"துச்சோ பொதிலா" - போற்றுதற்குரிய காலி-நூல்
அஜான் சா
"Tuccho Pothila" — Venerable Empty-Scripture
A Dhamma talk by Ajahn Chah
(அஜான் சாவின் குடிசைக்கு வெளியே கூடியிருந்த இல்லற மக்களுக்கு 1978ஆம் ஆண்டு அந்தி நேரத்தில் தற்செயலாகத் தரப்பட்ட போதனை.)
இரண்டு வழிகளில் பௌத்தத்தை ஆதரிக்கலாம். ஒன்று 'அமிசபூஜா" என்றழைக்கப்படும் வழி. அதாவது பொருள் உதவி செய்து ஆதரிப்பது. இது தான் துறவிகளின் நான்கு தேவைகளான உணவு, துணி, இருப்பிடம் மற்றும் மருந்து ஆகியவற்றை நிறைவு செய்வது. ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் கொண்ட சங்கத்திற்குப் பொருள் உதவி தந்து ஆதரிப்பது என்பது இதுதான். அவர்கள் அறத்தைப் பயிலும்போது ஓரளவு நிம்மதியாக வாழ இது வழி செய்கிறது. இதனால் புத்தரின் போதனைகளை நேரடியாக உணர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. ஆகவே பௌத்தமதமும் தொடர்ந்து செழித்தோங்குகிறது.
பௌத்தத்தை ஒரு மரத்தோடு ஒப்பிடலாம். மரத்திற்கு வேர்களும், தண்டும், கிளைகளும், சிறு கிளைகளும், இலைகளும் உள்ளன. தண்டு உட்படக் கிளைகளும், இலைகளும் மண்ணிலுள்ள தேவையான சத்துக்களை வேர் கிரகித்துத் தங்களுக்குக் கொண்டு வரும் என்று நம்பி இருக்கின்றன. மரம் வேரை நம்பி இருப்பது போலவே, நமது நடத்தையும் பேச்சும் "கிளைகளையும்”, “இலைகளையும்" போல மனத்தை நம்பி இருக்கின்றன. மனமே ஆகாரங்களை எடுத்து வந்து "தண்டிற்கும்", "கிளைகளுக்கும்", "இலைகளுக்கும்" தருகிறது. இதன் பலன் நமது பேச்சிலும் நடத்தையிலும் பிரதிபலிக்கின்றன. மனம் எந்த நிலையிலிருந்தாலும், அது திறனுள்ளதாக இருந்தாலும், திறனற்றதாக இருந்தாலும் அந்த இயல்பு வெளிப்படையாக நமது நடத்தையிலும், பேச்சிலும் காணப்படுகிறது.
ஆகவே அன்றாட வாழ்க்கையில் நமது நடத்தையின் மூலமாகப் பௌத்தத்தை ஆதரிப்பதே மிகவும் முக்கியமான ஆதரவாகும். உதாரணமாக உபோசதா நாட்களில் (அறப் பயிற்சியினை ஊக்கத்துடன் புதுப்பிக்கக் குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப் படுகின்றன. அவையே நன்னிலை நாட்கள் அல்லது உபோசதா நாட்கள் எனப்படும்) சீலங்களைத் துறவியிடம் பெற்றுக் கொள்ளும் போது அவர் திறனற்ற செயல்களைத் தவிர்க்குமாறு கூறுவார். ஆனால் அவர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு அதனைப் பிரதிபலிக்கவில்லையென்றால், நாம் முன்னேறுவது கடினம். உண்மையான பயிற்சியை நீங்கள் கண்டு பிடிக்க மாட்டீர்கள். ஆகவே பௌத்தத்தை உண்மையாக ஆதரிப்ப தென்றால் "பதிபதிபூஜை" மூலமாக, அதாவது பயிற்சி செய்வதனால், கட்டுப்பாடு, ஒருக்கம் மற்றும் மெய்யறிவை வளர்ப்பதனால் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்குப் பௌத்தம் என்ன வென்று தெரியவரும். பயிற்சியின் மூலம் அதை விளங்கிக் கொள்ளாதவரை நீங்கள் திரிபிடகம் முழுவதையும் படித்தாலும் உங்களுக்குப் பௌத்தம் என்னவென்று தெரியாது.
புத்தரின் காலத்தில் துச்சோ பொதிலா என்ற ஒரு துறவி இருந்தார். துச்சோ பொதிலா மிகவும் ஆழமாகக் கற்றறிந்தவர். சவுகத நூட்களையும், மத நூல்களையும் நுட்பமாக ஆய்ந்த மேதை. அனைத்து மக்களாலும் போற்றிப் பாராட்டப் பட்ட அவர், பதினெட்டு விகாரைகளை நடத்தி வந்தார். மக்கள் "துச்சோ பொதிலா" என்ற பெயரைக் கேட்டாலே மரியாதை கலந்த அச்சத்தால் நிலைகுலைந்து விடுவார்களாம். போதனைகளை நன்கு அறிந்ததிருந்த அவர் அறத்தைக் கற்பித்தபின் அவரிடம் கேள்வி கேட்கக் கூட யாரும் தயங்குவார்களாம். அந்த அளவு அவர் மீது அவர்களுக்கு மரியாதை இருந்தது. புத்தரின் மிகவும் படித்த சீடர்களுள் துச்சோ பொதிலாவும் ஒருவர்.
ஒரு நாள் அவர் புத்தருக்கு மரியாதை செலுத்த அவரைச் சந்திக்க வந்தார். மரியாதை செலுத்துகையில் புத்தர் அவரை பார்த்து "ஓ, வாருங்கள், போற்றுதற்குரிய காலி-நூல் அவர்களே!" வெளிப்படையாக இப்படியே சொல்லிவிட்டார்! சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து பின் அவர் புறப்படும் நேரம் வந்த போதும் புத்தர் அவரைப் பார்த்து, "ஓ, புறப்படுகின்றீர்களா, போற்றுதற்குரிய காலி-நூல் அவர்களே?" என்றார்.
இவ்வளவு தான் புத்தர் சொன்னார். வந்தவுடன், "ஒ, வாருங்கள் போற்றுதற்குரிய காலி நூல் அவர்களே!" புறப்படும் நேரம் வந்த போதும், "ஓ, புறப்படுகின்றீர்களா, போற்றுதற்குரிய காலி நூல் அவர்களே?" புத்தர் மேலும் அதைப் பற்றி விளக்கம் ஏதும் தரவில்லை. அன்று அவர் கற்பித்தது அவ்வளவு தான். துச்சோ பொதிலாவுக்கு, அந்தப் புகழ் பெற்ற ஆசிரியருக்குக் குழப்பமாக இருந்தது, "புத்தர் ஏன் அப்படிக் கூறினார்? அவர் சொன்னதில் என்ன பொருள் அடங்கியிருக்கிறது? அதைப் பற்றி எண்ணி எண்ணிப் பார்த்தார். அவர் கற்றவற்றை யெல்லாம் மனக்கண்முன் கொண்டு வந்து புரட்டிப் புரட்டிப் பார்த்தார். இறுதியில் அவருக்கு விளங்கிற்று! "ஆம்.. உண்மைதான்! "போற்றுதற்குரிய காலி-நூல்" - பயிற்சி செய்யாமல் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் துறவி." அதைப் புரிந்து கொண்டு தன் உள்ளத்தைக் கவனித்த போது இல்லற மக்களைவிடத் தான் வேறுபட்டவர் இல்லை என்பது விளங்கிற்று. அவர்கள் நோக்கம் தான் தனது நோக்கமாகவும் இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியுற்றதில் தானும் மகிழ்ச்சியுற்றார். தனக்குள் உண்மையான சமணர் [14] இல்லை. மேன்மையான வழியில் உறுதியாக நிலைநாட்டி அமைதி காணத் தக்க எந்த ஒரு இயல்பும் தன்னிடம் இல்லை.
எனவே அவர் பயிற்சி எடுக்க முடிவு செய்தார். ஆனால் அவர் எங்கும் போக முடியவில்லை. அவரைச் சுற்றி இருந்தவர்களெல்லாம் அவரின் மாணவர்களே. எனவே அவரைத் தங்களது மாணவராக ஏற்றுக்கொள்ளும் துணிவு எவருக்கும் ஏற்படவில்லை. பொதுவாக மக்கள் தங்கள் ஆசிரியரைச் சந்திக்கும் போது கூச்சம் கொண்டு அதிவிநயம் (மிகவும் மரியாதை காட்டுவது) கொள்வர். ஆகையால் அவரது மாணவர்கள் யாருக்கும் அவரது ஆசிரியராகத் தைரியம் எழவில்லை.
இறுதியில் அவர் ஞானம் பெற்ற ஒரு இளம் துறவியைச் சந்தித்துத் தான் அவரிடம் பயிற்சி எடுக்க விரும்புவதாகக் கூறினார். அந்த இளம் துறவி, "சரி, நீங்கள் என்னிடம் பயிற்சி செய்யலாம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் நேர்மையானவராக இருக்க வேண்டும். நீங்கள் நேர்மையற்றவராக இருந்தால் நான் உங்களை மாணவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்." துச்சோ பொதிலா நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அந்த இளம் துறவியின் மாணவராக இருப்பதற்கு உறுதி எடுத்துக் கொண்டார்.
அந்த இளம் துறவி அவரைத் துறவற ஆடைகள் அனைத்தையும் அணியச் சொன்னார். அருகில் ஒரு சேறு நிறைந்த சதுப்பு நிலம் இருந்தது. துச்சோ பொதிலா அவருடைய மிகவும் விளையுயர்ந்த ஆடைகளையெல்லாம் அழகாக உடுத்தபின் அந்த இளம் துறவி சொன்னார், "சரி, இப்போது அந்தச் சேற்று நிலத்தில் ஓடுங்கள். நான் நிற்கச் சொல்லவில்லையென்றால், நிற்க வேண்டாம். நான் வெளியே வரச் சொல்லவில்லையென்றால், வெளியே வர வேண்டாம். சரியா? ஓடுங்கள்!"
அழகான ஆடைகளை அணிந்திருந்த துச்சோ பொதிலா சேற்றில் குதித்தார். இளம் துறவி அவர் முழுவதும் சேற்றில் நனையும் வரை நிறுத்தச் சொல்லவில்லை. இறுதியாக அவர், "இப்போது நிறுத்தலாம்," என்றார். எனவே அவர் ஓடுவதை நிறுத்தினார். "சரி, இப்போது வெளியே வரலாம்!" என்றார். எனவே துச்சோ பொதிலா வெளியே வந்தார்.
துச்சோ பொதிலா தனது அகம்பாவத்தை விட்டு விட்டார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. அவர் போதனைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டார். தயாராக இல்லை என்றால் புகழ் பெற்ற ஆசிரியரான அவர் சேற்றுக்குள் ஓட முற்பட்டிருக்கமாட்டார். ஆனால் அவர் அதைச் செய்தார். இதைப் பார்த்த அந்த இளம் துறவி துச்சோ பொதிலா நேர்மையாகப் பயிற்சி செய்வதற்குத் தயாராக இருப்பதை உணர்ந்தார்.
துச்சோ பொதிலா சேற்றிலிருந்து வெளியேறிய பின், இளம் துறவி அவருக்குப் போதித்தார். புலன் பொருட்களைக் கவனிக்கச் சொன்னார். மனத்தை தெரிந்து கொள்ளச் சொன்னார். கரையான் புற்றில் ஒளிந்திருக்கும் பல்லியைப் பிடிக்க முயன்ற மனிதனின் உவமானத்தைத் தந்தார். புற்றில் ஆறு துவாரங்கள் உள்ளன. பல்லியை எப்படிப் பிடிப்பது? ஐந்து துவாரங்களை மூடியபின், ஒன்று மட்டுமே திறந்திருக்கும். பின் அந்த ஒன்றை மட்டும் கவனித்துக் காத்துக் கொண்டிருந்தால் போதும். அதன் வழியே பல்லி வெளியே ஓடி வரும்போது அதைப் பிடித்துவிடலாம்.
மனத்தைக் கவனிப்பது இது போலத்தான். கண்களை, காதுகளை, மூக்கை, நாக்கை, உடலை மூடிவிட்டு மனத்தை மட்டுமே திறந்து விட வேண்டும். "புலன்களை மூடிவிடுவதென்றால் அவற்றை அடக்கி அமைதிப் படுத்துவதாகும். மனத்தை மட்டுமே கவனிக்க வேண்டும். தியானம் அந்தப் பல்லியைப் பிடிப்பது போல. 'சதி'யுடன் (மனக் கவனத்துடன்) மூச்சைக் கவனிக்கின்றோம். சதி தான் அந்த நினைவுபடுத்தும் இயல்பு. நம்மையே கேட்டுக்கொள்வது, "நான் என்ன செய்கிறேன்?" 'சம்பஜஞ்ஞா' என்பது "இப்போது நான் இதைச் செய்கிறேன்", என்பதைத் தெரிந்திருப்பது. உள் மூச்சையும் வெளி மூச்சையும் சதியுடனும், சம்பஜஞ்ஞா உடனும் கவனிக்க வேண்டும்.
இந்த நினைவுபடுத்தும் இயல்பு பயிற்சியிலிருந்து தோன்றுகிறது. புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் தோன்றுவதில்லை. மனத்தில் எழும் உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். மனம் நீண்ட நேரம் செயல் படாமல் இருந்த பின் ஒரு உணர்ச்சி தோன்றலாம். சதி இந்த உணர்ச்சி களோடு இணைந்து வேலை செய்கிறது. அவற்றை நினைவு படுத்துகிறது. "நான் பேசப் போகிறேன்," "நான் செல்வேன்," "நான் உட்காருவேன்" போன்று நினைவுபடுத்துவதே சதி என்பது; "நான் இப்போது நடக்கிறேன்," "நான் படுத்திருக்கிறேன்," "நான் இப்போது இந்த மனோ பாவத்துடன் இருக்கிறேன்," என்று தெரிந்திருப்பது சம்பஜஞ்ஞா. 'சதி' மற்றும் 'சம்பஜஞ்ஞா' இரண்டோடும் இந்தக் கணத்தில் நமது மனத்தைத் தெரிந்து கொள்ளலாம். மனம் புலன் பதிவுகளின் பாதிப்பினால் எவ்வாறு செயற்படும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
புலன் பொருட்களைத் தெரிந்திருப்பது தான் "மனம்" எனப்படுகிறது. புலன் பொருட்கள் மனத்தினுள் "அலைந்து கொண்டு" இருக்கின்றன. உதாரணமாக இந்த மின்சார இழைப்புளியி லிருந்து வரும் சப்தத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தச் சப்தம் காதினுள் நுழைந்து மனதை நோக்கிப் பயணிக்கிறது. மனம் அதை ஒரு மின்சார இழைப்புளியிலிருந்து வரும் சப்தம் என்று ஏற்றுக் கொள்கிறது. அந்தச் சப்தத்தை எது ஏற்றுக் கொண்டதோ அதைத்தான் "மனம்" என்கிறோம்.
இந்தச் சப்தத்தை ஏற்றுக் கொண்ட மனம் இன்னமும் அடிப்படையானது தான். அது சாதாரண மனம். இந்த ஏற்றுக் கொண்ட ஒன்றினுள் தொந்தரவு எழலாம். இந்த "ஏற்றுக் கொண்டவனுக்கு" மேலும் பயிற்சி அளித்து அதனை உண்மைக்கு நிகராகத் "தெரிந்து கொண்டவனாக" மாற்றலாம் - இதுவே புத்தோ எனப்படும். உண்மைக்கு நிகராக நாம் தெளிவாகப் பார்க்கவில்லையென்றால் மனிதர்களின், வாகனங்களின், மின்சார இழைப்புளி போன்றவற்றின் சப்தங்களெல்லாம் நம்மைத் துன்புறுத்தலாம். இப்படிப்பட்ட மனம் சாதாரண, பயிற்சி அளிக்கப்படாத மனம். அது ஒரு சப்தத்தைக் கேட்டுச் சினத்துடன் ஏற்றுக் கொள்கிறது. அது தனது விருப்பத்துக் கேற்றார்ப் போலத் தெரிந்திருக்கிறதே ஒழிய, உண்மைக்கு ஏற்றார்போல அல்ல. அதை மேலும் பயில்வித்து அறிவாற்றலோடும், உள்பார்வையோடும் தெரிந்து கொள்ள வைக்க வேண்டும். 'ஞானதஸ்ஸனா' [15] நுட்பமான மனத்தின் சக்தி இருக்குமானால் சப்தத்தைச் சப்தம் என்று மட்டுமே தெரிந்து கொள்வோம். சப்தத்தோடு பற்றுக் கொள்ளாவிட்டால் அங்கு துன்பம் இல்லை. சப்தம் எழுகிறது. நாம் அதைத் தெரிந்திருக்கிறோம். இது தான் புலன் பொருட்களின் தோற்றத்தை உண்மையாகவே தெரிந்திருப்பது என்பது. சப்தத்தைச் சப்தம் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டால், அதாவது 'புத்தோ' என்பதை வளர்த்துக் கொண்டால், அது நம்மைத் துன்புறுத்துவதில்லை. சப்தம் காரணங்களால் தோன்றுகிறது. அது ஒரு உயிரினம் இல்லை. தனிநபர் இல்லை. நான் இல்லை. "நமதோ", "அவர்களோ" இல்லை. அது வெறும் சப்தமே. மனம் அதை விட்டு விடுகிறது.
இந்தத் தெரிந்திருப்பது தான் புத்தோ என்பது. அதாவது ஊடுருவிக் காணக்கூடிய தெளிவான அறிவு. இந்த அறிவுடன் அந்தச் சப்தத்தைச் சப்தம் என்பதோடு விட்டுவிடலாம். "அந்தச் சப்தத்தை நான் கேட்க விரும்பவில்லை, எனக்கு அது பிடிக்கவில்லை," என்று நினைத்து நாம் அதைத் தொந்தரவு செய்யாதவரை அது நம்மைத் தொந்தரவு செய்வதில்லை. இப்படி நினைப்பதால் தான் துக்கம் உண்டாகிறது. நாம் புத்தோ என்ற அறிவை வளர்த்துக் கொள்ளவில்லை, துக்கத்தின் காரணம் நமக்குத் தெரியவில்லை. எனவே இங்கேயே துக்கம் உண்டாகிறது. நாம் இன்னும் தெளிவாகவில்லை, விழிக்கவில்லை, தெரிந்திருக்கவில்லை. இது பண்படாத பயிற்சியற்ற மனம். இந்த மனம் நமக்கு இன்னும் முழுமையாகப் பயன் தருவதில்லை.
எனவேதான் புத்தர் இந்த மனத்தைப் பயிற்றுவித்து விரிவாக்க வேண்டும் என்றார். உடலுக்குப் பயிற்சியளிப்பது போல மனத்திற்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். ஆனால் அதை நாம் வேறு முறையில் செய்கிறோம். உடலை வளர்க்க நாம் தேகாப்பியாசம் செய்கிறோம், காலையிலும் மாலையிலும் ஓட்டப்பயிற்சி போன்றவற்றைச் செய்கிறோம்.இது போலப் பல பயிற்சிகள் செய்யலாம். இதுவே உடலுக்குப் பயிற்சி அளிப்பது என்பது. இப்படிப் பயிற்சி செய்வதால் உடல் சுறுசுறுப்பும், வலுவடைவதுமின்றிச் சுவாச உறுப்புகளும், நரம்புமண்டலமும் மேலும் திறமையாகவும் செயல்படுகின்றன. ஆனால் மனத்திற்குப் பயிற்சியளிக்க அதை அப்படி இப்படி அசைக்கத் தேவை இல்லை. மாறாக அது அலைவதை நிறுத்தி, அசைவற்ற நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
உதாரணமாக, தியானம் செய்யும் போது உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு போன்ற ஒரு தியானப் பொருளை நமது அடித்தளமாக வைத்துக் கொள்கிறோம். இதுவே நமது கவனத்தின் குறிக்கோளாகவும் பிரதிபலிப்பின் குறிக்கோளாகவும் இருக்கவேண்டும். மூச்சைக் கவனிக்கின்றோம். மூச்சைக் கவனிப்ப தென்றால் அதைத் தெரிந்த நிலையோடு, அதன் தாள லயத்தைக் கவனித்து, அது வருவதையும் போவதையும் தொடர வேண்டும். மூச்சின் மீது மட்டுமே கவனம் செலுத்தி, இயற்கையாக அது வருவதையும், போவதையும் தொடர்ந்து கவனித்து, மற்ற அனைத்தையும் விட்டுவிட வேண்டும். ஒரு தியானப் பொருளின் மீது கவனம் செலுத்துவதின் காரணமாக, நமது மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. இதையும், அதையும் மற்றதையும் மனம் கவனித்துக்கொண்டிருந்தால் மனம் ஒருமுகப்படுவதில்லை. அது அமைதியடைவதில்லை.
மனம் நிற்பதென்றால் நின்றுவிட்டதாக அதற்குத் தோன்றுவது தான், இங்கேயும், அங்கேயும் அது ஓடுவதில்லை. இது ஒரு கூர்மையான கத்தி வைத்திருப்பது போல. கத்தியைத் தாறுமாறாகப் பயன்படுத்திக் கற்களையும், செங்கற்களையும், புல்லையும் வெட்ட முற்பட்டால் கத்திமுனை விரைவில் மழுங்கிவிடும். கத்தியை எதை வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். நமது மனமும் அதுபோலத்தான். பயனற்ற எண்ணங்களோடும் உணர்ச்சிகளோடும் மனம் தொடர்ந்து செல்லஅனுமதித்தால் மனம் களைப்படைந்து வலுக்குறைந்து விடும். மனத்தில் ஊக்கம் இல்லாவிட்டால், மெய்யறிவு எழப்போவ தில்லை, ஊக்கமில்லா மனம், சமாதி இல்லா மனம் போலத்தான்.
மனம் நிற்கவில்லையென்றால் புலன் பொருட்களை அவற்றின் உண்மையான வடிவத்தில் தெளிவாகப் பார்க்க முடியாது. மனம் மனம் தான், புலன் பொருட்கள் புலன் பொருட்கள் மட்டுமே என்ற அறிவே பௌத்தம் வளர்ந்து விரிவடைவதற்கான மூல காரணம். இதுவே பௌத்தத்தின் உள்ளம்.
இந்த மனத்தை நாம் அமைதியோடும், நுண்ணறிவோடும் பேணி வளர்க்க வேண்டும். ஒருக்கமும், உள்பார்வையும் உண்டாவதற்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். மனத்தை நிறுத்தி, மெய்யறிவு எழுவதற்கு இடம் கொடுத்து, மனம் மனம் தான் என்பதை அறிய மனத்திற்குப் பயிற்சி அளித்தால் அடக்கமும், மெய்யறிவும் மனத்தில் உண்டாகும்.
மனிதர்கள் எப்படி இருக்கின்றோம், எப்படிச் செயலாற்றுகின்றோம் என்பது சிறு குழந்தைகளின் செயல் போலவே உள்ளது. குழந்தைக்கு ஒன்றும் தெரிவதில்லை. குழந்தையின் நடத்தையைக் கவனிக்கும் பெரியவர், அது குதிப்பதையும், விளையாடுவதையும் பார்க்கும் போது அதற்கு எந்த ஒரு நோக்கமும் இருப்பதாகக் காண்பதில்லை. பயிற்சி அளிக்கப்படாத மனமும் குழந்தையைப் போலவேதான். தெரிந்த நிலையில் இல்லாமல் பேசுகிறோம், மெய்யறிவு இல்லாமல் நடந்து கொள்கிறோம். நாம் அழிவை நோக்கிச் சென்றாலும் அல்லது சொல்லமுடியா தீங்கு விளையக் காரணமாக இருந்தாலும் நமக்கு அது தெரிவதுகூட இல்லை. குழந்தைக்கு ஒன்றும் தெரியாது. அது குழந்தைகள் எப்படி விளையாடுமோ அப்படி விளையாடுகிறது. நமது அறியா மனமும் அதுபோலத்தான்.
எனவே நாம் நமது மனத்தைப் பயில்விக்க வேண்டும். புத்தர் மனத்தைப் பயில்விக்கச் சொன்னார், அதற்குக் கற்றுத்தரச் சொன்னார். நான்கு அத்தியாவசியங்களை மட்டுமே ஆதரித்தாலும் நமது ஆதரவு மேலோட்ட மானதுதான். அது மரத்தின் வெளிப்புறப் பட்டையை அடைவது போலத்தான். பயிற்சியின் மூலமாகவே பௌத்தத்திற்கு உண்மையான ஆதரவைத் தரமுடியும். பிற எந்த வழியிலும் அதைச் செய்ய முடியாது. நமது நடவடிக்கைகளை, சொல்லை ,எண்ணங்களைப் போதனைகளுக்கேற்பப் பயிற்சி செய்ய வேண்டும். இப்படி ஆதரிப்பது மிகவும் பலன் தரும். நேர்மையானவராகவும் உண்மைபேசுபவராகவும், கட்டுப்பாடும், மெய்யறிவும் கொண்டுள்ளவராகவும் இருந்தால் நமது பயிற்சி அபிவிருத்தி அடையும். குரோதமும், விரோதமும் உண்டாகக் காரணம் இருக்காது. இதைத்தான் நமது மதம் நமக்குக் கற்பிக்கிறது.
ஒழுக்கங்களைச் சம்பிரதாயத்துக்காக மட்டுமே கடைப்பிடித்தால், ஆசிரியர் உண்மையைக் கற்பித்தாலும் நமது பயிற்சியில் குறையிருக்கும். போதனைகளைப் படித்து அதைத் திரும்ப ஓத முடிந்தாலும், நாம் பயிற்சி செய்தால் தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். பயிற்சியை வளர்க்காவிட்டால், பல வாழ்நாட்களிலும் பௌத்தத்தின் சாராம்சத்தினை அடைவதற்கு இது தடங்கலாகிவிடிகிறது. பௌத்த மதத்தின் சாராம்சத்தினை நாம் புரிந்து கொள்ளமாட்டோம்.
எனவே பயிற்சி என்பது ஒரு சாவியைப்போல. தியானம் என்கிற சாவி. சரியான சாவி இருந்தால், எவ்வளவு தான் இறுக்கமாகப் பூட்டப் பட்டிருந்தாலும், சாவியைப் பூட்டில் நுழைத்துத் திருப்பினால் பூட்டு திறந்து கொள்கிறது. சாவி இல்லாவிட்டால் பூட்டைத் திறக்க முடியாது. பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே முடியாது.
சொல்லப் போனால் இருவகை அறிவுகள் உள்ளன. அறத்தைத் தெரிந்தவன் நினைவிலிருந்து மட்டும் பேசுவதில்லை, அவன் உண்மையைப் பேசுகிறான். பொதுவாக உலக மக்கள் அகம்பாவத்தோடு பேசுகிறார்கள். எடுத்துக்காட்டாக நீண்ட காலம் சந்திக்காத இருவர், வெளியூருக்கோஅல்லது வெளி நாட்டுக்கோ சென்று திரும்பியவர்கள், ஒரு நாள் ஒரு இரயில் வண்டியில் சந்திக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், "ஓ! என்ன ஆச்சரியம். இப்போது தான் நான் உன்னைத் தொடர்புகொள்ள நினைத்தேன்!" என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மையில்லை. உண்மையில் ஒருவரை ஒருவர் பற்றிய எண்ணமே அவர்களுக்குத் தோன்றியிருக்காது. ஆனால் உணர்ச்சி வசத்தில் அப்படிச் சொல்கின்றனர். எனவே அது ஒரு பொய்யாகி விடுகிறது. ஆம், அது கவனமில்லாமல் சொல்லும் பொய்ப் பேச்சுத் தான். இது அவர்கள் அறியாமலே சொல்லப்பட்ட பொய். இது நுட்பமான மனக் கிலேசம், அடிக்கடி இது நிகழ்கிறது.
மனத்தைப் பொறுத்தவரை, இளம் துறவி கற்பித்ததைத் துச்சோ பொதிலா தொடர்ந்தார்: உள் மூச்சு விட்டார், வெளி மூச்சு விட்டார்.. ஒவ்வொரு மூச்சையும் கவனித்தார். தனக்குள் இருந்த பொய் பேசுபவரைத் தெரிந்து கொண்டார். தனது மனம் சொல்லிக் கொண்டிருந்த பொய்யைத் தெரிந்து கொண்டார். அந்தப் புற்றிலிருந்து வெளிவந்த பல்லியைத் தெரிந்து கொண்டதைப்போலத் தமது மனக்கிலேசங்கள் தோன்றத் தோன்ற அவற்றைத் தெரிந்து கொண்டார்.. அவர் அதைப் பார்த்து அவை எழும்போதே அவற்றின் உண்மையான குணத்தைத் தெரிந்து கொண்டார். மனம் எப்படி ஒரு நிமிடம் ஒன்றைத் திட்டமிடுவதையும், மறு நிமிடம் வேறு ஒன்றைப் பற்றி எண்ணமிடு வதையும் கவனித்தார்.
எண்ணுவது ஒரு 'ஸங்கத தம்மம்', அதாவது உறுதுணையாய் நிற்கும் காரணங்களால் தோற்றுவிக்கப் பட்டது. அது 'அஸங்கத தம்மம் இல்லை', காரணமில்லாதது. நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்ட மனம், முழுமையான தெரிந்திருக்கும் நிலையில், மன நிலைகளைத் தோற்றுவிப்பது இல்லை. இது போன்ற மனம் நான்கு பேருண்மைகளையும் ஊடுருவிப் புறத்தில் உள்ள எதையும் துணைக்காக நம்பி இருப்பதில்லை. நான்கு பேருண்மைகளைத் தெரிந்து கொள்வது என்பது உண்மையைத் தெரிந்து கொள்வதாகும். மன நிலைகளை உருவாக்கும் மனமோ இந்த உண்மையைத் தவிர்க்கிறது, "அது நல்லது" அல்லது "இது அழகானது," என்கிறது. ஆனால் மனத்துள் 'புத்தோ' இருந்தால் அது நம்மை ஏமாற்ற முடியாது, ஏனென்றால் மனத்தை அது இருக்கும் நிலையில் நாம் தெரிந்திருக்கிறோம். ஏமாற்றக் கூடிய மனநிலைகளை மனத்தால் தோற்று விக்க இயலாது. ஏனென்றால் நாம் எல்லா மனநிலைகளும் நிலையற்றவை, முழுமையற்றவை, அவற்றோடு பற்றுக் கொள்வோருக்குத் துக்கம் விளைவிப்பவை என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்கின்றோம்.
அவர் எங்கு சென்றாலும் அந்தத் தெரிந்தவர் துச்சோ பொதிலாவின் மனத்தில் தொடர்ந்து இருந்தார். மனம் உருவாக்கியவற்றைத் தோற்றுவித்தவற்றை அறிந்தவண்ணம் கவனித்தார். மனம் எவ்வகைகளிலெல்லாம் பொய் சொல்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். பயிற்சியின் சாராம்சத்தினைப் புரிந்து கொண்டார், "இந்தப் பொய் சொல்லும் மனமே கவனிக்கப்பட வேண்டியது - இதுவே நம்மை மகிழ்ச்சியின் எல்லைக்கும், துயரத்தின் விளிம்புக்கும் இட்டுச் செல்கிறது, சம்சாரச் சக்கரத்தில் - அதில் உள்ள இன்பத்தோடும், துன்பத்தோடும், நல்லவற்றோடும் கெட்டதனோடும் சுழல வைக்கிறது – இவை எல்லாம் நிகழ்வது இந்த மனத்தினால் தான்." துச்சோ பொதிலா வாய்மையை அறிந்தார், பயிற்சியின் சாராம்சத்தினைப் புரிந்து கொண்டார், அந்தப் பல்லியின் வாலைப் பிடித்து விட்ட அந்த மனிதனைப் போல. அவர் ஏமாற்றமடைந்த மனம் செய்யும் வேலையைப் பார்த்து விட்டார்.
நமக்கும் அது போலத்தான். இந்த மனம் மட்டுமே முக்கியம். அதனால் தான் அதனைப் பயில்விக்கச் சொல்கின்றார்கள். மனம் மனம் தான் என்றால் எதைக் கொண்டு அதனைப் பயில்விப்பது? தொடர்ந்து சதியுடனும், சம்பஜஞ்ஞாவுடனும் இருந்தோமானால் மனத்தைத் தெரிந்து கொள்ளலாம். அந்தத் தெரிந்தவன் மனத்தைவிட ஒரு படி முன்னால் இருக்கின்றான், மனத்தின் நிலையைத் தெரிந்தவன். மனம் மனம் தான், மனம் மனம் மட்டுமே என்பதைத் தெரிந்தவன் தான் அந்த தெரிந்தவன். அவன் மனதிற்கு மேற்பட்டவன். அந்தத் தெரிந்தவன் மனத்திற்கு மேற்பட்டவனாதலால் மனத்தைக் கவனித்துக் கொள்ள முடிகிறது, மனத்திற்கு எது நல்லது எது தீயது என்பதைச் சொல்லிக் கொடுக்க முடிகிறது. முடிவில் எல்லாமே இந்தத் தோற்றுவிக்கும் மனத்திடமே வந்து சேர்கிறது. தோற்று விப்பதிலேயே மனம் பிடிபட்டிருந்தால் அங்கு தெரிந்த நிலை இல்லை. பயிற்சியும் பயனற்று விடும்.
எனவே அறத்தைக் கேட்க, தெளிந்த, பிரகாசிக்கும், தெரிந்த நிலையான புத்தோவை, சாதாரண மனத்திற்கு மேலேயும், அப்பாலும் அதனுள் நடப்பதைத் தெரிந்தும் உள்ள புத்தோவைப் பேண மனத்திற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அதனால்தான் நாம் புத்தோ என்ற வார்த்தையோடு தியானிக்கின்றோம், அப்போது மனத்துக்கு அப்பால் உள்ள மனத்தைத் தெரிந்து கொள்ளலாம். நல்லதோ, கெட்டதோ, மனம் மனம் தான் என்றும், அது ஒரு நபர் இல்லை, தான் இல்லை என்பதை அறியும் வரை மனத்தின் எல்லா நடவடிக்கைகளையும் கவனிக்க வேண்டும். இதுவே சித்தானுபாஸ்ஸான எனப்படும், அதாவது மனத்தைப் பிரதிபலிப்பது. [16] இவ்வாறு பார்ப்பதால் மனம் தற்காலிகமானது, முழுமையற்றது, சொந்தக்காரர் இல்லாதது என்பதை அறியலாம். இந்த மனம் நமக்குச் சொந்தம் இல்லை.
இதை நாம் இவ்வாறு சுருக்கிக் கூறலாம்: புலன் பொருட்கள் இருப்பதை தெரிவிப்பது மனம்; புலன் பொருட்கள் புலன் பொருட்கள் மட்டுமே. அது வேறு, மனம் வேறு; அந்தத் தெரிந்தவனுக்கு மனமும் தெரியும், புலன் பொருட்களும் தெரியும். அவற்றின் இயல்புகளும் தெரியும். சதியுடன் மனத்தைத் தொடர்ந்து சுத்தப் படுத்தவேண்டும். எல்லோருக்கும் சதி உள்ளது, பூனைக்குக்கூட ஒரு எலியைப் பிடிக்கச் செல்லும் போது சதி இருக்கிறது. மக்களைப் பார்த்துக் குரைக்கும் நாய்க்கும் சதி உள்ளது. இது வேறுவகைச் சதி. ஆனால் இது அறத்தின் படியான சதி இல்லை. எல்லோரிடமும் சதி உள்ளது, ஆனால் வேறுபட்ட நிலைகளில் உள்ளது, பொருட்களைப் பார்க்கும் போது மாறுபட்ட விதங்களில் பார்ப்பது போல. உதாரணமாக நான் உடலைப் பிரதிபலிக்கச் சொல்லும் போது சிலர், "உடலில் பிரதிபலிக்க என்ன இருக்கிறது? யாரும் பார்க்கலாம். கேசம் அதைப் பார்க்கிறோம், லோமம் அதையும் பார்க்கிறோம்...முடி, நகம், பல் மற்றும் தோல் இவற்றையும் பார்க்கமுடிகிறது, அதனால் என்ன?"
இப்படித்தான் மக்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் உடலைப் பார்க்க முடிகிறது, ஆனால் அவர்கள் பிழையுடன் பார்க்கின்றனர், அவர்கள் புத்தோவுடன், அந்தத் தெரிந்தவனுடன், விழிப்புற்றவனுடன் பார்ப்பதில்லை. உடலைச் சாதரணமான முறையில் மட்டுமே பார்க்கின்றனர், கண்ணால் மட்டுமே பார்க்கின்றனர். உடலை மட்டுமே பார்ப்பது போதாது. உடலை மட்டுமே பார்ப்பது பிரச்சனையை உண்டாக்கும். உடலினுள் உள்ள உடலைப் பார்க்க வேண்டும். அப்போது தான் விஷயங்கள் தெளிவாகும். உடலை மட்டுமே பார்த்தால் ஏமாந்து விடுவீர்கள், அதன் தோற்றத்தைக் கண்டு மயங்கி விடுவீர்கள். அது தற்காலிகமானது, முழுமையற்றது, சொந்தக்காரர் இல்லாதது என்பதைப் பார்க்காவிட்டால் காமச்சந்தா [17] எழுகிறது. உருவங்களோடு, சப்தங்களோடு, நுகர்வுகளோடு, சுவைகளோடு, உணர்ச்சிகளோடு வசியப்பட்டு விடுவீர்கள். இவ்வாறு பார்ப்பது இவ்வுலக வாழ்வு பற்றியதைக் கண்களால் பார்ப்பது போல. இதனால் பிடிப்பும், வெறுப்பும் உண்டாகிப் பிடித்தது, பிடிக்காதது என்று பாகுபாடு செய்யத் தோன்றிவிடும்.
புத்தர் இது மட்டும் போதாது என்றார். "மனக் கண்ணால்" பார்க்கச் சொன்னார். உடலினுள் உள்ள உடலைப் பார்க்கச் சொன்னார். உண்மையிலேயே உடலினுள் பார்த்தால் ... ஓ! அது வெறுக்கத் தக்கது. இன்றைய பொருட்களும், நேற்றைய பொருட்களும் எல்லாம் ஒன்று கலந்திருக்கின்றன. எவை எது என்று சொல்ல முடியாத நிலை. இவ்வாறு பார்ப்பது வெறும் கண்ணால் பார்ப்பதைவிடத் தெளிவானது. பிரதிபலியுங்கள், மனக்கண்ணால் பாருங்கள், ஞானக்கண்ணால் பாருங்கள்.
மக்கள் அறிந்திருப்பது இவ்வாறு மாறுபடுகிறது. சிலர் ஐந்து தியானப் பொருட்களான, தலை முடி, உடல் முடி, நகம், பல் மற்றும் தோல் இவற்றைப் பிரதிபலிப்பதில் என்ன இருக்கிறது என்று நினைக்கின்றர். அவர்கள் அவை எல்லாம் நம்மால் பார்க்கக் கூடியது தான் என்கின்றார்கள். ஆனால் அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட புறக்கண்ணால் மட்டுமே பார்க்கின்றனர், அந்தப் "பித்துப் பிடித்த கண்களோ" அவற்றிற்கு வேண்டியதை மட்டுமே பார்க்கின்றன. உடலினுள் உள்ள உடலைப் பார்ப்பதற்கு அதைவிடத் தெளிவாகப் பார்க்க வேண்டும்.
இது போன்ற பயிற்சி, ஐந்து கந்தங்களோடு உள்ள பற்றினைப் பெயர்த்தெடுத்துவிடும். [18] பற்றினைப் பெயர்த்தெடுப்பதென்பது துக்கத்தைப் பெயர்த்தெடுப்பதற்குச் சமம், ஏனென்றால் ஐந்து கந்தங்களோடு உள்ள பற்றுத் தான் துக்கத்திற்கான காரணம். துக்கம் எழுகிறதென்றால் இங்கு தான் எழுகிறது, ஐந்து கந்தங்களோடு உள்ள பற்றில் தான் எழுகிறது. ஐந்து கந்தங்கள் என்பன துக்கம் இல்லை, அவற்றோடு உள்ள பற்று. அவை நம்முடையவை என்று நினைப்பது.. அதுவே துக்கம்.
தியானப் பயிற்சி மூலம் இவ்விஷயங்களைத் தெளிவாகப் பார்த்தால், துக்கம் நீக்கப்படுகிறது. ஒரு திருகாணியையோ அல்லது தாழ்ப்பாளையோ நீக்குவது போல. தாழ்ப்பாள் நீக்கப்படும் போது அது விலகுகிறது. மனமும் அதுபோலவே விலகுகிறது. விட்டு விடுகிறது. நல்லது கெட்டதோடு, செல்வத்தோடு, புகழ்ச்சி மற்றும் அந்தஸ்தோடு, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தோடு ஆட்டிப் படைக்கப்பட்ட மனம் அதிலிருந்து விலகுகிறது.
இவற்றைப் பற்றிய உண்மை தெரியாவிட்டால் அது திருகாணியை எந்நேரமும் முறுக்கி விடுவதைப்போல. அது மேலும் மேலும் இறுகி இறுதியில் உங்களுக்கு நெருக்கத்தை உண்டு செய்து எல்லாவற்றோடும் துக்கம் அனுபவிக்கச் செய்துவிடும். விஷயங்களின் உண்மையான இயல்பைத் தெரிந்து கொண்டால் அது திருகாணியை நீக்குவது போல. அறத்தின் மொழியில் இதை நிப்பிதா எழுவதாகக் கூறுகிறோம், அதாவது உலகின் மீதான மோகம் குறைகிறது. உலக விஷயங்கள் மீது சலிப்படைந்து விடுகின்றீர்கள். அவற்றோடு உள்ள பற்றை விட்டு விடுகின்றீர்கள். இவ்வாறு நீக்கினால் அமைதியைக் காணலாம்.
துக்கத்தின் காரணம் பொருட்களோடு பற்று உண்டாவதால் தான். ஆகவே நாம் அதற்கான காரணத்தை நீக்க வேண்டும். அதன் வேரை அறுத்து விட்டு மீண்டும் துக்கம் எழாமல் தடுக்க வேண்டும். மக்களிடம் ஒரே ஒரு பிரச்சனைதான் உள்ளது - பற்று என்ற பிரச்சனை. இந்த ஒரே காரணத்தினால் மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கின்றனர். எல்லாப் பிரச்சனைகளும், அது தனி நபர் பிரச்சனை யானாலும் சரி, குடும்ப, சமூகப் பிரச்சனையானாலும் சரி இதன் காரணமாகவே நிகழ்கின்றன. யாரும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கின்றனர். ஆனால் இறுதியில் யாரும் எதையும் பெறப் போவதில்லை. மனிதர்கள் இப்படிக் குறிக்கோளின்றி ஏன் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்கின்றனரோ என்பது எனக்கு விளங்கவில்லை.
அதிகாரம், உடமைகள், அந்தஸ்து, புகழ், மகிழ்ச்சி மற்றும் துக்கம் ... இவை எல்லாம் உலக தம்மங்கள். இந்த உலக தம்மங்கள் உலக உயிரினங்களைச் சுற்றியுள்ளன. உலக தம்மங்களான லாபமும் நட்டமும், புகழும் இழிவும், அந்தஸ்தும் அந்தஸ்து இழப்பும், இன்பமும் துன்பமும் உலக உயிரினங்களுக்கு வழி காட்டுகின்றன. இந்தத் தம்மங்களெல்லாம் தொந்தரவு செய்பவை. அவற்றின் உண்மையான இயல்பு தெரியா விட்டால் நீங்கள் துன்புறுவீர்கள். செல்வத்திற்காக, அந்தஸ்திற்காக, அதிகாரத்திற்காக மக்கள் கொலை கூடச் செய்வார்கள். ஏன்? ஏனென்றால், இவற்றின் மேல் மக்கள் தேவையற்ற அக்கறை காட்டுவதால் தான். ஒருவனை ஒரு பதவியில் அமர்த்தினால் கிராமத் தலைவனாக உயர்ந்து விட்டது போன்று அவனுக்குத் தலைக்கனம் ஏற்பட்டு விடுகிறது. அவன் தலைவனாக நியமிக்கப் பட்டபின் அவன் "அதிகார-போதை" கொள்கிறான். அவனது பழைய நண்பர்கள் அவனைப் பார்க்க வந்தால், "இப்படி அடிக்கடி இங்கு வர வேண்டாம். நிலைமை இப்போது முன்போல இல்லை. " என்று சொல்லுவான்.
புத்தர் உடமைகளின், அந்தஸ்தின், புகழின், மகிழ்ச்சியின் இயல்புகளைப் புரிந்து கொள்ளச் சொன்னார். அவை வருவதை வருவது போலவே எடுத்துக் கொண்டு அப்படியே விட்டு விடுங்கள். அவற்றை உங்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். இவற்றை எல்லாம் உங்களால் அறிந்து கொள்ள முடியாவிட்டால் நீங்கள் உங்களது அதிகாரத்தால், உங்கள் மக்களால், உறவினர்களால்.. எல்லோராலும் ஏமாற்றப் படுவீர்கள்! நீங்கள் அவற்றைத் தெளிவாக அறிந்து கொண்டால், அவை எல்லாம் நிலையற்ற நிலைமைகள் என்பதை அறிவீர்கள். அவற்றோடு பற்றுக் கொண்டால் மனக்கிலேசங்கள் உண்டாகின்றன.
இவை எல்லாம் பின்னால் வருபவைதான். மக்கள் முதலில் பிறக்கும் போது அவர்கள் வெறும் நாம-ரூபம் மட்டுமே, வேறேதும் இல்லை. நாம் பின்னர் "திரு. சக்திவேல்," "செல்வி சிந்து" என்பது போன்றவற்றை நுழைக்கிறோம். சம்பிரதாய வழக்கத்தின்படி இவைகள் சேர்க்கப்படுகின்றன. அதன் பின் மேலும் இணைக்கப் படுவது "கேப்டன்," "தளபதி" போன்ற அடைமொழிகள். இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவில்லை யென்றால் இவையனைத்தும் உண்மையென நினைத்து அவற்றையும் நம்மோடு தூக்கிக் கொண்டு அலைவோம். நமது உடமைகளை, அந்தஸ்தை, பெயரை, பதவியைத் தூக்கிக் கொண்டு திரிவோம். அதிகாரம் இருந்தால் அதிகாரம் காட்டலாம் ... "இவனை இழுத்துச் சென்று சுட்டுத் தள்ளுங்கள். அவனைப் பிடித்துச் சென்று சிறையில் அடையுங்கள்." ..... அந்தஸ்து அதிகாரத்தைத் தருகிறது. இந்த "அந்தஸ்து" என்ற வார்த்தையால் தான் பற்று ஆட்கொள்கிறது. அந்தஸ்துக் கிடைத்தவுடன் மக்கள், சரியோ தவறோ, அவர்கள் மனோபாவங்களுக்குத் தகுந்தார்ப் போலக் கட்டளை இட ஆரம்பித்து விடுகின்றனர். எனவே பழைய தவற்றையே திரும்பத் திரும்பச் செய்து உண்மையான மார்க்கத்திலிருந்து மேலும் விலகி விலகிச் செல்கின்றனர்.
அறத்தை அறிந்தவன் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டான். நல்லதும் தீயதும் உலகில் பன்னெடுங் காலமாக இருந்திருக்கின்றன. உடமைகளும், அந்தஸ்தும் உங்களிடம் வந்தால் அவற்றை வெறும் உடமைகளும், அந்தஸ்தும் என்று மட்டுமே அறிந்து கொள்ளுங்கள், அவற்றை நீங்கள் (உங்களுக்கு சொந்தம்) என்று நினைத்துவிட வேண்டாம். அவைகளை உங்கள் கடமைகளை நிறைவேற்ற மட்டுமே பயன்படுத்துங்கள். பின்னர் அவைகளை விட்டு விடுங்கள். நீங்கள் மாறாமல் இருங்கள். இவற்றைப் பற்றி எல்லாம் நாம் பிரதிபலித்திருந்தால், நம் வழியில் என்ன வந்தாலும் நாம் ஏமாற மாட்டோம். நாம் தொந்தரவு படாமல், பாதிக்கப்படாமல், நிலையாக இருப்போம். எனென்றால், எல்லாம் ஒரே தன்மையான இயல்புகளைத் தான் கொண்டுள்ளன.
இவ்வாறு தான் புத்தர் நிகழ்வுகளை அறிந்து கொள்ளச் சொன்னார். எது உங்களிடம் வந்தாலும், மனம் அதனோடு மேலும் எதையும் சேர்ப்பதில்லை. உங்களை நகரப் பிரதிநிதியாக நியமிக்கின்றனர்... "சரி, நான் ஒரு நகரப் பிரதிநிதி...ஆனால் நான் அப்படி இல்லை." உங்களை நகரப் பிரதிநிதிகளின் தலைவராக நியமிக்கின்றனர்... "ஆம், நான் தலைவன் தான், ஆனால் நான் அப்படி இல்லை.: உங்களை எதுவாக ஆக்கினாலும்... "ஆம், நான் தான், ஆனால் நான் அப்படி இல்லை!" முடிவில் யார் தான் நாம்? நாம் அனைவரும் இறுதியில் இறக்கப்போகிறோம். உங்களை என்னவாக ஆக்கினாலும், இறுதியில் அனைத்துமே ஒன்று தான். நீங்கள் என்ன சொல்ல முடியும்? நீங்கள் எல்லாவற்றையும் இவ்வாறு பார்க்க முடிந்தால், உங்களுக்கு ஒரு நிலையான இருப்பிடம் இருக்கும், உண்மையான மனத்திருப்தி இருக்கும். எதுவும் மாறவில்லை.
இதுதான் நிகழ்ச்சிகளினால் ஏமாற்றப்பட முடியாதது.. உங்கள் வழியில் எது வந்தாலும், அவை வெறும் நிலைமைகள் தான். இப்படிப் பட்ட மனத்தைத் தூண்டிவிட்டு உருவாக்க, உருவெடுக்க வைக்க, பேராசை, விரோதம் மற்றும் ஏமாற்றுவது போன்ற தீச்செயலுக்கு உட்படுத்த எதனாலும் முடியாது.
எனவே இப்படித்தான் பௌத்தத்தின் உண்மையான ஆதரிப்பாளராக இருக்க முடியும். நீங்கள் ஆதரிக்கப்படுபவராக இருந்தாலும் (அதாவது சங்கத்தை சேர்ந்தவர்) ஆதரிப்பாளராக இருந்தாலும் (இல்லறத்தார்) இதனை ஆழமாக எண்ணிப் பாருங்கள். உங்களுக்குள் சீல-தம்மத்தை [19] வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே பௌத்தத்தை ஆதரிக்கும் உறுதியான வழி. நான்கு தேவைகளான உணவு, துணி, இருப்பிடம், மருந்து போன்றவைகளோடு பௌத்தத்தை ஆதரிப்பதும் நல்லது தான், ஆனால் இது போன்ற ஆதரவு தண்டுக்கும் மரப்பட்டைக்கும் நடுவில் புதிதாக உருவான மென்மையான கட்டையை அடைவது போலத்தான். இதை மறந்துவிடாதீர்கள். மரத்திற்கு மரப்பட்டையும், தண்டுக்கும் மரபட்டைக்கும் நடுவில் புதிதாக உருவான மென்மையான கட்டையும், தண்டும் உள்ளன. பண்பு, ஒருக்கம் மற்றும் மெய்யறிவின் போதனைகள் சார்ந்து இருப்பதைப் போல [20] அவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. உங்கள் பேச்சையும், நடத்தையையும் சரியான முறையில் நிறுவ ஒழுக்கங்கள் பயன்படுகின்றன. மனத்தை ஒருமுகப்படுத்துவது ஒருக்கம். எல்லா நிலைமைகளின் இயல்புகளை அறிவதே மெய்யறிவு. இதைப் படியுங்கள், பயிற்சி செய்யுங்கள். பின் நீங்கள் பௌத்தத்தை ஆழ்ந்த முறையில் அறிவீர்கள்.
இவற்றை அறியவில்லையென்றால் உடைமைகளால் ஏமாற்றப்படுவீர்கள், அந்தஸ்தினால் ஏமாற்றப்படுவீர்கள், எதனோடு தொடர்பு கொண்டாலும் அதனால் ஏமாற்றப்படுவீர்கள். பௌத்தத்தைப் பட்டும் படாமலும் மட்டும் ஆதரிப்பதால் சண்டை சச்சரவுகள், பொறாமை விரோதம், கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு போன்றவற்றிற்கு என்றும் முடிவு கட்ட முடியாது. இவை எல்லாம் தடுக்கப்பட வேண்டுமானால் உடைமைகளை, அந்தஸ்தை, புகழ்ச்சி, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தின் இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும். நமது வாழ்க்கையை ஆழ்ந்து நோக்கி அதனைப் போதனைகளுக்கு நிகராகக் கொண்டு வர வேண்டும். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் முழுமையின் ஒரு பகுதி என்பதைப் பிரதிபலிக்க வேண்டும். நாமும் அவைகளைப் போலத்தான், அவைகளும் நம்மைப் போலத்தான். அவைகளும் நம்மைப் போலவே மகிழ்ச்சியும், துன்பமும் கொண்டுள்ளன, கிட்டத்தட்ட எல்லாம் ஒரே மாதிரி தான். இது போலப் பிரதிபலித்தால் அமைதியும் அறிவாற்றலும் எழும். இதுவே பௌத்ததின் அடித்தளம்.
* * * * * *
14 சமணர்
ஆன்மீகப் பயிற்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அத்தகைய பயிற்சிகளின் காரணமாக ஓரளவுக்குப் பண்பை வளர்த்துக் கொண்டவரையும் குறிக்கும். அஜான் சா இதனைப் பொதுவாக "அமைதியாக இருப்பவர்" என்று மொழிபெயர்க்கிறார்.
15. 'ஞானதஸ்ஸனா'
"(நான்கு மேன்மையான உண்மைகள் பற்றிய) அறிவும் உள்பார்வையும்."
16. சித்தானுபாஸ்ஸான
உடல், உணர்ச்சி, மனம் மற்றும் தம்மம் ஆகிய
நான்கு மனக் கவனத்தின் அடித்தளங்களில் ஒன்று.
17. காமச்சந்தா: புலன் ஆசை, ஐந்து மனக்கிலேசங்களுள் ஒன்று. மற்ற நான்கு, வெறுப்பு, ஆறுதலற்ற துடிப்பும் கவலையும், சோர்வும் சோம்பலும் மற்றும் சந்தேகம்
18. ஐந்து கந்தங்கள் அல்லது "குவியங்கள்": சட உருவம், உணர்ச்சிகள், குறிப்புகள், மனத்தில் தோன்றுபவை மற்றும் விஞ்ஞானம்.
19. சீல-தம்மா: போதனையும் ஒழுக்கமும். புத்தரின் போதனைகளுக்கு மற்றோர் பெயர். தனிநபரைப் பொருத்தவரை இதன் பொருள் "ஒழுக்கமும் வாய்மையும் (வாய்மை பற்றிய அறிவும்)"
20. சீலம் (பண்பு/ஒழுக்கம்), சமாதி (ஒருக்கம்), பஞ்ஞா (மெய்யறிவு)
* * * * * *
© Copyright
Provenance: 1992 The Sangha at Wat Pah Nanachat. First impression, 1992. Transcribed from the print edition in 1994 by David Savage under the auspices of the DharmaNet Dharma Book Transcription Project, with the kind permission of the copyright holder. This Access to Insight edition is ©1994–2013.
Terms of use: You may copy, reformat, reprint, republish, and redistribute this work in any medium whatsoever, provided that: (1) you only make such copies, etc. available free of charge; (2) you clearly indicate that any derivatives of this work (including translations) are derived from this source document; and (3) you include the full text of this license in any copies or derivatives of this work. Otherwise, all rights reserved. For additional information about this license, see the FAQ.
"Living Dhamma", by Venerable Ajahn Chah, translated from the Thai by The Sangha at Wat Pah Nanachat. Access to Insight, 1 December 2012,
http://www.accesstoinsight.org/lib/thai/chah/living.html . Retrieved on 23 August 2013.
பதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.
தமிழில் / Tamil Translation: பா. இ. அரசு P. I. Arasu Toronto, Canada
பிழை திருத்தம் / Proof Reading: திரு. பா. கா. இளங்கோ. எம். ஏ., ஈரோடு Mr. P. K. Ilango M. A., Erode
http://bautham.net/