தோழர்களின் மந்தைகள்

Previous....அவரது மந்தை

தோழர்களின் மந்தைகள்

என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? உன்னதப்பாட்டு 1:7.

இந்த வசனத்தில் மணவாட்டியானவள் மணவாளனின் அநேக தோழர்களுடைய மந்தைகளின் அருகாமையில் அலைந்து திரிகிறவளாக காண்கிறோம். கிறிஸ்துவின் மணவாட்டியே! நீ மணவாளனின் மந்தையில் தான் இருக்கவேண்டும். மணவாளனுக்கு அநேக தோழர்கள் உண்டு. இந்த தோழர்களுக்கு சொந்தமான மந்தைகள் உண்டு. இந்த மணவாளனின் தோழர்கள் மணவாளனுடைய இடத்தை ஒருக்காலும் பிடிக்கக்கூடாது. இச்சிக்கவும் கூடாது! இந்த தோழர்கள் யோவான் ஸ்னானனைப்போல வனாந்தரத்திலே தங்களை மறைத்துக்கொண்டு கிறிஸ்துவை மாத்திரம் வெளிப்படுத்தவேண்டும். (யோவான் 3:29-30). மணவாளனின் தோழனுக்கு ஒரு சிறிய பொறுப்புதான் உண்டு. ஒரு சுவிசேடகனோ இந்த ஆண்டவரின் மந்தையை தன் கீழே வைத்து மேய்க்கக்கூடாது. தனது சுவிசேட பணி முடிந்தவுடன் வனாந்தரத்திற்குள் பிரவேசித்து, வேறு ஒரு இடத்திற்குப் போய் பிலிப்பைப் போல ஊழியம் செய்யவேண்டும். ".....கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். (அப்போஸ்தலர் 8: 39-40). பிலிப்பு காணாமல் போய்விட்டான். இன்று ஒரு சுவிசேடகன் தன் மூலம் சுவிசேஷம் கேட்டு பயனடைந்தவர்களிடம் திரும்பவும் ஓடிப்போய் அவர்களது காணிக்கைகளை ஆவலுடன் இச்சிக்கிறான். இன்று கூட்டம்கூட்டமாக தேவ மக்கள் இந்த மணவாளனின் தோழர்களின் மந்தைகளில் இருப்பதை காண்கிறோம். "... ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?" ".....இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக..."! (I கொரிந்தியர் 3:4, 21, 23). இன்று மாம்சத்திற்குரிய கிறிஸ்தவர்கள் அநேகர்!

சுவிசேடகன் தனது ஊழியத்தின் மூலம் கிறிஸ்துவை அறிந்த மக்களை சீடர்களாக மாற்றும்படி உள்ளூர் சபை போதர்களிடம் ஒப்படைக்கவேண்டும். தான் ஒரு கூடாரத்தை அமைத்து அந்த தேவ மக்களை வைத்து ஆதாயம் செய்யவே கூடாது.

இந்த உள்ளூர் சபை போதர்களோ இந்த தேவ மந்தையை "நல்ல உக்கிராணக்காரர்போல" சேவை செய்து, "ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்" (I பேதுரு 4 :10). உக்கிராணக்காரர் தேவ மந்தையின் சொந்தக்காரன் அல்லவே! இந்த மந்தையிடமிருந்து தசமபாகமோ கண்ணிக்கையோ வற்புறுத்தி வாங்கவே கூடாது.

இன்று நாம் பரம மேய்ப்பனின் ஒரே மந்தையை காணாமல் அநேக மணவாளனின் தோழர்களின் மந்தைகளை காண்கிறோம். கிறிஸ்துவின் மணவாட்டியானவள் இந்த கூடாரங்களில் அருகில் அலைந்துதிரிந்து பரம மேய்ப்பனின் மந்தையிலிருந்து தங்களை விலக்கிக்கொள்கிறார்கள்.

இந்த உள்ளூர் சபை போதர்கள் உக்கிராணக்காரர்போல இந்த தேவ மந்தைகளை புதிய ஏற்பாட்டின் படி தேவ வசனத்தில் போதித்து வழிநடத்தவேண்டும். தங்களது சபையின் பாரம்பரியத்திலோ, தேவ வசனத்திற்கு புறம்பான சபை தத்துவங்களைப் போதிக்கக்கூடாது.

Next......மேய்ப்பர்களுடைய கூடாரங்கள்