#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
ராம் படம் என்பதையே மாற்றி தனது பாணிக்கு ராமையே கூட்டிக் கொண்டு பறந்து போக செய்திருக்கிறார் மிர்ச்சி சிவா என்று தான் சொல்ல வேண்டும். 'பறந்து போ' படத்தின் கதை, அதில் உள்ள பாசிட்டிவ் மற்றும் மைனஸ் உள்ளிட்ட விஷயங்களை விரிவாக பார்க்கலாம் வாங்க.. பறந்து போ கதை: ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4ம் தேதியான இன்று வெளியாகிறது. கோகுல் (மிர்ச்சி சிவா) மற்றும் அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்களுடைய மகன் அன்புவை (மிதுல் ரியான்) வெளியே அனுப்பாமல், எப்போதுமே வீட்டிலேயே அடைத்து வைக்கின்றனர். ஆன்லைன் கிளாஸ் என மற்றவர்களுடன் பழகும் வாய்ப்பு இல்லாமல் வளரும் சிறுவன் கடன் தொல்லைக்கு பயந்துக் கொண்டு அப்பா தனது பைக்கில் மகனுடன் செல்லும் ஒரு ரோட் ட்ரிப் இருவரையும் எப்படி எல்லாம் மாற்றுகிறது.
அன்பு கேட்கும் கேள்விகளுக்கும், அவன் செய்யும் செயல்களையும் கோகுல் எப்படி சமாளிக்கிறார். புடவை எக்ஸ்போவுக்காக சென்றிருக்கும் மனைவி கிரேஸ் ஆண்டனி சந்திக்கும் விஷயங்கள், சிறு வயது கிரஷ் அஞ்சலியை கோகுல் சந்திக்கும் இடம் அஞ்சலியின் கணவர் சொல்லும் விஷயம் என பல சுவாரஸ்ய கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி கோர்த்து குழந்தை வளர்ப்பு எந்தளவுக்கு முக்கியம். அதற்கு முதலில் நாம் பெற்றோர்களாக வளர்ந்து விட்டோமா? என்பதை புரிய வைக்கக் கூடிய பாடமாகவே இந்த பறந்து போ படம் அமைந்திருக்கிறது. படம் எப்படி இருக்கு?: இயக்குநர் ராம் படம் என்றதுமே ஏதோ ஒரு பிரச்னை இருக்கப் போகிறது. யாருக்கோ ஏதோ ஆகப் போகிறது என்கிற நெகட்டிவ் சிந்தனைகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தாலும், மிர்ச்சி சிவாவின் அணுகுமுறை மற்றும் இந்த படத்தை தனது எழுத்துக்களாலும், நகைச்சுவை காட்சிகள் மூலமாகவும் கிட்டத்தட்ட 23 பாடல்கள் வழியாகவும் காட்சிப்படுத்திய விதத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ராம். கத்தியும் ரத்தமும், துப்பாக்கி குண்டுகளும் தான் படங்களா? என்கிற கேள்விகளை தொடர்ந்து விமர்சகர்கள் எழுப்பி வந்த நிலையில், சமீபத்தில் ஏகப்பட்ட ஃபீல் குட் படங்களையும் எங்களால் கொடுக்க முடியும் என தமிழ் சினிமா இயக்குநர்கள் நிரூபித்து வருகின்றனர்.
படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திக் கொண்டே இருப்பதே படத்திற்கான பெரிய பிளஸ் என்று சொல்லலாம். கவலைகளை மறந்து பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்க வரும் மக்களின் மனதை லேசாக மாற்றி பறந்து போக நிச்சயம் இந்த படம் செய்துவிடும். ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடக்காதீங்க, உலகம் ரொம்ப பெருசு, உலகில் உள்ள மனிதர்கள் அவ்வளவு மோசமானவர்கள் கிடையாது. நல்ல மனிதர்கள் தான் அதிகளவில் நம்மை சுற்றி இருக்கின்றனர் என்பதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார். மிர்ச்சி சிவா மற்றும் மிதுல் ரியான் தான் இந்த படத்திற்கு பெரிய பலம். சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் அதிகம் இருந்தாலும், அவை படத்தை பெரிதாக பாதிக்காமல், சின்ன சின்ன பிட்டுகளாக வந்து ரசிக்க வைக்கின்றன. மதன் கார்கியின் வரிகளும் சிறப்பு. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பிளஸ் ஆகவே உள்ளது.