நான்கு மேன்மையான உண்மைகள்
அஜான் சா
The Four Noble Truths
A Dhamma talk by Ajahn Chah
(இந்தப் போதனை இங்கிலாந்தில் கம்பிரியாவில் உள்ள மஞ்சுஶ்ரீ நிறுவனத்தில், 1977 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.)
இன்றைக்குத் தலைமைப் பிக்கு உங்களுக்கு ஒரு போதனை வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார். எனவே நீங்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்து மனதை ஒன்று படுத்திக் கொள்ளுங்கள். மொழி தடையாக இருப்பதால் நாம் ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே நீங்கள் சரியான கவனத்தோடு இல்லாவிட்டால் நான் சொல்வது உங்களுக்கு விளங்காமல் போய்விடலாம்.
நான் இங்கு தங்கியிருந்த நேரம் மிகவும் இனிமையானதாக இருந்தது. உங்கள் ஆசிரியரும் அவரது சீடர்களான நீங்களும் மிகவும் அன்பாக நடந்து கொண்டீர்கள், நட்புணர்வோடும், சிரித்த முகத்தோடும், உண்மையான அறத்தைப் பயில்வோருக்கு உகந்தவாறு இருந்தீர்கள். இந்த இடமும் மிகவும் ஊக்கம் தருவதாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு பெரிய இடம்! இந்த இடத்தைச் சீர் செய்து அறத்தைப் பயில்வதற்கு உகந்த இடமாக மாற்றிய உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டினைப் பாராட்டுகிறேன்.
நான் பல வருடங்களாக ஆசிரியராக இருந்திருக்கிறேன். நான் கடந்து வந்த பாதையில் என் பங்குக்குப் பல இன்னல்களைச் சந்தித்திருக்கின்றேன். இப்போது எனது விகாரையான 'வாட் நோங் பா போங்'கிற்குச் சுமார் நாற்பது கிளை விகாரைகள் இருக்கின்றன. [7] ஆனால் இன்றும் அறத்தைக் கற்றுக் கொடுத்து வழிப்படுத்த முடியாத பல சீடர்கள் அங்கு உள்ளனர். சிலருக்கு அறம் தெரியும். ஆனால் அவர்கள் பயிற்சி செய்ய முயல்வதில்லை. சிலருக்கு அறம் தெரிவது இல்லை, அவர்கள் அதைத் தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. அப்படிப் பட்டவர்களை என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. மக்கள் தங்கள் பயிற்சியில் ஏராளமான ஐயப்பாடுகளுடன் இருக்கின்றனர், எப்போதும் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் நிப்பாணத்தை அடைய விரும்புகின்றனர் ஆனால் மார்க்கத்தில் பயணம் செய்ய விரும்புவதில்லை. அவர்களைத் தியானம் செய்யச் சொன்னால் பயப்படுகின்றனர். பயப்படவில்லை என்றால் தூங்கி வழிகின்றனர். பெரும்பாலானோர் நான் கற்பிக்காததையே செய்ய விரும்புகின்றனர். போற்றுதற்குரிய தலைமை ஆசிரியரை இங்கு சந்தித்த போது அவரது சீடர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று கேட்டேன். அவரது மாணவர்களும் எனது மாணவர்களைப் போலவே தான் உள்ளனர் என்றார். இது தான் ஆசிரியாக இருப்பதில் உள்ள வேதனை.
நான் இன்றைக்கு வழங்கப் போகும் போதனை இந்தச் சமயத்தில், இந்த வாழ்க்கையில் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு வழியைப் பற்றியது. சில மக்கள் வேலையின் காரணமாகத் தங்களுக்கு அறத்தைப் பயிற்சி செய்ய நேரமில்லை என்பார்கள். "நாங்கள் என்ன செய்வது?" என்று கேட்பார்கள். நான் அவர்களைக் கேட்பேன், "நீங்கள் வேலை செய்யும் போது மூச்சு விடுவதில்லையா?" "ஆம், கண்டிப்பாக மூச்சு விடுவோம்!" என்பார்கள். "பின் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது உங்களுக்கு மூச்சு விட நேரம் எப்படிக் கிடைத்தது?" அதற்கு அவர்கள் பதில் சொல்ல முடிவதில்லை. "வேலை செய்யும் போதும் வெறும் சதி (மனக் கவனம்) இருந்தால் போதும், பயிற்சி செய்யப் போதிய நேரம் கிடைக்கும்."
தியானம் பயில்வது மூச்சு விடுவதைப் போலத்தான். நாம் வேலை செய்யும் போது மூச்சு விடுகிறோம், தூங்கும் போது மூச்சு விடுகிறோம், உட்காரும் போது மூச்சு விடுகிறோம்... மூச்சு விட நேரம் எப்படிக் கிடைத்தது? ஏனென்றால் மூச்சு விடுவதன் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் எப்போதும் மூச்சு விட நேரம் கிடைக்கிறது. அது போலவே, தியானம் செய்வதின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டால் பயிற்சி செய்வதற்கும் நாம் நேரம் கண்டு விடுவோம்.
நீங்கள் யாராவது துக்கம் அனுபவித் திருக்கின்றீர்களா?... எப்போதாவது மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றீர்களா?... இங்கு தான் வாய்மை இருக்கிறது. இங்குதான் அறத்தைப் பயில வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது யார்? மனம் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது. யார் துக்கம் அனுபவிப்பது? மனம் தான் துக்கம் அனுபவிக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் எங்கு எழுகின்றனவோ, அங்கேயே அவை தணிகின்றன. மகிழ்ச்சியான நிலையை அனுபவித்திருக்கின்றீர்களா?.... துக்கம் அனுபவித்திருக்கின்றீர்களா?...இது தான் நமது பிரச்சனை. துக்கத்தைத் தெரிந்தால், [8] துக்கத்தின் காரணத்தைத் தெரிந்தால், அதன் முடிவை, முடிவுக்குக் கொண்டு செல்லும் பாதையை அறிந்தால் பிரச்சனையைத் தீர்த்து விடலாம்.
இரண்டு விதமான துக்கங்கள் உள்ளன: ஒன்று சாதாரணத் துக்கம். மற்றது அசாதாரணத் துக்கம். நிலைமைகளின் இயற்கை இயல்பினால் உள்ள துக்கம் தான் சாதாரணத் துக்கம்: நிற்பது துக்கம், உட்காருவது துக்கம், படுத்திருப்பதும் துக்கம். காரணங்களினால் தோன்றிய நிலைமைகளில் எல்லாம் இயல்பாக இருக்கும் துக்கம் இது. புத்தர் கூட இது போன்ற துக்கத்தினை அனுபவித்தார், அவர் வசதியையும், துன்பத்தையும் அனுபவித்தார். ஆனால் அவர் அவை இயற்கையின் நிலைமைகள் என்பதைத் தெரிந்திருந்தார். இந்தச் சாதாரண வசதியையும், துன்பத்தையும் அவற்றின் உண்மையான இயல்பையும் அறிந்து கொண்டு புத்தர் அவற்றைச் சமாளித்தார். இந்த "இயற்கையான துக்கத்தை" அவர் அறிந்திருந்ததால் இந்த உணர்ச்சிகள் அவரைப் பாதிக்கவில்லை.
இரண்டாவது வகையான துக்கமே முக்கியமானது. புறத்திலிருந்து படர்ந்து வரும் துக்கம். அந்த "அசாதாரணத் துக்கம்." நாம் நோய் வாய்பட்டிருந்தால் மருத்துவரிடம் சென்று ஒரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். ஊசி தோலைத் துளைக்கும் போது கொஞ்சம் வலி ஏற்படுவது இயற்கை தான். ஊசி எடுக்கப்பட்டவுடன் வலியும் மறைகிறது. இது சாதாரண வகையான துக்கம். பெரிய பிரச்சனை இல்லை, எல்லோரும் அனுபவிப்பது. அசாதாரணத் துக்கம் என்பது 'உபாதானா' என்று நாம் கூறுவதிலிருந்து தோன்றுகிறது, அதாவது பொருட்களின் மீது பற்றுக் கொள்வது. இது விஷம் கொண்ட ஊசியைப் போட்டுக் கொள்வது போல. இப்போது இது சாதாரண வலி இல்லை. இது போன்ற வலி மரணத்தில் முடியும் வலி. இது பற்றுக் கொள்வதிலிருந்து தோன்றும் துக்கத்தைப் போன்றது.
தவறான பார்வை என்பது இன்னொரு வகையான பிரச்சனை. அது காரணங்களால் தோற்றுவிக்கப் பட்ட நிலைமைகள் நிலையற்றதென்பதைத் தெரிந்திருக்காததால் ஏற்படும் துன்பம். காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட நிலைமைகள் சம்ஸாரத்தின் [9] பிரதேசத்தில் அடங்கும். மாற்றம் பெற விருப்பம் கொள்ளாதது - இப்படி நினைத்தால் நாம் துக்கம் அனுபவிப்போம். இந்த உடல் தான் நாம் என்றோ அல்லது அது நமக்குச் சொந்தம் என்றோ நினைத்தால், மாற்றம் ஏற்படும் போது அச்சம் கொள்கிறோம். நிலைமைகள் இதுபோல நடப்பதில்லை. மூச்சை எடுத்துக் கொள்ளுங்கள்: உள் இழுத்தபின் அதை வெளியே விட்டுத்தான் ஆகவேண்டும், வெளியே சென்றபின் அது உள்ளே வந்தாக வேண்டும். இது தான் இயற்கை. இப்படித்தான் நாம் வாழ முடிகிறது. நிலைமைகள் இப்படித்தான். ஆனால் நாம்தான் அதைப் புரிந்து கொள்வதில்லை.
நாம் எதாவது ஒரு பொருளைத் தொலைத்து விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொருள் நம்முடையது என்று நினைத்தால், அதைப் பற்றிக் கவலை கொள்வோம். அந்தப் பொருள் காரணத்தினால் தோற்றுவிக்கப் பட்டதொன்று என்பதையும் அது இயற்கையின் நியதிக்குத் தகுந்தார்ப்போலச் செல்கிறது என்பதையும் அறியாவிட்டால் நாம் துக்கம் அனுபவிப்போம். நீங்கள் உள்மூச்சோடு மட்டும் வாழமுடியுமா? காரணங்களால் தோன்றிய எல்லாம் மாற்றம் கொள்வது இயற்கையே. இதைத் தெரிந்து கொள்வது அறத்தைத் தெரிந்து கொள்வதாகும். அனிச்சத்தை அதாவது மாற்றத்தைத் தெரிவதாகும். இந்த மாற்றத்தின் காரணமாகத்தான் நாம் வாழமுடிகிறது. நிலைமைகளின் இயல்பினைப் புரிந்து கொண்டால் அவற்றை விட்டுவிடலாம்.
அறத்தைப் பயிற்சி செய்வது என்பது நிலைமைகளின் உண்மையான இயல்பினை அறிந்து, துக்கம் எழாமல் இருப்பதற்காகத்தான். தவறான எண்ணம் கொண்டால் உலகின் இயல்புக்கு எதிரான கருத்துக் கொள்கிறோம். அறத்துக்கு எதிராகவும், உண்மைக்கு எதிராகவும் கருத்துக் கொள்கிறோம். உங்களுக்கு நோய் வந்து அதன் காரணமாக மருத்துவமனை செல்ல வேண்டியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பான்மையான மக்கள் நினைப்பது, "தயவுசெய்து என்னைச் சாக விட்டு விடாதீர்கள். நான் நலம் பெற வேண்டும்." இது தவறான எண்ணம். இத்தகைய எண்ணம் உங்களைத் துக்கத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் இவ்வாறு நினைக்க வேண்டும், "நான் நலம் பெற்றால் நான் நலம் பெற்றுவிடுவேன். நான் இறந்துவிட்டால், இறந்து விடுவேன்." இதுதான் சரியான எண்ணம், ஏனென்றால் இறுதியில் உங்களால் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு நினைத்தால், நீங்கள் இறந்தாலும் பிழைத்தாலும், உங்கள் எண்ணம் தவறாகிவிட முடியாது. நீங்கள் கவலைப்பட வேண்டிய தில்லை. என்ன செய்தாலும் சரி எப்படியாவது நான் நலமடைந்துவிட வேண்டும். மரணத்தை நினைத்தாலே பயப்படுவது.. இது போன்ற மனம் நிலைமைகளை அறிந்து கொள்வதில்லை. நீங்கள் இவ்வாறு நினைக்க வேண்டும், "நான் நலம் பெற்றால் நல்லது. நலம் பெறாவிட்டாலும் நல்லதே." இப்படி நினத்தால் நாம் தவறு செய்ய முடியாது. நாம் பயப்படவோ, அழவோ வேண்டியதில்லை. ஏனென்றால் நாம் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்கிறோம்.
புத்தர் தெளிவாகப் பார்த்தார். அவர் போதனை எப்போதும் சரியானது, காலவரையற்றது. அது எப்போதும் மாறாதது. இன்றைக்கும் அவை மாறவில்லை. இந்தப் போதனையை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால் அமைதியும், நலமும் பரிசாக அடைவோம்.
புத்தரின் போதனைகளில் "தான்-இன்மை" பற்றிய பிரதிபலிப்பு உள்ளது: "இது நான் இல்லை, இது எனக்குச் சொந்தம் இல்லை." ஆனால் மக்களுக்கு இது போன்ற போதனைகளைக் கேட்பதற்குப் பிடிப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் தான் என்ற எண்ணத்தோடு பற்றுக் கொண்டுள்ளனர்.. இதுவே துக்கம் எழுவதற்கான காரணம். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு ஒரு பெண்மணி கோபத்தை எப்படிக் கையாள்வது என்று கேட்டார். அடுத்த முறை அவருக்குக் கோபம் வரும் போது ஒரு அறிவிப்பொலி (அலாரம்) உள்ள கடிகாரத்திற்குச் சாவி கொடுத்துத் தனக்கு முன் வைத்துக் கொள்ளூமாறு கூறினேன். பின் கோபம் தணிவதற்குத் தனக்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளச் சொன்னேன். உண்மையிலேயே கோபம் அவருக்குச் சொந்தம் என்றால் அதனிடம் இவ்வாறு கட்டளை இடலாம் அல்லவா? "இரண்டு மணி நேரத்தில் மறைந்து விடு!" ஆனால் அவ்வாறு கட்டளை இட அது உண்மையில் நமதில்லை. சில சமயம் இரண்டு மணி நேரத்திலும் அது தணிவதில்லை. மற்ற சமயங்களில் ஒரு மணி நேரத்திலேயே தணிந்து விடுகிறது. கோபத்தை நமது சொந்தமான பொருளைப் போலச் சுமந்து கொண்டிருப்பது துக்கம் உண்டாக்கும். உண்மையிலேயே நமதென்றால் நமது கட்டளைக்கு அது பணிய வேண்டும். நாம் சொல்வதைக் கேட்காவிட்டால் அது ஒரு ஏமாற்றத்தக்கதொன்று தான். ஏமாந்துவிடாதீர்கள். மனம் இன்பத்தோடு இருந்தாலும், துன்பத்தோடு இருந்தாலும் அதனால் ஏமாந்துவிட வேண்டாம். மனம் அன்போடு இருந்தாலும், வெறுப்போடு இருந்தாலும், அதனால் ஏமாந்துவிட வேண்டாம். இவை எல்லாம் ஏமாற்றுவேலைகள்.
உங்களில் யாராவது எப்போதாவது கோபப் பட்டிருக்கின்றீர்களா? கோபமாக இருக்கும் போது அது நல்ல உணர்ச்சியா, கெட்ட உணர்ச்சியா? கெட்ட உணர்ச்சியென்றால் அந்த உணர்ச்சியை ஏன் தூக்கி எறியக்கூடாது, ஏன் சுமந்து கொண்டு இருக்க வேண்டும்? இது போன்றவற்றைச் சுமந்து கொண்டு இருக்கையில் நீங்கள் அறிவாளி என்றோ, புத்திசாலி என்றோ எப்படிக் கூறிக் கொள்ள முடியும்? நீங்கள் பிறந்த நாளிலிருந்து எத்தனை முறை மனம் உங்களைக் கோபிக்க வைத்து ஏமாற்றியிருக்கிறது? சில சமயம் மனம் குடும்பத்தினர் அனைவரையும்கூடச் சண்டை போட வைக்கிறது. அல்லது உங்களை இரவு முழுவதும் அழ வைக்கிறது. ஆனாலும் நாம் தொடர்ந்து கோபம் கொள்கிறோம். நிலைமைகளைச் சுமந்து கொண்டு துக்கம் அனுபவிக்கிறோம். துக்கத்தைக் காணாவிட்டால் அதனிடமிருந்து விடுபட வாய்ப்பே இல்லாமல் நாம் காலவரையற்றுத் துக்கம் அனுபவிக்க நேரிடும். சம்ஸார உலகம் என்பது இப்படித்தான். அதன் இயல்பைத் தெரிந்து கொண்டால் நாம் பிரச்சனையைத் தீர்த்துவிடலாம்.
"இது நான் இல்லை," "இது என்னுடையது இல்லை" என்பதைத் தெரிந்து கொள்வதைவிடத் துக்கத்தை வெற்றி கொள்ள மேலான வழி இல்லை என்று புத்தரின் போதனைகள் கூறுகின்றன. இதுவே சிறந்த வழி. ஆனால் நாம் பொதுவாக இதனைக் கவனிப்பது இல்லை. துக்கம் எழும்போது நாம் அழுகிறோம், ஆனால் அதிலிருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. ஏன் அப்படி? இது போன்றவற்றை ஆழ்ந்து கவனிக்க வேண்டும், 'புத்தோ'வை, அந்தத் தெரிந்த நிலையில் இருப்பவரை வளர்க்க வேண்டும்.
இது ஒரு அற போதனை என்பது உங்களில் சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். நான் பௌத்த நூட்களுக்கு வெளியிலிருந்து சில அறத்தினைக் கூறப் போகிறேன். பலரும் பௌத்த நூட்களைப் படித்தும் அறத்தைக் காண்பதில்லை. இன்றைக்குப் பௌத்த நூட்களுக்கு வெளியே உள்ள ஒரு போதனையைத் தரப்போகிறேன். சிலர் நான் சொல்வதின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் அல்லது எனது கருத்தினை அறிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
இருவர் சேர்ந்து நடந்து கொண்டிருக்கையில் ஒரு வாத்தையும், ஒரு கோழியையும் பார்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒருவன் கூறுகிறான், "அந்தக் கோழி ஏன் வாத்தைப் போல இல்லை? ஏன் அந்த வாத்து கோழியைப்போல இல்லை?" அவனுக்குக் கோழி வாத்தைப் போலவும், வாத்து கோழியைப் போலவும் இருக்க வேண்டும் என்று விருப்பம். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விருப்பம் அது. முடியாத காரியமென்பதால் அவன் வாழ்நாள் முழுவதும் வாத்து கோழியாகவும், கோழி வாத்தாகவும் விரும்புன்ற அவனது எண்ணம் நிறைவேறப் போவதில்லை, ஏனென்றால் கோழி கோழி தான், வாத்து வாத்துத் தான். அப்படி நினைக்கும் வரை அவன் துக்கம் அனுபவிப்பான். மற்றவன் கோழியைக் கோழியாகவும், வாத்தை வாத்தாகவும் பார்க்கிறான். வேறு ஒன்றும் பார்ப்பதில்லை. அப்படிப் பார்க்கும்போது அங்கு பிரச்சனை ஏதும் இல்லை. அவன் சரியாகப் பார்க்கிறான். நீங்கள் வாத்து கோழியாக இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், கோழி வாத்தாக இருக்கவேண்டும் என்று விரும்பினாலும் நீங்கள் உண்மையிலேயே துக்கம் அனுபவிப்பீர்கள்.
இது போலவே அனிச்சம் என்ற நியதி எல்லாப் பொருட்களும் நிலையற்றது என்கிறது. நிகழ்பவை எல்லாம் நிலையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் துன்புறுவீர்கள். எப்போதெல்லாம் மாற்றத்தைக் கவனிக்கின்றீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். எவரொருவர் பொருட்கள் இயற்கையாகவே நிலையற்றவை என்பதை அறிகின்றாரோ அவர் நிம்மதியாக இருக்கலாம். அவரிடம் கிளர்ச்சி இருக்காது. யாரொருவருக்குப் பொருட்கள், நிகழ்வுகள் நிலையாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளதோ அவர்கள் கிளர்ச்சி அடைவார்கள், அதனால் தூக்கத்தைத் துறக்கவும் நேரிடலாம். இது புத்தரின் போதனைகளான அனிச்சத்தையும், நிலையாமையையும் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை என்று பொருள்.
அறத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் எங்கு தேடுவது? உங்கள் உடலினுள்ளும், மனத்தினுள்ளுமே தேட வேண்டும். அலமாரியில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள புத்தகங்களில் காண முடியாது. அறத்தை உண்மையாகவே காண வேண்டுமென்றால் உங்கள் உடலினுள்ளும் மனத்தினுள்ளுமே பார்க்க வேண்டும். இவை இரண்டில் மட்டுமே இருக்கின்றது. வெறும் கண்களால் மனத்தைப் பார்க்க முடியாது. அதை "மனக் கண்ணால்" மட்டுமே பார்க்க முடியும். அறத்தை அறிவதற்கு முன் அதை எங்கே பார்ப்பது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். உடலில் உள்ள அறத்தை உடலுனுள் பார்க்க வேண்டும். உடலை எதனால் பார்ப்பது? உடலை மனத்தால் பார்க்க வேண்டும். அறத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. எனென்றால் இன்பமும், துன்பமும் இங்கேயே எழுகின்றன. அல்லது இன்பம் மரங்களில் எழுவதைப் பார்த்திருக்கின்றீர்களா? அல்லது நதிகளில், காலநிலையில்? பார்த்திருக்க முடியாது. மகிழ்ச்சியும் துக்கமும் நமது உடலிலும் மனத்திலும் எழுகின்ற உணர்ச்சிகளே.
எனவே புத்தர் அறத்தை இங்கேயே தெரிந்து கொள்ளச் சொல்கிறார். அறம் இங்கேயே உள்ளது. எனவே நாமும் இங்கேயே பார்க்க வேண்டும். ஆசிரியர் உங்களை அறத்தைப் புத்தகங்களில் பார்க்கச் சொல்லலாம், ஆனால் அங்கு தான் உண்மையிலேயே அறம் இருப்பதாக நினைத்தீர்களென்றால், அதை எப்போதும் காண முடியாது. புத்தகங்களைப் படித்தபின் அந்தப் போதனைகளைப் பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் அறத்தைப் புரிந்து கொள்ள முடியும். அறம் எங்கு உள்ளது? அது நமது உடலிலும் மனத்திலுமே இருக்கிறது. இதுவே பிரதிபலிக்கும் பயிற்சியின் சாராம்சம்.
இவ்வாறு பயிற்சி செய்யும் போது மெய்யறிவு நமது மனங்களில் எழும். மெய்யறிவு இருக்கும் போது, நாம் எங்கு பார்த்தாலும் அறம் அங்கு இருக்கும். நாம் அனிச்சம், துக்கம் மற்றும் அனாத்மத்தை எல்லா நேரங்களிலும் காணலாம். அனிச்சம் என்றால் தற்காலிகமானது என்று பொருள். துக்கம் - இது தற்காலிகமானவற்றோடு பற்றுக் கொள்வதால் நாம் அனுபவிப்பது. ஏனென்றால் அவை நமது இல்லை (அனாத்மம்). ஆனால் நாம் இதைப் பார்ப்பதில்லை. அவற்றை எப்போதும் நாம் என்றும் நமக்குச் சொந்தம் என்றும் நினைக்கின்றோம்.
அப்படியென்றால் சம்பிரதாய வழக்கத்தின் உண்மையை நாம் பார்ப்பதில்லை என்று பொருள். சம்பிரதாய வழக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, இங்கு உட்கார்ந்திருக்கும் அனைவருக்கும் பெயர்கள் உண்டு. இந்தப் பெயர்கள் நாம் பிறக்கும் போது நம்முடன் பிறந்தனவா அல்லது அவை பின் நமக்குத் தரப் பட்டனவா? புரிகிறதா? இது சம்பிரதாய வழக்கம். சம்பிரதாய வழக்கம் பயனுள்ளதா? கண்டிப்பாகப் பயன் உள்ளது. உதாரணமாக நான்கு மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், அ, இ, உ, எ. என அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பெயர் இருக்க வேண்டும். அப்போது அவர்கள் சேர்ந்து வேலை செய்வதற்கும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் வசதியாக இருக்கும். நாம் திரு அ. வுடன் பேச விரும்பினால் நாம் திரு அ. வைக் கூப்பிடலாம் அவர் மட்டுமே வருவார், மற்றவர்கள் வர மாட்டார்கள். இது வழக்கத்தின் வசதி. ஆனால் உண்மையில் நிலைமைகளை ஆழமாகப் பார்த்தோமானால் அங்கு யாரும் இல்லை. மனித எல்லையை மீறிய உன்னத நிலை இருக்கிறது. நான்கு பூதங்களான மண், நீர், காற்று மற்றும் தீ மட்டுமே இருக்கின்றன. நமது உடலைப் பொருத்தவரை வேறு ஒன்றும் இல்லை.
ஆனால் இதை நாம் இவ்வாறு பார்க்காததற்குக் காரணம், 'அத்தவதுபதானா' என்ற இறுக்கமான பற்றின் காரணமாகத்தான். [10] தெளிவாகப் பார்த்தோமேயானால் நாம் மனிதன் என்றழைக்கும் ஒன்றிற்குச் சாராம்சம் ஒன்றும் இல்லை என்பது விளங்கும். கெட்டியான பகுதி மண் பூதம். திரவத்தன்மை உடையது நீர் பூதம். வெப்பம் தருவது தீ பூதம். இப்படிப் பகுதி பகுதிகளாகப் பிரித்துப் பார்த்தோமேயானால் நாம் காணக்கூடியது மண், நீர், காற்று மற்றும் தீ. மனிதனை எங்கே பார்க்க முடிகிறது? அங்கு மனிதன் என்று ஒன்றும் இல்லை.
எனவே தான் புத்தர், "இது நான் இல்லை," "இது என்னுடையது இல்லை" என்பதைத் தெரிந்து கொள்வதைவிட மேலான பயிற்சி இல்லை என்று போதித்தார். இவை வெறும் சம்பிரதாயப் பழக்கங்களே. எல்லாவற்றையும் தெளிவாக இவ்வாறு பார்த்தோமேயானால் நாம் அமைதியோடு இருக்கலாம். இந்தக் கணத்தில் நிலையற்றதன் வாய்மையை அறிந்து கொண்டால், பொருட்கள் நாம் இல்லை என்றும் நமதில்லை என்றும் அறிந்து கொண்டால் அவை உடைந்து சிதைந்து போகும் போதும் நாம் அமைதியாக இருக்கலாம். ஏனென்றால் அவை எப்படியும் யாருக்கும் சொந்தம் இல்லையல்லவா? அவை வெறும் மண், நீர், காற்று மற்றும் தீ என்கிற பூதங்கள் மட்டுமே.
மக்கள் இதை அறிந்து கொள்வது கடினம், ஆனாலும் இது நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதல்ல. இதைத் தெரிந்து கொண்டால் நாம் நிறைவோடு இருக்கலாம். நமது பேராசை, கோபம், ஏமாற்றம் போன்றவை ஓரளவு தணிந்திருக்கும். அறம் எப்போதுமே நமது உள்ளத்தில் நிலைகொண்டிருக்கும். பொறாமைக்கும் குரோதத்துக்கும் இடம் இருக்காது. ஏனென்றால் எல்லோருமே வெறும் மண், நீர், காற்று மற்றும் தீயினால் ஆனவர்களே. இதைத் தவிர வேறு எதுவும் அவர்களிடத்தில் இல்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொண்டால் நாம் புத்தரின் போதனைகளின் உண்மைத் தன்மையை அறியலாம்.
புத்தரின் போதனைகளில் உள்ள வாய்மையை அறிந்து கொண்டால் நாம் இத்தனை ஆசிரியர்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமிருக்காது! தினந்தோறும் போதனைகளைக் கேட்க வேண்டியிருக்காது. இதை அறிந்து கொண்டால் நாம் செய்ய வேண்டியதைத் நாமாகச் செய்துவிடுவோம். ஆனால் மக்களுக்குக் கற்பிப்பது கடினமாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் கற்பிப்பதை உடனே ஏற்றுக் கொள்வதில்லை. ஆசிரியர்களுடன் வாதிடுகின்றனர். போதனைகளோடும் வாதிடுகின்றனர். ஆசிரியர் எதிரில் சற்று ஒழுங்காக நடந்து கொள்கின்றனர். ஆனால் அவருக்குப் பின்னால் திருடர்களாக மாறி விடுகின்றனர்! மக்களுக்குக் கற்பிப்பது மிகவும் கடினம். தாய்லாந்தில் உள்ள மக்கள் இப்படித்தான். எனவே தான் அங்கு அத்துணை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
கவனமாக இருங்கள்! கவனமாக இல்லா விட்டால் நீங்கள் அறத்தைக் காண முடியாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போதனைகளை எடுத்து நன்றாகப் பிரதிபலிக்க வேண்டும். இந்தப் பூ அழகாக இருக்கிறதா?...இந்தப் பூவினுள் உள்ள அழகற்ற தன்மை தெரிகிறதா?.. எத்தனை நாட்களுக்கு இது அழகாக இருக்கும்?... இந்தக் கணத்திலிருந்து பூ எவ்வாறு தோன்றும்?...ஏன் மாறுகிறது?..மூன்று நான்கு நாட்களில் அதை எடுத்தெறிந்து விடுகிறோமல்லவா? அதன் அழகு மறைந்து விடுகிறது. மக்கள் அழகோடு ஒட்டிக் கொள்கின்றனர், நல்லதோடு பற்றுக் கொள்கின்றனர். ஏதாவது நல்லதாக இருந்தால் அதனுள் மூழ்கி விடுகின்றனர். புத்தர் அழகானவற்றை அழகானவை என்பதோடு விட்டுவிடச் சொல்கின்றார், அதனோடு பற்றுக் கொள்ளவேண்டாம். இன்பமான உணர்ச்சி ஏற்பட்டால் அதிலும் மூழ்கி விட வேண்டாம். நல்லது உறுதியானதில்லை. அழகும் உறுதியானதில்லை. எதுவும் உறுதியானதில்லை. இந்த உலகில் உறுதியானது என்று சொல்ல ஏதும் இல்லை. இதுவே உண்மை. உண்மையற்ற பொருட்களே மாற்றம் கொள்கின்றன, அழகைப் போல. அதில் உள்ள ஒரே உண்மை அதன் தொடர் மாற்றமே. பொருட்கள் அழகாக இருக்கின்றதாக நினைத்தால், அவற்றின் அழகு குலையும் போது நமது மனத்தின் அழகும் குலைந்து விடுகிறது. பொருட்களின் நன்மை குறையும் போது நமது மனத்தின் நன்மையும் குறைந்து விடுகிறது. அவை நாசமாகி விட்டாலோ பழுதடைந்து விட்டாலோ நாம் துக்கம் அனுபவிக்கின்றோம். ஏனென்றால் அவற்றை நம்முடையவை என்று நினைத்துப் பிடித்துக் கொண்டிருந்தோம். புத்தர் இவற்றை எல்லாம் இயற்கையின் தோற்றங்களே என்று உணரச் சொன்னார். அழகு உருவாகி ஒரு சில நாட்களிலேயே மறைகிறது. இதைப் புரிந்து கொள்வது தான் மெய்யறிவு இருப்பதற்கான அறிகுறி.
எனவே எல்லாவற்றிலும் நிலையாமையைப் பாருங்கள். அழகானதொன்றைப் பார்த்தால், அது அப்படி இல்லை என்று உங்களிடமே கூறிக் கொள்ளுங்கள். அழகற்றதைப் பார்த்தால் அதுவும் அப்படி இல்லை என்று உங்களிடமே சொல்லிக் கொள்ளுங்கள். பொருட்களை இவ்வாறு பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவ்வாறு பிரதிபலியுங்கள். பொய்யானவற்றினுள் உள்ள உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள், உறுதியற்றவற்றினுள் உள்ள உறுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைக்குத் துக்கத்தை அறிந்து கொள்வதற்கான வழியைப் பற்றியும், அதைத் தோற்றுவிக்கும் காரணத்தையும், அதன் முடிவையும், முடிவுக்கு எடுத்துச் செல்லும் வழியையும் விளக்கினேன். துக்கத்தைத் தெரிந்து கொண்ட பின் அதை எறிந்துவிட வேண்டும். துக்கத்தின் காரணத்தைத் தெரிந்து கொண்டபின் அதை எறிந்துவிட வேண்டும். துக்கத்தின் முடிவைப் பார்க்கும் வரை பயிற்சி செய்ய வேண்டும். அனிச்சம், துக்கம் மற்றும் அனத்தம் ஆகியவற்றைப் பார்த்தால் துக்கம் மறைந்துவிடும்.
துக்கம் மறைந்த பின் நாம் எங்கு செல்வோம்? நாம் எதற்காகப் பயிற்சி செய்கிறோம்? நாம் பயிற்சி செய்வது விட்டுவிடத்தான், எதையும் பெறுவதற்காக இல்லை. இன்று மதியம் சந்தித்த ஒரு பெண்மணி தான் துக்கம் அனுபவிப்பதாகக் கூறினார். அவரிடம் நீங்கள் என்ன விரும்பு கின்றீர்கள் என்று கேட்டேன். தான் ஞானம் பெற விரும்புவதாக அவர் கூறினார். நான் சொன்னேன், "நீங்கள் ஞானம் பெற விரும்பும்வரை ஞானம் பெறப் போவதில்லை. எதுவும் வேண்டுமென நினைக்காதீர்கள்."
துக்கத்தின் உண்மை தெரிந்தபின் அந்தத் துக்கத்தை எறிந்துவிட வேண்டும். துக்கத்தின் காரணம் தெரிந்தபின் நாம் அக்காரணங்களை மீண்டும் உருவாக்கக்கூடாது. மாறாகத் துக்கத்தை விலக்கப் பயிற்சி செய்யவேண்டும். "இது நான் இல்லை," "இது என்னுடையது இல்லை" என்பதைத் தெரிந்து கொள்ளும் பயிற்சியே துக்கத்தை நிறுத்தும் பயிற்சி. இவ்வாறு பார்ப்பதே துக்கத்தை நிறுத்துகிறது. நாம் செல்ல வேண்டிய இடம் வந்து விட்டால் நாம் பயணத்தை நிறுத்திவிடுவது போல. அதுவே துக்கத்தின் முடிவு. அது நிப்பாணத்துக்கு அருகில் எடுத்துச் செல்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், முன் செல்வதும் துக்கம், பின் வாங்குவதும் துக்கம், நிற்பதும் துக்கம். முன் செல்லாமல் இருப்பது, பின் வாங்காமல் இருப்பது, நிற்காமல் இருப்பது... வேறு எதாவது இருக்கிறதா? உடலும் மனமும் இங்கு மறைகின்றன. இதுவே துக்கத்தின் முடிவு. இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது அல்லவா? நாம் ஆர்வத்துடனும் தொடர்ந்தும் இந்தப் போதனையைப் படித்தோமானால் நாம் நிலைமைகளுக்கு அப்பால் சென்று இதை அறிந்து கொள்ளலாம், அங்கு துக்கத்தின் முடிவு இருக்கும். இதுவே புத்தரின் மேன்மையான போதனை. அது முடிவாகும் இடம். எல்லாம் விட்டுவிடும் இடத்தில் புத்தரின் போதனையும் முடிகிறது.
இன்றைக்கு இந்தப் போதனையை உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் வழங்குகிறேன். நான் ஏதாவது தவறாகக் கூறியிருந்தால் உங்கள் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் சரியா, தவறா என்று அவசரப்பட்டுத் தீர்ப்பளித்து விட வேண்டாம், முதலில் அதைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு பழத்தைத் தந்து அது மிகவும் சுவையானது என்றால், நான் சொல்வதைக் கேட்டு உடனே நம்பி விட வேண்டாம், ஏனென்றால் நீங்கள் அதை இன்னமும் சுவைக்கவில்லை. இன்றைய எனது போதனையும் அது போன்றதே. இந்தப் பழம் இனிப்பா, புளிப்பா என்பதைத் தெரிந்து கொள்ள அதிலிருந்து ஒரு துண்டை வெட்டிச் சுவைத்துப் பார்க்க வேண்டும். பின் அதன் இனிப்பும், புளிப்பும் உங்களுக்குத் தெரிந்துவிடும். பின் நீங்கள் நான் சொன்னதை நம்பலாம், ஏனென்றால் நீங்களே அதைச் சுவைத்துப் பார்த்து விட்டீர்கள். எனவே இந்தப் "பழத்தைத்" தூக்கி எறிந்துவிட வேண்டாம். எடுத்துச் சென்று சுவைத்துப் பாருங்கள், அதன் சுவையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
புத்தருக்கு ஆசிரியர் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு சந்நியாசி அவரிடம் அவரது ஆசிரியார் யார் என்று கேட்டார். புத்தர் தனக்கு ஆசிரியர் எவரும் இல்லை என்று பதிலுரைத்தார். [11] அந்தச் சந்நியாசி அதை ஏற்றுக் கொள்ளாததுபோல் தலையை ஆட்டிக் கொண்டு சென்று விட்டார். புத்தர் மிகவும் வெளிப்படையாக உண்மையைப் பேசி விட்டார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள முடியாதவரோடு பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் என்னை நம்ப வேண்டாம் என்று உங்களிடம் கூறுகிறேன். மற்றவரை அப்படியே நம்புவது மூடத்தனம் என்று புத்தர் கூறினார், ஏனென்றால் அப்படி நம்புவதனால் நமக்குள்ளேயே நம்மை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை. எனவே புத்தர், "எனக்கு ஆசிரியர் இல்லை," என்றார். இதுவே உண்மை. ஆனால் நீங்கள் சரியாகப் பார்க்க வேண்டும். தவறாகப் புரிந்து கொண்டால் உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் மரியாதை தரமாட்டீர்கள். "எனக்கு ஆசிரியர் இல்லை," என்று சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் பயிற்சி சரியானதா அல்லது தவறானதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆசிரியரை நம்பி இருக்க வேண்டும், பின் அதன்படி நீங்களே பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று நம் எல்லோருக்கும் நல்ல நாள். உங்களையும் உங்கள் போற்றுதற்குரிய ஆசிரியரையும் சந்திக்க எனக்கு இந்த நல்ல வாய்ப்புக் கிடைத்தது. இவ்வளவு தொலைவில் வாழும் நாம் இவ்வாறு சந்திப்போம் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நாம் இப்படிச் சந்திப்பதற்கு ஏதோ சிறப்பான காரணம் இருக்கிறது என்று நினைக்கின்றேன். புத்தர் தோன்றுவதற்கெல்லாம் காரணம் உள்ளது என்றார். இதை மறக்க வேண்டாம். ஏதாவது காரணம் இருக்க வேண்டும். முற்பிறவியில் நாமனைவரும் ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர, சகோதரிகளாக இருந்திருப்போமோ என்னவோ?. இது சாத்தியமே. வேறு ஆசிரியர் இங்கு வரவில்லை, அதனால் நான் வந்தேன். ஏன் அப்படி? நாம் இந்தக் கணத்தில் மேலும் தோற்றுவிக்கும் காரணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம். இதுவும் சாத்தியமே.
இந்தப் போதனையோடு நான் விடைபெறுகிறேன். நீங்கள் ஊக்கத்துடன் முயற்சித்துப் பயிற்சியைத் தொடருங்கள். அறத்தைப் பயிற்சி செய்வதைவிட மேலான காரியம் வேறேதும் இல்லை. அறமே முழு உலகையும் தாங்குகிறது. மக்கள் இக்காலத்தில் குழம்பியிருக்கக் காரணம் அறத்தை அறிந்து கொள்ளாதது தான். அறத்தோடு வாழ்ந்தால் நிறைவோடு வாழலாம். உங்களுக்கும் உங்கள் ஆசிரியருக்கும் அறத்தின் பயிற்சியை வளர்ப்பதற்கு உதவ வாய்ப்புக் கிடைத்ததில் நான்மகிழ்ச்சி அடைகிறேன். நாளை நான் விடைபெறப் போகிறேன், எங்கு போகிறேன் என்று உறுதியாகத் தெரியவில்லை. இது இயற்கையே, வருகை இருக்கும் போது போவதும் இருக்கும். போவது இருக்கும் போது வருவதும் இருக்கும். இதுதான் உலக இயல்பு. உலக மாற்றங்களினால் நாம் மிகவும் மகிழ்ச்சியடையவும் கூடாது, நிலை குலையவும் கூடாது. மகிழ்ச்சி இருந்தபின் துக்கம் வருகிறது; துக்கம் இருந்த பின் மகிழ்ச்சி வருகிறது; இலாபம் இருந்த பின் நட்டம் இருக்கும்; நட்டமிருந்த பின் இலாபம் இருக்கும். இதுதான் உலக இயல்பு.
புத்தரின் காலத்தில் அவரைப் பிடிக்காத சீடர்களும் அவருக்கு இருந்தார்கள். ஏனென்றால் அவர் அவர்களை முயற்சி செய்யவும், கவனமாக இருக்கவும் ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். சோம்பேறியான சீடர்கள் அவரைக் கண்டு அஞ்சினர், ஆட்சேபித்தனர். அவர் இறந்த போது அவரது சீடர்களில் ஒரு கூட்டத்தினர் அழுது புலம்பினர். தங்களுக்கு வழிகாண்பிக்கப் புத்தர் இல்லையே என்று வருந்தினர். இன்னொரு குழுவினர் மகிழ்ச்சியுற்றனர். புத்தர் இனித் தங்களைக் கண்காணித்து, 'இதைச் செய்! அதைச் செய்!' என்று சொல்லமாட்டார் என்பதால் நிவாரணம் பெற்றதாக நினைத்தனர். மூன்றாவது குழுவினர் நிதானமாக இருந்தனர். தோன்றுவதெல்லாம் மறையும் தன்மைகொண்டுள்ளதைப் பற்றிப் பிரதிபலித்தனர். இவ்வாறு மூன்று கூட்டத்தினர் இருந்தனர். இந்த மூன்றில் நீங்கள் எந்தக் கூட்டத்தோடு அணுகியிருக்கின்றீர்கள்? மகிழ்ச்சியடைந்தோரோடு ஒன்றி இருப்பீர்களா என்ன? புத்தர் இறந்த போது அழுத சீடர்கள் அறத்தை இன்னமும் அறியாதவர்கள். இரண்டாவது கூட்டத்தினர் புத்தர் மீது காழ்ப்பும், மனக்கசப்பும் உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் விருப்பப்படி செய்வதற்குப் புத்தர் தடைவிதித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் புத்தர் சினம் கொள்வார் என்று அஞ்சிப் பயந்து வாழ்ந்தனர். ஆகவே அவர் இறந்த போது அவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
இக்காலத்திலும் நிலைமைகள் அவ்வளவு மாறவில்லை. ஆசிரியருக்குத் தன்னைப் பிடிக்காத மாணவர்கள் இருக்கலாம். வெளியில் காட்டவில்லையென்றாலும் மனத்துக்குள் கசப்பு இருக்கலாம். மனக்கிலேசங்கள் இருப்போர் இப்படி உணர்வது இயற்கையே. புத்தரை வெறுத்த மக்களும் இருந்தனர். எனக்கும் என்னோடு மனக்கசப்பு கொண்டுள்ள மாணவர்கள் உள்ளனர். நான் அவர்களிடம் தீய செயல்களைச் செய்ய வேண்டாம் என்றாலும் அவர்களுக்கு அவர்கள் செய்யும் தீய செயல்களைப் பிடித்திருக்கிறது. எனவே அவர்கள் என்னை வெறுக்கின்றனர். இப்படிப் பலர் இருக்கின்றனர். உங்களுள் அறிவாளிகளெல்லாம் அறத்தைப் பயில்வதில் உறுதியாய் இருப்பீர்களாக!
* * * * * * *
7. 1992 ஆம் ஆண்டில் 'வாட் நோங் பா போங்' விகாரைக்குச் சிறிதும், பெரிதுமான சுமார் நூறு கிளை விகாரைகள் இருந்தன.
8. துக்கா: "துன்புறுதல்" என்று ஆங்கிலத்தில் பொதுவாகக் கூறுவது முழுமையான மொழிபெயர்ப்பல்ல. துக்கம் என்றால் "பொறுக்க முடியாத,", "சமாளிக்க முடியாத." மேலும் "முழுமையற்ற," "திருப்தியற்ற" அல்லது "முழுமையான மகிழ்ச்சி தர முடியாத" என்றும் பொருள் படும்.
9. சம்ஸாரா: ஏமாற்றவைக்கு உலகம்
10. நான்கு வகைகளான பற்றின் அடித்தளங்கள் உள்ளன:
காமுபதானா: புலன் பொருட்களுடன் உள்ள பற்று
சிலபதுபதானா: சடங்குகளுடன் உள்ள பற்று
தித்துப்பதானா: கருத்துக்களுடன் உள்ள பற்று
அத்தவதுபதானா: ஆத்மா உள்ளதென்ற எண்ணத்துடனான பற்று
11. புத்தர் எழுச்சி பெற்ற சில காலத்தில் காசி நகருக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு நாடோடிச் சந்நியாசி அவரிடம் , "உங்கள் தோற்றம் தெளிவாக இருக்கிறது நண்பரே, நடத்தையும் சாந்தமாக இருக்கிறது...உங்கள் ஆசிரியர் யார்?" என்றுகேட்டார். புத்தர் உலகில் யாரொவரும் தனது ஆசிரியரெனக் கூறிக் கொள்ள முடியாது. ஏனெனில் தானே சுய முயற்சியினால் முழுமையாக விழிப்புற்றதாகக் கூறினார். பிராமணருக்கு அந்தப் பதில் விளங்கவில்லை. அதனால், "நல்லது நண்பரே, நல்லது," என்று முணுமுணுத்தவாரே சென்றுவிட்டார்.
* * * * * * *
© Copyright
Provenance: 1992 The Sangha at Wat Pah Nanachat. First impression, 1992. Transcribed from the print edition in 1994 by David Savage under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"Living Dhamma", by Venerable Ajahn Chah, translated from the Thai by The Sangha at Wat Pah Nanachat. Access to Insight, 1 December 2012,
http://www.accesstoinsight.org/lib/thai/chah/living.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/