அப்பால் உள்ள அமைதி - அஜான் சா

அப்பால் உள்ள அமைதி

அஜான் சா

The Peace beyond

A Dhamma talk by Ajahn Chah

English

(தாய்லாந்து நாட்டின் உயர் அரச அதிகாரி திரு சன்யா தர்மசக்தி 1978 ஆம் ஆண்டு 'வாட் நோங் பா போங்' (Wat Nong Pah Pong) விகாரைக்கு வருகை தந்த போது அஜான் சா வழங்கிய போதனையின் சுருக்கம்.)

அறத்தைப் பயில்வது மிக முக்கியமான செயல். பயிற்சி செய்ய வில்லையென்றால் நம் அறிவு ஆழமாக ஊடுருவாத அறிவு தான், உண்மையான அறிவின் வெளி ஓடு போன்றது. நம்மிடம் ஏதோ ஒரு பழம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை நாம் இன்னும் உண்ண வில்லையெனில், அந்தப் பழம் நம் கையில் இருந்தாலும் அதனால் நாம் பயன் எதையும் பெறவில்லை. அந்தப் பழத்தை உண்டால் தான் நாம் அதன் சுவையை அறிய முடியும்.

மற்றவர் மீது வெறும் நம்பிக்கை வைத்திருப்போரைப் புத்தர் போற்றவில்லை. தன்னைப் பற்றி உள்ளப் பூர்வமாக அறிந்திருப்போரையே புத்தர் போற்றினார். அந்தப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உண்டு சுவைத்திருந்தால் அது புளிப்பா, இனிப்பா என்று வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை. நம் பிரச்சனைகள் முடிந்தன. அவை ஏன் முடிந்தன? ஏனென்றால் வாய்மையின் படி நாம் அறிந்து கொண்டோம். அறத்தை அறிந்தவர் அந்தப் பழத்தின் புளிப்பையோ, இனிப்பையோ தெரிந்தவர் போலத் தான். சந்தேகங்கள் இங்கேயே முடிந்து விட்டது.

அறத்தைப் பற்றிப் பேசும் போது, நாம் எவ்வளவு பேசினாலும் அவை எல்லாம் நான்கு செய்திகளுள் அடங்கிவிடும். அவை துக்கத்தை அறிவது, துக்கத்தின் காரணத்தை அறிவது, துக்கத்தின் முடிவை அறிவது, துக்கத்தின் முடிவிற்கு எடுத்துச் செல்லும் மார்க்கத்தை அறிவது.

இது தான் எல்லாமே. நமது பயிற்சியின் போது நாம் இதுவரை அனுபவித்ததெல்லாம் இந்த நான்கு செய்திகளுள்ளேயே அடங்கும். இந்த நான்கையும் தெரிந்து கொண்டால் நமது பிரச்சனைகள் முடிவுறும்.

இந்த நான்கும் எங்கு பிறக்கின்றன? அவை, இதோ! இந்த உடலினுள்ளும் மனத்தினுள்ளும் பிறக்கின்றன, வேறு எங்கும் இல்லை. பின் ஏன் புத்தரின் போதனைகள் இவ்வளவு விளக்கப்பட்டும், விரிவானதாகவும் இருக்கின்றது? நமக்குத் தெளிவாக விளக்கி நாம் புரிந்து கொள்ள உதவுவதற்காகத்தான்.

சித்தார்த்த கௌதமர் இந்த உலகில் பிறந்த போது, அவர் அறத்தைக் காணும் முன்னர், அவரும் நம்மைப்போல ஒரு சாதாரண மனிதராகத்தான் இருந்தார். அவர் தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொண்ட பின்னர், அதாவது துக்கம் என்ற வாய்மையை, அதன் காரணத்தை, அதன் முடிவை, அதன் முடிவிற்குக் கொண்டு போகும் பாதையை அறிந்த பின்னர் அவர் அறத்தை அறிந்தார். அதன் பின் அவர் முழுமையாக ஞானம் பெற்ற புத்தர் ஆனார்.

அறத்தைத் தெளிவாக உணர்ந்து கொண்டால், எங்கு அமர்ந்தாலும் அறத்தை உணர்கிறோம், எங்கு இருந்தாலும் புத்தரின் அறத்தைக் கேட்கிறோம். அறத்தைத் தெளிவாக உணர்ந்து கொண்டால் புத்தர் நமது மனத்தினுள் இருக்கிறார், அறம் நம் மனத்தினுள் இருக்கிறது, மெய்யறிவிற்கு இட்டுச்செல்லும் மார்க்கமும் நம் மனத்தினுள் இருக்கிறது. புத்தரையும், அறத்தையும், சங்கத்தையும் நமது மனத்தினுள் வைத்திருப்பதென்றால் நமது நடவடிக்கைகள் நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும் அதன் உண்மையான இயல்பைத் தெளிவாகத் தெரிந்திருக்கிறோம்.

இப்படித்தான் புத்தர் இலௌகீக அபிப்பிராயங்களையும், பாராட்டுகளையும், கண்டன விமர்சணங்களையும் உதறித் தள்ளினார். மக்கள் அவரைப் புகழ்ந்தாலும், கண்டித்தாலும் அதனை அவற்றின் இயல்பின்படி ஏற்றுக் கொண்டார். இவை இரண்டும் இலௌகீக நிலைகளாதலால் அவற்றால் அவர் பாதிக்கப்படவில்லை. ஏன் பாதிக்கப்படவில்லை? ஏனென்றால் அவர் துக்கத்தை அறிந்திருந்தார். அந்தப் புகழையோ கண்டனத்தையோ தான் நம்பினால் அவை துக்கம் உண்டாக்கும் என்பதைத் தெரிந்திருந்தார்.

துக்கம் எழும் போது அது நம்முள் கிளர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் நிலைகுலைந்து விடுகிறோம். அந்தத் துக்கத்தின் காரணம் என்ன? நமக்கு வாய்மை தெரியாததுதான் அதற்குக் காரணம். காரணி இருக்கும் போது, துக்கம் உண்டாகும். உண்டான பின் அதனை நிறுத்த நமக்கு வழி தெரிவதில்லை. அதை அதிகம் கட்டுப் படுத்தப் படுத்தத் துக்கம் பெருகுகிறது. நாம், "என்னைக் கண்டிக்காதே," என்றோ "என் மீது பழி சுமத்தாதே" என்றோ கூறுகிறோம். இவ்வாறு துக்கத்தை அடக்க முயன்றால் அது அதிகமாகத்தான் வளர்கிறது, அது நிற்பதில்லை.

எனவே புத்தர் துக்கத்திடமிருந்து விடுதலை பெரும் வழி அறத்தை உள்ளப்பூர்வமாக அறிவதே என்று கற்றுத் தந்தார். அறத்தை நாமே சாட்சி கண்டோராகிறோம். எவராவது நம்மை நல்லவர் என்றால் அந்தப் போற்றுதலால் நாம் பெருமை கொள்வதில்லை. நம்மை கெட்டவர் என்றாலும் நாம் நம்மையே மறந்து ஆத்திரம் கொள்வதில்லை. இப்படி இருந்தால் நாம் சுதந்திரமாக இருக்கலாம். 'நல்ல'தும், 'கெட்ட'தும் உலக தம்மங்களே, அவை வெறும் மனத்தின் இயல்புகளே. நாம் அவற்றைத் தொடர்ந்தால் நம் மனமும் உலகத்தோடு சேர்ந்து விடுகிறது, இருட்டில் தட்டித் தடவித் தேடிக்கொண்டு, தப்பிக்க வழி தெரியாமல் அலைகிறோம்.

இப்படி இருந்தால் நாம் நம்மையே உணர்ந்தவரல்ல. நாம் மற்றவரைத் தோற்கடிக்க முற்படுகிறோம். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்மையே தோற்கடித்துக்கொள்கிறோம். நாம் நம்மை அடக்கிவிட்டால் எல்லாவற்றையும் வென்றது போல -மனோபாவங்களை, காட்சிகளை, சப்தங்களை , சுவைகளை, உடலின் உணர்ச்சிகளை - எல்லாவற்றையும் வென்றது போலத்தான்.

நான் இப்போது புறத்தை பற்றிப் பேசுகிறேன். அவை அப்படித் தான். ஆனால் புறமும் அகத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. சிலருக்குப் புறம் மட்டுமே தெரியும், அகத்தைப் பற்றித் தெரியாது. நாம் 'உடலை உடலுள் பார்க்க' என்று சொல்வதைப் போல. வெளி உடலை மட்டும் பார்த்தால் போதாது. உடலை உடலுள்ளும் பார்க்க வேண்டும். அவ்வாறு மனத்தை விசாரனை செய்த பின், மனத்தை மனத்தினுள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடலை ஏன் விசாரனை செய்ய வேண்டும்? இது என்ன 'உடலினுள் உள்ள உடல்'? நாம் மனத்தைத் தெரிந்து கொள்ளச் சொல்லும் போது, அந்த 'மனம்' என்பதென்ன? மனத்தைத் தெரிந்து கொள்ளவில்லையென்றல் அதனுள் உள்ளவற்றையும் தெரிந்து கொள்ள முடியாது. இது துக்கத்தையும், அதன் காரணத்தையும், அதன் முடிவையும், அதன் முடிவிற்கு எடுத்துச்செல்லும் மார்க்கத்தையும் தெரியாத ஒருவனைப்போல. துக்கத்தை முடிக்க உதவ வேண்டியவை உதவாது. ஏனென்றால் துக்கத்தை கிளரிவிடக் கூடியவையால் நாம் திசை திருப்பப் படுகிறோம். இது எப்படி என்றால், தலையில் அரிப்பு ஏற்படும்போது நாம் காலைச் சொறிவதுபோலத்தான்! காலைச் சொறிவதால் தலைப்பகுதியில் நிவாரணம் கிடைக்கப் போவதில்லை. அதே போலத் துக்கம் எழும் போது அதை எப்படிச் சமாளிப்பதென்று நமக்குத் தெரிவதில்லை. துக்கத்தை முடிவுக்கு கொண்டு செல்லும் பாதை நமக்குத் தெரியவில்லை.

உதாரணமாக இந்த உடலை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ள இந்த உடலை எடுத்து கொள்ளுங்கள். இந்த உடலின் உருவத்தை மட்டுமே பார்த்தால் துக்கத்திலிருந்து விடுபட வழியே இல்லை. ஏன் இல்லை? ஏனென்றால் உடலினுள் நாம் இன்னமும் பார்க்கவில்லை. வெளித்தோற்றத்தைமட்டுமே பார்க்கிறோம். அதை அழகான தென்றும், சாராம்சம் கொண்டதென்றும் நினைக்கின்றோம். நம் கண்களால் அதன் வெளிப்புறத்தைப் பார்க்கிறோம்; ஒரு குழந்தையாலும் அதைச் செய்ய முடியும், மிருகங்களும் கூட அதைச் செய்ய முடியும், அது கடினம் இல்லை. உடலின் புறத்தை எளிதில் பார்க்கலாம், ஆனால் அதைப் பார்த்த பிறகு அதன் உண்மையை நாம் தெரிந்து கொள்வதில்லை. அதைப் பார்த்த பிறகு அதனைப் பிடித்துக் கொள்கிறோம், அது நம்மைக் கடித்து விடுகிறது!

எனவே நாம் உடலினுள் உள்ள உடலைப் பார்க்க வேண்டும். உடலினுள் உள்ளவற்றைப் பாருங்கள். புறத்தை மட்டும் பார்த்தால் தெளிவாவதில்லை. உரோமம், நகம் போன்ற வற்றைப் பார்த்து, அதன் கவர்ச்சியைப் பார்த்து அதனால் ஈர்க்கப்படுகிறோம். எனவே புத்தர் நம்மை உடலினுள்ளும் பார்க்கச் சொன்னார், உடலினுள் உள்ள உடலைப் பார்க்கச் சொன்னார். உடலினுள் என்ன இருக்கிறது? உன்னிப்பாகப் பாருங்கள்! நாம் பல ஆச்சரியங்களைக் கண்டுபிடிப்போம். அவை நமக்குள் இருந்தாலும் அவற்றை நாம் என்றும் பார்த்ததில்லை. நாம் நடக்கும் போதெல்லாம் அவற்றைச் சுமந்து கொண்டுதான் செல்கிறோம், வாகனத்தில் உட்காரும் போதும் அவற்றைச் சுமந்து கொண்டுதான் செல்கிறோம், ஆனால் அவற்றை நாம் தெரிந்து கொள்ளவே இல்லை!

இது எப்படி என்றால் நாம் உறவினர் வீட்டுக்குச் செல்கிறோம்; அவர்கள் நமக்கு ஒரு பரிசு தருகின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எடுத்து அதனுள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமலே, அதைத் திறக்காமலே ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு விடைபெறுகிறோம். பல நாட்கள் கடந்தபின் அதைத் திறந்து பார்த்தால் - அதனுள் இருப்பதெல்லாம் விஷப்பாம்புகள்! நம் உடலும் அது போலத்தான். அதன் புறத்தை மட்டுமே பார்த்தால் அது நல்லது, அழகுள்ளது என்று சொல்வோம். நிலையாமையை, துக்கத்தை, நமது இன்மையை நாம் மறந்துவிடுகிறோம். உடலினுள் பார்க்கும் போதுதான் அதன் அருவருப்பைத் தெரிந்து கொள்கிறோம்.

கசப்பானவற்றை மூடி மறைக்காமல் உள்ளதை உள்ளவாறு பார்த்தால் உடல் பரிதாபத்துக்குரியதென்றும் களைப்படையச் செய்கிறதென்பதையும் கவனிக்கலாம். அதனால் பட்சபாதமில்லா நிலை உண்டாகும். இந்த 'ஆர்வமில்லா' உணர்ச்சி உலகை வெறுப்பதற்கு ஒப்பானதில்லை; நம் மனம் தெளிவாகிறது, உடலின் மீதிருந்த பிடிப்பை விடுகிறது. சாராம்சமுள்ளதாகவோ, நம்பக்கூடியதானதென்றோ நினைப்பதை விடுகிறோம். இயற்கை நியதிப்படி அவை நிலைத்திருக்கின்றன. நாம் அவற்றை இப்படி, அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவை தங்கள் இயல்பின்படியே செல்கின்றன. சிரித்தாலும், அழுதாலும் அவை உள்ளது உள்ளவாறே இருக்கின்றன. உறுதியற்றது உறுதியற்றதாகவே இருக்கிறது. அழகற்றது அழகற்றதாகவே இருக்கிறது.

காட்சிகளை, சப்தங்களை, சுவைகளை, வாசனைகளை, உடல் ஸ்பரிச உணர்வுகள் அல்லது மன நிலைகள் இவற்றை அனுபவிக்கும் போது அவற்றோடு பற்றுக் கொள்ளாமல் விட்டு விடும்படி புத்தர் சொன்னார். காது, சத்தங்களைக் கேட்டால் அதனை அத்தோடு விட்டு விடுங்கள். மூக்கு வாசனைகளை நுகர்ந்தால் அவற்றை அத்தோடு விட்டு விடுங்கள்... அவற்றை மூக்கோடு விட்டு விடுங்கள்! உடல் உணர்ச்சிகள் எழும் போது, அதனால் ஏற்படும் பிடித்த, பிடிக்காத உணர்வுகளையும் அத்தோடு விட்டு விடுங்கள். அவை எங்கு பிறந்தனவோ அங்கேயே திரும்பிவிடட்டும். மன நிலைகளெல்லாம் அதே போலத்தான். இவை எல்லாமே அவற்றின் இயல்பான நிலைகளோடு செல்லட்டும். இது தான் ‘தெரிந்திருத்தல்’ என்பது. மகிழ்ச்சியானாலும், துயரம் என்றாலும், எல்லாம் ஒன்றே. இது தான் ‘தியானம்’ என்பது.

தியானம் என்பது மனத்தை அமைதியாக்கி மெய்யறிவை உண்டாக்கும் பயிற்சிதான். உருவங்கள், சப்தங்கள், சுவைகள், உடல் ஸ்பரிச உணர்வுகள் மற்றும் மனதில் தோன்றுபவைகளால் உண்டாகும் உணர்ச்சிகளைப் பார்த்துத் தெரிந்து கொள்வதற்கு உடலோடும் மனத்தோடும் பயிற்சி செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்லப்போனால் இவை எல்லாம் மகிழ்ச்சியும் துயரமும் பற்றியது தான். மகிழ்ச்சி என்பது மனத்தில் தோன்றும் ஒரு இன்பமான உணர்ச்சி. துக்கமென்பது மனத்தில் தோன்றும் இன்பமற்ற உணர்ச்சி. புத்தர் இந்த இன்பத்தையும் துன்பத்தையும் மனத்திலிருந்து விலக்கி வைக்கச் சொன்னார். மனம் என்பது தெரிந்த ஒன்றுதான். உணர்ச்சி [2] என்பது மகிழ்வின், துன்பத்தின், பிடித்த, பிடிக்காதவற்றின் இயல்பு. இவற்றுக்கு இடம் அளித்தால், இந்த மகிழ்ச்சியும் துன்பமும் பற்றுக் கொள்ள த் தகுதியானவை என்று மனம் நினைப்பதாகக் கருதுகிறோம். அந்தப் பற்று மனத்தின் நடவடிக்கை, அந்த இன்பமும் துன்பமும் தான் உணர்ச்சி.

மனத்தையும் உணர்ச்சியையும் பிரித்து வைக்குமாறு புத்தர் கூறினார் என்று நாம் சொல்லும்போது உணர்ச்சிகளைத் தூக்கி எறியச் சொன்னார் என்று சொல்வதில்லை. அவர் மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியற்றதையும் தெரிந்து கொள்ளச் சொன்னார். நாம் ஆழ்ந்த மன ஒருமைப்பாட்டோடு இருக்கும் போது (சமாதி என்ற நிலை) அமைதி நம் மனத்தில் நிரம்பியுள்ளது. அப்போது மகிழ்ச்சி வந்தாலும் நம்மை அது அடைவதில்லை (பாதிப்பதில்லை), மகிழ்ச்சியற்றது வந்தாலும் நம்மை அடைவதில்லை. இது தான் மனத்தையும் உணர்ச்சியையும் பிரித்து வைத்திருப்பதென்பது. ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எண்ணெய்யும் தண்ணீரும் இருப்பதைப் போலத்தான் இது. அவை ஒன்றோடொன்று கலக்காது. அவற்றைக் கலக்க முயற்சித்தாலும் எண்ணெய் எண்ணெய்யாகத்தான் இருக்கும், தண்ணீர் தண்ணீராகத்தான் இருக்கும். ஏனென்றால் அவற்றின் அடர்த்தி வெவ்வேறு.

மனத்தின் இயற்கையான நிலை, மகிழ்ச்சியான நிலையும் இல்லை மகிழ்ச்சியற்ற நிலையும் இல்லை. மனத்துள் உணர்ச்சி நுழையும் போது தான் மகிழ்ச்சியும், மகிழ்ச்சியற்ற நிலைகளும் பிறக்கின்றன. நமக்கு மனக்கவனம் இருந்தால் இன்பமான உணர்ச்சி ஒரு இன்பமான உணர்ச்சி என்பதை அறிவோம். அந்த தெரிந்த மனம் அதை எடுத்துக் கொள்வதில்லை. மகிழ்ச்சி இருக்கிறது, ஆனால் அது மனதுக்கு அப்பால் இருக்கிறது, மனத்துள் பதிந்திருப்பதில்லை. இது மனத்திற்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.

மகிழ்வற்றதை மனத்திலிருந்து பிரித்து வைப்பதால், நாம் துக்கம் இல்லை, அதனை நாம் அனுபவிப்பதில்லை என்று பொருள் படுமா? ஆம், நாம் அதை அனுபவிக்கிறோம், ஆனால் நமக்கு மனம், மனம் என்பதும் தெரியும், உணர்ச்சி, உணர்ச்சி என்பதும் தெரியும். அந்த உணர்ச்சியோடு நாம் ஒட்டிக்கொள்வதில்லை, அதைத் தூக்கிக் கொண்டு செல்வதில்லை. புத்தர் தம் அறிவினால் இவற்றைப் பிரித்து வைத்தார். அவர் துக்கம் அனுபவித்தாரா? அவர் துக்க நிலையைத் தெரிந்திருந்தார், ஆனால் அதனோடு ஒட்டிக் கொள்ளவில்லை. அதனால் தான் அவர் துக்கத்தை அறுத்துவிட்டார் என்கிறோம். மகிழ்ச்சியான நிலை உண்டு, ஆனால் அதனைத் தெரிந்திருந்தார். அதை தெரிந்திருக்கவில்லையென்றால் அது விஷத்தைப் போல. அதைத் 'தான்' என்றோ ‘தன்னுடையது’ என்றோ நினைக்கவில்லை. மகிழ்ச்சி இருப்பது அறிவினால் தெரிந்திருந்தது, ஆனால் அவர் மனத்தில் அது இல்லை. அதனால் தான் நாம் அவர் மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியற்றதையும் மனத்திலிருந்து பிரித்தார் என்கிறோம்.

புத்தரும், ஞானம் பெற்ற மற்றவர்களும் தூய்மையைக் கெடுப்பனவற்றை (கிலேசங்களை) அழித்து விட்டார்கள் என்று சொல்லும் போது அவர்கள் அவற்றைக் கொன்றுவிட்டார்கள் என்று பொருள் கொள்ள வேண்டாம். கொன்றிருந்தால் நமக்குள் அந்த தூய்மையைக் கெடுப்பன இருக்காது! அவர்கள் தூய்மையைக் கெடுப்பனவற்றை அழிக்கவில்லை; அதன் உண்மையான இயல்பை அறிந்து கொண்டார்கள், அறிந்த பின் அவற்றை விட்டு விட்டார்கள். முட்டாள் அவற்றோடு பற்றுக் கொள்வான், ஆனால் ஞானம் பெற்றோர் அவர்கள் மனத்தில் அந்த தூய்மையைக் கெடுப்பன விஷம் என்று உணர்ந்ததால் அவற்றைப் பெருக்கித் தள்ளி விட்டனர். அவர்களுக்குத் துக்கம் விளைவிப்பன எல்லாவற்றையும் பெருக்கித் தள்ளிவிட்டனர், அவற்றை அழிக்கவில்லை. இதை அறியாத ஒருவன் சில விஷயங்களைக் கண்டு, உதாரணமாக மகிழ்ச்சியைக் கண்டு அவை நல்லதென்று அவற்றோடு பற்றுக் கொள்வான். ஆனால் புத்தர் அதனைத் தெரிந்திருந்தார் எனவே அதனை உதறித் தள்ளிவிட்டார்.

ஆனால் உணர்ச்சி உண்டாகும் போது நாம் அதனை விருப்பம் போலச் செயற்பட இடம் கொடுக்கின்றோம். அதாவது மனம் அந்த மகிழ்ச்சியான உணர்ச்சியையும், மகிழ்வற்ற உணர்ச்சியையும் சுமந்துக்கொண்டு செல்கிறது. உண்மையில் அவை இரண்டும் இரு விஷயங்கள். மனத்தின் நடவடிக்கைகள் - இன்பமான உணர்ச்சி, இன்பமற்ற உணர்ச்சி போன்றவை, அவை மனப் பதிவுகள், அவை தான் உலகம். மனம் இதை அறிந்திருந்தால் அது மகிழ்ச்சியிலும், மகிழ்ச்சியற்ற நிலையிலும் சமமான முறையில் நடந்து கொள்ளும். ஏன்? ஏனென்றால் மனத்திற்கு அவற்றைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது. இதை உணராத ஒருவன் அவ்விரண்டுக்கும் வெவ்வேறு மதிப்புத் தருகிறான். தெரிந்தவன் இரண்டுக்கும் ஒரே மதிப்புத் தருகிறான். மகிழ்ச்சியோடு ஒட்டிக் கொண்டால் அது பின் மகிழ்ச்சியற்ற நிலைக்குப் பிறப்பிடமாகும், ஏனென்றால் மகிழ்ச்சியான நிலை நிலையற்றது. அது எந்நேரமும் மாறிக் கொண்டே இருக்கும். மகிழ்ச்சி மறையும் பொது மகிழ்ச்சியற்ற நிலை தோன்றும்.

மகிழ்ச்சியான நிலையும், மகிழ்ச்சியற்ற நிலையும் திருப்தியற்றதென்பதால் புத்தர் இவ்விரண்டும் ஒரே மதிப்புடையவை என்பதைத் தெரிந்திருந்தார். மகிழ்ச்சி எழுந்த போது அதனோடு பற்றுக் கொள்ளவில்லை. அவருக்குச் சரியான பயிற்சி இருந்தது. இவ்விரண்டுக்கும் சமமான மதிப்பும், சமமான குறைபாடும் இருப்பதைத் தெரிந்திருந்தார். இவை இரண்டும் அறத்தின் விதிக்குள் அடங்குகின்றன, அவை நிலையற்றவை, அவை திருப்தியற்றவை. பிறந்தபின் அவை மறைகின்றன. இதை அறிந்த அவருக்குச் சரியான காட்சி தோன்றியது. சரியான முறையில் பயிற்சி செய்வது அவருக்குத் தெரிந்தது. மனத்தில் எந்த விதமான உணர்ச்சியோ எண்ணமோ தோன்றினாலும் அவருக்கு அவை மகிழ்ச்சியின், மகிழ்ச்சியற்றதின் தொடர்ந்த விளைவுகள் என்பதைத் தெரிந்திருந்தார். அதனால் அவற்றோடு அவர் பற்றுக் கொள்ளவில்லை.

புத்தர் புதிதாக ஞானம் பெற்ற சமயத்தில், மகிழ்ச்சிக்கும் துன்பத்துக்கும் விருப்பம் போல இடம் கொடுப்பது பற்றி ஒரு போதனை தந்தார். "துறவிகளே! மகிழ்ச்சிக்கு விருப்பம் போல இடம் கொடுப்பது தளர்வான வழி, துன்பத்துக்கு விருப்பம் போல இடம் கொடுப்பது இறுக்கமான வழி." இவை இரண்டும் ஞானம் பெறுவதற்கு முன் அவரது பயிற்சியின் போது அவருக்குப் பெரிதும் தொல்லை கொடுத்தன. ஏனென்றால் முதலில் அவர் இந்த மன நிலைகளைத் தனித்து விடவில்லை. அவர் உண்மையான இயல்புகளைத் தெரிந்த பின், அவற்றைப் பிரித்து ஒதுக்கி விட்டபின் அந்த முதல் போதனையைத் தர முடிந்தது.

எனவே நாம் தியானிப்பவர் ஒருவர் மகிழ்ச்சியின் வழியிலும், மகிழ்ச்சியற்றதன் வழியிலும் நடக்கக் கூடாது என்கிறோம். அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். துக்கத்தின் உண்மையை அறிந்தால், அதன் காரணத்தையும், அதன் முடிவையும் அதன் முடிவிற்குக் கொண்டு செல்லும் மார்க்கத்தையும் அறிவார். அந்தத் துக்கத்திடமிருந்து தப்பிக்கும் வழி தியானம் தான். எளிமையாகச் சொல்வதென்றால் நாம் மனக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மனக் கவனம் என்பது தெரிந்திருத்தல். அல்லது இந்நேரத்தில் விழிப்புடன் செயல்படுவது. இதோ இந்நேரத்தில் நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம்? நம்முடன் என்ன இருக்கிறது? இவ்வாறு நாம் அவதானிக்க வேண்டும், நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். இப்படிப் பயிற்சி செய்தால், மெய்யறிவு வளரும். எல்லா நேரங்களிலும், எல்லா உடல் நிலைகளிலும் சிந்தித்து விசாரனை செய்த வண்ணம் இருக்க வேண்டும். மனத்தில் ஒரு உணர்ச்சி பதிந்தால், அது நமக்குப் பிடித்ததாக இருந்தால் அதன் இயல்பை அறிந்து அதனோடு பற்றுக் கொள்ளக் கூடாது. அதற்குச் சாராம்சம் இருப்பதாக நினைக்கக் கூடாது. அது வெறும் மகிழ்ச்சியான உணர்ச்சி. அவ்வளவு தான். மகிழ்ச்சியற்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தால் அந்தத் துன்பத்துக்கு நாம் விருப்பம் போல இடம் கொடுத்துவிட்டது என்பதை அறியவேண்டும். அப்படி இடம் கொடுப்பது தியானிப்பவரின் வழி அல்ல.

இதைத்தான் மனத்தை உணர்ச்சியிடமிருந்து பிரித்தல் என்கிறோம். திறமையானவராக இருந்தால் நாம் பற்றுக்கொள்ள மாட்டோம். இருப்பதை இருந்தவாறு விட்டுவிடுவோம். இவ்வாறு நாம் அந்தத் 'தெரிந்தவன்' ஆகிறோம். மனமும் உணர்ச்சியும் எண்ணெயும் தண்ணீரும் போல; ஒரே பாத்திரத்தில் இருந்தாலும் அவை கலக்காது. நாம் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் உடல்வலியோடு இருந்தாலும், நமக்கு உணர்ச்சி உணர்ச்சியென்று தெரியும், மனத்தை மனம் என்று தெரியும். துன்பமான மற்றும் இன்பமான நிலைகளைப் பற்றித் தெரியும். ஆனால் அவற்றை 'நமது' என்று எண்ணுவதில்லை. அமைதியோடு மட்டுமே இருக்கின்றோம்: இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் உள்ள அமைதி.

நீங்கள் இவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். நிரந்தர ஆத்மா இல்லாததால் அடைக்கலம் ஏதும் இல்லை. எனவே இவ்வாறு வாழவேண்டும், அதாவது மகிழ்ச்சியும் இல்லாமல் மகிழ்வற்ற நிலையும் இல்லாமல் வாழவேண்டும். தெரிந்திருக்கும் நிலையோடு மட்டுமே இருக்க வேண்டும். எதையும் சுமந்து கொண்டு இருக்க வேண்டாம்.

நாம் ஞானம் பெறாதவரை இதெல்லாம் விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமது நோக்கத்தை இந்தத் திசையில் திருப்ப வேண்டும். மனம் மனம் தான். அது மகிழ்ச்சியையும் மகிழ்ச்சியற்றதையும் சந்திக்கிறது. மகிழ்ச்சியான நிலையையும் மகிழ்ச்சியற்ற நிலையையும் தெரிந்திருக்கிறது. அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. மனமும் அந்த நிலைகளும் பிரிந்தே இருக்கின்றன, கலப்பதில்லை. எல்லாம் கலந்துவிட்டால் அவற்றைத் தெரிவதில்லை. இது ஒரு வீட்டில் வாழ்வது போல. அந்த வீடும் அதில் வாழ்பவருக்கும் உறவு இருக்கிறது, ஆனாலும் வேறுபட்டுள்ளவை. வீட்டுக்கு ஆபத்து வந்தால் நாம் பாதிக்கப் படுகிறோம், ஏனென்றால் அதை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் வீடு தீப்பிடித்துக் கொண்டால் அதை விட்டு விலகி வெளியே செல்ல வேண்டும். துன்பமான உணர்ச்சி உருவானால் அந்தத் துன்ப உணர்ச்சியை விட்டு, அந்த வீட்டை விட்டு விலகுவதைப்போல விலக வேண்டும். வீடு முழுவதும் தீப்பிடித்திருந்தால் நாம் அதை விட்டு ஓடுவோம் அல்லவா? அவை வெவ்வேறு; வீடு வேறு அதில் குடியிருப்பவர் வேறு.

நாம் இவ்வாறு மனத்தையும், உணர்ச்சியையும் பிரிக்க வேண்டும் என்கிறோம். ஆனால் உண்மையில் அவை இயற்கையாகவே பிரிந்திருக்கின்றன. நாம் தியானித்து அறிவது இந்த இயற்கையான பிரிவைத்தான். எதார்த்தத்தோடு ஒத்துக்கொள்கிறோம். நாம் அவை இரண்டும் கலந்திருக்கின்றன என்று சொல்வதற்குக் காரணம் உண்மையை அறியாமல் அந்த உணர்ச்சிகளோடு பற்றுக் கொண்டிருப்பதால் தான்.

எனவே புத்தர் நம்மைத் தியானம் செய்யச் சொன்னார். இந்த தியானப் பயிற்சி என்பது மிகவும் முக்கியம். அறிவோடு மட்டுமே தெரிந்திருப்பது போதாது. அமைதியான மனத்தோடு பயிற்சி செய்வதால் எழும் மெய்யறிவும், படித்து மட்டுமே தெரியவரும் அறிவும் வெகு தூரத்தில் இருக்கின்றன. படிப்பதால் மட்டும் வரும் அறிவு நம் மனத்தை அறியும் உண்மையான அறிவு அல்ல. மனம் இந்த அறிவைப் பிடித்து வைக்கப் பார்க்கிறது. நாம் ஏன் அவற்றை வைத்துக்கொள்ளப் பார்க்கிறோம்? அதைத் தொலைத்து விடத்தான்! தொலைத்த பின் நாம் அழுகிறோம்.

நமக்கு உண்மையில் தெரிந்திருந்தால் அங்கு பற்றில்லாமல் இருக்கலாம், இருப்பதை இருந்தவாறு இருக்க விடலாம். நிலைமைகளை அறிவதால் நாம் நம்மையே மறப்பதில்லை. நாம் நோய்வாய்பட்டிருப்போமானால் அதில் தொலைந்து போய் (நொந்துபோய்) விடுவதில்லை. சில மக்கள் நினைக்கிண்றனர், "இந்த வருடம் நான் தொடர்ந்து நோய்வாய்பட்டிருந்தேன், எனக்குத் தியானம் செய்ய முடியவில்லை." இது ஒரு முட்டாளின் பேச்சு. யாரொருவர் நோய்வாய்ப் பட்டிருக்கின்றாரோ, யார் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றாரோ அவர் தான்,பயிற்சியில் கடுமையாக ஈடுபட வேண்டும். ஒருவர் தனக்குத் தியானம் செய்ய நேரம் இல்லை என்று சொல்லலாம். அவருக்குக் காய்ச்சல், அவர் துக்கம் அனுபவிக்கிறார், அவர் உடலை அவரால் நம்பியிருக்க முடியவில்லை, எனவே அவர் தியானம் செய்ய முடியாதென்று நினைக்கின்றார். இவ்வாறு நினைத்தால் எல்லாமே கஷ்டமாகத் தோன்றும். புத்தர் இவ்வாறு கற்பிக்கவில்லை. அவர் இதோ! இந்த இடம் தியானிக்கும் இடம் என்றார். நாம் நோய்வாய்பட்டிருக்கும் போது அல்லது மரணத்தின் அருகில் இருக்கும் போதுதான் உண்மையைக் காண்பதற்கு நல்ல வாய்ப்பு.

வேறு சிலர் தாங்கள் தொழிலில் மிகவும் மூழ்கியிருப்பதால் தியானம் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கின்றனர். சில சமயம் பள்ளி ஆசிரியர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். தங்களுக்குப் பல பொறுப்புகள் இருப்பதால் தியானம் செய்யவே நேரம் இல்லை என்பார்கள். நான் அவர்களைக் கேட்பேன்: "நீங்கள் கற்பித்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு மூச்சு விட நேரம் இருந்ததா? அவர்களும் "ஆம் இருந்தது." என்பார்கள். "வேலையின் காரணமாகப் பொறுப்புகளும் குழப்பமும் இருந்தும் உங்களுக்கு மூச்சு விட எப்படி நேரம் கிடைத்தது? இங்கு நீங்கள் அறத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளீர்கள்."

சொல்லப் போனால் இந்தப் பயிற்சி மனத்தைப் பற்றியும் அதன் உணர்ச்சிகளைப் பற்றியும் தான். அதைத் தொடர்ந்து ஓடவோ தடுமாறவோ வேண்டியதில்லை. வேலை செய்யும் போது மூச்சு தொடர்கிறது. இயற்கை, இயற்கையான செயல்களைக் கவனித்துக் கொள்கிறது -நாம் தெரிந்திருந்த நிலையில் கவனமாக இருந்தால் போதும். முயற்சி செய்து கொண்டே இருங்கள், அகம் நோக்கித் தெளிவாகப் பாருங்கள். தியானம் இது போன்றது தான்.

இந்நேரத்தில் விழிப்புடன் செயல்பட்டால் நாம் எந்த வேலை செய்தாலும் அது நமக்கு நல்லது எது, தீயது எது என்பதைத் தொடர்ந்து காட்டும் கருவியாகி விடும். நமக்குத் தியானம் செய்ய நேரம் நிறைய இருக்கிறது. நாம் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவு தான். தூங்கும் போது மூச்சு விடுகிறோம், உண்ணும் போதும் மூச்சு விடுகிறோம், அல்லவா? பின் ஏன் தியானம் செய்ய நேரம் இருப்பதில்லை? எங்கு இருந்தாலும் நாம் மூச்சு விடுகிறோம். இவ்வாறு எண்ணினோமென்றால் நமது வாழ்க்கைக்கும் நமது மூச்சைப் போல ஒரு முக்கியத்துவம் கிடைக்கிறது, நாம் எங்கு இருந்தாலும் நமக்குத் தியானம் செய்ய நேரம் கிடைக்கிறது.

விதவிதமான எண்ணங்களும் மன நிலைமைகள் தான், உடல் நிலைமைகள் அல்ல. எனவே இந்நேரத்தில் விழிப்புடன் செயல்பட்டால் நாம் நல்லதையும் கெட்டதையும் எந்நேரத்திலும் தெரிந்திருப்போம். நிற்கும் போதும், நடக்கும் போதும், உட்காரும் போதும், படுத்திருக்கும் போதும் நேரம் நிறைய இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துவ தென்பதைத்தான் நாம் தெரிந்து கொள்ளவில்லை. தயவு செய்து இதைப் பிரதிபலித்துப் பாருங்கள்.

நாம் உணர்ச்சிகளிடமிருந்து ஓட முடியாது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சி, உணர்ச்சி தான். மகிழ்ச்சி, மகிழ்ச்சி தான். துக்கம், துக்கம் தான். அவை வேறு ஏதும் இல்லை. அதனால் ஏன் அதனோடு பற்றுக் கொள்ள வேண்டும்? மனம் திறமை சாலியாக இருந்தால் மனத்தையும் உணர்ச்சியையும் பிரித்து வைத்திருக்க இதைக் கேட்டாலே போதும்.

இது போலத் தொடர்ந்து விசாரணை செய்தால் மனம் விடுதலை பெறும். ஆனால் அறியாமையினால் கிடைத்த விடுதலை இல்லை. மனம் பற்றை விடுகிறது, ஆனால் அதற்குத் தெரியும். இருப்பது இருந்தவாறு இருக்கக்கூடாதென்ற எண்ணத்தினாலோ, மடத்தன்மையான எண்ணத்தினாலோ பற்றை விடக் காரணமில்லை. மனம் வாய்மையின் படி தெரிந்திருப்பதால் பற்றை விடுகிறது. இது தான் இயற்கையைப் பார்ப்பதென்பது. நம்மைச் சுற்றி இருக்கும் எதார்த்தத்தை அறிவது.

இதைத் தெரிந்திருந்தால் நாம் மனத்தோடு திறமையாக உள்ளோம், மனத்தில் ஏற்படும் பதிவுகளுடன் திறமையாக உள்ளோம். நாம் மனதில் பதிபவைகளோடு திறமையாக இருந்தால் நாம் உலகோடு திறமையாக இருப்போம். இது தான் 'உலகைத் தெரிந்திருப்பவர்' என்பது. புத்தர் துயரங்கள் மிக்க உலகைத் தெளிவாகத் தெரிந்திருந்தார். தொந்தரவு தருபவையும் தொந்தரவு தராதவையும் இங்கேயே இருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தார். இந்த உலகம் குழப்பமானது. என்றாலும் புத்தர் உலகை எப்படித் தெரிந்து கொண்டார்? இங்கு புத்தர் கற்றுத் தந்த தம்மம் நாம் அறியமுடியாததொன்று அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்த உடல் நிலையிலும் அந்நேரத்தில் விழிப்புடன் செயல்பட்டு, நம்மை நாமே தெரிந்த நிலையில் இருக்க வேண்டும் - உட்கார்ந்து தியானம் செய்யும் நேரம் வரும்போதும் அதைச் செய்வோம்.

நாம் தியானம் செய்வது அமைதியை நிலைநாட்டவும் மனத்தின் வலிமையை வளர்க்கவும் தான். எதோ விசேடமான ஒன்றோடு விளையாடுவதற்காகத் தியானம் செய்வதில்லை. விபஸ்ஸனா (உள்ளதை உள்ளபடி பார்த்தல்) தியானம் சமாதி (ஆழ்ந்த மன ஒருமைப்பாடு) நிலையில் இருப்பது தான். சில சமயம் இப்படிச் சொல்வதைக் கேட்கலாம், "இப்போது நாம் சாமாதி தியானம் செய்யப் போகிறோம். அதன் பின் விபஸ்ஸனா தியானம் செய்வோம்", என்று. தியானத்தை இவ்வாறு பிரிக்க வேண்டாம்! அமைதிதான் மெய்யறிவு எழச் செய்வதற்கு ஆதாரம். மெய்யறிவு தான் அமைதியை நிலைநாட்டுவதினால் கிடைக்கும் விளைவு. இப்போது அமைதி தியானம் செய்வோம், பின் விபஸ்ஸனா தியானம் செய்வோம் என்று சொல்வது சரியில்லை! பேச்சில் மட்டுமே அப்படிப் பிரித்துப் பேசலாம். ஒரு கத்தியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு விளிம்பு கூர்மையாகவும் மறு விளிம்பு மழுங்கியதாகவும் இருக்கும். அதைப் பிரிக்க முடியாது. ஒரு ஓரத்தை எடுத்தால் இரு விளிம்பையும் எடுப்பதற்குச் சமம். இவ்வாறு அமைதி மெய்யறிவை வளர்க்கும்.

அறத்தின் அன்னையும் பிதாவும் ஒழுக்கம் தான். தொடக்கத்தில் நல்லொழுக்கம் வேண்டும். நல்லொழுக்கம் தான் அமைதி. அப்படியென்றால் பேச்சிலும் உடல் செய்கையிலும் தவறாக ஏதும் செய்தல் கூடாது. தவறாக ஏதும் செய்யாத போது நம் மனத்தில் கிளர்ச்சி ஏற்படுவதில்லை; கிளரப்படாத மனத்தில் அமைதியும் தெளிவும் எழும்.

எனவே மேன்மையானோர் ஒழுக்கம், மன ஒருமுகப்படுத்தல் மற்றும் மெய்யறிவு ஆகியவை கொண்ட பாதையில் நடந்து தான் ஞானம் பெற்றனர் என்கிறோம். இவை எல்லாம் ஒன்று தான். ஒழுக்கம் தான் ஒரு முகப்படுத்தல், ஒருமுகப்படுத்தல் தான் ஒழுக்கம். மெய்யறிவு தான் ஒரு முகப்படுத்தல், ஒருமுகப்படுத்தல் தான் மெய்யறிவு. இது ஒரு மாங்காயைப் போல. அது பூவாக இருந்த போது அதைப் பூ என்கிறோம். பழமானதும் அதை மாம்பழம் என்கிறோம். பழுத்த பின் அதை பழுத்த மாம்பழம் என்கிறோம். இவை எல்லாம் ஒரே மாங்காய் தான், ஆனால் மாறிக்கொண்டே இருக்கின்றது. அந்த பெரிய மாம்பழம் சிறிய மாங்காயிலிருந்து வளர்ந்தது. சிரு காய் பெரும் பழம் ஆனது. அவற்றை வேவ்வேறு பழங்கள் எனலாம் அல்லது அவை அனைத்தும் ஒன்றே என்றும் சொல்லலாம். ஒழுக்கம், மன ஒருமுகபடுத்தல் மற்றும் மெய்யறிவு ஆகியவையும் இது போல ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முடிவில் இவை எல்லாம் ஞானத்துக்கு எடுத்துச்செல்லும் பாதைகள் தான்.

மாங்காய் அது முதலில் பூவாகத் தோன்றி, பின் வளர்ந்து பழமாகிறது. இதைத் தெரிந்து கொண்டால் போதும். மற்றவர் எப்படிச் சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பிறந்தவுடன் முதுமைக்கு வளர்கிறது. அதன் பின் என்ன? இதை நாம் பிரதிபலிக்க வேண்டும்.

சிலர் வயதாகக் கூடாது என்று நினைக்கின்றனர். வயதாக வயதாக ஊக்கமற்று விடுகின்றனர். இவர்கள் பழுத்த மாம்பழத்தை உண்ணக்கூடாது! மாங்காய் ஏன் பழுத்திருக்க வேண்டும்? அது உரிய நேரத்தில் பழுக்கவில்லையென்றால் செயற்கையாக பழுக்க வைக்கப் பார்க்கிறோம் இல்லையா? ஆனால் நாம் வயதான பின் விசனப் படுகிறோமே. சிலர் அழுகின்றனர், அவர்களுக்கு வயோதிகத்தையும் மரணத்தையும் அணுகப் பயம். இப்படி நினைப்பார்களென்றால் பழுத்த மாம்பழம் உண்ணக்கூடாது. பூவாக இருக்கும் போதே சாப்பிடட்டும்! இதைத் தெரிந்து கொண்டால் நாம் அறத்தைக் காண்கிறோம். எல்லாம் தெளிவாகிறது. நாம் அமைதியைக் காண்கிறோம். இப்படிப் பயிற்சி செய்யத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று உயர் அரசாங்க அதிகாரியும் அவருடன் வந்திருப்பவர்களும் அறத்தைக் கேட்க வந்திருக்கின்றனர். நான் சொன்னதை மனத்தில் வைத்துக் கொண்டு அதைப் பிரதிபலிக்க வேண்டும். எதாவது சரியெனப் படவில்லையென்றால் மன்னிக்கவும். ஆனால் சரியா, தவறா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சரியாகப் பயிற்சி செய்து நீங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டும். தவறாகப் பட்டதை எறிந்துவிடுங்கள். சரியாகப் பட்டதை எடுத்துக் கொண்டு பயன்படுத்துங்கள். உண்மையில் நாம் பயிற்சி செய்வது சரியானவற்றையும் தவறானவற்றையும் இரண்டையும் விடுவதற்குத்தான் (அவற்றின் மீது உள்ள பற்றை). இறுதியில் அனைத்தையும் எறிந்துவிட வேண்டும். சரியானதையும் எறியுங்கள்; தவறனதா, அதையும் எறியுங்கள். பொதுவாகச் சரியானவற்றைச் சரியானதென்று பிடித்துக் கொண்டு விடுகிறோம்.. தவறானவற்றைத் தவறானது என்று பிடித்துக் கொண்டுவிடுகிறோம். பின் வாக்குவாதங்கள் தான் தொடர்கின்றன. ஆனால் அறம் உள்ள இடத்தில் ஒன்றும் இல்லை - ஒன்றுமே இல்லை.

* * * * * *

குறிப்பு:

...1

தாய்லாந்து நாட்டின் உயர் அரச அதிகாரி திரு சன்யா தர்மசக்தி 1978 ஆம் ஆண்டு 'வாட் நோங் பா போங்' விகாரைக்கு வருகை தந்திருந்த போது அஜான் சா தந்த போதனையின் சுருக்கம்.

... 2

உணர்ச்சி என்பது பாலி மொழி வார்த்தையான 'வேதனா' என்பதன் மொழிபெயர்ப்பு. அஜான் சா இவ்விடத்தில் அதை மனத்தில் தோன்றும் இன்ப, துக்க நிலைகள் எனக் குறிக்கின்றார்.

* * * * * *

© Copyright

Provenance: ©1991 The Sangha. Third impression, 1991. Transcribed from the print edition in 1994 by W.D. Savage & Jane Yudelman under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.

Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.

"A Taste of Freedom", by Ajahn Chah. Access to Insight, 7 June 2010, http://www.accesstoinsight.org/lib/thai/chah/atasteof.html . Retrieved July 2013

பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.

தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada

பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode

http://bautham.net/