இருதய, புயத்தின் முத்திரைகள்

Previous....வனாந்தரத்திலிருந்து வருகிற மணவாளி

இருதய, புயத்தின் முத்திரைகள்

"நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது", என்று மணவாளி மணவாளனை நோக்கி வேண்டுகிறாள் (உன்னதப்பாட்டு 8:6).

மணவாளியே நீ உன்னை கிறிஸ்துவின் இருதயத்தின்மேல் முத்திரையைப்போல வைக்கும்படி அவரிடம் வேண்டிக்கொள்ளவேண்டும். ஒரு நபரின் முத்திரை அவரின் பொருளின் மேல், அவர்தான் சொந்தக்காரர் என்பதற்கு அடையாளமாக, பதிக்கப்படுகிறது. இன்று உலகமக்கள் அவர்களின் சொத்துக்களின்மேல் தங்களது முத்திரைகளை பதிக்கின்றனர். கிறிஸ்துவின் இருதயத்தில் நீ முத்திரையாக பதிக்கப்பட்டு, இருப்பாயானால், அவர் இருதயத்திற்கு நீ சொந்தம் கொண்டாடலாம். அவர் உன்னை முத்திரையை அவரின் இருதயத்தில் வைக்கவேண்டுமானால், உனக்கு அவரைப்போல அன்பும், இரக்கமும், பரிசுத்தமும், பணிவும், அடக்கமும் நிறைந்த இதயமாக இருக்கவேண்டும். அப்படியானால், நீ அவருடைய இருதயத்துடிப்பைக் கேட்பாய்! அவரும் உனது இருதயத்துடிப்பைக் கேட்பார். ஒரு போதகர் தனது முத்திரையை கிறிஸ்துவின் இருதயத்தில் பதிக்காமல் இருப்பாரானால், அவர் கிறிஸ்துவின் செய்தியை ஒருக்காலும் கொடுக்கமுடியாது. வெறுமனே வேதவசனங்களை தியானித்து செய்திகொடுத்தால் போதாது. கிறிஸ்துவின் வசனங்களுக்கு கீழ்ப்படியாமல், அவரின் வசனங்களை போதித்தால் போதாது.

இரண்டாவது உன்னை அவரின் புயத்தின்மேல் முத்திரையைப்போல வைக்க வேண்டிக்கொள்ளவேண்டும். இந்த உலகத்திற்கு எலியா எப்படி கர்மேல் பர்வதத்தின்மேல் கர்த்தரின் வல்லமையை வெளிக்காட்டினானோ நீயும் வல்லமையுள்ள தேவனுடைய புயத்தை வெளிக்காட்டவேண்டும். ".....கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?" (ஏசாயா 53 :1). இதோ, கர்த்தர் தன் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறார் (ஏசாயா 49:16). உனது முத்திரை பதிந்த தேவனது கரம்தான் மரித்தோரை எழுப்பும். முதல் நூற்றாண்டில் நடந்த அற்புதங்களையும் அடையாளங்களையும் இந்த நூற்றாண்டில் செய்யும். இதற்கென்று நீ ஒரு தீர்க்கதரிசன அரங்கில் பங்குகொள்ள அவசியமில்லை. "வல்லமை" முகாமிற்கு போகவேண்டிய அவசியமில்லை. இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அவர் மேல் நேசம் வைத்தால் போதும். அவர் உன்மேல் வைத்திருக்கும் நேசம் மரணத்தைப்போல் வலிது. நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. அவர், உன்மேல் இந்த நேசவைராக்கியம் வைக்கவேண்டுமானால், நீ அவரோடு, சூலமேத்தியாள் எப்படி சாலொமோன் ராஜாவோடு நெருங்கிய உறவு வைத்திருந்தாளோ அதேபோல் வைத்துக்கொள்ளவேண்டும்.

சூலமேத்தியாள் விரும்பும் நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதானது. அந்த நேசத்தின் தழல் அக்கினித்தழலாக இருக்கிறது. அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருந்து சாத்தானின் வல்லமையை எரித்து சாம்பலாக்கிப் போடுகின்றது. எந்த கோட்டையையும் எரித்து நீர்மூலமாக்குகின்றது. உன் நேசரை இதேபோல அவரின் நேசத்தை எல்லோரும் காணும்படி வெளிப்படுத்திக் காட்டும்படி இன்றே வேண்டிக்கொள்.

Next....திரளான தண்ணீர்கள்