ஆத்தும நேசரைக் காணவில்லை

Previous.....கலைமானும் மரைகளின் குட்டியும்

ஆத்தும நேசரைக் காணவில்லை

முந்தின அதிகாரத்தின் கடைசி வசனத்தில் மணவாட்டி மணவாளனை அவளிடம் சீக்கிரம் வர கோருகின்றாள். அவருடைய பிரசன்னத்தை இன்னும் உணராதலால் தன் தோழிகளிடம் ,"இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை" எனஅங்கலாய்க்கிறாள். (உன்னதப்பாட்டு 3:1).

சில சமயங்களில், நீங்கள் ஆண்டவரின் பிரசன்னதிற்காக ஏங்கும்போது, அவர் தன்னை மறைத்துக்கொள்கிறார். நீங்கள் பயந்த இரவு உங்களை அணுகிறது. ஆனால் அவர் தாமதிக்கிறார். அவர் உங்களை ஏமாற்றிவிட்டாரோ என்று ஏக்கத்துடன் கதி கலங்குகிறீர்கள்! இரவின் அதிபதியான லூசிபர், "இயேசு உங்களை நேசிக்கவில்லை, அநேக நாட்கள் காத்திருந்தும், அவர் கொடுத்த வாக்குத்தந்தங்களை நிறைவேற்ற தவறிவிட்டார்", என்று உங்கள் காதில் ஓதுவதை கேட்கலாம். நம்பிக்கை இழந்த மணவாட்டி தன்னை ஒரு சொப்பன உலகத்தில் காண்கிறாள். தான் தேடும் மணவாளனை சொப்பனத்தில் கூட காணமுடியவில்லை. என்னே பரிதாபம்!

சில தேவப்பிள்ளைகள் சொப்பனம் தரிசனம் மூலமாக இயேசுவைக் கண்டதாக பெருமையுடன் கூறுகிறார்கள். தேவன் கொடுத்த தரிசனங்கள் நிறைவேறியதை சொப்பனத்தின் மூலமாக கண்டிருக்கலாம். இதைப்போல ஆவிக்குரிய அனுபவங்கள் அவர்களின் விசுவாசத்தை பலப்படுத்தியிருக்கலாம்.

எல்லா தேவப்பிள்ளைகளும் தரிசனத்தில் ஆண்டவரைக் கண்ட அனுபவங்கள் இருக்காது. இதைப்போல அனுபவங்களை விரும்பியும் கிடைக்காமலிருக்கலாம். அருமையான மணவாட்டியே இதைப்போல கிடைக்காவிட்டாலும், "நான் அவரைக் காணவில்லை", என்று சொல்லாதே! இங்கே எது முக்கியம் என்றால் அவரை தரிசனத்தில் காண்பதோ, அவரின் வாக்குத்தத்தம் நிறைவேறுவதை சொப்பனத்தில் மூலம் காண்பதோ அல்ல! நீங்கள் உங்களுக்காக ஜீவனைக் கொடுத்து ஆத்துமாவை மீட்டவரின் மேல் வைத்த அன்பு தான் முக்கியம். அவரை தரிசனத்தில் காண்பதோ அல்லது வாக்குத்தத்தம் நிறைவேறுவதை காண்பதோ முக்கியமல்ல. இயேசு உங்களை நேசிப்பதால், அவர் நிச்சயம் தனது வாக்குத்தத்தை நிறைவேற்றுவார்! "குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை" (ஆபகூக் 2:3).

Next.....நகரத்திலே திரிகிற காவலாளர்