நல்ல பாம்போடு வாழ்தல்
அஜான் சா
Living With the Cobra [1]
A Dhammatalk by Ajahn Chah
(முதிய ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் அஜான் சாவின் விகாரையில் 1978 ஆண்டின் இறுதியிலும் 1979 ஆம் ஆண்டின் துவக்கதிலும் இரண்டு மாதங்கள் தங்கி அவரிடம் அறவழியைக் கற்றுக் கொண்டார். அவர் தம் நாட்டுக்கு திரும்பிச் செல்லும் முன் அவருக்கு அஜான் சா தந்த சுருக்கமான இறுதிப் போதனை.)
இந்தச் சிறிய போதனையை ஒரு புதிய சீடரின் நன்மைக்காகத் தருகிறேன் . விரைவில் அவர் லண்டன் திரும்பவிருக்கிறார்.
இந்த விகாரையில் தங்கியிருந்த போது நீங்கள் கற்ற அறத்தை மேலும் புரிந்து கொள்ள இது உதவுமாக. சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த அறம் பிறப்பு, இறப்பு என்று சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்திலுள்ள துக்கத்திடமிருந்து விடுதலை பெறுவதற்கே.
இந்த அறத்தைப் பயிற்சி செய்வதென்றால், மனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் - உங்களுக்குப் பிடித்தவையானாலும் சரி, பிடிக்காதவையானாலும் சரி - நல்ல பாம்பை நீங்கள் கையாளுவதைப்போலக் கையாள வேண்டும். நல்ல பாம்பு கடித்தால் மரணத்தை விளைவிக்கக் கூடிய அளவு கொடும் விஷமுள்ள பாம்பு. நமது மனோபாவமும் அப்படித்தான். நமக்குப் பிடித்த மனோபாவங்களும் விஷம் கொண்டுள்ளன. நமக்கு பிடிக்காத மனோபாவங்களும் விஷம் கொண்டுள்ளன. மனோபாவங்கள் நம் மனத்தை விடுவிக்காமல் புத்தர் கற்பித்த முறையில் வாய்மையை அறியத் தடங்கலாயிருக்கின்றன.
எனவே மனத்தின் கவனத்தை, தெரிந்திருக்கும் நிலையை பகலிலும் இரவிலும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் - அது நின்றபடியோ, உட்கார்ந்தோ, படுத்தோ, பேசிக்கொண்டோ எப்படிச் செய்தாலும் அதை மனத்தின் கவனத்தோடு செய்ய வேண்டும். இந்தக் கவனத்தை நிலை நாட்டினால் அதனோடு சேர்ந்து தெளிவான தெரிந்து கொள்ளும் ஆற்றலும் வளரும். இந்த இரண்டு நிலைகளின் காரணமாக மெய்யறிவு பிறக்கும். ஆக மனக் கவனமும், தெளிவான தெரிந்து கொள்ளும் ஆற்றலும் மெய்யறிவும் இணைந்து வேலை செய்கின்றன. அதனால் நீங்கள் பகலிலும் இரவிலும் விழித்திருக்கும் ஒருவனைப் போன்றவராவீர்கள்.
புத்தர் விட்டுச் சென்ற இந்தப் போதனைகள் கேட்பதற்காக மட்டும் இல்லை. அறிவாற்றல் அளவில் உட்கொள்வதற்காக மட்டும் இல்லை. பயிற்சி செய்து இந்தப் போதனைகளை உள்ளத்தில் எழுப்பி அதை உணரச் செய்ய முடியும். எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் இந்தப் போதனைகள் நம்முடனேயே இருக்க வேண்டும். நம்முடன் "இந்தப் போதனைகள் இருக்க வேண்டும்", "வாய்மையை வைத்திருக்க வேண்டும்" என்று சொல்லும் போது நாம் எதை உணர்த்துகிறோம்? நாம் எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை மெய்யறிவோடு செய்ய வேண்டும். மனக் கவனமும், தெளிவான தெரிந்து கொள்ளும் ஆற்றலும், மெய்யறிவும் உள்ள ஒருவர் புத்தருக்கருகில் இருக்கிறார் என்கிறோம்.
இங்கிருந்து சென்றபின் இங்கு கற்ற எல்லாவற்றையும் உங்கள் மனத்திற்குக் கொண்டுவரப் பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் மனத்தை இந்தக் கவனத்துடனும், தெளிவான பார்வையுடனும் பார்த்து இந்த மெய்யறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று நிலைகள் உள்ள போது, "விட்டு விட" வேண்டும் என்ற உணர்வு உண்டாகும். எல்லா அனுபவங்களின் தொடர்ந்த தோற்றமும், மறைவும் உங்களுக்குத் தெரியவரும்.
தோன்றுவதும் மறைவதும் மனத்தின் நடவடிக்கையே என்பது உங்களுக்குத் தெரியவேண்டும். தோன்றும் ஒவ்வொன்றும் பின்னர் மறைந்துவிடும், அதைத் தொடர்ந்து மேலும் தோற்றமும் மறைவும் ஏற்படுகின்றன. அறத்தின் பாதையில் இந்தத் தோற்றத்தையும், மறைவையும் "பிறப்பும் இறப்பும்" என்கிறோம்; இது தான் எல்லாம் - வேறு ஏதும் இல்லை! துக்கம் தோன்றிய பின் அது மறைகிறது. மறைந்த பின் துக்கம் மீண்டும் எழுகிறது. [2] துக்கம் எழுவதும் மறைவதும் தான் எல்லாம். இதை மட்டும் நீங்கள் கவனிக்க முடிந்தால் உங்களுக்கு எந்நேரமும் இந்தத் தோற்றமும், மறைவும் தெரியும்; உங்களுக்குத் தெரிந்த இந்த நிலை தொடர்ந்து இருந்தால் இதைத் தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்வீர்கள். பிறப்பும், இறப்பும் தான் எல்லாமே. பிறக்காமல், இறக்காமல் தொடர்ந்து நிலையாக இருப்பது ஏதும் இல்லை. தோன்றுவதும் மறைவதும் தான் எல்லாம் - வேறு ஏதும் இல்லை.
இத்தகைய நோக்கம் உலகின் மீது ஒரு பற்றில்லாத அமைதியான உணர்வை ஏற்படுத்தும். இந்த உணர்வு ஏற்படுவதற்குக் காரணம், உண்மையில் உலகிடம் இருந்து நமக்கு (ஆன்மீக) மதிப்புள்ள தேவை ஏதும் இல்லை என்பதை அறிவதால் தான். எல்லாம் தோன்றுகிறது, பின் மறைகிறது - ஓர் உயிர் பிறக்கிறது, பின் அது மறைகிறது. இந்நிலையில் தான் மனம் "விட்டு விடுதல்" என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறது. எல்லாவற்றையும் அதன் இயற்கையின் போக்கில் விட்டுவிட வேண்டும். நம் மனதில் நிலைமைகள் தோன்றி மறைகின்றன, அதை நாம் தெரிந்திருக்கிறோம். மகிழ்ச்சி நிலை உண்டாகும் போது நமக்குத் தெரியும். அதிருப்தி நிலை ஏற்படும் போதும் நமக்குத் தெரியும். "மகிழ்ச்சி தெரிந்த நிலை" என்றால் நாம் அந்த மகிழ்ச்சியை "நமது" என்று எண்ணி அதனோடு ஒட்டிக் கொள்வதில்லை. அதே போல அதிருப்தியான நிலையிலும், மகிழ்ச்சி இல்லா நிலையிலும் நாம் அந்த நிலைகள் நமதென்று நினைப்பதில்லை. நாம் எப்போது, மகிச்சியையும் துன்பத்தையும் நமதென்று நினைக்காமல் அவற்றோடு பற்றில்லாமல் இருக்கின்றோமோ அப்போது அந்த நிலைகளின் இயற்கையான இயல்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன.
எனவே மனத்தின் ஓட்டங்கள் நல்ல பாம்பைப் போல என்கிறோம். பாம்பின் வழியில் நாம் குறுக்கிடாவிட்டால் அது தன் வழியில் சென்று விடும். அது விஷம் உள்ளதென்றாலும் அது நம்மைப் பாதிப்பதில்லை. நாம் அதன் அருகில் செல்லாமல் இருந்தால், நாம் அதைப் பிடிக்க முயலாமல் இருந்தால் அது நம்மைக் கடிப்பதில்லை. நல்ல பாம்பு தன் இயற்கை இயல்பின்படி நடந்து கொள்கிறது. அதுதான் அதன் வழி. நீங்கள் அறிவாளியாக இருந்தால் அதன் வழியில் குறுக்கிட மாட்டீர்கள். ஆக நல்லதை அதன் இயற்கை இயல்புக்குத் தகுந்தார்ப்போல இருக்க விட்டு விடுங்கள். கெட்டதையும் அதன் இயற்கை இயல்புக்குத் தகுந்தார்ப் போல இருக்கவிட்டு விடுங்கள். நல்ல பாம்பை அதன் வழியில் விட்டு விடுவதைப்போல, உங்களுக்குப் பிடித்தவைகளையும் விட்டு விடுங்கள். பிடிக்காதவைகளையும் விட்டுவிடுங்கள்.
ஆக அறிவுள்ளோர் தங்கள் மனத்தில் தோன்றும் பலதரப்பட்ட நிலைகளோடு இத்தகைய மனப்போக்கைக் கொண்டிருப்பர். நல்லது எழும்போது அதை நல்லதாக இருக்க விடுங்கள். அதே சமயம் நமக்கு நல்ல நிலை இருப்பதும் தெரியும். அதன் இயல்பு நமக்குத்தெரியும். துக்க நிலை எழுந்தாலும் அதை அவ்வாறே இருக்க விடுங்கள். அதன் இயற்கைக்குத் தகுந்தார்ப்போல விட்டு விடுங்கள். நமக்கு ஏதும் வேண்டியதிலை, எனவே அவற்றோடு பற்றுக் கொள்ள நினைப்பதில்லை. நமக்குத் தீயதும் வேண்டாம். நல்லதும் வேண்டாம். பாரமானதும் வேண்டாம், மென்மையானதும் வேண்டாம். மகிழ்ச்சியும் வேண்டாம், துயரமும் வேண்டாம். இவ்வாறு நமக்கு வேண்டுமென்ற ஆவல் முடியும்போது, மன அமைதி வேர் பிடிக்கிறது.
இது போன்ற ஓர் அமைதி மனதை ஆட்கொண்ட பின், அதனை நாம் நம்பலாம். இந்த அமைதி குழப்பத்திலிருந்து தோன்றியது என்று கூறுகிறோம். குழப்பம் முடிந்தது. புத்தர் இறுதி ஞான நிலையை "அணைத்தல்" என்றார். நெருப்பை எப்படி அணைக்கின்றோமோ, அது போல. நெருப்பை அது பற்றி எரியும் இடத்தில் அணைக்கின்றோம். எது சூடாக இருக்கிறதோ அதைத்தான் குளுமையாக்க முடியும். அது போலத்தான் ஞானமும். நிர்வாண நிலையை (ஞானத்தை) இந்த சம்சாரத்தில் தான் காணமுடியும் [3]. வெப்பமும், குளுமையும் எப்படி ஒரே இடத்தில் தோன்றுகின்றனவோ அதே போல ஞானமும், மாயையும் (சம்சாரமும்) ஒரே இடத்தில் தான் தோன்றுகின்றன. குளுமையாக இருந்த இடத்தில் வெப்பமாக இருக்கிறது. வெப்பமாக இருந்த இடத்தில் குளுமையாக இருக்கிறது. வெப்பம் தோன்றும் போது குளுமை மறைகிறது. குளுமை தோன்றும் போது வெப்பம் இருப்பதில்லை. இந்த விதத்தில் நிர்வாணமும் (ஞானமும்) சம்சாரமும் ஒன்றே.
சம்சார (பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்ற தொடர்ந்த திரிதல்) சாகரத்தை முடிக்குமாறு நமக்குச் சொல்லபடுகிறது. அப்படியென்றால் என்னேரமும் சுழன்றுகொண்டிருக்கும் குழப்பத்தை நிறுத்த வேண்டும். இந்தக் குழப்பத்தை முடிப்பது நெருப்பை அணைப்பதற்குச் சமம். புறத்தில் உள்ள நெருப்பு அணையும் போது அங்கு குளுமை தோன்றுகிறது. அகத்தில் உள்ள நெருப்பான புலன் பேராசைகள், வெறுப்பு மற்றும் மாயை என்ற ஏமாற்றம் அணையும் போது அகத்திலும் ஒரு குளுமை தோன்றும்.
ஞானத்தின் இயல்பு இது; ஞானம் என்பது நெருப்பை அணைப்பதும், சூடான ஒன்றைக் குளுமை ஆக்குவதும் ஆகும். இது தான் அமைதி. இது தான் சம்சார நிலையின் முடிவு, பிறப்பு இறப்பு என்று சுழலும் சக்கரத்தின் முடிவு. ஞான நிலைக்கு வரும் போது இப்படித்தான் இருக்கும். சுழன்று கொண்டே இருப்பதின், மாறிக்கொண்டே இருப்பதின், பேராசை, வெறுப்பு மற்றும் மாயையின் முடிவு. பெரும்பாலானோருக்குப் புரிவதற்காக இதை மகிழ்ச்சியான நிலை என்கிறோம். அவர்கள் மேலோங்கிய நிலை என்பது மகிழ்ச்சியான நிலை என்று புரிந்து கொள்கின்றனர். உண்மையில் நாம் அதை எல்லாம் தாண்டிச் சென்றுவிட்டோம். மகிழ்ச்சிக்கும் அப்பால், துயரத்துக்கும் அப்பால் சென்றுவிட்டோம். முழுமையான மன அமைதி இது தான்.
ஆக நீங்கள் திரும்பிச் செல்கையில் இந்தப் போதனையை உன்னிப்பாகப் பிரதிபலிக்க வேண்டும். நீங்கள் இங்கு இருந்த காலம் அவ்வளவு வசதியானதாக இருந்திருக்காது. உங்களுக்குப் போதிக்க எனக்கும் குறைந்த வாய்ப்பே கிடைத்தது. ஆனால் நீங்கள் இருந்த நேரத்தில் நமது பயிற்சியின் சரியான பொருளைப் புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இந்த மார்க்கம் உங்களை மகிழ்ச்சிக்குக் கொண்டு செல்லுமாக. உங்களை வாய்மையில் வளரச் செய்யுமாக. பிறப்பு, இறப்பு என்று தொடர்ந்து அனுபவிக்கும் துக்கத்திலிருந்து விடுதலை பெருவீர்களாக.
* * * * * *
[1] அஜான் சா விடம் இரண்டும் மாதங்கள் (1978 கடைசியிலும் 1979 ஆரம்பத்திலும்) பயில வந்த வயதான ஆங்கிலேய பெண் சீடர் திரும்பத் தமது ஊருக்குப் புறப்படுமுன் ஒரு சுருக்கமான இறுதிப் போதனையாக இது தரப்பட்டது.
[2] மகிழ்ச்சிக்கு எதிரான துயரம் என்று இங்கு துக்கத்திற்குப் பொருள் கொள்ள வேண்டாம். இங்கு துக்கம் என்றால் காரணத்தால் தோன்றிய எல்லா நிலைகளிலும் உள்ள அதிருப்தியைக் குறிக்கிறது.
[3] சம்சாராம் என்றால் எப்போதும் அலைந்து கொண்டிருப்பது. வாழ்க்கை, கடலைப் போல ஓயாமல் மேலும் கீழும் செல்வதைக் குறிக்கிறது. திரும்பத் திரும்ப மறுபிறப்பெடுத்து, வயதாகி, துக்கம் அனுபவித்து, இறப்பதைக் குறிக்கும்.
* * * * * *
© Copyright
Provenance: ©1982 The Sangha. Fourth impression, 1982. Transcribed from the print edition in January, 1997 by W.D. Savage with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1997–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"Bodhinyana: A Collection of Dhamma Talks", by The Venerable Ajahn Chah, (Phra Bodhinyana Thera). Access to Insight, 6 July 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/bodhinyana.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/