மணவாளியின் உயரமும், ஸ்தனங்களும்

Previous.....மனமகிழ்ச்சியை உண்டாக்கும் மணவாளி

மணவாளியின் உயரமும், ஸ்தனங்களும்

தனது மணவாளியின் அழகில் தன்னை மறந்து, மணவாளன் தன் மணவாளியின் உயரத்தையும் ஸ்தனங்களையும் இவ்வாறு புகழ்ந்து பாடுகிறார். “உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது. நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது” (உன்னதப்பாட்டு 7:7-8). கிறிஸ்துவின் பார்வையில் நீ உனது ஆவிக்குரிய வாழ்க்கையில் இந்த உலகிலுள்ள எந்த மனிதனைவிடவும் உயரமானவன்/ள். ஏனென்றால் நீ கிறிஸ்துவோடு உன்னதத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறாய்! நீ கீழே வந்து இந்த உலகத்தின் அழுக்கு சாக்கடையை முகர்ந்துகூட பார்க்கக்கூடாது. உனது ஸ்தனங்கள் ஆவிக்குரிய பாலான வேத வசனங்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் போராட்டங்களோடு வளரும் தேவபிள்ளைகளுக்கு ஊட்டுகிறது.

உனது கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கும் ஆவிக்குரிய வாழ்க்கை ஒரு உயரம் பனைமரத்தொழுங்குபோல காண்கிறது. உனது ஆவிக்குரிய ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது. நீ தியாகமாக, சுயத்தை மறந்து செய்யும் ஊழியம், உன் ஸ்தனங்களுக்கு ஒப்பாகயிருக்கிறது. உனக்கு கிறிஸ்து கொடுக்கும் ஊழியம் இந்த மனிதனாலும் வந்தது கிடையாது. உனது தாலந்துகள், ஆவியின் வரங்கள் எல்லாம் கிறிஸ்து கொடுத்ததுதான். எந்த மனிதனோ, எந்த சபையோ, எந்த ஸ்தாபனத்திற்கோ உனது ஊழியத்தை பறிக்கவோ, சொந்தமாக்கிக்கொள்ளவோ எந்தவிதமான உரிமையும் கிடையாது. நீ அவருடையவன்/ள்! உனது ஒவ்வொரு சரீர அங்கமும் அவருக்குத்தான்! உனது முழு சரீரத்தையும் அவருக்கு அர்பணிப்பாயாக. ஒவ்வொரு சரீர அங்கத்தையும் பரிசுத்தத்திற்கு ஒப்புக்கொடு!

உனக்கு ஒரு ஆவிக்குரிய மூக்கு உண்டு. இதன் மூலம் கிறிஸ்துவின் பரிசுத்த பிரசன்னத்தை நுகரவேண்டும். காஷ்மீர் ஆப்பிள் ஒரு வித்தியாசமான நற்மணத்தை பரப்புகிறது. இதுபோல் மணவாளியும் மற்றவர்களுக்கு கிச்சிலிப்பழங்கள்போல ஆவிக்குரிய ஆகாரங்களைக் கொடுத்து, கிறிஸ்துவை பற்றிய அறிவை எங்கும் நற்மணமாக பரப்பவேண்டும்!

Next.... மணவாளனின் அற்புத திராட்சரசம்