அணிந்துரை
சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி என்னும் இவற்றை ஐம்பெருங்காப்பியங்கள் என்று சான்றோர்
போற்றிக் கூறுவர், இவற்றுள் முன்னின்ற மூன்று காப்பியங்களும்
முழுவுருவத்துடன் கிடைத்துள்ளன. இம்மூன்று காப்பிங்களானும்
நந்தமிழ்மொழி ஒப்பற்ற பெருமையுடையதாகத் திகழ்கின்ற தென்பதில்
சிறிதும் ஐயமில்லை. ஈற்றினின்ற வளையாபதி குண்டலகேசி என்பவற்றுள்
ஒரு சில செய்யுள்கள் ஒழியப் பெரும்பகுதிகளும் அழிந்தொழிந்தன
இம்மாபெருங்காப்பியங்கள் அழிந்தமை தமி்ழ் மாந்தரின் தவக்குறைவே
என்றுதான் கருத வேண்டும். தோன்றியன வெல்லாம் அழிவனவே என்பது
நியதியேயன்றோ?
வளையாபதி, குண்டலகேசி என்னும் காப்பியங்கள் இருந்தன
என்பதன் கண்ணும் நமக்கையமுண்டாகாதபடி அப்பெரு நூல்களின்
செய்யுள்கள் மேற்கோள்களாகப் பண்டைச் சான்றோரால்
கையாளப்பட்டமையாலே நிலைத்திருந்து அவையிருந்தமைக்குச் சான்றாகித்
திகழ்கின்றன. அவற்றுள் வளையாபதியைப் பற்றி இந்நூலின் முற்பகுதியில்
எம்மால் எழுதப்பட்ட அணிந்துரை கண்டு தெளிக. இனி இக்
குண்டலகேசியைப் பற்றி யாமறிந்தவற்றை ஈண்டு கூறுவாம்.
குண்டலகேசி என்பது பௌத்தமதச் சார்புபற்றி அம்மதத்திற்றாப்
பெரும் பகையாகவிருந்த ஆருகத சமயக் கொள்கைகளைக் குற்றங்கூறி
அவ்வாருகத மதத்தின் இறுமாப்பையடக்கவெழுந்தவொரு சொற்போர்
நூலே என்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது.
ஆருகத சமயம்பற்றி, ‘நாதகுத்தனார்’ என்னும் ஆசிரியரோடு
‘ஆவனும்’ என்னும் நகரத்திலே ‘குண்டலகேசி’ என்பவள் சொற்போர்
செய்து அவ்வாசிரியரைத் தோற்கச் செய்து பௌத்த சமயத்தை வளர்த்தனள்
என்பதும், அவள் வைதிக சமய முதலிய வேறு பல சமயக் கணக்கரோடும்
சொற்போர் செய்து வென்று தன் சமயத்தைப் பெருக்கினள் என்பதும்
‘நீலகேசி’ என்னும் நூலால் இனிது விளங்கும்.
‘நீலகேசி’ என்னும் நூல் தானும் குண்டலகேசி ஆருகத
சமயத்திற்குக் கூறிய குற்றங்களை நீக்குவதனையும் அக் குண்டலகேசியாற்
பரப்பப்பட்ட பௌத்த சமயக் கொள்கைகளுக்குக் குற்றங்கூறி மீண்டும்
ஆருகத சமயக் கொள்கைகளை நிலைநிறுத்துதற்கும் எழுந்த நூலேயாம்
என்பதனை அதனை ஓதுவோர் எளிதின் உணருவர்.
மேற்கூறிய நீலகேசியினின்றும், வேறு சில நூல்களினின்றும் இற்றை
நாள் நமக்கு முழுவுருவத்திற் கிடைத்துள்ள செய்யுள் பத்தொன்பது மட்டுமே.
இப்பத்தொன்பது செய்யுட்களையல்லாமல் நீலகேசியின் உரையாசிரியராகிய
‘சமயதிலாகர வாமன முனிவர்’ தமதுரையிற் குறிப்பிட்டுள்ள 99
செய்யுள்களின் முதனினைப்புக்களும் உள்ளன. இவர் காட்டும்
இக்குண்டலகேசியின் முதனினைப்புடைய செய்யுள்கள் தத்தம் மகத்தே
அக்கருத்துக்களைக்கொண்டிருந்தன என்பதனையும் அவருரையை ஆழ்ந்து
பயில்வோர் உணர்தல் கூடும். அந்த முதனினைவுகளை மட்டும், ஈண்டுக்
காட்டுவாம். அவையாவன : --
1. “முன்றான்”, (இச்செய்யுள் வீரசோழியத்தினின்றும்
முழுவுருவத்தோடு கிடைத்துளது), 2. “தன்புறத்த”, 3. “தலைவைத்த”,
4. “எல்லையுள் விழவினுள்”, 5. “காசமுங் காலமும்”, 6. “கருத்தினாற்
பெற்றோமோ”, 7. “உடம்பளவிற்றுயிர்”, 8. “பழுதையாற் பாம்புண்டு”,
9. “கலப்பாடி”, 10. “ஒருவகையால்”, 11. “எழும்பயிற்றி”, 12. “காலினாற்
சுமந்துய்ப்பான்”. 13. “மக்கட் பண்பழியா”, 14. “இயற்றிய வுடம்பிட்டால்”,
15. “வினைநிற்கப் பயன்”, 16. “தொல்லைக்கட் செய்யப்பட்டது”,
17. “அடுப்புத் துடைப்பம்” 18. “துடிக்கும் வண்ணத் தின்மையி லுயி்ர்களை”,
19. “துன்பந் தீவினையின் பயன்”, 20. “நின்ற துன்பம்”, 21. “ஓம்பல்
வேட்கை”, 22. “போக வேட்கை”, 23. “வாயினல் வேட்கை களைவான்”,
24. “தீவினையின் பயன்றுய்ப்பல்”, 25. “கொல்லா வேட்கை”,
26. “பூமைத்தாள்”, 27. “காமங்கூர்”, 28. “துன்னவூசி”, 29. “பொய்யையஞ்சி
யுரையாமை”, 30. “இவ்விடத்தோ ரலைக்கோட்சிறை”, 31. “இந்நிலத்துப்
புகுந்திலன்”, 32. “கோறலையஞ்சி”, 33. “கொன்று தின்றான்”, 34.
“வாலிதினூணூன்”, 35. “புய்ந்துக்க பீலி”, 36. “ஊன் விற்ப கொள்வ”, 37.
“விலைக்குக் கொள்வானை”, 38. “செய்வினை கொடுத்தார் நிற்ப”, 39.
“விலைக்குவிற் பான்செய் வஞ்சமும் வேண்டி, விலைக்குக்கொள் வானே,
படவிதியாயோ”, 40. “பூவினைக் காட்டல்”, 41. “தின்றபுலால்
கொலைநேர்விக்கும்”, 42. “சுக்கில சோணிதம்”, 43. “உள்ளங்கொள்ள”,
44. “ஓதினவுண்பராவது நன்றெனின்”, 45. “சீவன் பரிணமித்தம்”,
46. ஒழிந்த படை பறி்த்தலென்”, 47. “பேய் பெற்ற தாய்பற்று”,
48. “காயந்தன்னை வருத்தல் தவமென்பாய்”, 49. “வெயிலுணிற்ற லெனவும்”,
50. “துன்பம் வேண்டில்”, 51. “மற்றமா மரங்களும்”, 52. “உறங்குதலான்”,
53. “நட்டுச் சோறவாவுறு”, 54. “மெய்தீண்ட விலை”, 55. “தீயுற்ற
கொடியரும்பு”, 56. “தோற்ற”, 57. “ஒப்பவற்றாலே”, 58. “சேர்த்திட”,
59. “நேரொத்து வாடுறு”, 60. “மண்களுங் கற்களும்”, 61. “வந்திங்கு
வைகுங்கள்”, 62. “ஓரறிவா முயி்ர்”, 63. “நின்றாகுந் திரிவாகும்”,
64. “நின்னாற் பிரகாசமேபோல்”, 65. “நித்ய குணங்களால்”, 66. “அநித்ய
குணங்களால்”, 67. “குணங்குணி”, 68. “பல குணமாய்”, 69. “சொல்லேன்
யானென்றியே”, 70. “பரிணமிக்கும் பொருள்”, 71. “பிறந்த கும்மாயம்”,
72. “பயற்றது திரிவாக”, 73. “தோன்றினவுங் கெட்டனவும்”,
74. “குணியாய்ப் புற்கலம்”, 75. “புற்கல மிரண்டின்”, 76. “அங்கையு
ணெல்லிக்காய்”, 77. “கந்திடத்துக்காணாதாயின்”, 78. “கொல்லேற்றின்
கூர்ங்கோடு”, 79. “ஒரு வகையாற் குழக்கன்று மொருவகையான்
முயறானும்”, 80. “இடக்கை வகையால்”, 81. “காற்றிறத்தாற் கையில்லை”,
82. “நீயன்றென்றுரைப்ப”, 83. “உணராமை காரணத்தால்”, 84. “ஒன்றின
தியற்கையால்”, 85. “பிறிதிடத்துள்ள”, 86. “ஒரு காலத்துள பொருள்”,
87. “நூலிரும்பாய்”, 88. “பிறிதொன்றி னியற்கை”, 89. “நீயுரைக்கும்
வீட்டிடமும்”, 90. “போர்த்திங்கு வாரல்”, 91. “உணர்வவர்க்குப் பிறக்குமேல்”,
92. “கருவியாற் பொருள்கள்”, 93. “காரணத்தை யிலனாகி”, 94. “முறையுணரா
னென்றியேல்”, 95. “உடனாகப் பொருள்கலை யொருங் குணர்ந்தான்”,
96. “பொதுவாய குணத்தினால்”, 97. “வரம்பில்லாப் பொருள்கலை”,
98. “எப்பொழுது மறியானேல்”, 99. “யோனிமற் றவர்க்குரை”.
எனவருகின்ற இத் தொண்ணூற்றொன்பது முதல்களையுடைய
தொண்ணூற்றொன்பது செய்யுளும் குண்டலகேசி என்னும் பெருங்காப்பியத்துச்
செய்யுள்களே என்று ஐயமின்றி அறிகின்றோம். இன்னும் நீலகேசி
உரைக்கிடையே வருகின்ற
“சென்றெய்து மவத்தையே, சிலவற்றாற் றரப்படுமோ
வன்றியு மப்பொருள்தோ றவ்வவத் தன்மையோ
நின்றதூஉத் திரிந்ததூஉ மன்றாயி னிகழ்வில்லை
யொன்றிய வொருவகையே லொருவகையாற் கேடுண்டோ”
என்னும் செய்யுளும் (நீலகேசி 377 ஆஞ் செய்யுளுரை.)
“அளவிலாக் கடைப்பிடி யொருநான்கும் பிறப்பென்னுங்
களையறுந் துன்பத்துக் கற்பநூ றாயிரமும்
விளைவாய போதியை யுறுமளவும் வினைமடியா
தளர்வின்றி யோடிய தாளினா னல்லனோ”
என்னும் செய்யுளும் குண்டலகேசி என்னும் அம்மாபெருங்காப்பியத்துச்
செய்யுள்களே என்று ஊகிக்கலாம்.
இனி, நீலகேசியாசிரியர் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய
குண்டலகேசியின்கண், குண்டலகேசி என்பவள் ஆவண
நகரத்தின்கண்நாதகுத்தனார் என்னும் ஆருகதரோடு வாதிட்டு
ஆருகதசமயக் கொள்கை கட்கெல்லாம் குற்றம் கூறி ஆருகதர்
மெய்க்காட்சியுடையாரல்லர் என்று நிலைநாட்டி நாதகுத்தனாரை
வென்றதாக வருகின்ற பகுதியில், குண்டலகேசி தம் மதத்திற்குக் கூறிய
குற்றங்கட்கெல்லாம் விடையிறுத்தற் பொருட்டே மொக்கலவாதச்
சருக்கத்தைப் பாடியிருத்தலை அச்சருக்கத்தை ஓதுவோர் எளிதில் உணரலாம்.
நூலாசிரியர் கருத்துணர்ந்த உரையாசிரியராகிய சமய திவாகர முனிவரும்
மொக்கலவாதச் சருக்கத்தின்கண் மொக்கலன் கூற்று ஒவ்வொன்றற்கும்
இஃது இன்ன காதை (செய்யுள்) யை வழி மொழிந்தபடியாம் என்று மேலே
கூறிய செய்யுள் முதல்களைக் குறிப்பிட்டுப் போகிறார். மற்று நூலாசிரியர்
தாமும் “மொக்கலன் நீலகேசியைக் கண்டுழி; நீலகேசி, “யான் இரண்டு
பௌத்தசமயக்கணக்கர்களை வென்று வாகை சூடினேன். அவருள் ஒருத்தி
குண்டலகேசி என்பவள் மற்றொருவன் அருக்கச்சந்திரன் காண்”
என்றாளாக அதுகேட்ட மொக்கலன் “ஏடி ! பொய்யே புகன்றனை.
குண்டலகேசி ‘பேராசிரியை’ அவளை நீ வெல்லுதல் எங்ஙனம்? நுங்கள்
ஆருகத சமயத்துப் பேராசிரியராகிய நாதகுத்தனாரையே அவள்
வென்றனள். அவள் உன்பாற் றோல்வியுறுவளோ? என்றானாக ; அதுகேட்ட
நீலகேசி, ஏடா ! எளியோய் நீ என்னை யறிந்திலை. குண்டலகேசி ஆவண
நகரத்துள் நாதகுத்தனாரை வென்றனள் என்று செருக்குறுகின்றனை. ஆவண
நகரத்தே குண்டலகேசி நாதகுத்தனாரை வென்ற வகையை அவள்
கூறியவாறே நீ எனக்குக் கூறிக்காண் ! யான் அவள் கூற்றெல்லாம்
குற்றமுடையன என்பதனையும் நாதகுத்தனார் கூறியவையெல்லாம் குற்றமற்ற
வாய்மைகளே யாதலையும் - கூறி எமது ஆருகத சமயச் சிறப்பை
இவ்வவையோரறிய நிலைநிறுத்துவல் - என.’ அதுகேட்ட மொக்கலனும்
அவ்வாறே குண்டலகேசி கூற்றினையே -
எடுத்து ஒவ்வொன்றாகக் கூறிவந்தான். அவற்றிற்கெல்லாம் நீலகேசி
விடைகூறி மொக்கலனைத் தோற்பித்தாள் என்றே கூறக் காண்கின்றோம்
இவ்வுண்மையைச் சிறப்பாக நீலகேசி 284, 5, 9, 7, 8 ஆகிய ஐந்து
செய்யுளாலும் பொதுவாக மொக்கலவாதச் சருக்கத்தில் எஞ்சிய
செய்யுள்களாலும் நன்குணரலாம். எனவே மேற்காட்டப்பட்ட செய்யுள் முதற்
குறிப்பனைத்தும் குண்டலகேசியினின்றும் எடுத்து உரையாசிரியரால் நீல
கேசியுரையிற் குறிக்கப்பட்டவைகளே என்பது துணிவாம்.
இனி, நீலகேசியாசிரியர் தம் நூலில் புத்தமதம் முதலாகப் பூதவாத
மதம் ஈறாக ஒன்பது சமயங்களை மறுத்துள்ளாராயினும் பௌத்த சமயத்தை
மறுப்பதே அவருடைய முதன்மையான குறிக்கோள் என்பதனை
அச்சமயத்திற்காக அவர் நான்கு சருக்கங்களை வகுத்துக்கொண்டமையானும்,
குண்டலகேசிக் காப்பியத்தை மறுப்பதன் பொருட்டே அவர்
குண்டலகேசியையும் அவட்கு ஆசிரியனான அருக்கச் சந்திரனையும்
அவனுக்கு ஆசிரியனான மொக்கலனையும் அவனுக்கு ஆசிரியனான
புத்தனையும் தம் நூலில் வலிந்திழுத்துப் பாத்திரமாக்கிக்
கொண்டிருக்கின்றனர் என்பதையும், இங்ஙனம் மற்றையோரையும்
பாத்திரமாக்கியது நூலின்கண் ஒரு சருக்கம் பெரும் பகுதியைக்
கவர்ந்துகொள்ளாமைப் பொருட்டும், பயில்வோர்க்குச் சுவைமிகுதற்
பொருட்டுமேயாம் என்பதனையும் நீலகேசியை ஓதும் நுண்ணுணர்வுடையோர்
எளிதில் உணர்வார் என்க.
இனிக் குண்டலகேசி என்பவள் குண்டலகேசி என்னும் காப்பியத்
தலைவியாவாள். இவளுடைய வரலாற்றையும் யாம் நீலகேசியுரையாலே
தான் ஒரு சிறிது உணர முடிகின்றது. இக்குண்டலகேசியின் வரலாறாக
நீலகேசியுரையாசிரியரான சமய திவாகரர் கூறுவது வருமாறு :--
“குண்டலகேசி” யென்பாளொரு வைசிய கன்னிகை. இவள் ஒருநாள்
பிரசாதத் தலத்து (மாளிகையில்) விளையாடுகின்றாளாக. ஒரு கிதவப வைசிய
வைசிய புத்திரன் (குற்றவாளியாகிய செட்டி மகன்) ‘காளன்’ என்பான்,
இவன் பௌத்த தரிசனங்கொண்டு பல வழியும் சோரவிருத்தி (களவுத்
தொழில்) பண்ணிச் செல்வானை அரசன் வதிக்க (கொல்ல) வென்றேவச்
சிறைப்பட்டுச் செல்வானை, முன்சொன்ன குண்டலகேசி கண்டு காமப்
பரவசையாக (காமுற்றவளாக :), அதனை அறிந்து அவளுடைய பிதா (தந்தை)
ராசாவைக் கண்டு யாதனுமோருபாயத்தால் மீட்டு இவனுக்குக் குண்டலகேசி
யென்னும் கன்னிகையினை விவாகவிதியாற் கொடுத்தினிது செல்கின்ற
காலத்து ஒருநாள் பிரணய கலகத்து நர்மோக்தி காலத்து (ஊடன்மிகுதியால்
சினந்திருந்தபொழுது) “நீ கள்வனன்றோ?” என்று குண்டலகேசி சொல்லக்
காளனும் தன்னுள்ளத்தே சினங்கொண்டு பின்பொருநாள் வித்தியாசாதன
வியாசத்தால் (வித்தை பயிற்றுவல் என்னுமொரு காரணங் காட்டி) இவளைத்
தனிக்கொண்டு ஒருபர்வதத்தேறி நீ என்னை யிவ்வாறு சொல்லுதலில்
யானுன்னைக் கொல்லத் துணிந்தேன் என்னக் குண்டலகேசியும்
“நற்கொல்லியை முற்கொல்லிய” என்பதற்றே இவனை யான்
கொல்வேனென நினைந்து “யான் சாகிறேனாகி லும்மை வலங்கொண்டுசாவல்”
என, அதற்கியைந்த காளனை வலங்கொள்கின்றாள். வரையினின்றும் விழ
நூக்கினள் (உந்தினள்). நூக்கன் காளனும் புத்த ஸ்மரணத்தால் (நினைவால்)
மோக்ஷித்தான் (வீடு பெற்றான்) குண்டலகேசியும் பர்த்ரு (கணவன்) விரஹ
துக்கிதையாகித் துறப்பேனென்று நினைத்துப் பரசமயங்களெல்லாம் நாவல்
நட்டுச் சயித்துப் பௌத்த தரிசனம் கொண்டு முத்தி பெற்றனள் என்பதாம்.
உயி்ர்களுக்கு வருகின்ற துன்பங்களுக்கும் காரணம் காம வெகுளி
மயக்கங்களே என்னும் கோட்பாட்டையுடைய பௌத்த நூலாசிரியர்
அக்குற்றங்களைத் தமது இலக்கியத் தலைவர்பாலே வைத்துக்
காட்டுவதனையாம் மணிமேகலையினும் காணலாம். மணிமேகலையைப்
பின்பற்றி எழுந்த இக் குண்டலகேசியின் வரலாறும் ஓரளவு மணிமேகலை
வரலாற்றினையே ஒத்திருத்தல் இயல்பே.
இனி, நீலகேசியினின்றும் எடுத்து மேலே குறிக்கப்பட்டுள்ள
குண்டலகேசிச் செய்யுள் முதனினைவுக் குறிப்புக்களுக்குரிய அச்செய்யுட்கள்
ஒவ்வொன்றும் தத்தமக்குள் கொண்டிருந்த பொருள்கள் இன்னின்னவை
என்பதனையும் அந்நூலின்கண் மொக்கலன் கூற்றாக வருகின்ற
செய்யுட்களாலும் சிறந்த உரையாசிரியராகிய சமயதிவாகரர் உரை
விளக்கங்களானும் யாம் நன்குணரலாம். குண்டலகேசிச் செய்யுட்களின்
அம் முதற்குறிப்புக்களின்சொல்லமைதியைக் காணும்பொழுதே
அவையிற்றின்முழுவுருவங்களையும், ஏன்? அப் பெருங்காப்பியத்தின்
முழுவுருவத்தையும் காணப் பெற்றிலேமே ! என்று தீந்தமிழ்ச்
சுவையுணர்வார் நெஞ்சகம் வருந்துதல் ஒருதலை. கழிந்தது கருதலிற்
பயனென்னை? இற்றைநாள் நம் கைக்கெட்டிய அப் பத்தொன்பது
செய்யுட்களையேனும் அக் குண்டலகேசியின் நினைவுச் சின்னமாகப்
போற்றி வைப்பது நங்கடமை என்றுணர்ந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகத்தினர் அவையிற்றிற்கு உரையும் வரைவித்து அழகிய நூலுருவந்
தந்து இப்பொழுது வெளியிடுகின்றனர். இதற்குத் தமிழுலகம் அக்
கழகத்தார்க்கு நன்றிக் கடன் உடையதாக. அச் செய்யுட்கு உரை எழுதும்
பணியை எம்பாற் றந்தமைக்கு யாமும் பொதுவாக அக் கழகத்தார்க்கும்
சிறப்பாக அக்கழகப்பொறுப்பாளர் உயர்திரு வ. சுப்பையா பிள்ளை
யவர்கட்கும் பெரிதும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையேம். வாழ்க
குண்டலகேசி வண்புகழ் ! வாழிய செந்தமிழ்.
இங்ஙனம்
உரையாசிரியன்,
பொ. வே. சோமசுந்தரன்.