சாலமோனுடைய மஞ்சம்

Previous....வனாந்தரத்திலிருந்து வருகிறவர் 

சாலமோனுடைய மஞ்சம்

"இதோ, சாலமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்," என்று ஒரு தோழி மணவாட்டியின் காதுகளில் ஓதுகிறாள் (உன்னதப்பாட்டு 3:7). "இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது "(உன்னதப்பாட்டு 3:8).வனாந்தரத்திலிருந்து வருகிற மணவாளன் பல்லாக்கில் தனது மஞ்சத்தோடு வருகிறார். அவரது பல்லாக்கை இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் தங்களது வாட்களால் காத்து, தூக்கி வருகிறார்கள். இந்த அறுபது சவுரியவான்கள் வாளேந்தி போர்புரியும் வல்லுநர்கள். வனாந்தரத்தில் துன்பங்களை அனுபவித்த மணவாளன் இப்போது அரச பல்லக்கினால் கனம் பெறுகிறார். இந்த பல்லாக்கு மணவாட்டிக்கு மாத்திரம் அணுகத்தக்கதாக இருக்கிறது. தகுதியற்ற மணவாட்டி மணவாளனின் பல்லாக்கை அணுகவும், மணவாளனோடு பேசவும் தகுதியாக்கப்படுகிறாள். இவர்கள் இருவரின் உரையாடலை காவல்காக்கும் சவுரியவான்கள் கூட கேட்கமுடியாது.

அருமையான மணவாட்டியே, நீ உனது மணவாளனின் பிரசன்னத்தை சுமந்துவரும் பல்லாக்கை காணமுடியும். இயேசுவை முழு இருதயத்தோடும் முழு மனதோடும்தேடும்போது, இந்த பல்லாக்கை நீ மாத்திரம் காணவும் அணுகத்தக்கதாக இருக்கிறது. உயிர்த்தெழுந்து மகிமையாக்கப்பட்ட கிறிஸ்து "மார்பருகே பொற்கச்சை கட்டப்பட்டு ஒரு அரசராக காணப்படுகிறார் (வெளி 1:13). அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (வெளி 19:12). நீ இந்த அரசரின் பிரசன்னத்தில் தைரியமாக அணுகலாம். உன்னை யாராலும் தடுக்கமுடியாது. சாத்தனாலும் கூட ஒன்றும் செய்யமுடியாது.

நீங்கள் தனியாக துன்பங்கள் அனுபவித்தோ, மருத்துவமனையில் நோயினால் அவதிப்பட்டோ இருக்கக்கூடும். ஆனால் உங்களை கடந்து வரும் அரச மணவாளனின் பல்லாக்கை காணலாம். இந்த பல்லாக்கு நுழையாத எந்த கடினமான பாறைகளால் கட்டப்பட்ட சுவரோ இல்லை.

அவருடைய மஞ்சத்தை காப்பது இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள்! கிறிஸ்துவின் மஞ்சத்தை காப்பது சத்திய ஆவியானவர், தனது இருபுறம் கருக்குள்ள பட்டயத்தை வைத்து போர்புரியும் அறுபது சவுரியவான்கள் மூலம் கிறிஸ்துவின் மஞ்சத்தை காத்து வருகிறார். கள்ள ஊழியர்களும், அந்தி கிறிஸ்துக்களும் அவரின் மஞ்சத்தை களங்கப்படுத்தி வருகின்றனர். சாத்தனைப்போல வேதத்தை ஒரு கோணத்திலிருந்து போதித்து வரும் கள்ள ஊழியர்களுடன் இந்த அறுபது சவுரியவான்கள் யுத்தம் பண்ணிவருகிறார்கள். சத்திய வேத வசனத்தை கலப்படம் செய்யும் கள்ள போதகர்கள் நமது சபைகளில் உண்டு. தேவ வார்த்தையாகிய இயேசுவின் பிரசன்னம் சத்தியத்தோடு பிணைக்கப்பட்டு இருக்கிறது. எந்தவிதத்தில் சத்தியத்தை கலப்படம் செய்கிறார்களோ, அந்த விதத்தில் அவரின் மகிமை மறைக்கப்படுகிறது (ஒளிமறைப்பு).

அறுபது பேர் மூன்று வரிசைகளில், ஒவ்வொரு வரிசையில் இருபது பேர்களாக மஞ்சத்தைச் சுற்றி நின்றுக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு குழுவாகிய தேவ ஊழியர்களின் ஊழியம். ஒரு கள்ள ஊழியர் முதல் வரிசையை மீறினால், அடுத்த வரிசையிலுள்ள ஊழியர்கள் பட்டயமாகிய தேவ வசனத்தை வைத்து அந்த கள்ள ஊழியருடன் யுத்தம் செய்வார்கள். சத்திய தேவ வசனத்தை ஒரு தனிப்படட மனிதனின் ஆவிக்குரிய அனுபவத்தை மிகைப்படுத்தி பொய்யாக்க விடமாட்டார்கள். அநேக பிரசங்கிமார்கள் தேவ வசனத்திற்கு முரண்பான தங்களுக்குக் கிடைத்த தரிசனங்களை மக்கள் நம்பும்படி முயல்கிறார்கள்.

ஒவ்வொரு சவுரியவானும் பட்டயம் பிடித்து போராடுகிறான். எல்லாரும் யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் விசேஷவிதமாக சத்திய ஆவியானவரால் பயிற்சியளிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள். அறுபது பேர்! இருளான கள்ள உபதேசம் சபையாகிய சரீரத்திற்குள் பிரவேசிக்கும்போது இவர்கள் யுத்தம் செய்வார்கள். இராக்கால பயம் நம்மை மேற்கொள்ளும் முன்னாலே இவர்கள் பட்டயத்தை அரைகளிலிருந்து உருவி தயாராக நிற்பார்கள்.

இவர்கள் நம்மை மணவாளனின் மஞ்சத்தை காணச்செய்து அவரோடு உறவாட வழிநடத்துகிறார்கள்!

Next...... லீபனோனின் மரத்தினால் ஒரு இரதம்