வார், காலை உணவுக்குப் பிறகு நெய், அன்று கடையப்பட்ட வெண்ணெய் மற்றும் மருந்துகள், மாலைப்பொழுது பூக்கள், வாசனைப் பொருட்கள், தயிலம், உடைகள் என்று எதையாவது கொண்டு செல்வார்.
ஆனால், வியாபாரத்தில் ஈடுபட்டவர்களால் அவரிடம் வாங்கிய 18 கோடி நிதி கடன் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. மேலும், குடும்பத்தாரின் 18 கோடி நிதி, ஆற்றங்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது, பெரு வெள்ளம் கரை புரண்டு ஓடியபடியால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அவருடைய செல்வம் நாளடைவில் குறைந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார்.
அனாதபிண்டிகரின் இல்ல வாசலில் வாழ்ந்த ஒரு தேவதை, அவரிடம் புத்தரையும் அவருடைய சீடர்களையும் ஆதரிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினாள்; ஏனெனில் அதனால் தான் அவர் வறுமைக்கு தள்ளப்பட்டதாக அவள் நினைத்தாள். ஆனால் அனாதபிண்டிகர் அந்த தேவதையை கடிந்து கூறி, தன் இல்லத்திலிருந்து விரட்டிவிட்டார்.
முன்பு போலவே அவரது விருந்தோம்பல் தொடர்ந்தது. பிக்குச் சங்கத்திற்கு தினமும் தானம் அளித்தார். ஆனால் தன் வறுமை சூழ்நிலையின் காரணமாக முன்போல் சுவையான உணவுகள் தர முடியவில்லை.
ஒரு நாள் புத்தர் கேட்டார்:
“இல்லறத்தாரே, எங்களுக்கான உணவு தானம் இன்னும் உங்கள் இல்லத்தில் தரப்படுகிறதா?”
“ஆமாம் ஐயா, ஆனால் இப்போது வெறும் கஞ்சி, புளிக்காய்ச்சல் மட்டும் தான் தர முடிகிறது.”
அப்போது புத்தர் கூறினார்:
“இல்லறத்தாறே, ‘நான் ஆசானுக்கு தருவது சாதாரண உணவு’ என்று எண்ண வேண்டாம்; அதற்காக மனம் வருந்த வேண்டாம். தூய்மையான நோக்கத்தோடு தரும்போது, புத்தருக்கும் மற்றவருக்கும் தரப்படும் உணவு ஒரு போதும் மட்டமானதாகாது."
தூய்மையான உள்ளம் கொண்ட செல்வந்தராக இருந்த அனாதபிண்டிகர் ஏழையான போதும், அவருக்கு வறுமை என்ற துன்பம் வந்தடைந்தும், தீமை செய்யாது இருந்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து நற்காரியங்களை செய்து கொண்டு வந்தார்.
(ஆதாரம்: தம்மபதம் அத்தகதா 9.4)
https://youtu.be/FlQINZTjP64?feature=shared
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
(அவ்வியம்-பொறாமை,வஞ்சகம்; செவ்வியன்-நேர்மையுடைய வன்)
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
— மு. வரதராசன்
தம்மப்பதம் 119
பாவி, புண்ணியமின்றி,
செய்த பாவம் பழுக்காத வரை நலனைக் காண்கிறான்;
ஆனால் பாவம் பழுத்ததும்,
அவனுக்கு பாவம் மட்டுமே தோன்றும்.
தம்மப்பதம் 120
நல்லவன், அவன்
செய்த புண்ணியம் பழுக்காத வரை துன்பத்தைச் சந்திப்பான்.
ஆனால் புண்ணியம் பழுத்ததும்,
அவன் நலனையே காண்பான்.
https://youtu.be/sxSHjzvgARY?feature=shared
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
(இரத்தல்-யாசித்தல்;ஈதல்-கொடுத்தல்:
கரத்தல்-மறைத்தல்;
தேற்றல்-தெளிந்தறிதல்
கரத்தல் தேற்றாதார்-மறைக்கத் தெரியாதவர்)
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
— மு. வரதராசன்
"தானம் தாங்கிச் சீலம் தலைநின்று"
என்று மணிமேகலை காதை 30 தொடங்குகிறது.
அதாவது, "தானத்தை மேற்கொண்டு;
ஒழுக்கங்களின் வழி நின்று;".
எனவே தானமும் சீலமும் பௌத்தப் பாதையின் அடித்தளம். இவை இரண்டும் புண்ணியம் சேற்கும் செயல்கள்.
தானம் செய்வதால் செய்தவர் புண்ணியம் சேர்கிறார்.
அவர் மனமுவந்து தருவதால்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் மகிழ்ச்சி பெற்று அவர்களும் புண்ணியம் சேர்த்திருப்பார்கள். மற்றவர் புண்ணியம் செய்வதை பார்த்துத்தாமும் மகிழ்வது என்பதை முதிதை என்பார்கள். (நம் மனதில் வெறுப்பு இருக்குமானால், அதற்கு பரிகாரம் முதிதை.)
இதற்கெல்லாம் காரணம் கேட்டவர் என்பதால் அவருக்கும் புண்ணியம் சேர்கிறது. எனவே இங்கு 'இரத்தலும் ஈதலே போலும்' (கேட்பதும் கொடுப்பதற்கு சமம்) என்றார் வள்ளுவர்.
https://youtu.be/BdsGOrUQWX4?feature=shared
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
(துறந்தார்-பற்றுவிட்டவர்;
துவ்வாதவர்-வறியவர்)
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான் . — புலியூர்க் கேசிகன்
புத்த பகவான் தம் துறவி சங்கத்தை இல்லற மக்களை சார்ந்து இருக்கும் வகையில் அமைத்தார்.
துறவிகளுக்கான அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், ஆடைகள், மருந்து ஆகியவற்றை இல்லற மக்கள் பூர்த்தி செய்கின்றனர். இதனால் துறவிகள் தங்கள் மனதை மேம்படுத்துவதற்கு முழு நேரமும் முயற்சி செய்ய முடிகிறது. சங்கத்தார்க்கு இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது இல்லற மக்களுக்கு புண்ணியம் சேர்க்கும் வாய்ப்பாகும். இல்லற மக்களுக்கு நல்ல ஆன்மீக நண்பர்களாக துறவிகள் இருக்கின்றனர். தர்ம போதனைகளை தருவது மட்டுமின்றி தங்கள் நடத்தை மற்றும் பேச்சு மூலம் இல்லற மக்களுக்கு நல்ல உதாரணங்களாகவும் இருக்கின்றனர்.
வறுமையில் இருப்பவர்களுக்கு உணவோ அல்லது பொருள் உதவியோ செய்வது அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கிறது.
இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவர் எவ்வாறு துணையாவார்?
பௌத்த மரபில் நம்மை விட்டு பிரிந்த உறவினர்களுக்கு மரியாதைகாட்டும் வகையில், அஞ்சலி செலுத்தும் வகையில், அவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பெயரில் நாம் ஏதேனும் நல்ல காரியங்களை செய்து அதனால் வரும் புண்ணியத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இது அவர்களுக்கு தரும் பெரும் அன்பளிப்பு என்று புத்தர் கூறினார்.
இறந்த உறவினர் பெயரில் தானம் தரும்போது அவர்களைப் பற்றி இவ்வாறு நாம் மனதில் நினைத்துக் கொள்ளலாம்: 'அவர் உயிரோடு இருந்த போது எனக்கு இந்த செல்வத்தை கொடுத்தார். இவ்வாறு உதவி செய்தார். எனக்கு துணையாக இருந்தார்,' என்று நினைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் இறந்து விட்டார்களே என்று அழுது புலம்புவது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவியாக இருக்காது. மேலும் அவர்களுக்கு பெரிய கல்லறை கட்டுவதும் அதனை அலங்கரிப்பதும் அல்லது கெடா வெட்டி உயிர்ப்பலி செய்வது போன்றவை எந்த விதத்திலும் உதவாது.
அவர்கள் பெயரில் புண்ணிய காரியங்கள் செய்வது மட்டுமே பலன் தரும். அன்னதானம் தருவது, பள்ளிக்கூடங்கள் கட்டுவது, மருத்துவமனைகள், நூல் நிலையங்கள் கட்டுவது, தர்ம புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக தருவது போன்ற புண்ணிய காரியங்களை செய்யலாம். மேலும் அவர்களை நினைத்து எல்லையற்ற அன்பை அனைத்து உயிர்களுக்கும் பரப்பளாம்.
ஒரு சில ஆவி உலகங்களில் பிறந்த உறவினர்களுக்கு தான் இந்த புண்ணியம் சென்றடைகிறது. நம் சஞ்சார பயணத்தில் எண்ணற்ற உறவினர்கள் இறந்துள்ளனர். அவர்களுள் சிலரேனும் அந்த ஆவி உலகத்தில் இருப்பார்கள். அவர்கள் நாம் செய்த புண்ணியத்தை தெரிந்து கொள்ளும்போது மிகவும் குதூகலம் அடைந்து அதன் காரணமாக அவர்கள் படும் துயரம் குறைவது மட்டுமல்லாமல்,
மீண்டும் மேல் பிறப்புக்கு வருவதற்கும் வழி வகுக்கிறது.
ஆதாரம்: What Buddhists Believe
Venerable K. Sri Dhammananda Maha Thera
https://youtu.be/wUSAAXpuKgk?feature=shared
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (குறள் 259)
வேள்வித்தீயில் தேவர்க்குத் கொடுக்கும் நெய், இறைச்சி முதலிய உணவை (அவி) கொட்டி (சொரிந்து) ஆயிரம் யாகங்கள் (வேட்டல்) பண்ணுவதை விட ஒரு உயிரை கொன்று (செகுத்து) உண்ணாமல் இருப்பது நன்று
என்பது வள்ளுவர் வாக்கு.
ஏன் சைவ உணவு?
சைவ உணவிற்கு ஆதரவாக சொல்லப்படும் சில காரணங்கள்:
1. சைவ உணவு உடல் நலத்துக்கு நல்லது. மனித உடல் சைவ உணவுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
2. சைவ உணவு உற்பத்திக்கான தண்ணீர், நிலம் போன்ற தேவைகள் குறைவு. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சைவ உணவு மட்டுமே அனைவரின் பசியாற்ற முடியும்.
3. அசைவ உணவு உற்பத்தியில் சுற்றம் சூல் மாசுபடுவது அதிகம். பிரேசில் போன்ற நாட்டுகளில் அடர்ந்த காடுகள் வெட்டப்பட்டுவதற்கான காரணம் மாட்டுப்பண்ணைகள் அமைப்பதற்காகவே.
4. சைவ உணவின் செலவுகள் குறைவு.
5. மனிதநேய வாக்குவாதம். புலால் உன்பது என்றால் விலங்குகளை கொல்ல வேண்டும். அது கொடுஞ்செயல் என்பதால் புலால் உன்பதை தவிர்க்க வேண்டும்.
பௌத்த அறநெறியை பொருத்தவரை மேல் கூறப்பட்ட கடைசி கருத்தை மட்டும் ஆராய்தல் வேண்டும்.
புத்தர் என்ன சொன்னார்?
திரிபிடகத்தின் எந்த பகுதியிலும் புத்த பகவான் புலால் உண்ணக்கூடாது என்று தனது சீடர்களிடம் கூறவில்லை. சீடர்கள் துறவிகளாகவும் இருக்கலாம், இல்லற மக்களாகவும் இருக்கலாம்.
திரிபிடகத்தின் சில பகுதிகளில் புத்தரும் துறவிமார்களும் புலால் உண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீவக சுத்தத்தில் புத்த பகவான் கூறுகிறார்:
"மூன்று சூழ்நிலைகளில் புலால் உண்ணக்கூடாது என்கிறேன். ஒரு உயிர் தனக்கென கொல்லப்பட்டதை பார்க்கும் போது, அதைப் பற்றி கேட்கும் போது, தனக்கென கொல்லப்பட்டதாக சந்தேகிக்கும் போது அந்த இறைச்சியை உண்ணக்கூடாது என்கிறேன். மூன்று சூழ்நிலைகளில் புலால் உண்ணலாம். தனக்கென கொல்லப்பட்டதை காணாதபோது, கேட்காத போது, தனக்கென கொல்லப்பட்டதாக சந்தேகிக்கவுமில்லாதபோது. இந்த மூன்று சூழ்நிலைகளில் இறைச்சி உண்ணலாம் என்கிறேன்."
இந்த வரிகளிலிருந்து புத்த பகவான் எந்த சூழ்நிலையில் புலால் உண்ணலாம் என்பதை தெளிவாக கூறியுள்ளார். பிக்குகள் மரக்கறி உணவை மட்டும் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தங்களுக்கென்று கொல்லப்படவில்லை என்று தெரிய வந்தால் அந்த புலாலை உண்ணலாம். அப்படிப்பட்ட இறைச்சி மூன்று வழிகளில் பரிசுத்தமானது என கூறப்படுகிறது. ஏனென்றால் அது கொல்லப்பட்டதை பார்க்கவில்லை, கேட்கவில்லை, தங்களுக்கென்று கொல்லப்பட்டதாக சந்தேகிக்கவும் இல்லை.
பிக்குமார்கள் உணவு யாசித்து வாழ்ந்தார்கள். நம்பிக்கை உள்ள இல்லற மக்கள், அவர்களின் பல்வேறு கடமைகளுக்கு இடையில், உணவை அளித்தார்கள். அந்த சூழ்நிலையில் பிக்குமார்கள் இது வேண்டும், அது வேண்டாம் என்று சொன்னால் இல்லற மக்களுக்கு அது ஒரு சுமையாக இருக்கும் என்று புத்தர் கருதி இருக்கலாம்.
இல்லற மக்களை பொருத்தவரை முதலாவது அறமானது கொல்லாமை.
அதாவது 'எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்,' என்று உறுதி எடுக்கிறோம் (பாலி மொழியில்: பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி).
ஆகையால் இல்லற மக்கள் தங்கள் உணவுக்கென்று ஒரு உயிரைக் கொல்லக் கூடாது. கொன்றால் அந்த விதியை பின்பற்றவில்லை என்று கருதப்படும். ஆனால் ஏற்கனவே இறந்து விட்ட ஒரு விலங்கின் இறைச்சியை கடையில் வாங்கி வீட்டில் சமைப்பதற்கு தடை ஏதும் இல்லை.
ஜீவக சுத்தத்தில் புத்தபகவான் மேலும் கூறுகிறார்:
"ஜீவகா, ஒருவர் புத்தருக்காக அல்லது புத்தரின் சீடருக்கென்று ஒரு உயிரை கொல்லும்போது, ஐந்து காரணங்களால் மிகுந்த பாவத்தைச் சம்பாதிக்கிறார்.
'போய் அந்த உயிரை கொண்டு வா,' என்று கூறும்போது, இது முதல் காரணம்.
அந்த உயிர் கழுத்துப்பட்டையால் இழுக்கப்படும்போது துன்பமும் துக்கமும் அனுபவிக்கிறது; இது இரண்டாவது காரணம்.
'போய் அந்த உயிரை கொன்றுவா,' என்று கூறும்போது, இது மூன்றாவது காரணம்.
அந்த உயிர் கொல்லப்படும்போது துன்பமும் துக்கமும் அனுபவிக்கிறது; இது நான்காவது காரணம்.
புத்தருக்கோ அல்லது அவரது சீடருக்கோ அனுமதிக்கப்படாத உணவை வழங்கும்போது (அவர்களுக்கென்றே கொல்லப்பட்டது என்பதால்), இது ஐந்தாவது காரணம்.
எனவே, ஒருவர் புத்தருக்காக அல்லது அவரது சீடருக்காக ஒரு உயிரை கொல்வதனால், ஐந்து காரணங்களால் மிகுந்த பாவம் ஏற்படுகிறது."
ஆகவே உணவு தரும் இல்லற மக்கள் பிக்குமார்களுக்கென்று ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உயிர்களுக்கு மரியாதை
அதேசமயம் புத்தரின் பல போதனைகளில் என்ன சொல்லப்படுகிறது?
1. உயிர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்ற கருத்தினை பரவலாக சுத்தங்களில் காணலாம்.
2. அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து ஒழுக்கங்களுள் முதலாவது கொள்ளாமை பற்றியது என்றாலும், இன்னல் செய்யாமையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம்.
3. மேலும் மற்றவர்களையும் உயிர்களை கொள்ளாமல் இருக்கவும், தீங்கு செய்யாமல் இருக்கவும் நாம் ஊக்குவிக்க வேண்டும். அதுவும் முதல் அறத்தை சார்ந்து வருகிறது.
4. எல்லா உயிரிடத்திலும் அன்பும், இரக்கமும் காட்டுவது நல்லூற்றத்தின் (ஊற்றம்-அறிவு) ஒரு அம்சமாகும்.
5. மேலும் நல்வாழ்க்கை (நற்சீவனோபாயம்) என்ற எண்வழி மார்க்கத்தின் மற்றொரு அம்சத்தை விளக்கும் போது புத்தர் தமது சீடர்களிடம், மற்ற உயிர்களுக்குத் தீங்கு பயக்கும் எந்தத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறிப்பாக அதில் ஒன்று இறைச்சியைக் கொண்டு தொழில் செய்தல், அதாவது கசாப்புக்கடை நடத்துவது போன்ற தொழில்
கூடாது என்றார்.
(குறள் 256 காண்க:
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
— மு. க. உரை)
இந்த போதனைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சைவ உணவை உண்ணுதல், உலகில் மனித பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் அனுபவிக்கும் துன்பத்தை குறைக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
நடுநிலை பாதை
புத்த பகவான் ஒரு நடுநிலை பாதையை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைவ உணவை மட்டும் உண்பதா கூடாதா என்ற வாக்குவாதத்திலும் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வரம்பில், 'நான் சைவம்! நான் சைவம்!' என்று மார்தட்டுபவர்கள் உள்ளனர். சைவ உணவு மட்டுமே உண்பதை கடைப்பிடிப்பதால் 'தாம் உயர்ந்தோர்' என்ற மனப்பான்மை கொண்டவர்கள். இது தீய விளைவுகளுக்கு எடுத்துச் செல்லும் தவறான காட்சி. அப்படிப்பட்டவர்களில் சிலர் பட்டு வேட்டியும், பட்டு சேலையும் கட்டுவதற்கு தயங்க மாட்டார்கள். அந்த பட்டு சேலை செய்வதற்கு எத்தனை ஆயிரம் பட்டு பூச்சிகள் கொல்லப்பட்டன என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். 'நான் கடையில் தானே வாங்கினேன். அந்த பூச்சிகளை நான் கொல்லவில்லையே!' என்று அவர்கள் வாதிடுவார்கள்.
மேலும் சைவ உணவாக இருந்தாலும் அந்த உணவின் உற்பத்தியில் எண்ணிலடங்கா பூச்சிகளும், சிறு உயிர்களும் கொள்ளப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ஏர் உழும் போது பல உயிர்கள் சாகின்றன. "பூச்சி மருந்து" என்று மறைமொழியாக அழைக்கப்படும் நச்சு ரசாயனங்கள் பரவலாக தெளிக்கப்படுகின்றன. இந்த உயிர் கொல்லிகளால் வேண்டாத பூச்சிகள், வேண்டிய பூச்சிகள், தவளைகள், பறவைகள் என்று பல உயிர்கள் மாண்டு போகின்றன.
மறு வரம்பில் தாங்கள் அசைவம் மட்டுமே உண்பதாக பெருமையாக சொல்லிக் கொள்ளும் மக்களும் இருக்கின்றனர். 'உண்மையில் நாங்கள் சைவம் தான், ஏனென்றால் இலையுணவுகொள்ளும் விலங்குகளை மட்டுமே தின்போம்,' என்று நக்கலாகவும் சொல்வார்கள். இறைச்சி சாப்பிடுவது தங்கள் செல்வத்தின் அடையாளமாக கருதுபவரும் உள்ளனர். சிறுவயதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இறைச்சி சாப்பிடும் பழக்கம் அப்போது தங்கள் குடும்பத்தின் வறுமையின் காரணமாக என்று நினைப்பவர்கள்.
புத்த பகவான் இரு வரம்புகளையும் தவிர்க்க சொல்வார்.
புலால் உண்பதை குறைத்துக் கொள்ளலாம்.
தினமும் மூன்று வேளை இறைச்சி உண்பவர்கள் அதனை தினம் ஒரு வேலை என்று குறைத்துக் கொள்ளலாம், அல்லது வாரம் நான்கு ஐந்து தடவை உண்பவர்கள், வாரம் ஒரிரு முறை என்று குறைத்துக் கொள்ளலாம்.
ஒருவர் சைவமாக இருக்கலாம். ஆனால் அவர் வீட்டுக் குழந்தைகள் அல்லது கணவன்/மனைவி அசைவத்தை விரும்புபவர்களாக இருந்தால்? அப்படி இருக்கும் போது அவர்களுக்கென்று அசைவ உணவும், தனக்கென்று சைவ உணவும் ஒவ்வொரு முறையும் செய்வது சாத்தியமாக?
ஒருவர் ஒரு குடும்பத்தினருக்கு உதவி செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை விருந்துக்கு அழைக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பே சொல்லிவிட்டனர். இரண்டு வாரங்களாக அவர்கள் மிகவும் ஆவலுடன் அவரை உபசரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டு, அவரை அழைத்த நாள் வரும் போது அவருக்கென்று பல விதமான இறைச்சிகளை சமைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர், தான் சைவம் என்பதை அவர்களிடம் முன்கூட்டியே சொல்லவில்லை. அங்கு சென்றவுடன் என்ன செய்வது? அன்பும், நன்றி உணர்வும் கலந்து செய்யப்பட்ட இறைச்சியை உண்பதா அல்லது உண்ண மறுத்து அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதா?
சில குடும்பங்கள் சேர்ந்து அன்னதானம் தருகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அதில் இறைச்சி வகைகளும் உள்ளன. அப்போது அவர்களிடம் இது வேண்டாம், அது வேண்டாம் என்று சொல்வது சரியா? அப்படி சொன்னால் அடுத்த முறை எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டிய நிலையில், அவர்கள் மேலும் சிரமப்பட்டு உணவு சமைத்து வர வேண்டி இருக்கும் அல்லவா?
ஆகவே பௌத்த பாதை ஒரு நடுநிலை பாதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் இந்த விவகாரத்தில் அவர் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும். புலால் உண்பது கூடாது என்று திருவள்ளுவர் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். தம்ம போதனைகளை செவிமடுத்தபின் சைவ உணவு உண்பதை நோக்கி செல்வது சரியென தோன்றுகிறது. அதே சமயம் முக்கியமாக இரு வரம்புகளையும் தவிர்ப்பது நல்லது.
*
ஆதாரம்:
1. To Eat or Not to Eat Meat. A Buddhist Reflection - S Dhammika
2. Jīvaka Sutta மஜ்ஜிம நிகாயம் 55
https://youtu.be/PtELnbK8Ax4?si=OiOJcdNABKsskx32
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
(வசை-குற்றம்;
இசை-புகழ்;
எச்சம்-மிச்சம்)
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
— மு. வரதராசன்
பௌத்த மரபில் புகழை நாடிச் செல்வது போற்றப்படுவதில்லை. அவ்வாறு புகழை நாடிச் செல்வது ஒரு சுமையாக கருதப்படுகிறது. அது புறம் சம்பந்தப்பட்டது. ஆணவத்தை அதிகரிக்கும் விஷயம். மேலான இலக்கு என்ன? அக அமைதியும், மணமாசுகள் நீக்கி துக்கத்திலிருந்து விடுபடுவது தான். புகழை நாடிச் செல்வது இதற்கு ஒரு தடையாகவே இருக்கும்.
ஆனால், நம்பிக்கையும் நற்குணமும் உள்ள ஒருவருக்கு தானாகவே செல்வமும் புகழும் வந்து சேர்கிறது. அதன் காரணமாக எங்கு சென்றாலும் அவர் போற்றப்படுகிறார்.
நம்பிக்கை என்பது மும்மணிகள் மீது நம்பிக்கை. புத்த பகவான் தன் சொந்த முயற்சியினால் முழுமையாக ஞானம் பெற்றார் என்பதில் நம்பிக்கை. துவக்கத்தில் சில போதனைகளை கேட்டிருப்போம். சில தம்ம நூட்களை படித்திருப்போம். கொஞ்சம் தானம் செய்திருக்கும். ஒழுக்கத்தை ஒரு அளவுக்கேனும் கடைப்பிடித்திருப்போம். அது நமக்கு நல்ல விளைவுகளை தருவதை கவனித்த பின், 'சரி இந்த பாதையில் தொடர்ந்து சென்றால் மேலும் மகிழ்ச்சியும், ஏன் - துக்கத்தின் முடிவுக்கும் எடுத்துச் செல்லும்,' என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஆகவே இது கண்மூடித்தனமான நம்பிக்கை அல்ல. இதுவரை செய்த பயிற்சியின் பயனை கண்ட பின் வந்த நம்பிக்கை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் பாதையில் தொடர்ந்து செல்ல மாட்டோம்.
அப்படிப்பட்ட நம்பிக்கை மற்றும் நல்ல பண்புகளின் காரணமாக வரும் புகழையே வள்ளுவரும் போற்றுகிறார்.
தம்மபதம் 303
நம்பிக்கையும் நற்குணமும் உடையவர்,
புகழும் செல்வமும் பெறுகிறார்.
அவர் செல்லும் இடமெல்லாம் உபசரிக்கப்படுவார்.
https://youtu.be/3lTZ2-eB9Ts?si=z3lVKps74yS2yghA
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
(ஒன்றாமை-பகைமை;
ஒன்றியார்-தன்னைச்சேர்ந்தவர்;
ஒன்றியார் கட்படின் - ஒன்றியார்கண் படின்;
படின்-ஏற்பட்டால்;
பொன்று-தல்-அழிதல்
பொன்றாமை-அழியாத தன்மை
ஒன்றுதல்-இணைதல்)
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.— மு. கருணாநிதி உரை
புத்த பகவானின் கடைசி நாட்கள் மகா பரிநிப்பாண சூத்திரத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அந்த சமயத்தில் நடந்தது.
மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரன் வைசாலியை தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்த வஜ்ஜியர்களைத் தாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான். அவன், "அந்த வலிமையான வஜ்ஜியர்களை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்! நான் வஜ்ஜியர்களை அழித்து விடுவேன்! நான் அந்த வஜ்ஜியர்களை நாசப்படுத்தப் போகிறேன்," என்ற எண்ணத்துடன் அவனுடைய தலைமை மந்திரியை புத்த பகவானிடம் அனுப்பி அவருடைய கருத்தை கேட்டறிந்து வருமாறு சொன்னான்.
அப்போது புத்த பகவான் வஜ்ஜியர்கள் ஒற்றுமையாக இந்த ஏழு கோட்பாடுகளைப் பின்பற்றுவதால் அவர்களை அழிக்க முடியாது என்று கூறினார்.
1. வஜ்ஜியர்கள் தொடர்ந்து சந்தித்து, அடிக்கடி கூட்டங்களை நடத்தும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
2. வஜ்ஜியர்கள் ஒற்றுமையுடன் சந்தித்து, ஒற்றுமையுடன் பிரிந்து, ஒற்றுமையுடன் தங்கள் செயல்களை மேற்கொள்ளும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
3. வஜ்ஜியர்கள் புதிய உத்தரவுகளை பிறப்பிக்காமல், பழைய உத்தரவுகளை ரத்து செய்யாமல், பழங்கால வஜ்ஜிய மரபுகளைப் பின்பற்றி செயல்படும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
4. வஜ்ஜிய மூத்தோர்களை மதித்து, மரியாதை செய்து, வணங்கி, அவர்கள் கூறும் வார்த்தைகளை கேட்கத் தகுதியானவையாகக் கருதும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை
5. வஜ்ஜியர்கள் தங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக கடத்தி தங்களுடன் வாழ வைக்காமல் இருக்கும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
6. ஊர் எல்லையின் உள்புறமாகவோ வெளிப்புறமாகவோ உள்ள வஜ்ஜிய புனித இடங்களை மதித்து, மரியாதை செய்து, வணங்கி, கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஆன்மிக அர்ப்பணங்களை புறக்கணிக்காமல் இருப்பின், அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
7. வஜ்ஜியர்கள் அருகர்களுக்கான (ஞானம் பெற்றவர்) தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, மேலும் அருகர்கள் அந்த நாட்டிற்கு வரவும், வந்தவர்கள் நிம்மதியாக வாழவும் ஏற்பாடு செய்வதால், அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
புத்தர் இவ்வாறு வஜ்ஜியர்கள் ஒற்றுமையாக இருக்க ஏழு காரணங்களை கூறினார்.
இதைக் கேட்ட மகத நாட்டு முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணர் பகவரிடம், "அன்புக்குரிய கோதமரே, வஜ்ஜியர்கள் இந்த அழிவைத் தடுக்கும் கோட்பாடுகளில் ஒன்றைக் கடைபிடித்தாலே அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏழு கோட்பாடுகளையும் கடைப்பிடிக்கும் போது என்னவென்று சொல்வது? மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரரால் வஜ்ஜியர்களைப் பலவந்தமாக, ஆயுதங்களைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது - அவர்களை அடக்க வேண்டுமானால், அவர்களோடு நட்புக் கொண்டதாகப் பாசாங்கு செய்து, (அவர்கள் மத்தியில்) பிளவு ஏற்படுத்தினால் தான் முடியும்," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
சில காலத்தின் பின் அவ்வாறே வஜ்ஜியர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையை முறித்து அவர்களை போர் செய்யாமலே மகத நாட்டு மன்னன் வென்றான் என்று உரைகள் கூறுகின்றன.
ஆதாரம்: மகா பரிநிப்பாண சூத்திரம் (நீண்ட போதனைகள் DN 16)
https://youtu.be/WHOUlXkP0e4?si=ahu8gjDF4JrIjj-I
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
(துறந்தார்-பற்றுவிட்டவர்
துணைக்கூறின்-அளவு கூரின்;
கொண்டற்று - கொண்டால் + அற்று; அற்று-அத்தன்மையது)
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
— மு. வரதராசன்
துறந்தார் என்பது முழுமையாக ஞானம் அடைந்தவரை குறிக்கும். பௌத்த மரபில் அவர்களை அருகர் (பாலி-அரஹந்தர்) என்பர்.
அருகரின் பண்புகள் இவை:
அருகர் காம ஆசைகளை ஒழித்தவர், மேலும் காம ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்.
அருகர் வெறுப்பை ஒழித்தவர், மேலும் வெறுப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்.
அருகர் மாயையை ஒழித்தவர், மேலும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்.
அருகர் அனைத்து மாசுகளையும், தீய எண்ணங்கள், தீயசொற்கள் மற்றும் தீயசெயல்களை ஒழித்தவர். அருகர் எந்த தவறான செயலையும்— இரகசியமாகவும்— செய்வதில்லை.
அருகர் உருவங்களைப் பார்ப்பதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் ஒலிகளைக் கேட்பதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் வாசனைகளை நுகர்வதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் சுவைகளை ருசிப்பதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் தொடும் பொருட்களைத் தொடுவதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் எண்ணங்களை உணர்வதற்கான ஆசையை ஒழித்தவர்.
அருகர் புலன்களை (கண், மூக்கு, செவி, நாக்கு, உடல், மனம் ஆகிய புலன்களை) பாதுகாத்தவர், புலன்களை கட்டுப்படுத்தியவர், புலன்களை அடக்கியவர்.
அருகர் அனைத்து மாசுகளையும் முற்றாக அழித்தவர். மேலும் உடல், சொல், மனதில் முழுமையாக தூய்மையடைந்தவர்.
அருகர்கள் சஞ்சாரத்திலிருந்து (பிறப்பு இறப்பு பிறப்பு என்ற தொடர் சுழற்சியிலிருந்து) தப்பிவிட்டவர்கள். மீண்டும் பிறப்பெடுக்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட பண்புகளை கொண்ட அருகரின் பெருமையை எண்ணி சொல்லிவிட முடியுமா?
நாம் ஒவ்வொருவரும் சஞ்சார சுழலில் கணக்கிலடங்கா முறை பிறந்து இறந்துள்ளோம். எத்தனை முறை என்று கணக்கிட முடியுமா? முடியாது. அதுபோலத்தான் துறந்தார் பெருமையையும் பட்டியலிட்டு சொல்ல முடியாது.
ஆதாரம்: Buddhānussati Meditation - Reflection on the Qualities of the Supreme Buddha. Mahamevnawa Monastery
https://youtu.be/d3zjanNSExA?si=Lj3yuNHrMjaLsN_H
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(உடம்பாடு-சம்மதம்;
குடங்கர்-குடிசை;
உறை-தல்-வசித்தல்;
அற்று-அத்தன்மையது)
மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
— சாலமன் பாப்பையா
துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டியவரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெறாவிட்டால் துக்கம். சுருக்கமாகக் கூறுவதானால் உபாதானப் பஞ்சக்கந்தமும் துக்கமே.
ஆகவே வேண்டாதாரோடு சேர்வது துக்கம் என்பது முதல் உயர் வாய்மையிலேயே அடங்கியுள்ளது. அப்படிப்பட்டவர் நமக்கு எரிச்சல் மூட்டலாம். நம் கோபத்தைக் கிளறலாம். நமக்கு பலவிதத்தில் இன்னல்கள் தரலாம்.
சில சூழ்நிலைகளில் அப்படிப்பட்டவரை விலகிச் செல்வது நல்லது. ஆனால் உடனடியாக விலகிச் செல்ல முடியாத நிலைமையும் இருக்கலாம். வீட்டு சூழ்நிலை என்றால் குழந்தைகளைப் பற்றி எண்ண வேண்டியிருக்கும். நம் மேல் அதிகாரியோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் அவ்வளவு சுலபமாக வேலையை மாற்ற முடியாது. விலகிச் செல்ல சில காலம் தேவைப்படும். மற்றவரின் ஆலோசனை பெறுவதும் நல்லது.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும்
நாம் பொறுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். நிதானமாக சிந்திக்க வேண்டும். அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் நினைத்து பார்க்கலாம்.
அவர்கள் பேசுவதை கேட்க நமக்கு பிடிக்கவில்லை என்பதால் நமக்கு கோபம் வருகிறது என்றால், அது நமக்குள்ள குறை தான். கோபம் ஒரு நோய். அப்போது அவரை நம்மை சோதிக்க வந்த ஒரு ஆசானாக கூட நினைத்துக் கொள்ளலாம்.
மனதை அன்பால் நிரப்பிக் கொள்ளலாம். நம்மையே நாம் நேசிக்க வேண்டும். நாம் நம்மையே நேசிக்கும் போது கோபப்படுவதற்கு ஒரு போதும் விருப்பப்பட மாட்டோம். நாம் நம்மையே நேசிக்கும் போது தான் மற்றவர் மீது நாம் அன்பு செலுத்த முடியும். அப்போது அவர்களையும் நாம் புண்படுத்த விரும்ப மாட்டோம். அன்பு, இரக்கம், பணிவு ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதாரம்: தர்ம போதனைகளில் கேட்டது.
https://youtu.be/G1oZyraJNRM?si=vEsdm7z8qrp7FMsu
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
(வேண்டுங்கால்-வேண்டுமானால்;வேண்டாமை-புலன் ஆசை இல்லாமல்)
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
— மு. வரதராசன்
தம்மம் மட்டுமே ஒரு முடிவுக்கு எடுத்துச் செல்லும் பயிற்சி. செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டோம் என்றால் அதற்கு மேல் சேய்வதற்கு ஒன்றுமில்லை. அது துக்கத்தின் முடிவு. பேரானந்தம். இனி மறுபிறப்பு இல்லை, பிறவா நிலை..
மற்ற எல்லா பயிற்சிகளுக்கும் முடிவே இல்லை. முனைவர் பட்டம் வாங்கியுள்ளீரா? இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லையா? தவறு. அடுத்த பிறப்பில் LKG/UKG மழலையர் பள்ளியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். வேறு வழி இல்லை.
உங்களுக்கு திருமணம் ஆகப்போகிறதா? முதல் முறையாக திருமணம் செய்து கொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. முன் பிறவிகளில் பல திருமணங்களை செய்துள்ளீர்கள். இந்த சஞ்சார பயணத்தில் மீண்டும் பல திருமணங்களை நீங்கள் செய்து கொள்வீர்கள். (இது மகிழ்ச்சியான விஷயமில்லை!)
மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் மீண்டும் மனித பிறவி எடுப்போம் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. பெரும்பாலான மக்கள் கீழ் உலகங்களில் தான் பிறப்பார்கள். மனித பிறவி எடுப்பது அரிது. (கீழ் உலகங்களிலிருந்து தப்பிக்க தம்மத்தை பயின்று குறைந்தது சோதாபன்ன ஞான நிலையை அடைய வேண்டும்.)
காசா போன்ற இடங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் மற்றவர்கள் யாரோ அனுபவிக்கின்றார்களா? நாம் வெகு தூரத்தில் இருக்கின்றோம், நமக்கு அப்படியேதும் நேரிடாது என்று நினைப்பது தவறு. இதற்கு முன் அது போன்று பல அனுபவங்களை நாம் முன்பிறவிகளில் பெற்றுள்ளோம். சஞ்சார பயணத்தை தொடர்ந்தால் காசா போன்ற நிலைமையை நாமும் சந்திக்கக்கூடிய சாத்தியம் கண்டிப்பாக உள்ளது.
பிறந்துவிட்டால் நாம் தவிர்க்க முடியாதது: மூப்பு, பிணி, சாக்காடு, நாம் விரும்பும் மக்களிடமிருந்தும் நமது சொத்துக்களிடமிருந்து பிரிவு.
ஒருவர் இறந்து விட்டால் அதற்கு காரணம் இதுதான் என்று மருத்துவர் சான்றிதழ் தருவார். ஏகப்பட்ட நோய்கள் உள்ளன. அதில் ஒன்று மரணத்திற்கான காரணம் என்பார். உண்மையில் மரணத்திற்கான காரணம் புற்றுநோய், மாரடைப்பு, இரத்த கொதிப்பு, வாகன விபத்து போன்றவை இல்லை. மரணத்திற்கு காரணம் பிறப்பு. பிறப்பு இல்லையென்றால் மரணம் இல்லை.
எனவே வள்ளுவர் ஒன்று வேண்டும் என்று நினைத்தால், பிறவாமை வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
பிறவாமைக்குப் போகும் வழி பற்றுகளை கைவிடுவது. வாழ்க்கை சுவாரசியும் இல்லாமல் போய்விடுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. சிற்றின்பத்தை நாடும்போது ஒன்றின் மீது விருப்பம் கொள்கிறோம். எப்படியாவது பெற வேண்டும் என்ற வேட்கை, துடி துடிப்பு. அதன் காரணமாக எத்தனை அத்துமீறல்கள், ஒழுக்கத் தவறுகள்! நாடியதை பெற்று விடுகிறோம். ஆனால் எதிர்பார்த்தது போல திருப்தி தருவதில்லை. பின் மீண்டும் ஒரு ஆசை. சிற்றின்ப ஆசைகளுக்கு முடிவே இல்லை. அவை அமைதிக்கு எடுத்துச் செல்வதில்லை.
சிற்றின்பத்தை நாடி அலுத்து போய், பேரின்பத்தை நாடுவோர் - அவர் அறிவாளி.
சிற்றின்பத்தை விட்டு பேரின்பத்திற்கு எடுத்துச் செல்வது தான் பிறவாமைக் காண மார்க்கம். புத்தர் அருளிய எண் வழி பாதை. அந்த மார்க்கத்தை தொடர்ந்து பயணத்தை முடித்தவர் - அவர் ஞானி.
ஆதாரம்: தம்ம உரைகளில் கேட்டது.
https://youtu.be/iE3c6xkZvgQ?si=8qmndmFIa0k-4Vk-
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
(ஆக்கம்-விருத்தி;கேடு-அழிவு;
ஓம்பு-தல்-பாதுகாத்தல்;
சோர்வு-இழுக்கு)
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்
— மு. வரதராசன்
ஒரு ஜென் கதை
ஒரு பெரிய, வலிமையான வீரன் (சாமுராய்) ஒருநாள் ஒரு சிறிய துறவியை சந்திக்க சென்றான்.
"துறவியே," என்றான், தன் கட்டளையை உடனடியாக பின்பற்றுதலுக்கு பழகிய கம்பீரக் குரலில், "சொர்க்கமும் நரகமும் பற்றி எனக்கு போதிக்கவும்!"
அந்த வீரனை மேலும் கீழும் பார்த்த துறவி சொன்னார்: "சொர்க்கமும் நரகமும் பற்றி உனக்கு போதிக்கவேண்டுமா? எதை போதித்தாலும் உன் மண்டையில் ஏறாது! அழுக்குப் பிடித்தவனே, நீ நாறுகிறாய்! உனது வாள் துருப்பிடித்துள்ளது. நீ இழிவானவன். வீர குலத்துக்கே ஒரு களங்கம். என் எதிரே நிற்காதே. உன்னை பார்க்க சகிக்கவில்லை!"
அந்த வீரன் கோபத்தில் வெடித்தான். அவன் உடல் நடுங்கியது, முகம் சிவந்தது. அவனுக்கு வந்த ஆத்திரத்தில் வாயடைந்து போனான். அவன் தன் வாளை உருவி, உயர்த்தி, துறவியின் தலையை வெட்ட முற்பட்டான்.
"இது தான் நரகம்," மெதுவாக சொன்னார் துறவி.
வீரன் அதிர்ச்சியில் மூழ்கினான். அந்த சிறிய மனிதன் தன் உயிரை அர்ப்பணித்து, நரகத்தை தனக்கு உணர்த்தினாரே! என் மீது என்ன இரக்கம்! அவன் மெதுவாக வாளை கீழே வைத்தான். விரைவில் அமைதியானான. உள்ளத்தில் நன்றி உணர்வு நிரம்பியது.
"இது தான் சொர்க்கம்," மெதுவாக சொன்னார் துறவி.
ஆதாரம்: ஜென் மரபில் வந்த பௌத்த கதை.
நாம் சொல்லும் வார்த்தைகளினால் மற்றவர்களின் மனதை புண்படுத்தவும் முடியும், உயர்த்தி விடவும் முடியும். நாம் உள்ளத்தில் அன்பையும், இரக்கத்தையும், முதிதையும் (மற்றவர் வெற்றி கண்டு நாம் மகிழ்வது) வளர்த்தோம் என்றால் நம்மிடமிருந்து வரும் சொற்கள் சரியானதாகவே இருக்கும்.
அது மட்டுமல்ல. நாம் நமக்கே சொல்லும் கதைகள் இருக்கின்றன அல்லவா? அவையும் நமக்கு ஆக்கமும் தரலாம், கேடும் தரலாம்.
'உன்னால் முடியாது, மற்றவர்களால் முடியும், எவ்வளவு முயற்சி செய்தும் அந்த தீய பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே! மன அமைதியா? அதெல்லாம் இந்த ஜென்மத்தில் என்னால் அடைய முடியாது,' என்று நாம் நமக்கே சொல்லிக் கொள்ளும் கதைகள் இருக்கின்றன. அவை நமக்கு கேடு தான் தரும்.
அதனால் தான் நம்மை நாமே நேசிக்க வேண்டும் என்று புத்தர் கூறினார். அப்படி நேசித்தோம் என்றால் நாம் நமக்கு சொல்லிக் கொள்ளும் கதைகள் உற்சாகமானதாக இருக்கும். அவை நமக்கு ஆக்கம் தரும்.
ஆதாரம்: தம்ம உரைகளில் கேட்டது.
https://youtu.be/CAvI59eIjM8?si=0dZX07Z1O7fGgr-f
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
தீயால் (எரியால்) சுடப்பட்டாலும் உயிர்தப்பலாம் (உய்வு), பெரியவரிடத்தில் குற்றஞ்செய்து (பிழைத்து) நடப்பவர் (ஒழுகுவார்) தப்பி பிழைக்க முடியாது (உய்யார்).
புத்த பகவான் தானத்தின் விளைவுகள் பற்றி இவ்வாறு கூறினார்:
"ஒரு விலங்கிற்கு தரப்படும் அன்பளிப்பு நூறு மடங்கு விளைவுகள் தரும்.
ஒரு ஒழுக்கமற்ற சாதாரண மனிதனுக்கு தரும் அன்பளிப்பு ஆயிரம் மடங்கு விளைவுகள் தரும்.
ஒரு ஒழுக்கமுள்ள சாதாரண மனிதனுக்கு தரப்படும் அன்பளிப்பு நூறாயிரம் மடங்கு விளைவுகள் தரும்.
பௌத்த நெறியை பின்பற்றாத, ஆனால் புலன் இன்பங்களிளிருந்து விடுதலை பெற்ற ஒருவருக்கு தரப்படும் அன்பளிப்பு ஆயிரம் கோடி விளைவுகள் தரும்.
எண் வழி மார்க்கத்தில் முதல் ஞான நிலையை அடைவதற்கு பயிற்சி செய்யும் ஒருவர் தரும் அன்பளிப்பு கணக்கில்லா விளைவுகள் தரும்.
அப்படி என்றால் முதல் ஞான நிலையை அடைந்தவர், இரண்டாம் ஞான நிலை ... மூன்றாம் ஞான நிலை .... அருகராக பயிற்சி செய்பவர், அருகரானவர், பச்சேக்க புக்தர் ஆகியவர்களுக்கு தரும் அன்பளிப்பின் விளைவுகளை எவ்வாறு விவரிப்பது?
அதைவிட தேர்ந்த, முழுமையாக ஞானம் பெற்ற தத்தாகதருக்கு தரும் அன்பளிப்பின் பலனைப் பற்றி எப்படிச் சொல்வது?"
ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN142 அன்பளிப்புகள் பற்றிய உரை
ஆகவே தானம் தருவதன் விளைவுகள் படிப்படியாக மேலான மனப்பக்குவத்தை அடைந்தவருக்கு தரும் போது அதன் (நல்)விளைவுகளும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதுபோலவே அவர்களுக்கு சொல்லால், செயலால் செய்யும் தீமையின் (தீ)விளைவுகளும் படிப்படியாக அதிகரிக்கும். ஆகவே எல்லா சமயத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றாலும், மேன்மையானவர் அருகில் இருக்கும் போது நாம் குறிப்பாக மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். தெரிந்தே செய்யும் தீயச் செயல்களுக்கு சாதாரண ஒரு வருரிடம் செய்வதை காட்டிலும் சான்றோர்க்கு செய்யும்போது தீய விளைவுகள் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
https://youtu.be/JJnXB_lll48?si=CcmPYegeRxSCLCIb
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
(மன்னுயிர்-மானிடசாதி மற்றும் மிருகசாதி;
ஓம்பு-தல்-பாதுகாத்தல்; அருள்-இரக்கம்)
மானிடரையும் மிருகங்களையும் (மன்னுயிர்) பாதுகாத்து (ஓம்பி) அவர்களிடம் இரக்கம் (அருள்) காட்டுவோருக்கு அச்சத்தின் காரணமாக தம் உயிர் பாதுகாக்க செய்யும் வினை இல்லை (இல்லென்ப).
நாம் மற்ற உயிர்களுக்கு - மனிதரானாலும் சரி விலங்குகளானாலும் சரி - அன்பும் இரக்கவும் காட்டும் போது அவற்றிடமிருந்து நமக்கு எந்தத் துன்பமும் வராது என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதனால் நாம் அஞ்சும் போது செய்யும் காரியங்களை செய்ய வேண்டியதில்லை. உதாரணமாக வீட்டை சுற்றி உயர்ந்த சுவர் கட்டுவது, வீட்டுக்கு காவலாளி வைப்பது, பாதுகாப்புக்காக நாய் வளர்ப்பது, ஆயுதங்கள் வைத்துக் கொள்வது போன்றவை. தன் உயிருக்கு பயந்தால் தானே இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்?
அன்பையும் இரக்கத்தையும் வளர்ப்பதால் வரும் 11 அனுகூலங்கள்
புத்த பகவான் கூறுகிறார்:
"பிக்குகளே, ஒருவர் அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால், தொடர்ந்து பயின்றால், அடிப்படையாக எடுத்துக்கொண்டால், நிலைநிறுத்தினால், உறுதியாக்கினால், நன்றாக மேற்கொண்டால்—அவர் பதினொன்று நன்மைகளை எதிர்பார்க்கலாம். அந்த பதினொன்று எவை?"
1. அவர் எளிதாக தூங்குகிறார்.
2. எளிதாக விழிக்கிறார்.
3. தீய கனவுகள் காண்பதில்லை.
4. மனிதர்களால் நேசிக்கப்படுகிறார்.
5. மனிதரல்லாத உயிரினங்களாலும் நேசிக்கப்படுகிறார்.
6. தேவர்கள் அவரை பாதுகாக்கின்றனர்.
7. தீ, விஷம், ஆயுதங்கள் அவரைத் தொட முடியாது.
8. அவருடைய மனம் விரைவில் ஒருமுகப்படுத்தப்படுகிறது.
9. அவருடைய முகம் ஒளிவீசுகிறது.
10. அவர் குழப்பமின்றி இறக்கிறார்.
11. இம்மையில் மேலதிக (நிப்பாண) நிலையை எட்டவில்லை என்றால், மறுமையில் பிரம்ம உலகங்களை நோக்கி செல்கிறார்.
இவை தான், ஒருவர் அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால், ....... நன்றாக மேற்கொண்டால் அவர் பெறக்கூடிய பதினொன்று நன்மைகள்."
ஆதாரம்: அங்குதர நிகாயம் AN 11.15
மேலோட்டமாக அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால் மட்டும் போதாது. அதனால்தான் புத்த பகவான் அன்பை வளர்க்க வேண்டும் என்ற மட்டும் சொல்லி நிறுத்தாமல்,
"வளர்த்தால், தொடர்ந்து பயின்றால், அடிப்படையாக எடுத்துக்கொண்டால், நிலைநிறுத்தினால், உறுதியாக்கினால், நன்றாக மேற்கொண்டால்" என்றெல்லாம் கூறுகிறார்.
குளிக்க சென்றவர் ஆற்றங்கரையில் தண்ணீரை விரலால் தொட்டால் மட்டும் போதாது, தண்ணீரில் குதித்து விட வேண்டும். அது போலவே அன்பை முழு மனதுடன் வளர்க்க வேண்டும், எந்நேரமும் வளர்க்க வேண்டும், அனைத்து உயிர்களிடமும் காட்ட வேண்டும், எல்லா சூழ்நிலைகளிலும் வளர்க்க வேண்டும்.
https://youtu.be/GToBWhd0G40?si=PM_KNijbmIXOmITG
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
பேசும் அளவுக்கான (வாய்சான்ற) நிறைந்த பொருளைச் (பெரும்பொருள்) சேர்த்து வைத்து (வைத்தான்) அதை பயன்படுத்தாமல் (அஃதுண்ணான்) இருப்பது, ஒரு இறந்தவன் (செத்தான்) அந்த பொருளால் செய்ய முடிந்தது (செயக்கிடந்தது) ஒன்றுமில்லாதது (இல்) போல.
***
சங்யுத்த நிகாயம் SN3.19
இது சாவத்தி நகரத்தில் நடந்தது…
ஒரு நாள், மத்திய நேரத்தில் மாமன்னன் பசேனதி புத்தரிடம் வந்து, மரியாதையுடன் வணங்கி, ஒரு பக்கத்தில் அமர்ந்தார். புத்தர் அவரிடம் கேட்டார்: “மாமன்னனே, இந்த மத்திய நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்?”
“ஐயா, இந்த சாவத்தி நகரத்தில் ஒரு பணக்காரர் இறந்துவிட்டார். அவர் பிள்ளைகள் இல்லாமல் இறந்ததால், அவரது செல்வத்தை அரசக் கருவுகலதிற்கு (கஜானா) மாற்றிய பிறகு வந்தேன். 80 லட்சம் தங்கம் இருந்தது, வெள்ளியை சொல்லவே வேண்டியதில்லை.
“ஐயா, அந்த பணக்காரர் சுவையான உணவுகளுக்கு பணம் செலவிடவில்லை என்று தெரிந்தது. அவர் ஊறுகாயுடன் சாதாரண கஞ்சி சாப்பிட்டார். நல்ல உடைகள் வாங்கவில்லை. மூன்று சணல்நார் துணிகளை தைத்துத் தயாரித்த ஒரு கந்தல் துணியை அணிந்தார். வசதியான வாகனங்களுக்கு பணம் செலவிடவில்லை. மிகவும் பழைய சிறிய வண்டியில் பயணம் செய்தார், வெயிலைத் தடுக்க பழைய குடையை வைத்திருந்தார்.”
மூடன் பெரும் செல்வம்
“அது உண்மைதான், மாமன்னனே! அது உண்மைதான்! ஒரு மூடன் பெரும் செல்வத்தை பெற்றிருந்தாலும், தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்வதில்லை. தன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், வேலைக்காரர்கள், ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரையும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்வதில்லை. ஆண் துறவிகளுக்கும், பெண் துறவிகளுக்கும் தானம் கொடுப்பதில்லை. சொர்க்கத்தில் பிறக்க புண்ணியம் சேர்ப்பதில்லை. செல்வத்தை சரியாக பயன்படுத்துவவில்லை என்பதால், அரசர்கள் அல்லது திருடர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள், தீயால் எரிந்து விடுகிறது, வெள்ளம் அடித்து செல்கிறது, அல்லது பகைவர்கள் அதை கைப்பற்றுகிறார்கள். அந்த செல்வம் சரியாக பயன்படுத்தப்படாததால், அது வீணாகிறது.
“ஒரு தாமரைத் தடாகம் மனிதசஞ்சாரமில்லாத இடத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் தெளிவான, இனிமையான, குளிர்ந்த நீர் உள்ளது. அதன் கரைகள் சுத்தமாகவும், அழகாகவும் உள்ளது. ஆனால், மக்கள் அதற்கு செல்வதில்லை, அதிலிருந்து குடிப்பதில்லை, அதில் குளிப்பதில்லை அல்லது வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தவில்லை. அந்த நீர் சரியாக பயன்படுத்தப்படாததால், அது வீணாகிறது.
“அதேபோல், ஒரு மூடன் பெரும் செல்வத்தை பெற்றிருந்தாலும்… அது வீணாகிறது, பயன்படுத்தப்படுவதில்லை.
அறிவாளியின் செல்வம்
“ஒரு அறிவாளி பெரும் செல்வத்தை பெற்றிருந்தால், தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்கிறார். தன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், வேலைக்காரர்கள், ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்கிறார். ஆண் துறவிகளுக்கும், பெண் துறவிகளுக்கும் தானம் கொடுக்கிறார். சொர்க்கத்தில் பிறக்க புண்ணியம் சேர்க்கிறார். அவர் செல்வத்தை சரியாக பயன்படுத்துவதால், அரசர்கள் அல்லது திருடர்கள் அதை பறித்துக் கொள்வதில்லை, தீ அதை எரிப்பதில்லை, வெள்ளம் அதை அழிப்பதில்லை, பகைவர்கள் அதை கைப்பற்றுவதில்லை. அவரது செல்வம் சரியாக பயன்படுத்தப்படுவதால், அது பயன்படுகிறது, வீணாகாது.
“ஒரு நகரம் அல்லது கிராமத்திற்கு அருகில் ஒரு தாமரைத் தடாகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் தெளிவான, இனிமையான, குளிர்ந்த நீர் உள்ளது. அதன் கரைகள் சுத்தமாகவும், அழகாகவும் உள்ளன. மக்கள் அதற்கு சென்று அதிலிருந்து குடித்து, அதில் குளித்து, தங்கள் தேவைக்காக பயன்படுத்துகிறார்கள். அந்த நீர் சரியாக பயன்படுத்தப்படுவதால், அது பயன்படுகிறது, வீணாகாது.
“அதேபோல், ஒரு அறிவாளி பெரும் செல்வத்தை பெற்றிருந்தால்… அது பயன்படுகிறது, வீணாகாது.
***
https://youtu.be/yjiH1TefeEE?si=IqUrIjFZQCgabrey
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
தன் மனசாட்சி (நெஞ்சம்) அறிந்ததைப் பற்றி பொய் கூறக்கூடாது (பொய்யற்க). அப்படி போய் கூறினால் (பொய்த்தபின்) அந்த மனசாட்சியே தன்னை உறுத்தும் (சுடும்).
***
பௌத்த திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப (Hirī-Ottappa) என்ற இரு பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. இரண்டும் சேர்ந்தே காணப்படும்.
இவை இரண்டும் நற்பண்புகள். வேண்டியவை. ஐந்து சீலங்களை கடைபிடிப்பதற்கு உதவும் பண்புகள் என்று புத்தர் கூறுகிறார்.
ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது.
ஒத்தாப்ப என்றால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது. தவறு செய்யுமுன் அதற்கான விளைவுகளை நினைத்து அஞ்சுவது.
"இரண்டு பிரகாசமான விஷயங்கள் உலகின் காவலாளிகளாக இருக்கின்றன. உலகை பாதுகாக்கின்றன. அவை:
மனசாட்சி (Hirī, Conscience) மற்றும் எச்சரிக்கையுடன் இருத்தல் (Ottappa, Prudence)."
புத்தரின் வாக்கு AN2.9
"இந்த ஏழு விதமான செல்வங்கள் உள்ளன. எந்த ஏழு? நம்பிக்கை (Saddhā, faith), ஒழுக்கம் (sīla, ethics), மனசாட்சி (hirī, conscience), எச்சரிக்கையுடன் இருத்தல் (ottappa, prudence), கல்வி (suta, learning), தானம் ( cāga, generosity), விவேகம் (paññā, wisdom)."
புத்தரின் வாக்கு AN7.6
ஹிரீ (அகம் சார்ந்தது)
தீய செயலை நினைக்கும் போது மனதில் அருவருப்பு உண்டாக வேண்டும். அதை செய்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதால் அருவருப்பு உண்டாகிறது.
'இந்தச் தீயச் செயலை செய்வது எனக்கு பெருமைக்கேடு, கௌரவக் குறைவு,' போன்ற எண்ணங்கள் எழ வேண்டும்.
நம் மீது நாம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக ஒரு தவறை செய்வதில்லை என்று சொல்லலாம்.
ஒத்தாப்ப (புறம் சார்ந்தது)
தீய செயலை செய்யும் முன் அதன் விளைவுகளை நினைத்து அச்சம் உண்டாக வேண்டும். எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது. மற்றவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக ஒரு தவறை செய்வதில்லை என்றும் நினைத்துக் கொள்ளலாம். நாம் அன்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் - அது நமது மனைவி, கணவன், பெற்றோர், மக்கள், நண்பர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தெரிய வந்தால் என்ன நினைப்பார்கள்? ' என்ற அச்சம் தோன்ற வேண்டும்.
உவமானம்
உரைகளில் புத்த கோசர் தரும் உவமானம் இது:
ஒரு இரும்புக்கோல் இருக்கிறது. ஒரு புறம் மலசலம் பூசப்பட்டிருக்கிறது. மறுபுறம் தீயில் நீண்ட நேரம் பழுக்கக் காய்ச்சப்ப ட்டிருக்கிறது.
அந்த இரும்புக்கோல் தான் நாம் செய்ய நினைக்கும் தீயச் செயல். இருபுறத்திலும் அதைப் பிடிக்க தயங்குவோம். மலசலம் பூசப்பட்ட பகுதி நமக்கு அருவருப்பு தரும் (ஹிரீ). மறுபுறத்தை தொட்டால் கை வெந்து விடும் என்ற அச்சம் இருக்கும் (ஒத்தாப்ப).
ஆதாரம்: பிக்கு போதி அவர்களின் போதனையிலிருந்து தொகுக்கப்பட்டது.
https://youtu.be/ln3wBXUU5Ls?si=oG6ej1ud7NMTL8-F
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
ஒழுக்கத்தில் தவறாதவர் (ஒல்கார்) மனோபலமுள்ளவர் (உரவோர்) - இழுக்கத்தினால்
குற்றம் (ஏதம்) உண்டாகக்கூடும் (படுபாக்கு) என்பதை அறிந்து.
எதிர் நீச்சல்
ஒழுக்கம் இன்மை நீரோட்டத்தோடு நீந்துவது போல. அது எளிது.
ஆனால் ஒழுக்கம் கடைபிடிப்பது நமது உள்ளம் போக விரும்பும் திசைக்கு எதிரானது. நம் மாசுகள் இழுத்துச் செல்லும் திசைக்கு எதிரானது. ஒழுக்கம் கடைப்பிடிப்பது என்பது
எதிர் நீச்சல் போடும் பயிற்சியாகும். எனவே அது கடினமாகத்தான் இருக்கும்.
பரிசலை நீரின் ஓட்டதிற்கு எதிராகச் செலுத்தத் துடுப்புப் போடுவது கடினம் தான்.
நன்மையையும், ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி சிறிது கடினம் தான். ஏனென்றால் நம் மனதில் மாசுகள் உள்ளன. நன்மையையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ள நாம் விரும்புவதில்லை. அந்த சிரமத்தை விரும்புவதில்லை. எதிர்ப்புச் சக்தியை வளர்க்க விருப்பமில்லை. நமது மனநிலைகளுக்கு ஒத்து நடப்பதற்கே விரும்புகிறோம்.
இது நீரைப்போல: நீர் அதன் வழிக்குத் தகுந்தார்போல ஓடுகிறது. அந்த நீரோட்டத்தின் இயல்பின் படி நாமும் போவது சுலபம், ஆனால் அது பயிற்சியாகாது. பயிற்சி செய்யும் போது மனதில் உள்ள மாசுகளை எதிர்க்க வேண்டும். உள்ளம் விரும்பியபடி போவதை எதிர்க்க வேண்டும்.
உள்ளத்தைக் கட்டுப் படுத்திச் சகித்துக் கொள்ளும் ஆற்றலை, மனோபலத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் பயிற்சி ஓட்டத்தின் எதிராகச் செல்லும்.
ஆதாரம்:
எளிமையாகச் சொல்வதென்றால்
(108 அற உவமானங்கள்)
போற்றுதற்குரிய அஜான் சா
https://youtu.be/qLJY0q9UWAw?si=jbKMi-dJjbXgCCLU
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொற்கள் இருக்கும் போது (உளவாக) அவற்றை விட்டுக் கடுமையான (இன்னா) சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் விரும்புவது (கவர்ந்து) போன்றது (அற்று).
நல்வாய்மை (சம்மாவாசா) என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு.
இது நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது:
1. தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்.
2. வம்புப் பேச்சு உரைக்காமல் இருத்தல்.
3. கடுமையான பேச்சு உரைக்காமல் இருத்தல்.
4. விதண்டைப் பேச்சைத் தவிர்த்தல்.
இதில் கடுமையான பேச்சு என்பது:
கோபமான, எரிச்சலூட்டும் பேச்சு, மக்கள் மனத்தைப் புண்படுத்தும் பேச்சு. காட்டமான பேச்சு, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, களங்கப் படுத்திப் பேசுவது, சத்தமிட்டுப் பேசுவது, இவையெல்லாம் கடுமையான பேச்சு என்ற தலைப்பில் சேரும்.
கோபம் என்ற எரிபொருளால் தூண்டப் பட்டதால் இப்படி பேசுகிறோம். இவ்வாறு பேசும் போது அது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பற்றியது மட்டும் அல்ல, இப்படிப் பேசுவதற்கான நோக்கம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். நாம் அனைவருமே பேசும் போது பல நேரங்களில் தவறாகப் பேசுகிறோம். சென்னையிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்தில் இருப்பதாக ஒருவரிடம் கூறுகிறோம். உண்மையில் முப்பது கி.மீ தூரத்தில் தான் இருக்கின்றோம் என்றால் அது உண்மைக்கு மாறான பேச்சுத்தான். ஆனாலும் அது பொய் இல்லை. நாம் அறியாமல் 50 கிலோமீட்டர் என்று கூறிவிட்டோம். இப்படிப்பட்ட தவறான பேச்சை நம் வாழ்நாளின் இறுதி வரை கூறத்தான் போகிறோம். நாம் எல்லாவற்றையும் தெரிந்திருக்க முடியாது. ஆனால் நாம் பொய் சொல்ல வில்லை. வேண்டும் என்று தவறாகக் கூறவில்லை. பொய் என்பது வேண்டுமென்றே, தெரிந்தே ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படும் வார்த்தைகள். கடுமையான பேச்சு என்பது வேண்டுமென்றே ஒருவரைச் சிறுமைப் படுத்தும், சேதம் விளைவிக்கும் பேச்சு.
இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். மாறாக ஒருவரின் பேச்சு எப்போதும் மென்மையானதாகவும், அன்புடையதாகவும் இருத்தல் வேண்டும்.
(ஆதாரம்: தர்ம உரைகளில் கேட்டது.)
"கடுமையான பேச்சை விட்டு விட்டதால், கோதமர் கடுமையான பேச்சில் ஈடுபடுவதில்லை. அவர் பேசும் வார்த்தைகள் மென்மையானவை, செவிக்கு இனிமையானவை, மனதை ஈர்க்கும் வகையிலானவை, நெஞ்சை தொட்டுவிடும் வகையில் நயமிக்கவை, அன்பானவை, பலருக்கும் விருப்பமானவை."
(ஆதாரம்: தீக நிகாயம் 1)
"எவரிடமும் கடுமையான வார்த்தைகள் பேசாதே; அவர்கள் அதேபோல் பதிலளிக்கலாம். விரோதமான பேச்சு துன்பத்தை தருகிறது,
அது வன்முறையான எதிர்வினையைத் தூண்டக்கூடும்."
(ஆதாரம்: தம்மப்பதம் 133)
https://youtu.be/WZTa4CfZgf4?si=_Sl8t0SNflLdyaul
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
தமக்கு துன்பம் செய்தார்க்கும் இனியவையே செய்யா விட்டால்
பெருந்தன்மையினால் (சால்பு) என்ன பலன் (பயத்தது)?
***
தமக்கு ஆதாயம் கிடைப்பதன் காரணமாக அல்லது தமது வாழ்க்கை விரும்பிய வண்ணம் போகும்போது, இன்னல் தருபவரை பொறுத்துக் கொள்பவரை புத்த பகவான் போற்றவில்லை.
மாறாக, தமக்கு ஆதாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், தமது வாழ்க்கை விரும்பிய வண்ணம் சென்றாலும் செல்லாவிட்டாலும், ஒருவர் தம்மத்தை மதித்து, போற்றி, வழிபடுவதன் காரணமாக இன்னல் தருபவரை பொறுத்து அவர்களிடம் அன்பு செலுத்தும் போது - அப்படிப்பட்டவரை புக்த பகவான் போற்றினார்.
புத்த பகவான் கூறினார்:
"உங்களிடம் ஒருவர் பேசும் போது அவர் சொல்வது:
1. காலம் கருதி பேசப்பட்டதாக இருக்கலாம் அல்லது சொல்லக்கூடாத நேரத்தில் சொல்லப்பட்டதாக இருக்கலாம்.
2. உண்மையாக இருக்கலாம், பொய்யாக இருக்கலாம்.
3. மென்மையாக கூறப்பட்டிருக்கலாம் அல்லது கடுமையாக கூறப்பட்டிருக்கலாம்.
4. நல்லது சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் அல்லது தீயது சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
5. அன்போடு பேசப்பட்டதாக இருக்கலாம் அல்லது உள்ளத்தில் வெறுப்போடு பேசப்பட்டதாக இருக்கலாம்.
அவர் உங்களிடம் எவ்வாறு பேசி இருந்தாலும், நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்:
'எங்கள் மனங்கள் சிதைவடையாது. நாங்கள் தீய வார்த்தைகளைச் பேச மாட்டோம். நாங்கள் இரக்கம் நிரம்பியவர்களாக இருப்போம், அன்புள்ள உள்ளத்துடன், மறைத்த வெறுப்பின்றி, அந்த நபருக்காக அன்பு நிறைந்த மனதுடன்
இருப்போம். அவரை அடிப்படையாகக் கொண்டு, உலகில் உள்ள அனைவருக்கும் அன்பு நிரம்பிய, விரிவான, எல்லையில்லாத, வெறுப்பும் தீங்கும் இல்லாத உள்ளத்தோடு இருப்போம்.'
இவ்வாறு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்."
(ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN 21)
https://youtu.be/emyaOQOy330?si=E1B7ACyvP3lP_bMT
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
ஆ-தல்-உண்டாதல்
ஆறு-வழி.
இட்டிது - சிறிது
போ-தல்-செல்லுதல்
அகலாக்கடை-விரிவுபடாவிட்டால்
பொருள் வரும் வழி (ஆகாறு) சிறிதாக (இட்டிது) இருந்தாலும் செலவு போகும் வழி (போகாறு) விரிவுபடாதவரை (அகலாக்கடை) துன்பமில்லை (கேடில்லை).
***
புத்த பகவான் கூறினார்:
"வசதிக்கேற்றபடி வாழ்வது என்றால் என்ன? ஒரு இல்லறத்தார் தனது வருமானத்தையும் செலவையும் அறிந்தவராக, ஊதாரியாகவும் இல்லாமல் கருமியாகவும் இல்லாமல், தன் வசதிக்கேற்றபடி வாழ வேண்டும், [இப்படி நினைத்தவாறு] 'இவ்வாரு என்னுடைய வருமானம் செலவுகளை மீறி இருக்கும், செலவுகள் வருமானத்திற்குட்பட்டிருக்கும்.'
ஒரு எடை எடுப்பவரோ அல்லது அவருடைய உதவியாளரோ துலாக்கோலை பிடித்திருக்கையில், 'தராசுத்தட்டு ஒரு பக்கம் கீழாகப் போய்விட்டது அல்லது ஒரு பக்கம் மேலே சென்று விட்டது,' என்பதை அறிகிறார். அதேபோல், ஒரு இல்லறத்தார் தனது வருமானமும் செலவுகளும் அறிந்தவராக, ஊதாரியாகவும் இல்லாமல் கருமியாகவும் இல்லாமல், தன் வசதிக்கு ஏற்றபடி வாழ வேண்டும், [இப்படி நினைத்தவாறு] 'இவ்வாரு என்னுடைய வருமானம் செலவுகளை மீறி இருக்கும், செலவுகள் வருமானத்திற்கு உட்பட்டிருக்கும்.'
ஒரு இல்லறத்தார் சிறிய வருமானம் கொண்டவராக இருக்கையில் தன் வசதிக்கு மிகுதியாக வாழ்ந்தால் அவரைப் பற்றி இவ்வாறு பேசப்படும், 'இந்தக் குடிமகன் தனது செல்வத்தை ஒரு விளாம் பழம் உண்பவனை போல வீண் செய்கிறார்,' (விளாம் பழம் சாப்பிட நினைப்பவர் அந்த மரத்தை நன்றாக ஆசைக்க, பல பழங்கள் கீழே விழுகின்றன. ஆனால் ஒன்று இரண்டு மட்டும்தான் உண்கிறார். மற்றவை எல்லாம் வீணாகிறது.)
ஒரு இல்லறத்தார் பெரும் வருமானம் கொண்டவராக இருக்கையில் சீரழிந்தவனைப் போல வாழ்ந்தால் அவரைப் பற்றி இவ்வாறு பேசப்படும், 'இந்தக் குடிமகன் பசியால் வருந்திச் சாவான்'.
ஆனால் ஒரு இல்லறத்தார் தனது வருமானத்தையும் செலவுகளையும் அறிந்தவராக, ஊதாரியாகவும் இல்லாமல் கருமியாகவும் இல்லாமல், தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்ந்தால், [இப்படி நினைத்தவாறு] 'இவ்வாரு என்னுடைய வருமானம் செலவுகளை மீறி இருக்கும், செலவுகள் வருமானத்திற்கு உட்பட்டிருக்கும்.',
இதுவே வசதிக்கேற்றபடி வாழ்வது என்பது."
(ஆதாரம்: அங்குத்தர நிகாயம்
8.54. தீக ஜானுவிற்கு தந்த அறிவுரை)
https://youtu.be/aqKKvw5qCcQ?si=PQT3ypZ1uBOK1ZP9
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
முகத்தில் (முக) மலர்ச்சி (நக)
மட்டுமே உள்ள நட்பு நட்பு அன்று, உள்ளத்தில் (நெஞ்சத்தில்) மலரும் அக மலர்ச்சி (அகநக) கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்.
***
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை:
நல்ல நண்பர்கள்
"இல்லறத்தார் மகனே, நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் நால்வரை நீ அறிய வேண்டும்: உபகாரம் செய்யும் நண்பர்,
இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கும் நண்பர்,
வழிகாட்டியாய் உள்ள நண்பர்,
அனுதாபம் காட்டும் நண்பர்.
1. உபகாரம் செய்யும் நண்பர், நாலு காரணத்தினால் நல்ல நண்பராகக் கொள்ளப்படுவார்.
பலவீனமான காலத்தில் உதவிபுரிவார்.
பலவீனமான காலத்தில் உங்கள் உடமைகளைப் பாதுகாக்கிறார்.
ஆபத்துள்ள வேளையில் உங்களுக்கு அடைக்கலம் அளிக்கிறார்.
நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில், உங்களுக்கு இரட்டிப்பு உதவி புரிகிறார்.
2. இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கும் நண்பர் நாலு காரணங்களால் நல்ல நண்பராகக் கொல்லப்படுவார்.
அவர் தன்னுடைய இரகசியங்களை உங்களுக்குச் சொல்லுகிறார்.
உங்கள் இரகசியங்களை அம்பலப்படுத்த மாட்டார்.
துன்பம் வருங்காலத்தில் கைவிடமாட்டார்.
உங்களுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்வார்.
3. வழிகாட்டியாய் உள்ள நண்பர் நாலு காரணங்களுக்காக நல்ல நண்பராகிறார்.
நீங்கள் தவறு செய்வதைத் தடுப்பார்.
சரியானதைச் செய்யவே தூண்டுவார்.
நீங்கள் அறியவேண்டிய முன் அறிந்திராத விஷயங்களை தெளிவுபடுத்துவார்.
அவர் சுவர்க்கத்துக்கு வழி காட்டுவார்.
4. அனுதாபமுள்ள நண்பர் நாலு காரணங்களால் நல்ல நண்பராகக் கணிக்கப்படத்தக்கவர்.
உங்களுக்குண்டாகும் துர்ப்பாக்கியத்தைக் கண்டு அவர் சந்தோஷப்படமாட்டார்.
உங்கள் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்.
உங்களைப் பற்றி இழிவாகப் பேசுவோரைத் தடுப்பார்.
உங்களைப் பற்றிப் புகழ்வோரை ஆதரிப்பார்."
ஆதாரம்: தீக நிகாயம் நீண்ட போதனைகள் DN31
தமிழாக்கம்:
நவாலியூர் சோ. நடராசன்
https://youtu.be/A4FiVoHPLUM?si=t0QSG2xdYVxjJInC
பாடியவர்: பிரேம்ஜி அமரன்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
உய்-தல-சீவித்தல்
ஆர்-தல்-நிறைதல்
ஆறிருள்-இருள் நிறைந்த
புலனடக்கம் ஒருவரை தேவ லோகத்தில் (அமரருள்) சீவிக்க (உய்க்கும்) வைக்கும்.
புலனடக்கம் இல்லாதவர் இருள் நிறைந்த (ஆறிருள்) வாழ்க்கையை அனுபவிப்பார்.
***
பௌத்தத்தில் இல்லற மக்கள் 5 சீலங்களை எந்நாளும் கடைபிடிக்க வேண்டும். அவை:
1. கொல்லாமை,
2. களவாமை,
3. தவறான பாலியல் உறவுகள் தவிர்த்தல். குறிப்பாக பிறர் மனை/கணவன் நயவாதிருத்தல்,
4. பொய்யாமை,
5. மது மற்றும் போதைப் பொருட்கள் உண்ணாமை,
ஐந்து சீலங்களை கடைபிடிக்க குறைந்தபட்சம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அப்படி மீறிவிட்டால் விரைவில் மீண்டும் அவற்றை கடைபிடிப்போம் என்று ஒரு புத்தர் சிலை முன்னால் அல்லது தமக்கு தாமே நேர்ந்துக் கொள்ள வேண்டும். ஐந்து சீலங்களை கடைபிடிக்க ஓரளவுக்கு புலன் அடக்கம் தேவை.
மேலும் புலன் அடக்க பயிற்சி செய்ய விருப்பமுள்ள இல்லற மக்கள் உபோசதை நாட்களையும் கடைப்பிடிக்கலாம். அதாவது பௌத்தப் புனித நாட்களான பௌர்ணமி, அம்மாவாசை மற்றும் இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள இரண்டு அர்த்த சந்திர நாட்களில் எட்டு சீலங்களைக் கடைப்பிடிப்பதாக நேர்ந்து கொள்வது. சிலர் மாதம் ஒருமுறை என்று பௌர்ணமி தினத்தன்று மட்டும் எட்டு சீலங்களை கடைப்பிடிப்பார்கள். இல்லற மக்கள் எட்டு சீலங்களை கடைப்பிடிப்பது கட்டாயம் கிடையாது, ஆனால் புத்த பகவான் இதனை மிகவும் பாராட்டினார். எட்டு சீலங்கள்:
1. கொல்லாமை,
2. களவாமை,
3. பிரம்மச்சாரியம் கடைப்பிடிப்பது (மற்ற நாட்களில் தவறான பாலியல் உறவுகள் தவிர்த்தல்)
4. பொய்யாமை,
5. மது மற்றும் போதைப் பொருட்கள் உண்ணாமை,
6. மதியத்திற்கு பிறகு உணவு அருந்தாமல் இருப்பது,
7. அலங்கரித்து கொள்ளல், ஆடல், பாடல், கூத்து, நாடகம், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் போன்றவற்றை தவிர்த்தல்,
8. மிகவும் சொகுசான படுக்கைகள் மற்றும் ஆசனங்களை பயன்படுத்தாமல் இருப்பது.
புலனடக்கத்தின் நன்மைகளைப் பற்றி புத்த பகவான் பர சூத்தங்களில் கூறியுள்ளார். உதாரணமாக:
சப்பாசவ சுத்தத்தில் (மஜ்ஜிம நிகாயம் MN2) புத்த பகவான் கூறுகிறார்:
புலன்களை அடக்கி கைவிட வேண்டிய கறைகள்
"துறவிகளே, புலன்களை அடக்கி கைவிட வேண்டிய கறைகள் எவை? இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து கட்புலனை அடக்கி வாழ்கிறார். கட்புலனை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் கட்புலனை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை.
விவேகத்துடன் சிந்தித்து செவிப்புலன் அடக்கி வாழ்கிறார்... மணம்பிடித்தலை அடக்கி...சுவையை அடக்கி...தொடுவுணர்வுப்புலனை அடக்கி... மன உணர்வை அடக்கி.....
புலன்களை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் புலன்களை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே புலன்களை அடக்கி கைவிட வேண்டிய கறைகள்."
https://youtu.be/PKnlglTRH14?si=hGYHERDRkyhseGiV
பாடியவர்: தேவா
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
ஆற்றுதல்-வலியடைதல்
மாற்றான்-பகைவன்
படை-கருவி
வலிமையுடையவரின் (ஆற்றுவார்) ஆற்றல் என்பது பணிவு. பணிதல் என்பது சான்றோர் தம் பகைவரையும் (மாற்றார்) பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும் (படை).
புத்த பகவான் பணிதல் ஒரு மங்களம் என்றார் (மங்கள சுத்தம்).
மேகிய சூத்திரத்தில் புத்த பகவான் பணிதலை வளர்ப்பது பற்றி மேகியருக்கு கூறியது:
"மேகியரே, மன விடுதலை முழுமையாக முற்றாத நிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த ஐந்து பண்புகள் அதனைப் பூரணமாக்கும். அவை எவை?
(அந்த ஐந்தில் மூன்றாவதாக கூறப்பட்டது..)
"மேலும் பணிவை வளர்க்கும், தன் விழிப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை விரும்பும் போதெல்லாம், சுலபமாகக் கேட்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும். அதாவது கண்ணியம், திருப்தி, ஏகாந்தம், சிக்கலற்றிருப்பது, விடாமுயற்சி, ஒழுக்கம், மன ஒருமை, விவேகம், வீடுபேறு, வீடுபேறு பற்றிய அறிவாற்றல் ஆகியவை பற்றிய போதனைகள் மற்றும் பேச்சுக்கள் அவை. ஞானம் பெறாத ஒருவர் ஞானம் பெறுவதற்கு உதவும் மூன்றாம் இயல்பு இதுவே."
ஆதாரம்: மேகிய சூத்திரம்: மேகியரைப் பற்றி AN9.3
https://youtu.be/Qcq9MbzjzbM?si=ckiBqMxQvnVRdSjv
பாடியவர்: சுஜிதா சபாநாயகம்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
நட்டார்-உற்றார், நண்பர்
ஒட்டார்-பகைவர்
ஒல்லை-வேகமாய், கால தாமதமின்றி
நண்பரைப் (நட்டார்) போல நல்ல சொற்களை (நல்லவை) சொன்னாலும் பகைவர் (ஒட்டார்) சொல்வதில் உள்ள நஞ்சு விரைவில் (ஒல்லை) வெளிப்படும்.
***
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை:
போலி நண்பர்கள்
"இல்லறத்தார் மகனே, நண்பர் வடிவத்தில் பகைவராயிருப்போர் நால்வரை நீ அறிய வேண்டும். நண்பனின் பொருட்களை கவர்வோன், வாய்ப்பேசுவோன் (செயலில் ஒன்றும் இராது), இச்சகம் பேசுவோன், ஊதாரி.
1. இவர்களுள் முதாலாவது வகையைச் சேர்ந்தவன், நாலு காரணத்தினால் நண்பன் வடிவிலுள்ள பகைவனாவான். அவன் கவரும் சுபாவமுள்ளவன் - உமது உடைமைகளை அவனாதிக்கொள்வான், கொஞ்சம் கொடுத்து அதிகம் எதிர்பார்ப்பவன், செய்ய வேண்டிய கடமையைப் பயத்தினால் செய்வான். தன்னலத்தையே கவனிப்பான்.
2. வாயால் மாத்திரம் பேசிக்கொண்டு செயலில் ஒன்றுஞ் செய்யாத ஒரு நண்பனை நண்பன் வடிவிலுள்ள பகைவனாகக் கவனிக்க வேண்டும். அதற்கு நான்கு காரணங்களுண்டு. இறந்த காலத்தைப் பற்றிப் பேசி, தான் நண்பனாயிருந்தால் செய்திருப்பேன், எனப் பாசாங்கு செய்வான். எதிர்காலத்தில் என்ன வெல்லாமோ செய்யப்போவதாக ஆசை காட்டுவான். அவனுடைய பேச்செல்லாம் வெட்டிப் பேச்சாயிருக்கும். உண்மையில் உதவி செய்ய வேண்டிய காலம் வந்ததும் தன் கஷ்டங்களைப் பற்றி சொல்லி கைவிட்டு விடுவான்.
3. இச்சகம் பேசுவோர் நண்பர் வடிவில் உள்ள பகைவரே. அதற்கு நாலு காரணமுண்டு. நீங்கள் செய்யும் பாவச் செயல்களையும் அவன் ஆமோதிப்பான். நற்செயல்களையும் ஆமோதிப்பான். முகத்துக்கு முன்னால் உங்களைப் புகழ்ந்து பேசுவான். போகவிட்டுப் புறங் கூறித்திரிவான்.
4. ஊதாரியாயிருப்பவனை நாலு காரணங்களைக் கொண்டு நண்பர் வடிவில் உள்ள பகைவராகக் கொள்ள வேண்டும். நீங்கள் மது அருந்தச் செல்லும்போதும், அகாலவேளையில் வீதியில் சுற்றித்திரியும் போதும், விழாக்களுக்கும், நாட்டியக் கச்சேரிகளுக்கும் போகும்போதும், சூதாடும் போதும் இவன் உங்கள் கூட்டாளியாக இருப்பான்."
ஆதாரம்: தீக நிகாயம் நீண்ட போதனைகள் DN31
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
தமிழாக்கம்: நவாலியூர் சோ. நடராசன்
https://youtu.be/hyUv2NeS0Vs?si=UMg0UBETV4aSikt_
பாடியவர்: அமிர்தவர்ஷினி
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
ஈண்டு-இவ்விடத்தில், இம்மையில், இவ்வாறு, இப்பொழுது.
தலைப்படு-தல்- ஒன்று கூடுதல். எதிர்ப்படுதல்
நெறி- வழி
இம்மையில் கற்று (கற்றீண்டு) வாய்மையை (மெய்ப்பொருள்) உணர்ந்தவர் (கண்டார்) மீண்டும் இங்கு பிறவி (மற்றீண்டு) எடுக்காத (வாரா) வழிமுறையை (நெறி) எதிர்கொள்வர் (தலைப்படுவர்).
***
'சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக!
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கென்று...'
(மணிமேகலை 30,258-260)
சுருதியும், சிந்தனையும், பாவனையும், தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து மயக்கத்தைப் போக்குவாயாக. இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால் மனமயக்கம் கெடுவாயாக!
சுருதியாவது அறவுரைகேட்டல்,
சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல்,
பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல்,
தரிசனையாவது உண்மை தெளிதல்.
(மணிமேகலை உரை - வித்வான் ஔவை துரைசாமி பிள்ளை)
https://youtu.be/KpEjOaf2al4?si=K5iimSNU3NtCiFRa
பாடியவர்: சவிதா சாய்
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
அகம்பாவம் (தன்னுயிர், தான்) அகற்ற வேண்டும் என்ற அறத்தை புரிந்து கொண்டவர் (அறப் பெற்றானை) மற்ற உயிரினங்கள் (மன்னுயிர்) எல்லாம் வணங்கும் (தொழும்).
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
— சாலமன் பாப்பையா
***
பொதுவாக "ஞானம்" என்று மொழிபெயர்க்கப்படும் பாலி சொல் போதி என்பது "விழித்தல்" அல்லது "புரிந்துகொள்வது" என்பதைக் குறிக்கிறது—அதாவது (அறியாமையின் காரணமாக மூடியிருந்த) கண்களைத் திறப்பது. புத்தரின் தர்மத்தைப் (தானம், சீலம், பாவனை) பயிற்சி செய்வதன் விளைவாக, ஒருவர் ஆழமாகவும், முழுமையாகவும், நேரடியாகவும், நிபந்தனையுள்ள நிகழ்வுகளின் துக்கம் (dukkha), நிலையற்ற தன்மை (anicca) மற்றும் தன்னிலை இல்லாத தன்மை (anatta) ஆகியவற்றை உணர்ந்தால், அவர் "ஞானம் பெற்றவர்" எனக் கூறப்படுகிறார்.
இந்த உணர்வு தானாகவே ஒருவரின் அனுபவத்திலும் நடத்தையிலும் ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பயம் ஆகியவை மறைந்து, அமைதி மற்றும் மகிழ்ச்சி தோன்றுகின்றன.
ஞானம் பெற்ற ஒருவரை புத்தர் அல்லது அருகர் (பாலி: அரஹந்த்) என அழைக்கலாம். அந்த நிலைதான் வீடுபேறு என்றும் அழைக்கப்படுகிறது
(பாலி: நிப்பாணம், சமஸ்: நிர்வாணம்).
புத்தரின் போதனைகளின் படி, ஞானம் நான்கு நிலைகளில் வருகிறது. ஒவ்வொரு நிலையும் சில குறிப்பிட்ட தளைகளை அகற்றுவதாலும் சில உண்மைகளை உணர்வதாலும் தூண்டப்படுகிறது. அதில் முதல் நிலை ஸோதாபத்தி (Stream Enterer) ஆகும் (ஸோதாபத்தி நிலையை அடைந்தவர்கள் ஸோதாபன்னர்).
ஸோதாபத்தியின் பண்புகள்:
1. மூம்மணிகள் மீது (புத்தர், தர்மம், சங்கம்) உறுதியான நம்பிக்கை. மும்மணிகள் மீது சந்தேகம் (vicikiccha) மறைவது.
2. எந்த சிக்கலும் இல்லாமல் சீலங்களை கடைபிடிப்பது (sīla)
3. சடங்கு சாங்கியங்களில் பற்று (sīlavataparāmāsa) இல்லாமல் போவது.
4. நான், எனது, என்உயிர் (me, mine, myself) என்று நினைப்பதில்லை. என்றென்றும் மாற்றம் இல்லாத 'நான்' என்ற ஒன்று இருப்பதாக நினைப்பது (sakkāyadiṭṭhi) தவறு என்றுணர்வது. அப்படிப்பட்ட மாற்றம் இல்லாத 'நான்' (ஆன்மா) எங்கு தேடியும் காணவில்லை என்று புத்தர் கூறுவார்.
ஆதாரம்: Guide to Buddhism A to Z (Enlightenment) S. Dhammika
https://youtu.be/IvF5RibME5k?si=aTzNI1b4aLtWsM4Z
பாடியவர்: அந்தோணி தாசன்
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
இலக்கம்-குறிப்பொருள்;
இடும்பை-துன்பம்;
கலக்கம்-கலங்குகை;
கையாறு-செயலறுகை
துன்பம் (இடும்பை) உடம்பை நாடுவது (இலக்கம்) இயல்பு என்பதை அறிந்த பெரியோர் (மேல்)
உடலுக்கு வந்த நோயால் (கலக்கம்) மனம் தளர்ந்து (கையாறு) போக மாட்டார்கள்.
***
மனம் வேறு உடல் வேறு
கீழ்க்கண்ட சில நிகழ்வுகளிலிருந்து புத்த பகவானும் உடல் நோவுற்றார் என்பதை காணலாம். ஆனால் அவர் ஒருபோதும் மனம் தளரவில்லை.
மஹா பரிநிப்பாண சூத்திரம்
....
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் பேளுவ (Beluva) கிராமத்தில் தங்கலானார்.
பகவருக்கு உண்டான கடுமையான நோய்
2.22. அச்சமயம் பகவர் பிக்குகளிடம்: "பிக்குகளே, நீங்கள் புறப்படுங்கள். வைசாலி அருகில் நீங்கள் வரவேற்கப்படும் இடங்களுக்குச் சென்று, தெரிந்தவர்கள், நண்பர்கள் ஆகியோர் மத்தியில் மழைக்காலத்தைக் கழியுங்கள். நான் இந்த மழைக்காலத்தில் இங்கு, பேலுவ கிராமத்திலேயே இருக்கப்போகிறேன்." (மழைக்காலத்தில் துறவிகள் ஒரே இடத்தில் தங்கியிருப்பது பௌத்த மரபு)
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பதிலுரைத்தனர் பிக்குகள்.
2.23. ஆனால் மழைக்காலம் தொடங்கிய போது, பகவருக்குக் கடுமையான நோய் உண்டானது. கூர்மையான வலியும், மரணவேதனையும் உண்டானது. அவற்றைப் பகவர் நிதானமாக மனங்கலங்காமல் உள்ளதை உள்ளபடி பார்த்தவாறு சகித்துக்கொண்டார்.
பின் இந்த எண்ணம் பகவருக்குத் தோன்றியது: "எனக்குத் தொண்டு செய்தவர்களிடம் உரைக்காமல், பிக்கு சமூகத்திடம் விடைபெறுவதற்கு முன்பு நான் பரிநிப்பாணம் அடைவது பொருத்தமாகாது. எனவே இந்த நோயை மனவலிமை கொண்டு அடக்கி, உயிர்ச்செயற்றொடரைக் காப்பாற்றித் தொடர்ந்து வாழவேண்டும்."
பின் புத்த பகவான் அந்த நோயை தனது மனவலிமையோடு அடக்கி, உயிர்ச்செயற்றொடரைக் காப்பாற்றி தொடர்ந்து வாழ்ந்தார்.
2.24. பகவர் நோயிலிருந்து குணமடைந்தார்; குணமடைந்தபின் தனது குடிலிலிருந்து வெளிவந்து அவர் குடிலின் முன் தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். ஆனந்தர் பகவரிடம் சென்று மரியாதையுடன் வணங்கி ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம்: "அண்ணலே, பகவர் தொல்லைப்படாமல் இருப்பதைக் காண்பது எனது பாக்கியம்! பகவர் முழுமையாகக் குணமடைந்ததைக் காண்பதற்கு நான் கொடுத்து வைத்தவன்! உண்மையில் அண்ணலே, பகவரின் நோயைக்கண்டு எனது உடல் செயலழிந்து, ஒரு கொடியைப் போலப் பலவீனமாகிவிட்டது. சுற்றிலும் இருண்டு விட்டது. எனது புலன்களும் என்னைக் கைவிட்டுவிட்டன. ஆனாலும் பகவர் பிக்கு சங்கத்தைப் பற்றி ஏதேனும் கூறாமல் பரிநிப்பாணம் அடைய மாட்டர் என்ற நம்பிக்கை சற்று இருந்தது."
2.25. இப்படிக் கூறிய ஆனந்தரிடம் பகவர் இவ்வாறு பதிலளித்தார்: "பிக்கு சமூகம் வேறென்ன என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றனர், ஆனந்தா? வெளிப்படையான போதனைகள், மறைமுகமான போதனைகளென்று பாகுபாடு செய்யாமல் தம்மத்தைப் போதித்திருக்கின்றேன்; பொத்தி வைத்த கையைக்கொண்ட ஆசிரியர் சில விஷயங்களை மறைத்து வைத்திருப்பது போல, கடைசி வரை மறைந்துள்ள போதனைகள் எதுவும் என்னிடம் இல்லை, ஆனந்தா. எவரொருவர் ஒரு பிக்கு சங்கத்தைத் தான் தான் தலைமை தாங்க வேண்டும் என்றோ அல்லது சங்கம் தன்னை நம்பியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர் தான் அவர்களை மதித்து அறிவுரைகளைக்கூற வேண்டியிருக்கும். ஆனால் ததாகதருக்கு அத்தகைய எண்ணம் - நான் தான் சங்கத்தலைவனாக இருக்கவேண்டும், சங்கம் என்னைத்தான் நம்பியிருக்கவேண்டும் - என்ற எண்ணம் இல்லை. அதனால் பிக்குசங்கத்தைப் பற்றி மேலும் என்ன அறிவுரைகளைக் கூறுவது?
"நான் இப்போது மெலிந்துவிட்டேன் ஆனந்தா. முதுமையும், அதிக வயதையும் எட்டி விட்டேன். இது எனது எண்பதாவது வருடம். எனது வாழ்வு முடிந்து விட்டது. ஆனந்தா, ஒரு பழைய வண்டி சிரமத்தோடு ஒன்று சேர்க்கப்பட்டு ஓட்டப்படுவது போல, ததாகதரின் உடலும் ஆதரவுகளோடு (ஊன்றுகோல் முதலியன) தான் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ததாகதர் புறப் பொருட்களை மனத்தில் கொள்ளாமல், சில உணர்ச்சிகள் மறைந்து மன ஒருமைப்பாட்டில் இருக்கும் போது மட்டுமே இந்த உடல் தொல்லை தராமல் வசதியாக இருக்கிறது. (ஆழ்ந்த சமாதி தியான நிலையில் மட்டுமே உடல் வலி தெரிவதில்லை என்கிறார்.)
2.26. "எனவே ஆனந்தா, உங்களுக்கு நீங்களே தீவாக இருக்க வேண்டும், உங்களுக்கு நீங்களே அடைக்கலமாக இருக்க வேண்டும். புற அடைக்கலம் தேட வேண்டாம்; தம்மம் உங்கள் தீவாகட்டும், தம்மம் உங்கள் அடைக்கலமாகட்டும், வேறு அடைக்கலம் தேடவேண்டாம்."
....
....
4.20. பின் சுண்டரின் உணவை உண்டபின் புத்த பகவானின் உடலில் ஒரு பெரும் பிணி உண்டானது. இரத்த பேதியுடன் மிக்க வலியையும், மரண வேதனையையும் பகவர் அனுபவித்தார். ஆனாலும் பகவர் அதனை - கடைப்பிடியோடு, விழிப்புடன் இருந்து - அதனால் பாதிக்கப் படாமல் (மனத்தளவில்) குறை கூறாமல் பொறுத்துக் கொண்டார்.
பின்னர் ஆனந்தரிடம், "ஆனந்தா, நாம் குசிநகரம் (Kusinārā) செல்வோம்," என்றார்."அப்படியே ஆகட்டும் அண்ணலே," என்று ஆனந்தர் பதிலுரைத்தார்.
ஆதாரம்: மஹா பரிநிப்பாண சூத்திரம் - புத்த பகவானின் கடைசி நாட்கள் Mahā Parinibbāna Sutta DN16
https://youtu.be/10ap6Tx7xmM?si=oN629g8IgpQu5Qar
பாடியவர்: எம். கே. பாலாஜி
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பேணு-தல்-போற்றுதல்
வந்துவிட்ட (உற்ற) நோயை நீக்கவும், இனி நோய் வராமல் (உறாஅமை) தடுக்கவும் உதவும் பெரியாரை நட்புக் கொண்டு போற்றுதல் (பேணி) வேண்டும்.
***
புத்த பகவானின் தம்ம பாதையில் பயணிப்பது என்பது உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதும், இனி பிரச்சினைகள் வராமல் இருப்பதற்குமான வழியாகும்.
எனவே மகா மங்கள சுத்தத்தில் ஒரு தேவர் புத்தரிடம், 'மேலான மங்கலங்கள் எவை?' என்று கேட்க,
புத்த பகவான் மங்கள சுத்தத்தை, 'முட்டாள்களோடு சேராமல் இருப்பதும், சான்றோருடன் சேர்ந்து இருப்பதும்,' என்று தொடங்குகிறார் (asevana ca balanam, panditanan ca sevana).
முதல் வரியிலேயே சான்றோருடன் சேர்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை புத்த பகவான் வலியுறுத்துகிறார். நாம் தம்ம பாதையில் முன்னேற வேண்டும் என்றால், நமது வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால், இனி பிரச்சினைகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் அது நாம் எப்படிப்பட்ட நட்புகளை வளர்கிறோம் என்பதை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.
தம்மபதம் 76-77
குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், அவரை செல்வப் புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக் கருதி, அவரோடு நட்புக் கொண்டு பழக வேண்டும் அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமே யன்றித் தீமை பயக்காது.
பிறர் தீமை செய்வதைக் கண்டித்துத் தடுத்து அறிவு புகட்டுகிறவர்கள், நல்லோருக்கு அன்புக்குரியவர்கள். ஆனால் தீயவர்கள் அவர்களை வெறுப்பார்கள்.
(தம்மபதம் தமிழில்: நில்வக்கே ஸோமானந்த தேரர்)
***
https://youtu.be/G7C3PlvkeZ8?si=y-8o8r1x6Zz34F7M
பாடியவர்: ஸ்பூர்த்தி ராவ்
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
இழுக்கம்-பிழை
இழுக்கார்-பிழை செய்யாதவர்
நாணம்-பழிச்செயல் முதலியவற்றால் உண்டாகும் மானம்.
ஒழுக்கம், வாய்மை, பழிச்செயலுக்கு அஞ்சுவது (நாணம்) ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே (இழுக்கார்) உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் (குடிப்பிறந்தார்).
***
பாரமிதை என்பதன் பொருள் கரையேறுவதற்குரியது என்பது. அதாவது பிறவிக் கடலினின்றும் கரையேறுவதற்குரியது. இது பத்து வகைப்படும். இந்தப் பத்தையும் முழுமையாக்கிய பிறகே போதி சத்துவர் தனது கடைசி பிறப்பெடுத்தார் என்பது பௌத்த மரபு.
அதில் இரண்டு:
ஒழுக்கம் Sila (virtue)
வாய்மை Sacca (truthfulness)
ஒழுக்கத்தை முழுமையாக்குவதென்பது நமது உடல், சொல், உள்ளம் மூலமாக செய்யும் செயற்பாடுகள் எவ்வாறு உலகில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை நன்று அறிந்து செயல்படுவதாகும்.
வாய்மையின் முழுமை என்பது எத்தகைய சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருப்பது, மரண அச்சுறுத்தல் வந்தாலும் அஞ்சாமல் மனம் தளராமல் வாய்மையை விட்டுச் சற்றும் பிறழாமல் இருப்பது.
ஹிரீ-ஒத்தாப்ப (Hirī-Ottappa) என்ற இரு பண்புகள் பற்றி புத்த பகவான் பல போதனைகளில் கூறியுள்ளார். இரண்டும் சேர்ந்தே காணப்படும்.
ஹிரீ (அகம் சார்ந்தது) என்பது
தீய செயலை நினைக்கும் போது மனதில் உண்டாகும் அருவருப்பு.
ஒத்தாப்ப (புறம் சார்ந்தது) என்பது தீய செயலை செய்யும் முன் அதன் விளைவுகளை நினைத்து உண்டாகும் அச்சம். அதுதான் நாணம்.
உயர் குடி என்ற ஒருவரை அழைப்பது பிறப்பின் காரணமாக அல்ல. புத்த பகவான் கூறுகிறார்:
தம்மப்பதம் 391
உடல், வாக்கு, உள்ளம் ஆகிய மூன்றிலும் தவறு செய்யாதவர்; இம்மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரைதான் நான் பிராமணன் என அழைக்கிறேன்.
Whoever does no wrong in body, speech, heart, is restrained in these three ways: he's what I call a brahman.
***
https://youtu.be/Y_3l5TWu86E?si=CKZLl8TV9dRdPi0H
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சோகா-த்தல்-துன்புறுதல்;
சொல்லிழுக்கு-சொற்குற்றம்;
படு-தல்-உண்டாதல், தோன்றுதல்;
எதனை (யா) காக்கா விட்டாலும் (காவாராயினும்) நாக்கினை (நா) காக்க, அப்படி காக்கா விட்டால் (காவாக்கால்) சொல் குற்றத்தினால் (சொல்லிழுக்கு) அகப்பட்டுத் துன்புறுவர் (சோகாப்பர்).
***
பத்து வகையான தீவினைகள் உள்ளன. அவற்றில் மூன்று உடலாலும், நான்கு நாவாலும், மூன்று மனதாலும் செய்யப்படும்.
நாவால் செய்யும் நான்கு விதமான தீவினைகள்
மணிமேகலை (காதை 30):
தீவினை என்பது யாது என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
...
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
...
... பயன் தெரி புலவர்
இத் திறம் படரார், படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்.
விளக்கம்
தீவினையென்று சொல்லப் படுவது யாதென்று கேட்பாயாயின்
அழகிய வளையணிந்த நங்கையே, யான் சொல்லும் அதனைக் கேட்பாயாக
...
பொய்யுரையும், புறங்கூறலும், கடுஞ்சொல்லும், பயனில்லாத சொல் சொல்லுதலும் என்று
வாக்கினால் உண்டாகும் தீவினைகள் நான்கும்;
......
வினைவகையும், அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்;
இக் குற்றங்களை ஒருநாளும் நெஞ்சாலும் நினைக்க மாட்டார்கள் - அப்படி நினைவாராயின்
விலங்கும், பேயும், நரகருமாகிய பிறப்பாகப் பிறந்து,
கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப உடல் பெற்று வருந்துவர்.
(மணிமேகலை உரை - வித்வான் ஔவை துரைசாமி பிள்ளை)
***
https://youtu.be/yFIGoH9zrp4?si=wl3tB8ItLGfEgFpE
பாடியவர்: மோகன் வைத்தியா
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
ஊருணி-ஊராருண்ணுநீர்நிலை.
பேரறிவாளன்-உயர்ந்த ஞானமுடையவன்
திரு-செல்வம்
நீர் நிறைந்துள்ள ஊரார் பயன்படுத்தும் நீர்நிலை (ஊருணி)
உயர்ந்த ஞானமுடையவன் (பேரறிவாளன்) பொதுநல நோக்குடன் உலகத் தார்க்குப் பயன்படுத்தும் (உலகவாம்) செல்வத்தை (திரு) போல.
***
செல்வத்தின் பயன்
புத்த பகவான் அனாதபிண்டிகருக்கு கூறியது:
"இல்லறத்தாறே, செல்வம் பயன்படுத்த ஐந்து காரணங்கள் உள்ளன. அவை என்னவென்றால்—
1. முதலாவது, ஒருவர் தன் உழைப்பாலும் முயற்சியாலும், தன் கைகளால் சேர்த்த, வியர்வையால் சம்பாதித்த நியாயமான செல்வத்தால் தானே மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். தன்னையே நன்றாக மகிழ்வுடன் வைத்துக் கொள்கிறார். தன் தாய் தந்தையை மகிழ்விக்கிறார். தன் பிள்ளைகள், துணைவர், அடிமைகள் (bondservants), வேலைக்காரர்கள், ஊழியர்கள் ஆகியோரை மகிழ்விக்கிறார். இது முதல் காரணம்.
2. இரண்டாவது, அந்த நியாயமான செல்வத்தால், தன் நண்பர்கள் மற்றும் தோழர்களையும் மகிழ்விக்கிறார். இது இரண்டாவது காரணம்.
3. மூன்றாவது, அந்த செல்வத்தால், தீ, வெள்ளம், அரசர்கள், கொள்ளையர்கள், விருப்பமில்லாத வாரிசுகள் போன்றவற்றிடமிருந்து தன்னை பாதுகாக்கிறார். இது செல்வத்தைப் பயன்படுத்தும் மூன்றாவது காரணம்.
4. நான்காவது, அந்த செல்வத்தால் ஐந்து காணிக்கைகளை செய்கிறார்: உறவினர்களுக்கு, விருந்தினர்களுக்கு, முன்னோர்களுக்கு, அரசருக்கு மற்றும் குலதெய்வங்களுக்கு. இது செல்வத்தைப் பயன்படுத்தும் நான்காவது காரணம்.
5. ஐந்தாவது, அந்த செல்வத்தால், துறவிகள் மற்றும் பிராமணர்களுக்காக ஊக்கமளிக்கும் தானங்களை அளிக்கிறார்—அவர்கள் கள்ளுண்ணாமை கடைப்பிடிப்போர், அலட்சியத்தையும் தவிர்க்கிறவர்கள், பொறுமையிலும் மென்மையிலும் நிலைத்தவர்கள், தங்களை அடக்கி, அமைதியாக்கி, நிப்பாண வீடுபேரடைய முயற்சிக்கின்றவர்கள் - அப்பேர்ப்பட்டவர்களுக்கு தரும் தானம் சொர்க்கத்திற்குத் தகுந்தது, மகிழ்ச்சியை விளைவிக்கும், சொர்க்கத்தை நோக்கி வழிகாட்டும். இது செல்வத்தைப் பயன்படுத்தும் ஐந்தாவது காரணம்.
இவைதான் செல்வம் சேர்க்க வேண்டிய ஐந்து காரணங்கள்.
ஒரு மேன்மையான சீடர் இந்த ஐந்து காரணங்களினால் சேர்த்த செல்வம் குறைந்துவிட்டால், அவர் சிந்திக்கிறார்: ‘இந்த காரணங்களுக்காக நான் சேர்த்த செல்வம் இப்போது குறைந்து வருகிறது.’ அதனால், அவர் மனத்தில் வருத்தம் கொள்ளவில்லை.
அதேபோல், அந்த செல்வம் அதிகரித்தாலும், அவர் சிந்திக்கிறார்: ‘இந்த காரணங்களுக்காக நான் சேர்த்த செல்வம் இப்போது அதிகரிக்கிறது.’ ஆகவே, இரு சூழ்நிலைகளிலும் அவர் வருந்துவதில்லை."
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN5.41
***
https://youtu.be/BjAFaoq4RWk?si=VFUg0Gz-KwIziycO
பாடியவர்: சாய் விக்னேஷ்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
பெருக்கம்-செல்வம்;
சுருக்கம்-வறுமை;
உயர்வு-மேன்மை
செல்வம் வரும்போது (பெருக்கம்) துள்ளாமல் பணிவுடன் இருப்பதும், வறுமை (சுருக்கம்) வரும்போது சோர்வடையாமல் தலை நிமிர்ந்து முயற்சிப்பதும் (உயர்வு) வேண்டும்.
***
உபேட்சை (பாலி: upekkhā சமஸ்: Upekshā. ஆங்கிலம்: Equanimity) என்பது ஒரு மனோநிலை. இது பத்து பாரமிதைகளுள் ஒன்று. பிரமவிகாரங்கள் - உபேட்சை, கருணை, மைத்திரி, முதிதையென்னும் - நான்கினுள் ஒன்று. நன்கு வளர்க்கப்பட வேண்டிய மிகவும் உயர்வான பண்பு.
அமைதியான நிதானமான மனநிலை. அதாவது சமமான மனநிலை. நல்ல செய்தி கேட்டால் மகிழ்ச்சியில் அடித்துச் செல்லப்படுவதில்லை. கெட்ட செய்தி கேட்டால் துக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. உபேட்சை உள்ளவர் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமநிலையில் உள்ளவர். எல்லாக் காலத்திற்கும் ஏற்ற பெண் அல்லது ஆண் நீங்கள். கோடை காலத்துக்கு மட்டும் அல்ல. மழை காலத்துக்கு
மட்டும் அல்ல. மாறிக் கொண்டிருக்கும் உலகில் சமநிலையில் உள்ளவர்.
விளக்கவுரைகளில் உபேட்சைக்குக் கொடுக்கப்படும் உவமானம்: இந்த மாபெரும் பூமி தன் மீது தூய்மையானவற்றையோ, தூய்மையற்றவற்றையோ எதைக் கொட்டினாலும் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொள்வதைப் போல, சமநிலையில் உள்ளவர். நன்மை தீமை எது நிகழ்ந்தாலும், எல்லையற்ற மகிழ்ச்சி அல்லது அளவற்ற சோர்வு காட்டாமல் எப்போதும் சீரான அமைதியுடன் இருப்பவர்.
(ஆதாரம்: ஆஜான் சோணா தர்ம உரையிலிருந்து.)
செல்வம் வரும்போது உபேட்சை உள்ளவர் உணர்கிறார்: 'இது மாறும் தன்மை கொண்டது. நாளைக்கு இந்த செல்வம் போனாலும் போகலாம்.' எனவே அவர் பணிவுடன் இருக்கிறார்.
வறுமை வரும்போதும் உபேட்சை உள்ளவர் உணர்கிறார்: 'இது மாறும் தன்மை கொண்டது. நான் முயற்சி செய்தால் இந்த சூழ்நிலையை மாற்றி விடலாம்.' எனவே அவர் நிமிர்ந்து நிற்கிறார்.
***
https://youtu.be/8G5RKNkeslE?si=FsTZ-8EUAG7zRI-R
பாடியவர்: ஏ. சி. தினகரன்
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
காட்டு¹-தல்-காண்பித்தல்
ஈர்¹-தல்-அறுத் தல்
உணர்¹-தல்-அறிதல்
ஒவ்வொரு நாளும் ஒன்று போல காணப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஆயுளை (உயிர்) அறுக்கும் (ஈர்க்கும்) வாள் என்பதை வாழ்க்கையை உணர்ந்தவர்கள் (உணர்வார்) அறிவார்.
***
மரணத்தை நினைவு கொள்ளல்
புத்தர் கூறினார்:
“துறவிகளே, மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கு வளர்க்கப்பட்டால் அது மிகுந்த பயனும் பலனும் தரும். அது மரணத்திலிருந்து விடுதலையில் முடிவடைகிறது. நீங்கள் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கிறீர்களா?”
இதை அவர் கூறியதும், ஒரு துறவி புத்தரிடம் கூறினார்:
“அய்யா, நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கிறேன்.”
“ஆனால் துறவியே, அதை நீர் எப்படி வளர்க்கின்றீர்?”
“அய்யா, இது சம்பந்தமாக நான் நினைப்பது: ‘ஓ, நான் இன்னொரு நாளும் இரவும் வாழ்ந்தால், புத்தரின் உபதேசங்களில் கவனம் செலுத்துவேன்; நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்.”
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
“அய்யா, நானும் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கிறேன்.”
.....
இது சம்பந்தமாக நான் நினைப்பது: ‘ஓ, நான் இன்னொரு நாளேனும் வாழ்ந்தால், புத்தரின் உபதேசங்களில் கவனம் செலுத்துவேன்; நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் பிச்சை பெற்ற உணவைச் சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் வாழ்ந்தாலும் போதும்; அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் நான்கு அல்லது ஐந்து வாயளவு உணவு மென்று விழுங்கும் நேரத்துக்கு மட்டும் வாழ்ந்தாலும் போதும். அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் ஒரு வாயளவு உணவை மென்று விழுங்கும் நேரத்துக்கு மட்டும் வாழ்ந்தாலும் போதும்.
அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் ஒரு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் நேரம் மட்டும் வாழ்ந்தாலும், அல்லது வெளிவிட்டு உள்ளிழுக்கும் நேரம் மட்டும் வாழ்ந்தாலும் போதும்.
அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
இது கூறப்பட்டதும், புத்தர் அந்த துறவிகளிடம் கூறினார்:
“ஒரு நாள் மற்றும் இரவு வாழ வேண்டும் என்று விரும்பி மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் துறவிகள்… அல்லது ஒரு நாள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்… அல்லது ஒரு பிச்சை உணவைச் சாப்பிடும் அளவுக்கு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்… அல்லது நான்கு அல்லது ஐந்து வாயளவு உணவை மென்று விழுங்கும் நேரத்துக்கு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்—இவர்கள் எல்லாம் கவனக்குறைவாக வாழும் துறவிகள் எனப்படுகிறார்கள். அவர்கள் தளர்ந்த மனநிலையுடன், களக்கங்களை முடிவுக்கு கொண்டு செல்ல மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை மெதுவாகவே வளர்க்கிறார்கள்.”
ஒரு வாயளவு உணவை மென்று விழுங்கும் நேரத்துக்கு மட்டும் வாழ வேண்டும் என்று விரும்பி மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் துறவிகள்… அல்லது மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் நேரம் மட்டும்… அல்லது வெளியிட்டு உள்ளிழுக்கும் நேரம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்—இவர்கள் எல்லாம் கவனமாக வாழும் துறவிகள் எனப்படுகிறார்கள். அவர்கள் களக்கங்களை முடிவுக்கு கொண்டு செல்ல மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை தீவிரமாக வளர்க்கிறார்கள்.
எனவே நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்: ‘நாம் கவனமாக வாழ்வோம். களக்கங்களை முடிவுக்கு கொண்டு செல்ல, மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை தீவிரமாக வளர்ப்போம்.’ இதுவே நீங்கள் பயிற்சி பெற வேண்டிய விதம்."
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் 6.19 மரணத்தை நினைவு கொள்தல்
***
https://youtu.be/E796Rq7BaMU?si=Z3HzAjIhRJwVul-o
பாடியவர்: ஸ்ரீவர்ஷா
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
குடம்பை-கூடு,முட்டை;
தனி-த்தல்-ஏகாந்தமாதமல்;
ஒழித்தல்-நீக்குதல்;
புள்-பறவை;
அற்று-அத்தன்மையது;
நட்பு -உறவு;
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு (நட்பு) என்பது முட்டையிலிருந்து (குடம்பை) வெளியே வரும் பறவை (புள்) அதை உடைத்து ஒதுக்கிவிட்டு (தனித்துஒழிய) பறந்து சென்று விடுவதை போன்றது.
***
இந்த குரள் சொல்வது: இந்த உடல் சிதைந்த பின்னர் உயிர் பிரிந்து போய்விடும்.
உயிருக்கு இந்த உடல் தற்காலிகமாக பயன்படும் வீடு மட்டுமே. இந்த உடல் சிதைந்த பின்னர் உயிர் பிரிந்து போய் வேறொரு உடலோடு இணைந்து கொள்ளும் என்பதையும் ஊகிக்கலாம்.
பௌத்த பார்வையில் அந்த உயிரை ஆன்மா என்று சொல்வதில்லை. ஆன்மா என்றால் மாற்றம் இல்லாத ஒன்று நமக்குள் இருப்பதான கருத்து.
'இந்த ஆன்மா தான் பேசுவதும், உணர்வதும், நமது வினைப் பயனாக வரும் இன்பத் துன்பங்களை அனுபவிப்பதும், ஒரு உடலிலிருந்து - அந்த உடல் சிதைந்த பின் - அடுத்த உடலுக்கு போவதும்' என்ற கருத்துக்கு பௌத்தத்தில் இடமில்லை.
ஆன்மா உள்ளதென்றால் அதனால் 'நான், எனது, என்உயிர்' என்ற அகம்பாவ எண்ணங்களுக்கு இடம் அளிக்கும். அதனால் பற்று அதிகரிப்பது மட்டுமில்லாமல் மற்ற துன்பங்களும் வரும் என்பதை புத்த பகவான் விளக்கியுள்ளார் (உ-ம் சங்யுத்த நிகாயம் SN22.59 அநத்த-லக்கண சுத்தம்).
இந்தக் கருத்தைக் கொண்டிருந்த ஒரு துறவியை புத்தர் கடிந்தார்:
"முட்டாள் மனிதனே, இந்த உலகில் நான் அந்த வகையில் போதித்ததாக கேட்டவர் யார்? நான் பலவிதமாகவே கூறியிருக்கிறேன்—'உணர்வு (consciousness) என்பது சார்ந்ததிலிருந்து தோன்றுகிறது (dependently arisen); காரணமில்லாமல் அது தோன்றுவதில்லை' என்று. (சார்பில் தோன்றுவது எல்லாம் நிலையற்றது) ஆனால் நீ தவறாகப் புரிந்து கொண்டு, நான் சொன்னதாக தவறாக எடுத்துக் கூறுகிறாய், உனக்கே தீங்கு விளைவிக்கிறாய், மேலும் தீமையால் நிரம்புகிறாய். இது நீண்ட காலத்திற்கு உனக்கான துன்பத்திற்கு காரணமாகும்." (மஜ்ஜிம நிகாயம் MN 38 பற்றின் முடிவு பற்றிய நீண்ட போதனை)
உயிர் அல்லது உணர்வு என்பது தொடர்ந்து மாற்றத்துக்கு உட்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பொறியுடன் சார்ந்த உணர்வு உண்டு (மெய், வாய், கண், மூக்கு, செவி, சித்தம்).
கண்ணுணர்வு என்பது கண்ணையும் காட்சியையும் சார்ந்துள்ளது. கண்ணும் மாறும் தன்மை கொண்டது, காட்சியும் மாறும் தன்மை கொண்டது என்பதால் இந்த கண்ணுணர்வும் மாறும் தன்மை கொண்டது.
அதுபோலவே மற்ற உணர்வுகளும். காதும் ஓசையும் மாறும் தன்மை கொண்டுள்ளதால் காதுணர்வும் மாறும் தன்மை கொண்டுள்ளது.
இந்த உணர்வுகளின் தொகுப்பு, செய்த வினைப் பலனுக்கு ஏற்ப, அடுத்த பிறவியில் வேறு ஒரு அருவமும் உருவமுமாக தோன்றுகிறது (பாலி: நாம ரூப; ஆங்கிலம்: mentality-materiality).
***
https://youtu.be/YhGHX0SBf6Q?si=9tRFJQDqVmZT0SlV
பாடியவர்: வி. மாணிக்க நந்தினி
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
(கண்ணோட்டம்-தாட்சிணியம்;
கழி-மிகுந்த;
காரிகை-அழகு;
உண்மையான்-உள்ளதால்)
அன்பு இரக்கம் (கண்ணோட்டம்) என்னும் மிகுந்த (கழி) அழகான (காரிகை) குணங்கள் உள்ளதால் தான் (உண்மையான்) இந்த உலகம் தொடர்ந்து இயங்குகிறது (உண்டிவ் வுலகு).
***
பிரமவிகாரங்கள் - உபேட்சை, கருணை, மைத்திரி, முதிதையென்பவை. இவை நான்கும் இனிமையான குணாதிசியங்கள். விகாரை என்றால் இருப்பிடம். பிரம்ம உலகத்தில் வாழும் தேவர்களின் மனம் எந்நேரமும் இந்த நான்கினுள் குடியிருக்குமாம். எனவே பிரமவிகாரங்கள் என்று அழைக்கப்படும்.
திரிபிடக உரைகளில் உள்ள விளக்கம்:
குழந்தை உவமானம்
1. மெத்தா/மைத்திரி/அன்பு என்பது மற்றவர் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்ற விருப்பம். இங்கே மற்றவர என்பது நாம், நமது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர் மட்டுமல்ல. தெரிந்தவர், தெரியாதவர், பிடித்தவர், பிடிக்காதவர், மனிதர் அல்லாத விலங்குகள் உட்பட அனைத்து உயிர்களும் அடங்கும்.
அன்பு என்பது வயிற்றினுள் உள்ள குழந்தை மீது பெற்றொருக்கு உள்ள உணர்ச்சியைப் போல. குழந்தை எப்படிப்பட்ட தோற்றமுடையது என்பது தெரியாது. ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பதும் தெரியாது. அதன் குணாதிசயங்களும் தெரியாது. இருந்தாலும் அது நல்ல படியாக இருக்க வேண்டும் என்ற ஆழமான எண்ணம் பெற்றொருக்கு இருக்கிறது. அதன் மீது அன்பான எண்ணங்கள் செலுத்துகிறார்கள். 'நீ நன்றாக இரு! நல்லபடியாக பிறக்கட்டும். துன்பப்படாமல் இருக்கட்டும்.' இதுவே அன்பு. நமது குடம்பத்தினர் மீது இப்படி பட்ட எண்ணங்களை செலுத்துகிறோம். அவர்களின் குணங்களை, குறைபாடுகளை பற்றியெல்லாம் நினைப்பதில்லை. அது போன்ற உணர்வை அனைத்து உயிர்களிடமும் காட்ட வேண்டும்.
2. கருணா/ கருணை/இரக்கம் - என்பது மற்றவர் அனுபவிக்கும் துன்பம் குறையவேண்டும் என்ற விருப்பம். இதுவும் ஒரு வகையான அன்புதான். குறிப்பாக துன்பப்படுபவர் மீது உள்ள அன்பு.
(அவர்களோடு சேர்ந்து நாமும் துன்புறுவது என்பது இரக்கம் அல்ல. அது பற்றின் காரணமாக வந்த துன்பம்).
குழந்தை பிறந்த முதல் சில வருடங்களில் அது பெற்றோரை முழுவதும் நம்பி இருக்கிறது. அப்போது பெற்றொர்கள் அதன் மீது இரக்கம் செலுத்துகின்றனர். ஏனென்றால் அது மிகவும் அவதிப்படுகிறது. அழுக்காகும் துணிகள். வயிற்று வலி. மூக்கில் சளி. பல வகையான இன்னல்கள். தடுமாறிக்கோண்டிருக்கிறது. நடக்க தெரியவில்லை. பேசத் தெரியவில்லை. பெற்றொருக்கு அந்த குழந்தையின் துன்பம் குறையவேண்டும் என்ற விருப்பம் உண்டாகிறது. வயிற்றில் உள்ள போது அது துன்பப்படுகிறதா மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. வயிற்றுல் உள்ள போது அன்பான எண்ணங்களை செலுத்துகிறோம். பிறந்த பின் துன்பபடுவதை கண்டு அதன் துன்பத்தை குறைக்க முற்படுகின்றோம். அதுவே இரக்க உணர்வு.
அதுபோன்ற இரக்க உணர்வை மற்றவரிடத்திலும் காட்ட வேண்டும்.
3. முதிகை - மற்றவர் மகிழ்ச்சியை கண்டு நாமும் மகிழ்தல். இதுவும் ஒரு வகை அன்பு தான். மகிழ்ச்சியுடன் உள்ளோர் மீது உள்ள அன்பு.
பின் குழந்தை சிறுமியாகி பள்ளிக்குடம் சென்று படிக்க, விளையாட துவங்குகிறது. வாழ்க்கையில் சில சாதனைகள் புரிய தொடங்குகிறது. சில விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கிறது. அதற்கு ஏக மகிழ்ச்சி. வீட்டுக்கு வந்து தான் பள்ளியில் வரைந்த குச்சி
உருவங்களை காண்பித்து அது அம்மா, இது அப்பா என்று பெருமையுடன் கூறுகிறது. அதற்கு ஏக சந்தோஷம். ஆசிரியையும் நன்றாக வரைந்ததாக கூறினார் என்கிறது. அதன் சந்தோஷத்தை கண்டு பெற்றோரும் பூரிக்கின்றனர் சந்தோஷப்படுகின்றனர்.
அதுவே முதிகை என்ற குணாதிசியம்.
அதுபோல நாமும் அனைத்து உயிரினங்களிடமும் முதிதை கொண்டிருக்க வேண்டும். ஒரு செலவும் இல்லாமல் எளிமையாக பெரும் மகிழ்ச்சி இது!
4. உபேக்கை/உபேட்சை - சம மன நிலை, அமைதி
மனக்கலக்கமின்றி, அமைதியாக, நிதானமாக நடுவுநிலைமையில் இருத்தல். மற்றவர் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருப்பதும் ஒருவகையான அன்பு தானே?
இப்போது அந்த குழந்தை பெரியவளாகி தணியாக இயங்கத் துவங்கிவிட்டாள். அவளுக்கென்ற குடும்பம், வேலை, பொருப்புகள்.... இப்போது பெற்றொரின் முக்கிய மனநிலையாக இருக்க வேண்டியது, 'அவள் தனது வாழ்க்கையை தானாக நடத்தட்டும்,' என்பது தான். பெற்றோரின் மனநிலை உபேக்கையாக இருக்க வேண்டும். சமமனநிலையோடு இருத்தல். என்பது மகள் தனது வாழ்க்கையின் மேடு பள்ளங்களை தானக சாமாளிக்க வேண்டும் என்ற எண்ணம். மேடு பல்லங்கள் இருப்பது தானே வாழ்க்கை? நாம் அவர்களின் வாழ்க்கையை எடுத்து நடத்த முடியாது. நடத்தவும் கூடாது. நாம் உபேக்கையை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் அதிர்ஷ்டம் மாறும் போது நாம் சம நிலையாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நாம் தலையிட கூடாது. அவர்கள் ஏற்க வெண்டிய பொருப்பை நாம் ஏற்கக்கூடாது. கண்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றில்லை. புறக்கனித்து, அக்கறை இன்றி இருக்க வேண்டும் என்றில்லை. அவர்கள் கேட்டால் நாம் அறிவுரை கூறலாம். ஆனால் அவர்கள் மேடு பள்ளங்களை வாழ்க்கையில் சந்திக்கும் போது நாம் சம மனநிலையோடு அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் சமமனநிலையோடு ஒருவர் இருப்பது அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
ஆதாரம்: பிக்கு அஜான் சோணா வின் சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.
***
https://youtu.be/0YYV3cO2aIk?si=dkkMq0UMhOv1eyIo
பாடியவர்: கங்கா
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
(ஆன்-அவ்விடம்;
அமர்-விருப்பம்;
ஆகத்தான்-உள்ளத்தில்;
ஆம்-அழகு;
இன்சொல்-நல்ல வார்த்தை)
முகத்தில் (முகத்தான்) விருப்பத்துடன் (அமர்ந்து)
இனிமையான பார்வையுடன் (இனிதுநோக்கி) உள்ளத்தில் இருந்து (அகத்தானாம்) வரும் இனிய சொற்களை (இன்சொல்) சொல்வதே அறம்.
***
புத்த பகவான் கூறினார்:
"பிக்குகளே, ஐந்து பண்புகள் கொண்ட ஒரு உரை நன்றாகப் பேசப்பட்டதாகும்; அது தவறாகப் பேசப்பட்டதல்ல. அது குற்றமற்றதும், அறிவுடையோர் குறை கூற முடியாததும் ஆகும். அந்த ஐந்து பண்புகள் என்ன?
1. அது சரியான நேரத்தில் பேசப்படுகிறது.
2. அது உண்மையை பேசுவது.
3. அது அன்புடன் பேசப்படுகிறது.
4. அது பயனுள்ளதாக பேசப்படுகிறது.
5. அது நல்லெண்ணத்துடன் பேசப்படுகிறது.
இந்த ஐந்து பண்புகளால் கூடிய உரை நன்றாகப் பேசப்பட்டதாகும்; அது தவறாகப் பேசப்பட்டதல்ல. அது குற்றமற்றதும், அறிவுடையோர் குறை கூற முடியாததும் ஆகும்."
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN5.198
***
https://youtu.be/7likCVHLmm0?si=QJzxAlimbBDaMG_s
பாடியவர்: பார்த்திபன்
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழல்இனிது யாழ்இனிது என்று கூருவோர் (என்பர்) தம் குழந்தைகளின்
மழலை பேச்சை கேட்காதவர்.
***
மழை
எழுவதில் சிறந்தது எது?
விழுவதில் அருமையானது எது?
ஒரு கடமையை செய்ய புறப்படுவதில் சிறந்தது எது?
சிறந்த பேச்சாளர் யார்?
விதையே எழுவதில் சிறந்தது.
மழையே விழுவனவற்றுல் அருமையானது.
மாடுகள் (உழுவதற்காக) புறப்படுவனவற்றில் சிறந்தவை.
மழலைப் பேச்சுடைய குழந்தையே சிறந்த பேச்சாளர்.
அறிவே எழும் பொருட்களில் சிறந்தது.
அறியாமையே வீழுவனவற்றுல் அருமையானது.
சங்கத்தார் (ஞானம் பெறுவதற்காக) புறப்படுவோரில்
சிறந்தவர்.
புத்தரே சிறந்த பேச்சாளர்.
ஆதாரம்: SN 1.74 சங்யுத்த நிகாயம்
***
https://youtu.be/2TEuLFkCnDc?si=8zQD2PwVCjYSK8C0
பாடியவர்: மின்மினி
குறள்#430 அறிவிலார்
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
ஏனும் -என்றாலும்
ஞானமுடையார் (அறிவுடையார்) வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ தேவையான எல்லாம் உடையவர் ஆவார்.
ஞானமில்லாதவரிடம் (அறிவிலார்) எது இருந்தாலும் (என்னுடைய ரேனும்) மகிழ்ச்சிக்கு தேவையானவை ஏதும் இல்லாதவர் (இலர்).
***
ஞானமுடையவர் எந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும், எதனை ஒதுக்க வேண்டும் என்பதை அறிந்தவர். தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை தீர்த்து அதனால் நிம்மதியும் மகிழ்ச்சியும் காண்கின்றனர். எந்த பயனுள்ள விளைவுகளுக்கும் எடுத்துச் செல்லாத விஷயங்களில் நேரத்தை செலவு செய்ய மாட்டார்.
ஞானம் இல்லாதவர்களுக்கு பொருட் செல்வம் இருந்தாலும் அவர்கள் மனம் குழப்பத்தில் உள்ளபடியால் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, அவற்றைப் பற்றி கவலைப்பட்டு, தங்கள் நிம்மதியை குலைத்துக் கொள்கின்றனர்.
தம்மபதம் 60
தூக்கமில்லாதவருக்கு இரவு நீளமாக இருக்கிறது; சோர்வடைந்தவருக்கு ஒரு பயணம் நீளமாக இருக்கிறது. உன்னதமான வாய்மையை அறியாத மூடர்களுக்கு, பிறப்பு இறப்பாகிய சம்சார வட்டம் பெரியதாக இருக்கிறது.
தம்மபதம் 62
முட்டாள் கவலைப்படுகிறான், “எனக்கு மக்கள் இருக்கிறார்கள், எனக்கு செல்வம் இருக்கிறது” என்று. உண்மையில், அவனே தனக்குடையவனாக இல்லாதபோது, மகன்கள் எங்கிருந்து வந்தார்கள்? செல்வம் எங்கிருந்து வந்தது?
https://youtu.be/0Cc6fsDFyOg?si=HP26oBzZkX5UevH9
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
(வாய்-வழி
நாடு-தல்-தேடுதல்
வாய்-தல்-ஏற்ற தாதல்)
நோய் இன்னதென்று ஆராய்ந்து (நோய்நாடி), நோயின் காரணம் ஆராய்ந்து (நோய்முதல்), அதைத் தணிக்கும் வழியையும் (வாய்) ஆராய்ந்து, உடலுக்கு ஏற்றதாக (வாய்ப்பச்) செய்ய வேண்டியதை செய்யவேண்டும்.
***
புத்த பகவான் ஒரு மகா வைத்தியர் என்று அழைக்கப்படுபவர்.
நான்கு உன்னத உண்மைகளை ஒரு வைத்தியர் நோயாளியை ஆராய்ந்து குணப்படுத்துவதோடு ஒப்பிடலாம்.
முதல் உன்னத உண்மையானது: "துக்கம் உள்ளது". அதாவது வாழ்க்கையில் துக்கம் உள்ளது. இது மருத்துவர் நோயாளியை பார்த்து நோய் இருப்பதை அறிவது போல.
இரண்டாம் உன்னத உண்மையானது: "துக்கத்தின் காரணம்". துக்கத்தின் காரணம் அவா, பற்று, அறியாமை ஆகியவை. இது மருத்துவர் நோயாளியை தீர ஆராய்ந்து நோய்க்கான காரணத்தை கூறுவது போல.
மூன்றாம் உன்னத உண்மையானது: "துக்கத்தின் முடிவு". பற்றினை விட்டு விட்டால் துக்கத்தை முடிக்க முடியும். இது மருத்துவர் நோயாளியிடம் அவரது நோயை குணப்படுத்த முடியும்
என்று உறுதி அளிப்பது போல.
நான்காவது உன்னத உண்மையானது: "துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம்". அதுவே அட்டாங்க மார்க்கம். மார்க்கத்தை தொடர்ந்தால் துக்கத்தை முடிக்கலாம். இது மருத்துவர் நோயாளிக்கு மருந்தை தந்து எந்தெந்த மருந்தை எந்தெந்த நேரத்தில் சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பதை தெரிவிப்பது போல.
***
வல்பொல சிறி இராகுலர் எழுதிய "புத்த பகவான் அருளிய போதனை" என்ற புத்தகத்திலிருந்து
சில பகுதிகள் (தமிழாக்கம்: நவாலியூர் சோ. நடராசன்):
எதிலும் நலமே காண்கிற (optimistic) தன்மையோ எதிலும் தீமையே காண்கிற (pessimistic) தன்மையோ பௌத்தத்தில் கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். பௌத்தம் எத்தன்மையுடையதென்றால் வாழ்வைப் பற்றியும், உலகைப் பற்றியும் யதார்த்தமான ஒரு காட்சியுடையது (realistic). அது உள்ளத்தை உள்ளவாறே பார்க்கும் "யதாபூத"த் (yathābūtam) தன்மையுடையது. அது உங்களைப் போலிக் கற்பனையில் இருக்கச் செய்வதில்லை. அல்லது கற்பனையிற் பிறந்த பல வகையான பயத்திலும் பாவ எண்ணங்களிலும் இருக்கச் செய்வதில்லை. உங்கள் உண்மை நிலை என்ன என்பதையும் பிரத்தியட்சமாகக் கண்டு காட்டி நீங்கள் பூரணமான விடுதலைபெறவும் சமாதானமும் சாந்தியும் சுகமும் பெறவும் வழியைத் தெரிவிக்கிறது.
நோய்மிகக் கொடியது, இதற்குப் பரிகாரமே இல்லையெனச் சில வைத்தியர்கள் மிகைப்படுத்திக் கூறுவர். வேறு சிலர் அப்படி நோயொன்றுமில்லை, வைத்தியம் அவசியமில்லை என்று அறியாமையால் கூறி நோயாளிக்குப் போலி ஆறுதல் கூறி ஏமாற்றுவர். முதல் வைத்தியர் தீமை காணும் தன்மையுடையவர் என்று கூறலாம் (pessimistic). இரண்டாமவர் நன்மையே காணும் தன்மையுடையவர் எனலாம் (optimistic). ஆனால் இரண்டு பேரும் ஆபத்தான பேர்வழிகளே. மூன்றாவது வகையான ஒரு வைத்தியர் இருக்கிறார். அவர் நோய்க் குணங்களைச் சரியாக அறிந்து நோய்க்குரிய காரணத்தையும் தன்மையையும் உணர்ந்து, அதைக் குணப்படுத்தலாமெனத் தெளிவாகக் கண்டு, தைரியத்தோடு மருந்து கொடுக்கிறார். அதன் பயனாக நோயாளி தப்பிப் பிழைக்கிறார். புத்தபகவான் மூன்றாவது வைத்தியரைப் போன்றவர். இவரே ஞானமும் விஞ்ஞானப் பான்மையுமுடையவர். உலகத்துப் பிணிக்கு ஏற்ற வைத்தியர்.
***
https://youtu.be/ivi6N0iZNGE?si=CZ6GeFKS9_GDHF51
பாடியவர்: அமிர்தவர்ஷினி
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
(இணர்-சுவாலை;
எரி-நெருப்பு;
தோய்-தல்-முழுகுதல்;
அன்ன-அத்தன்மையானவை;
புணரின்-கூடுமானால்;
வெகுளாமை-கோபியாமை)
நெருப்பு (எரி) சுடர்களால் (இணர்) சுடுவது (தோய்) போன்ற (அன்ன) துன்பத்தை (இன்னா) ஒருவர் செய்தாலும் கூடுமானால் (புணரின்) கோபியாமை (வெகுளாமை) நல்லது.
***
இரம்பம் பற்றிய உவமானம்
(மஜ்ஜிம நிகாயம் Simile of the Saw MN21)
"இரு கைப்பிடிகள் கொண்ட இரம்பத்தால் கீழ்த்தர கொள்ளையர்கள் உங்கள் கை கால்களை அறுத்தாலும், அதனால் அவர்கள் மீது எவருக்கேனும் ஒரு தீய எண்ணம் தோன்றுமானால், அவர் என் உபதேசங்களைப் பின்பற்றுபவராக இருக்க மாட்டார்."
"அப்படி நடந்தால், நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்: ‘எங்கள் மனம் சிதைவடையாது. எங்கள் வாயிலிருந்து தீய வார்த்தைகள் வெளிவராது. நாங்கள் இரக்கம் நிறைந்தவர்களாக இருப்போம், அன்பு நிறைந்த உள்ளத்துடன், மறைந்த பகைமையின்றி. அந்த நபருக்கே அன்பு பரப்பும் மனதுடன் தியானம் செய்வோம். அவரை அடிப்படையாகக் கொண்டு, உலகில் உள்ள அனைவருக்கும் அன்பு நிறைந்த, பரந்த, எல்லையற்ற, பகைமையும் தீய எண்ணங்களும் இல்லாத உள்ளத்தை பரப்பும் தியானம் செய்வோம்.’ இவ்வாறு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்."
"நீங்கள் இந்த இரம்பம் பற்றிய உவமானத்தை அடிக்கடி சிந்தித்தால், உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத சிறிய அல்லது பெரிய இன்னல் ஏதேனும் இருக்க முடியுமா?"
"இல்லை, ஐயா.”
“அப்படியானால், பிக்குகளே, நீங்கள் இந்த இரம்பம் பற்றிய உவமானத்தை அடிக்கடி சிந்திக்க வேண்டும். இது உங்கள் நிலையான நன்மைக்கும் மகிழ்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.”
***
https://youtu.be/Zvu1la6UAR8?si=Y4J4jeN-s0ZYye2R
பாடியவர்: கோல்ட் தேவராஜ்
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
(ஆற்றல்-பொறை,வலிமை;
ஆற்றுவார்-திறமையுள்ளவர்
ஆற்று¹-தல்-உய்தல்,பொறுத்தல்
ஆற்று²-தல்-பசிமுதலியன தணித்தல்)
திறமையுள்ளவரின் (ஆற்றுவார்) வலிமை (ஆற்றல்) பசியை பொறுத்துக் கொள்வது (பசிஆற்றல்). ஆனால் அந்த வலிமை அந்த பசியை தணிப் போரின் (மாற்றுவார்) வலிமைக்கு (ஆற்றலின்) அடுத்ததே (பின்).
***
மணிமேகலை (25,228-231)
அறமெனப் படுவது யாதெனக்கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்.
பொருள்
புண்ணியம் சேர்த்தல் என்னவென்று கேட்டால், இதை நன்கு மனதில் வைத்துக்கொள்: எல்லா உயிரினங்களுக்கும் உணவு, உடை மற்றும் பாதுகாப்பான வசிப்பிடங்கள் தந்து பராமரிப்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
“If one should ask what is the supreme form of charity, bear this carefully in mind that it is the maintenance of all living creatures with food and clothing and places to live in safety.” (translated by Dr. C.R. Krishnamurti)
***
https://youtu.be/LCdJ0BKwQGA?si=bg4ZP3kNVC46pu7X
பாடியவர்: பி. ஜனுஷிகா
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
(விண்-மேகம்
பொய்-த்தல்-தவறுதல்
வியன்-சிறப்பு.
உடற்று-தல்-வருத்துதல்)
மேகம் (விண்) இந்நாள் பெய்யாவிட்டால் (பொய்ப்பின்)
விரிந்த நீர் சூழ்ந்த (விரிநீர்) சிறந்த (வியன்) உலகத்தில்
பசி நிலைத்து (நின்று) வருத்தும் (உடற்றும்).
***
விளக்கு
உலகத்திற்கு விளக்கு எது?
உலகத்தில் எது விழிப்புணர்வுடன் இருக்கிறது?
ஒருவரின் பணியாளர்கள் யார்?
ஒருவரின் வாழ்க்கை வழி எது?
சோம்பேறிகளையும் உழைக்கும் மக்களையும் தாயின் பாசத்துடன் வளர்ப்பது எது?
பூமியில் வாழும் உயிரினங்கள் தங்கள் வாழ்வை எதனால் தக்கவைத்துக் கொள்கின்றன?
ஞானமே உலகிற்கு விளக்கு. உலகில் விழிப்புணர்வுடன் இருப்பது நற்கடைப்பிடி (மனக் கவனம்).
மாடுகளே ஒருவரின் பணியாளர்கள்;
வாழ்க்கை வழி என்பது வயல்வெளியின் உழைப்பு.
மழையே சோம்பேறிகளையும் உழைப்பாளிகளையும் (பாகுபாடின்றி) தாய்போல் வளர்க்கிறது.
பூமியில் வாழும் உயிர்கள் மழையினாலே தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்கின்றன.
ஆதாரம்: SN1.80 சங்யுத்த நிகாயம்
***
https://youtu.be/q090op0y3Q4?si=F6M9Oz7XYxXh2pdW
பாடியவர்: அல்கா அஜித்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
(கண்-இடம்;
மாசு-அழுக்கு, குற்றம்;
ஆகுலம்-மனக்கலக்கம், ஆரவாரம்
நீர்மை-தன்மை)
மனதில் (மனத்துக்கண்) அழுக்கு (மாசு) இல்லாதவராக (இலன்) ஆவதே (ஆதல்) அறத்தின் முழுமை (அனைத்தறன்). மற்றவை (பிற) மனக்கலக்கத் (ஆகுல) தன்மை கொண்டவை (நீர).
***
உடல், மொழி மற்றும் உள்ளத்தால் செய்வதனைத்தும் உள்ளத்தை தூய்மையாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட வேண்டும். அந்த நோக்கமில்லாத செயல்கள் துன்பத்திற்கு எடுத்துச் செல்லும்.
பௌத்த நெறியை இந்த ஒரு குரள் மிகவும் சுருக்கமாக சொல்லிவிடுகிறது. 'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' - இதுவே பௌத்த குறிக்கோள்.
முக்கியமான மூன்று மாசுகள்: காமம் (பேராசை), வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை). இவை மூன்று விஷயங்கள் என்றும் கூறப்படும்.
மாசிலனாவதற்கான வழி ஒழுக்க நெறி கடைபிடித்தல் (சீலம்), தியானம் செய்து மனதை பக்குவப்படுத்தல் (சமாதி), மெய்யறிவு வளர்த்தல் (பஞ்ஞா).
தம்மபதம் 1-2
அனைத்து நிகழ்வுகளுக்கும் மனமே முன்னோடி; மனமே அதற்குத் தலைமை; அவை அனைத்தும் மனதாலேயே உருவாகின்றன; நீங்கள் மாசுள்ள மனதுடன் பேசினால் அல்லது செயல்பட்டால், துன்பம் உங்களைத் தொடர்ந்து வரும் — இழுத்துச் செல்லும் எருதுகளைப் பின் தொடர்ந்துபோகும் வண்டிபோல (எருதுகளுக்கு வண்டி சுமையாகவே கருதப்படும்).
அனைத்து நிகழ்வுகளுக்கும் மனமே முன்னோடி; மனமே அதற்குத் தலைமை; அவை அனைத்தும் மனதாலேயே உருவாகின்றன; நீங்கள் மாசற்ற மனதுடன் பேசினால் அல்லது செயல்பட்டால், மகிழ்ச்சி உங்களைத் தொடர்ந்து வரும் —ஒருபோதும் பிரியாத நிழல் போல (நிழல் ஒருபோதும் சுமையாகாது).
***
https://youtu.be/47iOfuDEKBk?si=02k_aHZZ8Jmal2u_
பாடியவர்: பத்மலதா
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
(அழுக்காறு-பொறாமை;
பெருக்கம்-வளர்ச்சி;
தீர்-தல்-முற்றுப்பெறுதல்)
பிறராக்கம் கண்டு பொறாமை உற்றவர் (அழுக்கற்று) வளர்ச்சி அடைந்ததும் (அகன்றாரும்) இல்லை. அவ்வாரு பொறாமைப்படாதவரது (அஃதுஇல்லார்) வளர்ச்சி முற்றுப்பெறுதலுமில்லை (தீர்ந்தாரும்இல்).
***
பொறாமை என்ற மனநிலை மற்றவரோடு நம்மை ஒப்பிடுவதிலிருந்து தொடங்குகிறது. 'மற்றவர் நம்மைவிட சிறந்தவர். நம்மைவிட திறமையானவர். நம்மைவிட புத்திசாலி. நம்மை விட அழகு.' என்று ஒப்பிட்டு நினைப்பது.
பொறாமை கொள்பவர்கள் தன்னலமுள்ளவர்களாக இருப்பார். தன்னைப் பற்றியே நினைப்பது. தான் தான் உயர்ந்தவன் என்று நினைப்பது. அப்படிப்பட்டவர் இன்னொருவர் தன்னை விட திறமைசாலி என்று உணரும் போது அது அவருக்கு பிடிப்பதில்லை, எனவே பொறாமை கொள்கிறார்.
பொறாமை கொள்வது எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு சில வழிகள் உள்ளன.
1. முதலில் நீங்கள் பொறாமைக் கொண்டுள்ளீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சிலர் காரணங்கள் சொல்லி 'அப்படி எல்லாம் இல்லை. நான் பொறாமை கொள்ளவில்லை,' என்று மழுப்புவார்கள். ஆனால் அடக்கத்துடன், 'நான் பொறாமை கொண்டுள்ளேன்,' என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த தீய மனப்பான்மையை அகற்ற முடியும்.
2. இரண்டாவதாக மற்றவரோடு ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். நாம் எல்லோரும் வேறுபட்டவர்கள். வெவ்வேறு பின்னணியிலிருந்து வளர்ந்து வந்துள்ளோம். எனவே ஒப்பிடுவது சரியல்ல. நம்மை விட சிறந்தவர் உலகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில் இருக்கத்தான் போகிறார். உதாரணமாக நீங்கள் ஒரு இசை கருவியில் வல்லுனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைக்கு உலகிலேயே சிறந்தவர் நீங்கள் தான். அப்படி இருந்தும் எதிர்காலத்தில் இன்னொருவர் உங்களை விடவும் சிறப்பாக வாசிக்கக் கூடியவர் தோன்றுவதற்கான சாத்தியம் உள்ளது. எனவே மற்றவரோடு ஒப்பிட வேண்டாம்.
ஒப்பிட வேண்டும் என்றால் உங்களுடனேயே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். 'இன்று உள்ள நிலையை விட நாளை மேலும் சிறப்படைவேன்,' என்று நினைத்துக் கொள்ளலாம். அதில் தவறு ஏதுமில்லை.
3. அடுத்ததாக பொறாமையை குறைக்க முதிதை என்ற தியானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
முதிதை என்பது - மற்றவர் மகிழ்ச்சியை கண்டு நாமும் மகிழ்தல். பொறாமை நம்மை ஆட்கொள்ளாமல் இருக்க முதிகை பழக வேண்டும். உங்களை சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். அவர்கள் உங்களைவிட திறமைசாலிகளாக அல்லது திறமை குறைந்தவர்களாக இருக்கலாம். முதிதையை பயின்று வளர்த்துக் கொள்ள முடியும். உதாரணமாக தினசரி நீங்கள் படுக்கையில் இருந்து எழும்பும் போது ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இவ்வாறு நினைத்து கொள்ளுங்கள்: 'எனக்கு ஆயுள், பலம், அழகு, இன்பம், புகழ், அறிவு விவேகம் ஆகியவை அதிகரிக்கட்டும்! நான் எனக்கு விரும்புவதை போலவே மற்ற உயிரினங்களின் ஆயுள், பலம், அழகு, இன்பம், புகழ், அறிவு, விவேகம் ஆகியவை அதிகரிக்கட்டும்!'
இவ்வாறு தினசரி நினைக்கும் போது, அடிக்கடி நினைக்கும்போது முதிதை வளர்க்கப்படுகிறது. பின்னர் நாம் உலகத்தில் நம்மை விட மேலானவர் ஒருவரை சந்திக்கும் போது நமக்கு பொறாமை தோன்றாது.
ஆதாரம்: தர்ம உரையில் கேட்டது. நன்றி: Shraddha TV
***
https://youtu.be/e5y56dfDOhc?si=xOPx5d5py_zsNges
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
(சமம்-நடுவுநிலை, ஏற்றத்தாழ்வின்மை;
சீர்தூக்கு-தல்-நிறையளவை வரையறுத்தல்.
கோல்-நிறைகோல், தராசு;
ஒருபால்- ஒருபக்கம்;
கோடு-தல்-நடுநிலைமைதவறுதல்;
கோடாமை-நடுவுநிலைமை போற்றுவது;
அணி-அழகு)
மனம் சமநிலையில் இருந்தவாறு (சமன்செய்து)
எடை அளக்கும் தராசு போல (சீர்தூக்குங் கோல்போல) ஒரு பக்கம் (ஒருபால்) சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது (கோடாமை) சான்றோர்க்கு அழகாகும் (அணி).
***
அடக்கம், அமைதி, சாத்தம், மௌனம் சாதித்தல்: இவையெல்லாம் ஒரு முனிவருக்கான பண்புகள் என்று கருதப்படுகிறது.
புத்த பகவான் 'சாக்கிய முனி' என்று அழைக்கப்பட்டார்.
பௌத்த துறவிகள் தங்களுக்கு ஒரு அன்பளிப்பு தரப்பட்டால், உதாரணமாக
அவர்களுக்கு உணவு தரப்பட்டிருக்கலாம், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆசீர்வதிப்பது வழக்கம். மேலும் இல்லற மக்களுக்கு தம்ம பாதையை காட்டுவதற்காக சில சமயம் தம்ம போதனையையும் தருவார்கள். இதைப் பார்த்த பௌத்தம் கடைப்பிடிக்காத சில ஆன்மீகவாதிகள் 'முனிவர் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள், இவ்வளவு பேசுகின்றனரே,' என்று கண்டித்தனர்.
இதுகுறித்து புத்தரிடம் தெரிவிக்கப்பட்ட போது அவர் மௌனம் சாதிப்பதால் மட்டும் ஒருவர் முனிவர் என்று கருத்தப்படமாட்டார் என்றார் (na monena muni hoti). 'நல்லது, தீயது என்ற உலகின் இரு பக்கங்களையும் அறிந்து, அந்த இரண்டு விஷயங்களில், ஒரு தராசை பயன்படுத்தும் ஒருவர் அதன்முள் நடுவில் இருக்கின்றதா என்பதை கூர்ந்து பார்ப்பது போல, மிகவும் அக்கறையுடன் இருக்கும் ஒருவரே முனிவராவார்,' என்றார்.
தம்மபதம் 268-269
Not by silence
does someone confused
& unknowing
turn into a sage.
குழப்பத்திலும் அறியாமையிலுமுள்ள ஒருவர்
மெளனம் சாதிப்பதால்
முனிவர் ஆகப்போவதில்லை.
But whoever — wise,
as if holding the scales,
taking the excellent —
rejects evil deeds:
he is a sage,
தராசை பயன்படுத்துமொருவர்
அதன் முள் நடுநிலையில் இருப்பதை
கூர்மையாக கவனிப்பது போல,
அறிவாளி ஒருவர் சீர்தூக்கிப் பார்த்து
நல்லதை மட்டும் ஏற்றுக்கொண்டு, தீயனவற்றை தள்ளிவிடுகிறார்.
அவரே முனிவர் ஆவார்.
that's how he's a sage.
Whoever can weigh
both sides of the world:
that's how he's called
a sage.
அப்படித்தான் அவர் முனிவர் ஆகிறார்.
உலகின் இரு பக்கங்களையும்
அளந்து காண்பவர் யாரோ:
அவரையே அழைப்பார்கள்
முனிவர் என்று.
***
https://youtu.be/DokuU8XQx_E?si=bqypOoQtXsBVefQS
பாடியவர்: ஜஸ்டிஸ் என். ஆனந்த் வெங்கடேஷ்
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(பண்-இசை;
என்னாம்-என்ன+ஆம்
இயைபு-பொருத்தம்;
கண்ணோட்டம்-இரக்கம்)
பாடலோடு பொருத்தம் (இயைபு) இல்லாத இசையினால் (பண்) என்ன பயன் (என்னாம்)? அதுபோல் பிறர் துன்பம் அனுபவிப்பதை கண்டும் இரக்கம் (கண்ணோட்டம்) தோன்றாவிட்டால், கண் இருந்து என்ன பயன்?
***
பிறரின் துயரத்தை நீக்குவது என்பது இரக்கத்தின் சிறப்பியல்பு (Definition).
அதன் செயல் (function) பிறரின் துயரத்தை சகித்துக்கொள்வதல்ல. பிறரின் துயரத்திற்கு எதிராக பணி செய்வது.
அது அன்பாக வெளிப்படுகிறது (Manifestation).
அது தோன்ற உடனடி காரணம் (proximate cause) துயரத்தில் மூழ்கியவர்களின் உதவியற்ற நிலையை காண்பதே.
அது கொடுமையை அடக்கும்போது வெற்றி (success) பெறுகிறது; துயரத்தை உருவாக்கும்போது தோல்வியடைகிறது (failure).
ஆதாரம்: விசுத்திமார்க்கம் Visuddhimagga.318
***
https://youtu.be/aC8cfP1qFcU?si=Vk4j9d0mLHlIblWP
பாடியவர்: அமிர்தவர்ஷினி
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
(புல்லறிவு-அறியாமை;
ஆண்மை-உடைமை;
கடை-கீழ்மை)
நிலையில்லாதவைகளை (நில்லாதவற்றை) நிலையானவை என்று தவறாக உணரும் அறியாமை (புல்லறிவு) உடையவராக (ஆண்மை) இருத்தல் இழிந்த (கடை) நிலையாகும்.
***
நான்கு 'பொய் யுணர்வுகள்'
இவை நான்கும்
கோணலான குறிப்புகள்,
கோணலான எண்ணங்கள்,
கோணலான கருத்துக்கள்;...
நிலையற்றதை நிலையானதென்றுணர்வது, துன்பம் தருவதை இன்பம் தருவதாக உணர்வது, சாரமற்றதை சாரம் கொண்டதாக உணர்வது, அசுத்தமானதை சுத்தமானதென்றுணர்வது.
These four, O Monks, are
distortions of perception,
distortions of thought,
distortions of view;…
Sensing no change in the changing,
Sensing pleasure in suffering,
Assuming “self” where there’s no self,
Sensing the un-lovely as lovely—
ஆதாரம்: அங்குத்தர நியாயம் AN4.49
***
https://youtu.be/DwpxV63utoI?si=r21zJZoalJXfmmgH
பாடியவர்: ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
குறள்#1003 பயன்படுத்தாத செல்வம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
(ஈட்டம்-சம்பாதிக்கை;
இவறு-தல்-விரும்புதல்;
இசை-புகழ்;
தோற்றம்-பிறப்பு;
பொறை-பாரம்)
பணம் சேர்ப்பதை (ஈட்டம்) மட்டும் விரும்பி (இவறி), அதன் பயனாக வரும் புகழை (இசை) விரும்பாத (வேண்டா) மக்கட் (ஆடவர்) பிறவியானது (தோற்றம்), இப் பூமிக்கு (நிலக்கு) ஒரு சுமை (பொறை).
***
செல்வம் சேர்ப்பதில் தவறில்லை. அது நேர்மையான முறையில் உழைப்பாலும் முயற்சியாலும் சேர்த்ததாக இருக்க வேண்டும். புத்த பகவான் நல்ல நண்பர்களை பற்றி பேசும்போது:
"தேனிகள் அலைந்து பூந்தாதுக்களைச் சேகரிப்பது போல அவர்கள் செல்வத்தைச் சேகரிப்பார்கள். கறையான்கட்டிய மண்கூடு உயர்வது போல, அவர்கள் செல்வம் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு செல்வம் சேர்க்கும் இல்லறத்தார் தங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் வேண்டியதை செய்கின்றனர்."
(ஆதாரம்: DN31)
அதே சமயம் செல்வம் சேர்ப்பது மட்டும் இலக்காக கொண்டிருப்பவர்களையும் செல்வத்தை வீண் செய்வோரையும் புத்த பகவான் போற்றவில்லை:
"இவ்வுலகில் திருப்திப்படுத்த இயலாத இரண்டு வகை மனிதர்கள் உள்ளனர். யார் அந்த இரண்டு பேர்? ஒருவர் எப்போதும் செல்வத்தை குவிப்பவர்; மற்றொருவர் எப்போதும் செல்வத்தை வீணாக்குபவர். இவர்கள் தான் இவ்வுலகில் திருப்திப்படுத்த இயலாத இரண்டு மனிதர்கள்."
(ஆதாரம்: AN2.122)
***
https://youtu.be/GgDYHh6-9v0?si=jFcpFuMwC8VsWAk3
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
(அவி-த்தல்-அடக்குதல்;
அகல்-பரப்பு;
விசும்பாளர்-தேவர்;
கோமான்-அரசன்;
சால்(லு)-தல்-பொருந்துதல்;
கரி-சாட்சி கூறுவோன்)
கண், காது, மூக்கு நாக்கு, உடல் ஆகிய புலன்களுக்கு தம்மின் புறமாகிய ஒளி, ஓசை, நாற்றம், சுவை, ஊறு ஆகியவற்றின் மீது உள்ள ஆசையை அடக்கியவரின் (ஐந்தவித்தான்) ஆற்றலுக்கு விரிந்த (அகல்) தேவலோக வாசிகளின் (விசும்புளார்) தலைவனான இந்திரனே பொருத்தமான (சால்) சாட்சி (கரி).
***
நாம் ஒரு மளிகை கடைக்குள் சென்று ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க போகிறோம்—கறிவேப்பிலை என்று வைத்துக் கொள்வோமே. ஆனால், ஒரே ஒரு பொருளை வாங்கும் நோக்கத்துடன் கடைக்குள் நுழைந்தபோதும், வெளியேறும் போது என்ன நடக்கிறது? ஒரு பை நிறைய பொருட்களுடன் வெளியேறுகிறோம் —சாக்லேட், ஒரு வாரஇதழ், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஐஸ்கிரீம். இது எப்படி நடந்தது? நமது புலன்களை காக்காமல் விட்டுவிட்டது தான் காரணம்..
கடையில் “ஒரே ஒரு பொருள்” தேடி உலாவிக்கொண்டிருந்தபோது, பல வடிவங்களைப் பார்த்தோம்—உதாரணமாக, அலமாரியில் அழகான வடிவமைப்புடன் இருக்கும் இனிப்புத் தின்பண்ட பெட்டியை... அந்த வடிவங்களைப் பார்த்தபோது, அந்தப் பொருளின் இனிமையான அம்சத்தால் (சுப நிமித்தம் subha-nimitta) ஈர்க்கப்பட்டோம். அதன் பின்னர், ஆசையால்—அழுக்கான மனநிலையால்—அந்தப் பொருளைப் பெற கை நீண்டது; அதை எடுத்து நமது பையில் வைத்தோம்.
இதைத் தவிர்க்கவும், மனதை கட்டுப்படுத்தவும், நாம் புலன்களை காக்க வேண்டும்.
இருப்பினும், பொறிகளை அடக்குவது எளிதான காரியம் அல்ல; பல தடைகள் உள்ளன. நவீன காலத்தில், மனித சமுதாயத்தில் வணிகத்தின் இயல்பை பெரிதும் மாற்றியது விளம்பரத் துறையின் எழுச்சி. கடந்த நூற்றாண்டின் போக்கில், இந்தத் துறை நவீன உளவியலைப் (psychology) பயன்படுத்தி நுகர்வோரை வாங்கச் செய்வதற்கான வணிக நுட்பங்களை நுணுக்கமாக மேம்படுத்தியது. அதன் விளைவாக, இன்று நாம் விளம்பர பலகைகள் மற்றும் சின்னங்கள், தொலைக்காட்சி, வானொலி, மற்றும் இணைய விளம்பரங்களால் இடையறாது தாக்கப்படுகிறோம்.
விளம்பரங்கள் கவர்ச்சிகரமான படங்களையும் ஒலிகளையும் பயன்படுத்தி நுகர்வோரின் ஆசையைத் தூண்டுகின்றன. அதேபோல், விருப்பமற்ற இந்திரியப் பொருட்களும் வெறுப்பை (அசுப நிமித்தம் asubha-nimitta) எழுப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன; அரசியல் விளம்பரங்களில் இதை நாம் காணலாம். நீண்ட காலமாக, பொதுமக்கள் விளம்பரங்களால் சுரண்டப்பட்டு, களங்கங்களைத் தூண்டும் பொம்மைகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும், தூண்டுதலான இந்திரியப் பொருட்களுடன்—விளம்பரங்களோ அல்லது வேறு எதுவோ—முழுமையாகத் தொடர்பு கொள்ளாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆனால் நாம் செய்யக்கூடியது, பொறிகளை அடக்கிக் காப்பது. அப்படிச் செய்தால், அவற்றுடன் தவிர்க்க முடியாமல் தொடர்பு கொள்ளும் போது, நமது மனதைப் பாதுகாத்து, உணர்ச்சிகளால் அடிமையாகாமல், அறிவும் சிந்தனையும் கொண்டு விழிப்புணர்வுடன் நடக்க முடியும்.
புத்தர், ஒரு பிக்குவின் புலன்களை கட்டுப்படுத்துதலை (indriya samvara sense restraint) இவ்வாறு பதிவு செய்கிறார்:
கண்ணால் ஒரு உருவத்தைப் பார்க்கும்போது, அதன் முழு வடிவத்தோடும், அழகோடும், இனிமையோடும் பற்றுக் கொள்ளாமல், மனம் அங்கே அடிமையாகாமல், கட்புலனைக் காக்கிறார். அதுபோலவே, காதால் ஒலி, மூக்கால் நாற்றம், நாவால் சுவை, உடலால் தொடு உணர்வு (பரிசம்), மனதால் எண்ணம்—இவற்றில் எதிலும் பற்று கொள்ளாமல், அவற்றின் இனிமையான அம்சத்தால் ஈர்க்கப்படாமல், பிக்கு தனது புலன்களை காக்கிறார்.”
நன்றி: https://mahamegha.lk/2019/12/25/sense-restraint-for-a-peaceful-pure-mind/
***
https://youtu.be/sw9oBv0Mth8?si=haVCJG58pUFjEQJQ
பாடியவர்: மாலதி லக்ஷ்மன்
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
(அழுக்காறு-பிறராக்கம்பொறாமை; திரு-செல்வம்;
செற்றல்-கேடு. தீயுழி-நரகம்/ தீயவழி: தீ-நரகம்
உழி-இடம்; உய்-த்தல்-செலுத்துதல்)
பொறாமை (அழுக்காறு) உள்ள பாவியின் செல்வம் (திரு) அழிந்து (செற்று) தீய வழியில் (தீயுழி) அவனைச் செலுத்தி (உய்த்து) விடும்.
***
"எத்தகைய மனிதன் பொறாமை கொண்டவன்? அப்படியானால் பொறாமை என்றால் என்ன? பொறாமை கொள்வது, பொறாமை நிலை, பொறாமை உணர்வு, பிறருக்குக் கிடைக்கும் ஆக்கம், கண்ணியம், மதிப்பு, மரியாதை, வணக்கம், வழிபாடு ஆகியவற்றைப் பொறாமையுடன் நோக்கும் நிலை—இதுவே பொறாமை எனப்படுகிறது."
"பொறாமை நீங்காத மனிதன் பொறாமை கொண்டவன் எனப்படுகிறான்."
"இத்தகைய பொறாமை நீக்கப்பட்ட மனிதன் பொறாமையற்றவன் எனப்படுகிறான்."
ஆதாரம்: Puggalapaññatti pp2.2
Abhidhamma Pitaka (translation by Bimala Churn Law)
***
https://youtu.be/aY6b1ygLbU0?si=BAK4M8jrvtPBFE2A
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
துன்பம் வரும்போது (இடுக்கண்கால் கொன்றிட) இடையிறாது ஊன்றுகோலாக தாங்கிக் கொள்ளக்கூடிய (அடுத்தூன்றும்) பெண்ணோ ஆணோ (நல்லாள்) இல்லாத குடும்பம் (குடி) கெடும் (வீழும்).
(இடுக்கண்கால் கொன்றிட - துன்பம் வரும் போது;
கால்-Prop, support; பற்றுக் கோடு
கொல்(லு)-தல் To fell, cut down; வெட்டுதல்;
அடுத்தூன்றும்-இடையறாது ஊன்றும்;
ஊன்று-தல்-நிலை பெறுதல் (steadfast mind);
நல்லாள்- மனவலிமையுடைய ஆண் அல்லது பெண்; குடி-குடும்பம்,குலம்,ஊர்)
***
குண்டலகேசி
இடுக்கணழியாமை-துன்பக் காலத்து மனங்கலங்காமை.
வேரிக் கமழ் தார் அரசன் விடுக என்ற போழ்தும்
தாரித்தல் ஆகா வகையால் கொலை சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதல் என்று இவற்றால் பொலிவு இன்றி நின்றான்
பாரித்ததெல்லாம் வினையின் பயன் என்ன வல்லான்.
உரை:
மணங்கமழ்கின்ற மலர்
மாலையணிந்த மன்னவன்;
சிறைவீடு செய்க என்று கட்டனையிட்ட காலத்தும்;
இவன்பால் எழுந்த சீற்றம் பொறுக்கலாகாமையாலே; கொலை செய்யும்படி கட்டளையிட்ட பின்னரும்;
உவகையாலே தோன்றும் பூரிப்பாகிய மெய்ப்பாட்டினாலாதல்
அல்லது துன்புற்று வாடுதல் என்னும் மெய்ப்பாட்டினாலாதல்;
தன் உடம்பின்கண் யாதொரு தோற்றமும் காணப்படுதலின்றி;
அமைதியாக நின்றனன், அஃதெற்றாலெனின்;
தனக்கு நுகர்ச்சியாக விரிந்து வருகின்ற நிகழ்ச்சிகள் எல்லாம்;
தான் முன் செய்த பழவினையின் பயன்களேயன்றிப் பிறவில்லை என்னும் மெய்யுணர்வினால் வன்மையுடையோன்ஆகலின் என்பதாம்.
விளக்கம்:
இனி இச் செய்யுளால் ஒரு மன்னன் ஒருவனைச் சிறைப்பிடித்து ஒருகால் சிறைவீடு செய்க என்றும் பின்னும் (அமைச்சர் முதலியோர் அறிவுரை கேட்டமையாற் போலும்) கொன்று விடுக! என்றும் கட்டளையிட்டான் என்றும்; இதற்கு ஆளாகியவன் தன் மெய்யுணர்வு காரணமாகச் சிறைவீடு செய்க என்றபோது மகிழாமலும், கொலை செய்க என்றபோது வருந்தாமலும் அமைதியுடனிருந்தான் என்றுணருகின்றோம்.
ஆதாரம்:
நாதகுத்தனார் இயற்றிய
குண்டலகேசி
பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரை
***
https://youtu.be/NETd_fZlWB8?si=URG09Cvac_n2It1M
பாடியவர்: வி. என். அக்ஷதா
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
கற்றறியாதவற்றை (கல்லாத) அறிந்தது போல் காட்டி (மேற்கொண்டு) நடக்கை (ஒழுகல்) குறைபாடின்றி (கசடு அற) திறமையாக அறிந்தவற்றின் (வல்லதூஉம்) மீதும் சந்தேகத்தை (ஐயம்) கிளப்பும்.
***
புல்லறிவாண்மை என்ற தலைப்பில் வருகிறது இந்த குரள். புல்லறிவாண்மை=புல்லறிவு + ஆண்மை
புல்லறிவு=சிற்றறிவு, அறியாமை
ஆண்மை=உடைமை
புல்லறிவு இருந்தும் அறிந்தவர் போல் காட்டிக் கொள்வதற்கு காரணம் செருக்கு (conceit, பாலி மொழியில் māna) என்ற மனதில் உள்ள மாசு.
பாலி மொழியில் “மாண” என்ற சொல்லின் நேர்மையான அர்த்தம் “அளவிடுதல்” என்பதாகும். ஆனால் பொதுவாக அது அகங்காரம், இறுமாப்பு, தற்பெருமைபாராட்டுகை, அல்லது செருக்கு என்பவற்றைக் குறிக்கிறது. மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னைத்தான் மதிப்பீடு செய்யும் பழக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
அபிதம்ம விளக்கவுரையில், கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பௌத்த அறிஞர் பெருமான் புத்தகோசர், “செருக்கு” எனப்படுவது தன்னைப் பற்றிய விளம்பர ஆசையாக, பிறர் காணும் வகையில் கொடியை ஏற்றுவது போன்றதாக வரையறுத்துள்ளார். செருக்கு என்பது நம்முள் உள்ள தன்னை உயர்த்திக் காட்டும் ஆசை, மற்றவர்களை விட தன்னை முக்கியமானவராக உணரச் செய்யும் மனப்பாங்காகும். ஏற்கனவே சிறப்பான குணங்களை உடையவர்கள், தங்களை வெளிப்படுத்த அதிக முயற்சி செய்யத் தேவையில்லாதவர்களும், பிறப்பு–இறப்பு சுழற்சியில் சேர்த்துக் கொண்டிருக்கும் இந்த மன அழுக்கான செருக்கினால், தங்களை மேலும் உயர்த்திக் காட்ட முயல்கிறார்கள்.
ஆதாரம்: Significance of Conceit (māna) in Theravada Buddhism
By Dr. Ari Ubeysekara
***
https://youtu.be/0J6L_l5YWcg?si=4-Fxu4JSIpdluBuh
பாடியவர்: ஹில்டா மெர்சி
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
(பய-த்தல்-விளைதல்)
தீயசெயல்கள் தீமையை விளைதலால் (பயத்தலால்), அந்தத் தீயச் செயல்களுக்கு ஒரு தீக்கு அஞ்சுவதைப்போல அஞ்ச வேண்டும்.
***
நாம் அணிந்திருக்கும் துணிமணிகள் எரிகின்றன என்றால் அல்லது நமது தலை முடி எரிகிறது என்றால் எவ்வளவு வேகமாக செயல்படுவோம் அதை அணைப்பதற்கு! அது போல தான் தீய செயல்களை செய்யும் போது அல்லது அந்த எண்ணம் தோன்றும் போதே அதனை மிக விரைவில் தடுத்து விட வேண்டும்.
தலை தீப்பற்றி எரிவது பற்றிய உவமானம் திரிபிடகத்தில் பல இடங்களில் காணப்படுகிறது. உதாரணமாக:
"வாள் அடித்ததுபோல்,
தலை தீப்பற்றியதுபோல்,
பிக்கு ஒருவர் மன கவனத்துடன் இருந்து
காம ஆசையை விட வேண்டும்."
ஆதாரம்: Tissattheragāthā Thag 1.39
தீவினையென்று சொல்லப் படுவது யாதென்றால்:
கொலையும், களவும், தவறான காமமுமாகிய தீய வேட்கைகள்
இம்மூன்றும் கெடுதலில்லா உடம்பால் உண்டாகும் தீவினைகள்;
பொய்யுரையும், புறங்கூறலும், கடுஞ்சொல்லும், பயனில்லாத சொல் சொல்லுதலும் என்று
வாக்கினால் உண்டாகும் தீவினைகள் நான்கும்;
பிறர் பொருளை கவரக் கருதலும், சினம் கொள்ளலும், குற்றம்படவுணர்தலு மென்று
மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றும் என
பத்து வகைப்படுதலால்;
வினைவகையும், அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்
இப்பத்துவகைக் குற்றங்களையும் ஒருநாளும் நெஞ்சாலும் நினைக்க மாட்டார்கள்;
அப்படி நினைவாராயின்,
விலங்கும், பேயும், நரகருமாகிய பிறப்பாகப் பிறந்து, கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப உடல் பெற்று வருந்துவர்.
ஆதாரம்: மணிமேகலை உரை (காதை 30, வரிகள் 64-75)
வித்துவான் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
***
https://youtu.be/xn76tfwSDcM?si=kaetleHl22OECVJV
பாடியவர்: கேஷவ் ராம்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
(வரையறை-எல்லை,அளவு;
சால்பு-மேன்மை,நற்குணம்)
ஒரு உதவியின் மதிப்பீடு (அதனால் சேரும் புண்ணியம்) கொடுக்கப்பட்ட பொருளின் அளவை(வரை) அல்லது அதன் விலையை பொருத்தது அல்ல.
அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் (சால்பு) பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
***
நாம் செய்யும் தானம் - அது சாதாரணமாக இருக்கலாம் அல்லது சிறப்பாக இருக்கலாம் - அதை கவனத்தோடும், முன் யோசனையுடனும் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த தானத்தின் விளைவு வெளிப்படும்போது, அதனை மகிழ்வோடு அனுபவிக்க முடியும்.
புத்த பகவான் கூறுகிறார்:
"ஒருவர் உரப்பான அல்லது பக்குவமாகச் செய்யப்பட்ட உணவை தானமாக தரலாம். ஆனால், அதனை கவனத்தோடும், முன்யோசனையோடும், அவர்கள் கையால் தருகின்றனர். மிஞ்சிய உணவை தருவதில்லை. தானத்தின் விளைவை நினைத்து தருகிறார்கள். அந்த தானத்தின் பலன் எப்போதேனும் வெளிப்படும் போது அவர்கள் மனம் (முன் செய்த தானத்தின் விளைவாக) கிடைத்த நல்ல உணவை, துணிகளை, வாகனங்களை, ஐந்து வகையான புலன் இன்பங்களை மகிழ்ச்சியோடு அனுபவிக்க இடம் கொடுக்கிறது. அவரது மக்களும், மனைவியரும் பணியாட்களும் அவர் சொல்வதைக் விருப்பத்தோடு கேட்கின்றனர். அவரிடம் கவனம் செலுத்துகின்றனர், அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஏன்? கவனத்தோடு செய்யும் காரியங்களின் பலன் அது தான்."
மேலும், அந்த தானத்தின் காரணமாக சேரும் புண்ணியம், பெறுபவரின் மனப்பக்குவத்தை பொறுத்தும் இருக்கிறது.
"ஒரு சமயத்தில் வேலாமர் என்ற பிராமணர் வாழ்ந்தார். அவர் இந்த நன்கொடையை வழங்கினார். அது ஒரு பெரும் தானம். வெள்ளி காசுகள் நிரம்பிய 84 ஆயிரம் தங்கக்கலங்கள். தங்கக் காசுகள் நிரம்பிய 84 ஆயிரம் வெள்ளிக் கலங்கள். தங்க ஆபரணங்களாளும், கொடிகளாளும் அலங்கரிக்கப்பட்ட 84 ஆயிரம் யானைகள், புலி, சிங்க, சிறுத்தை தோள்களால் அலங்கரிக்கப்பட்ட 84 ஆயிரம் ரதங்கள், காதணிகள் அணிந்த 84 ஆயிரம் பணிப்பெண்கள், 84 ஆயிரம் பால் சுரக்கும் மாடுகள்.. கணக்கில் அடங்கா கொடை... மேலும் உணவு, பாகனங்கள், சிற்றுண்டி என்று ஒரு பெரும் விருந்து.... கரை புரண்டோடும் ஒரு நதியைப் போன்று இருந்தது அந்த நன்கொடை.
.... ஆனால் அந்த நிகழ்ச்சியில் அந்த தானத்தை பெறுவதற்கு தகுந்தவர் யாருமில்லை. அந்த தானத்தை புனிதப்படுத்த யாரும் இல்லை. "
"வேலாமர் தந்த பெருங்கொடையை விட பலனுள்ளது, முதல் ஞான நிலையை அடைந்த ஒருவருக்கு உணவு தருவது."
ஆதாரம்: வேலாமர் பற்றி
அங்குத்தர நிகாயம் AN 9.20
***
https://youtu.be/HhegEiluQm4?si=Pfs95Ek0INCPMoKw
பாடியவர்: லக்ஷனா
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
(இனம்-சுற்றம்;
ஊங்கு-மேம்பட்டது
துணை-உதவி,காப்பு)
நல்ல சுற்றத்தாரைவிட (இனத்தை) மேம்பட்ட (ஊங்கு) காப்பு (துணை) இல்லை, தீயச் சுற்றத்தாரைவிடத் துன்பப்படுத்துவோரும் (அல்லற் படுப்பதூஉம்) இல்லை.
***
சாவத்தியில்.
ஒருபுறம் அமர்ந்திருந்த மன்னர் பசேனதி, புத்தரிடம் கூறினார்: “இப்பொழுது, அய்யா, நான் தனிமையில் தியானித்துக் கொண்டிருந்தபோது, இந்த எண்ணம் மனதில் தோன்றியது: ‘தங்களைத் தாமே நேசிப்பவர்கள் (நண்பர்) யார்? தங்களைத் தாமே நேசிக்காதவர்கள் (பகைவர்) யார்?’
அப்போது எனக்கு தோன்றியது…”
"உடல், வாக்கு, மனம் மூலமாகத் தீய செயல்களைச் செய்பவர்கள் தங்களைத் தாமே நேசிப்பதில்லை. “நான் என்னை நேசிக்கிறேன்” என்று அவர்கள் சொன்னாலும், உண்மையில் அப்படியில்லை. ஏன் தெரியுமா? அவர்கள் தங்களை எதிரியாக நடத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்களைத் தாமே நேசிப்பதில்லை.
உடல், வாக்கு, மனம் மூலமாக நல்ல செயல்களைச் செய்பவர்கள் தங்களைத் தாமே நேசிக்கிறார்கள். “நான் என்னை நேசிப்பதில்லை” என்று அவர்கள் சொன்னாலும், உண்மையில் அவர்கள் நேசிக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் தங்களைத் தாமே அன்புக்குரியவரைப் போல நடத்துகிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்களைத் தாமே நேசிக்கிறார்கள்."
"அது உண்மை, மாமன்னா! அது மிகவும் உண்மை!” என்று புத்தர் மன்னரின் வார்த்தைகளை ஆமோதித்தார்.
ஆதாரம் சங்யுத்த நிகாயம் SN3.4
***
https://youtu.be/buF_LdkxfuU?si=VyXyBhd60Z6KfP6y
பாடியவர்: பிரியா பாலாஜி
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
(மெல்லிது-மென்மை வாய்ந்த பொருள்;
செவ்வி-பக்குவம்,அழகு,சுவை,தன்மை,தகுதி;
தலைப்படு-தல்-பெறுதல்)
மலரை விட மென்மையானது காமம். ஆனால் சிலரே அதன் தன்மை (செவ்வி) அறிந்து பயன் பெறக்கூடியவர் (தலைப்படு வார்).
***
புத்தர் அன்பின் ஆசிரியர். உண்மையான அன்பின் ஆசிரியர். காதல் அன்பும், அது உண்மையான அன்பாக இருந்தால், மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க முடியும். ஆனால் அது உண்மையான அன்பாக இல்லையெனில், அது உங்களையும், மற்றவரையும் துன்புறுத்தும்.
புத்தரின் போதனையில், உண்மையான அன்பிற்கு நான்கு கூறுகள் தேவை. முதல் கூறு “மெத்தா” அல்லது “மைத்ரி” எனப்படும் அன்பு. இதன் பொருள், மகிழ்ச்சியை வழங்கும் திறன். காதல் அன்பில், நீங்கள் மற்றவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியாவிட்டால், அது உண்மையான அன்பாகாது. நீங்கள் உங்களுக்கும், மற்றவருக்கும் மகிழ்ச்சியை வழங்கக் கூடியவராகத் தங்களைப் பயிற்சி செய்ய வேண்டும். அது இல்லையெனில், இருவரும் துன்பப்படுவார்கள்.
உண்மையான அன்பின் இரண்டாவது கூறு “இரக்கம்” அல்லது “கருணா” ஆகும். இரக்கம் என்பது துன்பத்தை நீக்கவும், துன்பத்தை மாற்றவும் உதவும் ஒரு ஆற்றல். உங்களிலும், மற்றவரிலும் உள்ள துன்பத்தை மாற்றி, அதை கவனிக்க முடியாவிட்டால், அது உண்மையான அன்பாகாது. அதனால், இரக்கம் இருவராலும் வளர்க்கப்பட வேண்டும். அது காதல் அன்பாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது முக்கியமல்ல. முக்கியமானது அது உண்மையான அன்பா அல்லது உண்மையற்ற அன்பா என்பதே.
உண்மையான அன்பின் மூன்றாவது கூறு “மகிழ்ச்சி” அல்லது “முதிதை” ஆகும். மற்றவர் வெற்றியில் காணும் மகிழ்ச்சி. நீங்கள் எப்போதும் மற்றவரை அழவைத்து, நீங்களும் எப்போதும் அழுகிறீர்கள் என்றால், அது உண்மையான அன்பாகாது. அது காதல் அன்பாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது உண்மையான அன்பாகாது.
உண்மையான அன்பின் நான்காவது கூறு “உள்ளடக்கம்” அல்லது “உபேட்சை” ஆகும். இதன் பொருள், நீக்காமல் இருப்பது. அவரின் துன்பம் உங்கள் துன்பம், அவரின் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சி. தனிப்பட்ட துன்பம் எதுவும் இனி இல்லை. உண்மையான அன்பில் பாகுபாடு இல்லாமை, பிரிவு இல்லாமை உள்ளது. அந்த உணர்வில், “அது உன் பிரச்சினை!” என்று சொல்ல முடியாது. இல்லை, உன் பிரச்சினை என் பிரச்சினை. என் துன்பம் உன் துன்பம். இதுவே உண்மையான அன்பின் நான்காவது கூறு.
காதல் அன்பில் இந்த நான்கு கூறுகள் இருந்தால், அது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். புத்தர் உண்மையான அன்பைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையாக எதையும் கூறவில்லை. காதல் அன்பில் நீங்கள் வெற்றி பெற்றால், அது அன்பான கருணையையும், பரிவையும் வளர்க்கும். மிக விரைவில், உங்கள் அன்பு அனைத்தையும் உள்ளடக்கும். அந்த மற்றவர் மட்டும் உங்கள் அன்பின் பொருளாக இருக்கமாட்டார், ஏனெனில் உங்கள் அன்பு தொடர்ந்து வளர்ந்து, அனைவரையும் உள்ளடக்கும். மகிழ்ச்சி எல்லையற்றதாகிறது, அதுவே புத்தரின் அன்பு. அது உண்மையான அன்பாக இருந்தால், அது மனிதர்களை மட்டுமல்லாமல், விலங்குகள், செடிகளையும் உள்ளடக்கும். அதுவே உயர்ந்த அன்பு. அதுவே புத்தரின் அன்பு.
ஆதாரம்: டிக் ஞாட் ஹான் (Thich Nhat Hanh) உரை சுருக்கம்.
***
https://youtu.be/VmFTjxO_03Q?si=l19BxM0EmQ50BWHd
பாடியவர்: ஸ்ரீலா சிவதாஸ்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
ஒருவர் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் கோபம் (சினம்) வராமல் காத்துக் கொள்ள வேண்டும், இல்லா விட்டால் கோபம் அவரை அழித்து விடும்.
***
சில சமயம் கோபம் கொள்ளும்போது ஒரு சுகம் இருப்பதாக தெரியலாம். நம் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால் கோபம் வெறுப்பு, பொறாமை போன்ற நஞ்சான மன வேர்களிலிருந்து மட்டுமே தோன்றுகிறது. அது ஒருபோதும் நல்லதல்ல, நன்மைக்கும் எடுத்துச் செல்லாது. கோபம் ஒரு நோய் என்றார் புத்தர்.
கொல்வதானால் கோபத்தைக் கொல்
சாவத்தியில்.
ஒருபுறம் நின்ற அந்த தெவதை, புத்தரிடம் பா வடிவில் கேட்டாள்:
“எதை அழித்தால் அமைதியாக உறங்கலாம்? எதை அழித்தால் துயரம் இல்லாமல் இருக்கும்? கோதமரே, எந்த ஒன்றின் அழிவை நீர் ஒப்புக்கொள்கிறீர்?”
புத்தர் கூறினார்:
“கோபத்தை அழித்தால் அமைதியாக உறங்கலாம். கோபம் அழிந்தால் துயரம் இல்லை. தேவதையே, கோபத்துக்கு விஷமுள்ள வேர், ஆனால் தேனினும் இனிய நுனி உண்டு. அதன் அழிவை சான்றோர் புகழ்கின்றனர், ஏனெனில் கோபம் அழிந்தால் துயரம் இல்லை.”
ஆதாரம்: சங்யுத்த நிகாயம் SN1.71
***
https://youtu.be/NYK_Gspptns?si=vuObdC3reGCPOnzb
பாடியவர்: நிஹாரிகா ஷைஜு
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
(அறிவுடையார்-ஞானம் உள்ளவர்;
ஆவது-ஆகவேண்டியது;
கல்லாமை-படியாதிருக்கை)
அறிவுடையோர் வருங்காலத்தில் ஆக வேண்டியதை முன்னரே அறியும் திறன் கொண்டுள்வர்கள். அறிவில்லாதவர் அந்தத் திறனை கல்லாதவர்.
***
ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அறிவில்லாதவர் உடனே அந்த ஆசையை தீர்க்கும் வேலையில் ஈடுபடுகிறார். எப்படியாவது அதை அடைய வேண்டும். அந்த ஆசை நிறைவேறும் வரை வேறு எந்த எண்ணமும் அவர் மனதில் தோன்றாது. ஆனால் ஆசையை பொருத்தவரை பாந்தே குணரத்தினா 'buy one, get one free' என்று கூறுவார். அதாவது ஒன்று வாங்கினால், ஒன்று இலவசமாகக் கிடைக்கும். வேண்டாம் என்று சொன்னாலும் இலவசமாக வரப்போறது கிடைக்கத்தான் போகுது. சிற்றின்பத்தை தேடிச் சென்றால் கூடவே துன்பமும் வரும். அறிவில்லாதவர் கிடைக்கப் போகும் இன்பத்தை மட்டும் நினைப்பதால், கூட வரும் துன்பத்தை பற்றி நினைப்பதில்லை.
அறிவுடையவர்கள் அப்படி சிற்றின்பத்தை நாடாமல் அதன் விளைவுகளை அறிந்தவர்களாக, புலன்களை அடக்கி, துன்ப விளைவுகள் இல்லாத பேரின்பத்தை நாடி செல்வார்.
ஒரு சதுரங்க ஆட்டத்தில் எதிரி ஒரு காயை பலி கொடுக்கிறார். அறிவில்லாதவர் அந்த காயை உடனே ஏற்றுக் கொண்டு வெட்டி விடுகிறார். இது அடுத்த நகர்வுகளில் எதிரியின் வெற்றிக்கு இடம் கொடுக்கும். அறிவுடையவர் ஆட்டத்தின் அடுத்த மூன்று, ஐந்து நகர்வுகளை முன்கூட்டியே யோசித்து, அந்த பலிக்கு கொடுக்கப்பட்ட காயை வெட்டினால் அதன் விளைவுகளை அறிந்து கொண்டு, அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே அவர் ஏமாறாமல் தனது வெற்றிக்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறார்.
அதுபோல வாழ்க்கையில் நமது நீண்ட நாள் நலனை நினைத்து செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவோரே அறிவுடையவர்.
ஆதாரம்: தர்ம உரைகளில் கேட்டது.
***
https://youtu.be/9QAPi52r0z8?si=XGVpP5W3RvxmA5V8
பாடியவர்: யுகேந்திரன் வாசுதேவன்
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
(களி-த்தல்-கள்ளைப்பருகி வெறிகொள்ளுதல்;
உள்ளான் கொல்-"அவன் மனதில் நினைக்கிறானோ?";
சோர்வு-தளர்ச்சி, மெலிவு, மறதி, இழுக்கு)
கள்ளுண்ணாத போது கள்ளைப்பருகி வெறிகொண்டவனின் (களித்தானை) இழிவு (சோர்வு) நிலையைக் கண்டு
அவன் தெளிவு பெறுவானோ (உள்ளான் கொல்)?”
***
இல்லற மக்களுக்கு புத்தர் குறைந்தபட்ச நெறிப்பாடாக ஐந்து சீலங்களை விதித்துள்ளார்: கொலை செய்வதைத் தவிர்ப்பது, திருடுவதைத் தவிர்ப்பது, தவறான பாலியல் நடத்தையைத் தவிர்ப்பது, பொய்யுரைத்தலைத் தவிர்ப்பது, மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது. இச்சீலங்களை அவர் பழமையான மரபுகளுக்குக் கட்டுப்பட்டு அல்லது சீரற்ற முறையில் விதிக்கவில்லை; தனது அனைத்தறிவின் மூலம் எந்த நடத்தைகள் நம் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கின்றன, எவை தீங்குக்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கின்றன என்பதை அவர் தெளிவாகப் புரிந்திருந்ததால் அவற்றை விதித்தார்.
ஐந்தாவது சீலம், அதில் வலியுறுத்தப்பட வேண்டியது என்னவென்றால்: அது போதை வராத வரை குடிக்கலாம் என்று சொல்லவில்லை. அதிகமாக மதுபானம் அருந்தக்கூடாது என்று சொல்லவில்லை. அது முழுமையாக விலகி இருப்பதையே கோருகிறது. இந்த விதியின் மூலம், மதுவுக்கு அடிமையாவதன் (பழக்கமாதலின் to be addicted) நுண்ணிய மற்றும் தீய இயல்பை புத்தர் நன்கு புரிந்திருந்ததை அவர் காட்டுகிறார்.
மதுவுக்கு அடிமையாவது ஒரு நாளில் ஆவது அல்ல. பொதுவாக அது மெதுவாகவே ஆரம்பிக்கிறது—சமூக உறவுகளைத் தொடங்கும் ஒரு பானம், நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது குடிப்பது, அல்லது கடினமான நாளின் பின் குடிப்பது என்று தொடங்கும். ஆனால் அது அங்கேயே நிற்காது. மெதுவாக அது தனது கொக்கிகளை பாதிக்கப்பட்டவரின் உள்ளத்தில் ஊன்றிக் கொண்டு, அவர்களை முற்றிலும் உதவியற்ற தனது இரையாகக் மாற்றி விடுகிறது.
மது அருந்தாமல் இருப்பதால் உள்ள அனுகூலங்கள்:
1. கவனக்கூர்மை காப்பாற்றலாம்.
2. வெட்க உணர்வையும், நெறி தவறுதளுக்கான அச்சத்தையும் மங்காமல் இருக்கச் செய்யலாம். இதனால் மற்ற சீலங்களை மீராமல் இருக்கலாம்.
3. சமூக சீர்கேடுகளை தவிர்க்கலாம்.
4. வாழ்க்கையின் கடினமான, உண்மையான, முழுமையான உண்மைகளை நேர்மையாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டிய ஒழுக்கத்தை தொடர்ந்து காப்பாற்றலாம்.
5. இம்மையில் நல்ல பழக்கங்களை வளர்த்து, மறுமையை காப்பாற்றிக் கொள்ளலாம்.
6. புத்தரின் சாசனத்தைப் பாதுகாக்கலாம். தம்ம போதனைகளை கேட்டால் மட்டும் போதாது, அதன் வழி ஒழுகவும் வேண்டும். இல்லை என்றால் போதனை பெயருக்கு மட்டும் இருக்கும்; அதன் சாரம் அழிந்து விடும்.
ஆதாரம்:
பிக்கு போதி A Discipline of Sobriety
***
https://youtu.be/MPuPe4kYi0E?si=pwN7-Wb1MMdeslH2
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
(அல்லவை-பாவம், பயனின்மை;
அறம்-அறநெறி, புண்ணியம்)
நல்ல எண்ணங்களோடு (நல்லவை நாடி) இனிய சொற்களை பேசும் பொழுது, பாவம் (அல்லவை) குறைந்து புண்ணியம் (அறம்) வளரும்.
***
நற்பேச்சு நான்கு அம்சங்களை கொண்டது.
புத்த பகவான் கூறுகிறார்:
"பொய்யுரையை விட்டு, அவர் பொய்யுரையிலிருந்து விலகுகிறார்; அவர் உண்மையைப் பேசுகிறார், உண்மையைப் பின்பற்றுகிறார், நம்பிக்கைக்குரியவர், உலகை ஏமாற்றாதவர்.
தீயுரையை விட்டு, அவர் தீயுரையிலிருந்து விலகுகிறார்; இங்கு கேட்டதை அங்கு சென்று சொல்லி இவர்கள் அவர்களிடமிருந்து பிரியும்படி செய்வதில்லை; அங்கு கேட்டதை இங்கு சொல்லி இவர்களை அவர்களிடமிருந்து பிரியும்படி செய்வதில்லை; ஆகையால் அவர் பிரிந்தவர்களை ஒன்றிணைப்பவர், நட்பை வளர்ப்பவர், ஒற்றுமையை விரும்புபவர், ஒற்றுமையில் மகிழ்பவர், ஒற்றுமையில் ஆனந்தமடைபவர், ஒற்றுமையை ஊக்குவிக்கும் சொற்களைப் பேசுபவர்.
கடுமையான உரையை விட்டு, அவர் கடுமையான உரையிலிருந்து விலகுகிறார்; அவர் பேசும் சொற்கள் மென்மையானவை, காதிற்கு இனிமையானவை, நேசிக்கத்தக்கவை, மனதைத் தொடுபவை, மரியாதையானவை, பலரால் விரும்பப்படுபவை, பலருக்கு ஏற்றவை.
வம்புரையை விட்டு, அவர் வம்புரையிலிருந்து விலகுகிறார்; அவர் சரியான நேரத்தில் பேசுகிறார், உண்மையைப் பேசுகிறார், நல்லதைப் பேசுகிறார், தர்மத்தையும் ஒழுக்கத்தையும் பேசுகிறார்; சரியான நேரத்தில் அவர் பதிவு செய்யத்தக்க, நியாயமான, மிதமான, பயனுள்ள சொற்களைப் பேசுகிறார்."
ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN27
***
https://youtu.be/oZ4vraQ8Coo?si=tqT0HR-rbm3Tubkh
பாடியவர்: ஜேம்ஸ் வசந்தன்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
(இருள்-அறியாமை;
மருள்-மயக்கம், திரி புணர்ச்சி;
மாசறு-குற்றமற்ற)
மயக்கம் நீக்கி (மருள்நீங்கி), பொய் காட்சி (மாசறு காட்சி) அல்லாதவர்களுக்கு, அறியாமை மறைந்து (இருள்நீங்கி) இன்ப நிலை தோன்றும்.
***
மாசறு காட்சி என்பது அட்டாங்க மார்க்கத்தின் முதல் கூரான நற்காட்சி தான்.
நற்காட்சி அட்டாங்க மார்க்கத்தின் முன்னோடியாக இருப்பதற்குக் காரணம் அதுவே மற்ற படிகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. பௌத்த மார்க்கத்தைப் பயிற்சி செய்யும்போது அந்தப் பாதை தெளிவாகப் புலனாவதற்கு, நற்காட்சிகள் அளிக்கும் அறிவாற்றலும் (vision), நெறிமுறையும் தேவைப் படுகிறது. நற்காட்சியின் தலைமையில், மற்ற பிரிவுகளையும் சார்ந்து, நமது நடத்தையும், பயிற்சியும் சீராக இருக்குமானால் நாம் போக வேண்டிய இடத்திற்குச் சிரமமின்றிப் போய்ச் சேர்ந்து விடலாம்.
நற்காட்சி, பாதையின் முதற்படியாக இருப்பது ஏனெனில் பாதையில் நாம் முதல் அடி எடுத்து வைக்கும் முன், அதன் நோக்கத்தை நற்காட்சியின் மூலம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. நற்காட்சி நமக்கு வழிகாட்டியாகவும், உள்ளத்தின் இயக்குநராகவும், நாம் எங்கே துவங்கினோம், எங்கே போகிறோம், படிப்படியாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெளிவாக்குகிறது.
பொதுவாக, புத்தர் நற்காட்சி என்றால் நான்கு மேன்மையான உண்மைகளைப் புரிந்து கொண்டதன் சாரம் என்று விளக்குகிறார்: துக்கம், அதன் தோற்றம், அதன் முடிவு, முடிவுக்கு எடுத்துச் செல்லும் பாதை, இவைகளே அந்த நான்கு மேன்மையான உண்மைகள். பாதையைத் துவங்கு முன்னரே மனித நிலையைச் சரியாகப் புரிந்து கொண்டு துவங்க வேண்டும். நமது வாழ்க்கை பூரண திருப்தி தருவதாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நிலையற்றது என்பதையும், அது துக்கத்தைச் சந்திக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். துக்கத்தை நாம் அறிவின் துணையோடு புரிந்து கொண்டு அதை வெற்றி கொள்ள வேண்டும் என்பதையும், வலியைக் குறைக்க முற்படுவது (உதாரணமாக, மது போதை பொருட்கள் முகம்), கவனத்தை வேறு திசையில் திருப்பும் காரியங்களில் ஈடுபடுவது (சினிமா, காட்சி, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவை), சுறுசுறுப்பற்ற மறதி (உதாரணமாக, தூங்கிக் கொண்டே இருப்பது) போன்றவற்றால் அதனிடமிருந்து தப்பித்து விலக முயற்சிப்பது போன்ற செயல்கள் பயன் தராது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இதை ஆழ்ந்து கவனிக்கும் போது ‘நாம்’ என்று நினைக்கும் ஐந்து கந்தங்களும் நிலையற்றவை, தொடர்ந்து மாற்றத்துக் குள்ளாவன என்பதை அறிய வேண்டும். அவை நமது பாதுகாப்புக்கும் நிலையான மகிழ்ச்சிக்கும் அடித்தலமாக இருக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பின் துக்கத்தின் காரணம் நமது உள்ளத்தில் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். துக்கத்தை நமக்கு யாரும் தரவில்லை. புறத்திலிருந்து எவரும் நம்மீது அதைத் திணிக்கவில்லை. புறத்தில் உள்ள எதன் மீதும் நாம் குறை கூற முடியாது. நமது பற்றின் காரணமாகவும், பிடிப்பின் காரணமாகவும் நாமே துக்கத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். துக்கத்தின் காரணம் நமது மனத்திலேயே இருப்பதை உணர்ந்தபின், அதன் விடுதலைக்கான திறவுகோலும் நமது உள்ளத்தில் தான் இருக்கின்றது என்று உணர வேண்டும். அந்தத் திறவுகோல் தான் அறியாமை மற்றும் பேராசையை மெய்ஞ்ஞானம் மூலம் வெற்றி கொள்ளும் திறவுகோலாகும். பின் மார்க்கத்தில் நுழையும் போது அட்டாங்க மார்க்கமென்னும் பாதையைத் தொடர்வதால் தான் துக்கத்தின் முடிவுக்குப் போக முடியும் என்னும் நம்பிக்கை நமக்கு நிலைத்திருக்க வேண்டும்.
நற்காட்சி என்பது நான்கு மேன்மையான உண்மைகளை உணர்வது என்று புத்தர் வரையறுப்பதற்கு மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அவரது சீடர்கள் தனது போதனைகளைத் தன் மீது உள்ள பற்றின் காரணமாகவோ, பக்தியின் காரணமாகவோ தொடரக் கூடாது என்று புத்தர் விரும்பினார். மாறாக, அவர்கள் மார்க்கத்தை நன்கு புரிந்து கொண்டதன் விளைவாகவே அதைத் தொடர வேண்டும் என்று விரும்பினார். மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட பின் மார்க்கத்தை அவர்கள் தொடர வேண்டும் என்று விரும்பினார்.
மார்க்கம், நற் காட்சியின் ஆரம்பக் கட்டத்தைப் புரிந்து கொண்டவுடனே துவங்குகிறது. பயிற்சி செய்யச் செய்ய மனம் வளர்ச்சி பெற்று நமது நற்காட்சி பற்றிய அறிவும் மேலும் மேலும் ஆழமாகிறது. பின் நாம் நற்காட்சியைத் திரும்பத் திரும்பப் சிந்தித்து மேலும் அதை விரிவாக்குகிறோம்.
(ஆதாரம் தொலைந்து விட்டது)
***
https://youtu.be/VL6c49syHHE?si=Sa23th6fwT0SFv5U
பாடியவர்: ராஜேஸ்வரி ஸ்வாமிநாதன்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
(ஒழுக்கத்து - ஒழுக்கத்தில் வழுவாது நின்று;
நீ-த்தல்-துறத்தல்;
விழுப்பம்-சிறப்பு,நன்மை;
பனுவல்-நூல்;
துணிவு-முடிவு, கொள்கை)
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று (ஒழுக்கத்து) பற்று விட்டவர்களின் (நீத்தார்) பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே (விழுப்பத்து) நூல்களின் (பனுவல்) துணிவாகும்.
(மு. வ. உரை)
***
ஒழுக்கத்துடன் வாழ்பவரும் பற்றுகளை துறந்தவரும்
மற்றவர்களுக்கு ஒரு சிறந்த ஆன்மீக நண்பராக விளங்குவார்கள். அவர்கள் சிறப்பை போற்றுவது நல்லது.
புத்த பகவான் கூறுகிறார்:
"பிக்குகளே, ஒரு பிக்குவின் வாழ்க்கை ஒழுக்கத்தில், தியானத்தில், அறிவில், விடுதலையில், அல்லது விடுதலையை அடையும் அறிவும் (knowledge) தரிசனமும் (vision) நிறைவடைந்திருந்தால் —
அவர்களைப் பார்ப்பதுமே பெரும் பயனுள்ளதாகும் என்று நான் கூறுகிறேன்.
அவர்களைப் பற்றி கேட்பதுமே, அவர்களை அணுகுவதுமே, அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதுமே, அவர்களை நினைவுகூர்வதுமே, அல்லது அவர்களைப் பின்பற்றி பிக்குவாழ்க்கையில் செல்லுவதுமே பெரும் பயனுள்ளதாகும் என்று நான் கூறுகிறேன்."
ஆதாரம்: SN46.3
***
https://youtu.be/-iD7BAfAQHA?si=stXHh4pAVRbpZALI
பாடியவர்: ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிநாதன்
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(பற்றற்றான்-Sage முனிவன், புத்தர், அருகர்)
எதிலும் பற்றில்லாத முனிவர் (பற்றற்றான்) மீது பற்றுக் கொள்ள வேண்டும். பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்று துணை நிற்கும்.
***
பௌத்தம் மனிதரைப் பற்றிய மதம். மனிதரால் எதை சாதிக்க முடியுமோ அதை மட்டுமே புத்தர் கற்பித்தார்.
பற்றிலர் யார்? புத்தரும் அவரது முழுமையாக ஞானம் பெற்ற ஆண் மற்றும் பெண் அருக (அரஹந்த) சீடர்களும் பற்றில்லாதவர்கள்.
மனிதராலும் பற்றருக்க முடியும் என்று அவர்கள் நிரூபித்தவர்கள்.
பற்று அறுக்கும் வரை மும்மணிகள் (புத்தர், தம்மம், சங்கம்) மீது பற்று தேவை. மும்மணிகளின் உதவியோடு துக்கமற்ற நிலைக்கு சென்று விடலாம். அதன் பிறகு மும்மணிகள் மீதும் கூட பற்று தேவையில்லை.
தோணி உவமை
புத்த பகவான் கூறினார்:
“நான் உங்களுக்கு ஒரு உவமையைப் போதிக்கிறேன் — அது ‘தோணி உவமை’. தோணி ஒரு நீர் நிலையை கடந்து போவதற்காக, அதோடு பற்றுக்கொள்வதற்காக அல்ல. கவனமாகக் கேளுங்கள், மனதில் கொள்ளுங்கள், நான் பேசுகிறேன்.
ஒரு மனிதன் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும்போது, ஒரு பெரிய நீர்நிலையைப் பார்க்கிறான். இப்பக்கம் ஆபத்தானதும் பயமுறுத்துவதுமானது; அப்பக்கம் பாதுகாப்பானதும் நிம்மதியானதும். ஆனால் அங்கு கடக்கப் படகு இல்லை, பாலம் இல்லை. அப்போது அவன் நினைக்கிறான்: ‘இப்பக்கம் ஆபத்தானது, அப்பக்கம் பாதுகாப்பானது. ஆனால் படகோ பாலமோ இல்லை. நான் புல், குச்சிகள், கிளைகள், இலைகளைச் சேர்த்து ஒரு தோணி செய்து, அதில் அமர்ந்து கைகளாலும் கால்களாலும் தள்ளி, பாதுகாப்பான பக்கம் கடக்கலாமே?’
அவன் தோணியைச் செய்து, பாதுகாப்பான பக்கம் கடக்கிறான். ஆனால் பின்னர் அவன் நினைக்கிறான்: ‘இந்த தோணியைப் பயன்படுத்தி நான் பாதுகாப்பான பக்கம் வந்துவிட்டேன். இப்போது இந்த தோணியைத் தலையில் அல்லது தோளில் சுமந்து கொண்டு என் பயணத்தைத் தொடரலாமே?’
என்ன நினைக்கிறீர்கள், பிக்குகளே? அவன் இப்படிச் செய்தால், அந்த தோணியுடன் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஆகுமா?”
“இல்லை, பகவானே.”
“அப்படியானால் அந்தத் தோணியுடன் என்ன செய்ய வேண்டும்?
அந்த மனிதன் இப்படிச் சிந்திக்க வேண்டும்:
‘இந்தத் தோணி எனக்கு பயனுள்ளதாக இருந்தது; இதைப் பயன்படுத்தி நான் பாதுகாப்பான பக்கம் கடந்து வந்தேன். ஆனால் இப்போது நான் இதை கரையில் விட்டு, என் பயணத்தைத் தொடர வேண்டும்.’
இவ்வாறு செய்வதே அந்தத் தோணியுடன் செய்ய வேண்டிய சரியான செயல்.
இந்த உவமையைப் புரிந்துகொண்டு, நீங்கள் (ஞானம் அடைந்த பின்) நல்லவையான போதனைகள் மீதும் பற்று விட்டுவிட வேண்டும்; அப்படியிருக்க, கெட்டவற்றை விட்டுவிடுவது இன்னும் அவசியம்.”
ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN22
குறிப்பு: அக்கறை செல்லும் வரை அந்த தோணி தேவைப்பட்டது. சென்ற பின் அதை தலையில் தூங்கிக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. அதுபோல ஞானம் பெரும் வரை போதனைகள் மீது பற்று இருப்பது அவசியம். அதன் பின்னர் அந்த பற்றும் தேவையில்லை.
***
https://youtu.be/jTtadGCGI4c?si=-UcqnzQLn57tdt7t
பாடியவர்: அமிர்தவர்ஷினி
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
(காதன்மை-அன்பு, ஆசை;
கையல்லது-தகாதது;
தன்கட்-தன்கண், தன்னிடத்தில்)
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு (தன்கட்) நன்மை தராதவை (கையல்லது) மேல் எல்லாம், விருப்பம் (காதன்மை) கொள்வதே ஆகும்.
(சாலமன் பாப்பையா உரை)
***
வெள்ளிக்கொல்லர் சுந்தர் தான் பிராமணர்களிடம் கேட்டறிந்த தூய்மை ஆச்சாரத்தைப் பற்றி புத்த பகவானிடம் கூறினார்:
"பிராமணர்கள் தங்கள் சீடர்களை இவ்வாறு பயிற்சி மேற்கொள்ள கூறுவர்: 'வாரும் உத்தமபுருஷர்களே, சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியைத் தொட வேண்டும். அப்படி பூமியைத் தொடாவிட்டால், ஈரமான மாட்டு சாணத்தைத் தொடவேண்டும். அப்படி ஈரமான மாட்டு சாணத்தைத் தொடாவிட்டால், பச்சைப் புல்லைத் தொடவேண்டும். அப்படி பச்சை புல்லைத் தொடாவிட்டால், தீயை வழிபட வேண்டும். அப்படி தீயை வழிபடவில்லையென்றால், கைகூப்பி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கைகூப்பி சூரிய நமஸ்காரம் செய்யாவிட்டால், பொழுது இறங்குமுன் தண்ணீரில் மூன்று முறை முழுக வேண்டும். இப்படிப்பட்ட தூய்மையாச்சாரங்களை தான் .....மேற்கத்திய நாட்டு பிராமணர்கள் உரைக்கின்றனர். அதனை நான் ஏற்கின்றேன்."
"சுந்தா, .....பிராமணர்கள் உரைக்கும் தூய்மையாச்சாரங்கள் ஒன்று; மேன்மையானோர் மார்க்கத்தில் உள்ள தூய்மை என்பது முற்றிலும் வேறு."
பகவர் கூறினார்: "உடம்பால் மூன்று வழிகளிலும், சொல்லால் நான்கு வழிகளிலும், உள்ளத்தால் மூன்று வழிகளிலும் ஒருவர் தகாதவற்றில் ஈடுபட்டு தூய்மையற்றவராகலாம்."
"உடம்பால் செய்யும் செயல்களால் ஒருவர் எப்படி தூய்மையற்றவராகிறார்? உயிரைப் பறிப்பவர், ஒரு வேடன், ரத்தம் படிந்த கைகள் உடையவர், கொல்வதற்கும் மாய்ப்பதற்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். உயிரினங்களுக்கு எந்தக் கருணையும் காட்டாதவர்;
தனக்கென்று கொடுக்காத பொருளை எடுத்துக் கொள்பவர். திருடும் நோக்கத்தோடு ஒரு கிராமத்திலோ காட்டிலோ, மற்றவரின் பொருட்களை எடுத்துக் கொள்கிறார்;
தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடுகிறார். அவர் தாய், தந்தை, அக்கா, அண்ணா, உறவினர் ஆகியோரின் பாதுகாப்பில் உள்ளவருடன் அல்லது தங்கள் தர்மத்தின் பாதுகாப்பில் உள்ளவருடன் பாலியல் உறவுகளில் ஈடுபடுகிறார். திருமணமானவர், சட்டத்தின் பாதுகாப்பில் உள்ளவர் போன்றவருடனும், திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடனும் பாலியல் உறவுகளில் ஈடுபடுகிறார்.
இவ்வாறு மூன்று வழிகளில் உடம்பின் செயலால் ஒருவர் தூய்மையற்றவராகிறார்."
நாங்கு வழிகளில் சொல்லால் ஒருவர் எப்படி தூய்மையற்றவராகிறார்?
ஒருவர் பொய்யான பேச்சில் ஈடுபடுகிறார். அவர் ஒரு ஊர் சபைக்கு, ஒரு கூட்டத்திற்கு, உறவினர் கூடியுள்ள இடத்திற்கு, தனது தொழில் சம்பந்தப்பட்ட குழுவிற்கு, ஒரு ராஜ சபைக்கு (நீதி வழங்கும் மன்றத்திற்கு) சாட்சியாக இவ்வாறு அழைக்கப்படுகிறார், 'வாரும் ஐயா. உங்களுக்கு தெரிந்ததை வந்து சொல்லவும்.': அவருக்குத் தெரியாது என்றால், 'எனக்குத் தெரியும்' என்கிறார். அவருக்கு தெரியும் என்றால், 'எனக்குத் தெரியாது' என்கிறார். அவர் பார்க்கவில்லை என்றால், 'நான் பார்த்தேன்' என்கிறானர். அவர் பார்த்திருந்தால், 'நான் பார்க்கவில்லை' என்கிறார். இவ்வாறு சுயநலத்திற்காக அல்லது மற்றொருவரின் நன்மைக்காக அல்லது ஒரு வெகுமதி பெறுவதற்காக, தெரிந்தே பொய் சொல்கிறார்.
அவர் மற்றவரை பிரித்துப் பேசுகிறார். அங்கு உள்ளவர்களையும் இங்கு உள்ளவர்களையும் பிரிப்பதற்காக இங்கு கேட்டதை அங்கு சொல்கிறார். இங்கு உள்ளவர்களையும் அங்கு உள்ளவர்களையும் பிரிப்பதற்காக அங்கு கேட்டதை இங்கு சொல்கிறார். இவ்வாறு ஒற்றுமையாய் இருந்தவர்களை பிரித்து, பிரிந்தவர்களின் மத்தியில் சச்சரவுகள் உண்டாக்குவதற்கு அவருக்கு ஏக மகிழ்ச்சி. பிரிவினை உண்டாக்குவதற்கு ஏற்ப, பேசுவார்.
அவர் அடாவடி பேச்சில் ஈடுபடுவார்.
மற்றவர் கோபம் தூண்டப்பட்டு, அவர்களது அமைதி அழிக்கப்படும் வகையில் கடுமையான, கசப்பான, இகழ்ந் துரைக்குஞ் சுடுஞ்சொற்களைப் பேசுவார்.
அவர் வீண் பேச்சில் ஈடுபடுவார். பேச கூடாத நேரத்தில் பேசுவார். பேசும் போது அதில் உண்மை இருக்காது. நோக்கமும், தர்மமும், ஒழுக்கமும் அடைவதற்காக பேசப்பட்டிருக்காது. அவரது பேச்சு போற்றி காப்பாற்றப்பட வேண்டிய பேச்சாக இருக்காது.
இவ்வாறு ஒருவர் நாங்கு வழிகளில் சொல்லால் தூய்மையற்றவர் ஆகிறார்.
ஒருவர் எவ்வாறு மூன்று வழிகளில் உள்ளச் செயல்களினால் தூய்மையற்றவராகிறார்? ஒருவர் பேராசையுள்ளவர். இவ்வாறு நினைத்துக் கொண்டு மற்றவர் பொருட்கள் மீது ஆசை படுகிறார், 'ஓ, மற்றவரது அந்தப் பொருள் எனதுடமையானால் எப்படி இருக்கும்?'
அவர் மற்றவர் மீது தீய எண்ணங்கள் கொள்கிறார். அவர் உள்ளத் தீர்மானங்கள் எல்லாம் இழிவானவை: 'இவர்கள் அனைவரும் கொல்லப்படட்டும் அல்லது வெட்டப்படட்டும் அல்லது நொறுக்கப்படட்டும் அல்லது தீர்த்துக்கட்டப்படட்டும் அல்லது அவர்கள் இல்லாமல் போவார்களாக!'
அவர் தவறான காட்சி உடையவராக இருக்கின்றார். கோணல்மாணலான வழிகளில் விஷயங்களை காண்கிறார். 'தானம், நன்கொடை செய்வதில் பயனில்லை என்று நினைப்பது. நற்செயல்களுக்கும் தீய செயல்களுக்கும் தகுந்த விளைவுகள் இல்லை என்று நினைப்பது, அடுத்த பிறவி என்று எதுவும் இல்லை என்று நினைப்பது, நமது வாழ்க்கையில் தாய், தந்தை என்ற சிறப்புடையவர்கள் இல்லை என்றும் அவர்களுக்கு தனிப்பட்ட மரியாதை ஏதும் தர வேண்டியதில்லை என்று நினைப்பது, மறைந்த பின் உடனடியாக மறு பிறவி எடுப்போம் என்று நம்பாதது, ஆன்மீகப் பாதையைத் தொடர்ந்து வீடுபேறு அடைந்தவர் உள்ளனர் என்பதையும், அவர்கள் இந்த உலகம், அடுத்து உலகம் பற்றிய அறிவை தாங்களாகவே நேரடியாக அறிந்து, உணர்ந்து அதனை மற்றவர்க்கும் அறிவிக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ளாதது.' இவ்வாறு ஒருவர் மூன்று வழிகளில் உள்ளத்தால் தூய்மையற்றவராகிறார்.
"சுந்தா, இவையே பத்து வழிகளில் ஒருவர் செய்யும் திறமையற்ற செயல்கள். இந்த பத்து திறமையற்ற செயல்களில் ஈடுபடும் ஒருவர் சரியான நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்து பூமியை தொட்டாலும் தொடாவிட்டாலும் அவர் தூய்மையற்றவரே, ஈரமான மாட்டு சாணத்தை தொட்டாலும் தொடாவிட்டாலும் அவர் தூய்மையற்றவரே, பச்சைப் புல்லைத் தொட்டாலும் தொடாவிட்டாலும்..... தீயை வழிபட்டாலும் வழிபடவில்லையென்றாலும்....கைகூப்பி சூரிய நமஸ்காரம் செயதாலும் செய்யாவிட்டாலும்....பொழுது இறங்குமுன் தண்ணீரில் மூன்று முறை முழ்கினாலும் முழ்காவிட்டாலும் அவர் தூய்மையற்றவராகவே இருக்கிறார்.
ஏன் அப்படி? ஏனென்றால் இந்த பத்து திறமையற்ற செயல்கள் சுத்தமற்றவை, அசுத்தத்தை விளைவிப்பன. மேலும் இந்த பத்து திறமையற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளதால் தான் நரக உலகம், விலங்கு உலகம், ஆவி உலகம் மற்றும் மற்ற கெட்ட இடங்கள் காணப்படுகின்றன (அங்கே அவர்கள் மறுபிறப்பெடுக்குமிடம் என்பதால்)."
ஆதாரம்: வெள்ளிக்கொல்லர் சுந்தருக்குத் தந்த போதனை
அங்குத்தர நிகாயம் AN 10.176
***
https://youtu.be/4FXICzQ3im0?si=-ftcGmw9b4gJipVW
பாடியவர்: ஸ்வாதி ரங்கநாத்
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
(ஊதியம்-இலாபம், பயன், கல்வி;
பேதை-அறிவிலி;
கேண்மை-நட்பு;
ஒரீஇ-நீக்கி)
அறிவிலிகளோடு (பேதையார்) நட்பை (கேண்மை)
துறந்து (ஒரீஇ) விடுதல் (விடல்) ஒருவருக்கு இலாபம் (ஊதியம்) கிடைத்தது போல.
***
மங்கள சுத்தத்தில் 38 மங்களங்களை புத்த பகவான் கூறுகிறார். அதில் முதல் மங்களம் - 'முட்டாள்களோடு சேராமல் இருப்பது' (asevana ca balanam) சேவனா என்றால் கூட இருப்பது. அசேவனா என்பது அதன் எதிர்ச்சொல். பாலா என்றால் அறிவிலி.
இங்கு அறிவிலி என்றால் அறிவில் குறைந்தவன் என்பது மட்டும் அல்ல. சரியான தீர்மானங்கள் எடுக்க முடியாதவன். சிலர் நஞ்சுத் தன்மை கொண்டவர்கள். எப்போதும் குறை சொல்லும் பழக்கம் உள்ளவர்கள். உங்கள் கருத்துக்களையும் உங்களால் செய்யக்கூடியதையும் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் நம் வாழ்க்கையே கெடுத்து விட முடியும். சிலர் ஒழுக்க நெறி கடைபிடிக்காதவர்கள். இவர்கள் உங்களையும் அவர்களைப் போல ஒழுக்கமற்றவர்களாக ஆக்கி விடுவார்கள்.
சில சமயம் தனி ஒருவரல்லாமல், ஒரு குடும்பம் அல்லது ஒரு கலாச்சாரமே பாதிக்கப்படலாம். உதாரணமாக குடும்பங்கள் கொத்தடிமைகளாக இருப்பது. வெள்ளைக்காரன் மற்ற கலாச்சாரங்களை அதிகாரம் செய்தது. அதன்பின் விளைவுகளை இன்றும் காணலாம். அந்த வெற்றிகரமான ஆனால் முட்டாளான அதிகாரம் செய்யும் கலாச்சாரம் சொல்வது என்னவென்றால், 'நீ தாழ்ந்தவன்,' என்பதுதான். அந்த அதிகாரம் செய்யப்பட்ட கலாச்சாரம் மீண்டும், 'தாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல,' என்பதை உணரும் வரை துன்பமுருவார்கள்.
ஒரே ஒரு அறிவிலி, ஒரு ஒழுக்கமற்றவன், ஒரு தகாதவன் போதும், அவனோடு தொடர்ந்து இருந்தோம் என்றால் அவன் நம் வாழ்க்கையை கெடுத்து விட முடியும்.
இவர்களை சந்திப்பதை தடுக்க முடியாது.
இவர்களை சமாளிக்க கூடிய மனத்திரன் ஒருவருக்கு இருக்கலாம். ஆனால் ஞானமுள்ளவர்கள் இவர்களை இலேசாக கருத மாட்டார்கள். அவர்களை வேண்டிய அளவு மட்டுமே பொருட்படுத்துவார்கள். புத்தரும் கூட அறிவிலிகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர் உறவினன் தேவதத்தன் ஒரு அறிவிலி. அவன் புத்தரையே கொலை செய்ய முயற்சித்தவன். இவர்களை உங்கள் பணி செய்யும் இடத்தில் சந்திக்க வேண்டிய இருக்கலாம். வேலையை சுலபமாக விட்டுச் செல்லவும் முடியாது. ஆனால் சில சமயம் நாம் உறுதியுடன் முடிவு எடுக்க வேண்டும். கடினமென்றாலும் வேறு வேலை தேடி போக வேண்டியது இருக்கலாம். ஏன், நம் குடும்பத்திலேயே அப்படி ஒரு அறிவிலி இருக்கலாம். குடும்பத்தை விட்டுச் செல்ல வேண்டியதாக இருக்கலாம், ஒரு இடத்தை அல்லது ஒரு நாட்டை விட்டு கூட செல்ல வேண்டியதிருக்கலாம்.
அடக்குமுறையிலிருந்து, கொடுமையிலிருந்து தப்பிச் செல்லும் கதைகளை வரலாறில் ஏராளமாக காணலாம். இவ்வாறு தப்பிப்பது கொண்டாடப்படுகிறது என்றாலும் அது நம் உள்ளத்தில் ஒரு தழும்பையும் உண்டு செய்கிறது. அந்த மனவேதனையை எப்படி நிவர்த்தி செய்வது? அதற்கு தான் அட்டாங்க மார்க்கம் தேவை. அந்த அறிவிலிகளை உள்வாங்கிக் கொள்கிறோம். மனமாசுகள் கொண்ட நாமும் அந்த அறிவிலிகளைப் போலத்தான். அந்த மன மாசுகளுடன் இருப்பது, ஒரு அறிவிலியுடன் இருப்பது போல. நற்முயற்சியில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் பாகம், மன மாசுக்களை நீக்குவது அல்லது வராமல் தடுப்பது. 5 நீவரணங்கள் (hindrances) நமக்குள்ளே உள்ள அறிவிலிகள். பேராசை, கோபம், சஞ்சலம்/கவலை, சோம்பல்/சோர்வு, சந்தேகம் ஆகிய மாசுக்களிடமிருந்து விலகச் சொல்கிறார் புத்தர்.
ஆகவே புற வாழ்க்கையில் அறிவிலிகளை விலகிச் செல்வது நல்லது. அதேபோல அக வாழ்க்கையிலும் மனதில் உள்ள மாசுகளை விட்டுச் செல்வது நல்லது. இதுவே வள்ளுவர் வாக்கில் - பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் - அதாவது
'முட்டாள்களின் நட்பை துறந்து விடல்,' என்பதன் சாரம்.
ஆதாரம்: அஜான் சோணா சொற்பொழிவு
***
https://youtu.be/nEm-8LQCkUs?si=AcmodC8sbENSlHWZ
பாடியவர்: சுரேன் சேகரன்
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
(இகல்-பகை, மாறுபாடு, விரோதம், வக்கிரம், ஒவ்வாமை;
பகல்-Dividing, separating பகுக்கை;
பாரி-த்தல்-பரவுதல்)
எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை (பகலென்னும்) வளர்க்கும் (பாரிக்கும்) நோயே, மனவேறுபாடு (இகல்) என்று கூறுவர். (சாலமன் பாப்பையா உரை)
***
தம்மபதம் 3-6
அவன் என்னை அவமதித்தான், அடித்தான், தாக்கினான், கொள்ளையடித்தான்’ — இதைப் பற்றி மனதில் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பகைமை அடங்காது.
அவன் என்னை அவமதித்தான், அடித்தான், தாக்கினான், கொள்ளையடித்தான்’ — இதைப் பற்றி மனதில் நினைத்துக் கொண்டிருக்காவிட்டால், பகைமை அடங்குகிறது.
பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியாது. பகைமையை அன்பினாலேயே தணிக்க முடியும். இதுதான் தொன்றுதொட்டு வருகின்ற வாய்மையாகும்.
இகல்வதை விரும்புவோர் 'தாங்கள் என்றைக்காவது இறப்போம்' என்பதை அறிகிறதில்லை. அறிந்தால் அவர்கள் இகல்வதை நிறுத்தி விடுவார்கள்.
***
https://youtu.be/AqG8aao-69w?si=2Sv8kAzBrDqhPGqX
பாடியவர்: முரளி
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
(தினை-சிறுதானியவகை;
துணை-அளவு;
நன்றி-உபகாரம்;
பனை-ஒரு பேரளவு)
ஒருவன் தினையளவாகிய (தினைத்துணை) உதவியைச் (நன்றி) செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர் (பயன்தெரிவார்), அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். (மு. வரதராசன் உரை)
***
புத்த பகவான் கூறினார்:
“பிக்குகளே, நான் உங்களுக்கு நற்குணமற்ற மனிதரின் நிலையும், நற்குணமுள்ள மனிதரின் நிலையும் போதிக்கிறேன். கவனமாகக் கேளுங்கள், மனதில் கொள்ளுங்கள், நான் பேசுகிறேன்.”
பிக்குகள் பதிலளித்தனர்: “அப்படியே ஆகட்டும், பகவானே.”
புத்த பகவான் கூறினார்:
“நற்குணமற்ற மனிதரின் நிலை என்ன? நற்குணமற்ற மனிதன் நன்றி இல்லாதவன், நன்றியுணர்வு இல்லாதவன். இந்த நன்றியின்மை, இந்த நன்றியுணர்வு இல்லாமை, காட்டுமிறாண்டிகளால் போற்றப்படுகிறது. இது முழுமையாக நற்குணமற்றவரின் நிலை.
நற்குணமுள்ள மனிதன் நன்றியுள்ளவன், நன்றியுணர்வு கொண்டவன். இந்த நன்றியுணர்வு, இந்த நன்றியுணர்ச்சி, நாகரிகமானவர்களால் போற்றப்படுகிறது. இது முழுமையாக நற்குணமுள்ளவர்களின் நிலை.”
ஆதாரம்: அங்குதர நிகாயம் AN 2.32 செய்ந்நன்றியறிகை
***
https://youtu.be/2JrCbT4wQkY?si=63OUWFZHgui2PP9W
பாடியவர்: கோமகள் சிந்து
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
(ஆறு-பயன்;
அறத்தாறு-அறத்தினது பயன்;
இதுவென வேண்டா-இது தான் என்று கேட்டு, படித்து தெரிந்து கொள்ளல் வேண்டியதில்லை;
சிவிகை-பல்லக்கு;
பொறுத்தான்-சுமப்பவன்;
ஊர்ந்தான்-பயணிப்பவன்;
இடை-இடம்)
இந்தக் குறளுக்கு வெவ்வேறு உரையாசிரியர்கள் வெவ்வேறு விளக்கங்கள் தந்துள்ளனர். சாலமன் பாப்பையா அவர்களின் உரை:
அறத்தைச் செய்வதால் வரும் பயன் (அறத்தாறு) இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை (இதுவென வேண்டா). பல்லக்கைத் (சிவிகை) தூக்கிச் செல்பவனையும் (பொறுத்தான்) அதில் பயணிப்பவனையும் (ஊர்ந்தான்) கண்ட அளவில் பயனை அறியலாம்.
***
கன்மத்தின் விளைவுகளை கண்டறிய முயற்சிப்பது நமது சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்று புத்த பகவான் கூறினார். (ஆதாரம்: AN4.77 நினைத்துப் பார்க்க முடியாது)
செயல்களின் விளைவுகள் (கம்மவிபாகம் / வினைப் பயன்)
கன்மம் (செயல்கள்) மற்றும் அதன் விளைவுகள் சிக்கலான முறையில் வெளிப்படுகிறது.
கன்மம் பழுக்கும் காலம், அதன் தீவிரம், அது வெளிப்படும் விதம் — இவை அனைத்தும் எண்ணற்ற பரஸ்பர சார்ந்த காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.
ஏன் சிந்திக்க முடியாதது? மனித சிந்தனைக்குத் துல்லியமாக கன்மத்தின் விளைவுகளை கணக்கிடவோ, முன்னறிவிக்கவோ முடியாது. புத்தரின் ஞானம் மட்டுமே அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளும்.
எனவே நமது ஆற்றலை இப்போது நமக்கு எட்டக்கூடிய, நம்மால் செய்யக் கூடிய பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
அதாவது புண்ணியம் சேர்ப்பது, ஒழுக்கம் (சீலம்), ஆழ்ந்த தியானம் (சமாதி), ஞானம் (பஞ்ஞா) ஆகியவற்றை வளர்ப்பது. இதுவே விடுதலைக்கு எடுத்துச் செல்லும்.
இப்போது நமது உள்ள நிலை மற்றும் இன்ப துன்ப நுகர்ச்சிகள் முன்வினையின் பயன் மட்டுமல்ல, அதில் இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் வினையின் பயனும் அடங்கியுள்ளது. முன்வினையைப் பற்றி ஆராய்வது, கவலைப்படுவது பயனற்றது. எனவே இப்போது செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
பழைய கன்மம் மற்றும் புதிய கன்மம்
உடல், மனம், உணர்வுகள் ஆகியவை பழைய கன்மத்தின் விளைவுகள்; ஆனால் இப்போது நாம் செய்கிற செயல்களே புதிய கன்மம்.
புத்த பகவான் கூறினார்:
“பிக்குகளே, பழைய கன்மம் என்றால் என்ன? “கண் என்பது பழைய கன்மம்; அது மனதின் விருப்பத்தால் உருவாக்கப்பட்டதும் வடிவமைக்கப்பட்டதும், அனுபவிக்கக்கூடியதுமாகக் காணப்பட வேண்டும். காது பழைய கன்மம்… மூக்கு… நாக்கு… உடல்...மனம் பழைய கன்மம்; அது மனதின் விருப்பத்தால் உருவாக்கப்பட்டதும் வடிவமைக்கப்பட்டதும், அனுபவிக்கக்கூடியதுமாகக் காணப்பட வேண்டும். இதுவே பழைய கன்மம் எனப்படுகிறது.”
“அப்படியென்றால் புதிய கன்மம் என்றால் என்ன? உடலால், சொற்களால், அல்லது மனதினால் இப்போது செய்யப்படும் எந்த கன்மமும் — இதுவே புதிய கன்மம் எனப்படுகிறது.”
ஆதாரம்: Kamma Sutta (SN 35:146)
நாம் கவனம் செலுத்த வேண்டியது புதிய கன்மத்தில்.
ஒரு கதை
பௌத்த மரபில் தாய் விசாகை பெண்களுள் தலைசிறந்த ஒரு உபாசிகை (சீடர்) என்று போற்றப்படுபவர். அவருக்கு திருமணமான சில காலத்தில் நடந்த சம்பவம் இது (கதையின் ஒரு பகுதி மட்டும்):
விசாகை, மணமகனுடன் புக்ககம் வந்து சேர்ந்தாள். அவள் தன் கணவனுக்கும், மாமன் மாமிக்கும், மற்றவர்களுக்கும் செய்யவேண்டிய கடமைகளை முறைப்படி சரிவரச் செய்துகொண்டிருந்தாள். சில திங்கள் கழிந்தன.
ஒரு நன்னாள், விசாகையின் மாமனார் பொன்தட்டுகளிலே சுடசுட நெய்ப்பொங்கலும், பால் பாயசமும் அருந்திக் கொண்டிருந்தார். விசாகை அருகில் நின்று விசிறிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பௌத்த பிக்கு அவ்வீட்டில் பிச்சைக்கு வந்தார். மாமனார் அவரைக் கண்டும், காணாதவர்போல உணவை அருந்திக் கொண்டிருந்தார். பிச்சையை எதிர்பார்த்து பிக்கு காத்துக் கொண்டிருந்தார். மாமனார் அவரைப் பாராதவர் போல இருந்து உணவு கொள்வதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார். அப்போது விசாகை பிக்குவைப் பார்த்து, "இப்போது போய் வாருங்கள். மாமனார் பழைய சோறு சாப்பிடுகிறார்," என்று சொன்னாள். பிக்கு போய்விட்டார். ஆனால் மாமனாருக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. மருமகள் தன்னை அவமானப்படுத்தியதாக நினைத்தார். உடனே பொங்கலையும் பாயசத்தையும் உண்ணாமல், கையை உதறிவிட்டு, பணியாளரை அழைத்து, "அடே! இதை எடுத்துவிடுங்கள். இந்தப் பெண்ணை வெளியே பிடித்துத் தள்ளுங்கள்," என்று கூவினார்.
விசாகை பெரிய இடத்துப் பெண். இந்தச் சீமானைவிடப் பன்மடங்கு செல்வத்தில் சிறந்தவர் இவள் தந்தை. ஆகவே அவளை வெளியே துரத்த ஒருவரும் துணியவில்லை. விசாகை மாமனாரை நோக்கி:
"ஏன் மாமா நான் வீட்டை விட்டுப் போக வேண்டும்! நான் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டாள்.
"போதும், வாயைமூடு. பிச்சைகாரன் எதிரில் என்னை அவமானப்படுத்த வில்லையா நீ, பழைய சோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லி. வீட்டை விட்டு வெளியே போ, அதிகப்பிரசங்கி.." என்று உறுமினார்.
"நான் தங்களை அவமானப்படுத்தவில்லை. உண்மையைத்தான் சொன்னேன். இதை நாலு பேர் தப்பு என்று சொன்னால் நான் வெளியே போகிறேன். யாரிடத்திலாவது சொல்லிப் பாருங்கள்."
மாமனாருக்குக் கோபம் அடங்கவில்லை. ஆனாலும் சற்றுச் சிந்தித்தார். இவள் சீமான் வீட்டு மகள். வாளா விரட்டி அனுப்பிவிட முடியாது. இவள் குற்றத்தைப் பலருக்கும் தெரியும்படி கூறி அவளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். ஆகவே ஆட்களை அனுப்பிப் பஞ்சாயத்தாரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.
பஞ்சாயத்தார் வந்தார்கள். அவர்களிடம் மாமனார், மருமகளின் செய்தியை விளக்கமாகக் கூறினார். ஒரு நல்ல நாளில் நெய்ப்பொங்கலும், பாயசமும் சுடசுடச் சாப்பிடும் போது, பழையசோறு சாப்பிடுகிறேன் என்று சொல்லலாமா? அதுவும் பிச்சைக்காரனிடத்திலா சொல்வது! நான் என்ன பழைய சோறு சாப்பிடும் பரம ஏழையா? இந்த நகரத்திலேயே முதல் சீமான் நான் அல்லவா? இந்தப் பெண் என்னை இப்படி அவமானப்படுத்துவதா? என்னை என்னவென்று நினைத்திருக்கிறாள். மாமனார் என்று மரியாதை இருந்தால் இப்படிப்பேசுவாளா? நீங்களே சொல்லுங்கள். இனி ஒரு நிமிடமும் இவள் இங்கு இருக்கக்கூடாது," என்று ஆத்திரத்தோடு பேசினார்.
"ஏன் குழந்தாய்! நீ அப்படிச் சொல்லலாமா? அது தவறுதானே!" என்று கேட்டார்கள் பஞ்சாயத்துப் பேரியோர்.
"நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால் அதற்கு அதுவா அர்த்தம்?"
"பின்னை, என்னதான் அர்த்தம்!"
"மாமா பொங்கலும் பாயசமும் சுடச்சுடத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான்தான் விசிறிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பிக்கு பிச்சைக்கு வந்தார். மாமா அவரைக் கவனிக்கவில்லை. அவரும் நெடுநேரம் நின்றார். அப்போது எனக்குள் நான் எண்ணினேன்: "முன் பிறப்பில் மாமா நல்ல பெரியவர்களுக்கு உண்டியும் உணவும் கொடுத்ததனால் அதன் பயனை, இப்போது சீமானாகப் பிறந்து உண்ணவும், உடுக்கவும் அனுபவித்து வருகிறார். ஆனால் இந்தப் பிறப்பில் இப்போது புதிதாகத் தானதருமம் செய்து புதிய புண்ணியத்தைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆகவே பழைய வினையின் பயனை அனுபவிக்கிறபடியால், இவர் பழைய சோறு சாப்பிடுகிறார் என்று சொன்னேன். இப்படிச் சொன்னது எப்படி அவமானப்படுத்துவது ஆகும்?"
இந்த அர்த்தத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வியப்புடன், "அதற்கு இதுவா அர்த்தம்!" என்று கூறி மகிழ்ந்தார்கள். பிரபுவைப் பார்த்து, "குழந்தை சொன்னதில் ஒன்றும் குற்றம் இல்லையே!" என்று கூறினார்கள்.
அவருக்கும் அப்போதுதான் உண்மை விளங்கிற்று. "பழையசோறு சாப்பிடுகிறார்," என்று கூறியது அவமானபடுத்துவதற்கு அல்லவென்றும், அதற்குப் பருப்பொருளைவிட நுண்பொருள் இருக்கிறதென்றும் அறிந்தார். "ஆமாம்! விசாகை சொன்னதில் தவறு ஒன்றும் இல்லைதான்!" என்று ஏற்றுக்கொண்டார்.
ஆதாரம்:
"வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே"
பௌத்தக் கதைகள்
மயிலை சீனி. வேங்கடசாமி
***
https://youtu.be/DN59JFzTp9Q?si=5fLnaEngK8nG8fwt
பாடியவர்: முகேஷ்
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
(நகை-சிரிப்பு;
உள்ளுதல்-நினைதல்;
இன்னாங்கு-கடுஞ்சொல்;
இகழ்ச்சி-அவமதிப்பு;
பாடு-அனுபவம்)
விளையாட்டாகவேனும் (நகையுள்ளும்) ஒருவரைப் பற்றிப் பழித்தல் (இகழ்ச்சி) அவருக்குத் துன்பந்தருவதாம் (இன்னாது); ஆதலாற் பாடறிந்தொழுகுவாரிடத்திற் (பாடறிவார் மாட்டு) பகைமையுள்ள போதும் (பகையுள்ளும்) இனிய பண்புகளே (பண்புள) உண்டாவன. (ஞா. தேவநேயப் பாவாணர் உரை)
***
தெரிந்து, வேடிக்கையாகவும் கூட மற்றவரை புண்படுத்தக் கூடாது என்பது நற்பேச்சில் வரையறுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டாக பேசுவது விதண்டை பேச்சில் அடங்கும்.
இந்த வகைப் பேச்சு சளசளவென்று அர்த்தமில்லாமல் உளரும் பேச்சு. பாலி மொழியில் விதண்டைப் பேச்சுக்கு 'சம்ப்பா பலாபா' ( 'Sampha Palāpa') என்ற வார்த்தைகள் உண்டு. கேட்பதற்கே இது பே பே பே என்று சொல்வதைப் போன்றுள்ளது, இல்லையா? விதண்டைப் பேச்சு என்றால் என்ன என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. விதண்டைப் பேச்சு என்றால் பொருளற்ற பேச்சு. இந்தப் பேச்சு எங்கு கொண்டு செல்கிறது? பறவைகளைப் போலக் கீச்சுக் கீச்சென்று பேசுகிறோமா? நம்முள் உள்ள உற்சாக சத்தியைக் குறைக்க மனதில் தோன்றியதை பிதற்றுகிறோமா? விதண்டை பேச்சை தவிர்க்க வேண்டும்.
புத்த பகவான் இராகுலருக்கு தந்த அறிவுரை:
"இராகுலா, யாராவது ஒருவன் திட்டமிட்டு பொய் சொல்லுவதில் வெட்கம் கொள்ளாமல் இருந்தால், அவன் செய்யாத தீமை எதுவும் இல்லை என்று நான் சொல்கிறேன். ஆகையால், இராகுலா, நீ உன்னைப் பயிற்சி செய்ய வேண்டும்: ‘நான் திட்டமிட்டு— வேடிக்கையாகவும் கூட—பொய் சொல்லமாட்டேன்’ என்று.”
ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN61 Advice to Rāhula at Ambalaṭṭhika
***
https://youtu.be/kTpVE8j2WEc?si=Phv9a4Pur8-S3UpO
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
(வைத்தூறு-வைக்கோற் குவை)
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் (வைத்தூறு) போல் அழிந்துவிடும்.
— மு. வரதராசன்
***
தம்மபதம் 25
உற்சாகமான முயற்சியுடன், அக்கறையுடன்,
அடக்கமும் சுய கட்டுப்பாடும் கொண்டு,
அறிவாளி ஒருவர் ஒரு தீவை உருவாக்க வேண்டும்.
அதை எந்தக் வெள்ளப் பெருக்கமும் மூழ்கடிக்க முடியாது.
By hard work and diligence,
by restraint and by self-control,
a smart person would build an island
that the floods cannot overflow.
அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறான நல்லூக்கத்தை நான்கு அம்சங்களாகப் பகுக்க முடியும்.
1. இதுவரை எழாத தீய, பயனற்ற குணங்களை இனிமேலும் தோன்றாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.
2. ஏற்கனவே தோன்றியுள்ள தீய, பயனற்ற குணங்களைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும்.
3. இதுவரை எழாத நல்ல, பயனுள்ள குணங்களை, உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
4. ஏற்கனவே தோன்றியுள்ள நல்ல, பயனுள்ள குணங்களை, மேம்படுத்தி, வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இவை நான்கும் பிரச்சனைகள் வருவதற்கு முன்பு அவற்றை தடுக்கும் முயற்சிகளாகும்.
***
https://youtu.be/43X2FPzGn6Y?si=CqHA1ue2AXrxfCW-
பாடியவர்: பிரியங்கா. என். கே.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
(உவமை-ஒப்பு)
தனக்கு ஒப்புமை (உவமை) இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் (தாள்) பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
— மு. வரதராசன்
***
பகவான் புத்தர் ஒப்புமை இல்லாத தலைவன். அவரை சரண் சென்றவர்கள் மனக்கவலை தீர்வது உறுதி.
மிலிந்த மன்னன் போற்றுதற்குரிய நாகசேனருடன் உரையாடல்:
“புத்தர் ஒப்பிட முடியாதவரா?” — “ஆம், அவர் ஒப்பிட முடியாதவர்.”
“ஆனால் நீங்கள் அவரைக் கண்டதில்லை; அப்படியிருக்க, அதை எப்படி அறிகிறீர்கள்?”
“எப்படி என்றால், கடலைக் கண்டதில்லை என்றாலும், ஐந்து பெரிய நதிகள் அதில் கலந்தாலும் அது உயர்வதில்லை என்பதை அறிந்து, கடல் எவ்வளவு பெரிது என்பதை அறியலாம்; அதுபோல, நான் கண்டுள்ள அந்த மகத்தான ஆசான்கள், அவர்கள் புத்தரின் சீடர்கள் மட்டுமே என்பதை நினைத்தபோது, புத்தர் ஒப்பிட முடியாதவர் என்பதை அறிகிறேன்.”
"புத்தர் ஒப்பிட முடியாதவர் என்பதை மற்றவர்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்?”
“நீண்ட காலத்திற்கு முன்பு, எழுத்தில் வல்லவராக இருந்த தேரர் திஸ்ஸா என்ற ஒருவர் இருந்தார். அவரைப் பற்றி மக்கள் எப்படித் தெரிந்துகொள்வார்கள்?”
“அவரின் எழுத்தின் மூலம்.”
“அப்படியே, மன்னனே, யாரேனும் பகவான் புத்தரால் போதிக்கப்பட்ட தர்மத்தைப் கற்கும்போது, அவர் ஒப்பிட முடியாதவர் என்பதை அறியலாம்.”
ஆதாரம்: மிலிந்த மன்னனின் விவாதம் – பிக்கு பேசலா. மிலிந்த பஞ்ஞா (Milinda Paññha) என்ற பழங்கால நூலை ஆதாரமாகக் கொண்டது.
***
https://youtu.be/ACTog3ZwUx0?si=GI5edyoEFvTS_N52
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
(பாத்து-பகுக்கை, பங்கு;
ஊண்-உண்கை;
மருவு-தல்-பயிலுதல்)
தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து (பாத்து) உண்ணும் (ஊண்) பழக்கம் (மரீஇ) உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
— மு. வரதராசன்
***
புத்தர், பரிபூரணரானவர் கூறினார்:
‘பிக்குகளே, உணர்வுள்ள உயிரினங்கள் நான் அறிந்தபடி தானம் மற்றும் பகிர்தலின் பலனை அறிந்திருந்தால், அவர்கள் முதலில் தானம் கொடுக்காமல் உணவுண்ண மாட்டார்கள்; மேலும், கஞ்சத்தனத்தின் களங்கம் அவர்களின் மனதில் இடம் பெறாது.’
“பெறுவதற்கு யாராவது இருந்தால், தங்கள் கடைசி வாய், கடைசி துண்டு உணவையும் பகிராமல் அவர்கள் உண்ண மாட்டார்கள். ஆனால் உணர்வுள்ள உயிரினங்கள்
நான் அறிந்தபடி தானம் மற்றும் பகிர்வு தரும் பலனை அறியாததால், அவர்கள் முதலில் தானம் கொடுக்காமல் உண்கின்றனர்; இதனால் கஞ்சத்தனத்தின் களங்கம் அவர்களின் மனதில் நிலை கொள்கிறது.”
ஆதாரம்: இதிவுத்தக Itivutakka 1.26
***
https://youtu.be/d54x7fMtWpg?si=LnijbHItG9_ELYDZ
பாடியவர்: மித்ரன்
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
(சாக்காடு-இறப்பு)
இறப்பு (சாக்காடு) எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
— மு. வரதராசன்
***
சாக்காடு என்பது...
யாக்கை வீழ் கதிரென மறைந்திடுதல்.
(மணிமேகலை 30, 102-103)
இறத்தல் என்று சொல்லப் படுவது...மேலைக் கடலில் விழும் ஞாயிறு போல உடல் மறைவதாம்.
***
தம்மத்தின் படி அனைத்து உயிர்களும்—மனிதர்கள், விலங்குகள் மற்றும் பிற உயிர்கள்—மரணத்திற்கு உட்பட்டவர்களே. அருகர்களும், புத்தர் தாமும் கூட இந்த இயற்கைச் சட்டத்திலிருந்து விலக்கப்படவில்லை.
புத்தமதத்தின் படி, மரணத்தின் காரணம் பிறப்பு. பிறந்தபின், ஒருவர் இறக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. அது துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாவைப் போன்றது; பாய்ந்தவுடன், அது தனது இலக்கை அடைய வேண்டும். மரணத்தைத் தவிர்க்கும் ஒரே வழி பிறக்காமல் இருப்பது; பிறக்காமல் இருப்பதற்கான ஒரே வழி, இன்ப ஆசையும், வேட்கை முற்றிலும் ஒழிக்கப்படுதல்.
இன்ப ஆசையும், வேட்கையும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட மனம் கொண்ட அருகர்கள் இனி மறுபிறவி எடுக்கமாட்டார்கள். இதற்கான புத்தரின் விளக்கத்தை மஜ்ஜிம நிகாயம், MN43-இல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
“எப்படி எதிர்காலத்தில் மறுபிறவி இல்லை? அறியாமை (மாயை) நிறுத்தப்பட்டதால்; அறிவு (விஜ்ஜா) எழுந்ததால்; ஆசை (தண்ஹா) நிறுத்தப்பட்டதால், எதிர்காலத்தில் மறுபிறவி இல்லை.”
மனிதன் மாயையின் ஆசையின் மூலம் பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற சம்சார (Saṃsāra) சுழற்சியை பற்றிக்கொண்டிருக்கும் வரை, மரணம் அவனுடைய முடிவு அல்ல. அவன் சம்சாரத்தின் கடினமான அலைகளில்—அதன் துன்பமான இயல்புடன்—தொடர்ந்து பயணிக்க வேண்டியிருக்கும்.
மாயையும், இன்ப ஆசையும், வேட்கையும் முற்றிலும் ஒழிக்கப்பட்டால்தான் சம்சார சுழற்சி நிற்கும்.
ஆதாரம்: Buddhist reflections on death and rebirth
By Rajah Kuruppu (Sunday Times Oct 22, 2025)
***
https://youtu.be/lLWsaER_8_Q?si=0eOvF3MtK69Kgjav
பாடியவர்: சையத் சுபஹான்
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
(பகல்-Dividing, separating பகுக்கை;
இகல்-பகை, மாறுபாடு, விரோதம், வக்கிரம், ஒவ்வாமை)
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் (பகல்கருதி) ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும் (பற்றா செயினும்), அவனைப் பகையாக எண்ணித் (இகல்கருதி) தீமை (இன்னா) செய்யாதிருப்பது சிறந்த குணம். (சாலமன் பாப்பையா உரை)
***
தம்மபதம் 291
பகையின் பிணைப்புகளில் சிக்கியவன், பிறருக்கு வேதனை ஏற்படுத்தி தன் மகிழ்ச்சியை நாடுகிறான்; அவன் ஒருபோதும் பகையிலிருந்து விடுபடமாட்டான்.
புத்த பகவான் கூறுகிறார்:
"தீங்கு செய்யாத மனநிலையிலே மகிழ்பவன்,
நாள் முழுவதும் பகலும் இரவும்,
எல்லா உயிர்களையும் அன்புடன் நேசிப்பவன்—
அவருக்கு யாரிடமும் பகை இல்லை."
(சங்யுத்த நிகாயம் SN10.4)
***
https://youtu.be/wLBf1mAKOv0?si=JPC_6y2q68HMMBqp
பாடியவர்: சபேஷ்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
(ஊழி-வெள்ளத்தால் உலகம் முடியுங் காலம்,விதி,முறைமை;
பெயர்-தல்-பிறழ்தல்;
சான்றாண்மை-பெருந்தன்மை;
ஆழி-கடல்)
வெள்ளத்தால் உலகம் முடியுங் காலத்தில் (ஊழி) மாற்றங்கள் நேரும்போதும் (பெயரினும்) தம் மனம் மாறுபடாமல் இருப்பவர் (தாம்பெயரார்),
சான்றாண்மை என்னும் தன்மைக்குக் கடல் (ஆழி) என்று புகழப்படுகின்றவர்.
***
வாழ்க்கையில் மேடு பள்ளங்களை அனைவரும் சந்திக்க வேண்டும். சாதாரண மனிதனும் சந்திக்க வேண்டும் சால்புடையவரும் சந்திக்க வேண்டும். அப்படி என்றால் இருவருக்கும் என்ன வித்தியாசம், சாதாரண மனிதனின் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல மனம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். சால்புடையவர் மன சமநிலையை கடைபிடிக்கிறார். அதாவது உபேட்சை உள்ளவர் (Upekkhā (பாலி) upēkṣā (சமஸ்.) Equanimity).
புத்த பகவான் கூறினார்:
"பிக்குகளே, உலகத்தைச் சுற்றி எட்டு உலகியலான நிலைகள் சுழல்கின்றன; உலகமும் அந்த எட்டு உலகியலான நிலைகளைச் சுற்றி சுழல்கிறது. அந்த எட்டு எவை? இலாபம் மற்றும் இழப்பு (gain and loss), புகழ் மற்றும் புகழ்க்கேடு (fame and disgrace), பழி மற்றும் பாராட்டு (blame and praise), இன்பம் மற்றும் துன்பம் (pleasure and pain).”
கற்றறிவில்லாத சாதாரண மனிதன் இலாபமும் இழப்பும், புகழும் புகழ்கேடும், பழியும் பாராட்டும், இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறான். அதைப் போலவே, கற்றறிவு பெற்ற சால்புடைய சீடரும் அனுபவிக்கிறார். அப்படியென்றால், கற்றறிவு பெற்ற சால்புடைய சீடருக்கும், கற்றறிவில்லாத சாதாரண மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?”
பிக்குகளே, கற்றறிவில்லாத சாதாரண மனிதன் இலாபத்தைச் சந்திக்கிறான். ‘நான் இந்த இலாபத்தைச் சந்தித்தேன்; இது நிலையற்றது, துன்பமானது, அழிவதற்குரியது’ என்று அவன் சிந்திப்பதில்லை. அவன் உண்மையாக அதை அறியவில்லை.
அவன் இழப்பையும் … புகழையும் … புகழ்கேடையும் … குற்றச்சாட்டையும் … பாராட்டையும் … இன்பத்தையும் … துன்பத்தையும் சந்திக்கிறான். ‘நான் இந்த துன்பத்தைச் சந்தித்தேன்; இது நிலையற்றது, துன்பமானது, அழிவதற்குரியது’ என்று அவன் சிந்திப்பதில்லை. அவன் உண்மையாக அதை அறியவில்லை.”
“இலாபமும் இழப்பும், புகழும் புகழ்கேடும், பழியும் பாராட்டும், இன்பமும் துன்பமும் அவர்களின் மனதை ஆக்கிரமிக்கின்றன. அவர்கள் இலாபத்தை விரும்பி, இழப்பை வெறுக்கிறார்கள். அவர்கள் புகழை விரும்பி, புகழ்கேட்டை வெறுக்கிறார்கள். அவர்கள் பாராட்டை விரும்பி, குற்றச்சாட்டை வெறுக்கிறார்கள். அவர்கள் இன்பத்தை விரும்பி, துன்பத்தை வெறுக்கிறார்கள். இவ்வாறு விருப்பமும் வெறுப்பும் நிறைந்தவர்களாக இருப்பதால், அவர்கள் பிறப்பு, முதுமை, மரணம், துயரம், புலம்பல், வேதனை, கவலை, மனக்கசப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடவில்லை என்று நான் கூறுகிறேன்.”
கற்றறிவு பெற்ற சால்புடைய சீடர் இலாபத்தைச் சந்திக்கிறார். ‘நான் இந்த இலாபத்தைச் சந்தித்தேன்; இது நிலையற்றது, துன்பமானது, அழிவதற்குரியது’ என்று அவர் சிந்திக்கிறார். அவர் உண்மையாக அதை அறிகிறார்.
அவர் இழப்பையும் … புகழையும் … புகழ்கேடையும் … குற்றச்சாட்டையும் … பாராட்டையும் … இன்பத்தையும் … துன்பத்தையும் சந்திக்கிறார். ‘நான் இந்த துன்பத்தைச் சந்தித்தேன்; இது நிலையற்றது, துன்பமானது, அழிவதற்குரியது’ என்று அவர் சிந்திக்கிறார். அவர் உண்மையாக அதை அறிகிறார்.”
“இலாபமும் இழப்பும், புகழும் புகழ்கேடும், பழியும் பாராட்டும், இன்பமும் துன்பமும் அவர்களின் மனதை ஆக்கிரமிக்கவில்லை. அவர்கள் இலாபத்தை விரும்புவதில்லை, இழப்பை வெறுப்பதில்லை. அவர்கள் புகழை விரும்புவதில்லை, புகழ்கேடுவதை வெறுப்பதில்லை. அவர்கள் பாராட்டை விரும்புவதில்லை, குற்றச்சாட்டை வெறுப்பதில்லை. அவர்கள் இன்பத்தை விரும்புவதில்லை, துன்பத்தை வெறுப்பதில்லை. இவ்வாறு விருப்பமும் வெறுப்பும் கைவிட்டதால், அவர்கள் பிறப்பு, முதுமை, மரணம், துயரம், புலம்பல், வேதனை, கவலை, மனக்கசப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்கள். அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள் என்று நான் கூறுகிறேன். இதுவே கற்றறிவு பெற்ற சால்புடைய சீடருக்கும், கற்றறிவில்லாத சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.”
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN8.6 Worldly Conditions (2nd)
***
https://youtu.be/UcICc8Eeuhs?si=Cz7RjZuShRCB4yPY
பாடியவர்: டாக்டர் கிரித்திகா கார்த்திக்
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
(வெள்ளம்-நீர்;
அனைய-ஒத்த;
மாந்தர்-மக்கள்;
உள்ளம்-ஊக்கம்)
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் (மலர்நீட்டம்) அவை நின்ற நீரின் அளவினவாகும் (அனைய), மக்களின் ஊக்கத்தை (உள்ளம்) அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
— மு. வரதராசன்
***
ஊக்கம் (வீரியம் zeal) என்பது ஆன்மீகப் பயணத்தில் முன்னேற்றம் பெறும் சக்தி.
ஊக்கம் என்பது மிகுந்த ஆற்றல் மற்றும் ஆர்வத்தின் உணர்வு. இது பல காரணங்களால் தூண்டப்படலாம் — தம்மத்தைப் படித்து, நடைமுறைப்படுத்துவதால் ஏற்படும் உறுதியான நம்பிக்கை, மிகுந்த நற்குணம் அல்லது ஞானம் கொண்ட ஒருவரால் ஊக்கமளிக்கப்படுதல், தியானத்தின் பயன்களை அனுபவித்தல், அல்லது மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மையை சிந்தித்தல் ஆகியவற்றால் ஊக்கம் உண்டாகலாம்.
புத்தர் கூறுகிறார்: "உற்சாகத்தின் மதிப்பு என்னவெனில் அது மனவலிமையை உயிர்ப்பித்து, நமக்கு ஆற்றல், நம்பிக்கை மற்றும் உறுதியை அளிக்கிறது." (M.II,175) ஆனால் அது கட்டுப்படுத்தப்படாவிட்டால், உற்சாகம் கலக்கமாக மாறி, வெறும் மனவலிமையால் எதையும் சாதிக்கலாம் என்ற தவறான நம்பிக்கையாகவும், கூடவே தீவிரவாதமாகவும் மாறிவிடும்.
புத்தர் கூறினார்: நாம் எவ்வாறு ஒரு காடையை (quail) பிடிப்போமோ, அதுபோலவே நமது ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். காடையை மிகுந்த இறுக்கமாக பிடித்தால், அதை நசுக்கி விடலாம். போதுமான இருக்கத்துடன் பிடிக்காவிட்டால், அது நமது விரல்களுக்குள் இருந்து பறந்து விடும் (MN128). வள்ளுவர் கூறும் உவமானமும் பொருந்தும். நீர்ச் செடியின் தண்டு நீரின் அளவை பொறுத்து இருக்கிறது. அதற்கு மீறியதும் இல்லை, அதைவிட குறைந்ததும் இல்லை. அதுபோல ஊக்கமும் வேண்டிய அளவு இருக்க வேண்டும்.
அதனால், ஒரு பக்கம் உற்சாகமும், மறுபக்கம் பொறுமை, ஓய்வு, மன அமைதி ஆகியவற்றிற்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும்.
ஆதாரம்: Guide to Buddhism A to Z (zeal) Bhante Shravasti Dhammika
***
https://youtu.be/VFQkVLi4mQ0?si=4UpuIgxuEYYLQr65
பாடியவர்: ஜிஜன் ஜோஸ்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
(நாடுதல்-ஆராய்தல்;
ஆளப் படும்- (சிறந்த தலைவர்களால்) பயன்படுத்தப்படுவார்.
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து (நாடி) நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
— மு. வரதராசன்
***
'தெரிந்து வினையாடல்' என்ற அதிகாரத்தில் இந்த குரள் இடம் பெறுகிறது. தெரிந்து வினை செய்வது. ஆடல் என்றால் செய்கை.
புத்த மரபில், ஒருவர் நன்மை மற்றும் தீமை ஆகியவற்றை அளந்து, நன்மையைத் தேர்ந்தெடுப்பது என்பது கன்ம மார்க்கத்தை வெளிப்படுத்துகிறது. அது ‘சேதனா’ (உள்ளுணர்வு/நோக்கம்) மூலம் இயக்கப்படுகிறது;
இதன் விளைவாக அவருக்கு எதிர்காலத்தில் நல்ல பலன்கள் — மகிழ்ச்சி அல்லது சாதகமான மறுபிறப்பு — கிடைக்கின்றன.
அப்படி நல்வினைகளை தேர்ந்தெடுத்து செய்பவரை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்?
திரிபிடக சுத்தங்கள் வெளிப்புற தோற்றம், பிறரின் கருத்து, அல்லது சமூக நிலை போன்றவற்றை மேலோட்டமாக கவனித்து அவசரமான ஒருவரைப் பற்றி முடிவு எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றன. இத்தகைய தீர்ப்புகள் பெரும்பாலும் முழுமையற்ற அறிவும், பட்சபாதங்கள் காரணமாக உருவாகின்றன; இதனால் அகங்காரம் மற்றும் தீய மனநிலைகள் தோன்றுகின்றன.
ஒருவரின் குணம், ஞானம், மன உறுதி ஆகியவை உடனடியாக வெளிப்படுவதில்லை; நீண்ட காலம் நெருக்கமாக பழகி, உரையாடி, சிரமங்களில் கவனித்தால்தான் உண்மையான தன்மையை அறிய முடியும்.
(அங்குத்தர நிகாயம் AN 4.192)
இவ்வாறு கவனித்து ஒருவரிடம் நற்குணம் இருப்பதை அறிந்த பிறகு
அவரை வேலைக்கு அமர்த்தி பொறுப்புகளையும் கொடுப்பதற்கு யாரும் தயங்க மாட்டார்கள்.
***
https://youtu.be/Q9fKmzDC6HY?si=TUlYLfFdRBSGFOhd
பாடியவர்: மோகன்லால்
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
(பாத்து-Dividing; sharing; பகுக்கை;
ஊண்-உண்கை
எஞ்சல்-குறைவு;
எஞ்ஞான்றும்-எக்காலமும்)
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
— மு. வரதராசன்
***
திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப என்ற இரு பண்புகள் சேர்ந்து காணப்படுகின்றன.
இவை இரண்டும் நற்பண்புகள். வேண்டியவை. ஐந்து சீலங்களை கடைபிடிப்பதற்கு உதவும் பண்புகள் என்று புத்தர் கூறுகிறார்.
ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது.
ஒத்தாப்ப என்றால் அக்கறையோடு இருத்தல். தவறு செய்யுமுன் அதன் விளைவுகளை நினைத்து அஞ்சுவது, அதாவது பழிக்கு அஞ்சுவது.
அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு நல்வாழ்க்கை (சம்மா ஆஜீவ). சிறந்த வழியில் வாழ்வாதாரம் தேடுதல்.
புத்தர் தனது சீடர்கள் வஞ்சகத்தோடும், கபடத்தோடும், வற்புறுத்தியும், சூழ்ச்சி செய்தும் அல்லது பிற நேர்மையற்ற வழிகளிலும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது என்கிறார்.
'பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டும்,' என்று மணக்குடவர் இந்த குரளுக்கான உரையில் குறிப்பிடுகிறார்.
"ஒழுக்கமுடைய ஒருவர், இனிய மனதோடு நேர்மையாக பெற்ற ஒரு அன்பளிப்பை, நற்செயலின் விளைவில் நம்பிக்கை உடையவராக," - ஒரு தானத்தை வழங்க வேண்டும் என்று புத்த பகவான் கூறினார் (MN 142). தருபவர் அந்த பொருளை நேர்மையாக பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தருபவர் அந்த தானத்தை மேம்படுத்துகிறார்.
***
https://youtu.be/kOaOD9ouUrw?si=ZrKwO6j2BNaVeIDG
பாடியவர்: மனோ
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
(அழுக்காறு-பிறராக்கம்பொறாமை;
அதுசாலும் – அது ஒன்றே போதும் (அவர்களை அழிக்க)
ஒன்னார் See ஒன்னாதோர்-
பகைவர்
வழுக்காயும் – இல்லாது ஒழிந்தும்
ஈன்(னு)-தல்-உண்டாக்குதல்)
பொறாமை (அழுக்காறு) உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும் (அதுசாலும்), பகைவர் (ஒன்னார்) தீங்கு செய்யத் தவறினாலும் (வழுக்காயும்) தவறாது கேட்டைத் தருவது (ஈன்பது) அது.
— மு. வரதராசன்
***
தம்மபதம் 365
பொருள் பெற்ற பிக்குவானாலும்
பிறரை இகழக்கூடாது; பொறாமையும் கொள்ளக்கூடாது.
பிறரைப் பொறாமைப்படும் பிக்கு
ஆழ்ந்த தியான நிலையை அடையமாட்டார்.
இல்லற மக்களிடமிருந்து தான் மற்றவர்களை விட அதிக பொருள் (பிக்குகளுக்கான விநய விதிகளை மீராது) ஈட்டியதால் மற்றவர்களை இகழ்க் கூடாது. தம்மை விட மற்ற பிக்குகள் அதிகப்பொருள் ஈட்டி இருந்தால் அவர்களைப் பார்த்து பொறாமையும் படக்கூடாது. அப்படி பொறாமை உள்ள மனதில் ஆழ்ந்த மன ஒரிமைப்பாடு தோன்றாது.
---
புத்த பகவான் கூறினார்:
"மனத்தின் கலங்கல்கள் என்ன?
'மற்றவர் பொருள் தமக்குரியதாகுக' என்று நினைப்பது, முறைகேடான பேராசை, பகை, கோபம், கடுமை, இகழ்ச்சி, அவமதிப்பு,
பொறாமை, கஞ்சத்தனம், வஞ்சகம், சூழ்ச்சி, பிடிவாதம்,
ஆக்கிரமிப்பு, அகம்பாவம், ஆணவம், வீண்பெருமை,
அலட்சியம் — இவை அனைத்தும் மனத்தின் கலங்கல்கள்."
இந்த பட்டியலில் பொறாமையும் அடங்கும்.
அழுக்குத் துணியில் உள்ள அழுக்கை தண்ணீரில் கழுவி எடுப்பது போல மனதில் உள்ள அழுக்காறு உட்பட்ட இந்த கலங்கங்களை நீக்க வேண்டும்.
ஆதாரம்: MN 7 Vatthasutta
***
https://youtu.be/6C2zwZqEOW8?si=geEyB11GvgXXO3Ap
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
(துஞ்சு-தல்-தூங்குதல்;
நிரப்பு-Destitution, poverty, வறுமை, குறைவு;
கண்பாடு-நித்திரை)
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் (துஞ்சலும்) முடியும், ஆனால் வறுமை நிலையில் (நிரப்பினுள்) எவ்வகையாலும் (யாதொன்றும்) கண்மூடித் தூங்குதல் (கண்பாடு) அரிது.
— மு. வரதராசன்
***
கடன்
(அங்குத்தர நிகாயம் AN 6.45)
“பிக்குகளே, இன்பங்களை நாடி வாழ்பவருக்கு, இந்த உலகில் வறுமை என்பது துன்பமே.”
“ஆம், பகவானே.”
“வறியவன், ஆதரவற்றவன், காசில்லாதவன் கடனில் விழுகிறான். இன்பங்களை நாடுபவருக்கு, கடனில் விழுவது உலகில் துன்பமே.”
“ஆம், பகவானே.”
“அந்த வறியவன், ஆதரவற்றவன், காசில்லாதவன் கடனில் விழுந்தபின் வட்டியும் செலுத்த வேண்டி வருகிறது. இன்பங்களை நாடுபவருக்கு, வட்டி செலுத்த வேண்டியது உலகில் துன்பமே.”
“ஆம், பகவானே.”
“வட்டி செலுத்த வேண்டிய அந்த வறியவன், காலத்தில் வட்டியைச் செலுத்தாவிட்டால், அவனுக்கு அறிவிப்பு (நோட்டீஸ்) அனுப்பப்படுகின்றது. இன்பங்களை நாடுபவருக்கு, அறிவிப்பு பெறுவது உலகில் துன்பமே.”
“ஆம், பகவானே.”
“அறிவிப்பு பெற்ற அந்த வறியவன், செலுத்தாவிட்டால், அவனைத் கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். இன்பங்களை நாடுபவருக்கு, நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது உலகில் துன்பமே.”
“ஆம், பகவானே.”
“அந்த வறியவன், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டும் செலுத்தாவிட்டால், அவனைப் சிறையில் வைக்கின்றனர். இன்பங்களை நாடுபவருக்கு, சிறையிலிடப்படுவது உலகில் துன்பமே.”
“ஆம், பகவானே.”
“ஆகவே, பிக்குகளே, இன்பங்களை நாடுபவருக்கு வறுமை துன்பம்;
கடனில் விழுவது துன்பம்;
வட்டி செலுத்த வேண்டியது துன்பம்;
அறிவிப்பு பெறுவது துன்பம்;
கடன் கொடுத்தவர்களால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது துன்பம்;
சிறையில் வைக்கப்படுவது துன்பம்.”
அதேபோல், பிக்குகளே திறமையான பண்புகள் சம்பந்தமாக - நம்பிக்கை இல்லாதவன்,
மனசாட்சி இல்லாதவன், பழிக்கு அஞ்சாதவன்,
முயற்சி இல்லாதவன்,
நுண்ணறிவு இல்லாதவன் —
மேன்மையானவர்களின் ஒழுக்கத்தில் வறியவன், ஆதரவற்றவன், காசில்லாதவன் என்று சொல்லப்படுகிறான்.”
“அத்தகைய வறியவன், ஆதரவற்றவன், காசில்லாதவன் —
நற்செயல்களுக்கான நம்பிக்கையில்லாமல், வெட்கமில்லாமல், பழிக்கு அஞ்சாமல், முயற்சியில்லாமல், அறிவில்லாமல் —
உடலால் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்,
வாக்கால் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்,
மனதால் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்.
இவ்வாறு அவர்கள் கடன் படுகின்றனர்.”
“உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் அவர்கள் செய்கிற தீய செயல்களை மறைக்கவே, அவர்கள் மனத்தில் தீய எண்ணங்கள் எழுகின்றன. ‘யாரும் என்னைக் கண்டுபிடிக்கக்கூடாது’ என்ற எண்ணத்தோடு அவர்கள் விரும்பி, திட்டமிட்டு, பேசி, செயல்படுகின்றனர். இதுவே அவர்கள் ‘வட்டி செலுத்துவது’ என நான் சொல்கிறேன்.”
“நல்ல மனம் கொண்ட ஆன்மீக நண்பர்கள் அவர்களைப் பற்றி இவ்வாறு சொல்வார்கள்: ‘இவர் இவ்வாறு செய்கிறார், இவ்வாறு நடக்கிறார்.’ இதுவே அவர்கள் ‘அறிவிப்பு பெறுவது’ என நான் சொல்கிறேன்.”
“அவர்கள் காட்டிற்கோ, மரத்தின் வேர் அருகிலோ, காலியான குடிலுக்கோ (தியானம் செய்ய) சென்றபோது, தன் குற்றம்பற்றி மனத்தில் வருத்தமும், திறமையற்ற எண்ணங்களும் தோன்றுகின்றன. இதுவே அவர்கள் ‘வழக்கில் நிறுத்தப்படுவது’ என நான் சொல்கிறேன்.”
“அந்த வறியவன், காசில்லாதவன் உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் தீய செயல்களைச் செய்திருக்கிறான். அவன் உடல் சிதைந்து மரணித்தபின், நரகத்திலோ மிருக உலகத்திலோ சிறைபட்டுவிடுகிறான். நரகச் சிறையோ மிருக உலக சிறையோ போல கொடூரமானதும், பயங்கரமானதும், நிப்பாண விடுதலையை அடைவதற்கு பெரிய தடையாகவும் இருக்கும் மற்றொரு சிறையை நான் கண்டதில்லை.”
***
https://youtu.be/eAe3rofYWXo?si=ptc4fgNM-s7MmgQf
பாடியவர்: கே. டி. ஜெயகுமார்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
(கெடு-கேடு;
நன்றி- நன்மை, Virtue, merit; அறம்;
தாழ்வு-வறுமை)
நடுவுநிலைமை நின்று (நடுவாக) அறநெறியில் நிலைத்து (நன்றிக்கண்) வாழகின்றவன் (தங்கியான்) அடைந்த வறுமை (தாழ்வு) நிலையைக் கேடு (கெடுவாக) என கொள்ளாது (வையாது) உலகு.
— மு. வரதராசன்
***
உண்மையான செல்வம் ஒருவரிடம் இருக்கும் வரை அவர் வறுமையில் இருந்தாலும் கேடு உண்டவராகக் கருதப்பட மாட்டார்.
செல்வம்
(அங்குத்தர நிகாயம் AN5.47)
“பிக்குகளே, ஐந்து வகையான செல்வங்கள் உள்ளன. அவை எவை?
நம்பிக்கை என்ற செல்வம், ஒழுக்கம் என்ற செல்வம், கல்வி என்ற செல்வம், தானம் என்ற செல்வம், ஞானம் என்ற செல்வம்.”
“நம்பிக்கை என்ற செல்வம் என்பது என்ன?
ஒரு மேன்மையானோரின் சீடருக்கு ததாகதரின் ஞானத்தைப் பற்றி ஆழமான நம்பிக்கை உள்ளது:
'அவர் ஒரு அருகர்,
சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றவர்,
முழுமையான அறிவும் நடத்தையும் கொண்டவர்,
நல்ல வழியில் சென்றவர்,
பிரபஞ்சத்தை அறிந்தவர், கற்பிக்கக்கூடியவருக்கான தன்னிகரற்ற பயிற்சியாளர்,
தேவர்களுக்கும் மனிதர்க்கும் ஆசிரியர்; விழிப்புற்றவர்;
ஆசிர்வதிக்கப்பட்டவர்'.
இதுவே நம்பிக்கை என்ற செல்வம் என்பதாகும்.
“ஒழுக்கம் என்ற செல்வம் என்பது என்ன? மேன்மையானோரின் சீடர் ஒருவர் எந்த உயிரையும் கொல்லுதலைத் தவிர்ப்பார், பிறர் பொருளை களவு செய்வதைத் தவிர்ப்பார், தவறான பாலியல் உறவுகளைத் தவிர்ப்பார், தவறான பேச்சு உரைப்பதைத் தவர்ப்பார், விவேகமற்ற நடத்தைக்கு எடுத்துச் செல்லும் போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்ப்பார். இதுவே ஒழுக்கம் என்ற செல்வம் என்பதாகும்.
"கல்வி என்ற செல்வம் என்பது என்ன?
“மேன்மையானோரின் சீடர் ஒருவர் மிகுந்த கல்வி பெற்றவராக இருந்து, கற்றவற்றை நினைவில் வைத்து பாதுகாத்திருப்பதே கல்வி என்ற செல்வம்.
இந்தப் போதனைகள் ஆரம்பத்திலும் நன்றாகவும், நடுவிலும் நன்றாகவும், முடிவிலும் நன்றாகவும் உள்ளன; அர்த்தமுள்ளவையும் நன்றாக வடிவமைக்கப்பட்டவையும்; முழுமையானதும் பரிசுத்தமானதுமான ஆன்மிகப் பயிற்சியை விளக்குகின்றன.
அத்தகைய போதனைகளில் அவர் மிகுந்த கல்வி பெற்றவர்; அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு, ஓதிக் கொண்டு, மனதில் ஆராய்ந்து, கருத்தால் ஊடுருவிப் புரிந்துகொள்கிறார்.
இதுவே கல்வி என்ற செல்வம் என்பதாகும்."
"தானம் என்ற செல்வம் என்பது என்ன? மேன்மையானோரின் சீடர் ஒருவர் உலோபத்தனம் என்ற கறையற்று தனது வீட்டில் வாழ்கிறார். அவர் ஒரு தார்மிகன், கொடையாளி, கொடை செய்வதற்கு ஏக விருப்பம் உள்ளவர், உதவி கேட்கப்படும் போது உதவ விருப்பம் உள்ளவர், உணவு தானம் அளிப்பதற்கு பெரும் மகிழ்ச்சி கொள்பவர். இதுவே தானம் என்ற செல்வம் என்பதாகும்."
"ஞானம் என்ற செல்வம் என்பது என்ன? மேன்மையானோரின் சீடர் ஒருவர் நுண்ணறிவுடையவர், காரணங்களால் தோன்றிய எதுவும் தோன்றி மறையும் தன்மையுடையவை என்கின்ற மேன்மையான ஆழ்ந்த அறிவை, துக்கத்தின் முடிவுக்கு எடுத்துச் செல்லும் ஞானத்தை கொண்டவர். இதுவே ஞானம் என்ற செல்வம் என்பதாகும்."
இவையே ஐந்து வகையான செல்வங்கள்.
***
https://youtu.be/91yEpUVvuXs?si=GSB8MZ9-U6YuOG29
பாடியவர்: ஸ்ரீராமன்
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
(அறத்தின்-அறத்தை காட்டிலும்;
ஊங்கு-உயர்வு,
ஆக்கமும்-மேன்மையும்;
மறத்தலின்-மறந்து போவதை விட;
கேடு-கெடுதி)
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
— மு. வரதராசன்
***
"அஜான் சா இங்கு இல்லை" என்ற புத்தகத்திலிருந்து.
கன்மம்
நல்ல செயல்கள் நல்ல விளைவுகளைத் தரும்; தீய செயல்கள் தீய விளைவுகளைத் தரும். கடவுள் உங்களுக்காகச் செயல் புரிவாரென்றோ, தேவதைகளோ, காவல் தெய்வங்களோ உங்களைப் பாதுகாப்பார்கள் என்றோ நல்ல நேரம் உங்களுக்குத் துணை நிற்கும் என்றோ நினைக்காதீர்கள். இவையெல்லாம் உண்மை இல்லை. இவற்றை நம்பினால் நீங்கள் துக்கம் அனுபவிப்பீர்கள். அப்படி நம்பினால் எப்போதுமே சரியான நாளுக்காவோ, மாதத்திற்காகவோ, ஆண்டுக்காகவோ தேவதைகளுக்காகவோ, தேவதூதருக்காகவோ காத்திருப்பீர்கள். அவ்வாறு செய்வதால் துக்கம் தான் அனுபவிப்பீர்கள். உங்கள் செயல்களையும், பேச்சையும் கன்மச் செயல்களையும் கவனியுங்கள். நல்லது செய்தால் நன்மை பெறுவீர்கள். கெட்டது செய்தால் தீமை அடைவீர்கள்.
---
நல்ல பயிற்சியினால் பழைய கன்மத்தின் விளைவுகளை படிப்படியாகக் குறைத்து விடலாம். செயல்கள் எப்படித் தோன்றி மறைகின்றன என்று தெளிவான பின் அவைகளை அறிந்து அவைகளின் இயல்பான வழியில் செல்ல விடுங்கள். இது இரண்டு மரங்களை வளர்ப்பதுபோல: ஒரு மரத்திற்கு உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சி, மற்ற மரத்தைக் கவனிக்கவில்லை யென்றால், எந்த மரம் வளரும் எந்த மரம் சாகும் என்பதில் சந்தேகமே இலலைத்தானே?
(அஜான் சா 1918- 1992 தாய்லாந்து நாட்டில் வாழ்ந்த புகழ் பெற்ற பிக்கு.)
***
https://youtu.be/ATh7Xpuxp1A?si=KVQm5ANEoaFOCWCa
பாடியவர்: கிருஷ்ணராஜ்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
(மனை-வீடு,இல்வாழ்க்கை
மாட்சி-மகிமை
இல்லாள்-மனைவி)
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு (மனைமாட்சி) மனைவியிடம் (இல்லாள்) இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு (எனை) சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
— மு. வரதராசன்
***
திருமணம் என்பது ஆதிக்கமும் கீழ்ப்படிதலும் அடிப்படையாகக் கொண்டது அல்ல; பரஸ்பர அக்கறையும் மரியாதையும் அடிப்படையாகக் கொண்டது (பாந்தே சுஜாதோ குறிப்பு).
கணவனின் கடமைகள் மற்றும் மனைவியின் கடமைகள் பற்றி புத்த பகவான் கூறியது.
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
"மனைவியை ஐந்து வகையாகக் கணவன் போற்றலாம். அவளுக்குக் கௌரவம் அளிக்க வேண்டும். நயமாக அவளோடு பழகவேண்டும். அவளுக்கு விசுவாசமாயிருக்க வேண்டும். அவளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். நகை நட்டுக்களை, மலர்கள் வழங்க வேண்டும்.
கணவனால் போற்றப்பட்ட மனைவி ஐந்து வகையில் தன் அன்பைக் காட்ட வேண்டும். தன் கடமையை நன்றாகச் செய்ய வேண்டும். பணியாட்கள் முதலியோரை உபசரிக்க வேண்டும். விசுவாசம் உடையவளாயிருக்க வேண்டும். கணவனுடைய சம்பாத்தியத்தைப் பாதுகாக்க வேண்டும். சகலவிதமான விவகாரங்களிலும் அவள் திறமையும் முயற்சியும் உடையவளாயிருக்க வேண்டும்."
தமிழாக்கம்:
நவாலியூர் சோ. நடராசன்
தீக நிகாயம் நீண்ட போதனைகள்
DN31 Advice to Sigālaka
***
https://youtu.be/9qKaaqYI69M?si=oFCsqcrcUtJ2Auvg
பாடியவர்: வர்ஷன்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
(ஆற்றல்-Abundance, copiousness; மிகுதி.
அரிது rare, precious; அருமையானது.
ஆற்றல் அரிது-மிகுந்த மதிப்பை, அரிதான தன்மை)
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
— மு. வரதராசன்
***
மழையற்ற மேகம்
இதை புத்த பகவான், பரிபூரணரானவர் கூறினார் — நான் இவ்வாறு கேட்டேன்.
“பிக்குகளே, உலகில் மூன்று வகையான மனிதர்கள் காணப்படுகிறார்கள்.
எந்த மூன்று?
மழையற்ற மேகத்தைப் போன்றவர்,
ஒரு இடத்திலே மட்டும் மழை பொழிபவர்,
எங்கும் பரவலாக மழை பொழிவவர்.”
“ஒரு மனிதர் எவ்வாறு மழையற்ற மேகத்தைப் போன்றவர்?
யாருக்கும் எதையும் கொடுக்காதபோது —
சமணர்களாக இருந்தாலும், சான்றோர்களாக இருந்தாலும்,
ஏழைகளாக இருந்தாலும், அலைந்து திரிபவர்களாக இருந்தாலும்,
யாசகர்களாக இருந்தாலும், பிச்சைக்காரர்களாக இருந்தாலும் —
உணவு, பானம், உடை, வாகனம்;
மாலைகள், வாசனைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள்;
படுக்கை, வீடு, விளக்குகள் போன்றவற்றில் எதையும் கொடுக்காதவர்.
இவ்வாறே ஒருவர் மழையற்ற மேகத்தைப் போன்றவர்.”
"ஒரு மனிதர் எவ்வாறு ‘ஒரு இடத்திலே மட்டும் மழை பொழிவவர்’ எனப்படுகிறார்?
சிலருக்குக் கொடுத்து, சிலருக்குக் கொடுக்காதபோது — சமணர்களாக இருந்தாலும், சான்றோர்களாக இருந்தாலும்,
ஏழைகளாக இருந்தாலும், அலைந்து திரிபவர்களாக இருந்தாலும்,
யாசகர்களாக இருந்தாலும், பிச்சைக்காரர்களாக இருந்தாலும் —
உணவு, பானம், உடை, வாகனம்;
மாலைகள், வாசனைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள்;
படுக்கை, வீடு, விளக்குகள் போன்றவற்றில் சிலருக்குக் கொடுத்து, சிலருக்குக் கொடுக்காதவர்.
இவ்வாறே ஒருவர் ‘ஒரு இடத்திலே மட்டும் மழை பொழிவவர்’ எனப்படுகிறார்.”
“ஒரு மனிதர் எவ்வாறு ‘எங்கும் மழை பொழிவவர்’ எனப்படுகிறார்?
அவர் எல்லோருக்கும் கொடுக்கும்போது —
சமணர்களாக இருந்தாலும், சான்றோர்களாக இருந்தாலும்,
ஏழைகளாக இருந்தாலும், அலைந்து திரிபவர்களாக இருந்தாலும்,
யாசகர்களாக இருந்தாலும், பிச்சைக்காரர்களாக இருந்தாலும் —
உணவு, பானம், உடை, வாகனம்;
மாலைகள், வாசனைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள்;
படுக்கை, வீடு, விளக்குகள் போன்றவற்றை எல்லோருக்கும் வழங்குபவர்.
இவ்வாறே ஒருவர் ‘எங்கும் மழை பொழிவவர்’ எனப்படுகிறார்.
இவ்வாறு, உலகில் காணப்படும் மூன்று வகையான மனிதர்கள் இவர்கள்.”
ஆதாரம்: இதிவுத்தக Itivutakka So It Was Said - Iti75
***
https://youtu.be/rvHySD3NNTc?si=YTkL_68PH5zDOwct
பாடியவர்: சந்தோஷ் சுப்பிரமணியம்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
(மு. கருணாநிதி)
***
'வேண்டுதல் வேண்டாமை இலான்,' என்று இங்கு கூறப்படுவது எதையும்
விழைதலும் வெறுப்பதும் இல்லாது, சம நிலையில் நிலைபெற்றிருக்கும்
புத்தரையே குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை. அத்தகைய புத்தரின்
கமலபாதங்களை சரணமாக ஏற்றிருப்போருக்கு - 'யாண்டும் இடும்பை இல'
- எக்காலத்துக்கும் பிறவி துன்பங்கள் உளவாகா என்பது இங்கு கருத்து. (ஓ.ரா.ந. கிருஷ்ணன் உரை)
தம்மபதம் 418
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்கள்,
சாந்தமடைந்தவர்கள்,
உலக நிலைகளால் அசைக்கப்படாதவர்கள் —
இவர்களையே நான் சான்றோர்கள் என்று அழைக்கிறேன்.
Those who cease to set up like against dislike, who are cooled, who are not swayed by worldly conditions – these I call great beings.
வேண்டுதல் வேண்டாமை மிக வேகமாக எழலாம்; அவற்றை நாம் கட்டுப்படுத்த முடியாதது போலத் தோன்றலாம்.
யாராவது இனிமையான வார்த்தை சொன்னால், அவர் வேண்டியவராகிறார்.
மற்றொருவர் காயப்படுத்தும் வார்த்தை சொன்னால், அவர் வேண்டாதவராகிறார்.
வேண்டுதல் வேண்டாமை மனதில் எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மைதான்.
ஆனால் நாம் கொஞ்சம் பொறுமையாக பார்த்தால், உண்மையில் நமக்கொரு தேர்வு இருப்பதை கவனிக்கலாம் —
அந்தப் வேண்டுதல் வேண்டாமையை பின்பற்றலாமா, வேண்டாமா;
அவற்றிலிருந்து ‘நான்’ என்ற உணர்வை உருவாக்கலாமா, வேண்டாமா என்பது நம் கட்டுப்பாட்டில் உள்ளதை கவனிக்கலாம். நமக்குள் விருப்பு வெறுப்பு தோன்றுமானால் அவற்றை நாம் தொடர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை. பொறுமையாக இருந்தால் அவை தோன்றி, நிலைத்து, மறைவதை கவனிக்கலாம்.
(அஜான் முணிந்தோ தம்ம பாதம் உரையை ஆதாரமா கொண்டது.)
புத்த பகவான் கூறினார்:
"உலகத்தைச் சுற்றி எட்டு உலகியலான நிலைகள் சுழல்கின்றன; உலகமும் அந்த எட்டு உலகியலான நிலைகளைச் சுற்றி சுழல்கிறது. அவை
இலாபம் மற்றும் இழப்பு (gain and loss), புகழ் மற்றும் புகழ்க்கேடு (fame and disgrace), பழி மற்றும் பாராட்டு (blame and praise), இன்பம் மற்றும் துன்பம் (pleasure and pain).
(கற்றறிவு பெற்ற சால்புடைய சீடர்கள் பற்றி:)
"இலாபமும் இழப்பும், புகழும் புகழ்கேடும், பழியும் பாராட்டும், இன்பமும் துன்பமும் அவர்களின் மனதை ஆக்கிரமிக்கவில்லை. இவை நிலையற்றது, துன்பமானது, அழிவதற்குரியது’ என்று அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் உண்மையாக அதை அறிகின்றனர்.
அவர்கள் இலாபத்தை விரும்புவதில்லை, இழப்பை வெறுப்பதில்லை. அவர்கள் புகழை விரும்புவதில்லை, புகழ்கேடை வெறுப்பதில்லை. அவர்கள் பாராட்டை விரும்புவதில்லை, குற்றச்சாட்டை வெறுப்பதில்லை. அவர்கள் இன்பத்தை விரும்புவதில்லை, துன்பத்தை வெறுப்பதில்லை. இவ்வாறு விருப்பமும் வெறுப்பும் கைவிட்டதால், அவர்கள் பிறப்பு, முதுமை, மரணம், துயரம், புலம்பல், வேதனை, கவலை, மனக்கசப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்டவர்கள். அவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள் என்று நான் கூறுகிறேன்."
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN8.6 Worldly Conditions (2nd)
***
https://youtu.be/bJowDUQZu9E?si=p25cPVyyG09VyhHe
பாடியவர்: அமிர்தவர்ஷினி
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.
(ஆறு-வழி;
அறத்தாற்றின்-அறத்தின் வழியில்;
ஆற்று-நடத்து, உ.ம்.-"உரையாற்றுதல்";
ஆற்றின்-நடத்தினால்;
புறத்தாற்றில்-புற வழியில்;
எவன்-என்ன,யாது)
ஒருவன் அறநெறியில் (அறத்தாற்றின்) இல்வாழ்க்கையைச் செலுத்தி (ஆற்றின்) வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் (புறத்தாற்றில்) சென்று பெறத்தக்கது என்ன (எவன்)?
— மு. வரதராசன்
***
இல்வாழ்வோர் அறத்தை (தம்மத்தை) எப்படி கடைப்பிடிப்பது? அஜான் சா தந்த அறிவுரை. (ஒரு பகுதி மட்டும்)
அறம் தழுவிய இல்வாழ்க்கை
அஜான் சா Ajahn Chah
Living in the World with Dhamma
பெரும்பாலோருக்குத் தியானப் பயிற்சியின் சாராம்சம் விளங்குவதில்லை. அவர்கள் நடந்து தியானிப்பது, உட்கார்ந்து தியானிப்பது, அறத்தைக் கேட்பது ஆகியவற்றை மட்டுமே பயிற்சி என்று நினைக்கின்றனர். இவையும் பயிற்சி தான், ஆனால் இவை பயிற்சியின் புறத் தோற்றங்களே. உண்மையான பயிற்சி, மனம் ஒரு புலன் பொருளைச் சந்திக்கும் போது நடைபெறுகிறது. மக்கள் நமக்குப் பிடிக்காததைச் சொல்லும் போது அங்கு மனக்கசப்பு உண்டாகிறது, அவர்கள் நமக்குப் பிடித்ததைக் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இது தான் பயிற்சி செய்ய நல்ல இடம். இவற்றோடு எப்படிப் பயிற்சி செய்வது? இது மிகவும் முக்கியமான விவரம். மகிழ்ச்சியைத் தொடரவும், துன்பத்தைத் தவிர்க்கவும் ஓடிக் கொண்டிருந்தால் நாம் சாகும் வரை பயிற்சி செய்தாலும் அறத்தைக் காண முடியாது. இது பயனற்றது. இன்பமும் துன்பமும் எழும் போது நாம் எப்படி அறத்தைப் பயன்படுத்தி அவற்றிடமிருந்து விடுதலை பெறுவது? இதுவே பயிற்சியின் நோக்கம்.
பொதுவாக மக்கள் தங்களுக்குப் பிடிக்காத ஒன்றைச் சந்தித்தால் அதனைத் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்வதில்லை. உதாரணமாக மக்கள் குறை கூறப்பட்டால்: "என்னைத் தொந்தரவு செய்யாதே! என்னை ஏன் குறை கூறுகிறாய்?" என்பார்கள். இது ஒருவர் தம் மனத்தை மூடிக் கொண்டதற்குச் சமம். ஆனால் இது தான் பயிற்சி செய்யச் சரியான இடம். நம்மை யாராவது குறை கூறினால் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கள் உண்மையைப் பேசுகின்றனரா என்று கவனிக்க வேண்டும். நாம் திறந்த மனநிலையோடு அவர்கள் சொல்வதைப் சிந்திக்க வேண்டும். அவர்கள் சொல்வதும் சரியாகத் தோன்றலாம், நமக்குள்ளே குறை இருக்கலாம். அவர்கள் சொல்வது சரியென்றாலும் நாம் உடனே கோபித்துக் கொள்கிறோம். மக்கள் நமது குறைகளைச் சுட்டிக் காட்டினால் அந்தக் குறைகளை அகற்றி நம்மை மேன்மைப் படுத்த வேண்டும். அறிவாளிகள் இப்படித்தான் பயிற்சி செய்வார்கள்.
எங்கு குழப்பம் இருக்கிறதோ அங்கு தான் அமைதி பிறக்க வாய்ப்பு இருக்கிறது. குழப்பத்தை அறிந்து அதனை ஊடுருவி விட்டால் மிஞ்சுவது அமைதியே. குறை கூறப்பட்டால் சிலரால் அதனை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, அவர்கள் அகந்தையுள்ளவர்கள். மாறாகத் திரும்பி வாதாடுவார்கள். குறிப்பாகப் பெரியவர்கள் குழந்தைகளோடு பேசும் போது இதைக் கவனிக்கலாம். சில சமயம் குழந்தைகள் அறிவார்ந்த வார்த்தைகளைக் கூறுவார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் தாயாராக இருந்தால் விட்டுக் கொடுக்க முடிவதில்லை. நீங்கள் ஆசிரியராக இருந்தால் உங்கள் மாணவர்கள் உங்களுக்குத் தெரியாததைச் சொல்லி விட்டால் நீங்கள் ஆசிரியரென்பதால் உங்களுக்கு அதைக் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இது சரியான எண்ணப்போக்கு அல்ல.
புத்தரின் காலத்தில் அவருக்கு மிக கூர்மையான அறிவுள்ள ஒரு சீடர் இருந்தார். ஒரு முறை புத்தர் அறத்தைப் போதித்துக் கொண்டு இருந்த போது இந்தச் சீடரை நோக்கி, "சாரிபுத்திரா, நான் போதிப்பதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார். சாரிபுத்திரர், "இல்லை, இன்னமும் நான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை," என்று பதில் அளித்தார். புத்தர் அவர் பதிலைப் போற்றினார். "மிகவும் நல்லது, சாரிபுத்திரா, உனக்கு மெய்யற்றிவு உள்ளது. மெய்யறிவு உள்ளவன் உடனே எதையும் நம்பி விடுவதில்லை, திறந்த மனத்தோடு கேட்டுவிட்டுக் கேட்டதின் உண்மையைப் சிந்தித்த பின்னரே அதை நம்புவதா இல்லயா என்று முடிவு செய்ய வேண்டும்."
இங்கு புத்தர் எடுத்துக்காட்டான நல்ல ஆசிரியராகத் திகழ்கிறார். போற்றுதற்குரிய சாரிபுத்திரர் சொன்னது உண்மை தான். அவரது உண்மையான உணர்ச்சிகளோடு பேசினார். சிலர் அந்தப் போதனையை நம்பாதது ஆசிரியரின் அதிகாரத்தைத் தட்டிக் கேட்பது போல உள்ளது என்பார்கள். அப்படிச் சொல்வதற்கு அச்சப் படுவார்கள். அவர்கள் ஆசிரியர் சொன்னதை ஏற்றுக் கொள்வது போலத் தலையசைத்திருப்பார்கள். இதுதான் உலக வழி. ஆனால் புத்தர் சினப்படவில்லை. தவறானதாகவோ கெட்டதாகவோ இல்லாதவரை அத்தகையவற்றை பற்றி நாம் வெட்கப்பட வேண்டியதில்லை என்றார். நாம் ஒன்றை நம்பாத போது, நாம் நம்பவில்லை என்று சொல்வதில் தவறேதும் இல்லை. எனவே தான் போற்றுதற்குரிய சாரிபுத்திரர் "இன்னமும் நான் இதை ஏற்றுக் கொள்ளவில்லை," என்றார். புத்தர் அவரைப் புகழ்ந்தார். "இந்தத் துறவிக்கு மெய்யறிவு உள்ளது. அவர் ஒன்றைப் சிந்தித்த பின்னரே அதை ஏற்றுக் கொள்கிறார்." இங்கு புத்தரின் நடத்தை மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் ஒரு உதாரணமாக விளங்குகிறது. சில சமயம் சிறு குழந்தைகளிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். கண்மூடித்தனமாக நம் பதவியின் அதிகாரத்தோடு பற்றுக் கொள்ளக் கூடாது.
நின்று கொண்டிருந்தாலும், உட்கார்ந்து கொண்டிருந்தாலும் பல இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தாலும் நீங்கள் சுற்றுச் சூழலை ஆராய வேண்டும். இயற்கையான வழியில் ஆராய வேண்டும், சுற்றியுள்ள காட்சிகள், சப்தங்கள், நுகர்வுகள், உணர்ச்சிகள் அல்லது எண்ணங்கள் அனைத்துக்கும் வழிவிட்டுத் திறந்த மனத்தோடு இருக்க வேண்டும். அறிவாளி இவை அனைத்தையும் சிந்திக்கின்றார். உண்மையான பயிற்சியில், மனத்தைச் சுமையாக அழுத்தும் கவலைகள் எதுவும் இல்லாத நிலைக்கு வந்து சேருகிறோம்.
பிடித்ததும், பிடிக்காததும் மனத்தில் எழும் போதே அவற்றைத் தெரிந்து கொள்ளவில்லையென்றால், நமது மனத்தில் எதோ கவலைகள் இருக்கின்றன என்று பொருள். இவற்றின் உண்மை விளங்கி விட்டால், "இந்த இன்பமான உணர்ச்சியில் ஒன்றும் இல்லை. இது வெறும் உணர்ச்சியே, தோன்றி மறையும் தன்மை கொண்டது. ஏன் பெரிது படுத்தவேண்டும்?"என்று ஒதுக்கி விடுவோம். இன்பமும், துன்பமும் நம்முடைய உடைமைகள் என்று நினைத்தால் நமக்குப் பிரச்சனைகள் உண்டாகும். பிரச்சனையோ, கேள்வியோ தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். நம்மால் அதைத் தாண்டிப் போக முடியாது. பெரும் பாலானோருக்கு நிலைமைகள் இப்படித்தான் இருக்கின்றன.
ஆனால் இக்காலத்தில் அறத்தைக் கற்பிக்கும் போது மனதைப் பற்றிப் பேசுவதில்லை. வாய்மையைப் பற்றிப் பேசுவதில்லை. வாய்மையைப் பற்றிப் பேசினால் மக்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. அவர்கள்,"அவருக்கு நேரமும், இடமும் புரியவில்லை. இனிமையாக அவருக்குப் பேசத் தெரியவில்லை." என்கிறார்கள். ஆனால் மக்கள் வாய்மையைக் கேட்க வேண்டும். உண்மையான ஆசிரியர் தன் நினைவுகளிலிருந்து (memory) மட்டுமே பேசுவதில்லை. அவர் உண்மையைப் பேசுகிறார். சமுதாயத்தில் மக்கள் பொதுவாக நினைவுகளிலிருந்துதான் (படித்ததை, கேட்டதை) பேசுகின்றார்கள், மேலும் தங்களையே மேம்படுத்தும் வகையிலேயே பேசுகின்றார்கள். உண்மையான துறவி அப்படிப் பேசுவதில்லை, உண்மையையே பேசுகிறார், உள்ளது உள்ளவாறே பேசுகிறார்.
எவ்வளவு தான் உண்மையை விளக்கிக் கூறினாலும் மக்கள் புரிந்து கொள்வதற்குக் சிரமப்படுகின்றனர். அறத்தைப் புரிந்து கொள்வது கடினம். அறத்தைப் புரிந்து கொண்டால் அதன்படி பயிற்சி செய்ய வேண்டும். துறவியாக இருந்து பயிற்சி செய்வது தான் சரியான சூழ்நிலை யென்றாலும் துறவியாக வேண்டுமென்பது கட்டாயமில்லை. உண்மையிலேயே பயிற்சி செய்ய உலகத்திலுள்ள குழப்பங்களை, குடும்பத்தை, உடமைகளைக் கைவிட்டுக் காடுகளுக்கு செல்ல வேண்டும். இவையே பயிற்சி செய்ய உகந்த சூழல்.
ஆனால் இன்னமும் குடும்பமும் பொறுப்பும் இருக்கும் போது எப்படிப் பயிற்சி செய்வது? சிலர் இல்லற வாழ்வில் இருந்துக் கொண்டு பயிற்சி செய்வது முடியாத காரியம் என்கின்றனர். யார் பெரும்பான்மையினராக இருக்கின்றனர் என்று நினைத்துப் பாருங்கள், துறவிகளா? இல்லறத்தாரா? இல்லற மக்களே பெரும்பான்மையினர். துறவிகள் மட்டும் பயிற்சி செய்து, இல்லற மக்கள் பயிற்சி செய்யவில்லை யென்றால் நிறையக் குழப்பங்கள் வரும். துறவிகள் தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பது தவறான புரிதல். "நான் துறவியாக முடியாது..." என்கின்றனர். துறவியாவது என்பது நோக்கமில்லை! துறவியாகியும் பயிற்சி செய்யவில்லை யென்றால் அதில் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்கு அறத்தை உண்மையிலேயே புரிந்திருந்தால் நீங்கள் எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், ஆசிரியாராக இருந்தாலும், மருத்துவராக, அரசாங்க ஊழியராக அல்லது எவரானாலும் அறப் பயிற்சியைத் தினமும் ஒவ்வொரு நிமிடமும் செய்யலாம்.
இல்லறத்தாராக இருந்து பயிற்சி செய்ய முடியாது என்று நினைத்தால் நீங்கள் புத்த மார்க்கத்தை மறந்து விட்டீர்கள் என்று பொருள். மற்ற காரியங்களைச் செய்வதற்கு எப்படி மக்களுக்கு ஊக்கம் இருக்கிறது? அவர்களுக்கு ஏதாவது தேவைப்படுவதாக தெரிந்தால் அதைக் பெருவதற்கு முயற்சிக்கின்றனர். போதுமான அளவு விருப்பம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். சிலர் "எனக்கு அறத்தைப் பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லை," என்பார்கள். நான், "பின், மூச்சு விட உங்களுக்கு எப்படி நேரம் கிடைத்தது?" என்று கேட்பேன். மூச்சு மக்களின் உயிர் காக்க அவசியம். அறமும் தங்கள் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை அறிந்தால் மூச்சுக்குச் சமமாக அதனைக் கருதுவார்கள்.
அறத்தைப் பயிற்சி செய்வதற்கு நீங்கள் இங்கும் அங்கும் ஓடத் தேவையில்லை. பயிற்சி செய்து களைப்படைய வேண்டியதில்லை. உங்கள் மனத்தில் எழும் உணர்ச்சிகளைக் கவனிக்க வேண்டும். கண் உருவத்தைப் பார்க்கும் போது, காது சப்தங்களைக் கேட்கும் போது, மூக்கு வாசனையை நுகரும் போது தோன்றும் உணர்ச்சிகள் எல்லாம் மனதில் எழுகின்றன. மனம் இவற்றை உணரும் போது என்னவாகிறது? அந்தப் பொருளைப் பிடித்திருந்தால் நமக்கு இன்பம் உண்டாகிறது, பிடிக்கவில்லையென்றால் நாம் துன்பம் அனுபவிக்கிறோம். அவ்வளவு தான்.
ஆக இந்த உலகத்தில் எங்கு மகிழ்ச்சியைக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்? உங்களிடம் எல்லோரும் இனிமையான விஷயங்களை மட்டுமே சொல்வார்கள் என்று எதிர்பார்க்கின்றீர்களா? அது நடைமுறைக்குச் சாத்தியமா? இல்லை. அது சாத்தியம் இல்லை. அது சாத்தியம் இல்லாத போது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? உலகம் இது போலத்தான். நாம் உலகைப் புரிந்து கொள்ள வேண்டும் - 'லோகவிது' - இந்த உலகின் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். உலகை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். புத்தர் இந்த உலகில் தான் வாழ்ந்தார், வேறெங்கும் இல்லை. அவர் குடும்ப வாழ்க்கையை அனுபவித்தார். ஆனால் அதன் குறைபாடுகளை அறிந்து அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்போது இல்லறமக்களாகிய நீங்கள் எப்படிப் பயிற்சி செய்யப் போகின்றீர்கள்? பயிற்சி செய்ய வேண்டும் என்றால் மார்க்கத்தைத் தொடர முயற்சி எடுக்க வேண்டும். பயிற்சியை விடாமல் தொடர்ந்தால் நீங்களும் இந்த உலகத்தின் குறைபாடுகளை அறிந்து அதன் மீதான மோகத்தை விட்டு விட முடியும்.
(அஜான் சா 1918- 1992 தாய்லாந்து நாட்டில் வாழ்ந்த புகழ் பெற்ற பிக்கு.)
***
https://youtu.be/GSzjr3p60ig?si=-gzyjSuJ_O6eflcE
பாடியவர்: திஷா பிரகாஷ்
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
(பல்லவை-பலபொருள்;
நல்லவையுள்- நல்ல அவையுள்;
நன்கு-நல்லது;
செல்(லு)-தல்-போதல்;
செலச்சொல்லாதார்-போக வேண்டிய வழிகாட்டாதவர்)
நல்ல அறிஞரின் அவையில் (நல்லவையுள்) நல்லப் பொருளைக் (நன்கு) கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர் (செலச்சொல்லாதார்), பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
— மு. வரதராசன்
***
உதாயீயுடன் With Udāyī
இவ்வாறு நான் கேள்வியுற்றேன்.
ஒரு சமயம் புத்த பகவான் கோசம்பியில், கோஷிதராமத்தில் தங்கியிருந்தார்.
அந்த நேரத்தில், பெரும் எண்ணிக்கையிலான இல்லறவாசிகள் சூழ்ந்து கொண்டிருக்க, மதிப்பிற்குரிய உதாயீ அமர்ந்தவாறு தம்மத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த மதிப்பிற்குரிய ஆனந்தர் பகவானிடம் சென்றார், வணங்கி, ஓரமாக அமர்ந்து, அவரிடம் இவ்வாறு கூறினார்:
“அய்யா, மதிப்பிற்குரிய உதாயீ பெரும் எண்ணிக்கையிலான இல்லறவாசிகள் சூழ்ந்திருக்க தம்மத்தை உபதேசித்து வருகிறார்.”
“ஆனந்தா, பிறருக்கு தம்மத்தை போதிப்பது எளிதல்ல. பிறருக்கு தம்மத்தை போதிப்பதற்கு முன், நீ உன் உள்ளத்தில் ஐந்து விஷயங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஐந்து எவை?”
“‘நான் படிப்படியாக போதிப்பேன்’ என்று எண்ணி தம்மத்தை போதிக்க வேண்டும்…
‘என் முறையை விளக்கிக் காட்டி போதிப்பேன்’ என்று எண்ணி போதிக்க வேண்டும்…
‘கண்ணோட்டத்துடன் (இரக்க உணர்வோடு) போதிப்பேன்’ என்று எண்ணி போதிக்க வேண்டும்…
‘இரகசியமாக இலாபம் பெற வேண்டும் என்ற ஆசையுடன் நான் போதிக்க மாட்டேன்’ என்று எண்ணி போதிக்க வேண்டும்…
‘எனக்கும் பிறருக்கும் தீங்கு விளையாமல் போதிப்பேன்’ என்று எண்ணி போதிக்க வேண்டும்.”
“ஆனந்தா, பிறருக்கு தம்மத்தை போதிப்பது எளிதல்ல. ஆகவே, பிறருக்கு தம்மத்தை போதிப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களையும் உன் உள்ளத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.”
ஆதாரம்: அங்குத்தர நிகாயம்
AN 5.159 உதாயீயுடன் With Udāyī
***
https://youtu.be/_g7QU8AFnYA?si=kx2Wr6WmEYznD6Me
பாடியவர்: ஆதித்யா சாய் கிருஷ்ணன்
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி), அறியாமை (மயக்கம்) ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் (நாமம்) கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் (நோய்) வராமற் கெடும்.
— மு. வரதராசன்
***
புத்த பகவான் கூறினார்:
“பிக்குகளே, கம்மம் உருவாகுவதற்கான மூன்று காரணங்கள் உள்ளன. அவை எவை?
காமம் (லோபம்/பேராசை) கம்மம் உருவாகுவதற்கான ஒரு காரணம்;
வெகுளி (தோசம்/வெறுப்பு) கம்மம் உருவாகுவதற்கான ஒரு காரணம்;
மயக்கம் (மோகம்/அறியாமை) கம்மம் உருவாகுவதற்கான ஒரு காரணம்.
....அந்த கம்மம் எங்கு பழுத்து விளைவதோ, அங்கேயே அதன் பயனை ஒருவர் அனுபவிக்கிறார் — இந்த வாழ்க்கையிலோ, அடுத்த பிறவியிலோ, அல்லது பின்னர் ஏதாவது வேறு சமயத்திலோ.”
(ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN3.34)
மணிமேகலையில் பிறவி சுழற்சிக்கான காரணம் காமம், வெகுளி, மயக்கம் என்றும் அவற்றை நீக்க வழியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிமேகலை
(அறவண அடிகள் பிறவி சுழற்சியை விளக்கிய பிறகு கூறுகிறார்..)
...
யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசியென
தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதையென் றறிந்து
திருந்துநல் உணர்வாற் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கென்று..
(மணிமேகலை காதை 30, வரிகள் 252-260)
பொருள்:
பற்று (காமம்) அறுத்திட நமது கருத்து (perception), எண்ணங்கள் (thoughts) காட்சிகளில் (views) உள்ள
அநித்தம் (நிலையாமை), துக்கம், அநான்மா (சாரமின்மை), அசுத்தம்
பற்றிய தவறான பார்வையை (பொள்ளா காட்சி wrong view) நேர் செய்ய வேண்டும்.
பற்று தோன்ற காரணம்:
நிலையற்றதை நிலையானதாகக் கருதுதல்.
துக்கத்தைச் மகிழ்ச்சி என்று கருதுதல்.
சாரமின்மையை சாரம் உள்ளதாக (நான், எனது, என உயிர் என்று) கருதுதல்.
அசுத்தத்தை அழகாகக் கருதுதல் (AN4.49).
விபாசன தியானம் மூலம் ஞானத்தை வளர்த்துக்கொண்டு பற்றை குறைத்துக் கொள்ளலாம்.
வெறுப்பு (செற்றம்/வெகுளி) போக்கிட
மைத்திரி (அன்பு/மெத்தா) கருணா, முதிதை (மற்றவர் வெற்றி கண்டு மகிழ்வது) தியானங்கள் செய்ய வேண்டும்.
மயக்கம் போக்கிட:
'சுருதி, சிந்தனா, பாவனா, தரிசனை
கருதி உய்த்த'லென்றால் (உரைகளின் படி)
சுருதியாவது அறவுரைகேட்டல், சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல். பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல். தரிசனையாவது உண்மை தெளிதல்.
***
https://youtu.be/HFcjdkJbE-U?si=9jV3aq7INkFJ448x
பாடியவர்: அனிதா கார்த்திகேயன்
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
(அங்கணம்-சலதாரை, சேறு;
உக்க-கெட்டுப்போன;
அமிழ்து-அமிர்தம், பால்
அற்று-அத்தன்மையது, அதுபோன்றது;
தங்கணத்தார்-தன் இனத்தார் (தனக்கு சமமானவர்கள்);
கோட்டி-சபை
கோட்டிகொள்தல்-சபையிற்பேசுதல்
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்
— மு. கருணாநிதி
***
அஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்
பேச்சில் கவனம் இருக்க வேண்டும்
பொதுவாக அஜான் ஃபுவாங் (Ajahn Fuang) குறைவாகவே பேசுபவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தகுந்த வார்த்தைகளை மட்டுமே பேசுவார்: தேவைப்பட்டால் நீண்ட விரிவான விளக்கவுரையும் தருவார். இல்லையெனில் ஓரிரு வார்த்தைகளை மட்டுமே பேசுவார் - ஏன் சில சமயம் ஒன்றுமே பேசமாட்டார். அவரது ஆசிரியரான அஜான் லீ (Ajahn Lee) யின் பொன்மொழியைப் பின்பற்றி நடப்பவர்: "மக்களுக்கு அறத்தைக் கற்பிக்கும்போது, அவர்கள் அதைக் கேட்க விரும்பாவிட்டால், அல்லது நீங்கள் கூறப் போவதை ஏற்கத் தயாராக இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் அற்புதமான போதனையைத் தந்தாலும் அது வெட்டிப் பேச்சுக்கு நிகரானது தான். ஏனென்றால் அதனால் ஒரு பயனும் இல்லை."
*
அவர் உடல் நிலை சரியாக இல்லாதபோதும் தியானம் கற்றுத் தருவதில் அவருக்கிருந்த விருப்பம் - ஏன் சிலசமயம் அதீத ஆர்வம் - எனக்குத் தொடர்ந்து வியப்பளித்தது. அவர் ஒரு முறை என்னிடம் விளக்கினார், "மக்கள் கருத்தூன்றிக் கேட்டால் எனக்குக் கற்பிப்பதில் உற்சாகம் பிறக்கும். நான் எவ்வளவு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்த வேண்டியிருப்பினும் அது என்னைச் சோர்வடையச் செய்யாது. சொல்லப்போனால், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதை முடிக்கும் போது எனக்குச் சுறுசுறுப்பு அதிகமாகி இருப்பதாகவே உணர்வேன். ஆனால் கேட்பவர்களுக்கு ஆர்வம் இல்லையென்றால் இரண்டு மூன்று வார்தைகளைப் பேசுவதற்குள் நான் களைப்படைந்து விடுவேன்."
(தொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
தணிசாரோ பிக்கு)
***
https://youtu.be/jNQGVoIcfX0?si=vG3bpD-8mk3aSB4b
பாடியவர்: அமிர்தவர்ஷினி
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
(தகைமை-மதிப்பு;
தலைப்பெய்-தல்-பெய்துரைத்தல்
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.
— மு. கருணாநிதி
***
“பிக்குகளே, உலகில் நான்கு வகையான மனிதர்கள் காணப்படுகிறார்கள்.
எந்த நான்கு?”
“சிறிதளவு கல்வி இருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்ளாதவர்.
சிறிதளவு கல்வி இருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்பவர்.
மிகுந்த கல்வி இருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்ளாதவர்.
மிகுந்த கல்வி இருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்பவர்.”
“ஒருவர் சிறிதளவு கல்வி கற்றிருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்ளாதவர் என்பதற்கு என்ன அர்த்தம்?
அவர் உரைகள் (statements), செய்யுள் கலந்த உரைகள் (mixed prose & verse), வாதங்கள் (discussions), பாடல்கள் (Gāthā), உந்துதலான உச்சரிப்புகள் (Udāna), புராணக் கதைகள் (legends), பிறவிக் கதைகள் (Jātaka), அதிசயக் கதைகள் (amazing stories), விரிவான விளக்கங்கள் (elaborations) ஆகியவற்றில் சிறிதளவே கற்றிருக்கிறார்.
அவர் கற்றுள்ள அந்தச் சிறிதளவான கல்வியிலும் அதன் அர்த்தத்தையும் போதனையையும் புரிந்துகொள்ளவில்லை; போதனைக்கேற்ப நடக்கவும் இல்லை.
இதுவே ‘சிறிதளவு கற்றிருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்ளாதவர்’ என்று சொல்லப்படுவதற்கான காரணம்.”
"ஒரு மனிதர் சிறிதளவு கல்வி கற்றிருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொண்டவர் என்பதற்கு என்ன அர்த்தம்?
அவர் உரைகள், செய்யுள் கலந்த உரைகள், விவாதங்கள், பாடல்கள், உந்துதலான உச்சரிப்புகள், புராணக் கதைகள், பிறவிக் கதைகள், அதிசயக் கதைகள், விரிவான விளக்கங்கள் ஆகியவற்றில் சிறிதளவே கற்றிருக்கிறார்.
ஆனால் அவர் கற்றுள்ள அந்தச் சிறிதளவான கல்வியிலும் அதன் அர்த்தத்தையும் போதனையையும் நன்கு புரிந்துகொண்டுள்ளார்; மேலும் போதனைக்கேற்ப நடக்கிறார்.
இதுவே ‘சிறிதளவு கற்றிருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொண்டவர்’ என்று சொல்லப்படுவதற்கான காரணம்.”
“ஒரு மனிதர் மிகுந்த கல்வி கற்றும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்ளாதவர் என்பதற்கு என்ன அர்த்தம்?
அவர் உரைகள், செய்யுள் கலந்த உரைகள், விவாதங்கள், பாடல்கள், உந்துதலான உச்சரிப்புகள், புராணக் கதைகள், பிறவிக் கதைகள், அதிசயக் கதைகள், விரிவான விளக்கங்கள் ஆகியவற்றில் மிகுந்தளவு கற்றிருக்கிறார்.
ஆனால் இவ்வளவு கற்றிருந்தும், அவர் அதன் அர்த்தத்தையும் போதனையையும் புரிந்துகொள்ளவில்லை; போதனைக்கேற்ப நடக்கவும் இல்லை.
இதுவே ‘மிகுந்த கல்வி கற்றிருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொள்ளாதவர்’ என்று சொல்லப்படுவதற்கான காரணம்.”
“ஒரு மனிதர் மிகுந்த கல்வி கற்றும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொண்டவர் என்பதற்கு என்ன அர்த்தம்?
அவர் உரைகள், செய்யுள் கலந்த உரைகள், விவாதங்கள், பாடல்கள், உந்துதலான உச்சரிப்புகள், புராணக் கதைகள், பிறவிக் கதைகள், அதிசயக் கதைகள், விரிவான விளக்கங்கள் ஆகியவற்றில் மிகுந்தளவு கற்றிருக்கிறார்.
அவர் கற்றுள்ள அந்த மிகுந்த கல்வியால், அர்த்தத்தையும் போதனையையும் நன்கு புரிந்துகொள்கிறார்; மேலும் போதனைக்கேற்ப நடக்கிறார்.
இதுவே ‘மிகுந்த கல்வி கற்றிருந்தும், கல்வியின் சாரத்தைப் புரிந்துகொண்டவர்’ என்று சொல்லப்படுவதற்கான காரணம்.”
ஆதாரம்: அங்குத்தர நிகாயம்
AN 4.6 சிறிதளவு கல்வி A Little Learning
***
https://youtu.be/0osa7WHmGXk?si=nQvdDbDC_QBkwB3F
பாடியவர்: அல் ரூபியான்
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
(பரி-தல்-வருந்துதல்;
ஓம்பு-தல்-to keep in mind பேணுதல்;
தெரி-தல்-விளக்கமா தல்;
தேர்-தல்-அறிதல்)
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் (பரிந்தோம்பி) காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் (தெரிந்தோம்பி) தெளிந்தாலும் (தேரினும்), அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
— மு. வரதராசன்
***
ஒழுக்கத்தை கடைபிடிப்பது எதிர்நீச்சல் போடுவது போல தான். முயற்சியும் ஆற்றலும் பயன்படுத்தி கடைபிடிக்க வேண்டும். இல்லா விட்டால் மனம் விரும்பிய வண்ணம் நடந்து கொண்டிருக்கும்.
ஒழுக்கத்தை போற்றுபவர் ஒரு உண்மையான மனிதர் என்று புத்த பகவான் கூறுகிறார். நாம் உண்மையான மனிதராக அல்லது அதைவிட உண்மையான மனிதராக இருக்க வேண்டும்.
புத்த பகவான் கூறுகிறார்:
“பிக்குகளே, பொய்மையான மனிதர் யார், அதைவிட இன்னும் பொய்மையான மனிதர் யார், உண்மையான மனிதர் யார், அதைவிட இன்னும் உண்மையான மனிதர் யார் என்பதை நான் உங்களுக்கு போதிக்கிறேன். கவனமாகக் கேட்டு மனதைச் செலுத்துங்கள்; நான் பேசுகிறேன்.”
“ஆம், ஆயா,” என்று அவர்கள் பதிலளித்தனர். பின்னர் புத்தர் இவ்வாறு கூறினார்:
“பொய்மையான மனிதர் யார்?
உயிருள்ள உயிர்களை கொல்லும் ஒருவர்,
திருடும் ஒருவர்,
ஒழுக்கக்கேடான பாலியல் செயல்களில் ஈடுபடும் ஒருவர்,
பொய் பேசும் ஒருவர்,
மதுபானங்களை பருகும் ஒருவர்.
இவரே ‘பொய்மையான மனிதர்’ என்று அழைக்கப்படுவார்.”
அதைவிட இன்னும் பொய்மையான மனிதர் யார்?
உயிருள்ள உயிர்களை கொல்லும் ஒருவர்,
திருடும் ஒருவர்,
ஒழுக்கக்கேடான பாலியல் செயல்களில் ஈடுபடும் ஒருவர்,
பொய் பேசும் ஒருவர்,
மதுபானங்களை பருகும் ஒருவர். இத்தகைய தீய செயல்களைத் தாமும் செய்து, பிறரையும் செய்ய ஊக்குவிப்பவர்.
இவரே ‘அதைவிட இன்னும் பொய்மையான மனிதர்’ என்று அழைக்கப்படுவார்.”
“உண்மையான மனிதர் யார்?
உயிருள்ள உயிர்களை கொல்லாதவர்,
திருடாதவர்,
ஒழுக்கக்கேடான பாலியல் செயல்களில் ஈடுபடாதவர்,
பொய் பேசாதவர்,
மயக்கமூட்டும் மதுபானங்களைப் பருகாதவர்.
இவரே ‘உண்மையான மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.”
"அதைவிட இன்னும் உண்மையான மனிதர் யார்?
உயிருள்ள உயிர்களை கொல்லாதவர்,
திருடாதவர்,
ஒழுக்கக்கேடான பாலியல் செயல்களில் ஈடுபடாதவர்,
பொய் பேசாதவர்,
மயக்கமூட்டும் மதுபானங்களைப் பருகாதவர். மேலும், இத்தகைய செயல்களைத் தவிர்க்க பிறரையும் ஊக்குவிப்பவர்.
இவரே ‘அதைவிட இன்னும் உண்மையான மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.”
ஆதாரம்: அங்குத்தர நிகாயம்
AN4.201 பயிற்சி விதிகள்
***
https://youtu.be/xyR2IsU8XKo?si=IB9G5XbUA2gWhX6C
பாடியவர்: கே. ஜே. திலிப்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
(ஏமாப்பு- Security, safeguard; அரணாகை)
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை (ஏமாப்பு) வந்து வாய்க்கும்
— மு. கருணாநிதி
***
நல்ல நண்பர்கள்
சாவத்தியில்.
ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்த மன்னர் பசேனதி புத்த பகவானிடம் கூறினார்:
‘இப்பொழுது, ஐயா, நான் தனிமையில் தியானித்து கொண்டிருந்தபோது, எனது மனதில் இந்த எண்ணம் தோன்றியது:
“பகவான் போதித்த தம்மம் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நல்ல நண்பர்கள், நல்ல தோழர்கள், நல்ல உடனிருப்பவர்கள் உடையவர்களுக்கு ஏற்றது; கெட்ட நண்பர்கள், கெட்ட தோழர்கள், கெட்ட உடனிருப்பவர்கள் உடையவர்களுக்கு அல்ல.”’
“அப்படியே தான், மாமன்னா! அப்படியே தான்!” என்று புத்த பகவான் அமோதித்தார்.
அவர் மன்னனின் வார்த்தைகளை மீண்டும் கூறி, மேலும் இவ்வாறு கூறினார்:
“மாமன்னா, ஒரு சமயம் நான் சாக்யர்களின் நாட்டில் தங்கியிருந்தேன்; அங்கே ‘நாகரக’ எனப்படும் ஒரு நகரம் உள்ளது. அப்போது பிக்குவான ஆனந்தர் என்னிடம் வந்து, வணங்கி, ஓரமாக அமர்ந்து கூறினார்:
‘ஐயா, நல்ல நண்பர்கள், நல்ல தோழர்கள், நல்ல உடனிருப்பவர்கள் — இவை ஆன்மீக வாழ்க்கையின் பாதி.’
அவர் இவ்வாறு கூறியபோது, நான் அவரிடம் சொன்னேன்:
‘அப்படியல்ல, ஆனந்தா! அப்படியல்ல, ஆனந்தா!
நல்ல நண்பர்கள், நல்ல தோழர்கள், நல்ல உடனிருப்பவர்கள் — இவை ஆன்மீக வாழ்க்கையின் முழுதும் ஆகும். நல்ல நண்பர்கள், நல்ல தோழர்கள், நல்ல உடனிருப்பவர்கள் உடைய பிக்கு, உன்னதமான எண்வகை மார்க்கத்தை வளர்த்தும் பயிற்றித்தும் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படியானால், நல்ல நண்பர்கள் உடைய பிக்கு எவ்வாறு உன்னதமான எண்வகை மார்க்கத்தை வளர்த்தும் பயிற்றித்தும் கொள்கிறார்?
அவர் நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லமைதி ஆகியவற்றை வளர்த்து —ஏகாந்தம் (viveka, seclusion), இச்சையின்மை (virāga, dispassion), செயலொழிகை (nirodha, cessation- பவக் காரணங்களின் முடிவு) —ஆகியவற்றின் துணையோடு, கறைகளை முற்றும் கைவிட்டு நீக்குகிறார் (vossagga, relinquishment of defilements).
இவ்வாறு தான் நல்ல நண்பர்கள் உடைய பிக்கு உன்னதமான எண்வகை மார்க்கத்தை வளர்த்தும் பயிற்றித்தும் கொள்கிறார்.
மேலும், நல்ல நண்பர்கள் ஆன்மீக வாழ்க்கையின் முழுதும் ஆகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள இன்னொரு வழியும் உள்ளது.
என்னை நல்ல நண்பராகக் கொண்டு நம்பிக்கையுடன் வாழும் உணர்திறன் கொண்ட உயிர்கள் (sentient beings) — பிறப்பு, முதுமை, மரணம், துக்கம், பரிதாபம், வேதனை, மனவேதனை — இவ்வனைத்திலிருந்தும் விடுபடுகிறார்கள்.
இதுவும், நல்ல நண்பர்கள் ஆன்மீக வாழ்க்கையின் முழுதும் ஆகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் இன்னொரு வழியாகும்.
ஆகையால், மாமன்னனே, நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்:
‘நான் நல்ல நண்பர்கள், நல்ல தோழர்கள், நல்ல உடனிருப்பவர்கள் உடையவனாக இருப்பேன்.’
இவ்வாறே நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.”
நல்ல நண்பர்கள், நல்ல தோழர்கள், நல்ல உடனிருப்பவர்கள் கிடைத்தபின், ஒரே ஒரு அடிப்படையை சார்ந்து வாழ வேண்டும்:
நல்ல குணங்களில் அக்கறையுடனும் முயற்சியுடனும் நிலைத்திருத்தல்."
ஆதாரம்: சங்யுத்த நிகாயம் SN 3.18
***
https://youtu.be/D7lnSt1WM5Q?si=SXO8FfC1aHCcyrZ4
பாடியவர்: அஃபினா அருள்
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
(உடைமை- உடையனாந்தன்மை, உடைமைப்பொருள், செல்வம்;
ஓம்பு-தல்-இவறுதல், விரும்புதல்;
மடமை-பேதைமை;
மடவார்-மூடர்)
செல்வநிலையில் உள்ள (உடைமை) வறுமை (இன்மை) என்பது விருந்தோம்புதலைப் போற்றாத (ஓம்பா) அறியாமையாகும் (மடமை): அஃது அறிவிலிகளிடம் (மடவார்) உள்ளதாகும்.
— மு. வரதராசன்
***
விருந்தோம்பல் (sakkāra) என்பது விருந்தினர்கள், அந்நியர்கள், பயணிகள் ஆகியோரை அன்பாக வரவேற்று உதவிசெய்வதைக் குறிக்கும். பண்டைய உலகில், குறிப்பாக ஒருவரின் சொந்த குலம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களிடம் விருந்தோம்பல் மிகுந்த மதிப்புடன் பார்க்கப்பட்டது. இந்தியாவில், சாதி அமைப்பின் கட்டுப்பாடுகள் காரணமாக இது ஒரு அளவுக்கு வரையறுக்கப்பட்டது. உதாரணமாக, இந்து மதத்தின் மிக முக்கியமான சட்ட நூலான மனுஸ்மிருதி, ஒரு பிராமணர் மற்ற பிராமணர்களுக்கு மட்டுமே விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்றும், மரபுக்கு புறம்பான சமயங்களைச் சேர்ந்த சமணர்கள் அல்லது தவசிகளுக்கு வணக்கம் சொல்லவோ, அவர்கள் கூறும் வணக்கத்திற்கு பதிலளிக்கவோ கூடாது என்றும் கூறுகிறது. ஆனால், மனம் திறந்த சில பிராமணர்கள் இதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை (D.I,117). இத்தகைய எண்ணங்களின் காரணமாகவே, புத்தர் பஞ்சசாலா என்ற பிராமணக் கிராமத்தில் பிண்டபாதம் செய்யச் சென்றபோது, அங்குள்ள மக்கள் அவருக்கு எதையும் வழங்க மறுத்தனர்; அதன் விளைவாக, அவர் “வந்தபோது இருந்ததுபோலவே சுத்தமான பாத்திரத்துடன்” அங்கிருந்து வெளியேறினார் (S.I,114).
புத்தரை பொறுத்த வரை, சாதி, மதம், நிலைமை (status) எதுவாக இருந்தாலும், அனைவரிடமும் விருந்தோம்பல் காட்டப்பட வேண்டும். வேசாலியின் முக்கிய குடிமகனும், ஜைன மதத்தின் பெரும் ஆதரவாளருமான சீஹா புத்தமதத்தை ஏற்றுக்கொண்டபோது, ஜைனத் துறவிகள் அவரது வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கும் விருந்தோம்பல் தொடர வேண்டும் என்று புத்தர் அவரிடம் கூறினார் (A.IV,185).
திரிபிடகத்தில் பல இடங்களில், புத்தர் அவரைச் சந்திக்க வந்த அனைவரிடமும் 'அன்பாக வரவேற்கும், நட்பான, மரியாதையான, மனம் திறந்த, உரையாடலுக்கு இலகுவான' நபராக இருந்தார் என்று கூறப்படுகிறது (D.I,116).
ஒரு இல்லறத்தாரின் கடமைகளில் ஒன்றாக ‘ஐந்து வகை காணிக்கை’ (pañca‑bali) செய்யப்பட வேண்டும்; அதில் ஒன்றாக விருந்தினர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தேவையான உதவிகளை வழங்குவது அடங்கும் (A.II,68).
ஒரு பிக்குவோர் விகாரத்திற்கு வந்தால், அங்கு வசிக்கும் பிக்குகள் அவரைச் சந்திக்க வெளியே சென்று, அவருக்காக இருக்கை அமைத்து, கால்களை கழுவ நீர் கொண்டு வந்து, தங்குமிடம் தயார் செய்து, அவர் வரவேற்கப்பட்டதாக உணரும்படி தேவையான பிற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று புத்தர் அறிவுறுத்தினார் (Vin.II,207–11).
மிலிந்தபஞ்ஞா (Milindapañha) கூறுவதாவது: ஒருவரின் வீட்டில் உள்ள உணவு அனைத்தும் முடிந்த பிறகு ஒரு விருந்தினர் வந்தாலும், அவர் உண்பதற்கும் அவரது பசியை தணிப்பதற்கும் கூடுதல் அரிசி வேகவைக்க வேண்டும். (Mil.107).
விருந்தோம்பலுக்கு பதிலளிக்கத் தவறுவது மிக மோசமான நடத்தை என்று புத்தர் கருதினார். அவர் கூறினார்: “யார் மற்றவரின் வீட்டிற்கு சென்று அங்கே உணவு உண்டு, ஆனால் அவர்கள் தனது வீட்டிற்கு வந்தபோது அவர்களுக்கு உணவு கொடுக்கவில்லை எனில், அவரை தாழ்ந்தோர் எனக் கருதுங்கள்” (Sn.128).
ஜாதகக் கதைகள் (Jàtaka) கூறுகிறது: “ஒரு இரவு மட்டுமே மற்றவரின் வீட்டில் தங்கி, அங்கே உணவும் பானமும் பெற்றிருந்தாலும், அவரைப் பற்றி தீய எண்ணம் கொள்ளாதே; அப்படிச் செய்வது உதவிக்காக நீட்டிய கையை எரிப்பதுபோலும், நல்ல நண்பனைத் துரோகம் செய்வதுபோலும் ஆகும்” (Ja.VI,310).
ஆதாரம்: Guide to Buddhism A to Z (hospitality) Bhante Shravasti Dhammika
***
https://youtu.be/HhgbGctyp-Q?si=u0RFOUZ9EEBxu_ls
பாடியவர்: ஸ்ரீவர்தனி குச்சி
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
(கொட்கு-தல்-வெளிப்படுதல்;
எற்று-தல்-நீக்குதல்;
எற்றா-நீங்காத;
விழுமம்-இடும்பை)
செய்யும் செயலை முடிவில் (கடை) வெளிப்படும் (கொட்க) படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் (இடைக்கொட்கின்) நீங்காத (எற்றா) துன்பத்தைக் கொடுக்கும் (விழுமந் தரும்).
— மு. வரதராசன்
***
இந்த குரளுக்கு புத்த பகவான் ஒரு நல்ல உதாரணம். தனது நோக்கம் அடையும் முன்னர் அதனை உலகுக்கு அரிவிக்கவில்லை என்று அவர் கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகள்:
SN56.11. தம்மச்சக்கப்பவத்தன சூத்தம் - தம்மச் சக்கரத்தை இயக்குதல் Dhammacakkappavattanasutta
புத்த பகவானது முதல் போதனையில் அவர் நான்கு உன்னத உண்மைகளுக்கு விளக்கம் தருகிறார். ஒவ்வொரு வாய்மைக்கும் மூன்று நிலைகள் உள்ளன. ஆக மொத்தம் 12 அம்சங்கள். முதல் வாய்மையின் மூன்று நிலைகள்: துக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது, அது மனதில் பதிய வேண்டும் (is to be understood), துக்கம் மனதில் பதிந்து விட்டது (has been understood).
இரண்டாம் வாய்மையின் மூன்று நிலைகள்: துக்கத்திற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வது, அந்த காரணத்தை கைவிட வேண்டும் (is to be abandoned). அந்த காரணம் கைவிடப்பட்டது (has been abandoned).
மூன்றாம் வாய்மையின் மூன்று நிலைகள்: துக்கத்தின் முடிவு என்னவென்று தெரிந்து கொள்வது, அதனை உணர்ந்து கொள்ள வேண்டும் (is to be realized), அது உணர்ந்து கொள்ளப்பட்டது (has been realized). நான்காம் வாய்மையின் மூன்று நிலைகள்: துக்க முடிவிற்கு எடுத்துச் செல்லும் பாதை என்னவென்று தெரிந்து கொள்வது, அந்த பாதையை வளர்க்க வேண்டும் (is to be developed), அது வளர்க்கப்பட்டு விட்டது (has been developed). இந்த விளக்கங்களை தந்த பிறகு புத்த பகவான் கூறினார்:
“பிக்குகளே, இந்த நான்கு உன்னத வாய்மைகளை அவை உண்மையில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே, அவற்றின் மூன்று நிலைகளிலும் பன்னிரண்டு அம்சங்களிலும் எனது அறிவும் தரிசனமும் இவ்விதமாக முழுமையாகச் சுத்திகரிக்கப்படாத வரை, தேவர்கள், மாரன், பிரம்மனும் உட்படுத்திய இந்த உலகிலும், சமணர்களும் சான்றோர்களும், தேவர்களும் மனிதர்களும் வாழும் இந்த தலைமுறையிலும், ஒப்பற்றதும் முழுமையானதுமான பரிபூரண போதியை நான் அடைந்தேன் என்று நான் கூறவில்லை.”
“ஆனால், இந்த நான்கு உன்னத வாய்மைகளை, அவை உண்மையில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே, அவற்றின் மூன்று நிலைகளிலும் பன்னிரண்டு அம்சங்களிலும் எனது அறிவும் தரிசனமும் இவ்விதமாக முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டபோது, தேவர்கள், மாரன், பிரம்மனும் உட்படுத்திய இந்த உலகிலும், சமணர்களும் சான்றோர்களும், தேவர்களும் மனிதர்களும் வாழும் இந்த தலைமுறையிலும், ஒப்பற்றதும் முழுமையானதுமான பரிபூரண போதியை நான் அடைந்தேன் என்று நான் அறிவித்தேன்.”
அப்பொழுது எனக்குள் இத்தகைய ஞானமும் தரிசனமும் எழுந்தது:
‘என் மனத்தின் விடுதலை அசைக்க முடியாதது.
இது என் இறுதி பிறப்பு.
இனி மறுபிறப்பு இல்லை.’”
MN14 சூளதுக்கக்கந்த சூத்தம் - துக்கத்தின் சிறிய தொகுப்பு பற்றிய உரை
Cūḷadukkhakkhandhasutta
மகாநாமர் என்ற சாக்கியர் புத்தரிடம் சென்று, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றும் மன மாசுக்கள் என்ற புத்தரின் போதனை அறிந்திருந்தும் அவற்றை தம் மனதில் இருந்து தடுக்க முடியவில்லையே, அதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்.
புத்த பகவான் அதற்கு புலன் இன்பங்களை நாடிச் செல்வது திருப்திகரமான முடிவுக்கு எடுத்துப் போவதில்லை என்பதை தெரிந்தும், பேரானந்தம் தரும் தியான சமாதி நிலைகளை அடையாத காரணத்தால், சிற்றின்பங்களை நாடி செல்கிறோம் என்று கூறி, மேலும்:
“என் போதிக்கு முன்பு — நான் இன்னும் போதியடையாத நிலையில் இருந்தாலும், போதியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் இருந்தபோது — ‘காம இன்பங்கள் சிறிய திருப்தியையே தருகின்றன; ஆனால் பெரும் துன்பமும் வேதனையும் உண்டாக்குகின்றன; மேலும் அவை குறைபாடுகளால் நிறைந்தவை’ என்பதைச் சரியான ஞானத்துடன் நான் தெளிவாகக் கண்டேன். ஆனால், காம இன்பங்களிலிருந்தும் அகுசலமான (திறமையற்ற) நிலைகளிலிருந்தும் விலகியதாகிய ஆனந்தத்தையும் பேரின்பத்தையும், அல்லது அதைவிட மேலும் அமைதியான ஒரு நிலையையும் (முதல் ஜான jhana ஆழ்ந்த சமாதி நிலையில் சிற்றின்பத்தை விட உடலில் பெரும் இன்பம் உண்டாகும்) நான் அடையாதவரை, ‘நான் மீண்டும் காம இன்பங்களுக்குத் திரும்பமாட்டேன்’ என்று நான் அறிவிக்கவில்லை.
ஆனால் அந்த ஆனந்தத்தையும் பேரின்பத்தையும், அல்லது அதைவிட அமைதியான ஒரு நிலையையும் நான் அடைந்தபோது, ‘நான் மீண்டும் காம இன்பங்களுக்குத் திரும்பமாட்டேன்’ என்று நான் அறிவித்தேன்.”
***
https://youtu.be/sI4uQvtHsds?si=2gKfK0s01QWKs2qM
பாடியவர்: சங்கீதா வி. எஸ்.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
(கூற்று-யமன், காலன்)
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.
— மு. வரதராசன்
***
அனைவரும் எந்நாளும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து ஒழுக்கங்களில் முதலாவது:
Pāṇātipātā veramaṇī sikkhā-padaṃ samādiyāmi.
பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
பானா-மூச்சு விடும் உயிரினம்
அதிபாதா-அடித்து வீழ்த்துதல்,
கொல்லுதல், அழித்தல்
வேரமணி-தவிர்த்தல்,விலகுதல், தன்னைத் தடுத்து நிறுத்துதல்
சிக்கா-பயிற்சி முறை, ஒழுக்கம்
பதம்-விதி, கொள்கை
சமாதியாமி-நான் மேற்கொள்கிறேன்
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் (பானா+அதிபாதா) தவிர்க்கும் (வேரமணி) பயிற்சி (சிக்கா) விதியை (பதம்) ஏற்றுக் கொள்கிறேன் (சமாதியாமி).
வெள்ளிக்கொல்லர் சுந்தருக்குத் தந்த போதனை
அங்குத்தர நிகாயம் AN 10.176
உடம்பால் செய்யும் செயல்களால் ஒருவர் எப்படி தூய்மையற்றவராகிறார்? உயிரைப் பறிப்பவன், ஒரு வேடன், ரத்தம் படிந்த கைகள் உடையவன், கொல்வதற்கும் மாய்ப்பதற்கும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். உயிரினங்களுக்கு எந்தக் கருணையும் காட்டாதவன்;
...
உடம்பால் மூன்று வழிகளில் செய்யும் செயல்களால் ஒருவர் எப்படி தூய்மையானவராகிறார்? ஒருவர் உயிரைப் பறிப்பதை கைவிட்டு, உயிர்கட்கு துன்பஞ்செய்யாதிருக்கிறார். அவர் தடியை கைவிட்டவர், வாளை கைவிட்டவர் நேர்மையானவர், கருணை உள்ளவர், அனைத்து உயிர்களின் நலன் மீதும் அக்கறை கொண்டவர்;
...
***
https://youtu.be/0fhdrLouWXY?si=Jys6NTXkEk5IPC4H
பாடியவர்: அஷோக் ராமமூர்த்தி
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
(உயிர்நிலை-உயிர் உள்ள உடம்பு;
என்பு-எலும்பு)
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
— மு. வரதராசன்
***
அன்பு என்பது பிறரிடத்தில் உண்டாகும் பாசம், ஆர்வம், அக்கறை ஆகிய உணர்வாகும்.
மேலும் எல்லையற்ற அன்பு (மெத்தா) என்பது நான்கு பிரஹ்மவிஹாரங்களில் (Brahma Vihàra) முதலாவது.
புத்தமதத்தில் நான்கு பிரஹ்மவிஹாரங்கள் என்பது நான்கு உயர்ந்த உணர்வுகளாகக் (highest emotions) கருதப்படுகின்றன. ‘பிரஹ்ம’ என்ற சொலுக்கு ‘உயர்ந்தது’ அல்லது ‘சிறந்தது’ என்று அர்த்தம். ‘விஹார’ என்பது ‘வசிப்பது’, ‘வாழ்வது’ அல்லது ‘தங்குவது’ என்று பொருள். ஆகவே பிரஹ்மவிஹாரங்கள் என்பது ஒருவருக்கு சில சமயம் தோன்றும் உணர்வுகள் அல்ல; மாறாக எந்நேரமும் ஒருவர் ‘வாழ்ந்து கொண்டிருக்கும்’ மற்றும் ‘வாழ்வின் அடிப்படையாகக் கொண்டிருக்கும்’ உணர்வுகளாகும்.
விஸுத்திமக்கா (Visuddhimagga 'தூய்மையாக்கும் வழி') அன்பை இவ்வாறு வரையறுக்கிறது:
‘அன்பு என்பது பிறரின் நலனை வளர்த்தெடுப்பதையே தன்மையாகக் (character of love) கொண்டது; அதன் செயல்பாடு (function of love) அவர்களின் நலனை விரும்புவதில் உள்ளது; அது எரிச்சல் மற்றும் வெறுப்பை நீக்குவதால் வெளிப்படுகிறது (manifestation of love); அதன் நெருங்கிய காரணம் (proximate cause of love) உயிர்களின் நேசிக்கத்தக்க இயல்பை காண்பதே ஆகும்.’
உள்ளம் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, முதலில் நம்மை நாமே அன்பு செய்வதிலிருந்தும் நம் நெருங்கிய குடும்பத்தினரை அன்பு செய்வதிலிருந்தும் தொடங்க வேண்டும். நாம் வளர்ந்து முதிர்ந்துவரும்போது, நம் அன்பின் வட்டத்தில் மேலும் பலரை — நண்பர்கள், வாழ்க்கைத்துணை, மாமியார்–மாமனார், குழந்தைகள் போன்றவர்களை — படிப்படியாகச் சேர்த்துக்கொள்ள கற்றுக்கொள்கிறோம். உண்மையான ஆன்மீக மனிதராக வளர, இறுதியில் நம் அன்பு நம்முடன் தொடர்பு கொள்ளும் அனைத்து உயிர்களையும் ஊடுருவிச் செல்ல வேண்டும். அன்பு குறுகிய எல்லையிலிருந்து பரவலானதாக மாறும் இந்தப் பயணத்தில், சுயநலம், பொறாமை, பற்றுதல், பதிலுக்கு மற்றவரிடம் இருந்து அன்பு பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை மெதுவாகக் குறைந்து, அன்பு வலிமையானதும், பாகுபாடற்றதும், இயல்பானதுமாக மாறுகிறது.
புத்தர் தம்முடைய சீடர்களிடம் இவ்வாறு கூறினார்:
‘நீங்கள் இவ்வாறு உங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்:
எங்கள் மனம் திரியாது; தீய சொற்களைப் பேசமாட்டோம்; மாறாக கருணையும் தயையும் கொண்டு, வெறுப்பின்றி அன்பால் நிரம்பிய மனத்துடன் வாழ்வோம். முதலில் ஒருவரை அன்பால் நிரப்பி, அவரை ஆரம்பமாகக் கொண்டு, பரந்ததும், எல்லையற்றதும், அளவிட முடியாததும், வெறுப்பும் பகையும் இல்லாத அன்பால் முழு உலகத்தையும் ஊடுருவச் செய்வோம்.
இவ்வாறே நீங்கள் உங்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.’
ஆதாரம்: Guide to Buddhism A to Z (love) Bhante Shravasti Dhammika
***
https://youtu.be/oWbTMWBuWrE?si=OCzCMbfX-IFeal0e
பாடியவர்: ஜோஷிகா ஹேமேஷ்
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
(அணி-ஒப்பனை,அழகு, ஆபரணம்)
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.
— சாலமன் பாப்பையா
***
ஒருவரிடம் பணிவோடு இனிய சொற்களை பேசும் போது அவரை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.
மதித்தல்
நாம் ஒருவரை முதன்முதலில் சந்திக்கும் போது, அவரைப் பற்றிய நம் எண்ணம் தவறானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கலாம், ஆனால் அது பின்னர் மனதில் நிலைத்துவிடும். ஒருவரை மதிப்பது என்றால், அவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நேரம் ஒதுக்கத் தயாராக இருப்பது, அவர்களின் குணத்தின் பிற அம்சங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்குவது, அவர்களின் நல்ல பண்புகளை உணர முயற்சி செய்வது, தேவையான இடங்களில் அந்த நல்ல பண்புகளைப் போற்றுவதும் ஆகும். மதிப்பை உணரும் திறன் ஒரு பெரிய ஆசீர்வாதம் என்று புத்தர் கூறினார்.
பௌத்த மரபில், ஒவ்வொருவரும் — மிக அறியாமையுள்ளவராக இருந்தாலும், மிகத் தீயவராக இருந்தாலும் — ஞானம் பெறும் திறன் கொண்டவர்கள் என்பதால், அனைவரும் நம் மதிப்பிற்குரியவர்களே. ஆனால் மனிதர்களைத் தவிர பிறவற்றையும் நாம் மதிக்கலாம் — மிருகங்கள், வேறு மதங்கள், பிறரின் சொத்து, சுற்றுச்சூழல் ஆகியவற்றையும் மதிக்கலாம். விருந்தோம்பல், ஒழுக்கம், விழிப்புணர்வு போன்ற நற்குணங்களை மதிப்பது நல்லது என்று புத்தர் கூறினார். இதன் பொருள், இத்தகைய நற்குணங்களை நாம் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், அவற்றை நம் வாழ்க்கையில் வரவேற்று, அவை நமக்குள் உள்ளதற்கு மகிழ்ச்சி கொள்வது. புத்தமதத்தவர்கள் பூஜை செய்யும் போது, புத்தரின் சிலையின் முன் மலர்கள், விளக்குகள், தூபங்கள் (ஊதுவத்தி போன்ற) வைப்பது, அவரது மகத்தான ஆன்மீக சாதனைகளை மதிப்பதற்காகவே.
ஆதாரம்: Guide to Buddhism A to Z (respect) Bhante Shravasti Dhammika
***
https://youtu.be/UfmOX5Y5fg4?si=cNAJblSBAHWzvc9G
பாடியவர்: சத்யப்ரியா கிருஷ்ணன்