விடுமுறைக் காதல்...!

Post date: May 6, 2011 3:56:06 AM

கள்ளிச் செடிகளும்

முளைக்கத்தயங்கும்

களர்நிலமான என் இதயம்

நீ கால் பதித்துச் சென்றதும்

பூப்பூக்க ஆரம்பித்துவிட்டது...!

உன் கல்லூரி விடுமுறைக்காலம்

என் வாழ்வின் வசந்த காலம்...!

வறண்ட என் பாதையில்

நிதம் தண்ணீர் தெளித்துக்

கோலமிட்டாய்....!

உன் விழிகளின் ஓரப்பார்வையோ

என் இரவுகளின் விடியல்களாக

வியாபித்துக் கொண்டிருக்கின்றது...!

விதியின் விளையாட்டால்

என் இதயத்தின் எமனாக

எதிர்வீட்டிலேயே

குடிவந்திட்டாய்...!

முதல் பார்வையிலேயே என்னை

மொத்தமாய் சில்லுடைத்துச்

சிதறச் செய்தாய்...!

உன் பார்வையில் பந்தாகிப்போன

என் இதயம் ,

முட்டிமோதி காற்றிறங்கி

காத்திருந்தது உன் காதலுக்காக...!

இரண்டே நாளில்

மௌன மொழிபேசிய உன் கண்கள்,

ஏனோ தெரியவில்லை

இதழ்ப் பூட்டைமட்டும்

திறந்திட மறுத்தது...!

எத்தனை நாட்கள்தான்

சொல்லாத காதலைச் சுமந்து

கொண்டு திரிவது...?

என் இதயம் உனக்கல்லாது

வேறுயாருக்காவது

நிச்சயிக்கப் பட்டிருக்குமோ

என்ற ஐயத்தில் நின்ற என்னை..,

நிஜத்தில் இழுத்து நெஞ்சைக் கிழித்து

இதயத்தைப் பெயர்த்துக் கையோடு

கொணர்ந்து சென்றாய்...உன் ஊருக்கு...!

உண்மை விளங்கவே

ஒருவார காலம் பிடித்த என்

நெஞ்சம் ஊமையாகிக்

காத்திருந்தது....

உன் அடுத்த விடுமுறைக்காக...!

-Courtesy Vanitha