சரியான பார்வை - அது சாந்தமான இடம்
அஜான் சா
Right View - The Place of Coolness
A Dhamma talk by Ajahn Chah
(வாட் பா நானாசாட் (Wat Pah Nanachat) விகாரையில் 1978 ஆம் ஆண்டு மழைக்காலத்தின் போது தரப்பட்ட போதனை.)
அறத்தைப் பயிற்சி செய்வது நமது சில பழகிப்போன வழக்கங்களுக்கு எதிராக உள்ளதாலும், வாய்மை நமது பேராசைகளுக்கு எதிராக உள்ளதாலும் நமக்குப் பயிற்சி செய்வது சங்கடமாக உள்ளது. நாம் தவறானதென்று நினைக்கும் சில நிகழ்ச்சிகள் சரியானவையாகவும், நாம் சரியானவையென்று நினைப்பவை தவறானதாகவும் இருக்கலாம். ஏன் இப்படி? ஏனென்றால் நமது மனம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. அதனால் உண்மையை நாம் தெளிவாகப் பார்ப்பதில்லை. நமக்கு எதுவும் தெரியாததால் மக்கள் சொல்லும் பொய்களினால் நாம் ஏமாந்துவிடுகிறோம். அவர்கள் சரியானவற்றைத் தவறென்கிறார்கள். நாம் அதை நம்பி விடுகிறோம்; தவறானவற்றைச் சரியென்கின்றார்கள், அதையும் நம்பி விடுகிறோம். நாம் நமது எஜமானராக இல்லாததே இதற்குக் காரணம். நமது மனோபாவங்கள் நம்மிடம் தொடர்ந்து பொய் சொல்கின்றன. இந்த மனத்தையும் அதன் கருத்துக்களையும் நமது வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் அதற்கு உண்மை தெரியாது.
மக்களில் சிலர் மற்றவர் சொல்வது எதையும் கேட்க விரும்புவதில்லை, ஆனால் இது மெய்யறிவுடையோரின் வழி அல்ல. மெய்யறிவு உடையவர் அனைத்தையும் கேட்பார். அறத்தைக் கேட்பவரும், அது கேட்பதற்குப் பிடித்திருந்தாலும் பிடிக்கவில்லையென்றாலும் அதைக் கேட்க வேண்டும், ஆனால் அதைக் கண்மூடித்தனமாக நம்பவோ, நம்பாமலோ இருக்கக் கூடாது. நடுநிலைமையோடு, மைய இடத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். அவற்றைக் கேட்டு விட்டுப் பிரதிபலிக்க வேண்டும். அதற்குத் தகுந்தார்ப் போலச் சரியான விளைவுகள் நிகழ்ந்து விடும்.
மெய்யறிவு உள்ளவர் காரணத்தையும் அதன் விளைவையும் தானே பிரதிபலித்துத் தெரிந்து கொண்டு பின்னர் தான், கேட்டதை நம்ப வேண்டும். ஆசிரியர் உண்மையைப் பேசினாலும், அதையும் அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனென்றால் உங்களுக்கே இன்னமும் அது உண்மையா என்பது தெரியாது.
நம் எல்லோருக்கும் இது ஒரே மாதிரி தான்,. உங்களுக்கு முன் நான் பயிற்சி செய்திருக்கின்றேன். உங்களுக்கு முன்னரே நான் பல பொய்களையும் கேட்டிருக்கிறேன். உதாரணமாக, "இந்தப் பயிற்சி மிகவும் கடினமானது, உண்மையிலேயே கஷ்டமானது." போன்றவை. இந்த பயிற்சி ஏன் கஷ்டமானது? ஏனென்றால் நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம், நமக்குத் தவறான பார்வை இருக்கிறது.
முன்பு நான் மற்ற துறவிகளுடன் வாழ்ந்தேன். ஆனால் எனக்கு அது வசதிப்படவில்லை. நான் மக்கள் கூட்டத்தையும், துறவிகளையும், இளம் துறவிகளையும் தவிர்ப்பதற்காகக் காடுகளையும், மலைகளையும் தேடி ஓடினேன். அவர்கள் என்னைப் போன்றவர்களல்ல என்றும், என் அளவுக்குக் கடுமையாகப் பயிற்சி செய்வதில்லை என்றும் நினைத்தேன். அவர்கள் அரைகுறையாகப் பயிற்சி செய்பவர்கள். அவர் இப்படி இருக்கிறார், இவர் அப்படி இருக்கிறார் என்று நினைத்தேன். அப்படி நினைப்பது என்னைச் சீர்குலைய வைத்தது, இதன் காரணமாகவே நான் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் தனியாக இருந்தாலும் மற்றவரோடு இருந்தாலும் எனக்கு அமைதி கிடைக்கவில்லை. தனியாகவும் திருப்தியுடன் இல்லை, கூட்டத்துடனும் திருப்தியாக இருக்க முடியவில்லை. இந்த அதிருப்தி எனது உடனிருப்பவர்களின் காரணமாக உண்டானதென்று நினைத்தேன். எனது மனோபாவங்களினால் என்றும், எனது இருப்பிடத்தினாலும், உணவு, வானிலை, இதனால், அதனால் என்று எதையெதையோ காரணமாக நினைத்தேன். எனது மனத்துக்கு உகந்தவற்றை நான் இடைவிடாது தேடிக் கொண்டிருந்தேன்.
துதங்கத் துறவியாக [25] நான் பயணம் செய்த போதும் நிகழ்வுகள் சரியாக இல்லை. எனவே நான் பிரதிபலித்தேன், " நிகழ்வுகளைச் சரியாக்க நான் என்ன செய்வது? நான் என்ன செய்வது?" பலருடன் வாழ்ந்தாலும் எனக்குத் திருப்தி இல்லை, சிலருடன் வாழ்ந்தாலும் எனக்குத் திருப்தி இல்லை. எதனால் இந்தத் திருப்தி இன்மை? என்னால் அதை உணர முடியவில்லை. நான் ஏன் திருப்தியற்று இருந்தேன்? ஏனென்றால் எனக்குத் தவறான பார்வை இருந்ததனால் தான். அது மட்டுமே; நான் இன்னமும் தவறான அறத்தைப் பற்றிக் கொண்டிருந்தேன். எங்கு சென்றாலும் எனக்குத் திருப்தி இல்லை, "இங்கு சரியில்லை, அங்கு சரியில்லை..." என்று இப்படியும் அப்படியும் நினைத்துக் கொண்டிருந்தேன். மற்றவர்களைக் குறை கூறினேன், வானிலையைக் குறைகூறினேன். வெப்பத்தை, குளிரை, எல்லாவற்றையும் குறை கூறினேன்! பித்துப் பிடித்த நாயைப் போல. அது யாரைப் பார்த்தாலும் கடிக்கும், ஏனென்றால் அதற்குப் பித்துப் பிடித்து விட்டது. நமது மனமும் இப்படி இருந்தால் நமது பயிற்சி எப்போதும் சீராகாது, அடங்காது. இன்றைக்கு நல்லதாகத் தோன்றுவது, நாளைக்கு நல்லதாகத் தோன்றாது. எந்நேரமும் இப்படித்தான். நாம் மன நிறைவையோ, அமைதியையோ அடைவதில்லை.
புத்தர் ஒருமுறை ஒரு குள்ளநரி அவர் தங்கியிருந்த வனத்துக்கு வெளியே ஓடிச் செல்வதைப் பார்த்தார். சிறிது நேரம் நின்றுவிட்டுப் பின் அது திரும்பிப் புதருக்குள் ஓடியது, பின் மறுபடியும் வெளியே ஓடி வந்தது. பின் ஒரு மரத்தின் பொந்தில் நுழைந்தது. பின் வெளியே வந்து ஒரு குகைக்குள் புகுந்தது. ஓடிய வேகத்திலேயே வெளியே வந்தது. ஒரு நிமிடம் நின்றது, பின் ஓடியது, பின் படுத்துக் கொண்டது, பின் குதித்தது. ஏன் அது இப்படிச் செய்தது? அந்தக் குள்ள நரிக்குச் சொறிப் பிடித்திருக்கிறது. அதனால் நரி நின்றால் அதன் தோலில் தினவு ஏற்படுகிறது. எனவே அங்கும் இங்கும் ஓடுகிறது. ஓடினாலும் சௌகரியமாக இல்லை, எனவே படுத்துக் கொண்டது. பின் குதித்தது, புதருக்குள் ஓடியது, மரப் பொந்துக்குள் நுழைந்தது. அது நிற்கவே இல்லை.
புத்தர், "துறவிகளே, அந்தக் குள்ள நரியை இன்று மதியம் பார்த்தீர்களா? அது நிற்கும் போது துக்கம் அனுபவித்தது, ஓடும் போது துக்கம் அனுபவித்தது, உட்காரும் போது துக்கம் அனுபவித்தது, படுத்திருக்கும் போது துக்கம் அனுபவித்தது. புதரில், மரப் பொந்தில் அல்லது குகையில் துக்கம் அனுபவித்தது. அது நிற்பதைக் குறை கூறியது, உட்காருவதைக் குறை கூறியது, ஓடுவதையும், படுப்பதையும் குறை கூறியது; மரத்தைக் குறை கூறியது. புதரையும், குகையையும் குறை கூறியது. உண்மையில் இவை எவற்றினாலும் அதற்குப் பிரச்சனை இல்லை. அந்த குள்ள நரிக்கு இருந்தது சொறி நோய். இத்தனை பிரச்சனைகளும் சொறி நோயின் காரணமாகத்தான் ஏற்பட்டது." என்றார்.
துறவிகளாகிய நாமும் அந்தக் குள்ள நரியைப் போலத்தான். நமது அதிருப்தி தவறான பார்வையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. புலன்களை அடக்கப் பயிற்சி செய்யாததால் நாம் புறம் சம்பந்தமானவற்றைக் குறை கூறுகிறோம். நாம் வாட் பா போங்கில் வாழ்ந்தாலும், அமெரிக்காவிலோ, லண்டனிலோ வாழ்ந்தாலும் நாம் திருப்தி அடைவதில்லை. பூங் வாய் சென்று கிளை விகாரைகளில் வாழ்ந்தாலும் நாம் திருப்தி அடைவதில்லை. ஏன் திருப்தி அடைவதில்லை? ஏனென்றால் நமக்குள் தவறான பார்வையைக் கொண்டுள்ளோம். அதுவே காரணம்! எங்கு சென்றாலும் நாம் திருப்தி அடைவதில்லை.
ஆனால் அந்தக் குள்ளநரிக்குச் சொறி நோய் நலமாகிவிட்டால், அது எங்கு சென்றாலும் திருப்தி அடைந்துவிடும். நாமும் அதுபோலத்தான். நான் இதனை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் இதை அடிக்கடி கற்பிப்பதும் உண்டு. ஏனென்றால் இது மிகவும் முக்கியமானது. நமது பல்வேறு மனோபவங்களின் உண்மையைத் தெரிந்து கொண்டால் நாம் திருப்தியாக வாழலாம். சூடானாலும் குளிரானாலும் நாம் திருப்தியடையலாம். பலரோடும், சிலரோடும் நாம் திருப்தி அடையலாம். திருப்தியாக இருப்பது நாம் எத்தனை பேரோடு இருக்கின்றோம் என்பதைப் பொருத்து இல்லை. அது சரியான பார்வை வந்த பின்னே வருகிறது. சரியான பார்வை இருந்தால் நாம் எங்கு இருந்தாலும் திருப்தியாக இருக்கலாம்.
ஆனால் நம்முள் பலரும் தவறான பார்வையைக் கொண்டுள்ளோம். இது ஒரு ஈயின் முட்டைப் புழுவைப் போல. அதன் வாழும் இடம் அசுத்தமானது, அதன் உணவு அசுத்தமானது. ஆனால் அந்தப் புழுவுக்கு அது உகந்த இடம். ஒரு குச்சியை எடுத்து அந்தப் புழுவைச் சாணக் குவியலிலிருந்து விலக்கி வெளியே கொண்டு வந்தால், அது போராடித் திரும்பச் சாணத்துக்கே ஊர்ந்து செல்லும். அது போலத்தான் அஜான் (ஆசிரியர்) நமக்குச் சரியாகப் பார்க்கும்படி கற்பிக்கும் போதும். நாம் அதை எதிர்க்கிறோம், அவர் சொல்வது நமக்கு மனச்சஞ்சலமூட்டுகிறது. நாம் திரும்ப அதே "சாணக்குவியலுக்கே" ஓடுகிறோம், ஏனென்றால் அது தான் நமக்கு வீடுபோலத்தோன்றுகிறது. நாம் அனைவரும் அப்படித்தான். நமது தவறான பார்வையின் தீய விளைவுகளைப் பார்க்கா விட்டால் நாம் அவற்றை விட முடியாது, பயிற்சியும் கடினமாக இருக்கும். எனவே நாம் கவனித்துக் கேட்க வேண்டும். பயிற்சி செய்வதென்பது வேறு ஒன்றும் இல்லை.
நமக்குச் சரியான பார்வை இருந்தால் நாம் எங்கு சென்றாலும் திருப்தியாக இருப்போம். இதை நான் பயிற்சி செய்துதான் அறிந்து கொண்டேன். இக்காலத்தில் என்னைப் பார்க்கப் பல துறவிகளும், இளந்துறவிகளும், இல்லற மக்களும் வருகின்றனர். எனக்கு இன்னும் தெரிய வில்லையென்றால், என்னிடம் இன்னும் தவறான பார்வை இருந்தால், நான் இந்நேரம் செத்திருப்பேன்! துறவிகளுக்குச் சரியான வாழும் இடம், சாந்தமான இடம் என்பது சரியான பார்வையே. நாம் வேறெதையும் தேட வேண்டியதில்லை.
ஆகவே நீங்கள் மகிழ்ச்சியற்று இருந்தால் அதனால் ஒன்றும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த மகிழ்ச்சியற்ற நிலை உறுதியானது இல்லை. அந்த மகிழ்ச்சியற்ற நிலை "நீங்களா?" அதற்கு ஏதேனும் சாராம்சம் உள்ளதா? அது உண்மையானதா? நான் அதை உண்மையென நினைப்பதே இல்லை. துன்பம் என்பது ஒரு கண நேரத்தில் தோன்றி மறையும் உணர்ச்சி. அவ்வளவு தான். இன்பமும் அது போலத்தான். இன்பத்துக்கு நிலையான தன்மை உள்ளதா? அது உண்மையிலேயே நிலைத்திருக்கிறதா? அதுவும் ஒரு கண நேரத்தில் தோன்றி மறையும் உணர்ச்சி மட்டுமே. அதோ! அது பிறந்து மறைந்து விடுகிறது. அன்பு ஒரு வினாடி தோன்றி, பின் மறைந்துவிடுகிறது. அன்பு,வெறுப்பு, மனக்கசப்பு ஆகியவற்றுக்கு நிலையான தன்மை இருக்கிறதா? உண்மையில் அங்கு உறுதியான சாராம்சம் கொண்ட எதுவும் இல்லை. அவை மனத்தில் தோன்றி மறையும் மனப் பதிவுகள் மட்டுமே. அவை நம்மைத் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. உறுதியானதொன்றையும் அங்கு காணமுடியாது. புத்தர் சொன்னது போலத் துன்பம் எழும் போது அது சிறிது நேரம் இருந்துவிட்டு மறைந்து விடுகிறது. துன்பம் மறையும் போது, இன்பம் தோன்றி அதுவும் சிறிது நேரம் இருந்து விட்டு மறைந்து விடுகிறது. இன்பம் மறைந்தவுடன் மீண்டும் துன்பம் தோன்றுகிறது... மாறி மாறி இது தொடர்கிறது.
இறுதியில் இதை மட்டுமே சொல்ல முடியும் - துக்கத்தின் பிறப்பு, அதன் வாழ்வு மற்றும் முடிவைத் தவிர வேறேதும் இல்லை. இது மட்டுமே. ஆனால் அறியாமையின் காரணமாக நாம் ஓடி ஓடி அதைப் பிடித்துக் கொள்கிறோம். அதன் உண்மையைப் பார்ப்பதே இல்லை, அதாவது இந்தத் தொடர் மாற்றம் மட்டுமே உள்ளதை நாம் பார்ப்பதில்லை. இதைப் புரிந்து கொண்டால் நாம் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. ஆனால் நமக்கு மிகுந்த மெய்யறிவு இருக்கும். இதைத் தெரியா விட்டால் நமக்கு மெய்யறிவை விட எண்ணங்களே அதிகமாக இருக்கும் - ஏன் மெய்யறிவே இல்லாமலும் இருக்கலாம்! நமது நடத்தையின் தீய விளைவுகளை உண்மையிலேயே காணும் போது தான் அதனை விட்டுவிட முடியும். அது போல நமது பயிற்சியின் உண்மையான நல்ல விளைவுகளைப் பார்க்கும் போது நாம் தொடர்ந்து பயிற்சி செய்து நமது மனத்தை "உகந்த தாக்க" முயற்சி செய்வோம்.
இது ஒரு மரக்கட்டையை வெட்டி ஆற்றில் வீசுவது போல. கட்டை மூழ்கியோ அழுகியோ போகாதவரை, அக்கரையிலோ, இக்கரையிலோ சிக்கிக் கொள்ளாதவரை அது நீரின் ஓட்டத்தோடு மிதந்து சென்று கொண்டே இருக்கும். இறுதியில் அது கடலைச் சென்றடையும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். நமது பயிற்சியும் இது போலத் தான். புத்தர் வழிவகுத்த பாதையின் படி நாம் பயிற்சி செய்தால், நேராக, சீராகத் தொடர்ந்தால், நாம் இரண்டு எல்லைகளுக்கு அப்பால் சென்று விடுவோம். எந்த இரண்டு? -இன்ப நுகர்வும், துன்ப நுகர்வும் - இந்த இரண்டு எல்லைகள் உண்மையான தியானிப்பவரின் வழி அல்ல என்று புத்தர் கூறினார். இவையே ஆற்றின் இரு கரைகள். ஆற்றின் ஒரு கரை வெறுப்பு, மற்ற கரை பாசம். அல்லது ஒரு கரை இன்பம். மறு கரை துன்பம் என்றும் சொல்லலாம். மனம் தான் அந்தக் "கட்டை". நீரின் ஓட்டத்தோடு செல்லும் போது இன்பம் வந்து அதை மோதும், துன்பமும் வந்து அதை மோதும். ஆனால் மனம் இன்பத்தோடும், துன்பத்தோடும் பற்றுக் கொள்ளாதவரை, அது நீரின் ஓட்டத்தோடு மிதந்து நிப்பாணத்தைச் சென்றடையும்: அதுவே ஓய்வு, அமைதி. இன்பமும் துன்பமும் எழுவதும் மறைவதும் தவிர வேறு எதுவும் இல்லை என்பதைப் பார்க்க வேண்டும். இந்த எல்லைகளில் "தரை தட்டாதவரை" நாம் உண்மையான தியானிப்பவரின் வழியில் சென்று கொண்டுள்ளோம்.
இதுவே புத்தரின் போதனை. இன்பம், துன்பம், அன்பு மற்றும் வெறுப்பு ஆகியவை இயற்கையின் நிலையான நியதிப்படி இயற்கையில் நிலை நாட்டப் பட்டுள்ளன. அறிவுள்ளவர் அவற்றைத் தொடர்வதில்லை. அல்லது அவற்றை ஊக்குவிப்பதில்லை. அவர் அவற்றோடு பற்றுக் கொள்வதில்லை. இன்பத்தில் மூழ்குவதையும், துன்பத்தில் மூழ்குவதையும் விட்டு விடும் மனம் இது. இதுவே சரியான பயிற்சி. அந்த மரக் கட்டை இறுதியில் கடலில் சேர்ந்து விடுவது போல, இந்த இரண்டு எல்லைகளோடும் பற்றுக்கொள்ளாத மனம் அமைதி காண்பது நிச்சயம்.
* * * * * *
25. துதங்கா என்றால் "சன்னி யாசி". துதங்கத் துறவி, புத்தர் அனுமதித்த பதின்மூன்று கடுமையான கட்டுபாடுகளில் சில வற்றைக் கடைப் பிடிப்பவர். துதங்கத் துறவிகள் சம்பிரதாயப்படி அவர் நேரத்தை தியானத்திற்காக அமைதியான இடம் தேடி, அல்லது ஆசிரியர்களைத் தேடிப் பயணத்தில் (பொதுவாகக் கால் நடையாக) ஈடுபடுவார்கள்.
* * * * * *
© Copyright
Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/