மணவாட்டியின் மார்பகம்

Previous.....மணவாட்டியின் கழுத்து

மணவாட்டியின் மார்பகம்

"உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்", என்று மணவாளன், குற்ற மனப்பான்மையால் தன்னை இழிவாக எண்ணும் மணவாட்டியின் மார்பகத்தை புகழுகிறார் (உன்னதப்பாட்டு 4:5). மணவாட்டியே, கிறிஸ்துவின் சரீர அங்கத்தினான நீ எடுக்கும் பரிந்துபேசும் விண்ணப்ப ஜெபங்கள் தூர இடங்களில் சுவிசேட ஊழியம் செய்யும் அப்போஸ்தலர்களை ஊட்டமளித்து போர்க்களத்தில் ஈடுபட உதவுகிறது. உனது ஜெபத்தாலும், பண உதவினாலும் அவர்கள் பலனடைந்து கிறிஸ்துவின் யுத்தத்தை செய்துவருகிறார்கள். மக்கெதோனியா நாட்டுச் சபைகள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய் அப்போஸ்தலன் பவுலுக்கு கொடுத்தார்கள். எப்படி கொடுத்தார்கள்? அவர்கள் மிகுந்த உபத்திரவத்தில் இருக்கும்போதே, தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க மனதுள்ளவர்களாயிருந்தார்களாம். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்மஊழியத்தின் பங்கையும் பவுலும் அவனது குழுவில் உள்ள ஊழியர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை மிகவும் வேண்டிக்கொண்டார்களாம் (2 கொ 8:1-6). தாய் எப்படி தன் பிள்ளைகளுக்கு மார்பகத்தின் மூலம் பாலூட்டி வளர்க்கிறாளோ, அதேபோல மக்கெதோனியா நாட்டுச் சபைகள் தர்மஊழியத்தை நிறைவேற்றினார்கள். தெய்வீக எழுத்தர், மணவாட்டியின் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் இரட்டைக்குட்டிகளுக்கு ஒப்பிட்டு எழுதுகிறார்.

பரிசுத்தவான்களுக்குச் செய்யும் இவ்விதமான ஊழியங்களைச் செய்யும் கிறிஸ்துவின் மணவாட்டிகள் மிகவும் உற்சாகத்தோடும், சுறுசுறுப்போடும் லீலிபுஷ்பங்களில் மேயும் இரட்டைக்குட்டிகளைப் போல தங்கள் ஊழியங்களை செய்யவேண்டும். இந்த இரட்டைக்குட்டிகள் ஒரே மனதோடு லீலிபுஷ்பங்களில் மேய்கிறது. ஒரே மனதோடு இந்த ஊழியங்களைச் செய்யவேண்டும். இன்று இவ்விதமான ஊழியங்களைச் செய்யும்படி நமது சபைகளில் போதகர்கள் போதிப்பது கிடையாது. தங்களுக்குகென்று பழைய ஏற்பாட்டின் தசமபாகம் கொடுக்கும்படி மாத்திரம் போதிக்கிறார்கள். அப்போஸ்தலர்கள் சுவிசேடம் அறியப்படாத இடங்களில், காடுகளிலும் மலைகளின்மேலும் அலைந்து திரிந்து தங்கள் பணிகளை நிறைவேற்றிவருகிறார்கள். தனது சரீரமான சபையில் கிறிஸ்து அவர்களை முதல் இடத்தில் அமர்த்தியிருக்கிறார். மக்கெதோனியா நாட்டுச் சபைகள் ஒரே மனதோடு எல்லாரும் அப்போஸ்தல ஊழியர்களுக்கு ஊழியம் செய்தனர்.

Next.....மணவாளனின் உன்னத மலைகள்