#KollywoodStreet Xclusive Indian Cinema Updates 24×7 News, Photo's, Video's, & Many More | All Category Movie's Review Site ✍🏻 Operates As An Online
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் மலையாள நடிகர் ஷேன் நிகம், முதல் படத்திலேயே ஆக்ஷன் கதைக்களத்தை அசால்டாக கையாண்டிருக்கிறார். அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவது, அம்மாவிடம் பாசம் காட்டி பேசுவது, காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று வயதுக்கு ஏற்ப துறுதுறு என்று நடித்திருப்பவர், ஆக்ஷன் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆனால், என்ன அவரது வசன உச்சரிப்பில் அக்மார்க் கேரளத்து வரவு என்பது அப்பட்டமாக தெரிகிறது.
நாயகியாக நடித்திருக்கும் நிஹாரிகாவின் ஒரு வார்த்தை தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்றாலும் படத்தில் அவரது திரை இருப்பு என்பது மிக மிக குறைவே. அதை சமாளிப்பதற்காகவே அம்மணியை ‘அலைபாயுதே’ படத்தின் பாடல் ஒன்றில் சில நிமிடங்கள் ஆட வைத்து ஆறுதலடைய செய்திருக்கிறார்கள்.
ஆண்டி வில்லன் என்று சொல்லக்கூடிய நல்லவனா?, கெட்டவனா? என்ற கேள்வியை எழுப்பும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
கலையரசனின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, ஒரு சில காட்சிகளில் வந்தாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் கருணாஸ், அப்பாவாக நடித்திருக்கும் பாண்டியராஜன், அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தையாக நடித்திருக்கும் தீபா, நண்பராக நடித்திருக்கும் லல்லு,சிறு கதாபாத்திரம் என்றாலும் அகல்யா வெங்கடேசன் தனது நடிப்பின் பங்கினை சிறப்பாக அளித்திருக்கிறார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சாம்.சி.எஸ் இசையில் திருமண பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக மட்டும் இன்றி கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றவாறும் இருக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், வேகமான திரைக்கதைக்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் வீரியம் சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் கேமரா காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருப்பதோடு, ஆக்ஷன் காட்சிகளை மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஆர்.வசந்தகுமார், சண்டைப்பயிற்சி இயக்குநர், கலை இயக்குநர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ், சிறு விசயத்தை வைத்துக்கொண்டு திரில்லர் ஆக்ஷன் ஜானரை ராவான காட்சிகள் மூலம் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.
படத்தின் மிக முக்கியமானது ஆக்ஷன் மற்றும் எமோஷனல் என்றாலும் ஆக்ஷன் காட்சிகள் ஈர்க்கும் அளவுக்கு எமோஷனல் காட்சிகள் அவ்வளவாக ஈர்க்காதது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், நடந்த தவறுக்கு காரணம் தான் இல்லை, என்பதை தெரிந்துக் கொள்ளும் நாயகன், அதன் பின்னனி குறித்து அறிவதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, படம் வேகம் எடுப்பது மட்டும் இன்றி, பார்வையாளர்களுக்கு பரபரப்பான திரில்லர் அனுபவத்தையும் கொடுக்கிறது.
கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, நடிகர்கள் தேர்வு, ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த விதம், திரைக்கதை மற்றும் காட்சிகளை கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தியிருக்கும் இயக்குநர் வாலி மோகன் தாஸ், எந்த கதையாக இருந்தாலும் தனது மேக்கிங் மூலம் கவனம் ஈர்த்துவிடுவார் என்பதை நிரூபித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘மெட்ராஸ்காரன்’ திரை ரசிகர்களுக்கானவன்.