அறியாமை என்ற பயணியுடன்
Previous.....நரகத்திற்குப் போகும் ஒரு குறுக்கு வழி
கிறிஸ்டியானும் நம்பிக்கையும் அறியாமை என்ற பயணியுடன்
மகிழ்ச்சி மலையை கடந்து மோட்சத்தை நோக்கி போகும்வழியிலுள்ள நெசுஞ்சாலையில், ஒரு சுறுசுறுப்பாக வரும் வாலிபனை கிறிஸ்டினானும் நம்பிக்கையும் சந்திக்கிறார்கள். அவனது பெயர் அறியாமை என்பதாகும். அவன் பெருமையின் தேசத்தைத் (country of Conceit) சேர்ந்தவன். அவனும் மோட்சப்பட்டணத்தை நோக்கிச்செல்லும் பயணி என்று அறியவருகிறது. அவனது தேசத்திலிருந்து ஒரு குறுகிய தெரு இருக்கிறது. அவன் இந்த தெருவின் வழியாக இந்த நெசுஞ்சாலைக்கு வந்திருக்கிறான். அவன் நுழை வாசல் Wicket Gate வழியாக வராமல் இந்த தெருவின் மூலமாக வந்தவன்."நான் ஆண்டவரின் சித்தத்தை அறிந்தவன். பிரார்த்தனை பண்ணுகிறேன். உபவாசம் இருக்கிறேன். தசமபாகம் கொடுக்கிறேன். தானமும் கொடுக்கிறேன்" என்று கூறுகிறான். கிறிஸ்டியான் அவனை நோக்கி அவன் நுழைவு வாசல் மூலமாக வராததால் மோட்சபட்டணத்தின் வாசலில் நுழையமுடியாது என கூறுகிறான். அறியாமை பதிலாக இந்த நுழை வாசல் Wicket Gate தனது தேசத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பதாகவும், ஆனால் அவனது தேசத்திலிருந்து வரும் ஒரு இனிமையான பசுமை பாதை மோட்சப்பட்டணத்திற்கு வழி காட்டும் என்று கூறுகிறான்.
கற்றுக்கொள்ளும் பாடம்
இன்று "அறியாமை" போன்ற ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தாங்கள் தேவசித்தத்தின்படி சரியான பாதையில் மோட்சப்பட்டணத்தை நோக்கிப்போய்க்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆலயங்களுக்குச்சென்று, ஒழுங்காக தசமபாகம் கொடுத்து, உபவாசம் எடுத்து ஜெபித்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு, கிறிஸ்துவாகிய நுழை வாசல் வழியாக நுழையாமல், பெருமையின் தேசத்திலிருந்து வரும் குறுகிய தெருவின் மூலமாக மோட்சப்பாதையை அடையலாம் என்று எண்ணுகிறார்கள். கிறிஸ்துவின் மூலமாக அற்புதங்களையோ, தெய்வீக சுகங்களையோ பெற்றுக்கொண்டவர்களாக இருக்கலாம். மனம் திரும்பி, பாவத்திற்கு மரித்து மறுபடியும் பிறந்து, ஒரு புதிய வாழ்க்கைக்குள் பிரவேசிக்காமல், இன்னும் பழைய வாழ்க்கையிலே ஜீவித்துக்கொண்டிருக்கலாம். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படாமல் இந்த உலகத்தில் அவர்களுக்குத் தோன்றும் "இனிமையான பசுமை பாதை" அவர்களை மோட்சபட்டணத்திற்கு கொண்டுப்போய் சேர்க்கும் என்று ஏமாந்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இந்த அறியாமையிலிருந்து விடுபடவேண்டுமானால், தங்களுக்கு கொடுக்கப்பட்ட சுருளை எடுத்துத் தியானித்து, இயேசுவின் பாதத்தில் தனியாக அமர்ந்திருந்து, அவரின் சத்தத்தை கேட்கவேண்டும். இன்று அநேகர், பெரிய கூட்டத்தில் போய் உட்கார்ந்து பிரசங்கியார் என்ன சொல்லுவார் என்று எண்ணி எங்கேயோ ஓடிப் போகிறார்கள்.
தமிழ் நாட்டில், ஓரு பெரிய கூட்டத்தார் தங்களுக்குப்பிடித்த சுவிசேடர்களின் வார்த்தைகளை கேட்டும்படி அமர்கிறார்கள். அவர்கள் கூறுவதை அப்படியே நம்புகிறார்கள். ஆனால், இவர்களோ இயேசுவின் பாதத்தில் அமைதியாக அமர்ந்து அவரது சத்தத்தை கேட்டார்களோ என்ற சந்தேகம்!