அக்கரன் - திரை விமர்சனம் - 3.5/5
(அக்கரன்) - எல்லாப் படங்களிலும் குணச்சித்திர மற்றும் துணைப் பாத்திரங்களில் வரக்கூடிய எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஷ்வந்த்தை வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை ரசிக்கும்படி எடுத்து விட முடியாதா என்று தொடைதட்டிக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.
அதற்கு அவர் நம்பியிருப்பது ஒரு ஆக்ஷன் த்ரில்லரை. முதல் காட்சியிலேயே இரண்டு பேரை நாற்காலியில் கட்டி வைத்து அல்ல… அல்ல… பசையைக் கொண்டு ஒட்டி வைத்து வன்முறையைப் பிரயோகித்து சில உண்மைகளை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
அங்கிருந்து பின்னோக்கி திரும்பும் ஃப்ளாஷ்பாக்கில்…
தன் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் எம் எஸ் பாஸ்கர், முதல் மகளான வெண்பாவுக்கு மணமுடித்து வைக்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே கபாலி விஸ்வந்துடன் திருமணப் பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்க அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருக்கிறார் வெண்பா.
இளைய மகள் பிரியதர்ஷினி மருத்துவம் படித்துக் கொண்டிருக்க, அதற்கான கோச்சிங் கிளாஸ் சென்ற நிலையில் காணாமல் போகிறார். செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான நமோ நாராயணனுக்கு சொந்தமான அந்த கோச்சிங் சென்டரில் விசாரித்ததில், சரியான பதில் கிடைக்காது போக ஒரு வழக்கறிஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர்.
அதற்கு விஷ்வந்தும் உதவி புரிகிறார் ஆனாலும் எந்த விதமான துப்பும் கிடைக்காத நிலையில், தொடக்க காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் ஒட்டி வைத்திருக்கும் அந்த இருவரும் பாஸ்கரின் தாக்குதலுக்கு பயந்து சில கொடூரமான உண்மைகளைச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.