இழுத்துக்கொள்ளும்

Previous: பரிமளதைலங்கள்

என்னை இழுத்துக்கொள்ளும்

"என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" (உன்னதப்பாட்டு 1:4).மணவாட்டி தன் நேசரைப் புகழ்ந்து துதித்து பாடும் பாடலைக் கேட்ட மணவாளன் அங்கே வருகிறார். நீ ஒருவேளை இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் நீ எப்போதும், "என்னை இழுத்துக்கொள்ளும், அப்போது உமக்குப் பின்னே ஓடிவருவோம்," என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்! இந்த உலகத்தின் மாய்கையிலிருந்து, நேசர் ஒவ்வொரு நாளும் உங்களை தம்மண்டை இழுத்துக்கொள்ளட்டும்! உங்களை பிசாசின் தந்திர கண்ணிகளிலிருந்து இழுத்துக்கொள்ளட்டும்! கள்ளப்போதகர்கள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள அப்போஸ்தலர்கள் - ஆகியவர்களின் வஞ்சகப்பிடிகளிருந்து அவர் உங்களை இழுத்துக்கொள்ளட்டும்!

யேசுக்கிறிஸ்து உங்களை மட்டுமே இழுத்துக்கொள்வார் ! ஏனெனில் நீங்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். அவர் உங்களை ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்கு இழுத்து விடுகிறவரல்ல! அநேகர் அவர் அப்படிச் செய்வார் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில வேளைகளில் பொய்யான உபதேசங்களையும், கொள்கைகளையுமே, உண்மை என்று தவறாக போதித்துக்கொண்டிருக்கும் சபைகளிலிருந்து வேதத்தின் உண்மையான கொள்கைகளை போதிக்கும் சபைகளுக்கு இழுத்துக்கொள்வார். இந்த "இழுத்துக்கொள்ளும்" வேலையிலும், அவர் அதிக அக்கறை கொள்ளும் நபரை, சீடனை, மணவாட்டியை - தம்மருகில் மட்டுமே இழுத்துக்கொள்ளுகிறார்! சபைகளிலிருந்து இழுத்து விட்டுவிட்டு, அவர் தாம் விலகிவிட, விரும்புவதில்லை!

அவர் தமக்குள் உங்களை இழுத்துக்கொண்டு, ஊழியத்தில் அவரே உங்களை ஈடுபடுத்தும் வரை, நீங்கள் உங்களை ஊழியக்காரர் என்று அழைக்கக்கூடாது! கிறிஸ்து உங்களை அவருக்குள் இழுத்துக்கொண்டு தமது பெரிதான அன்பை உங்கள்மேல் பொழிவாராக! உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையாகிய கல்விக்கூடத்தில் அவர் தாமே உங்களுக்கு நல்ல ஆசிரியராக இருந்து கற்றுக்கொடுப்பாராக! அவர் உங்களை தம்மண்டை இழுத்துக்கொண்ட பின் அவர் உங்களுக்குக் கொடுக்கும் ஊழியத்தின் மூலம் ஏராளமான ஆத்துமாக்களைத் தமக்குள் இழுத்துக்கொள்வார்! இதன் அர்த்தம் என்னவென்றால், நீங்கள் கிறிஸ்துவுக்காக அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்வீர்கள்!

(மொழியாக்கம் by Caroline Jeyapaul)

Next...... ராஜாவின் அறைகள்