பாம்பாட்டம்  திரைவிமர்சனம்!


3.5/5

நான் அவன் இல்லை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பாம்பாட்டம். வடிவுடையான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் சலில் அன்கோலா, ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன் என பலர் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை இனியன் மற்றும் சுரேஷ் கையாண்டுள்ளனர்.  ஜீவன் இந்த படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது... சுதந்திரத்திற்கு முன்னால் நடக்கும் இந்த கதையில் ராணி மகாதேவி தனது சமஸ்தானத்தை ஆட்சி செய்து வருகிறார். அந்த சமயத்தில் ஒரு ஜோசியர் நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார். இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் கொள்ளுமாறு உத்தரவிடுகிறார் ராணி மகாதேவி.  அதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து அவரை கொன்று விடுகிறது, மேலும் ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து உள்ளது என்று ஜோசியர் கூறுகிறார். இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்படுகிறது. இந்நிலையில் இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார், அதன் பின்பு என்ன ஆனது என்பதே பாம்பாட்டம் படத்தின் கதை.


ஆக்சன், அட்வென்ச்சர் மற்றும் பேண்டஸி நிறைந்த படமாக பாம்பாட்டம் உருவாகியுள்ளது.  ஜீவன் அப்பா மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  போலிஸ் அதிகாரியாக அவர் வரும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் சுமன், ரித்திகா சென், லிவிங்ஸ்டன், சக்தி சரவணன் ஆகியோரும் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படம் முழுக்கவே நிறைய இடங்களில் சிஜி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அவை ஒரு சில இடங்களில் நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் சிஜி சற்று மோசமாகவே உள்ளது. இது படம் பார்க்கும்போது ஒரு பெரிய உறுத்தலாகவே இருக்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி நிறைய திருப்பங்களுடன் உள்ளது.  இரண்டு மணி நேரம் பத்து நிமிடம் மட்டுமே இருக்கும் இந்த கதையில் இன்னும் சில காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம். அம்ரிஷ் இசையில் பின்னணி இசை நன்றாக இருந்தது.  சிறிய பட்ஜெட் படம் என்பதால் சிஜி காட்சிகளுக்கு அதிகமாக செலவு செய்யவில்லை.  அதில் மட்டும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் நல்ல படமாக வந்து இருக்கும்.