புரியாத புதிராய் உன்மீது என் காதல்...!
Post date: Mar 10, 2011 9:31:56 AM
எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும் விளங்க மறுக்கும் புரியாத புதிராய்
உன்மீது என் காதல்...!
என் சகாப்தத்தை
சம்பந்தப்பட்ட உன்னிடமே
சற்றும் விரிக்கமுடியவில்லை
என்னால்...
மற்றவர்களுக்கு மட்டும்
என் காதல் முழுமதியாய்
முகங்காட்டிவிடுமா? என்ன ?
பசிக்கும் தருணமெல்லாம்
உன் நினைவுகளே அடிசிலாகி
என் பசியாற்றிச் செல்கின்றன...!
என்றும் ஊமையாய் உறங்கிய
என் மனம் இன்றிலிருந்து
உறக்கத்தில் உரையாடல்
நிகழ்த்துகிறது உன்னிடம்....
எந்நேரமும் மௌனம் பந்தலிட்ட
என் இதழ்களுக்குத் தெரியாது....
வெட்கப் பூட்டை முத்தச்சாவியால்
பூட்டி உன் இதயத்துள்
புதைத்தாய் என்று...
என் காலம் முழுதும்
உனக்குக் கண்ணாடியாகக்
காத்திருக்கிறேன்...
உன் சிரிப்பையும் சினத்தையும்
உள்ளவாறு பிரதிபலித்திடுவேன்..!
தினம் என்னில் உன்னைப்
பார்த்துவிட்டுச் செல்ல
மறந்துவிடாதே!
என் செங்குருதியில் உள்ள
இரு சிவப்பணுக்கள் ஒன்றுகூடும்
போதெல்லாம் தோன்றும்
ஒற்றை நினைவு இனி
நீ மட்டுமே !
உள்ளமுவந்து உறுதியளிக்கிறேன் ...
இனி என் பிறப்பும் இறப்பும்
உனக்காகவே!
புகழும் இகழும் உனக்காகவே!
மகிழ்வும் நெகிழ்வும் உன்னுடனே!
உன் இன்பத்தில் மறைந்திருந்து
துன்பத்தில் துணை நிற்பேன் !