ஆத்தும நேசரைக் கண்டேன்

Previous.....நகரத்திலே திரிகிற காவலாளர்

ஆத்தும நேசரைக் கண்டேன்

"நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்" (உன்னதப்பாட்டு 3:4). தனது மணவாளனைக் கண்டவுடன் இவ்விதம் தன் தோழிகளுக்கு கூறுகிறாள்.

நகரத்திலே திரிகிற காவலாளர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, தன் ஆத்தும நேசரைக் கண்டுக்கொள்கிறாள். ஆனால் நகரத்தின் காவலாளர்களோ அவரை கண்டுகொள்ளவில்லை. எப்போது கண்டுக்கொள்கிறாள்? அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே தான்!

அருமையான மணவாட்டியே, உன்னுடைய விடாமுயற்சியாலும், வாஞ்சையினாலும் நீயே தான் அவரைக் கண்டுக்கொள்வாய்! நீ அவருடைய பரிமள தைலங்களின் வாசனையை அறிந்தபடியால் அவரை நிச்சயம் கண்டுகொள்வாய்!

அநேக நாட்கள் கழிந்து, நீ அவரைக் கண்டுகொண்டபின்பு அவரைப் பிடித்துக்கொண்டு உன் தாயின் வீட்டிலும் உன்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொள்.

அநேக நாட்கள் கழிந்து, நீ அவரைக் கண்டுகொண்டபின்பு அவரைப் பிடித்துக்கொண்டு உன் தாயின் வீட்டிலும் உன்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொள்.

அன்பார்ந்த இயேசுவின் சீடனே, உனக்கு ஒரு தாயின் வீடு உண்டு. அங்கே ஆயிரமாயிரம் தேவப் பிள்ளைகளோடு நீ ஐக்கியம் கொள்கிறாய். அந்த வீட்டில் தான் நீ மறுபடியும் பிறந்தாய். உன்னை தேவனிடம் வழிநடத்தினவர்கள் இந்த தாயின் வீடடை சேர்ந்தவர்கள். "கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும்" கர்ப்ப வேதனைப்பட்டவர்கள் (காலா 4:19). உனக்கு இந்த தாயின் வீட்டில் அநேக பொறுப்புக்கள் உண்டு. இன்று இந்த வீட்டிலுள்ள அநேக மூப்பர்கள் தங்களின் தப்பான உபதேசத்தாலும், அந்தி கிறிஸ்துவின் வஞ்சனையாலும், ஏமாற்றப்பட்டு தாயின் வீட்டை பலவீனப் படுத்தியிருக்கிறார்கள். கள்ள போதகர்கள் இந்த வீட்டிற்கு பாதகம் விளைவித்துக்கொண்டிருக்கிறார்கள். நீதான் நீ பிடித்துக்கொண்ட ஆத்தும நேசரை உன் தாயின் வீட்டிற்கு உடனடியாக கொண்டுவரவேண்டும். இதுதான் ஆண்டவர் உனக்கு கொடுக்கும் ஊழியம்.

உன் தாயின் வீடு, எசேக்கியேல் தீர்க்கதரிசி கண்ட தரிசனத்தின் (37ம் அதிகாரத்தில்) பிரகாரம், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்காக காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் ஆண்டவர் வல்லமையாய் உபயோகித்த மூத்த ஊழியர்கள் இன்று சிலுவையின் வழியைவிட்டு விலகி பின்வாங்கிப்போகினர். சத்தியத்தின் ஆவியானவர் அவர்களை விட்டுப் போய்விட்டார். நீதான் அவர்கள் போதிக்கும் தப்பான கள்ள உபதேசங்களை வெளியரங்கமாக்கி, சத்தியத்தை, தாயின் வீட்டில் கொண்டு வரவேண்டும். நீ தீர்க்கதரிசனம் உரைத்து இந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில் ஒரு எழுப்புதல் கொண்டு வரவேண்டும். உலர்ந்த எலும்புகள் உயிரடையவேண்டும். நமது வேதத்திற்கு அடிப்படையான சத்தியங்களை மறுபடியும் போதிக்கவேண்டும். எங்கே சத்தியத்தின் ஆவியானவர் இருக்கிறாரோ அங்கே விடுதலை உண்டு.

Next...... மணவாட்டியை விழிக்கப்பண்ணாமல்