யேசபேல் (Madam Bubble) என்ற கள்ள தீர்க்கதரிசி

Home

முந்திய பகுதி ........ வசியம் நிறைந்த பூமி (Inchanted Ground)

யேசபேல் (Madam Bubble) என்ற கள்ள தீர்க்கதரிசி

பயணிகள் சிறிது தொலைவில், ஏதோ சத்தம் கேட்டு, ஒரு முழங்காலில் நின்று தன் கைகளை வானத்திற்கு நேராக உயர்த்தியிருக்கும் ஒரு மனிதனை காண்கிறார்கள். அவனைப் பற்றி விசாரிக்க தான் ஒரு வசியம் நிறைந்த பூமியிலிருந்து தப்பி ஒளிமயமான தேசத்தை (Celestial City) நோக்கி ஓடுவதாகவும் சொன்னான். அவனை தங்களின் குழுவில் சேரும்படி சொன்னார்கள். அந்த பயணியின் பெயர் Stand Fast (உறுதியாக

நில்) என்பதாகும். அவன் தனக்கு வசியம் நிறைந்த பூமியில் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தான். நேர்மை (Mr.Honest) இந்த பயணியை அறிந்ததாகக் கூறினார். அவனும் தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு பயணிகளை கண்டதாகவும், அங்கே ஒரு விசித்திரமான பெண்ணை சந்தித்ததாகவும் சொன்னான். அவளை பார்ப்பதற்கு இந்த உலகத்தின் அதிபதி போல, எல்லா ஆடம்பரங்களுடனும், வசீகரிக்கும் தன்மை உடையவளாகக் காணப்பட்டாளாம். உறுதியாக நில்லைப் பார்த்து, "நீ எனக்கு பணிந்துகொண்டால் இந்த உலகில் உன்னை பிரபலமாக்குவேன்", என்று வாக்களித்தாளாம். தன் பெயர் Madam Bubble (மேடம் நீர்க்குமிழி) என்றும் தன்னிடம் மூன்று வசீகரிக்கும் பொருட்கள் இருப்பதாகவும் அவைகளை தனக்கு அளிப்பதாகவும் கூறினாளாம். அவைகள், அவளது பணம், சரீரம், படுக்கை என்று சொன்னாளாம். இதை கேட்டவுடன் உறுதியாக நில் (Stand Fast) முழங்காலிட்டு பரலோக தேவனை நோக்கி தன் கைகளை உயர்த்தி கண்களை ஏறெடுத்து கதறி அழுது கூப்பிட்டானாம். உடனே அவள் மறைந்துவிட்டாளாம். கிரேட் ஹார்ட் இவள் ஒரு மந்திரக்காரி என்றும், இவளுடைய மந்திரத்தால்தான் அந்த பூமி, வசியம் நிறைந்த இடமாக மாறியது என்று சொன்னார்.

இந்த சூனியக்காரியை பற்றி கிரேட் ஹார்ட் வர்ணிக்கிறார். இவளது அழகைக் கண்டு மயங்கி இவள் மடியில் விழுந்தவர்கள் தேவனுக்கு விரோதிகளாகும். இவள் ஒரு வாயாடி (Gossiper). தன் வாயின் வார்த்தைகளால் (Oratorial skill) தன்னிடம் மயக்கி பயணிகளை தன்வசமாக்கிக்கொள்கிறாள். பயணிகளை பொருளாசையுடையவர்களாய் மாற்ற, தந்திரமான வார்த்தைகளால், அவர்களை தனக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுகிறாள். பணக்கார பயணிகளை கனப்படுத்துகிறாள். ஆனால் ஏழை பயணிகளை இகழ்கிறாள். ஒருவரிடம் பணம் பெறவிரும்பினால் அந்த மனிதனை வீடுவீடாக சென்று புகழ்கின்றாள். அவள் ஆடம்பர வாழ்க்கையையும், விருந்தையும் விரும்புகிறாள். மற்றவர்கள் அவளைப் புகழ, தன்னை ஒரு தேவதையாக காண்பித்துக்கொள்கிறாள். அவள் மற்றவர்களை துணிகரமாக ஏமாற்றுகிறாள். தனக்கு யாருமே நிகர் இல்லை என்று சொல்கிறாள். தன்னை நேசிக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளை அவர்களுடன் தானும் தங்குவதாக வாக்களிக்கிறாள். தன்னை எப்போதும் மற்றவர்கள் நாடுவதை விரும்புகிறாள். தன் மடியில் ஆண்கள் படுக்க விரும்புகிறாள். தனது விற்பனை பொருட்களை விற்கும்வரை ஓய்ந்திருக்கமாட்டாள். தன் பேச்சை கேட்பவர்களுக்கு கிரீடமும் ராஜ்யங்களையும் அளிக்கிறாள். ஆனால் அவர்களை நரகத்திற்கு நேராகக் கொண்டுசெல்கிறாள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

சாதாரண பூமி வசியம் நிறைந்து காணப்படுவதற்கு காரணம் இந்த சூனியக்காரியான ஊழியக்காரிதான். தியத்தீரா சபையிலிலுள்ள "தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்" ஆண்டவரின் ஊழியக்காரர்களை ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கிறாள். நாம் அவளுக்கு இடங்கொடுக்கக்கூடாது (வெளி 2:20).

இது, கள்ள தீர்க்கதரிசியிடமிருந்து (False Prophet) வந்த வஞ்சிக்கும் ஆவி. இந்த சபைகளின் நடுவில் "வஞ்சிக்கும் தீர்க்கதரிசன" ஆவி. இந்த வஞ்சிக்கும் ஆவியின் மூலமாக வஞ்சிக்கப்பட்ட "ஆண்டவரின் ஊழியக்காரர்கள்" நமது சபைகளில் இருக்கிறார்கள். Madam Bubble ல் காணப்படும் குணாதிசயங்கள் இவர்களில் காணப்படுகிறது. இவர்கள் தங்களின் வாயின் வார்த்தைகளால், தங்களிடம் மயக்கிக்கிடக்கும் தேவமக்களை தங்கள் வசமாக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் நம்மை அவர்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். பணக்கார விசுவாசிகளை தங்கள் சபைகளிலும், ஊழியங்களிலும், கனப்படுத்துகிறார்கள்; புகழ்கிறார்கள். ஆனால் ஏழைப் பயணிகளை மதிக்கமாட்டார்கள். இவர்கள் ஆடம்பர வாழ்க்கையையும், விருந்தையும் விரும்புகிறார்கள். விசுவாசிகள் அவர்களைப் புகழ, தங்களை சின்ன தேவர்களாக (Demi-god) காண்பித்துக்கொள்கிறார்கள். இவர்கள் விசுவாசிகளைத் துணிகரமாக ஏமாற்றுகிறார்கள். தங்களுக்கு யாருமே நிகர் இல்லை என்று காண்பித்துக்கொள்கிறார்கள். தங்களுக்கு காணிக்கை கொடுத்து நேசிக்கும் தேவ பிள்ளைகளுக்கு ஆசீர்வாத வாக்குத்தங்களை அளிக்கிறார்கள். தங்களின் ஊழியங்களை எல்லோரும் நாட விரும்புகிறார்கள். தங்களின் விற்பனை பொருட்களை விற்கும்வரை ஓய்ந்திருக்கமாட்டார்கள். இவர்களின் கூடாரங்கள் நமக்கு " இளைப்பாறும் கூடாரமாக”, வசியம் நிறைந்த பூமியில் காணப்படுகிறது. இந்த கூடாரங்களில் நுழையாமல், நாம் இந்த மயக்கும் நிலத்திலிருந்து, பரிசுத்தாவினவரின் உதவியோடு கடந்து செல்லவும். இங்கே மயங்கி கடக்கும் தேவமக்களை உலுக்கி எழுப்பி ஒளிமயமான பட்டணத்திற்குக்கொண்டு செல்லவேண்டும்.

பணம், சரீரம், படுக்கை என்ற இந்த மூன்று காரியங்களுக்குத்தான் இந்த விழுந்துபோன ஊழியர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சரீரப்பிரகாரமான, எல்லா வசதிகளுள்ள வாழ்க்கையை முன்வைத்துத்தான், இவர்கள் ஊழியம் செய்கிறார்கள். ஆத்துமா இரட்சிப்பிற்கு முதலிடம் இல்லை. ஆனால் தங்களின் செய்திகளை கேட்ட மக்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் அவர்களும் அவர்களை நம்பியிருக்கிறவர்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு பெரிய ஏமாற்றம் (Delusion)!

Mr. Stand Fast ஐ போல, நாம் நம்மை தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக தாழ்த்தி, ஜெபித்து, Madam Bubble போன்ற கள்ள தீர்க்கதரிசிகளின் கைகளிருந்து தப்பி, நமது கண்களை ஒளிமயமான தேசத்தின் மேல் வைத்து, நேராக ஓடுவோம். வேதத்தின் வெளிச்சத்தில் நடந்து, நமது மேலே வந்த இருளின் மேகமூட்டத்தை அகற்றுவோம். எல்லா தேவ மக்களையும் நேசித்து, ஒருவருக்கொருவர் புத்தி கூறி, தேவ வசனமாகிய வரைபடத்தை வாசித்து முன் செல்வோமாக!

யேசபேல் போன்ற கள்ள தீர்க்கதரிசிகளின் ஊழியங்கள், Madam Bubble ஐ போல, ஒரு நீர்குமிழிக்கு ஒத்தாகும். இந்த நீர்குமிழ் கொஞ்ச காலம் மாத்திரம் நிலைத்திருக்கும், ஆண்டவர் இந்த நீர்குமிழுக்கு காலத்தை நிர்ணயித்திருக்கிறார். இது ஒரு களையாகும். கோதுமை செடியோடுவளரும். இந்த களையை பிடுங்க முயற்சித்தால் கோதுமை செடியையும் பிடுங்கி எறிந்துவிடுவோம். நமது மத்தியில் உண்மையாவே ஊழியங்கள் செய்யும் மேடை பிரசங்க ஊழியர்களும் உண்டு. இவர்கள் சில தப்பான தத்துவங்களைப் பிரசங்கித்தாலும், பழைய ஏற்பாட்டின் லேவியரின் முறைப்படி ஊழியங்கள் செய்தாலும், இவர்கள் கிறிஸ்துவைத்தான் பிரசங்கிக்கிறார்கள். இவர்களையெல்லாம் கள்ள தீர்க்கதரிசிகளென்றும் கள்ள போதகர்களென்றும் கூறமுடியாது. நாம் பெரோயா பட்டணத்தார் எப்படி மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தார்களோ, அதேபோல நாமும் இவர்களின் போதகங்களை ஆராய்ந்து பார்த்து, அவைங்களை வேதவசங்களோடு ஒத்துப்பார்த்து ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்போதுதான் நற்குணசாலிகள் என்று பெயர்பெறுவோம் (அப்போஸ்தலர் 17:11-12).

ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய பெந்தேகோஸ்தே சபையில் பிசெல்லேரி (Bisleri) பாட்டில்களைத் தித்திக்கும் தண்ணீராக (Sweetened drink) மாற்றி யேசுகிறிஸ்து கானான் ஊரின் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி செய்த அற்புதத்தைத் சுட்டிக்காண்பித்தனர். பணப்பைகளில் பணம் வரும் மந்திர ஜாலங்களை உண்டுபண்ணும் அற்புதங்கள் நடந்து இயேசு இந்தவிதமான அற்புதங்கள் செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த போதகர் ஆண்டவரை நேசிப்பவர்தான். ஆனால், வேறு ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த போதகரின் மூலமாக, இந்த மாதிரியான ஒரு ஆவியை கிரியை செய்ய அனுமதித்துவிட்டார்.

நாம் எல்லா ஊழியக்காரர்களுக்கவும், அவர்கள் வஞ்சிக்கப்படாமல், யேசபேல் ஆவியிடனத்திருந்து தப்பும்படியாக, ஜெபிக்கக்கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போது எசேக்கியேல் 13 அதிகாரம், 17 - 23 வசனங்களை தியானிப்போம்.

"மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்.."

தீர்க்கதரிசனம் சொல்வது நமது முகத்தைத் திருப்பி தப்பான வழியில் நடத்தும் ஊழியக்காரர்களுக்கு விரோதமாக உரைக்கவேண்டும்.

ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களை குறித்து. அவர்கள் தேவ ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடிக் கொல்கிறார்களாம்.

இவர்கள் சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக இவர்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற தேவ ஜனத்துக்குப் பொய் சொல்லி உங்களிடமிருந்து சில சிறங்கை வாற்கோதுமை, அப்பத்துண்டுகளுகள் பெற்றுக்கொள்ள,

தேவ ஜனத்தை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறார்கள். நாம் பொய்க்குச் செவிகொடுக்கக்கூடாது. இவர்கள் அறிவிக்கும் சுவிசேஷம் நம்மை பாவத்திலிருந்து தப்பி வழி நடத்தாது. நாம் இவர்கள் நமது ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுகிறார்கள் என்று நம்பி மோசம் போகிறோம். இவர்கள் நமக்கு கொடுக்கும் தழுவணைகளுக்கு விரோதமாக தேவன் வருவாராம். ஆகவே இவர்கள் உண்டுபண்ணும் தழுவணைகளின் கூட்டங்களிலிருந்து உங்களை தப்பிக் கொள்ளவும்.

நீங்களே சிறிய குழுவாக வேத வசனத்தை ஆராய்ச்சி பண்ணவும் எப்படி மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிக்கவேண்டும் என்று கற்றுக்கொள்ளவும். எங்கே கள்ள பிரசங்கங்கள அறிவிக்கப்படுகிறதோ, எங்கே "தேவன் உரைக்கிறார்" என்று புதிய ஏற்பாட்டின் சத்தியத்திற்கு விரோதமாக பிரசங்கம் பண்ணப்படுகிறதோ அங்கே நீங்கள் இருக்கவேண்டாம். நீங்கள் இவர்கள் கைகளிலிருந்து தேவன் உங்களை இரட்சிக்கப்படும் போதுதான் நீங்கள் கர்த்தர் யார் என்று அறிந்துகொள்வீர்கள்.

Madam Bubble போன்ற கள்ள தீர்க்கதரிசிகளின் கைகளின் பிடியிலிருந்து தப்பி, நமது கண்களை ஒளிமயமான தேசத்தின் மேல் வைத்து, நேராக ஓடுவோம்!

தொடர்ந்து படிக்க....எப்சிபா பியூலா தேசத்திற்குள் பிரவேசித்தல்