வழக்கமும் விடுதலையும் - அஜான் சா

வழக்கமும் விடுதலையும்

அஜான் சா

Convention and Liberation

A Dhamma Talk by Ajahn Chah

English

மொழிபெயர்ப்பாசிரியர் குறிப்பு: தலைப்பின் இரு வார்த்தைகளுக்கும் இவ்வாறு பொருள் கொள்க:

வழக்கம்: சம்பிரதாயப் பழக்கம், மரபு வழி

விடுதலை: தளைகளை அகற்றுதல், பற்றில்லாமல் இருத்தல்

(இந்தப் போதனை விவரம் எதுவும் இல்லா ஒரு பதிவிலிருந்து கண்டெடுக்கப் பட்டது. தாய்லாந்தின் வட கிழக்கு பகுதியில் வழக்கில் உள்ள மொழியில் தற்செயலாகத் தரப்பட்ட போதனை.)

உலக நிகழ்ச்சிகளெல்லாம் நாம் செய்த நடைமுறை வழக்கங்களே. வழக்கங்களை உருவாக்கிவிட்டு அவற்றுள் புதைந்து விடுகிறோம், அவற்றை விட மறுக்கிறோம். இதனால் நமது எண்ணங்களோடும், கொள்கைகளோடும் பற்று உண்டாகிறது. இந்தப் பற்று முற்றுப் பெறுவதே இல்லை, இதுவே சம்சாரம், முடிவில்லா ஓட்டம். இது நிறைவுக்கு வருவதில்லை. நமக்கு வழக்கங்களின் உண்மை தெரிந்தால் விடுதலை எதுவென்று தெரியவரும். விடுதலை எதுவென்பது தெளிவாகத் புரிந்தால், உலக வழக்கமும் தெரியவரும். இது தான் அறத்தைத் தெரிந்து கொள்வதென்பது. இங்கு நிறைவு உள்ளது.

உதாரணத்திற்கு மக்களை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் மக்களுக்குப் பெயர் இல்லை. நாம் பிறக்கும் போது நிர்வாணமாக உலகில் பிறந்தோம். நமக்குப் பெயர் உள்ளதென்றால் அது உலக வழக்கத்தின் காரணமாகத்தான் உள்ளது. வழக்கங்களின் உண்மையைத் தெரிந்து கொள்ள வில்லையென்றால் அது நமக்குக் கேடு விளைவிக்கும் என்பதை நான் பிரதிபலித்து உணர்ந்திருக்கிறேன். வழக்கங்களை நமது வசதிக்காகப் பயன் படுத்துகிறோம். வழக்கங்கள் இல்லாவிட்டால் நாம் ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள முடியாது, சொல்வதற்கு ஒன்றும் இருக்காது, மொழி இருக்காது.

மேற்கத்திய நாடுகளில் மக்கள் தியானம் செய்வதற்கு உட்காருவதைக் கவனித்திருக்கிறேன். ஆண்களும், பெண்களும் சேர்ந்து உட்கார்ந்து தியானம் செய்து முடித்த பின் சில சமயம் ஒருவருக்கொருவர் தலையைத் தொடுவதைக் கவனித்திருக்கிறேன்! [19] இதைப் பார்த்தபோது நான் எண்ணியதுண்டு, "ஆ, வழக்கங்களோடு பற்றுக் கொண்டிருந்தால் மனக்கிலேசங்களுக்கு இச்சமயத்தில் இடம் கொடுத்திருப்பேன்." உலக வழக்கங்களோடு பற்றுக் கொள்ளாமல் விட்டுவிட்டால், நமது அபிப்பிராயங்களை விட்டுவிட்டால், நாம் அமைதியோடு இருக்கலாம்.

உதாரணத்திற்கு, சேனாதிபதிகளும், தளபதிகளும், பெரும் பதவிகளில் உள்ளவர்களும் என்னைப் பார்க்க வருவார்கள். என்னிடம் தயவுசெய்து என் தலையைத் தொடுங்கள் என்று கேட்பார்கள்[20]. இவ்வாறு அவர்களாகவே கேட்டால் அதில் ஒன்றும் தவறில்லை, அவர்கள் தலை தொடப் பட்டால் அவர்களுக்கு ஆசீர்வதிக்கப் பட்டதாக ஒரு மகிழ்ச்சி. ஆனால் நடுத் தெருவில் அவர்கள் தலையை நாமாகத் தடவி விட்டால் அது வேறு கதை! இது வழக்கத்தோடு ஒட்டிக் கொள்வதால் ஏற்படும் பற்றின் காரணம். எனவே பற்றை விட்டு விடுவது தான் அமைதிக்குக் கொண்டு செல்லும் பாதை. தலையைத் தொடுவது நமது வழக்கங்களுக்குப் புறம்பானது, ஆனால் உண்மையில் அது முக்கியமானதும் இல்லை. தலையைத் தொடுவதற்கு அனுமதித்தார்களென்றால் அங்கு பிரச்சினை ஏதும் இல்லை. ஒரு முட்டைக்கோசையோ உருளைக்கிழங்கையோ தொடுவதைப் போலத்தான் அதுவும்.

ஏற்றுக் கொள்வது, கைவிடுவது, விட்டு விடுவது - இது தான் பாரத்தைக் குறைக்கும் பாதை. நீங்கள் பற்றுக் கொண்டால் பவமும், பிறப்பும் அங்கேயே இருக்கிறது. அதனால் அங்கேயே ஆபத்தும் இருக்கிறது. புத்தர் உலக வழக்கங்களைப் பற்றியும், அதனை எப்படிச் சரியான முறையில் விட்டு விடுதலை அடைவதென்பதைப் பற்றியும் கற்றுத் தந்தார். இதுவே விடுதலை. உலக வழக்கங்களோடு பற்றில்லாமல் இருப்பது. உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் ஒரு உலக வழக்க வாய்மை இருக்கிறது. அதை நாம் உருவாக்கிவிட்ட பின்னர் அதைக் கண்டு ஏமாறக் கூடாது. ஏனென்றால் அவற்றுள் தொலைந்து விட்டால் அது நம்மைத் துக்கத்துக்கு எடுத்துச் செல்லும். உலக வழக்கங்கள் பற்றியும் விதிகள் பற்றியுமான இந்தக் கருத்து மிக முக்கியமானது. இதற்கு அப்பால் சென்றவர், துக்கத்துக்கு அப்பால் சென்றுவிட்டார்.

ஆனாலும் இவ்வழக்கங்கள் உலக இயல்பு தான். உதாரணத்திற்குத் திரு. போன்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்; கூட்டத்தில் ஒருவராக, சாதாரணமானவாராக அவர் இருந்தார். ஆனால் இப்போது மாவட்ட ஆணையராக நியமிக்கப் பட்டிருக்கிறார். இது ஒரு உலக வழக்கம் தான் என்றாலும் இந்த வழக்கத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். உலக மக்களிடையே இது ஒரு இயல்பு. மாறாக நீங்கள், "ஓ, முன்பு நாம் நண்பர்களாக இருந்தோம், நாம் தையல்காரர் கடையில் ஒன்றாக வேலைப்பார்த்தோம்," என்று எண்ணமிட்டுப் பொது இடத்தில் அவர் தலையைத் தட்டினீர்களென்றால் அவருக்கு எரிச்சல் தான் உண்டாகும். இது சரியான நடத்தை இல்லை. அவர் மனம் புண்படும். எனவே மனக்கசப்பு உண்டாவதைத் தவிர்க்க நாம் சம்பிரதாயத்தைப் பின்பற்ற வேண்டும். வழக்கங்களைத் தெரிந்து கொள்வது பயனுள்ளது. ஏனென்றால் உலகில் வாழ்வதென்பது இது பற்றியது தான். சரியான இடம், சரியான நேரம், மனிதரைத் தெரிந்திருப்பது - அதற்குத் தகுந்தார்ப்போல் நடந்து கொள்வது.

வழக்கங்களுக்கு எதிராகச் செல்வது ஏன் தவறானது? மக்களின் காரணமாகத்தான் அது தவறு! உலக வழக்கங்களையும், விடுதலையையும் நீங்கள் புத்திசாலித் தனமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் சரியான நேரம் எது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். விதிகளையும், வழக்கங்களையும் எப்படிப் பயன்படுத்துவதென்பது தெரிந்திருந்தால் நாம் திறமையுள்ளவராவோம். ஆனால் தவறான நேரத்தில், மேலான வாய்மைப்படி நடந்து கொண்டால் அதுவும் தவறான செயலே. எங்கு உள்ளது தவறு? அது மக்களின் கிலேசங்களினால் உண்டான தவறு, வேறு ஒன்றும் இல்லை! அனைவருக்கும் கிலேசங்கள் உள்ளன. ஒரு சூழலில் ஒரு விதமாக நடந்து கொள்ள வேண்டும், மற்ற சூழலில் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும். இதை உள்ளும் புறமுமாக நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வாழ்கிறோம். பிரச்சினைகள் எழுவது மக்கள் அவற்றோடு பற்றுக் கொள்வதால் தான். ஒன்று இருப்பதாக நாம் நினைப்போமானால் அது இருக்கிறது. அது இருப்பதற்குக் காரணம் நாம் இருப்பதாக நினைத்து விட்டோம் என்பதால் தான். ஆனால் கவனமாகப் பார்த்தால், மேன்மையான வாய்மையின்படி பார்த்தால் அவை ஏதும் இருப்பதில்லை.

நான் பல முறை சொல்லியிருக்கிறேன். முன்னர் நாம் இல்லறத்தாராக இருந்தோம், இப்போது துறவிகளாக இருக்கின்றோம். "இல்லற" மக்களுக்கான வழக்கத்துடன் முன்னர் வாழ்ந்தோம், இப்போது "துறவிகளுக்கான” நெறிமுறைகளோடு வாழ்கிறோம். சம்பிரதாயப்படி தான் நாம் துறவிகள். விடுதலை பெற்ற துறவிகள் இல்லை. ஆரம்பத்தில் இதுபோன்ற வழக்கங்களை வரையறை செய்து கொள்கிறோம். ஆனால் ஒருவர் துறவறம் பூணுவதால் அவர் கிலேசங்களை விலக்கி விட்டார் என்று ஆகிவிடாது. ஒரு கையளவு மணலை எடுத்துக் கொண்டு அதை அனைவரும் உப்பு என்று சொல்ல முடிவு கட்டி விட்டால் அது உப்பாகிவிடுமா? அது பெயரளவில் தான் உப்பு. உண்மையில் உப்பு அல்ல. அதைச் சமையல் செய்யப் பயன் படுத்த முடியாது. அதன் பயன் நமது ஒப்பந்தத்தின் எல்லைக்குள் மட்டுமே பொருந்தும், ஏனென்றால் அங்கு உப்பு ஏதும் இல்லை, மணல் மட்டுமே உள்ளது. அது உப்பாவது நமது ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கத்தினால் மட்டுமே.

"விடுதலை" என்ற வார்த்தையும் ஒரு வழக்கத்தினால் தான் வந்தது, ஆனால் அது வழக்கங்களுக்கு அப்பால் உள்ள ஒன்றைக் குறிக்கிறது. விடுதலை அடைந்த பின்னரும் உலக வழக்கத்தினைத் தொடர்ந்து, அந்த நிலையை விடுதலை என்று கூறுகிறோம். வழக்கம் இல்லையென்றால் நம்மால் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியாது, எனவே அதற்குப் பயன் உள்ளது.

உதாரணமாக, மக்களுக்கு வெவ்வேறு பெயர்களைச் சூட்டுகிறோம். ஆனால் அவர்கள் மக்களாகத்தான் தொடர்ந்து இருக்கின்றனர். பெயர் சூட்டி அவர்களை வேறுபடுத்த வில்லையென்றால், ஒரு கூட்டத்தில் ஒருவரை அழைக்கவேண்டும் என்கிறபோது. "ஏய், மனிதா! மனிதா!", என்று கத்துவதனால் பயனில்லை. யார் உங்களை நோக்குவார் என்று சொல்வதற்கில்லை, ஏனென்றால் அவர்கள் அனைவரும் "மனிதர்கள்" தான். ஆனால் நீங்கள், "ஏய் செல்வா!", என்றால் செல்வா மட்டுமே வருவார், மற்றவர் பதில் தரமாட்டார். பெயர் வைப்பது இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அவற்றின் காரணமாக நாம் பேசிக் கொள்ள முடிகிறது. சமூக நடத்தைக்கு அடித்தலமாகிறது.

ஆகவே நீங்கள் வழக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், விடுதலையையும் தெரிந்து கொள்ள வேண்டும். வழக்கத்திற்குப் பயன் உள்ளதென்றாலும் அங்கு உண்மையில் ஒன்றும் இல்லை. ஏன் மக்கள் கூட உண்மையில் சாராம்சம் கொண்டவர்கள் இல்லை! அவர்கள் (நான்கு) பூதங்களால் ஆனவர்கள். காரண காரியத் தொடர்பு கொண்ட நிலைமைகளால் பிறந்தவர்கள். நிலைமைகளை நம்பித்தான் வளர்கின்றனர். சிறிது காலம் வாழ்ந்த பின் இயற்கையின் வழியில் மறைகின்றனர். இதை யாரும் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. வழக்கங்கள் இல்லாவிட்டால் நாம் எதையும் சொல்ல முடியாது, பெயர்கள் இருக்காது, பயிற்சி இருக்காது, வேலை இருக்காது. விதிகளும் வழக்கங்களும் மொழியை உண்டாக்க, நிகழ்ச்சிகளை எளிதாக்க நிறுவப்பட்டது. அவ்வளவு தான்.

உதாரணமாக, பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முற்காலத்தில் காகித நோட்டுகள் இல்லை. அவற்றுக்கு மதிப்பு இல்லை. மக்கள் பண்டமாற்றுச் செய்து கொண்டார்கள். ஆனால் அவ்வாறு மாற்றிக் கொண்ட பண்டங்களை வைத்திருப்பது கடினமாக இருந்தது, எனவே பணத்தை உருவாக்கினார்கள். நோட்டுகளுக்கும், காசுக்கும் மதிப்பு வந்தது. எதிர்காலத்தில் ஒரு புதிய மன்னர் இனிமேல் காகித நோட்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று கட்டளை இடலாம். அதற்குப் பதில் முத்திரை வைக்கும் மெழுகைப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லலாம், மெழுகை உருக்கிக் கட்டியாக அழுத்தி அதைப் பயன்படுத்தவேண்டும் என்று கட்டளை இடலாம். இதைப் பணம் என்று கூறி நாடு முழுவதும் பயன்படுத்த ஆரம்பிப்போம். மெழுகை விடுங்கள். ஏன்? கோழிச் சாணத்தைப் பணமாகப் பயன்படுத்தவேண்டும் என்றுகூட முடிவெடுக்கலாம் - வேறு எதுவும் செல்லாது. கோழிச் சாணம் மட்டுமே பணமாகச் செல்லும் என்று உத்தரவிடலாம். பின் மக்கள் கோழிச் சாணத்துக்காகச் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு இருப்பார்கள்! இதுதான் உலக வழி. வழக்கத்தை விளக்க இதுபோலப் பல உதாரணங்களைத் தரமுடியும். பணமாக நாம் பயன்படுத்துவது நாமாக முடிவெடுத்துத் துவக்கிய ஒரு வழக்கம், அந்த வழக்கத்தில் அதற்குப் பயன் இருக்கிறது. நாம் ஒன்றைப் பணம் என்று முடிவெடுத்து அறிவித்த பின் அது பணமாகி விட்டது. ஆனால் உண்மையில் பணம் என்றால் என்ன? யாராலும் சொல்ல முடியாது. பொதுவாக மக்களிடையே ஒன்றுக்கு ஆதரவு கிடைத்த பின், ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு வழக்கம் உருவாகிறது. உலகம் இதுவே.

இது தான் உலக வழக்கம், ஆனால் சாதாரண மக்களுக்கு விடுதலை பற்றி அறிய வைப்பதென்பது கடினமான செயல். நமது பணம், குடும்பம், மக்கள், மற்றும் உறவினர் எல்லாம் சாதாரண வழக்கத்தினால் நாம் கண்டு பிடித்தது. ஆனால் அறத்தின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, இவை யாவும் நமக்குச் சொந்தம் இல்லை. இதைக் கேட்கும் போது நமது மனத்திற்கு இது சரியானதாகப் படாமல் இருக்கலாம். ஆனால் இதுவே உண்மை. இவற்றிற்கு வழக்கத்தின் காரணமாகத்தான் மதிப்பு. நாம் இவற்றிற்கு மதிப்பு இல்லை என்று முடிவெடுத்தால் அவற்றிற்கு மதிப்பு இல்லை. இப்படித்தான் ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நாம் உலக வழக்கங்களை உருவாக்குகிறோம்.

இந்த உடல் கூட உண்மையில் நமது இல்லை. ஒரு உலக வழக்கமாகத்தான் நமது என்று எண்ணுகிறோம். உண்மையில் இது ஒரு வழக்கம் தான். இந்த உடலுள் உண்மையான சாராம்சம் கொண்ட ஒன்றைத் தேடமுற்பட்டால் அதைக் கண்டு பிடிக்க முடியாது. வெறும் மண், நீர், வளி, தீ என்ற பூதங்களால் ஆன உடல் பிறந்து கொஞ்ச காலம் இருந்த பின் மறைகிறது. எல்லாமே இது போலத்தான். அவற்றில் நிலையான, சாராம்சம் கொண்டதொன்றும் இல்லையென்றாலும் அவற்றைப் பயன் படுத்துவது சரியான வழக்கமே. நீங்கள் பயன்படுத்த ஒரு கருவி அது. உடைந்தால் பிரச்சினை. எனவே அது உடையப் போவது உறுதி என்றாலும் முடிந்த அளவு பாதுகாத்து வைத்திருப்பது நம் கடமை. ஆக நமது நான்கு தேவைகளை [21] புத்தர் திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கக் கற்பித்தார். ஒரு துறவி இந்த நான்கு ஆதரவுகளை நம்பித் தனது பயிற்சியைத் தொடர்கிறார். உயிருள்ள வரை அவற்றை நம்பி இருக்க வேண்டும். ஆனால் அவற்றை அறிந்துகொள்ள வேண்டும். அவற்றோடு பற்றுக் கொள்ளக் கூடாது. இல்லாவிட்டால் தீர்க்க முடியாதா ஆசை மனத்தில் உண்டாகும்.

மரபும் விடுதலையும் இது போல ஒன்றோடு ஒன்று தொடர்ந்து உறவு கொண்டுள்ளன. நாம் உலக வழக்கங்களைப் பயன் படுத்தினாலும் அவற்றை உண்மையென நினைத்து நம்பிக்கை வைக்கக் கூடாது. அவற்றோடு பற்றுக் கொண்டால் துக்கம் உண்டாகும். சரி எது, தவறு எது என்ற கேள்வியை ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம். சிலர் தவறானதைச் சரி என்றும் சரியானதைத் தவறென்றும் நினைக்கின்றனர். ஆனால் யாருக்குத் தெரியும் எது சரி, எது தவறு என்று? இதற்குப் பதில் நமக்குத் தெரியவில்லை. வெவ்வேறு மக்கள் எது சரி, எது தவறு என்று வேறுபட்ட வழக்கங்களை நிரூபிக்கின்றனர், ஆனால் புத்தர் துக்கத்தை வழிகாட்டியாக்கிக் கொண்டார். எது சரி, எது தவறு என்பது பற்றி வாக்குவாதம் நடத்தினால் அதற்கு முடிவே இல்லை. ஒருவர் "சரி" என்றதை மற்றவர் "தவறு" என்பார். ஒருவர் "தவறு" என்றதை மற்றவர் "சரி" என்பார். உண்மையில் எது சரி, எது தவறு என்பது பற்றி நமக்குத் தெரிவதே இல்லை! ஆனால் ஒரு பயனுள்ள வகையில், நமக்கும், மற்றவர்களுக்கும் தீமை விளைவிக்காமல் இருப்பது சரி யானதென்று கொள்ளலாம். இப்படிப்பட்ட வழக்கம் ஒரு பயனுள்ள தேவையைப் பூர்த்தி செய்கிறது.

விதிகளும், உலக வழக்கங்களும், விடுதலையும் தம்மங்களே. ஒன்று மற்றதைவிட மேன்மையானது. ஆனால் இரண்டும் கையோடு கையாகச் செல்கின்றன. ஒன்று இப்படித்தான் இருக்கும், அல்லது அப்படித்தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. எனவே புத்தர் "உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கில்லை" என்று ஏற்றுக்கொண்டு, இருப்பதை இருந்தவாறு விடச் சொன்னார். உங்களுக்கு எவ்வளவுதான் ஒன்றைப் பிடித்திருந்தாலும் அல்லது பிடிக்காமலிருந்தாலும் அது உறுதியற்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் உண்மையிலேயே இது உறுதியற்றது தான்.

எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் எல்லாவற்றையும் அறப் பயிற்சியாக்கிக் கொள்ளுங்கள். அந்தப் பயிற்சி முழுமை அடைவது ஒன்றும் இல்லாத இடத்தில் தான். அது சரணடைந்த இடம், வெறுமையான இடம், சுமையை இறக்கி விட்ட இடம். இதுவே முடிவு. ஒரு உவமானம் தருகிறேன். "இந்தக் கொடி ஏன் பறக்கிறது? என்று கேட்டால் ஒருவன், “காற்றின் காரணமாகப் பறக்கிறது” என்கிறான். இன்னொருவன், “அது கொடியின் காரணமாகப் பறக்கிறது” என்கிறான். முதலில் கூறியவன் இல்லை இல்லை காற்றே காரணம் என்கிறான். இந்த மாதிரி வாதங்களுக்கு முடிவே இல்லை! இது இந்தப் பழைய விடுகதையைப் போலத்தான், "முதலில் வந்தது எது, கோழியா? முட்டையா?" இதைப் பற்றி ஒரு முடிவுக்கே வரமுடியாது. அதன் இயற்கை அப்படி.

நாம் பேசும் இந்தச் செய்திகளெல்லாம் உலக வழக்கமே. நாமாக நியமித்தவை. இவற்றை மெய்யறிவோடு கண்டால் நிலையாமை, துக்கம், நமதின்மை என்பன பற்றித் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறான பார்வையே ஞானத்துக்கு எடுத்துச் செல்லும்.

மக்களுக்குக் கற்பிப்பது, பயில்விப்பது என்பது கடினமான காரியம். ஒவ்வொருவருக்கும் புரிந்து கொள்ளும் ஆற்றலில் வேறுபாடு உள்ளது. சிலருக்குக் குறிப்பிட்ட கருத்துக்கள் இருக்கும், அவர்களிடம் ஒன்றைச் சொன்னால் அவர்கள் உங்களை நம்புவதில்லை. அவர்களிடம் உண்மையை பற்றிச் சொன்னால் அவர்கள் அது உண்மை இல்லை என்பார்கள். "எனக்குச் சரி எனப் பட்டதை நான் எடுத்துக் கொள்கிறேன், உங்களுக்குச் சரி எனப் பட்டதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்," என்பார்கள். இது போன்ற பேச்சுக்கு முடிவே இல்லை. இவற்றை எல்லாம் விடவில்லையென்றால் துக்கம் தான் மிஞ்சும்.

உங்களிடம் காட்டுக்குச் சென்ற நான்கு மனிதர்களின் கதையை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அங்கு ஒரு கோழி கூவுவது கேட்கிறது, "கொக்கரக்கோ கோ!" ஒருவன் கேள்வி எழுப்புகிறான், "அது சேவலா அல்லது பெட்டைக் கோழியா?" மூவர் வேடிக்கைக்காக ஒரே சமயத்தில் கூறுகின்றனர், "அது ஒரு பெட்டைக் கோழி," ஆனால் மற்றவன் ஒத்துக் கொள்ளவில்லை, அது சேவல் என்கிறான். "பெட்டை கோழி எப்படி அவ்வாறு கூவும்?" என்று கேட்கிறான். மற்றவர்கள் சுடச் சுட "அதற்கும் வாய் இருக்கிறதல்லவா?" என்கின்றனர். வாக்குவாதம் சேவல் என்று சொன்னவன் கண்களில் நீர் வரும் வரை தொடர்கிறது. மிகவும் மனம் நொந்து விடுகின்றான். உண்மையில் நமது உலக வழக்கங்களின் படி கூவியது சேவல் தான். ஆனால் ஒருவன் கண்களில் நீர் வரும் வரை வாக்குவாதம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அடிப்படையாக அவர்கள் அனைவருமே தவறு. நீங்கள் பெட்டைக் கோழியென்றாலும் சேவலென்றாலும், அவை நாம் வைத்த பெயர் மட்டுமே.

அந்தக் கோழியிடம் சென்று, "நீ ஒரு சேவலா?" என்று கேட்டால் அது பதில் தராது. அதனிடம், "நீ ஒரு பெட்டைக் கோழியா?" என்று கேட்டாலும் அது விளக்கம் அளிப்பதில்லை. நாம் வழக்கங்களை உருவாக்குகிறோம். சேவல் இப்படி இருக்கும், பெட்டைக் கோழி அப்படி இருக்கும்; சேவல் இப்படிக் கூவும், பெட்டைக் கோழி அப்படிக் கூவும் என்று ... இப்படித்தான் இந்த உலக விஷயங்களில் சிக்கிக் கொள்கிறோம்! இதை நினைவில் கொள்ளுங்கள்! உண்மையில் பெட்டைக் கோழியும் இல்லை சேவலும் இல்லை. உலக வழக்கங்களின் படி ஒருவன் சொன்னதுதான் சரி, மற்றவர்கள் சொன்னது தவறு. ஆனால் கண்ணில் நீர் வரும் வரை விவாதம் நடத்துவதில் பயன் ஏதும் இல்லை!

புத்தர் பற்றுக் கொள்ள வேண்டாம் என்று கற்பித்தார். பற்றின்மையை எப்படிப் பயில்வது? பற்றை விடுவதற்குத்தான் பயிற்சி செய்கிறோம்.

ஆனால் இந்தப் பற்றின்மையை அறிந்து கொள்வது கடினமானது. ஆழமான மெய்யறிவோடு ஆராய்ந்து ஊடுருவித்தான் பற்றின்மையை அடைய முடிகிறது. நினைத்துப் பார்த்தால் தெளிவாகும். மக்கள் மகிழ்ச்சியாக அல்லது சோகமாக, திருப்தியாக அல்லது திருப்தியற்று இருப்பது அவர்களின் செல்வத்தைப் பொருத்தது இல்லை - அவர்கள் மெய்யறிவைப் பொருத்துத்தான் இருக்கிறது. துயரத்துக்கு அப்பால் செல்வது மெய்யறிவினால், விஷயங்களின் உண்மையான இயல்பைத் தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது.

எனவே புத்தர் நம்மை விசாரிக்க, பிரதிபலிக்க ஊக்குவித்தார். இந்தப் "பிரதிபலிப்பு" என்பது பிரச்சினைகளைச் சரியாகத் தீர்ப்பது தான். இவை தான் நமது பயிற்சி: பிறப்பு, மூப்பு, நோய், சாக்காடு போன்ற விஷயங்கள். இவை பொதுவான சாதாரணமான விஷயங்கள். புத்தர் பிறப்பு, மூப்பு, நோய், சாக்காடு பற்றிப் பிரதிபலிக்கச் சொன்னார். ஆனால் மக்கள் அதை அறிந்து கொள்வதில்லை. "அங்கு என்ன பிரதிபலிக்க இருக்கிறது?" என்கின்றனர். அவர்கள் பிறந்தும் பிறப்பை அறியவில்லை, அவர்கள் இறப்பது உறுதி என்றாலும் மரணத்தைத் தெரிந்து கொள்ளவில்லை.

இவற்றை அடிக்கடி விசாரிப்பவர் அறிந்து கொள்வார். அறிந்த பின் தனது பிரச்சினைகளைப் படிப்படியாகத் தீர்த்துக் கொள்வார். அவருக்குச் சற்றுப் பற்று இருந்தாலும், மெய்யறிவோடு மூப்பு, நோய், மரணம், இயற்கையின் வழி என்பதை அறிந்திருந்தால் துக்கத்தை நிவாரணம் செய்து கொள்வார். நாம் அறத்தைப் பயில்வது இதற்காக மட்டும் தான் - துக்கத்தைக் குணப்படுத்துவதற்குத்தான். பௌத்தத்திற்கு அடித்தலம் பற்றிச் சொல்வதற்கு அதிகம் இல்லை - துக்கத்தின் பிறப்பும் அதன் இறப்பும் மட்டுமே. இதைத்தான் புத்தர் மேன்மையான வாய்மை என்றார். பிறப்பு துக்கம், மூப்பு துக்கம், நோய்வாய்ப்படுவது துக்கம் மரணமும் துக்கம். மக்கள் இந்தத் துக்கத்தை வாய்மை என்று ஏற்பதில்லை. இவற்றை அறியாவிட்டால் நாம் துக்கத்தை அனுபவிப்போம்.

நாம் நமது அபிப்ராயங்களோடும், அகம்பாவத்தோடும் விவாதித்தால் அவற்றுக்கு முடிவே இருக்காது. நமது மனதுக்கு ஓய்வு தர, அமைதியைக் காண நாம் நமது இறந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், வரப்போவதையும் பிரதிபலிக்க வேண்டும். பிறப்பு, மூப்பு, நோய், சாக்காடு போன்றவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். இவற்றால் பாதிக்கப் படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? நமக்குச் சற்று கவலை இருந்தாலும், இவற்றின் இயல்பை அறியும் வரை நாம் விசாரித்தால், எல்லாத் துக்கமும் குறையும். ஏனென்றால் அவற்றை நாம் மார்போடு அணைத்துக் கொள்ளமாட்டோம்.

* * * * * *

19. தாய்லாந்து நாட்டில் தலை புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே மற்றவர் தலையைத் தொடுவது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் அங்குள்ள கலாச்சாரப்படி ஆண்களும் பெண்களும் மற்ற பாலினரின் தலையைப் பொது இடங்களில் தொடுவதில்லை. ஆக தாய்லாந்து நாட்டு வழக்கங்களோடு பற்றுக் கொண்டிருந்தால் தான் துக்கம் அனுபவித்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்கிறார் அஜான்.

20. தாய்லாந்து நாட்டில் மிகவும் போற்றப்பட்ட துறவிகளால் தலை தொடப்படுவது ஒரு புனிதமான செயலாகக் கருதப்படுகிறது.

21. ஊயிர் காக்க நான்கு தூண்கள் - ஆடை, உணவு, இருப்பிடம், மருந்து.

* * * * * *

© Copyright

Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.

Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.

"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

http://bautham.net/