காதல் என்பதா?கடவுள் என்பதா?

Post date: Mar 11, 2011 12:56:48 PM

பெண்களால் பிரதிஎடுக்கப்படும்

ஓர் பிரத்தியோக

உணர்வு-நாணம்!

பெண்களனைவரும்

பிரசவித்துக்கொண்டிருக்கும்

கற்பின் வெளிப்பாடு...

இதழ் மறுத்துக்

கண்கள் சிரிக்கும்

ஓர் மாய இன்பம்!

ஏற்றுக்கொள்கிறேன்....

ஆனால் என்னிடம் மட்டும்

ஏன் நொடிக்கொருமுறை

வீசிக்கொண்டே இருக்கிறாய் ?

உன் நாண மொழிகளை???

உன் தலைமுடி முழுதும்

சேர்த்து மழிக்காமல்

எதற்காக காதோரத்தில்

ஓரிரு முடியை மட்டும்

சுற்றி விட்டு என் நெஞ்சை

நஞ்சால் தைக்கிறாய்??

நிலா உலாவும் வான் வீதியா

உன் நெற்றி ?

ஒரே சுருக்கத்தில் எனை

மடித்து மடக்கிவிட்டாயே ?

உன் கண்கள் இரண்டும்

மீன்களா என்ன ?

என் இதயத்தைப்

புழுவாக்கித் தூண்டிலில்

கட்டி நீரினுள் விட்டதும்

சட்டென்று இழுத்துவிட்டது ?

உன் கண்களில் வழியும்

கண்ணீரா நான்?

பன்னீர் போல் உன்

கன்னக்குழியில் தேக்கிவைத்து

நீந்துகிறாயே?

அப்படி என்ன பாவம் செய்தேன் ?

நான் சுவாசிக்க வேண்டிய

காற்றை உன் நாசி

திருடிச் செல்கிறது?

உன் காதணிக்கு என்

இதழோடு என்ன வேலை ?

எப்போது பார்த்தாலும்

என் இதழ் உச்சரிப்பிலேயே

ஊஞ்சல் ஆடுகிறது ?

உன் இதழ்கள் இரண்டும்

மதுபானம் அருந்திவிட்டதா?

சற்று நேரத்தில் என்னை

உன்னில் வீழ்த்திவிட்டதே ?

உன் முகம் ரோஜா மலரோ ?

முகப்பருக்கள் அனைத்தையும்

பனித்துளி என்றிண்ணி

சேர்த்து வைத்திருக்கிறது ?

காற்றில் கதைபேசும்

உன் கைகள் இரண்டும்

இப்போது என்னை

விலைபேசுகின்றன,

உன் இதயத்திற்காக ....

இத்தனையாண்டுகளாய்

நான் என் நிழலோடுதான்

பயணித்தேன் !

நேற்று முன்தினம்

திரும்பிப் பார்க்கிறேன் ,

என் நிழலுக்குப் பதில்

நிஜமாக நீ !

தெரியாமல் தான் கேட்கிறேன்

ஏன் என்னை இம்சிக்கிறாய் ?

என் நிழலாய் வரும்

உன் அன்பிற்குப் பெயர்

காதல் என்பதா?

கடவுள் என்பதா?

புரியவில்லையடி....!