நேசருடைய சத்தம்

Previous.......அவளை விழிக்கப்பண்ணாமலும்

நேசருடைய சத்தம்

"இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்", என்று மணவாட்டி தன் தோழிகளிடம் கூறுகிறாள். (உன்னதப்பாட்டு 2:8). தனது மணவாளனின் பிரத்தியமான குரலைக் கேட்டு, மனச்சோர்பு அடைந்த மணவாட்டி மகிழ்கிறாள். அவரது மென்மையான குரலை கண்டுக்கொள்கிறாள். மற்ற குரல்களிடமிருந்து மணவாளனின் குரலை வித்தியாசப்படுத்தி நன்கு அறிந்துக்கொள்கிறாள். கள்ளர்களின் குரல்களுக்கும், தோழிகளின் குரல்களுக்கும் அவளால் அடையாளம் கண்டுக்கொள்ள முடிகிறது. மணவாட்டியே, உனது மணவாளனின் குரலை கேட்க முடிகிறதா? அவரின் குரல் உன்னை கண்டனம் செய்யாமல், நீடிய பொறுமையுடன், வருந்தி அழைக்கிறது. சில சமயங்களில் உன்னை மெதுவாக கண்டித்து உணர்த்துகிறது. இந்த குரலானது விடாப்பிடியாக, உன்னைத் தொடர்ந்து அவரின் அளவிடமுடியாத நேசத்தை வெளிப்படுத்துகிறது. இந்த குரல், உன்னை பழிவாங்கும்படி அல்ல, உனக்கு ஜீவனை அளிக்கும்படி வெளிப்படுகிறது!

அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார்! பாவங்கள், அக்கிரமங்கள் குன்றுகளாய் இருந்தாலும், நம்பிக்கையின்மை, விரக்தி, போன்றவைகள் மலைகளாய் இருந்தாலும், அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார். இதோ அவர் துள்ளிக்குதித்து உன்னைக் காணும்படி வருகிறார்! அவர் உன்னை கைவிடாமல், மீட்கும்படி வருகிறார். என்னே, அவருடைய புரிந்துகொள்ளமுடியாத நேசம்!

Next.....மதிலுக்குப்புறம்பே