லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி மற்றும் அவர்கள் பெற்றோர்கள். இவர்கள் எம் குடும்பத்தார்.
குரளிசைக்காவியத்தில் பாடிய அயிரம் பேரும் - சிறார் முதல் முதியோர் வரை - மற்றும் மொழிபெயர்த்த இருவரும் எம் உறவினர்.
மொழி, குடி, நாடு, இனம், பால் வேறுபாடின்றி குரளிசைக்காவியப் படைப்பின் அருமைபாராட்டும் அனைவரும் எம் மக்கள்.
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
(கூறாமை நோக்கக் குறிப்பறிவான் - ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் நினைத்ததை அறிகின்றவன்; எஞ்ஞான்றும் - எக்காலமும்; மாறாநீர் - வற்றாத நீர் (சூழ்ந்த); வையகம் - பூமி(யில்); கணி - சான்றோன்.)
புத்தர் தமது போதனைகளை, தம் சீடர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப அமைத்தார். தம் முன் இருப்போரின் உள்ளத்தை புரிந்து கொண்டு சரியான உபாயம் மூலம் அவர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
https://youtu.be/VlryFEkOlNE?si=AF2JIUIuyHFvK2YC
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
"அளத்தற்கியலாத பாரமிதைகளை அளவில்லாமல் நிறைத்து,
நடுக்கமில்லாத புத்தபெருமானாகிய கதிரவன் தோன்றினார்,"
என்று மணிமேகலையில் (காதை 26, 45-46) குறிப்பிடப்படுகிறது. (மேற்குறிப்பிட்டது உரையில் வரும் விளக்கம்)
பாரமிதை என்பதன் பொருள் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குரிய பண்புகள். இந்த பாரமிதைகள் பத்தில் ஒன்று - ஒழுக்கம் (சீலம்).
பௌத்த மரபில் அதற்கான உவமானம்:
கவரிமானின் அடர்ந்த மயிர் கொண்ட வால் எங்கேனும் சிக்கிக் கொண்டால் அது அதனை வெடுக்கென்று பிடுங்கிக் கொள்ளாமல் பொறுமையாக விடுவித்துக் கொள்ளவே முயற்சிக்கும் (ஏனென்றால் அந்த மயிர் இழக்க நேரிட்டால், அது குளிர் பிரதேசத்தில் வாழ்கின்றபடியால், அதன் உயிருக்கே ஆபத்து உண்டாகும்).
அது போலவே ஒழுக்கத்தை முழுமையாக்குவதென்பது நமது உடல், சொல், உள்ளம் மூலமாக செய்யும் செயற்பாடுகள் எவ்வாறு உலகில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை நன்று அறிந்து செயல்படுவதாகும். நமது உரிமைகளை - அவை நமக்கு கிடைக்காவிட்டாலும் சரி - அவற்றை வன்முறையால் பெற்றுக்கொள்ளக் கூடாது.
ஆதாரம்: Paramita: The Ten Perfections
A commentary on Similes in the Pali Canon, by Helmuth Hecker
"உயிரே போனாலும் ஒழுக்கம் தவற மாட்டார்கள் மாண்புடையோர்" என்று குரளின் பொருள் கொள்ளலாம்.
https://youtu.be/c3k71hoBE4w?si=U7D4giGqLwAMNmlh
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
(செவிச்செல்வம்: கேள்வியறிவு, செவியால் கேட்டுச் சேர்த்த அறிவு)
தம்மஸ்ஸாவன சுத்தம்
அங்குத்தர நிக்காயம் AN 5.202
“தர்மத்தை கேட்பதால் ஐந்து நன்மைகள் கிடைக்கும். எந்த ஐந்து?
1. முன்பு கேட்காததை ஒருவர் கேட்கிறார்.
2. முன்பு கேட்டதை தெளிவுபடுத்துகிறார்.
3. சந்தேகங்களை நீக்குகிறார்.
4. தம் கருத்துகளை நேராக்குகிறார்.
5. தம் மனம் அமைதியாகிறது.
இவை தான் தர்மத்தை கேட்பதன் ஐந்து நன்மைகள்.”
https://youtu.be/zfPDipVmB0c?si=0jF3k1yquAKE9xyZ
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
(நோற்பார்- தவஞ் செய்வார். இன்னா-துன்பம்)
பாரமிதைகளில் ஒன்று பொறுமை (khanti).
போதிசத்துவர் எவ்வாறு தம் முன்பிறவிகளில் பொறுமையை முழுமையாக்கினார்?
கந்திவாதி ஜாதக கதைச் சுருக்கம் (Khantivādi Jātaka #313)
போதிசத்தர் ஒரு காலத்தில் காசி நாட்டில் மிகுந்த செல்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் இறந்த பிறகு, அவர் தம் பெரும் செல்வத்தை தானமாக வழங்கி, இமயமலை பகுதியில் ஒரு துறவியானார். பின்னர் மீண்டும் காசிக்கு திரும்பி, அரசனின் பூங்காவில் தங்கினார்; அங்கு அரசனின் தளபதி அவரை கவனித்துக் கொண்டார்.
ஒருநாள், காசி நாட்டு அரசன் கலாபு, தன் அரண்மனை பெண்களுடன் குதூகலிக்க அந்த பூங்காவிற்கு வந்தான். மது அருந்திய நிலையில் தூக்கத்தில் ஆழ்ந்தான். அந்தப் பெண்கள் அரசன் தூங்கிவிட்டபடியால் பூங்காவில் சுற்றித் திரிந்து, அந்த துறவியை சந்தித்து, அவரிடம் உபதேசம் செய்யுமாறு கேட்டனர். துறவி பொறுமை பற்றி போதித்தார்.
அரசன் விழித்தபின், தன் பெண்களைத் தேடிச் சென்று துறவியின் அருகில் இருப்பதைக் கண்டு சீற்றம் கொண்டான். அவர் பொறுமையைப் பற்றி போதித்ததாகக் கேள்விப்பட்டதும், அரசன் துறவியின் பொறுமையை சோதிக்க உத்தரவிட்டான். துறவி பலவகையான கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அமைதியாக இருந்ததால், அரசன் மேலும் கோபமடைந்து, அவரது கை கால்களை வெட்ட உத்தரவிட்டான். அப்போதும் துறவி பொறுமையை இழக்கவில்லை, அரசன் மீது கோபப் படவில்லை.
அரசன் பூங்காவை விட்டு வெளியேறியபோது, பூமி பிளந்து, அவீசி நரகத்தில் விழுந்தான். தளபதி, நடந்ததை அறிந்து, துறவியிடம் மன்னிப்புக் கேட்க விரைந்தார். துறவி எந்தவிதமான விரோதமும் இல்லையெனக் கூறி, அரசனுக்கு தம் அன்பை செலுத்தி உயிரை விட்டார்.
இந்த கதையில் வந்த கலாபு என்ற காசி நாட்டு அரசன் தேவதத்தன். தளபதி சாரிபுத்திரர். துறவி போதிசத்துவர்.
பொறுமையின் சிகரத்தை வர்ணிக்கும் பிரபலமான ஜாதகக் கதை இது.
https://youtu.be/vQbJ1R5tjyI?si=kWryt8BqGQ0blr7n
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
(ஒன்றாக-நிச்சயமாக; மற்றதன் பின்சாரப் - மற்றது, அதன்+பின்+சாரும்)
தம்மபதம்
வன்முறை என்றால் அனைவரும் நடுங்குவார்கள்; அனைவரும் மரணத்துக்கு பயப்படுகிறார்கள். அனைவருக்கும் தங்கள் உயிர் மேல் பிரியமுண்டு. தம்மை மற்றவர்களின் இடத்திலிருந்து பார்த்தபின் ஒருவர் கொள்ளக்கூடாது; மற்றவர்களை கொள்ள வைக்கவும் கூடாது.
(தம்மபதம் 129/130)
மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத ஒருவன், ஒரே ஒரு தவறைச் செய்கிறான்— அது பொய் பேசுவது என்றால், அவன் எந்த தீமை செய்வதற்கும் தயங்க மாட்டான்.
(தம்மபதம் 176)
https://youtu.be/5K_nBUU3NHg?si=aTFJ92IkeUbDr0if
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
(அருள்-இரக்கம்; உழல்தல்-அலைதல்)
தீக நிகாயம் 31 சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
தொடர்ந்து சூதாடினால் ஆறுவகையான தீமைகள் உண்டாகின்றன:
1. சூதாட்டத்தில் ஒருவர் வெற்றி பெற்றால் அவரை வெறுப்பார்கள்.
2. அவர் தோல்வியடைந்தால், 'பணத்தை இழந்துவிட்டேன்!' என்று புலம்புவார்.
3. உடனுக்குடன் செல்வம் குறைகிறது.
4. ஒரு சபையில் அல்லது நீதி மன்றத்தில் சூதாடுபவனின் பேச்சை மதிப்பாரில்லை.
5. நண்பரும், சகாக்களும் அவரை துச்சப்படுத்துவார்கள்.
6. அவருக்கு எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள், ஏனெனில் சூதாடுபவன் நல்ல கணவனாக மாட்டான் என மக்கள் கூறுவர்.
தொடர்ந்து சூதாடும் பழக்கத்தால் ஏற்படும் ஆறு பாதிப்புகள் இவை.
https://youtu.be/r4uDxFIbjOc?si=cc3QVi0pCF2wqTs6
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
(எய்து-தல் - அணுகுதல்.
எய்தாப் பழி - வேண்டாத, ஆனால் தவிர்க்க முடியாத பழி.)
பகவான் புத்தரின் எண் வழி மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும்.
ஒழுக்கம் (சீலம்) என்ற தலைப்பில் வருவன:
நல்வாய்மை Right Speech
நான்கு வகையான தவறான பேச்சு உள்ளன. இவற்றை தவிர்க்க வேண்டும்.
1. ஏமாற்றுப் பேச்சு அல்லது பொய்ப் பேச்சு.
2. கடுமையான பேச்சு
3. வம்புப் பேச்சு
4. விதண்டைப் (வெட்டிப்) பேச்சு
நற்செயல் Right Action
நற்செயல் என்றால் என்ன?
1. கொலை செய்வதைத் தவிர்த்தல்,
2. திருடுவதைத் தவிர்த்தல்,
3. தவறான பாலியல் உறவுகளில் ஈடுபடாமல் இருத்தல். இவையே நற்செயல்கள்."
— SN 45.8
நல்வாழ்க்கை (நற்சீவனோபாயம்) Right Livelihood
புத்தர் தமது சீடர்களிடம், மற்ற உயிர்களுக்குத் தீங்கு பயக்கும் எந்தத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறிப்பாகக் கீழ்க்காணும் இந்த ஐந்து தொழில்களைச் செய்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்:
1. இறைச்சியைக் கொண்டு தொழில் செய்தல் அதவது கசாப்புக்கடை நடத்துவது.
2. நச்சுப் பொருட்களை வைத்துத் தொழில் செய்தல்.
3. ஆயுத வியாபாரம் செய்தல்.
4. மனித அடிமை வியாபாரம் செய்வது, விபச்சாரத் செயல்பாடுகளில் ஈடுபடுவது.
5. மது போன்ற போதைதரும் பொருட்களில் வணிகம் செய்வது.
மேலும் புத்தர் தனது சீடர்கள் வஞ்சகத்தோடும், கபடத்தோடும், வற்புறுத்தியும், சூழ்ச்சி செய்தும் அல்லது பிற நேர்மையற்ற வழிகளிலும் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது என்கிறார்.
https://youtu.be/z4RPgQSe4JI?si=pqe1AVkMFKWCEbiK
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
(தவம் - புண்ணியம்
வியன் - அகன்ற)
இந்தக் குரள் மழை பற்றியது என்றாலும் தானத்துக்கும் புண்ணியத்திற்கும் உள்ள மதிப்பையும் வலியுறுத்துகிறது.
ஆன்மீக நோக்கத்துடன் தம் உடலை வருத்திக் கொள்வதை தவம் என்றும் கூறுவர். புத்தர் அதனை பயனற்றது என்றார். துறவு பூண்ட பிறகு ஆறு வருடங்கள் தன் உடலை வருத்திக் கொண்டார். ஆனால் எந்த பயனும் தரவில்லை. அதனால் அதனை கைவிட்டார். இளவரசராக வாழ்ந்த காலத்தில் அளவில்லாத புலன் இன்பங்களை அனுபவித்தார். அதுவும் திருப்தி தரவில்லை. எனவே பௌத்த பாதை இரண்டு விளிம்புகளையும் கைவிட்ட ஒரு நடுப் பாதை. தவம் என்றால் புண்ணியம் என்றும் பொருள் படும். அந்தப் பொருள் இங்கு பொருந்தும்.
புண்ணியமும் மகிழ்ச்சியும் ஒன்று என்று புத்தர் கூறினார்.
மூன்று வழிகளில் புண்ணியம் சேர்க்கலாம்.
1. தானம் செய்தல்
2. ஒழுக்கத்தோடு வாழ்தல். தானம் செய்வதை விட மேன்மையானது.
3. நற் கடைப்பிடி அதாவது மன கவனத்தோடு இருத்தல். (மனதில் தோன்றும் தீய எண்ணப் போக்குகளை உடனே கை விடுவது. நல்ல எண்ணங்களை வளர்ப்பது.) மேற்குறிப்பிட்ட இரண்டு வழிகளை விட மேன்மையான புண்ணியம் சேர்க்கும் வழி இது.
https://youtu.be/XFu3Md3nHA4?feature=shared
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(எஞ்ஞான்றும்-எக்காலமும்;
தவா-தவறாமல்:
ஈன்தல்-கருவுயிர்த்தல்
வித்து-விதை)
ஆசைக்கும் பிறப்பிற்கும் உள்ள தொடர்பை இந்த மணிமேகலை வரிகளில் காணலாம்:
..
நுகர்ச்சி சார்ந்து வேட்கை ஆகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றில் தோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்பு பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறு எனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப...
மணிமேகலை 30,110-117
பொருள்:
இன்பம் துன்பம் போன்ற நுகர்ச்சிகளின் (feelings) காரணமாக வேட்கை (craving) தோன்றுகிறது.
வேட்கையின் காரணமாக பற்றும் (clinging),
பற்றியின் காரணமாக பவமும் (கருமத்தொகுதி being),
பவம் காரணமாக பிறப்பும் (தோற்றம் birth),
பிறப்பின் காரணமாக துன்பம் (suffering நோயும், முதுமையும், இறப்பும், அவலமும், அழுகையும், கவலையும், செயலறுதியுமென்ற துன்பங்கள்) தோன்றுகிறது.
இதிலிருந்து ஆசை (வேட்கை, பற்று) பிறப்பின் காரணம் என்று அறிந்து கொள்ளலாம். (திரிபிடக ஆதாரம் சங்யுத்த நிகாயம் 12.1)
https://youtu.be/BHGjMl3DgKI?feature=shared
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
(ஈனும்-தரும்;இன்னா-துன்பம்; கோள்-துணிபு/கொள்கை)
நல்லூற்றம் (Right Intention) மார்க்கத்தின் இரண்டாம் பிரிவாகும். ஊற்றம் என்றால் அறிவு.
இந்தப் பிரிவைப் பகுத்தாய்ந்த புத்தர், மூன்று விதமான நல்லூற்றம் இருப்பதாகக் கூறுகிறார்:
1. துறவு பற்றிய எண்ணம், பற்று நீக்கும், புலன் இன்பங்கள் நாடுவதை கட்டுப்படுத்தும் நோக்கம்.
2. வெறுப்புக் கொள்ளாமல் இருத்தல் அல்லது நட்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற நோக்கம்.
3. தீமை செய்யாமல் இருத்தல் (அகிம்சை) அல்லது இரக்கத்தோடு இருக்கும் நோக்கம்.
இந்த இரண்டாம் பிரிவாகிய நல்லூற்றம், விஷ வேர்களான காமம் (பேராசை) மற்றும் வெகுளியை (வெறுப்பு) தணிக்க உதவுகிறது.
https://youtu.be/ydWvT2uVnxE?feature=shared
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
(உண்ணற்க-உண்ண வேண்டாம் ஒரு போதும்;
அற்கு-தல்-நிலைபெறுதல்;
உணில்-அப்படி உண்டால்;
எண்ணப்படு-தல் -மதிக்கப்படுதல்)
கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம். — மு. வரதராசன்
எந்நேரமும் அக்கறையுடன், மனத் தெளிவுடன் இருக்க வேண்டும் என்று புத்தர் கூறினார். ஆனால் மது அருந்தும் போது அந்த மனத் தெளிவு கெடுகிறது. மனத் தெளிவு இல்லாத போது சரியானது எது, தவறானது எது என்று பாகுபடுத்த முடியாமல் போகிறது.
தீக நிகாயம் 31 சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
மதுபானம் அருந்துவதால் உள்ள ஆபத்து
வழக்கமாக மதுபானம் அருந்துவதால் உண்டாகும் ஆறு ஆபத்துக்களிவை:
1. செல்வம் நாசமாதல்.
2. சண்டை சச்சரவு அதிகரித்தல்.
3. நோய் பிணி உண்டாதல்.
4. கெட்ட பெயரெடுத்தல்.
5. நாணமற்ற செயலில் ஈடுபடுதல்.
6. புத்திஞானக் கெடுதல்.
https://youtu.be/nzrOE4LLBPE?feature=shared
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
(பணிவு-செருக்கின்மை, அடக்கம்;
தகைத்து-தன்மையுடையது)
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும். — மு. வரதராசன்
மங்கள சுத்தத்தில் (சுத்த நிபாதம் Snp 2.4) 38 மங்களங்கள் கூறப்பட்டுள்ளன. அதன் நடுப்பகுதியில் வரும் சில வரிகள்:
பாலி மொழியில்:
Gāravo ca nivāto ca,
santuṭṭhi ca kataññutā;
Kālena dhammassavanaṁ,
etaṁ maṅgalamuttamaṁ.
தமிழில்:
மதித்தல், பணிதல்,
திருப்தியாதல், செய்ந்நன்றியறிதல்,
சரியான நேரத்தில் அறவுரை கேட்டல்
இவை உத்தமமான மங்களங்கள்.
"Gāravo ca nivāto ca"
Gāravo காரவோ என்றால் மரியாதைகாட்டுதல், கௌரவிப்பது.
nivāto நிவாதொ என்றால் பணிதல், செருக்கின்மை
பகவான் புத்தர் செருக்கு ஒரு மிக ஆபத்தான மன மாசு என்றார். நான் நான் என்று அகம்பாவத்தை, தலை கனத்தை தூக்கி விடும் இந்த செருக்குக்கு பரிகாரம் தான் பணிவு.
அவமரியாதையுடனும் செருக்குடனும் இருப்போர் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஞானம் உள்ளவர்கள் அவர்களுடன் சேர விருப்பப்பட மாட்டார்கள். ஞானம் உள்ளவர்களுக்கு அப்படிப்பட்டவர்கள் தேவையில்லை. ஆனால் ஞானமுள்ள ஒருவரிடம், அறிவு உள்ள ஒருவரிடம் மரியாதை காட்டும் போது, அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் விருப்பம் காட்டும் போது அதுவே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
மரியாதையும் பணிவும் இருக்கும் போது பௌத்தப் பாதையில் முன்னேறலாம். ஆசிரியர்கள் நமக்கு கற்பிக்க விருப்பப்படுவார்கள்.
(தர்ம உரைகளிலிருந்து தொகுத்தது)
https://youtu.be/JxSfVLcPmXA?feature=shared
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
(இனிதீன்றல்-இனிது+ஈன்றல்
எவன்கொலோ-எதனாலோ?)
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
— மு. வரதராசன்
சுத்த நிபாதம் Snp 3.3 சுபாசித சுத்தம் (நன்றாகப் பேசுவது)
(சுருக்கம்)
பகவான் புத்தர் கூறினார்:
“துறவிகளே, நான்கு நற்பண்புகளை இயல்பாகக்கொண்ட பேச்சு நற்பேச்சாகும், குற்றம் குறையற்ற பேச்சாகும் சான்றோர்களால் கண்டிக்கப்படாத பேச்சாகும். அந்த நான்கு பண்புகள் யாவை?
1. ஒரு துறவி எப்போதும் நன்மை பயக்கும் நல்ல பேச்சே பேசுகிறார், தீமை பயக்கும் மோசமான பேச்சு பேசுவதில்லை;
2. நேர்மையான நியாயமான பேச்சே பேசுகிறார், நேர்மையற்ற அநியாயமான பேச்சு பேசுவதில்லை;
3. பிரியம் உண்டாக்கும் இனிமையான பேச்சே பேசுகிறார், வெறுப்பூட்டும் கடுமையான பேச்சு பேசுவதில்லை;
4. உண்மையான பேச்சே பேசுகிறார், பொய்யான பேச்சு பேசுவதில்லை.
இந்த நான்கு பண்புகளையும் கொண்ட பேச்சு நற்பேச்சாகும், குற்றம் குறையற்ற பேச்சாகும், சான்றோர்களால் கண்டிக்கப்படாத பேச்சாகும்.
அப்போது மதிப்பிற்குரிய வங்கீசர், தமது இருக்கையிலிருந்து எழுந்து, மேலாடையை சரி செய்து தோலின் மீது போர்த்திக்கொண்டு, தமது இரு கைகளையும் நெஞ்சுக்கு எதிரே தாமரை மொக்கு போல குவித்து வைத்து புத்தரை வணங்கி, புத்தரின் அனுமதியோடு, கீழ்க்கண்ட உள்ளம் கவரும் பாடல்களைக் கூறினார்:
"தன்னையும் துன்புறுத்திக் கொள்ளாத, மற்றவர்களுக்கும் தீங்கிழைக்காத பேச்சே பேசுவோமாக. அந்த பேச்சே உண்மையில் நல்ல பேச்சாகும்.
பிரியமூட்டும் இனிமையான பேச்சே பேசுவோமாக. மற்றவர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்கும் பேச்சு, யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காத பேச்சு, அனைவருக்கும் இனிமையாக இருக்கும் பேச்சே பேசுவோமாக.
உண்மையில், வாய்மையே மரணத்தை வெல்லும் பேச்சாகும்; இது தொன்மையான கோட்பாடாகும், இலட்சியமாகும், தம்மமாகும்- மெய்ம்மையில் உறுதியாக நிலைபெற்று அமைதியில் திளைத்திருப்போர் மொழிவது இதுவேயாகும்.
போதி மர நிழலில் மெய்ஞானம் உணர்வு பெற்ற புத்தர் பேசும் பேச்சு, கட்டுகள் தளைகள் அற்று பேரமைதியை அடைவதற்கான பேச்சு, துக்கம் துயரமாகிய சுமைக்கு முடிவு காண்கின்ற பேச்சு - அது விஞ்சவொண்ணா நற்பேச்சு, ஒப்பும் உயர்வுமற்ற நற்பேச்சு."
(ஓ. ரா. ந. கிருஷ்ணன் மொழிபெயர்ப்பு)
https://youtu.be/pr-ZuZYtGes?feature=shared
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
- மு. க உரை
புத்தர் கூறினார்:
"....நீங்களும் நானும் (பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற) சஞ்சார (Saṃsāra) சக்கரத்தில் நீண்ட காலம் சுற்றிச் சுற்றி வந்துள்ளோம்."
பௌத்த மரபில் எப்போது இந்த பயணத்தை தொடங்கினோம் என்பது ஒதுக்கப்பட வேண்டிய கேள்வி. எப்போது தொடங்கினோம், யார் தொடக்கி வைத்தார்கள் என்பதை தெரிந்து எந்த பயனும் இல்லை. இப்போது பிறவி எடுத்து விட்டோம். அதனால் துன்பம் அனுபவிக்கின்றோம். இந்த துன்பத்தை எப்படி முடிப்பது என்பது தான் முக்கியமான கேள்வி. அதை உன்னதமான எண் வழி மார்க்கம் மூலமாக, ஒவ்வொருவரின் சொந்த முயற்சி கொண்டு மட்டுமே முடிக்க முடியும். மற்ற சில தர்மங்களில்/மதங்களில் இந்தப் பயணத்தை ஒரு கடவுள் நம்மை படைத்து தொடக்கி வைத்ததாக சொல்வார்கள். ஆனால் அந்த கடவுளை யார் படைத்தது என்று கேட்டால், அது ஒதுக்க வேண்டிய கேள்வி என்பார்கள்.
பௌத்த மரபில் தோன்றச்செய்யும் கடவுள் என்ற கருத்துக்கு தேவை ஏற்படவில்லை. பௌத்த மரபிலும் தேவலோகங்கள் இருக்கின்றன. அங்கு வாழ்வோரை சில சமயம் கடவுள் என்று கூட சொல்வதுண்டு. ஆனால் அவர்களும் சஞ்சார சக்கரத்தில் சிக்கியவர்கள் தான். ஒரு நாள் மரணம் எய்துவார்கள். மீண்டும் எங்கே பிறப்பார்கள் என்பது அவர் அவர்களின் கன்மத்தை பொறுத்தது.
புத்தரின் ஒன்பது பண்புகளை நினைவு கூறல்:
பாலி மொழியில்:
இதிபிஸோ பகவா
1. அரஹம்,
2. சம்மா-சம்புத்தோ,
3. விச்சா சரண சம்பண்ணோ,
4. சுகதோ,
5. லோகவிது,
6. அனுத்தரோ புரிச தம்ம சாரதி,
7. சத்தா தேவ மனுஸ்ஸானம்,
8. புத்தோ,
9. பகவா'தி.
சம்மா-சம்புத்தோ என்றால் எந்த ஆசிரியரின் உதவியும் இல்லாமல், தன் சொந்த முயற்சியால் முழுமையாக விழிப்புற்று, நான்கு உன்னத உண்மைகளை உய்த்துணர்ந்து உலகுக்கு போதித்தவர். இருள் சூழ்ந்த உலகத்தில் வெளிச்சத்திற்கு முதலில் வழிகாட்டியது புக்தரே. எனவே அவர் ஆதி.
பகவா என்றால் ஆசீர்வதிக்கப்பட்டவர். எனவே புத்தர் பகவா என்றும் அழைக்கப்பட்டார்.
அகராதியிலிருந்து பகவன் என்றால் புத்தரை குறிக்கும், முழுமையாக ஞானம் பெற்ற அருகரையும் குறிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பகவன் pakavaṉ , n. பகவான். 1. See பகவான், ....... 3. Arhat; அருகன். (திவா.) 4. Buddha; புத்தன். (திவா.) 5. Brahmā; பிரமன். (பிங்.) 6. Viṣṇu; திருமால். ........
எனவே ஆதி பகவன் புத்தர் என்று கருதலாம்.
https://youtu.be/8UkMzvl1gv4?feature=shared
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
(நடுவின்றி-நேர்மையின்றி
நன்பொருள்-நேர்மையான வழியில் பெற்ற பொருள்
வெஃகல்-பேராசை
பொன்று-தல்-அழிதல்.
குற்றம்-பழி)
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
— மு. வரதராசன்
தம்மப்பதம் 335
இந்த உலகில் உள்ள இழிந்த ஆசைகளுக்கும் பற்றுகளுக்கும் அடிமையாகிவிட்டவனுக்கு
துக்கங்கள் கனமழை பெற்ற புல்லைப் போல அதிகரிக்கின்றன.
தம்மப்பதம் 336
இந்த உலகில் கடக்க மிகவும் கடினமான இழிந்த ஆசைகளை வெல்லும் ஒருவனிடமிருந்து துக்கங்கள், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் ஓடிவிடுவது போல, மறைந்து விடுகின்றன.
https://youtu.be/MfAf9nI8wAk?feature=shared
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(அளவிறந்து-அளவு கடந்து)
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்
— மு. க உரை
விபாக சுத்தம் (அங்குத்தர நிகாயம் AN8:40)
(வினைப்பயன்)
புத்த பகவான் கூறுகிறார்:
"திருடுதலில் ஈடுபடுவது, அதை வளர்ப்பது, அதில் தொடர்ந்து செயல்படுவது—அது நரகத்திற்கும், மறுபிறப்பில் சாதாரண விலங்காகவும், பசி தீராத பேய்களின் உலகத்திற்கும் வழிவகுக்கும். திருடுதலால் ஏற்படும் விளைவுகளில் மிகச் சிறியது, ஒருவர் மீண்டும் மனிதராக பிறக்கும்போது, அவருடைய செல்வத்தை இழப்பதற்கு அது வழிவகுக்கும்."
https://youtu.be/7JGP-CcV7B0?si=AGvYR-sjVlkgXUBU
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
(இடுக்கண் படினும் - இக்கட்டு வந்தாலும்; நடுக்கற்ற-நடுக்கம் இல்லாத; காட்சியவர்-தெளிவினை உடையார்)
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
— மு. வரதராசன்
அனாதபிண்டிகர் புத்த சாசனத்தில் ஒரு தலைச்சிறந்த இல்லறத்தார். அவர் இயற்பெயர் சுதத்தர். ஆனால் அவர் புகலிடம் இல்லாதவர்க்கு (அனாதைகளுக்கு) தொடர்ந்து உணவு தானம் (பிண்டி) தந்தமையால் அவரை அனைவரும் அனாதபிண்டிகர் என்று அழைத்தனர்.
அவர் ஒரு செல்வந்தர். மேலும் சோதாபன்ன ஞான நிலையை அடைந்த தூய்மையானவர்.
அனாதபிண்டிகர், ஜேதவன மகாவிகாரையை அமைப்பதற்காக மட்டுமே 54 கோடி நிதி செலவிட்டார். புத்தர் ஜேதவனத்தில் தங்கும் போதெல்லாம் தினமும் மூன்று வேளை மிகுந்த மரியாதையுடன் புத்தரிடம் தரிசனத்திற்கு வந்தார். செல்லும்போதெல்லாம், 'இளைய பிக்குகள், சாமணர்கள் என் கைகளைக் கவனித்து, 'அவர் என்ன கொண்டு வந்தார்,' என்று பார்ப்பார்கள்' என்று நினைத்து, ஒருபோதும் வெருங்கையோடு செல்வதில்லை.
காலைப்பொழுது அரிசி கஞ்சி எடுத்துச் செல்வார், காலை உணவுக்குப் பிறகு நெய், அன்று கடையப்பட்ட வெண்ணெய் மற்றும் மருந்துகள், மாலைப்பொழுது பூக்கள், வாசனைப் பொருட்கள், தயிலம், உடைகள் என்று எதையாவது கொண்டு செல்வார்.
ஆனால், வியாபாரத்தில் ஈடுபட்டவர்களால் அவரிடம் வாங்கிய 18 கோடி நிதி கடன் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. மேலும், குடும்பத்தாரின் 18 கோடி நிதி, ஆற்றங்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது, பெரு வெள்ளம் கரை புரண்டு ஓடியபடியால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அவருடைய செல்வம் நாளடைவில் குறைந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார்.
அனாதபிண்டிகரின் இல்ல வாசலில் வாழ்ந்த ஒரு தேவதை, அவரிடம் புத்தரையும் அவருடைய சீடர்களையும் ஆதரிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினாள்; ஏனெனில் அதனால் தான் அவர் வறுமைக்கு தள்ளப்பட்டதாக அவள் நினைத்தாள். ஆனால் அனாதபிண்டிகர் அந்த தேவதையை கடிந்து கூறி, தன் இல்லத்திலிருந்து விரட்டிவிட்டார்.
முன்பு போலவே அவரது விருந்தோம்பல் தொடர்ந்தது. பிக்குச் சங்கத்திற்கு தினமும் தானம் அளித்தார். ஆனால் தன் வறுமை சூழ்நிலையின் காரணமாக முன்போல் சுவையான உணவுகள் தர முடியவில்லை.
ஒரு நாள் புத்தர் கேட்டார்:
“இல்லறத்தாரே, எங்களுக்கான உணவு தானம் இன்னும் உங்கள் இல்லத்தில் தரப்படுகிறதா?”
“ஆமாம் ஐயா, ஆனால் இப்போது வெறும் கஞ்சி, புளிக்காய்ச்சல் மட்டும் தான் தர முடிகிறது.”
அப்போது புத்தர் கூறினார்:
“இல்லறத்தாறே, ‘நான் ஆசானுக்கு தருவது சாதாரண உணவு’ என்று எண்ண வேண்டாம்; அதற்காக மனம் வருந்த வேண்டாம். தூய்மையான நோக்கத்தோடு தரும்போது, புத்தருக்கும் மற்றவருக்கும் தரப்படும் உணவு ஒரு போதும் மட்டமானதாகாது."
தூய்மையான உள்ளம் கொண்ட செல்வந்தராக இருந்த அனாதபிண்டிகர் ஏழையான போதும், அவருக்கு வறுமை என்ற துன்பம் வந்தடைந்தும், தீமை செய்யாது இருந்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து நற்காரியங்களை செய்து கொண்டு வந்தார்.
(ஆதாரம்: தம்மபதம் அத்தகதா 9.4)
https://youtu.be/FlQINZTjP64?feature=shared
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
(அவ்வியம்-பொறாமை,வஞ்சகம்; செவ்வியன்-நேர்மையுடைய வன்)
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.
— மு. வரதராசன்
தம்மப்பதம் 119
பாவி, புண்ணியமின்றி,
செய்த பாவம் பழுக்காத வரை நலனைக் காண்கிறான்;
ஆனால் பாவம் பழுத்ததும்,
அவனுக்கு பாவம் மட்டுமே தோன்றும்.
தம்மப்பதம் 120
நல்லவன், அவன்
செய்த புண்ணியம் பழுக்காத வரை துன்பத்தைச் சந்திப்பான்.
ஆனால் புண்ணியம் பழுத்ததும்,
அவன் நலனையே காண்பான்.
https://youtu.be/sxSHjzvgARY?feature=shared
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
(இரத்தல்-யாசித்தல்;ஈதல்-கொடுத்தல்:
கரத்தல்-மறைத்தல்;
தேற்றல்-தெளிந்தறிதல்
கரத்தல் தேற்றாதார்-மறைக்கத் தெரியாதவர்)
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
— மு. வரதராசன்
"தானம் தாங்கிச் சீலம் தலைநின்று"
என்று மணிமேகலை காதை 30 தொடங்குகிறது.
அதாவது, "தானத்தை மேற்கொண்டு;
ஒழுக்கங்களின் வழி நின்று;".
எனவே தானமும் சீலமும் பௌத்தப் பாதையின் அடித்தளம். இவை இரண்டும் புண்ணியம் சேற்கும் செயல்கள்.
தானம் செய்வதால் செய்தவர் புண்ணியம் சேர்கிறார்.
அவர் மனமுவந்து தருவதால்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் மகிழ்ச்சி பெற்று அவர்களும் புண்ணியம் சேர்த்திருப்பார்கள். மற்றவர் புண்ணியம் செய்வதை பார்த்துத்தாமும் மகிழ்வது என்பதை முதிதை என்பார்கள். (நம் மனதில் வெறுப்பு இருக்குமானால், அதற்கு பரிகாரம் முதிதை.)
இதற்கெல்லாம் காரணம் கேட்டவர் என்பதால் அவருக்கும் புண்ணியம் சேர்கிறது. எனவே இங்கு 'இரத்தலும் ஈதலே போலும்' (கேட்பதும் கொடுப்பதற்கு சமம்) என்றார் வள்ளுவர்.
https://youtu.be/BdsGOrUQWX4?feature=shared
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
(துறந்தார்-பற்றுவிட்டவர்;
துவ்வாதவர்-வறியவர்)
துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான் . — புலியூர்க் கேசிகன்
புத்த பகவான் தம் துறவி சங்கத்தை இல்லற மக்களை சார்ந்து இருக்கும் வகையில் அமைத்தார்.
துறவிகளுக்கான அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், ஆடைகள், மருந்து ஆகியவற்றை இல்லற மக்கள் பூர்த்தி செய்கின்றனர். இதனால் துறவிகள் தங்கள் மனதை மேம்படுத்துவதற்கு முழு நேரமும் முயற்சி செய்ய முடிகிறது. சங்கத்தார்க்கு இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது இல்லற மக்களுக்கு புண்ணியம் சேர்க்கும் வாய்ப்பாகும். இல்லற மக்களுக்கு நல்ல ஆன்மீக நண்பர்களாக துறவிகள் இருக்கின்றனர். தர்ம போதனைகளை தருவது மட்டுமின்றி தங்கள் நடத்தை மற்றும் பேச்சு மூலம் இல்லற மக்களுக்கு நல்ல உதாரணங்களாகவும் இருக்கின்றனர்.
வறுமையில் இருப்பவர்களுக்கு உணவோ அல்லது பொருள் உதவியோ செய்வது அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கிறது.
இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவர் எவ்வாறு துணையாவார்?
பௌத்த மரபில் நம்மை விட்டு பிரிந்த உறவினர்களுக்கு மரியாதைகாட்டும் வகையில், அஞ்சலி செலுத்தும் வகையில், அவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பெயரில் நாம் ஏதேனும் நல்ல காரியங்களை செய்து அதனால் வரும் புண்ணியத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இது அவர்களுக்கு தரும் பெரும் அன்பளிப்பு என்று புத்தர் கூறினார்.
இறந்த உறவினர் பெயரில் தானம் தரும்போது அவர்களைப் பற்றி இவ்வாறு நாம் மனதில் நினைத்துக் கொள்ளலாம்: 'அவர் உயிரோடு இருந்த போது எனக்கு இந்த செல்வத்தை கொடுத்தார். இவ்வாறு உதவி செய்தார். எனக்கு துணையாக இருந்தார்,' என்று நினைத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் இறந்து விட்டார்களே என்று அழுது புலம்புவது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவியாக இருக்காது. மேலும் அவர்களுக்கு பெரிய கல்லறை கட்டுவதும் அதனை அலங்கரிப்பதும் அல்லது கெடா வெட்டி உயிர்ப்பலி செய்வது போன்றவை எந்த விதத்திலும் உதவாது.
அவர்கள் பெயரில் புண்ணிய காரியங்கள் செய்வது மட்டுமே பலன் தரும். அன்னதானம் தருவது, பள்ளிக்கூடங்கள் கட்டுவது, மருத்துவமனைகள், நூல் நிலையங்கள் கட்டுவது, தர்ம புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக தருவது போன்ற புண்ணிய காரியங்களை செய்யலாம். மேலும் அவர்களை நினைத்து எல்லையற்ற அன்பை அனைத்து உயிர்களுக்கும் பரப்பளாம்.
ஒரு சில ஆவி உலகங்களில் பிறந்த உறவினர்களுக்கு தான் இந்த புண்ணியம் சென்றடைகிறது. நம் சஞ்சார பயணத்தில் எண்ணற்ற உறவினர்கள் இறந்துள்ளனர். அவர்களுள் சிலரேனும் அந்த ஆவி உலகத்தில் இருப்பார்கள். அவர்கள் நாம் செய்த புண்ணியத்தை தெரிந்து கொள்ளும்போது மிகவும் குதூகலம் அடைந்து அதன் காரணமாக அவர்கள் படும் துயரம் குறைவது மட்டுமல்லாமல்,
மீண்டும் மேல் பிறப்புக்கு வருவதற்கும் வழி வகுக்கிறது.
ஆதாரம்: What Buddhists Believe
Venerable K. Sri Dhammananda Maha Thera
https://youtu.be/wUSAAXpuKgk?feature=shared
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. (குறள் 259)
வேள்வித்தீயில் தேவர்க்குத் கொடுக்கும் நெய், இறைச்சி முதலிய உணவை (அவி) கொட்டி (சொரிந்து) ஆயிரம் யாகங்கள் (வேட்டல்) பண்ணுவதை விட ஒரு உயிரை கொன்று (செகுத்து) உண்ணாமல் இருப்பது நன்று
என்பது வள்ளுவர் வாக்கு.
ஏன் சைவ உணவு?
சைவ உணவிற்கு ஆதரவாக சொல்லப்படும் சில காரணங்கள்:
1. சைவ உணவு உடல் நலத்துக்கு நல்லது. மனித உடல் சைவ உணவுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
2. சைவ உணவு உற்பத்திக்கான தண்ணீர், நிலம் போன்ற தேவைகள் குறைவு. மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சைவ உணவு மட்டுமே அனைவரின் பசியாற்ற முடியும்.
3. அசைவ உணவு உற்பத்தியில் சுற்றம் சூல் மாசுபடுவது அதிகம். பிரேசில் போன்ற நாட்டுகளில் அடர்ந்த காடுகள் வெட்டப்பட்டுவதற்கான காரணம் மாட்டுப்பண்ணைகள் அமைப்பதற்காகவே.
4. சைவ உணவின் செலவுகள் குறைவு.
5. மனிதநேய வாக்குவாதம். புலால் உன்பது என்றால் விலங்குகளை கொல்ல வேண்டும். அது கொடுஞ்செயல் என்பதால் புலால் உன்பதை தவிர்க்க வேண்டும்.
பௌத்த அறநெறியை பொருத்தவரை மேல் கூறப்பட்ட கடைசி கருத்தை மட்டும் ஆராய்தல் வேண்டும்.
புத்தர் என்ன சொன்னார்?
திரிபிடகத்தின் எந்த பகுதியிலும் புத்த பகவான் புலால் உண்ணக்கூடாது என்று தனது சீடர்களிடம் கூறவில்லை. சீடர்கள் துறவிகளாகவும் இருக்கலாம், இல்லற மக்களாகவும் இருக்கலாம்.
திரிபிடகத்தின் சில பகுதிகளில் புத்தரும் துறவிமார்களும் புலால் உண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீவக சுத்தத்தில் புத்த பகவான் கூறுகிறார்:
"மூன்று சூழ்நிலைகளில் புலால் உண்ணக்கூடாது என்கிறேன். ஒரு உயிர் தனக்கென கொல்லப்பட்டதை பார்க்கும் போது, அதைப் பற்றி கேட்கும் போது, தனக்கென கொல்லப்பட்டதாக சந்தேகிக்கும் போது அந்த இறைச்சியை உண்ணக்கூடாது என்கிறேன். மூன்று சூழ்நிலைகளில் புலால் உண்ணலாம். தனக்கென கொல்லப்பட்டதை காணாதபோது, கேட்காத போது, தனக்கென கொல்லப்பட்டதாக சந்தேகிக்கவுமில்லாதபோது. இந்த மூன்று சூழ்நிலைகளில் இறைச்சி உண்ணலாம் என்கிறேன்."
இந்த வரிகளிலிருந்து புத்த பகவான் எந்த சூழ்நிலையில் புலால் உண்ணலாம் என்பதை தெளிவாக கூறியுள்ளார். பிக்குகள் மரக்கறி உணவை மட்டும் உண்ண வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தங்களுக்கென்று கொல்லப்படவில்லை என்று தெரிய வந்தால் அந்த புலாலை உண்ணலாம். அப்படிப்பட்ட இறைச்சி மூன்று வழிகளில் பரிசுத்தமானது என கூறப்படுகிறது. ஏனென்றால் அது கொல்லப்பட்டதை பார்க்கவில்லை, கேட்கவில்லை, தங்களுக்கென்று கொல்லப்பட்டதாக சந்தேகிக்கவும் இல்லை.
பிக்குமார்கள் உணவு யாசித்து வாழ்ந்தார்கள். நம்பிக்கை உள்ள இல்லற மக்கள், அவர்களின் பல்வேறு கடமைகளுக்கு இடையில், உணவை அளித்தார்கள். அந்த சூழ்நிலையில் பிக்குமார்கள் இது வேண்டும், அது வேண்டாம் என்று சொன்னால் இல்லற மக்களுக்கு அது ஒரு சுமையாக இருக்கும் என்று புத்தர் கருதி இருக்கலாம்.
இல்லற மக்களை பொருத்தவரை முதலாவது அறமானது கொல்லாமை.
அதாவது 'எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்,' என்று உறுதி எடுக்கிறோம் (பாலி மொழியில்: பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி).
ஆகையால் இல்லற மக்கள் தங்கள் உணவுக்கென்று ஒரு உயிரைக் கொல்லக் கூடாது. கொன்றால் அந்த விதியை பின்பற்றவில்லை என்று கருதப்படும். ஆனால் ஏற்கனவே இறந்து விட்ட ஒரு விலங்கின் இறைச்சியை கடையில் வாங்கி வீட்டில் சமைப்பதற்கு தடை ஏதும் இல்லை.
ஜீவக சுத்தத்தில் புத்தபகவான் மேலும் கூறுகிறார்:
"ஜீவகா, ஒருவர் புத்தருக்காக அல்லது புத்தரின் சீடருக்கென்று ஒரு உயிரை கொல்லும்போது, ஐந்து காரணங்களால் மிகுந்த பாவத்தைச் சம்பாதிக்கிறார்.
'போய் அந்த உயிரை கொண்டு வா,' என்று கூறும்போது, இது முதல் காரணம்.
அந்த உயிர் கழுத்துப்பட்டையால் இழுக்கப்படும்போது துன்பமும் துக்கமும் அனுபவிக்கிறது; இது இரண்டாவது காரணம்.
'போய் அந்த உயிரை கொன்றுவா,' என்று கூறும்போது, இது மூன்றாவது காரணம்.
அந்த உயிர் கொல்லப்படும்போது துன்பமும் துக்கமும் அனுபவிக்கிறது; இது நான்காவது காரணம்.
புத்தருக்கோ அல்லது அவரது சீடருக்கோ அனுமதிக்கப்படாத உணவை வழங்கும்போது (அவர்களுக்கென்றே கொல்லப்பட்டது என்பதால்), இது ஐந்தாவது காரணம்.
எனவே, ஒருவர் புத்தருக்காக அல்லது அவரது சீடருக்காக ஒரு உயிரை கொல்வதனால், ஐந்து காரணங்களால் மிகுந்த பாவம் ஏற்படுகிறது."
ஆகவே உணவு தரும் இல்லற மக்கள் பிக்குமார்களுக்கென்று ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உயிர்களுக்கு மரியாதை
அதேசமயம் புத்தரின் பல போதனைகளில் என்ன சொல்லப்படுகிறது?
1. உயிர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்ற கருத்தினை பரவலாக சுத்தங்களில் காணலாம்.
2. அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து ஒழுக்கங்களுள் முதலாவது கொள்ளாமை பற்றியது என்றாலும், இன்னல் செய்யாமையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம்.
3. மேலும் மற்றவர்களையும் உயிர்களை கொள்ளாமல் இருக்கவும், தீங்கு செய்யாமல் இருக்கவும் நாம் ஊக்குவிக்க வேண்டும். அதுவும் முதல் அறத்தை சார்ந்து வருகிறது.
4. எல்லா உயிரிடத்திலும் அன்பும், இரக்கமும் காட்டுவது நல்லூற்றத்தின் (ஊற்றம்-அறிவு) ஒரு அம்சமாகும்.
5. மேலும் நல்வாழ்க்கை (நற்சீவனோபாயம்) என்ற எண்வழி மார்க்கத்தின் மற்றொரு அம்சத்தை விளக்கும் போது புத்தர் தமது சீடர்களிடம், மற்ற உயிர்களுக்குத் தீங்கு பயக்கும் எந்தத் தொழிலையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குறிப்பாக அதில் ஒன்று இறைச்சியைக் கொண்டு தொழில் செய்தல், அதாவது கசாப்புக்கடை நடத்துவது போன்ற தொழில்
கூடாது என்றார்.
(குறள் 256 காண்க:
புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.
— மு. க. உரை)
இந்த போதனைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சைவ உணவை உண்ணுதல், உலகில் மனித பயன்பாட்டுக்காக வளர்க்கப்படும் விலங்குகள் அனுபவிக்கும் துன்பத்தை குறைக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
நடுநிலை பாதை
புத்த பகவான் ஒரு நடுநிலை பாதையை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைவ உணவை மட்டும் உண்பதா கூடாதா என்ற வாக்குவாதத்திலும் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வரம்பில், 'நான் சைவம்! நான் சைவம்!' என்று மார்தட்டுபவர்கள் உள்ளனர். சைவ உணவு மட்டுமே உண்பதை கடைப்பிடிப்பதால் 'தாம் உயர்ந்தோர்' என்ற மனப்பான்மை கொண்டவர்கள். இது தீய விளைவுகளுக்கு எடுத்துச் செல்லும் தவறான காட்சி. அப்படிப்பட்டவர்களில் சிலர் பட்டு வேட்டியும், பட்டு சேலையும் கட்டுவதற்கு தயங்க மாட்டார்கள். அந்த பட்டு சேலை செய்வதற்கு எத்தனை ஆயிரம் பட்டு பூச்சிகள் கொல்லப்பட்டன என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். 'நான் கடையில் தானே வாங்கினேன். அந்த பூச்சிகளை நான் கொல்லவில்லையே!' என்று அவர்கள் வாதிடுவார்கள்.
மேலும் சைவ உணவாக இருந்தாலும் அந்த உணவின் உற்பத்தியில் எண்ணிலடங்கா பூச்சிகளும், சிறு உயிர்களும் கொள்ளப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.
ஏர் உழும் போது பல உயிர்கள் சாகின்றன. "பூச்சி மருந்து" என்று மறைமொழியாக அழைக்கப்படும் நச்சு ரசாயனங்கள் பரவலாக தெளிக்கப்படுகின்றன. இந்த உயிர் கொல்லிகளால் வேண்டாத பூச்சிகள், வேண்டிய பூச்சிகள், தவளைகள், பறவைகள் என்று பல உயிர்கள் மாண்டு போகின்றன.
மறு வரம்பில் தாங்கள் அசைவம் மட்டுமே உண்பதாக பெருமையாக சொல்லிக் கொள்ளும் மக்களும் இருக்கின்றனர். 'உண்மையில் நாங்கள் சைவம் தான், ஏனென்றால் இலையுணவுகொள்ளும் விலங்குகளை மட்டுமே தின்போம்,' என்று நக்கலாகவும் சொல்வார்கள். இறைச்சி சாப்பிடுவது தங்கள் செல்வத்தின் அடையாளமாக கருதுபவரும் உள்ளனர். சிறுவயதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இறைச்சி சாப்பிடும் பழக்கம் அப்போது தங்கள் குடும்பத்தின் வறுமையின் காரணமாக என்று நினைப்பவர்கள்.
புத்த பகவான் இரு வரம்புகளையும் தவிர்க்க சொல்வார்.
புலால் உண்பதை குறைத்துக் கொள்ளலாம்.
தினமும் மூன்று வேளை இறைச்சி உண்பவர்கள் அதனை தினம் ஒரு வேலை என்று குறைத்துக் கொள்ளலாம், அல்லது வாரம் நான்கு ஐந்து தடவை உண்பவர்கள், வாரம் ஒரிரு முறை என்று குறைத்துக் கொள்ளலாம்.
ஒருவர் சைவமாக இருக்கலாம். ஆனால் அவர் வீட்டுக் குழந்தைகள் அல்லது கணவன்/மனைவி அசைவத்தை விரும்புபவர்களாக இருந்தால்? அப்படி இருக்கும் போது அவர்களுக்கென்று அசைவ உணவும், தனக்கென்று சைவ உணவும் ஒவ்வொரு முறையும் செய்வது சாத்தியமாக?
ஒருவர் ஒரு குடும்பத்தினருக்கு உதவி செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை விருந்துக்கு அழைக்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பே சொல்லிவிட்டனர். இரண்டு வாரங்களாக அவர்கள் மிகவும் ஆவலுடன் அவரை உபசரிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டமிட்டு, அவரை அழைத்த நாள் வரும் போது அவருக்கென்று பல விதமான இறைச்சிகளை சமைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் அவர், தான் சைவம் என்பதை அவர்களிடம் முன்கூட்டியே சொல்லவில்லை. அங்கு சென்றவுடன் என்ன செய்வது? அன்பும், நன்றி உணர்வும் கலந்து செய்யப்பட்ட இறைச்சியை உண்பதா அல்லது உண்ண மறுத்து அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதா?
சில குடும்பங்கள் சேர்ந்து அன்னதானம் தருகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அதில் இறைச்சி வகைகளும் உள்ளன. அப்போது அவர்களிடம் இது வேண்டாம், அது வேண்டாம் என்று சொல்வது சரியா? அப்படி சொன்னால் அடுத்த முறை எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டிய நிலையில், அவர்கள் மேலும் சிரமப்பட்டு உணவு சமைத்து வர வேண்டி இருக்கும் அல்லவா?
ஆகவே பௌத்த பாதை ஒரு நடுநிலை பாதை என்பதை நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் இந்த விவகாரத்தில் அவர் அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்ய வேண்டும். புலால் உண்பது கூடாது என்று திருவள்ளுவர் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். தம்ம போதனைகளை செவிமடுத்தபின் சைவ உணவு உண்பதை நோக்கி செல்வது சரியென தோன்றுகிறது. அதே சமயம் முக்கியமாக இரு வரம்புகளையும் தவிர்ப்பது நல்லது.
*
ஆதாரம்:
1. To Eat or Not to Eat Meat. A Buddhist Reflection - S Dhammika
2. Jīvaka Sutta மஜ்ஜிம நிகாயம் 55
https://youtu.be/PtELnbK8Ax4?si=OiOJcdNABKsskx32
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
(வசை-குற்றம்;
இசை-புகழ்;
எச்சம்-மிச்சம்)
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
— மு. வரதராசன்
பௌத்த மரபில் புகழை நாடிச் செல்வது போற்றப்படுவதில்லை. அவ்வாறு புகழை நாடிச் செல்வது ஒரு சுமையாக கருதப்படுகிறது. அது புறம் சம்பந்தப்பட்டது. ஆணவத்தை அதிகரிக்கும் விஷயம். மேலான இலக்கு என்ன? அக அமைதியும், மணமாசுகள் நீக்கி துக்கத்திலிருந்து விடுபடுவது தான். புகழை நாடிச் செல்வது இதற்கு ஒரு தடையாகவே இருக்கும்.
ஆனால், நம்பிக்கையும் நற்குணமும் உள்ள ஒருவருக்கு தானாகவே செல்வமும் புகழும் வந்து சேர்கிறது. அதன் காரணமாக எங்கு சென்றாலும் அவர் போற்றப்படுகிறார்.
நம்பிக்கை என்பது மும்மணிகள் மீது நம்பிக்கை. புத்த பகவான் தன் சொந்த முயற்சியினால் முழுமையாக ஞானம் பெற்றார் என்பதில் நம்பிக்கை. துவக்கத்தில் சில போதனைகளை கேட்டிருப்போம். சில தம்ம நூட்களை படித்திருப்போம். கொஞ்சம் தானம் செய்திருக்கும். ஒழுக்கத்தை ஒரு அளவுக்கேனும் கடைப்பிடித்திருப்போம். அது நமக்கு நல்ல விளைவுகளை தருவதை கவனித்த பின், 'சரி இந்த பாதையில் தொடர்ந்து சென்றால் மேலும் மகிழ்ச்சியும், ஏன் - துக்கத்தின் முடிவுக்கும் எடுத்துச் செல்லும்,' என்கிற நம்பிக்கை பிறக்கிறது. ஆகவே இது கண்மூடித்தனமான நம்பிக்கை அல்ல. இதுவரை செய்த பயிற்சியின் பயனை கண்ட பின் வந்த நம்பிக்கை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் பாதையில் தொடர்ந்து செல்ல மாட்டோம்.
அப்படிப்பட்ட நம்பிக்கை மற்றும் நல்ல பண்புகளின் காரணமாக வரும் புகழையே வள்ளுவரும் போற்றுகிறார்.
தம்மபதம் 303
நம்பிக்கையும் நற்குணமும் உடையவர்,
புகழும் செல்வமும் பெறுகிறார்.
அவர் செல்லும் இடமெல்லாம் உபசரிக்கப்படுவார்.
https://youtu.be/3lTZ2-eB9Ts?si=z3lVKps74yS2yghA
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
(ஒன்றாமை-பகைமை;
ஒன்றியார்-தன்னைச்சேர்ந்தவர்;
ஒன்றியார் கட்படின் - ஒன்றியார்கண் படின்;
படின்-ஏற்பட்டால்;
பொன்று-தல்-அழிதல்
பொன்றாமை-அழியாத தன்மை
ஒன்றுதல்-இணைதல்)
ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.— மு. கருணாநிதி உரை
புத்த பகவானின் கடைசி நாட்கள் மகா பரிநிப்பாண சூத்திரத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அந்த சமயத்தில் நடந்தது.
மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரன் வைசாலியை தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்த வஜ்ஜியர்களைத் தாக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டான். அவன், "அந்த வலிமையான வஜ்ஜியர்களை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்! நான் வஜ்ஜியர்களை அழித்து விடுவேன்! நான் அந்த வஜ்ஜியர்களை நாசப்படுத்தப் போகிறேன்," என்ற எண்ணத்துடன் அவனுடைய தலைமை மந்திரியை புத்த பகவானிடம் அனுப்பி அவருடைய கருத்தை கேட்டறிந்து வருமாறு சொன்னான்.
அப்போது புத்த பகவான் வஜ்ஜியர்கள் ஒற்றுமையாக இந்த ஏழு கோட்பாடுகளைப் பின்பற்றுவதால் அவர்களை அழிக்க முடியாது என்று கூறினார்.
1. வஜ்ஜியர்கள் தொடர்ந்து சந்தித்து, அடிக்கடி கூட்டங்களை நடத்தும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
2. வஜ்ஜியர்கள் ஒற்றுமையுடன் சந்தித்து, ஒற்றுமையுடன் பிரிந்து, ஒற்றுமையுடன் தங்கள் செயல்களை மேற்கொள்ளும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
3. வஜ்ஜியர்கள் புதிய உத்தரவுகளை பிறப்பிக்காமல், பழைய உத்தரவுகளை ரத்து செய்யாமல், பழங்கால வஜ்ஜிய மரபுகளைப் பின்பற்றி செயல்படும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
4. வஜ்ஜிய மூத்தோர்களை மதித்து, மரியாதை செய்து, வணங்கி, அவர்கள் கூறும் வார்த்தைகளை கேட்கத் தகுதியானவையாகக் கருதும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை
5. வஜ்ஜியர்கள் தங்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக கடத்தி தங்களுடன் வாழ வைக்காமல் இருக்கும் வரை, அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
6. ஊர் எல்லையின் உள்புறமாகவோ வெளிப்புறமாகவோ உள்ள வஜ்ஜிய புனித இடங்களை மதித்து, மரியாதை செய்து, வணங்கி, கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஆன்மிக அர்ப்பணங்களை புறக்கணிக்காமல் இருப்பின், அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
7. வஜ்ஜியர்கள் அருகர்களுக்கான (ஞானம் பெற்றவர்) தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, மேலும் அருகர்கள் அந்த நாட்டிற்கு வரவும், வந்தவர்கள் நிம்மதியாக வாழவும் ஏற்பாடு செய்வதால், அவர்கள் வளர்ச்சி பெறுவார்; வீழ்ச்சி இல்லை.
புத்தர் இவ்வாறு வஜ்ஜியர்கள் ஒற்றுமையாக இருக்க ஏழு காரணங்களை கூறினார்.
இதைக் கேட்ட மகத நாட்டு முதல் மந்திரியான வஸ்ஸகாரர் என்ற பிராமணர் பகவரிடம், "அன்புக்குரிய கோதமரே, வஜ்ஜியர்கள் இந்த அழிவைத் தடுக்கும் கோட்பாடுகளில் ஒன்றைக் கடைபிடித்தாலே அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏழு கோட்பாடுகளையும் கடைப்பிடிக்கும் போது என்னவென்று சொல்வது? மகத மன்னனான அஜாதசத்துரு வேதஹிபுத்திரரால் வஜ்ஜியர்களைப் பலவந்தமாக, ஆயுதங்களைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது - அவர்களை அடக்க வேண்டுமானால், அவர்களோடு நட்புக் கொண்டதாகப் பாசாங்கு செய்து, (அவர்கள் மத்தியில்) பிளவு ஏற்படுத்தினால் தான் முடியும்," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
சில காலத்தின் பின் அவ்வாறே வஜ்ஜியர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையை முறித்து அவர்களை போர் செய்யாமலே மகத நாட்டு மன்னன் வென்றான் என்று உரைகள் கூறுகின்றன.
ஆதாரம்: மகா பரிநிப்பாண சூத்திரம் (நீண்ட போதனைகள் DN 16)
https://youtu.be/WHOUlXkP0e4?si=ahu8gjDF4JrIjj-I
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
(துறந்தார்-பற்றுவிட்டவர்
துணைக்கூறின்-அளவு கூரின்;
கொண்டற்று - கொண்டால் + அற்று; அற்று-அத்தன்மையது)
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.
— மு. வரதராசன்
துறந்தார் என்பது முழுமையாக ஞானம் அடைந்தவரை குறிக்கும். பௌத்த மரபில் அவர்களை அருகர் (பாலி-அரஹந்தர்) என்பர்.
அருகரின் பண்புகள் இவை:
அருகர் காம ஆசைகளை ஒழித்தவர், மேலும் காம ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்.
அருகர் வெறுப்பை ஒழித்தவர், மேலும் வெறுப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்.
அருகர் மாயையை ஒழித்தவர், மேலும் மாயையிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்.
அருகர் அனைத்து மாசுகளையும், தீய எண்ணங்கள், தீயசொற்கள் மற்றும் தீயசெயல்களை ஒழித்தவர். அருகர் எந்த தவறான செயலையும்— இரகசியமாகவும்— செய்வதில்லை.
அருகர் உருவங்களைப் பார்ப்பதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் ஒலிகளைக் கேட்பதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் வாசனைகளை நுகர்வதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் சுவைகளை ருசிப்பதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் தொடும் பொருட்களைத் தொடுவதற்கான ஆசையை ஒழித்தவர். அருகர் எண்ணங்களை உணர்வதற்கான ஆசையை ஒழித்தவர்.
அருகர் புலன்களை (கண், மூக்கு, செவி, நாக்கு, உடல், மனம் ஆகிய புலன்களை) பாதுகாத்தவர், புலன்களை கட்டுப்படுத்தியவர், புலன்களை அடக்கியவர்.
அருகர் அனைத்து மாசுகளையும் முற்றாக அழித்தவர். மேலும் உடல், சொல், மனதில் முழுமையாக தூய்மையடைந்தவர்.
அருகர்கள் சஞ்சாரத்திலிருந்து (பிறப்பு இறப்பு பிறப்பு என்ற தொடர் சுழற்சியிலிருந்து) தப்பிவிட்டவர்கள். மீண்டும் பிறப்பெடுக்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட பண்புகளை கொண்ட அருகரின் பெருமையை எண்ணி சொல்லிவிட முடியுமா?
நாம் ஒவ்வொருவரும் சஞ்சார சுழலில் கணக்கிலடங்கா முறை பிறந்து இறந்துள்ளோம். எத்தனை முறை என்று கணக்கிட முடியுமா? முடியாது. அதுபோலத்தான் துறந்தார் பெருமையையும் பட்டியலிட்டு சொல்ல முடியாது.
ஆதாரம்: Buddhānussati Meditation - Reflection on the Qualities of the Supreme Buddha. Mahamevnawa Monastery
https://youtu.be/d3zjanNSExA?si=Lj3yuNHrMjaLsN_H
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(உடம்பாடு-சம்மதம்;
குடங்கர்-குடிசை;
உறை-தல்-வசித்தல்;
அற்று-அத்தன்மையது)
மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
— சாலமன் பாப்பையா
துக்கம் என்ற உயர் வாய்மை இதுவே. பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், பிணி துக்கம், சாக்காடு துக்கம், அவலக்கவலைக் கையாறு எல்லாம் துக்கமே. வேண்டாதாரோடு சேர்வது துக்கம், வேண்டியவரை விட்டுப் பிரிதல் துக்கம். விரும்பியதைப் பெறாவிட்டால் துக்கம். சுருக்கமாகக் கூறுவதானால் உபாதானப் பஞ்சக்கந்தமும் துக்கமே.
ஆகவே வேண்டாதாரோடு சேர்வது துக்கம் என்பது முதல் உயர் வாய்மையிலேயே அடங்கியுள்ளது. அப்படிப்பட்டவர் நமக்கு எரிச்சல் மூட்டலாம். நம் கோபத்தைக் கிளறலாம். நமக்கு பலவிதத்தில் இன்னல்கள் தரலாம்.
சில சூழ்நிலைகளில் அப்படிப்பட்டவரை விலகிச் செல்வது நல்லது. ஆனால் உடனடியாக விலகிச் செல்ல முடியாத நிலைமையும் இருக்கலாம். வீட்டு சூழ்நிலை என்றால் குழந்தைகளைப் பற்றி எண்ண வேண்டியிருக்கும். நம் மேல் அதிகாரியோடு ஒத்துப்போக முடியவில்லை என்றால் அவ்வளவு சுலபமாக வேலையை மாற்ற முடியாது. விலகிச் செல்ல சில காலம் தேவைப்படும். மற்றவரின் ஆலோசனை பெறுவதும் நல்லது.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும்
நாம் பொறுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். நிதானமாக சிந்திக்க வேண்டும். அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் நினைத்து பார்க்கலாம்.
அவர்கள் பேசுவதை கேட்க நமக்கு பிடிக்கவில்லை என்பதால் நமக்கு கோபம் வருகிறது என்றால், அது நமக்குள்ள குறை தான். கோபம் ஒரு நோய். அப்போது அவரை நம்மை சோதிக்க வந்த ஒரு ஆசானாக கூட நினைத்துக் கொள்ளலாம்.
மனதை அன்பால் நிரப்பிக் கொள்ளலாம். நம்மையே நாம் நேசிக்க வேண்டும். நாம் நம்மையே நேசிக்கும் போது கோபப்படுவதற்கு ஒரு போதும் விருப்பப்பட மாட்டோம். நாம் நம்மையே நேசிக்கும் போது தான் மற்றவர் மீது நாம் அன்பு செலுத்த முடியும். அப்போது அவர்களையும் நாம் புண்படுத்த விரும்ப மாட்டோம். அன்பு, இரக்கம், பணிவு ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதாரம்: தர்ம போதனைகளில் கேட்டது.
https://youtu.be/G1oZyraJNRM?si=vEsdm7z8qrp7FMsu
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
(வேண்டுங்கால்-வேண்டுமானால்;வேண்டாமை-புலன் ஆசை இல்லாமல்)
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
— மு. வரதராசன்
தம்மம் மட்டுமே ஒரு முடிவுக்கு எடுத்துச் செல்லும் பயிற்சி. செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டோம் என்றால் அதற்கு மேல் சேய்வதற்கு ஒன்றுமில்லை. அது துக்கத்தின் முடிவு. பேரானந்தம். இனி மறுபிறப்பு இல்லை, பிறவா நிலை..
மற்ற எல்லா பயிற்சிகளுக்கும் முடிவே இல்லை. முனைவர் பட்டம் வாங்கியுள்ளீரா? இதற்கு மேல் படிக்க வேண்டியதில்லையா? தவறு. அடுத்த பிறப்பில் LKG/UKG மழலையர் பள்ளியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். வேறு வழி இல்லை.
உங்களுக்கு திருமணம் ஆகப்போகிறதா? முதல் முறையாக திருமணம் செய்து கொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இல்லை. முன் பிறவிகளில் பல திருமணங்களை செய்துள்ளீர்கள். இந்த சஞ்சார பயணத்தில் மீண்டும் பல திருமணங்களை நீங்கள் செய்து கொள்வீர்கள். (இது மகிழ்ச்சியான விஷயமில்லை!)
மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் மீண்டும் மனித பிறவி எடுப்போம் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. பெரும்பாலான மக்கள் கீழ் உலகங்களில் தான் பிறப்பார்கள். மனித பிறவி எடுப்பது அரிது. (கீழ் உலகங்களிலிருந்து தப்பிக்க தம்மத்தை பயின்று குறைந்தது சோதாபன்ன ஞான நிலையை அடைய வேண்டும்.)
காசா போன்ற இடங்களில் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் மற்றவர்கள் யாரோ அனுபவிக்கின்றார்களா? நாம் வெகு தூரத்தில் இருக்கின்றோம், நமக்கு அப்படியேதும் நேரிடாது என்று நினைப்பது தவறு. இதற்கு முன் அது போன்று பல அனுபவங்களை நாம் முன்பிறவிகளில் பெற்றுள்ளோம். சஞ்சார பயணத்தை தொடர்ந்தால் காசா போன்ற நிலைமையை நாமும் சந்திக்கக்கூடிய சாத்தியம் கண்டிப்பாக உள்ளது.
பிறந்துவிட்டால் நாம் தவிர்க்க முடியாதது: மூப்பு, பிணி, சாக்காடு, நாம் விரும்பும் மக்களிடமிருந்தும் நமது சொத்துக்களிடமிருந்து பிரிவு.
ஒருவர் இறந்து விட்டால் அதற்கு காரணம் இதுதான் என்று மருத்துவர் சான்றிதழ் தருவார். ஏகப்பட்ட நோய்கள் உள்ளன. அதில் ஒன்று மரணத்திற்கான காரணம் என்பார். உண்மையில் மரணத்திற்கான காரணம் புற்றுநோய், மாரடைப்பு, இரத்த கொதிப்பு, வாகன விபத்து போன்றவை இல்லை. மரணத்திற்கு காரணம் பிறப்பு. பிறப்பு இல்லையென்றால் மரணம் இல்லை.
எனவே வள்ளுவர் ஒன்று வேண்டும் என்று நினைத்தால், பிறவாமை வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
பிறவாமைக்குப் போகும் வழி பற்றுகளை கைவிடுவது. வாழ்க்கை சுவாரசியும் இல்லாமல் போய்விடுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. சிற்றின்பத்தை நாடும்போது ஒன்றின் மீது விருப்பம் கொள்கிறோம். எப்படியாவது பெற வேண்டும் என்ற வேட்கை, துடி துடிப்பு. அதன் காரணமாக எத்தனை அத்துமீறல்கள், ஒழுக்கத் தவறுகள்! நாடியதை பெற்று விடுகிறோம். ஆனால் எதிர்பார்த்தது போல திருப்தி தருவதில்லை. பின் மீண்டும் ஒரு ஆசை. சிற்றின்ப ஆசைகளுக்கு முடிவே இல்லை. அவை அமைதிக்கு எடுத்துச் செல்வதில்லை.
சிற்றின்பத்தை நாடி அலுத்து போய், பேரின்பத்தை நாடுவோர் - அவர் அறிவாளி.
சிற்றின்பத்தை விட்டு பேரின்பத்திற்கு எடுத்துச் செல்வது தான் பிறவாமைக் காண மார்க்கம். புத்தர் அருளிய எண் வழி பாதை. அந்த மார்க்கத்தை தொடர்ந்து பயணத்தை முடித்தவர் - அவர் ஞானி.
ஆதாரம்: தம்ம உரைகளில் கேட்டது.
https://youtu.be/iE3c6xkZvgQ?si=8qmndmFIa0k-4Vk-
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
(ஆக்கம்-விருத்தி;கேடு-அழிவு;
ஓம்பு-தல்-பாதுகாத்தல்;
சோர்வு-இழுக்கு)
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்
— மு. வரதராசன்
ஒரு ஜென் கதை
ஒரு பெரிய, வலிமையான வீரன் (சாமுராய்) ஒருநாள் ஒரு சிறிய துறவியை சந்திக்க சென்றான்.
"துறவியே," என்றான், தன் கட்டளையை உடனடியாக பின்பற்றுதலுக்கு பழகிய கம்பீரக் குரலில், "சொர்க்கமும் நரகமும் பற்றி எனக்கு போதிக்கவும்!"
அந்த வீரனை மேலும் கீழும் பார்த்த துறவி சொன்னார்: "சொர்க்கமும் நரகமும் பற்றி உனக்கு போதிக்கவேண்டுமா? எதை போதித்தாலும் உன் மண்டையில் ஏறாது! அழுக்குப் பிடித்தவனே, நீ நாறுகிறாய்! உனது வாள் துருப்பிடித்துள்ளது. நீ இழிவானவன். வீர குலத்துக்கே ஒரு களங்கம். என் எதிரே நிற்காதே. உன்னை பார்க்க சகிக்கவில்லை!"
அந்த வீரன் கோபத்தில் வெடித்தான். அவன் உடல் நடுங்கியது, முகம் சிவந்தது. அவனுக்கு வந்த ஆத்திரத்தில் வாயடைந்து போனான். அவன் தன் வாளை உருவி, உயர்த்தி, துறவியின் தலையை வெட்ட முற்பட்டான்.
"இது தான் நரகம்," மெதுவாக சொன்னார் துறவி.
வீரன் அதிர்ச்சியில் மூழ்கினான். அந்த சிறிய மனிதன் தன் உயிரை அர்ப்பணித்து, நரகத்தை தனக்கு உணர்த்தினாரே! என் மீது என்ன இரக்கம்! அவன் மெதுவாக வாளை கீழே வைத்தான். விரைவில் அமைதியானான. உள்ளத்தில் நன்றி உணர்வு நிரம்பியது.
"இது தான் சொர்க்கம்," மெதுவாக சொன்னார் துறவி.
ஆதாரம்: ஜென் மரபில் வந்த பௌத்த கதை.
நாம் சொல்லும் வார்த்தைகளினால் மற்றவர்களின் மனதை புண்படுத்தவும் முடியும், உயர்த்தி விடவும் முடியும். நாம் உள்ளத்தில் அன்பையும், இரக்கத்தையும், முதிதையும் (மற்றவர் வெற்றி கண்டு நாம் மகிழ்வது) வளர்த்தோம் என்றால் நம்மிடமிருந்து வரும் சொற்கள் சரியானதாகவே இருக்கும்.
அது மட்டுமல்ல. நாம் நமக்கே சொல்லும் கதைகள் இருக்கின்றன அல்லவா? அவையும் நமக்கு ஆக்கமும் தரலாம், கேடும் தரலாம்.
'உன்னால் முடியாது, மற்றவர்களால் முடியும், எவ்வளவு முயற்சி செய்தும் அந்த தீய பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே! மன அமைதியா? அதெல்லாம் இந்த ஜென்மத்தில் என்னால் அடைய முடியாது,' என்று நாம் நமக்கே சொல்லிக் கொள்ளும் கதைகள் இருக்கின்றன. அவை நமக்கு கேடு தான் தரும்.
அதனால் தான் நம்மை நாமே நேசிக்க வேண்டும் என்று புத்தர் கூறினார். அப்படி நேசித்தோம் என்றால் நாம் நமக்கு சொல்லிக் கொள்ளும் கதைகள் உற்சாகமானதாக இருக்கும். அவை நமக்கு ஆக்கம் தரும்.
ஆதாரம்: தம்ம உரைகளில் கேட்டது.
https://youtu.be/CAvI59eIjM8?si=0dZX07Z1O7fGgr-f
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
தீயால் (எரியால்) சுடப்பட்டாலும் உயிர்தப்பலாம் (உய்வு), பெரியவரிடத்தில் குற்றஞ்செய்து (பிழைத்து) நடப்பவர் (ஒழுகுவார்) தப்பி பிழைக்க முடியாது (உய்யார்).
புத்த பகவான் தானத்தின் விளைவுகள் பற்றி இவ்வாறு கூறினார்:
"ஒரு விலங்கிற்கு தரப்படும் அன்பளிப்பு நூறு மடங்கு விளைவுகள் தரும்.
ஒரு ஒழுக்கமற்ற சாதாரண மனிதனுக்கு தரும் அன்பளிப்பு ஆயிரம் மடங்கு விளைவுகள் தரும்.
ஒரு ஒழுக்கமுள்ள சாதாரண மனிதனுக்கு தரப்படும் அன்பளிப்பு நூறாயிரம் மடங்கு விளைவுகள் தரும்.
பௌத்த நெறியை பின்பற்றாத, ஆனால் புலன் இன்பங்களிளிருந்து விடுதலை பெற்ற ஒருவருக்கு தரப்படும் அன்பளிப்பு ஆயிரம் கோடி விளைவுகள் தரும்.
எண் வழி மார்க்கத்தில் முதல் ஞான நிலையை அடைவதற்கு பயிற்சி செய்யும் ஒருவர் தரும் அன்பளிப்பு கணக்கில்லா விளைவுகள் தரும்.
அப்படி என்றால் முதல் ஞான நிலையை அடைந்தவர், இரண்டாம் ஞான நிலை ... மூன்றாம் ஞான நிலை .... அருகராக பயிற்சி செய்பவர், அருகரானவர், பச்சேக்க புக்தர் ஆகியவர்களுக்கு தரும் அன்பளிப்பின் விளைவுகளை எவ்வாறு விவரிப்பது?
அதைவிட தேர்ந்த, முழுமையாக ஞானம் பெற்ற தத்தாகதருக்கு தரும் அன்பளிப்பின் பலனைப் பற்றி எப்படிச் சொல்வது?"
ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN142 அன்பளிப்புகள் பற்றிய உரை
ஆகவே தானம் தருவதன் விளைவுகள் படிப்படியாக மேலான மனப்பக்குவத்தை அடைந்தவருக்கு தரும் போது அதன் (நல்)விளைவுகளும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதுபோலவே அவர்களுக்கு சொல்லால், செயலால் செய்யும் தீமையின் (தீ)விளைவுகளும் படிப்படியாக அதிகரிக்கும். ஆகவே எல்லா சமயத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றாலும், மேன்மையானவர் அருகில் இருக்கும் போது நாம் குறிப்பாக மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். தெரிந்தே செய்யும் தீயச் செயல்களுக்கு சாதாரண ஒரு வருரிடம் செய்வதை காட்டிலும் சான்றோர்க்கு செய்யும்போது தீய விளைவுகள் பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
https://youtu.be/JJnXB_lll48?si=CcmPYegeRxSCLCIb
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
(மன்னுயிர்-மானிடசாதி மற்றும் மிருகசாதி;
ஓம்பு-தல்-பாதுகாத்தல்; அருள்-இரக்கம்)
மானிடரையும் மிருகங்களையும் (மன்னுயிர்) பாதுகாத்து (ஓம்பி) அவர்களிடம் இரக்கம் (அருள்) காட்டுவோருக்கு அச்சத்தின் காரணமாக தம் உயிர் பாதுகாக்க செய்யும் வினை இல்லை (இல்லென்ப).
நாம் மற்ற உயிர்களுக்கு - மனிதரானாலும் சரி விலங்குகளானாலும் சரி - அன்பும் இரக்கவும் காட்டும் போது அவற்றிடமிருந்து நமக்கு எந்தத் துன்பமும் வராது என்பதை சொல்ல வேண்டியதில்லை. அதனால் நாம் அஞ்சும் போது செய்யும் காரியங்களை செய்ய வேண்டியதில்லை. உதாரணமாக வீட்டை சுற்றி உயர்ந்த சுவர் கட்டுவது, வீட்டுக்கு காவலாளி வைப்பது, பாதுகாப்புக்காக நாய் வளர்ப்பது, ஆயுதங்கள் வைத்துக் கொள்வது போன்றவை. தன் உயிருக்கு பயந்தால் தானே இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்?
அன்பையும் இரக்கத்தையும் வளர்ப்பதால் வரும் 11 அனுகூலங்கள்
புத்த பகவான் கூறுகிறார்:
"பிக்குகளே, ஒருவர் அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால், தொடர்ந்து பயின்றால், அடிப்படையாக எடுத்துக்கொண்டால், நிலைநிறுத்தினால், உறுதியாக்கினால், நன்றாக மேற்கொண்டால்—அவர் பதினொன்று நன்மைகளை எதிர்பார்க்கலாம். அந்த பதினொன்று எவை?"
1. அவர் எளிதாக தூங்குகிறார்.
2. எளிதாக விழிக்கிறார்.
3. தீய கனவுகள் காண்பதில்லை.
4. மனிதர்களால் நேசிக்கப்படுகிறார்.
5. மனிதரல்லாத உயிரினங்களாலும் நேசிக்கப்படுகிறார்.
6. தேவர்கள் அவரை பாதுகாக்கின்றனர்.
7. தீ, விஷம், ஆயுதங்கள் அவரைத் தொட முடியாது.
8. அவருடைய மனம் விரைவில் ஒருமுகப்படுத்தப்படுகிறது.
9. அவருடைய முகம் ஒளிவீசுகிறது.
10. அவர் குழப்பமின்றி இறக்கிறார்.
11. இம்மையில் மேலதிக (நிப்பாண) நிலையை எட்டவில்லை என்றால், மறுமையில் பிரம்ம உலகங்களை நோக்கி செல்கிறார்.
இவை தான், ஒருவர் அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால், ....... நன்றாக மேற்கொண்டால் அவர் பெறக்கூடிய பதினொன்று நன்மைகள்."
ஆதாரம்: அங்குதர நிகாயம் AN 11.15
மேலோட்டமாக அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால் மட்டும் போதாது. அதனால்தான் புத்த பகவான் அன்பை வளர்க்க வேண்டும் என்ற மட்டும் சொல்லி நிறுத்தாமல்,
"வளர்த்தால், தொடர்ந்து பயின்றால், அடிப்படையாக எடுத்துக்கொண்டால், நிலைநிறுத்தினால், உறுதியாக்கினால், நன்றாக மேற்கொண்டால்" என்றெல்லாம் கூறுகிறார்.
குளிக்க சென்றவர் ஆற்றங்கரையில் தண்ணீரை விரலால் தொட்டால் மட்டும் போதாது, தண்ணீரில் குதித்து விட வேண்டும். அது போலவே அன்பை முழு மனதுடன் வளர்க்க வேண்டும், எந்நேரமும் வளர்க்க வேண்டும், அனைத்து உயிர்களிடமும் காட்ட வேண்டும், எல்லா சூழ்நிலைகளிலும் வளர்க்க வேண்டும்.
https://youtu.be/GToBWhd0G40?si=PM_KNijbmIXOmITG
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்
பேசும் அளவுக்கான (வாய்சான்ற) நிறைந்த பொருளைச் (பெரும்பொருள்) சேர்த்து வைத்து (வைத்தான்) அதை பயன்படுத்தாமல் (அஃதுண்ணான்) இருப்பது, ஒரு இறந்தவன் (செத்தான்) அந்த பொருளால் செய்ய முடிந்தது (செயக்கிடந்தது) ஒன்றுமில்லாதது (இல்) போல.
***
சங்யுத்த நிகாயம் SN3.19
இது சாவத்தி நகரத்தில் நடந்தது…
ஒரு நாள், மத்திய நேரத்தில் மாமன்னன் பசேனதி புத்தரிடம் வந்து, மரியாதையுடன் வணங்கி, ஒரு பக்கத்தில் அமர்ந்தார். புத்தர் அவரிடம் கேட்டார்: “மாமன்னனே, இந்த மத்திய நேரத்தில் எங்கிருந்து வருகிறீர்கள்?”
“ஐயா, இந்த சாவத்தி நகரத்தில் ஒரு பணக்காரர் இறந்துவிட்டார். அவர் பிள்ளைகள் இல்லாமல் இறந்ததால், அவரது செல்வத்தை அரசக் கருவுகலதிற்கு (கஜானா) மாற்றிய பிறகு வந்தேன். 80 லட்சம் தங்கம் இருந்தது, வெள்ளியை சொல்லவே வேண்டியதில்லை.
“ஐயா, அந்த பணக்காரர் சுவையான உணவுகளுக்கு பணம் செலவிடவில்லை என்று தெரிந்தது. அவர் ஊறுகாயுடன் சாதாரண கஞ்சி சாப்பிட்டார். நல்ல உடைகள் வாங்கவில்லை. மூன்று சணல்நார் துணிகளை தைத்துத் தயாரித்த ஒரு கந்தல் துணியை அணிந்தார். வசதியான வாகனங்களுக்கு பணம் செலவிடவில்லை. மிகவும் பழைய சிறிய வண்டியில் பயணம் செய்தார், வெயிலைத் தடுக்க பழைய குடையை வைத்திருந்தார்.”
மூடன் பெரும் செல்வம்
“அது உண்மைதான், மாமன்னனே! அது உண்மைதான்! ஒரு மூடன் பெரும் செல்வத்தை பெற்றிருந்தாலும், தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்வதில்லை. தன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், வேலைக்காரர்கள், ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரையும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்வதில்லை. ஆண் துறவிகளுக்கும், பெண் துறவிகளுக்கும் தானம் கொடுப்பதில்லை. சொர்க்கத்தில் பிறக்க புண்ணியம் சேர்ப்பதில்லை. செல்வத்தை சரியாக பயன்படுத்துவவில்லை என்பதால், அரசர்கள் அல்லது திருடர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள், தீயால் எரிந்து விடுகிறது, வெள்ளம் அடித்து செல்கிறது, அல்லது பகைவர்கள் அதை கைப்பற்றுகிறார்கள். அந்த செல்வம் சரியாக பயன்படுத்தப்படாததால், அது வீணாகிறது.
“ஒரு தாமரைத் தடாகம் மனிதசஞ்சாரமில்லாத இடத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் தெளிவான, இனிமையான, குளிர்ந்த நீர் உள்ளது. அதன் கரைகள் சுத்தமாகவும், அழகாகவும் உள்ளது. ஆனால், மக்கள் அதற்கு செல்வதில்லை, அதிலிருந்து குடிப்பதில்லை, அதில் குளிப்பதில்லை அல்லது வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தவில்லை. அந்த நீர் சரியாக பயன்படுத்தப்படாததால், அது வீணாகிறது.
“அதேபோல், ஒரு மூடன் பெரும் செல்வத்தை பெற்றிருந்தாலும்… அது வீணாகிறது, பயன்படுத்தப்படுவதில்லை.
அறிவாளியின் செல்வம்
“ஒரு அறிவாளி பெரும் செல்வத்தை பெற்றிருந்தால், தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்கிறார். தன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், வேலைக்காரர்கள், ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்துக் கொள்கிறார். ஆண் துறவிகளுக்கும், பெண் துறவிகளுக்கும் தானம் கொடுக்கிறார். சொர்க்கத்தில் பிறக்க புண்ணியம் சேர்க்கிறார். அவர் செல்வத்தை சரியாக பயன்படுத்துவதால், அரசர்கள் அல்லது திருடர்கள் அதை பறித்துக் கொள்வதில்லை, தீ அதை எரிப்பதில்லை, வெள்ளம் அதை அழிப்பதில்லை, பகைவர்கள் அதை கைப்பற்றுவதில்லை. அவரது செல்வம் சரியாக பயன்படுத்தப்படுவதால், அது பயன்படுகிறது, வீணாகாது.
“ஒரு நகரம் அல்லது கிராமத்திற்கு அருகில் ஒரு தாமரைத் தடாகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் தெளிவான, இனிமையான, குளிர்ந்த நீர் உள்ளது. அதன் கரைகள் சுத்தமாகவும், அழகாகவும் உள்ளன. மக்கள் அதற்கு சென்று அதிலிருந்து குடித்து, அதில் குளித்து, தங்கள் தேவைக்காக பயன்படுத்துகிறார்கள். அந்த நீர் சரியாக பயன்படுத்தப்படுவதால், அது பயன்படுகிறது, வீணாகாது.
“அதேபோல், ஒரு அறிவாளி பெரும் செல்வத்தை பெற்றிருந்தால்… அது பயன்படுகிறது, வீணாகாது.
***
https://youtu.be/yjiH1TefeEE?si=IqUrIjFZQCgabrey
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
தன் மனசாட்சி (நெஞ்சம்) அறிந்ததைப் பற்றி பொய் கூறக்கூடாது (பொய்யற்க). அப்படி போய் கூறினால் (பொய்த்தபின்) அந்த மனசாட்சியே தன்னை உறுத்தும் (சுடும்).
***
பௌத்த திரிபிடகத்தில் ஹிரீ-ஒத்தாப்ப (Hirī-Ottappa) என்ற இரு பண்புகள் குறிப்பிடப்படுகின்றன. இரண்டும் சேர்ந்தே காணப்படும்.
இவை இரண்டும் நற்பண்புகள். வேண்டியவை. ஐந்து சீலங்களை கடைபிடிப்பதற்கு உதவும் பண்புகள் என்று புத்தர் கூறுகிறார்.
ஹிரீ என்றால் மனசாட்சி. தவறு செய்யுமுன் மனசாட்சி உறுத்துவது.
ஒத்தாப்ப என்றால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது. தவறு செய்யுமுன் அதற்கான விளைவுகளை நினைத்து அஞ்சுவது.
"இரண்டு பிரகாசமான விஷயங்கள் உலகின் காவலாளிகளாக இருக்கின்றன. உலகை பாதுகாக்கின்றன. அவை:
மனசாட்சி (Hirī, Conscience) மற்றும் எச்சரிக்கையுடன் இருத்தல் (Ottappa, Prudence)."
புத்தரின் வாக்கு AN2.9
"இந்த ஏழு விதமான செல்வங்கள் உள்ளன. எந்த ஏழு? நம்பிக்கை (Saddhā, faith), ஒழுக்கம் (sīla, ethics), மனசாட்சி (hirī, conscience), எச்சரிக்கையுடன் இருத்தல் (ottappa, prudence), கல்வி (suta, learning), தானம் ( cāga, generosity), விவேகம் (paññā, wisdom)."
புத்தரின் வாக்கு AN7.6
ஹிரீ (அகம் சார்ந்தது)
தீய செயலை நினைக்கும் போது மனதில் அருவருப்பு உண்டாக வேண்டும். அதை செய்தால் நமது சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதால் அருவருப்பு உண்டாகிறது.
'இந்தச் தீயச் செயலை செய்வது எனக்கு பெருமைக்கேடு, கௌரவக் குறைவு,' போன்ற எண்ணங்கள் எழ வேண்டும்.
நம் மீது நாம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக ஒரு தவறை செய்வதில்லை என்று சொல்லலாம்.
ஒத்தாப்ப (புறம் சார்ந்தது)
தீய செயலை செய்யும் முன் அதன் விளைவுகளை நினைத்து அச்சம் உண்டாக வேண்டும். எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது. மற்றவர் மீது நாம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக ஒரு தவறை செய்வதில்லை என்றும் நினைத்துக் கொள்ளலாம். நாம் அன்பும் மதிப்பும் கொண்டுள்ளவர்கள் - அது நமது மனைவி, கணவன், பெற்றோர், மக்கள், நண்பர்களாக இருக்கலாம். அவர்களுக்கு தெரிய வந்தால் என்ன நினைப்பார்கள்? ' என்ற அச்சம் தோன்ற வேண்டும்.
உவமானம்
உரைகளில் புத்த கோசர் தரும் உவமானம் இது:
ஒரு இரும்புக்கோல் இருக்கிறது. ஒரு புறம் மலசலம் பூசப்பட்டிருக்கிறது. மறுபுறம் தீயில் நீண்ட நேரம் பழுக்கக் காய்ச்சப்ப ட்டிருக்கிறது.
அந்த இரும்புக்கோல் தான் நாம் செய்ய நினைக்கும் தீயச் செயல். இருபுறத்திலும் அதைப் பிடிக்க தயங்குவோம். மலசலம் பூசப்பட்ட பகுதி நமக்கு அருவருப்பு தரும் (ஹிரீ). மறுபுறத்தை தொட்டால் கை வெந்து விடும் என்ற அச்சம் இருக்கும் (ஒத்தாப்ப).
ஆதாரம்: பிக்கு போதி அவர்களின் போதனையிலிருந்து தொகுக்கப்பட்டது.
https://youtu.be/ln3wBXUU5Ls?si=oG6ej1ud7NMTL8-F
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
ஒழுக்கத்தில் தவறாதவர் (ஒல்கார்) மனோபலமுள்ளவர் (உரவோர்) - இழுக்கத்தினால்
குற்றம் (ஏதம்) உண்டாகக்கூடும் (படுபாக்கு) என்பதை அறிந்து.
எதிர் நீச்சல்
ஒழுக்கம் இன்மை நீரோட்டத்தோடு நீந்துவது போல. அது எளிது.
ஆனால் ஒழுக்கம் கடைபிடிப்பது நமது உள்ளம் போக விரும்பும் திசைக்கு எதிரானது. நம் மாசுகள் இழுத்துச் செல்லும் திசைக்கு எதிரானது. ஒழுக்கம் கடைப்பிடிப்பது என்பது
எதிர் நீச்சல் போடும் பயிற்சியாகும். எனவே அது கடினமாகத்தான் இருக்கும்.
பரிசலை நீரின் ஓட்டதிற்கு எதிராகச் செலுத்தத் துடுப்புப் போடுவது கடினம் தான்.
நன்மையையும், ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி சிறிது கடினம் தான். ஏனென்றால் நம் மனதில் மாசுகள் உள்ளன. நன்மையையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்ள நாம் விரும்புவதில்லை. அந்த சிரமத்தை விரும்புவதில்லை. எதிர்ப்புச் சக்தியை வளர்க்க விருப்பமில்லை. நமது மனநிலைகளுக்கு ஒத்து நடப்பதற்கே விரும்புகிறோம்.
இது நீரைப்போல: நீர் அதன் வழிக்குத் தகுந்தார்போல ஓடுகிறது. அந்த நீரோட்டத்தின் இயல்பின் படி நாமும் போவது சுலபம், ஆனால் அது பயிற்சியாகாது. பயிற்சி செய்யும் போது மனதில் உள்ள மாசுகளை எதிர்க்க வேண்டும். உள்ளம் விரும்பியபடி போவதை எதிர்க்க வேண்டும்.
உள்ளத்தைக் கட்டுப் படுத்திச் சகித்துக் கொள்ளும் ஆற்றலை, மனோபலத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் பயிற்சி ஓட்டத்தின் எதிராகச் செல்லும்.
ஆதாரம்:
எளிமையாகச் சொல்வதென்றால்
(108 அற உவமானங்கள்)
போற்றுதற்குரிய அஜான் சா
https://youtu.be/qLJY0q9UWAw?si=jbKMi-dJjbXgCCLU
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனிய சொற்கள் இருக்கும் போது (உளவாக) அவற்றை விட்டுக் கடுமையான (இன்னா) சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் விரும்புவது (கவர்ந்து) போன்றது (அற்று).
நல்வாய்மை (சம்மாவாசா) என்பது அட்டாங்க மார்க்கத்தின் ஒரு கூறு.
இது நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது:
1. தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்.
2. வம்புப் பேச்சு உரைக்காமல் இருத்தல்.
3. கடுமையான பேச்சு உரைக்காமல் இருத்தல்.
4. விதண்டைப் பேச்சைத் தவிர்த்தல்.
இதில் கடுமையான பேச்சு என்பது:
கோபமான, எரிச்சலூட்டும் பேச்சு, மக்கள் மனத்தைப் புண்படுத்தும் பேச்சு. காட்டமான பேச்சு, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது, களங்கப் படுத்திப் பேசுவது, சத்தமிட்டுப் பேசுவது, இவையெல்லாம் கடுமையான பேச்சு என்ற தலைப்பில் சேரும்.
கோபம் என்ற எரிபொருளால் தூண்டப் பட்டதால் இப்படி பேசுகிறோம். இவ்வாறு பேசும் போது அது பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பற்றியது மட்டும் அல்ல, இப்படிப் பேசுவதற்கான நோக்கம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். நாம் அனைவருமே பேசும் போது பல நேரங்களில் தவறாகப் பேசுகிறோம். சென்னையிலிருந்து ஐம்பது கி.மீ தூரத்தில் இருப்பதாக ஒருவரிடம் கூறுகிறோம். உண்மையில் முப்பது கி.மீ தூரத்தில் தான் இருக்கின்றோம் என்றால் அது உண்மைக்கு மாறான பேச்சுத்தான். ஆனாலும் அது பொய் இல்லை. நாம் அறியாமல் 50 கிலோமீட்டர் என்று கூறிவிட்டோம். இப்படிப்பட்ட தவறான பேச்சை நம் வாழ்நாளின் இறுதி வரை கூறத்தான் போகிறோம். நாம் எல்லாவற்றையும் தெரிந்திருக்க முடியாது. ஆனால் நாம் பொய் சொல்ல வில்லை. வேண்டும் என்று தவறாகக் கூறவில்லை. பொய் என்பது வேண்டுமென்றே, தெரிந்தே ஏமாற்றுவதற்காகச் சொல்லப்படும் வார்த்தைகள். கடுமையான பேச்சு என்பது வேண்டுமென்றே ஒருவரைச் சிறுமைப் படுத்தும், சேதம் விளைவிக்கும் பேச்சு.
இவற்றைத் தவிர்த்தல் வேண்டும். மாறாக ஒருவரின் பேச்சு எப்போதும் மென்மையானதாகவும், அன்புடையதாகவும் இருத்தல் வேண்டும்.
(ஆதாரம்: தர்ம உரைகளில் கேட்டது.)
"கடுமையான பேச்சை விட்டு விட்டதால், கோதமர் கடுமையான பேச்சில் ஈடுபடுவதில்லை. அவர் பேசும் வார்த்தைகள் மென்மையானவை, செவிக்கு இனிமையானவை, மனதை ஈர்க்கும் வகையிலானவை, நெஞ்சை தொட்டுவிடும் வகையில் நயமிக்கவை, அன்பானவை, பலருக்கும் விருப்பமானவை."
(ஆதாரம்: தீக நிகாயம் 1)
"எவரிடமும் கடுமையான வார்த்தைகள் பேசாதே; அவர்கள் அதேபோல் பதிலளிக்கலாம். விரோதமான பேச்சு துன்பத்தை தருகிறது,
அது வன்முறையான எதிர்வினையைத் தூண்டக்கூடும்."
(ஆதாரம்: தம்மப்பதம் 133)
https://youtu.be/WZTa4CfZgf4?si=_Sl8t0SNflLdyaul
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
தமக்கு துன்பம் செய்தார்க்கும் இனியவையே செய்யா விட்டால்
பெருந்தன்மையினால் (சால்பு) என்ன பலன் (பயத்தது)?
***
தமக்கு ஆதாயம் கிடைப்பதன் காரணமாக அல்லது தமது வாழ்க்கை விரும்பிய வண்ணம் போகும்போது, இன்னல் தருபவரை பொறுத்துக் கொள்பவரை புத்த பகவான் போற்றவில்லை.
மாறாக, தமக்கு ஆதாயம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், தமது வாழ்க்கை விரும்பிய வண்ணம் சென்றாலும் செல்லாவிட்டாலும், ஒருவர் தம்மத்தை மதித்து, போற்றி, வழிபடுவதன் காரணமாக இன்னல் தருபவரை பொறுத்து அவர்களிடம் அன்பு செலுத்தும் போது - அப்படிப்பட்டவரை புக்த பகவான் போற்றினார்.
புத்த பகவான் கூறினார்:
"உங்களிடம் ஒருவர் பேசும் போது அவர் சொல்வது:
1. காலம் கருதி பேசப்பட்டதாக இருக்கலாம் அல்லது சொல்லக்கூடாத நேரத்தில் சொல்லப்பட்டதாக இருக்கலாம்.
2. உண்மையாக இருக்கலாம், பொய்யாக இருக்கலாம்.
3. மென்மையாக கூறப்பட்டிருக்கலாம் அல்லது கடுமையாக கூறப்பட்டிருக்கலாம்.
4. நல்லது சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் அல்லது தீயது சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
5. அன்போடு பேசப்பட்டதாக இருக்கலாம் அல்லது உள்ளத்தில் வெறுப்போடு பேசப்பட்டதாக இருக்கலாம்.
அவர் உங்களிடம் எவ்வாறு பேசி இருந்தாலும், நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்:
'எங்கள் மனங்கள் சிதைவடையாது. நாங்கள் தீய வார்த்தைகளைச் பேச மாட்டோம். நாங்கள் இரக்கம் நிரம்பியவர்களாக இருப்போம், அன்புள்ள உள்ளத்துடன், மறைத்த வெறுப்பின்றி, அந்த நபருக்காக அன்பு நிறைந்த மனதுடன்
இருப்போம். அவரை அடிப்படையாகக் கொண்டு, உலகில் உள்ள அனைவருக்கும் அன்பு நிரம்பிய, விரிவான, எல்லையில்லாத, வெறுப்பும் தீங்கும் இல்லாத உள்ளத்தோடு இருப்போம்.'
இவ்வாறு நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்."
(ஆதாரம்: மஜ்ஜிம நிகாயம் MN 21)
https://youtu.be/emyaOQOy330?si=E1B7ACyvP3lP_bMT
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
ஆ-தல்-உண்டாதல்
ஆறு-வழி.
இட்டிது - சிறிது
போ-தல்-செல்லுதல்
அகலாக்கடை-விரிவுபடாவிட்டால்
பொருள் வரும் வழி (ஆகாறு) சிறிதாக (இட்டிது) இருந்தாலும் செலவு போகும் வழி (போகாறு) விரிவுபடாதவரை (அகலாக்கடை) துன்பமில்லை (கேடில்லை).
***
புத்த பகவான் கூறினார்:
"வசதிக்கேற்றபடி வாழ்வது என்றால் என்ன? ஒரு இல்லறத்தார் தனது வருமானத்தையும் செலவையும் அறிந்தவராக, ஊதாரியாகவும் இல்லாமல் கருமியாகவும் இல்லாமல், தன் வசதிக்கேற்றபடி வாழ வேண்டும், [இப்படி நினைத்தவாறு] 'இவ்வாரு என்னுடைய வருமானம் செலவுகளை மீறி இருக்கும், செலவுகள் வருமானத்திற்குட்பட்டிருக்கும்.'
ஒரு எடை எடுப்பவரோ அல்லது அவருடைய உதவியாளரோ துலாக்கோலை பிடித்திருக்கையில், 'தராசுத்தட்டு ஒரு பக்கம் கீழாகப் போய்விட்டது அல்லது ஒரு பக்கம் மேலே சென்று விட்டது,' என்பதை அறிகிறார். அதேபோல், ஒரு இல்லறத்தார் தனது வருமானமும் செலவுகளும் அறிந்தவராக, ஊதாரியாகவும் இல்லாமல் கருமியாகவும் இல்லாமல், தன் வசதிக்கு ஏற்றபடி வாழ வேண்டும், [இப்படி நினைத்தவாறு] 'இவ்வாரு என்னுடைய வருமானம் செலவுகளை மீறி இருக்கும், செலவுகள் வருமானத்திற்கு உட்பட்டிருக்கும்.'
ஒரு இல்லறத்தார் சிறிய வருமானம் கொண்டவராக இருக்கையில் தன் வசதிக்கு மிகுதியாக வாழ்ந்தால் அவரைப் பற்றி இவ்வாறு பேசப்படும், 'இந்தக் குடிமகன் தனது செல்வத்தை ஒரு விளாம் பழம் உண்பவனை போல வீண் செய்கிறார்,' (விளாம் பழம் சாப்பிட நினைப்பவர் அந்த மரத்தை நன்றாக ஆசைக்க, பல பழங்கள் கீழே விழுகின்றன. ஆனால் ஒன்று இரண்டு மட்டும்தான் உண்கிறார். மற்றவை எல்லாம் வீணாகிறது.)
ஒரு இல்லறத்தார் பெரும் வருமானம் கொண்டவராக இருக்கையில் சீரழிந்தவனைப் போல வாழ்ந்தால் அவரைப் பற்றி இவ்வாறு பேசப்படும், 'இந்தக் குடிமகன் பசியால் வருந்திச் சாவான்'.
ஆனால் ஒரு இல்லறத்தார் தனது வருமானத்தையும் செலவுகளையும் அறிந்தவராக, ஊதாரியாகவும் இல்லாமல் கருமியாகவும் இல்லாமல், தன் வசதிக்கு ஏற்றபடி வாழ்ந்தால், [இப்படி நினைத்தவாறு] 'இவ்வாரு என்னுடைய வருமானம் செலவுகளை மீறி இருக்கும், செலவுகள் வருமானத்திற்கு உட்பட்டிருக்கும்.',
இதுவே வசதிக்கேற்றபடி வாழ்வது என்பது."
(ஆதாரம்: அங்குத்தர நிகாயம்
8.54. தீக ஜானுவிற்கு தந்த அறிவுரை)
https://youtu.be/aqKKvw5qCcQ?si=PQT3ypZ1uBOK1ZP9
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
முகத்தில் (முக) மலர்ச்சி (நக)
மட்டுமே உள்ள நட்பு நட்பு அன்று, உள்ளத்தில் (நெஞ்சத்தில்) மலரும் அக மலர்ச்சி (அகநக) கொண்டு நட்பு செய்வதே நட்பாகும்.
***
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை:
நல்ல நண்பர்கள்
"இல்லறத்தார் மகனே, நல்ல உள்ளம் படைத்த நண்பர்கள் நால்வரை நீ அறிய வேண்டும்: உபகாரம் செய்யும் நண்பர்,
இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கும் நண்பர்,
வழிகாட்டியாய் உள்ள நண்பர்,
அனுதாபம் காட்டும் நண்பர்.
1. உபகாரம் செய்யும் நண்பர், நாலு காரணத்தினால் நல்ல நண்பராகக் கொள்ளப்படுவார்.
பலவீனமான காலத்தில் உதவிபுரிவார்.
பலவீனமான காலத்தில் உங்கள் உடமைகளைப் பாதுகாக்கிறார்.
ஆபத்துள்ள வேளையில் உங்களுக்கு அடைக்கலம் அளிக்கிறார்.
நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில், உங்களுக்கு இரட்டிப்பு உதவி புரிகிறார்.
2. இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்கும் நண்பர் நாலு காரணங்களால் நல்ல நண்பராகக் கொல்லப்படுவார்.
அவர் தன்னுடைய இரகசியங்களை உங்களுக்குச் சொல்லுகிறார்.
உங்கள் இரகசியங்களை அம்பலப்படுத்த மாட்டார்.
துன்பம் வருங்காலத்தில் கைவிடமாட்டார்.
உங்களுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்வார்.
3. வழிகாட்டியாய் உள்ள நண்பர் நாலு காரணங்களுக்காக நல்ல நண்பராகிறார்.
நீங்கள் தவறு செய்வதைத் தடுப்பார்.
சரியானதைச் செய்யவே தூண்டுவார்.
நீங்கள் அறியவேண்டிய முன் அறிந்திராத விஷயங்களை தெளிவுபடுத்துவார்.
அவர் சுவர்க்கத்துக்கு வழி காட்டுவார்.
4. அனுதாபமுள்ள நண்பர் நாலு காரணங்களால் நல்ல நண்பராகக் கணிக்கப்படத்தக்கவர்.
உங்களுக்குண்டாகும் துர்ப்பாக்கியத்தைக் கண்டு அவர் சந்தோஷப்படமாட்டார்.
உங்கள் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்ச்சியடைவார்.
உங்களைப் பற்றி இழிவாகப் பேசுவோரைத் தடுப்பார்.
உங்களைப் பற்றிப் புகழ்வோரை ஆதரிப்பார்."
ஆதாரம்: தீக நிகாயம் நீண்ட போதனைகள் DN31
தமிழாக்கம்:
நவாலியூர் சோ. நடராசன்
https://youtu.be/A4FiVoHPLUM?si=t0QSG2xdYVxjJInC
பாடியவர்: பிரேம்ஜி அமரன்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
உய்-தல-சீவித்தல்
ஆர்-தல்-நிறைதல்
ஆறிருள்-இருள் நிறைந்த
புலனடக்கம் ஒருவரை தேவ லோகத்தில் (அமரருள்) சீவிக்க (உய்க்கும்) வைக்கும்.
புலனடக்கம் இல்லாதவர் இருள் நிறைந்த (ஆறிருள்) வாழ்க்கையை அனுபவிப்பார்.
***
பௌத்தத்தில் இல்லற மக்கள் 5 சீலங்களை எந்நாளும் கடைபிடிக்க வேண்டும். அவை:
1. கொல்லாமை,
2. களவாமை,
3. தவறான பாலியல் உறவுகள் தவிர்த்தல். குறிப்பாக பிறர் மனை/கணவன் நயவாதிருத்தல்,
4. பொய்யாமை,
5. மது மற்றும் போதைப் பொருட்கள் உண்ணாமை,
ஐந்து சீலங்களை கடைபிடிக்க குறைந்தபட்சம் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அப்படி மீறிவிட்டால் விரைவில் மீண்டும் அவற்றை கடைபிடிப்போம் என்று ஒரு புத்தர் சிலை முன்னால் அல்லது தமக்கு தாமே நேர்ந்துக் கொள்ள வேண்டும். ஐந்து சீலங்களை கடைபிடிக்க ஓரளவுக்கு புலன் அடக்கம் தேவை.
மேலும் புலன் அடக்க பயிற்சி செய்ய விருப்பமுள்ள இல்லற மக்கள் உபோசதை நாட்களையும் கடைப்பிடிக்கலாம். அதாவது பௌத்தப் புனித நாட்களான பௌர்ணமி, அம்மாவாசை மற்றும் இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள இரண்டு அர்த்த சந்திர நாட்களில் எட்டு சீலங்களைக் கடைப்பிடிப்பதாக நேர்ந்து கொள்வது. சிலர் மாதம் ஒருமுறை என்று பௌர்ணமி தினத்தன்று மட்டும் எட்டு சீலங்களை கடைப்பிடிப்பார்கள். இல்லற மக்கள் எட்டு சீலங்களை கடைப்பிடிப்பது கட்டாயம் கிடையாது, ஆனால் புத்த பகவான் இதனை மிகவும் பாராட்டினார். எட்டு சீலங்கள்:
1. கொல்லாமை,
2. களவாமை,
3. பிரம்மச்சாரியம் கடைப்பிடிப்பது (மற்ற நாட்களில் தவறான பாலியல் உறவுகள் தவிர்த்தல்)
4. பொய்யாமை,
5. மது மற்றும் போதைப் பொருட்கள் உண்ணாமை,
6. மதியத்திற்கு பிறகு உணவு அருந்தாமல் இருப்பது,
7. அலங்கரித்து கொள்ளல், ஆடல், பாடல், கூத்து, நாடகம், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் போன்றவற்றை தவிர்த்தல்,
8. மிகவும் சொகுசான படுக்கைகள் மற்றும் ஆசனங்களை பயன்படுத்தாமல் இருப்பது.
புலனடக்கத்தின் நன்மைகளைப் பற்றி புத்த பகவான் பர சூத்தங்களில் கூறியுள்ளார். உதாரணமாக:
சப்பாசவ சுத்தத்தில் (மஜ்ஜிம நிகாயம் MN2) புத்த பகவான் கூறுகிறார்:
புலன்களை அடக்கி கைவிட வேண்டிய கறைகள்
"துறவிகளே, புலன்களை அடக்கி கைவிட வேண்டிய கறைகள் எவை? இங்கு ஒரு பிக்கு விவேகத்துடன் சிந்தித்து கட்புலனை அடக்கி வாழ்கிறார். கட்புலனை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் கட்புலனை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை.
விவேகத்துடன் சிந்தித்து செவிப்புலன் அடக்கி வாழ்கிறார்... மணம்பிடித்தலை அடக்கி...சுவையை அடக்கி...தொடுவுணர்வுப்புலனை அடக்கி... மன உணர்வை அடக்கி.....
புலன்களை அடக்காமல் வாழ்கின்ற ஒருவருக்கு கறைகளும், துன்பமும், காய்ச்சலும் தோன்றலாம். ஆனால் புலன்களை அடக்கி வாழ்கின்ற ஒருவருக்கு இவை ஏதும் தோன்றுவதில்லை. இவையே புலன்களை அடக்கி கைவிட வேண்டிய கறைகள்."
https://youtu.be/PKnlglTRH14?si=hGYHERDRkyhseGiV
பாடியவர்: தேவா
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
ஆற்றுதல்-வலியடைதல்
மாற்றான்-பகைவன்
படை-கருவி
வலிமையுடையவரின் (ஆற்றுவார்) ஆற்றல் என்பது பணிவு. பணிதல் என்பது சான்றோர் தம் பகைவரையும் (மாற்றார்) பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும் (படை).
புத்த பகவான் பணிதல் ஒரு மங்களம் என்றார் (மங்கள சுத்தம்).
மேகிய சூத்திரத்தில் புத்த பகவான் பணிதலை வளர்ப்பது பற்றி மேகியருக்கு கூறியது:
"மேகியரே, மன விடுதலை முழுமையாக முற்றாத நிலையில் இருக்கும் ஒருவருக்கு இந்த ஐந்து பண்புகள் அதனைப் பூரணமாக்கும். அவை எவை?
(அந்த ஐந்தில் மூன்றாவதாக கூறப்பட்டது..)
"மேலும் பணிவை வளர்க்கும், தன் விழிப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை விரும்பும் போதெல்லாம், சுலபமாகக் கேட்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும். அதாவது கண்ணியம், திருப்தி, ஏகாந்தம், சிக்கலற்றிருப்பது, விடாமுயற்சி, ஒழுக்கம், மன ஒருமை, விவேகம், வீடுபேறு, வீடுபேறு பற்றிய அறிவாற்றல் ஆகியவை பற்றிய போதனைகள் மற்றும் பேச்சுக்கள் அவை. ஞானம் பெறாத ஒருவர் ஞானம் பெறுவதற்கு உதவும் மூன்றாம் இயல்பு இதுவே."
ஆதாரம்: மேகிய சூத்திரம்: மேகியரைப் பற்றி AN9.3
https://youtu.be/Qcq9MbzjzbM?si=ckiBqMxQvnVRdSjv
பாடியவர்: சுஜிதா சபாநாயகம்
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
நட்டார்-உற்றார், நண்பர்
ஒட்டார்-பகைவர்
ஒல்லை-வேகமாய், கால தாமதமின்றி
நண்பரைப் (நட்டார்) போல நல்ல சொற்களை (நல்லவை) சொன்னாலும் பகைவர் (ஒட்டார்) சொல்வதில் உள்ள நஞ்சு விரைவில் (ஒல்லை) வெளிப்படும்.
***
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை:
போலி நண்பர்கள்
"இல்லறத்தார் மகனே, நண்பர் வடிவத்தில் பகைவராயிருப்போர் நால்வரை நீ அறிய வேண்டும். நண்பனின் பொருட்களை கவர்வோன், வாய்ப்பேசுவோன் (செயலில் ஒன்றும் இராது), இச்சகம் பேசுவோன், ஊதாரி.
1. இவர்களுள் முதாலாவது வகையைச் சேர்ந்தவன், நாலு காரணத்தினால் நண்பன் வடிவிலுள்ள பகைவனாவான். அவன் கவரும் சுபாவமுள்ளவன் - உமது உடைமைகளை அவனாதிக்கொள்வான், கொஞ்சம் கொடுத்து அதிகம் எதிர்பார்ப்பவன், செய்ய வேண்டிய கடமையைப் பயத்தினால் செய்வான். தன்னலத்தையே கவனிப்பான்.
2. வாயால் மாத்திரம் பேசிக்கொண்டு செயலில் ஒன்றுஞ் செய்யாத ஒரு நண்பனை நண்பன் வடிவிலுள்ள பகைவனாகக் கவனிக்க வேண்டும். அதற்கு நான்கு காரணங்களுண்டு. இறந்த காலத்தைப் பற்றிப் பேசி, தான் நண்பனாயிருந்தால் செய்திருப்பேன், எனப் பாசாங்கு செய்வான். எதிர்காலத்தில் என்ன வெல்லாமோ செய்யப்போவதாக ஆசை காட்டுவான். அவனுடைய பேச்செல்லாம் வெட்டிப் பேச்சாயிருக்கும். உண்மையில் உதவி செய்ய வேண்டிய காலம் வந்ததும் தன் கஷ்டங்களைப் பற்றி சொல்லி கைவிட்டு விடுவான்.
3. இச்சகம் பேசுவோர் நண்பர் வடிவில் உள்ள பகைவரே. அதற்கு நாலு காரணமுண்டு. நீங்கள் செய்யும் பாவச் செயல்களையும் அவன் ஆமோதிப்பான். நற்செயல்களையும் ஆமோதிப்பான். முகத்துக்கு முன்னால் உங்களைப் புகழ்ந்து பேசுவான். போகவிட்டுப் புறங் கூறித்திரிவான்.
4. ஊதாரியாயிருப்பவனை நாலு காரணங்களைக் கொண்டு நண்பர் வடிவில் உள்ள பகைவராகக் கொள்ள வேண்டும். நீங்கள் மது அருந்தச் செல்லும்போதும், அகாலவேளையில் வீதியில் சுற்றித்திரியும் போதும், விழாக்களுக்கும், நாட்டியக் கச்சேரிகளுக்கும் போகும்போதும், சூதாடும் போதும் இவன் உங்கள் கூட்டாளியாக இருப்பான்."
ஆதாரம்: தீக நிகாயம் நீண்ட போதனைகள் DN31
சிகாலகனுக்கு புத்த பகவான் தந்த அறவுரை
தமிழாக்கம்: நவாலியூர் சோ. நடராசன்
https://youtu.be/hyUv2NeS0Vs?si=UMg0UBETV4aSikt_
பாடியவர்: அமிர்தவர்ஷினி
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
ஈண்டு-இவ்விடத்தில், இம்மையில், இவ்வாறு, இப்பொழுது.
தலைப்படு-தல்- ஒன்று கூடுதல். எதிர்ப்படுதல்
நெறி- வழி
இம்மையில் கற்று (கற்றீண்டு) வாய்மையை (மெய்ப்பொருள்) உணர்ந்தவர் (கண்டார்) மீண்டும் இங்கு பிறவி (மற்றீண்டு) எடுக்காத (வாரா) வழிமுறையை (நெறி) எதிர்கொள்வர் (தலைப்படுவர்).
***
'சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக!
இந்நால் வகையான் மனத்திருள் நீங்கென்று...'
(மணிமேகலை 30,258-260)
சுருதியும், சிந்தனையும், பாவனையும், தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து மயக்கத்தைப் போக்குவாயாக. இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால் மனமயக்கம் கெடுவாயாக!
சுருதியாவது அறவுரைகேட்டல்,
சிந்தனையாவது கேட்டவற்றைச் சிந்தித்தல்,
பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல்,
தரிசனையாவது உண்மை தெளிதல்.
(மணிமேகலை உரை - வித்வான் ஔவை துரைசாமி பிள்ளை)
https://youtu.be/KpEjOaf2al4?si=K5iimSNU3NtCiFRa
பாடியவர்: சவிதா சாய்
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
அகம்பாவம் (தன்னுயிர், தான்) அகற்ற வேண்டும் என்ற அறத்தை புரிந்து கொண்டவர் (அறப் பெற்றானை) மற்ற உயிரினங்கள் (மன்னுயிர்) எல்லாம் வணங்கும் (தொழும்).
தன் உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் இல்லாதவனைப் பிற உயிர்கள் எல்லாம் தொழும்.
— சாலமன் பாப்பையா
***
பொதுவாக "ஞானம்" என்று மொழிபெயர்க்கப்படும் பாலி சொல் போதி என்பது "விழித்தல்" அல்லது "புரிந்துகொள்வது" என்பதைக் குறிக்கிறது—அதாவது (அறியாமையின் காரணமாக மூடியிருந்த) கண்களைத் திறப்பது. புத்தரின் தர்மத்தைப் (தானம், சீலம், பாவனை) பயிற்சி செய்வதன் விளைவாக, ஒருவர் ஆழமாகவும், முழுமையாகவும், நேரடியாகவும், நிபந்தனையுள்ள நிகழ்வுகளின் துக்கம் (dukkha), நிலையற்ற தன்மை (anicca) மற்றும் தன்னிலை இல்லாத தன்மை (anatta) ஆகியவற்றை உணர்ந்தால், அவர் "ஞானம் பெற்றவர்" எனக் கூறப்படுகிறார்.
இந்த உணர்வு தானாகவே ஒருவரின் அனுபவத்திலும் நடத்தையிலும் ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பயம் ஆகியவை மறைந்து, அமைதி மற்றும் மகிழ்ச்சி தோன்றுகின்றன.
ஞானம் பெற்ற ஒருவரை புத்தர் அல்லது அருகர் (பாலி: அரஹந்த்) என அழைக்கலாம். அந்த நிலைதான் வீடுபேறு என்றும் அழைக்கப்படுகிறது
(பாலி: நிப்பாணம், சமஸ்: நிர்வாணம்).
புத்தரின் போதனைகளின் படி, ஞானம் நான்கு நிலைகளில் வருகிறது. ஒவ்வொரு நிலையும் சில குறிப்பிட்ட தளைகளை அகற்றுவதாலும் சில உண்மைகளை உணர்வதாலும் தூண்டப்படுகிறது. அதில் முதல் நிலை ஸோதாபத்தி (Stream Enterer) ஆகும் (ஸோதாபத்தி நிலையை அடைந்தவர்கள் ஸோதாபன்னர்).
ஸோதாபத்தியின் பண்புகள்:
1. மூம்மணிகள் மீது (புத்தர், தர்மம், சங்கம்) உறுதியான நம்பிக்கை. மும்மணிகள் மீது சந்தேகம் (vicikiccha) மறைவது.
2. எந்த சிக்கலும் இல்லாமல் சீலங்களை கடைபிடிப்பது (sīla)
3. சடங்கு சாங்கியங்களில் பற்று (sīlavataparāmāsa) இல்லாமல் போவது.
4. நான், எனது, என்உயிர் (me, mine, myself) என்று நினைப்பதில்லை. என்றென்றும் மாற்றம் இல்லாத 'நான்' என்ற ஒன்று இருப்பதாக நினைப்பது (sakkāyadiṭṭhi) தவறு என்றுணர்வது. அப்படிப்பட்ட மாற்றம் இல்லாத 'நான்' (ஆன்மா) எங்கு தேடியும் காணவில்லை என்று புத்தர் கூறுவார்.
ஆதாரம்: Guide to Buddhism A to Z (Enlightenment) S. Dhammika
https://youtu.be/IvF5RibME5k?si=aTzNI1b4aLtWsM4Z
பாடியவர்: அந்தோணி தாசன்
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
இலக்கம்-குறிப்பொருள்;
இடும்பை-துன்பம்;
கலக்கம்-கலங்குகை;
கையாறு-செயலறுகை
துன்பம் (இடும்பை) உடம்பை நாடுவது (இலக்கம்) இயல்பு என்பதை அறிந்த பெரியோர் (மேல்)
உடலுக்கு வந்த நோயால் (கலக்கம்) மனம் தளர்ந்து (கையாறு) போக மாட்டார்கள்.
***
மனம் வேறு உடல் வேறு
கீழ்க்கண்ட சில நிகழ்வுகளிலிருந்து புத்த பகவானும் உடல் நோவுற்றார் என்பதை காணலாம். ஆனால் அவர் ஒருபோதும் மனம் தளரவில்லை.
மஹா பரிநிப்பாண சூத்திரம்
....
பின் ஒரு பெரும் பிக்கு சமூகத்துடன் பகவர் பேளுவ (Beluva) கிராமத்தில் தங்கலானார்.
பகவருக்கு உண்டான கடுமையான நோய்
2.22. அச்சமயம் பகவர் பிக்குகளிடம்: "பிக்குகளே, நீங்கள் புறப்படுங்கள். வைசாலி அருகில் நீங்கள் வரவேற்கப்படும் இடங்களுக்குச் சென்று, தெரிந்தவர்கள், நண்பர்கள் ஆகியோர் மத்தியில் மழைக்காலத்தைக் கழியுங்கள். நான் இந்த மழைக்காலத்தில் இங்கு, பேலுவ கிராமத்திலேயே இருக்கப்போகிறேன்." (மழைக்காலத்தில் துறவிகள் ஒரே இடத்தில் தங்கியிருப்பது பௌத்த மரபு)
"அப்படியே ஆகட்டும், அண்ணலே," என்று பதிலுரைத்தனர் பிக்குகள்.
2.23. ஆனால் மழைக்காலம் தொடங்கிய போது, பகவருக்குக் கடுமையான நோய் உண்டானது. கூர்மையான வலியும், மரணவேதனையும் உண்டானது. அவற்றைப் பகவர் நிதானமாக மனங்கலங்காமல் உள்ளதை உள்ளபடி பார்த்தவாறு சகித்துக்கொண்டார்.
பின் இந்த எண்ணம் பகவருக்குத் தோன்றியது: "எனக்குத் தொண்டு செய்தவர்களிடம் உரைக்காமல், பிக்கு சமூகத்திடம் விடைபெறுவதற்கு முன்பு நான் பரிநிப்பாணம் அடைவது பொருத்தமாகாது. எனவே இந்த நோயை மனவலிமை கொண்டு அடக்கி, உயிர்ச்செயற்றொடரைக் காப்பாற்றித் தொடர்ந்து வாழவேண்டும்."
பின் புத்த பகவான் அந்த நோயை தனது மனவலிமையோடு அடக்கி, உயிர்ச்செயற்றொடரைக் காப்பாற்றி தொடர்ந்து வாழ்ந்தார்.
2.24. பகவர் நோயிலிருந்து குணமடைந்தார்; குணமடைந்தபின் தனது குடிலிலிருந்து வெளிவந்து அவர் குடிலின் முன் தனக்கென்று அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். ஆனந்தர் பகவரிடம் சென்று மரியாதையுடன் வணங்கி ஒரு புறமாக அமர்ந்து பகவரிடம்: "அண்ணலே, பகவர் தொல்லைப்படாமல் இருப்பதைக் காண்பது எனது பாக்கியம்! பகவர் முழுமையாகக் குணமடைந்ததைக் காண்பதற்கு நான் கொடுத்து வைத்தவன்! உண்மையில் அண்ணலே, பகவரின் நோயைக்கண்டு எனது உடல் செயலழிந்து, ஒரு கொடியைப் போலப் பலவீனமாகிவிட்டது. சுற்றிலும் இருண்டு விட்டது. எனது புலன்களும் என்னைக் கைவிட்டுவிட்டன. ஆனாலும் பகவர் பிக்கு சங்கத்தைப் பற்றி ஏதேனும் கூறாமல் பரிநிப்பாணம் அடைய மாட்டர் என்ற நம்பிக்கை சற்று இருந்தது."
2.25. இப்படிக் கூறிய ஆனந்தரிடம் பகவர் இவ்வாறு பதிலளித்தார்: "பிக்கு சமூகம் வேறென்ன என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றனர், ஆனந்தா? வெளிப்படையான போதனைகள், மறைமுகமான போதனைகளென்று பாகுபாடு செய்யாமல் தம்மத்தைப் போதித்திருக்கின்றேன்; பொத்தி வைத்த கையைக்கொண்ட ஆசிரியர் சில விஷயங்களை மறைத்து வைத்திருப்பது போல, கடைசி வரை மறைந்துள்ள போதனைகள் எதுவும் என்னிடம் இல்லை, ஆனந்தா. எவரொருவர் ஒரு பிக்கு சங்கத்தைத் தான் தான் தலைமை தாங்க வேண்டும் என்றோ அல்லது சங்கம் தன்னை நம்பியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றாரோ அவர் தான் அவர்களை மதித்து அறிவுரைகளைக்கூற வேண்டியிருக்கும். ஆனால் ததாகதருக்கு அத்தகைய எண்ணம் - நான் தான் சங்கத்தலைவனாக இருக்கவேண்டும், சங்கம் என்னைத்தான் நம்பியிருக்கவேண்டும் - என்ற எண்ணம் இல்லை. அதனால் பிக்குசங்கத்தைப் பற்றி மேலும் என்ன அறிவுரைகளைக் கூறுவது?
"நான் இப்போது மெலிந்துவிட்டேன் ஆனந்தா. முதுமையும், அதிக வயதையும் எட்டி விட்டேன். இது எனது எண்பதாவது வருடம். எனது வாழ்வு முடிந்து விட்டது. ஆனந்தா, ஒரு பழைய வண்டி சிரமத்தோடு ஒன்று சேர்க்கப்பட்டு ஓட்டப்படுவது போல, ததாகதரின் உடலும் ஆதரவுகளோடு (ஊன்றுகோல் முதலியன) தான் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ததாகதர் புறப் பொருட்களை மனத்தில் கொள்ளாமல், சில உணர்ச்சிகள் மறைந்து மன ஒருமைப்பாட்டில் இருக்கும் போது மட்டுமே இந்த உடல் தொல்லை தராமல் வசதியாக இருக்கிறது. (ஆழ்ந்த சமாதி தியான நிலையில் மட்டுமே உடல் வலி தெரிவதில்லை என்கிறார்.)
2.26. "எனவே ஆனந்தா, உங்களுக்கு நீங்களே தீவாக இருக்க வேண்டும், உங்களுக்கு நீங்களே அடைக்கலமாக இருக்க வேண்டும். புற அடைக்கலம் தேட வேண்டாம்; தம்மம் உங்கள் தீவாகட்டும், தம்மம் உங்கள் அடைக்கலமாகட்டும், வேறு அடைக்கலம் தேடவேண்டாம்."
....
....
4.20. பின் சுண்டரின் உணவை உண்டபின் புத்த பகவானின் உடலில் ஒரு பெரும் பிணி உண்டானது. இரத்த பேதியுடன் மிக்க வலியையும், மரண வேதனையையும் பகவர் அனுபவித்தார். ஆனாலும் பகவர் அதனை - கடைப்பிடியோடு, விழிப்புடன் இருந்து - அதனால் பாதிக்கப் படாமல் (மனத்தளவில்) குறை கூறாமல் பொறுத்துக் கொண்டார்.
பின்னர் ஆனந்தரிடம், "ஆனந்தா, நாம் குசிநகரம் (Kusinārā) செல்வோம்," என்றார்."அப்படியே ஆகட்டும் அண்ணலே," என்று ஆனந்தர் பதிலுரைத்தார்.
ஆதாரம்: மஹா பரிநிப்பாண சூத்திரம் - புத்த பகவானின் கடைசி நாட்கள் Mahā Parinibbāna Sutta DN16
https://youtu.be/10ap6Tx7xmM?si=oN629g8IgpQu5Qar
பாடியவர்: எம். கே. பாலாஜி
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பேணு-தல்-போற்றுதல்
வந்துவிட்ட (உற்ற) நோயை நீக்கவும், இனி நோய் வராமல் (உறாஅமை) தடுக்கவும் உதவும் பெரியாரை நட்புக் கொண்டு போற்றுதல் (பேணி) வேண்டும்.
***
புத்த பகவானின் தம்ம பாதையில் பயணிப்பது என்பது உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதும், இனி பிரச்சினைகள் வராமல் இருப்பதற்குமான வழியாகும்.
எனவே மகா மங்கள சுத்தத்தில் ஒரு தேவர் புத்தரிடம், 'மேலான மங்கலங்கள் எவை?' என்று கேட்க,
புத்த பகவான் மங்கள சுத்தத்தை, 'முட்டாள்களோடு சேராமல் இருப்பதும், சான்றோருடன் சேர்ந்து இருப்பதும்,' என்று தொடங்குகிறார் (asevana ca balanam, panditanan ca sevana).
முதல் வரியிலேயே சான்றோருடன் சேர்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை புத்த பகவான் வலியுறுத்துகிறார். நாம் தம்ம பாதையில் முன்னேற வேண்டும் என்றால், நமது வாழ்க்கையில் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால், இனி பிரச்சினைகள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் அது நாம் எப்படிப்பட்ட நட்புகளை வளர்கிறோம் என்பதை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.
தம்மபதம் 76-77
குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், அவரை செல்வப் புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டுகிறவர் எனக் கருதி, அவரோடு நட்புக் கொண்டு பழக வேண்டும் அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமே யன்றித் தீமை பயக்காது.
பிறர் தீமை செய்வதைக் கண்டித்துத் தடுத்து அறிவு புகட்டுகிறவர்கள், நல்லோருக்கு அன்புக்குரியவர்கள். ஆனால் தீயவர்கள் அவர்களை வெறுப்பார்கள்.
(தம்மபதம் தமிழில்: நில்வக்கே ஸோமானந்த தேரர்)
***
https://youtu.be/G7C3PlvkeZ8?si=y-8o8r1x6Zz34F7M
பாடியவர்: ஸ்பூர்த்தி ராவ்
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
இழுக்கம்-பிழை
இழுக்கார்-பிழை செய்யாதவர்
நாணம்-பழிச்செயல் முதலியவற்றால் உண்டாகும் மானம்.
ஒழுக்கம், வாய்மை, பழிச்செயலுக்கு அஞ்சுவது (நாணம்) ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே (இழுக்கார்) உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் (குடிப்பிறந்தார்).
***
பாரமிதை என்பதன் பொருள் கரையேறுவதற்குரியது என்பது. அதாவது பிறவிக் கடலினின்றும் கரையேறுவதற்குரியது. இது பத்து வகைப்படும். இந்தப் பத்தையும் முழுமையாக்கிய பிறகே போதி சத்துவர் தனது கடைசி பிறப்பெடுத்தார் என்பது பௌத்த மரபு.
அதில் இரண்டு:
ஒழுக்கம் Sila (virtue)
வாய்மை Sacca (truthfulness)
ஒழுக்கத்தை முழுமையாக்குவதென்பது நமது உடல், சொல், உள்ளம் மூலமாக செய்யும் செயற்பாடுகள் எவ்வாறு உலகில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை நன்று அறிந்து செயல்படுவதாகும்.
வாய்மையின் முழுமை என்பது எத்தகைய சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருப்பது, மரண அச்சுறுத்தல் வந்தாலும் அஞ்சாமல் மனம் தளராமல் வாய்மையை விட்டுச் சற்றும் பிறழாமல் இருப்பது.
ஹிரீ-ஒத்தாப்ப (Hirī-Ottappa) என்ற இரு பண்புகள் பற்றி புத்த பகவான் பல போதனைகளில் கூறியுள்ளார். இரண்டும் சேர்ந்தே காணப்படும்.
ஹிரீ (அகம் சார்ந்தது) என்பது
தீய செயலை நினைக்கும் போது மனதில் உண்டாகும் அருவருப்பு.
ஒத்தாப்ப (புறம் சார்ந்தது) என்பது தீய செயலை செய்யும் முன் அதன் விளைவுகளை நினைத்து உண்டாகும் அச்சம். அதுதான் நாணம்.
உயர் குடி என்ற ஒருவரை அழைப்பது பிறப்பின் காரணமாக அல்ல. புத்த பகவான் கூறுகிறார்:
தம்மப்பதம் 391
உடல், வாக்கு, உள்ளம் ஆகிய மூன்றிலும் தவறு செய்யாதவர்; இம்மூன்றினையும் அடக்கி ஆள்கிறவர் யாரோ அவரைதான் நான் பிராமணன் என அழைக்கிறேன்.
Whoever does no wrong in body, speech, heart, is restrained in these three ways: he's what I call a brahman.
***
https://youtu.be/Y_3l5TWu86E?si=CKZLl8TV9dRdPi0H
பாடியவர்: லிடியன் நாதஸ்வரம்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சோகா-த்தல்-துன்புறுதல்;
சொல்லிழுக்கு-சொற்குற்றம்;
படு-தல்-உண்டாதல், தோன்றுதல்;
எதனை (யா) காக்கா விட்டாலும் (காவாராயினும்) நாக்கினை (நா) காக்க, அப்படி காக்கா விட்டால் (காவாக்கால்) சொல் குற்றத்தினால் (சொல்லிழுக்கு) அகப்பட்டுத் துன்புறுவர் (சோகாப்பர்).
***
பத்து வகையான தீவினைகள் உள்ளன. அவற்றில் மூன்று உடலாலும், நான்கு நாவாலும், மூன்று மனதாலும் செய்யப்படும்.
நாவால் செய்யும் நான்கு விதமான தீவினைகள்
மணிமேகலை (காதை 30):
தீவினை என்பது யாது என வினவின்
ஆய் தொடி நல்லாய்! ஆங்கு அது கேளாய்
...
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன் இல்
சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்
...
... பயன் தெரி புலவர்
இத் திறம் படரார், படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகி
கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்.
விளக்கம்
தீவினையென்று சொல்லப் படுவது யாதென்று கேட்பாயாயின்
அழகிய வளையணிந்த நங்கையே, யான் சொல்லும் அதனைக் கேட்பாயாக
...
பொய்யுரையும், புறங்கூறலும், கடுஞ்சொல்லும், பயனில்லாத சொல் சொல்லுதலும் என்று
வாக்கினால் உண்டாகும் தீவினைகள் நான்கும்;
......
வினைவகையும், அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்;
இக் குற்றங்களை ஒருநாளும் நெஞ்சாலும் நினைக்க மாட்டார்கள் - அப்படி நினைவாராயின்
விலங்கும், பேயும், நரகருமாகிய பிறப்பாகப் பிறந்து,
கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப உடல் பெற்று வருந்துவர்.
(மணிமேகலை உரை - வித்வான் ஔவை துரைசாமி பிள்ளை)
***
https://youtu.be/yFIGoH9zrp4?si=wl3tB8ItLGfEgFpE
பாடியவர்: மோகன் வைத்தியா
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
ஊருணி-ஊராருண்ணுநீர்நிலை.
பேரறிவாளன்-உயர்ந்த ஞானமுடையவன்
திரு-செல்வம்
நீர் நிறைந்துள்ள ஊரார் பயன்படுத்தும் நீர்நிலை (ஊருணி)
உயர்ந்த ஞானமுடையவன் (பேரறிவாளன்) பொதுநல நோக்குடன் உலகத் தார்க்குப் பயன்படுத்தும் (உலகவாம்) செல்வத்தை (திரு) போல.
***
செல்வத்தின் பயன்
புத்த பகவான் அனாதபிண்டிகருக்கு கூறியது:
"இல்லறத்தாறே, செல்வம் பயன்படுத்த ஐந்து காரணங்கள் உள்ளன. அவை என்னவென்றால்—
1. முதலாவது, ஒருவர் தன் உழைப்பாலும் முயற்சியாலும், தன் கைகளால் சேர்த்த, வியர்வையால் சம்பாதித்த நியாயமான செல்வத்தால் தானே மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். தன்னையே நன்றாக மகிழ்வுடன் வைத்துக் கொள்கிறார். தன் தாய் தந்தையை மகிழ்விக்கிறார். தன் பிள்ளைகள், துணைவர், அடிமைகள் (bondservants), வேலைக்காரர்கள், ஊழியர்கள் ஆகியோரை மகிழ்விக்கிறார். இது முதல் காரணம்.
2. இரண்டாவது, அந்த நியாயமான செல்வத்தால், தன் நண்பர்கள் மற்றும் தோழர்களையும் மகிழ்விக்கிறார். இது இரண்டாவது காரணம்.
3. மூன்றாவது, அந்த செல்வத்தால், தீ, வெள்ளம், அரசர்கள், கொள்ளையர்கள், விருப்பமில்லாத வாரிசுகள் போன்றவற்றிடமிருந்து தன்னை பாதுகாக்கிறார். இது செல்வத்தைப் பயன்படுத்தும் மூன்றாவது காரணம்.
4. நான்காவது, அந்த செல்வத்தால் ஐந்து காணிக்கைகளை செய்கிறார்: உறவினர்களுக்கு, விருந்தினர்களுக்கு, முன்னோர்களுக்கு, அரசருக்கு மற்றும் குலதெய்வங்களுக்கு. இது செல்வத்தைப் பயன்படுத்தும் நான்காவது காரணம்.
5. ஐந்தாவது, அந்த செல்வத்தால், துறவிகள் மற்றும் பிராமணர்களுக்காக ஊக்கமளிக்கும் தானங்களை அளிக்கிறார்—அவர்கள் கள்ளுண்ணாமை கடைப்பிடிப்போர், அலட்சியத்தையும் தவிர்க்கிறவர்கள், பொறுமையிலும் மென்மையிலும் நிலைத்தவர்கள், தங்களை அடக்கி, அமைதியாக்கி, நிப்பாண வீடுபேரடைய முயற்சிக்கின்றவர்கள் - அப்பேர்ப்பட்டவர்களுக்கு தரும் தானம் சொர்க்கத்திற்குத் தகுந்தது, மகிழ்ச்சியை விளைவிக்கும், சொர்க்கத்தை நோக்கி வழிகாட்டும். இது செல்வத்தைப் பயன்படுத்தும் ஐந்தாவது காரணம்.
இவைதான் செல்வம் சேர்க்க வேண்டிய ஐந்து காரணங்கள்.
ஒரு மேன்மையான சீடர் இந்த ஐந்து காரணங்களினால் சேர்த்த செல்வம் குறைந்துவிட்டால், அவர் சிந்திக்கிறார்: ‘இந்த காரணங்களுக்காக நான் சேர்த்த செல்வம் இப்போது குறைந்து வருகிறது.’ அதனால், அவர் மனத்தில் வருத்தம் கொள்ளவில்லை.
அதேபோல், அந்த செல்வம் அதிகரித்தாலும், அவர் சிந்திக்கிறார்: ‘இந்த காரணங்களுக்காக நான் சேர்த்த செல்வம் இப்போது அதிகரிக்கிறது.’ ஆகவே, இரு சூழ்நிலைகளிலும் அவர் வருந்துவதில்லை."
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் AN5.41
***
https://youtu.be/BjAFaoq4RWk?si=VFUg0Gz-KwIziycO
பாடியவர்: சாய் விக்னேஷ்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
பெருக்கம்-செல்வம்;
சுருக்கம்-வறுமை;
உயர்வு-மேன்மை
செல்வம் வரும்போது (பெருக்கம்) துள்ளாமல் பணிவுடன் இருப்பதும், வறுமை (சுருக்கம்) வரும்போது சோர்வடையாமல் தலை நிமிர்ந்து முயற்சிப்பதும் (உயர்வு) வேண்டும்.
***
உபேட்சை (பாலி: upekkhā சமஸ்: Upekshā. ஆங்கிலம்: Equanimity) என்பது ஒரு மனோநிலை. இது பத்து பாரமிதைகளுள் ஒன்று. பிரமவிகாரங்கள் - உபேட்சை, கருணை, மைத்திரி, முதிதையென்னும் - நான்கினுள் ஒன்று. நன்கு வளர்க்கப்பட வேண்டிய மிகவும் உயர்வான பண்பு.
அமைதியான நிதானமான மனநிலை. அதாவது சமமான மனநிலை. நல்ல செய்தி கேட்டால் மகிழ்ச்சியில் அடித்துச் செல்லப்படுவதில்லை. கெட்ட செய்தி கேட்டால் துக்கத்தில் ஆழ்ந்து விடுவதில்லை. உபேட்சை உள்ளவர் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமநிலையில் உள்ளவர். எல்லாக் காலத்திற்கும் ஏற்ற பெண் அல்லது ஆண் நீங்கள். கோடை காலத்துக்கு மட்டும் அல்ல. மழை காலத்துக்கு
மட்டும் அல்ல. மாறிக் கொண்டிருக்கும் உலகில் சமநிலையில் உள்ளவர்.
விளக்கவுரைகளில் உபேட்சைக்குக் கொடுக்கப்படும் உவமானம்: இந்த மாபெரும் பூமி தன் மீது தூய்மையானவற்றையோ, தூய்மையற்றவற்றையோ எதைக் கொட்டினாலும் ஆட்சேபிக்காமல் ஏற்றுக் கொள்வதைப் போல, சமநிலையில் உள்ளவர். நன்மை தீமை எது நிகழ்ந்தாலும், எல்லையற்ற மகிழ்ச்சி அல்லது அளவற்ற சோர்வு காட்டாமல் எப்போதும் சீரான அமைதியுடன் இருப்பவர்.
(ஆதாரம்: ஆஜான் சோணா தர்ம உரையிலிருந்து.)
செல்வம் வரும்போது உபேட்சை உள்ளவர் உணர்கிறார்: 'இது மாறும் தன்மை கொண்டது. நாளைக்கு இந்த செல்வம் போனாலும் போகலாம்.' எனவே அவர் பணிவுடன் இருக்கிறார்.
வறுமை வரும்போதும் உபேட்சை உள்ளவர் உணர்கிறார்: 'இது மாறும் தன்மை கொண்டது. நான் முயற்சி செய்தால் இந்த சூழ்நிலையை மாற்றி விடலாம்.' எனவே அவர் நிமிர்ந்து நிற்கிறார்.
***
https://youtu.be/8G5RKNkeslE?si=FsTZ-8EUAG7zRI-R
பாடியவர்: ஏ. சி. தினகரன்
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
காட்டு¹-தல்-காண்பித்தல்
ஈர்¹-தல்-அறுத் தல்
உணர்¹-தல்-அறிதல்
ஒவ்வொரு நாளும் ஒன்று போல காணப்படுகிறது.
ஆனால் ஒவ்வொரு நாளும் ஆயுளை (உயிர்) அறுக்கும் (ஈர்க்கும்) வாள் என்பதை வாழ்க்கையை உணர்ந்தவர்கள் (உணர்வார்) அறிவார்.
***
மரணத்தை நினைவு கொள்ளல்
புத்தர் கூறினார்:
“துறவிகளே, மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கு வளர்க்கப்பட்டால் அது மிகுந்த பயனும் பலனும் தரும். அது மரணத்திலிருந்து விடுதலையில் முடிவடைகிறது. நீங்கள் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கிறீர்களா?”
இதை அவர் கூறியதும், ஒரு துறவி புத்தரிடம் கூறினார்:
“அய்யா, நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கிறேன்.”
“ஆனால் துறவியே, அதை நீர் எப்படி வளர்க்கின்றீர்?”
“அய்யா, இது சம்பந்தமாக நான் நினைப்பது: ‘ஓ, நான் இன்னொரு நாளும் இரவும் வாழ்ந்தால், புத்தரின் உபதேசங்களில் கவனம் செலுத்துவேன்; நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்.”
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
“அய்யா, நானும் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கிறேன்.”
.....
இது சம்பந்தமாக நான் நினைப்பது: ‘ஓ, நான் இன்னொரு நாளேனும் வாழ்ந்தால், புத்தரின் உபதேசங்களில் கவனம் செலுத்துவேன்; நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் பிச்சை பெற்ற உணவைச் சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் வாழ்ந்தாலும் போதும்; அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் நான்கு அல்லது ஐந்து வாயளவு உணவு மென்று விழுங்கும் நேரத்துக்கு மட்டும் வாழ்ந்தாலும் போதும். அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் ஒரு வாயளவு உணவை மென்று விழுங்கும் நேரத்துக்கு மட்டும் வாழ்ந்தாலும் போதும்.
அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
மற்றொரு துறவி புத்தரிடம் கூறினார்:
.....
'ஓ, நான் ஒரு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் நேரம் மட்டும் வாழ்ந்தாலும், அல்லது வெளிவிட்டு உள்ளிழுக்கும் நேரம் மட்டும் வாழ்ந்தாலும் போதும்.
அந்த நேரத்தில் புத்தரின் உபதேசங்களில் முழு கவனம் செலுத்துவேன், நான் நிறைய முன்னேற்றம் அடைய முடியும்.’ இதுவே நான் மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் விதம்....
இது கூறப்பட்டதும், புத்தர் அந்த துறவிகளிடம் கூறினார்:
“ஒரு நாள் மற்றும் இரவு வாழ வேண்டும் என்று விரும்பி மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் துறவிகள்… அல்லது ஒரு நாள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்… அல்லது ஒரு பிச்சை உணவைச் சாப்பிடும் அளவுக்கு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்… அல்லது நான்கு அல்லது ஐந்து வாயளவு உணவை மென்று விழுங்கும் நேரத்துக்கு வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்—இவர்கள் எல்லாம் கவனக்குறைவாக வாழும் துறவிகள் எனப்படுகிறார்கள். அவர்கள் தளர்ந்த மனநிலையுடன், களக்கங்களை முடிவுக்கு கொண்டு செல்ல மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை மெதுவாகவே வளர்க்கிறார்கள்.”
ஒரு வாயளவு உணவை மென்று விழுங்கும் நேரத்துக்கு மட்டும் வாழ வேண்டும் என்று விரும்பி மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை வளர்க்கும் துறவிகள்… அல்லது மூச்சை உள்ளிழுத்து வெளியிடும் நேரம் மட்டும்… அல்லது வெளியிட்டு உள்ளிழுக்கும் நேரம் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்—இவர்கள் எல்லாம் கவனமாக வாழும் துறவிகள் எனப்படுகிறார்கள். அவர்கள் களக்கங்களை முடிவுக்கு கொண்டு செல்ல மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை தீவிரமாக வளர்க்கிறார்கள்.
எனவே நீங்கள் இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்: ‘நாம் கவனமாக வாழ்வோம். களக்கங்களை முடிவுக்கு கொண்டு செல்ல, மரணத்தை நினைவில் கொள்ளும் மனப்பாங்கை தீவிரமாக வளர்ப்போம்.’ இதுவே நீங்கள் பயிற்சி பெற வேண்டிய விதம்."
ஆதாரம்: அங்குத்தர நிகாயம் 6.19 மரணத்தை நினைவு கொள்தல்
***
https://youtu.be/E796Rq7BaMU?si=Z3HzAjIhRJwVul-o
பாடியவர்: ஸ்ரீவர்ஷா