மணவாளியின் நேசம்

"உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!," என்று மணவாளியின் நேசத்தை மணவாளன் புகழ்கிறார் ( உன்னதப்பாட்டு 4:10).

கிறிஸ்துவின் அன்பு நித்தியமானது, அளவிடமுடியாதது, பூரணமானது ! ஆனால் மணவாளியான உனது அன்போ ஊஞ்சலாடுகிறது, மாறிக்கொண்டேயிருக்கிறது. உணர்ச்சிவசப்பட்ட அன்பாக இருந்தாலும், மங்கியெரியும் மெழுகைப்போல இருந்தாலும், எப்போதும் சிறிதளவாகிலும் எரிந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் மாய்மாலம் இல்லாத அன்பு! உனது இந்த விதமான அன்பை அவர் நன்கு அறிவார். இந்த நேசம் அவருக்கு "எவ்வளவு இன்பமாயிருக்கிறது". உன் பழைய வாழ்க்கையில் பாவமாகிய திராட்சரசம் உன்னை வெறிகொள்ளச் செய்ததைவிட அவரது நேசம் மிகவும் சிறந்தது! இனிமையானது! உன்னிலுள்ள குணங்கள் அவருக்கு பரிமளதைலங்களாக நற்மணம் கொடுக்கிறது. கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! குறைகள் இருப்பினும்,உனது குணங்கள் நாளுக்குநாள் வளர்ந்து கிறிஸ்துவின் சாயலுக்கு உன்னை மாற்றிவருகிறது.

உனது நற்கந்தம் இந்த உலகத்திலுள்ள கிறிஸ்துவை அறியாத ராஜாக்கள், அறிவாளிகள் போன்றோரின் நற்கந்தங்களை விட மேலானது. நீ ஒரு பெரிய பதவி வகிக்காமலிருக்கலாம். ஆனால் உன்னில் வாழும் கிறிஸ்து தனது நற்கந்தத்தை உன் மூலமாக பரப்புகிறார். ".....கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம் (கொலோசெயர் 1:27).

"என் சகோதரியே! என் மணவாளியே!" என்று உன்னை அழைக்கிறார். நீ கிறிஸ்துவிற்கு உடன் பிறவாத சகோதரியாகவும், மணவாளியாகவும் இருக்கிறாய். இந்த உலகத்தில் உனக்கு எத்தனை அருமையான மேன்மை ! உன்னை அவர் பாவப்பிடியிலிருந்து மீட்டுக்கொண்டார். இனி நீ பாவம் செய்ய துணிய மாட்டாய். எழுந்து வா! அவரோடு கூட உன் திராட்ச தோட்டத்திற்குப் போ!

Next.....மணவாளியின் உதடும், நாவும், ஆடைகளும்