அப்பொல்லியோனோடு சண்டை

Home

முந்தின அதிகாரம்

அப்பொல்லியோனோடு சண்டை

பள்ளத்தாக்கில் செல்லும்போது அப்பொல்லியோன் என்ற கொடிய பிசாசானவன் அவனுக்கு எதிரே வந்தான். திடுக்கிட்டு நின்ற கிறிஸ்தியான் முன்னே போவதா பின்வாங்குவதா என்று ஒருகணம் தயங்கினான். பின்பு விசுவாசத்தோடு கேடயத்தைப் பிடித்தவனாய், கையில் பட்டயத்தை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான்.

அப்பொல்லியோன் மிகவும் கொடுரமான தோற்றமுடையவன்! அவன் உடலெங்கும் மீனைப்போல செதில்கள் இருந்தன! கரடியைப் போன்ற பாதங்களையும், பறவையைப் போன்ற இறக்கைகளையும் கொண்டிருந்தான். சிங்கத்தின் வாயைப் போன்ற அவன் வாயிலிருந்து நெருப்பும், புகையும் புறப்பட்டு வந்தது! அழிநகரத்தின் அரசன் அவன்! தன்னுடைய நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் கிறிஸ்தியானை எப்படியாவது கொன்று போட வேண்டும் என்பதே அவன் எண்ணம்.

நில்லப்பா நில். நீ என்னுடைய நகரத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஊழியம் செய்ய வேண்டியவன். என்னை விட்டுவிட்டு எங்கே போகிறாய்? என்று கோபத்துடன் கேட்டான் அப்பொல்லியோன்.

நான் உமது நகரத்தில் பிறந்தவன் என்பது உண்மை தான். ஆனால் உமக்கு ஊழியம் செய்தால் எனக்கு என்ன கூலி கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டேன். பாவத்தின் சம்பளம் மரணம் அல்லவா? அதனால்தான் நான் இப்போது இராஜாதி ராஜாவின் ஊழியக்காரனாகிவிட்டேன். அவருடைய சம்பளம், அவர் உறவு. அனைத்தும் உன்னைவிட மேலானவை. என்னைத் தடுக்காதே. நான் அவரையே பின்பற்றுவேன் என்று திடமாகக் கூறினான் கிறிஸ்தியான்.

இதைக் கேட்ட அப்பொல்லியோன் கடும் கோபம் கொண்டான். ஓர் ஈட்டியை எடுத்து கிறிஸ்தியானின் மார்புக்கு நேராக வீசியெறிந்தான்! ஆனால் அவனோ தனது கேடகத்தால் அதைச் சுலபமாகத் தடுத்து வீழ்த்திவிட்டான்! ஆவியின் பட்டயத்தினால் அப்பொல்லியோனைத் தாக்க துவங்கினான் கிறிஸ்தியான்.

கிறிஸ்தியானை வெட்டி வீழ்த்தும்படி அருகே ஓடி வந்தான் அப்பொல்லியோன்! தனது பலத்தையெல்யாம் திரட்டி எழுந்த கிறிஸ்தியான் வாளை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டான்.

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோசப்படாதே, நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன் (மீகா7:8) என்று ஆவேசமாகக் கூறியபடி பாய்ந்த கிறிஸ்தியான் அப்பொல்லியோனின் மார்பில் தனது வாளைச் சொருகினான்! படுகாயப்பட்ட அவன் புறமுதுகு காட்டியபடி ஓடிவிட்டான்! கிறிஸ்தியான் அதன்பிறகு அவனைப் பார்க்கவேயில்லை!

அப்பொல்லியோனிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதற்க்காக ஆண்டவருக்கு நன்றிகூறினான் கிறிஸ்தியான். அப்போது ஒரு கை தோன்றி, ஜீவ மரத்தின் இலைகளை அவனுக்கு அளித்தது! அந்த இலைகளைத் தனது காயங்களின்மீது வைத்தான் கிறிஸ்தியான். உடன்தானே அவர் பூரண குணமடைந்துவிட்டான்!

தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரொட்டியைப் பிட்டுச் சாப்பிட்டு திராட்சை இரசத்தை அருந்தினான். அதன் பிறகு புத்துணர்வு கொண்டவனாக, பட்டயத்தைக் கையிலேந்தியபடி தனது பயணத்தைத் தொடர்ந்தான் கிறிஸ்தியான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அப்பொல்லியோன் ஆகிய சாத்தான் ஏசுவை இரட்சகராக ஏற்று கொண்ட விசுவாசிகளை நேரடியாகத் தாக்குகிறான். நாம் அவனை விசுவாசமாகிய கேடகத்தை எடுத்து நம்மைக் காத்துக்கொண்டு, வேதமாகிய பட்டயத்தை எடுத்து அவனோடு யுத்தம் செய்யும்போது அவன் தோற்று ஓடிவிடுகிறான். அவன், நாம் எப்சிபா பியூலா தேசத்தை (மோட்சப்பட்டணத்தின் முன்னேயுள்ள தேசம், அதாவது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமி (Promised Land), அடையும் வரை ஓய்வு எடுக்கவே மாட்டான். பின்பு மூன்று அரக்கர்கள் மூலமாக நம்மை மறைமுகமாக துன்புறுத்தி, காயப்படுத்தி, ஏமாற்றி நம்மை மோட்ச பாதையிலிருந்து வழிவிலக எல்லா முயற்சிகளையும் செய்கிறான்.

தனக்கு கீழே பணிபுரியும் ஆயிரக்கணக்கான பொல்லாத வானமண்டல ஆவிகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டேயிருப்பான். நீங்கள் அவைகளை கொடிய மிருகங்களாகவும், விகாரமான ஜந்துக்களாகவும் காண்பீர்கள்.

எப்சிபா பியூலா தேசத்தில் சாத்தானுக்கோ அவனின் கீழேயுள்ள சேனைக்கோ (beasts) எந்தவிதமான வல்லமையோ கிடையாது. அவனது ஆவிக்குரிய தலையானது உங்களது கால்களின் அடியில் இயேசுவின் மூலம் நசுக்கப்பட்டிருக்கும். இந்த சத்தியத்தை மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும். இதைப்பற்றி பின்னால் விளக்கி எழுதியிருக்கிறேன்.

நாம் எப்போதெல்லாம் சாத்தானால் தாக்கப்பட்டு, காயமடைகிறோமோ உடனே கல்வாரியில் போய் அங்கேயுள்ள ஜீவ மரத்தின் இலைகளை உண்ணவேண்டும். சோதனையில் விழுந்துபோனால் உடனே சிலுவையண்டை போய், மனம் திரும்பி, இயேசுவின் இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கபடவேண்டும். மோட்சப்பயணத்தின் கடைசிவரை இந்த ஜீவ மரத்தின் இலைகளை தைரியமாக உபயோகம் செய்யலாம். வியாதி வந்தாலும் இந்த ஜீவ மரத்தின் இலைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஜீவ மரம் எப்போதும் வாடாமலிருக்கிறது.

மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்


அதன்பிறகு கிறிஸ்தியான் மரண இருளின் பள்ளத்தாக்கை அடைவதை நான் என் கனவில் கண்டேன். அப்போது இருவர் அவனுக்கு எதிராக ஓடிவந்தார்கள்.ஜயா, நேரே போகாதீர்கள். இந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் ஓரே இருளாக இருக்கிறது. கொடிய மிருகங்களையும், விகாரமான ஜந்துக்களையும் அங்கே கண்டோம். எங்கும் வேதனையில் துடிப்பவர்களின் கூக்குரல்தான் கேட்கிறது என்று கூறி அவனைத் தடுத்தார்கள்.ஆனால் கிறிஸ்தியானோ, நான் செல்லவேண்டிய வழி இதுதான். எனவே திடமனதோடு இதில்தான் செல்வேன் என்று கூறியபடி நேரே சென்றான்.மரண இருளின் பள்ளத்தாக்கின் நடுவே சென்ற பாதை மிகவும் குறுகலாக இருந்தது. அதன் இடதுபுறம் ஆழமான குழி காணப்பட்டது. வலதுபுறம் ஓரே சதுப்பு நிலக் காடாகக் காட்சியளித்தது! இரண்டு புறமும் சறுக்கி விழுந்துவிடாமல் நடுவில் நடந்துசெல்வது கடினமாகவேயிருந்தது!பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் நரகத்தின் வாசல் இருந்தது. அதிலிருந்து நெருப்பும், புகையும் புறப்பட்டு வந்தது. கர்ணகடுரமான சத்தங்களும் கேட்டன!கிறிஸ்தியான் தனது பட்டயத்தை உறையில் போட்டு விட்டு ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான். ஜெபமே (எபே.6:18) அந்தப் புதிய ஆயுதம்! ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என்று தொடர்ந்து ஜெபம் செய்தான்.

துஸ்ட மிருகங்கள் அவனை நெருங்கி வந்தன. ஆண்டவருடைய வல்லமையால் நான் தொடர்ந்து நடப்பேன் என்று விசுவாசத்தோடு சத்தமிட்டான். அந்த மிருகங்கள் விலகி ஓடிப்போயின!

இருள் விலகி காலையில் வெளிச்சம் வந்தவுடன் கிறிஸ்தியான் தான் வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தான். ஆபத்துக்களுக்கு மத்தியில் மிகவும் குறுகலான பாதையில் தன்னைப் பத்திரமாக வழிநடத்திய ஆண்டவரைத் துதித்தான்!

பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குன்றுப் பகுதியை அடைந்தான் கிறிஸ்தியான். மேடான இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். அப்போது சற்றுத் தொலைவில் உண்மையானவன் நடந்துசெல்வதைக் கண்டான்.

"உண்மையானவனே, கொஞ்சம் நில். நானும் உன் கூட வருகிறேன்", என்று குரல்கொடுத்தான் கிறிஸ்தியான்.

"என்னால் நிற்க முடியாது பழிவாங்குபவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள்", என்று கூறிய உண்மையானவன் நிற்காமல் சென்றான்.

இதைக் கண்ட கிறிஸ்தியான் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்ற எண்ணத்தோடு அவன் பின்னே ஓடினான். ஓடிச் சென்ற அவன் உண்மையானவனை மிகச் சுலபமாக தாண்டி விட்டான். தன்னுடைய வேகத்தை எண்ணி பெருமைப்பட்டான் பாதையைக் கவனிக்கவில்லை! கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டான்! உண்மையானவன் ஓடிவந்து அவனைத் தூக்கி விட்டான். இருவருமாகப் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். கிறிஸ்தியான் வழியில் தான் பெற்ற அனுபவங்களையெல்லாம் விவரித்துக் கூறினான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அப்பொல்லியனோடு யுத்தம் செய்வது தனிப்பட்ட ஒவ்வொரு விசுவாசிக்குத்தான். சபையின் போதகரோ, சுவிசேஷகரோ இந்த யுத்தத்தை பண்ணமுடியாது. ஒவ்வொரு விசுவாசியையும் ஒரு யுத்த வீரனாக மாற்றுவது தான் ஒரு சபை போதகரின் கடமை. எல்லா ஞாயிறன்றும் போதகர்கள் அவர்கள் விசுவாசிகளின் மீதுக் கைகளை வைத்து ஜெபித்து சாத்தானை விரட்டுவது வழக்கமாகப் போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமானால் சபைகளை ஆதி அப்போஸ்தலரின் காலத்துக்கு நேராக கொண்டு செல்லவேண்டும்.

அசுத்த ஆவிகளை துரத்திவிட்டால் மாத்திரம் போதாது. இந்த துரத்தப்பட்ட ஆவிகள் மீண்டும் காலியாக இருக்கும் இடத்திற்கு, மேலும் பொல்லாத ஆவிகளை அழைத்துக்கொண்டு வந்து, பிரவேசிக்க முயற்சிக்கும். சபையின் போதகர் அந்த பாதிக்கப்பட்ட விசுவாசியை ஆவியில் பலப்படுத்தி, அபொல்லியனோடு எதிர்த்து நின்று யுத்தம்பண்ணி அவனை மேற்கொள்ளும்படியான பயிற்சிகள் அளிக்கவேண்டும்.

அப்பொல்லியனோடு யுத்தத்தில் வெற்றி கொண்டபின், கிறிஸ்டியான் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரொட்டியைப் பிட்டுச் சாப்பிட்டு, திராட்சை இரசத்தை அருந்தினான். அதன் பிறகு புத்துணர்வு கொண்டவனாக, பட்டயத்தைக் கையிலேந்தியபடி தனது பயணத்தைத் தொடருகிறான். கிறிஸ்தியான், அப்பொல்லோலியனோடு யுத்தம் பண்ணினபின் சபையின் ராபோஜனம் எடுத்தபின் புத்துணர்ச்சி அடைகிறான்.

சபையில் எடுக்கும் திருவிருந்து அல்லது நற்கருணை (Holy communion) ஒரு முக்கியமான ஆவிக்குரிய ஆகாரம். நமது சரீரத்தை அப்பொல்லியன் தாக்கி எப்போதெல்லாம் நமக்கு வியாதிகளை உண்டுபண்ணுகிறானோ, நாம் உடனே ஆண்டவரின் மேஜைக்குப் (Lord's Table) போகவேண்டும். ரொட்டியைப் பிட்டுச் சாப்பிட்டு, திராட்சை இரசத்தை ஜெபத்துடன் பருகவேண்டும். நமக்கு வியாதிகள் வராமல் தடுப்பதற்கும் நற்கருணை உதவுகிறது. நாம் ஆண்டவரின் மேஜையை புறக்கணித்து, தெய்வீக சுகம் கிடைக்க சபையை விட்டுவிட்டு வேறு எங்கேயோ ஓடுகிறோம். நற்கருணையின் மகத்துவத்தை நாம் அறியாமலிருக்கிறோம். ஏதோ ஒரு சடங்காச்சாரமாக இதில் பங்கெடுக்கிறோம். "ஆண்டவரே, எனக்காக அடிக்கப்பட்டு பிட்கப்பட்ட உமது சரீரத்தின் மூலமாக என் பாவத்தை மன்னித்து உமது இரத்தத்தின் மூலம் என்னைச் சுத்திகரித்து என் வியாதியை குணமாக்கும்" என்று ஜெபிக்கவும். உங்களுக்கு அருமையானவர்கள் நோய்வாய்பட்டிருந்தால் அவர்களை நினைத்தும் அவரது மேஜையின் முன்பு முழங்கால் படியிட்டு மன்றாடி ஜெபிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நடக்கவும் இந்த இடத்தில் ஜெபிக்கலாம்.

ஒவ்வொரு பரதேசிக்கும், ஒரு உண்மையுள்ளவனின் கூட்டுறவு (Fellowship) அவசியம். இது சபையின் போதகராக இருக்கலாம். ஆனால் இந்த உண்மையுள்ளவன் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களோடு நட்பு வைத்திருக்க வேண்டும். முக முக கூட்டுறவும் (face to face fellowship) நட்பும் இரண்டுபேர்களின் மத்தியில் நிலவவேண்டும். இவர் உங்களுக்கு ஒரு உண்மையான தோழனாகவும் நண்பனாகவும் இருக்க வேண்டும்.

உண்மையானவனின் அனுபவங்கள்

எனக்கும் வழியில் எத்தனையோ சோதனைகள் ஏற்ப்பட்டன என்றான் உண்மையானவன்.அப்படியா? எங்கே அதைப்பற்றிச் சொல் பார்ப்போம் என்று ஆர்வத்தோடு கேட்டான் கிறிஸ்தியான்.சொல்கிறேன் கேள். நீங்கள் விழுந்ததுபோல நான் அவநம்பிக்கைச் சேற்றில் விழாமல் தப்பிவிட்டேன். ஆனால் கடினமலையின் அடிவாரத்தில் வரும்போது வஞ்சமாநகரைச் சேர்ந்த ஆதாம் என்பனைச் சந்தித்தேன். ஆவன் என்னைத் தன்னுடைய வீட்டுக்கு வரும்படியும், எல்லா உலக இன்பங்களையும் தருவதாகவும் ஆசை காட்டினான். முதலில் ஆசைப்பட்ட நான் பிறகு என்னுடைய தவறை உணர்ந்தேன். அவனுடைய கைகளிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு ஓடிவந்து விட்டேன் என்று பெருமுச்சுவிட்டான் உண்மையானவன்.நல்லதாகப் போயிற்று! என்றான் கிறிஸ்தியான்.அதோடு முடிந்துவிடவில்லை! நான் கொஞ்சம் ஆசைப்பட்டதுக்குத் தண்டனையும் கிடைத்துவிட்டது! என்றான் உண்மையானவன்.எப்படி? கேட்டான் கிறிஸ்தியான்.கடின மலையிலிருந்து இளைப்பாறும் தலத்தைத் தாண்டியிருப்பேன். அப்போது ஒருவர் என்னை நோக்கி வேகமாக வந்தார். அவரைப் பார்த்தவுடன் அப்படியே நின்றுவிட்டேன். அதற்க்குள் அவர் ஒரு சாட்டையை எடுத்து என்னை அடிக்கத் துவங்கிவிட்டார். ஏன் ஜயா, என்னை அடிக்கிறீர்கள்? என்று பரிதாபமாக கேட்டேன். நீ ஆதாம் கூறிய உலக இன்பத்துக்கு ஆசைப்பட்டாயல்லவா? என்று கடிந்து கொண்ட அவர் மேலும் அடித்தார். ஜயா, கிருபைகூர்ந்து என்னை விட்டுவிடும் என்று கெஞ்சினேன் என்றான் உண்மையானவன்.

ஆச்சச்சோ, அப்புறம் ? கேட்டான் கிறிஸ்தியான்.

அப்போது ஒருவர் வந்து என்னை அடிப்பதைத் தடுத்து நிறுத்தினார். அவர் கைகள் ஆணிகளால் துளைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் அவர் தான் நமது ஆண்டவர் இயேசு என்று அறிந்து பரவசமுடன் அவரைத் துதித்தேன். பிறகு நான் தாழ்மையின் பள்ளத்தாக்கில் திருப்தியின்மை என்ற பெயரையுடையவன் என்னைச் சந்தித்தான். தாழ்மையின் பள்ளத்தாக்கில் நடப்பது நமது பெருமைக்கு ஏற்றதல்ல என்றான். நானோ மேன்மைக்கு முன்னானது தாழ்மை, அழிவுக்கு முன்னானது அகந்தை (நீதி.15:33,16:18) என்ற வசனங்களை எடுத்துக்கூறி அவனிடமிருந்து தப்பிவிட்டேன் என்றான் உண்மையானவன்.

வேறு ஒருவரையும் நீ பார்க்கவில்லையா? என்று கேட்டான் கிறிஸ்தியான்.

இன்னும் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் பெயர் வெட்கம். நாம் நமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பது இழிவானது என்று அவன் வாதம் செய்தான்.

நானோ மனுசருக்குள்ளே, மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது (லூக்கா 16:15) என்ற வசனத்தைக் கூறி நாம் தேவனுக்கு முன்பாக மிகவும் தாழ்வானவர்கள், அற்பமானவர்கள் என்றேன். அவன் பதில்கூறாது போய் விட்டான். அதன்பிறகு ஒருவரும் என்னைத் தொந்தரவு செய்யவில்லை என்றான் உண்மையானவன்.

இவ்வாறு அவர்கள் பேசியபடி சென்றபொழுது நற்செய்தியாளரைச் சந்தித்தார்கள். கிறிஸ்தியான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! நற்செய்தியாளர் அன்போடு அவர்களைப்பற்றி விசாரித்தார். இருவரும் நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தார்கள்.

எத்தனையோ சோதனைகளைச் சந்தித்து இதுவரை வெற்றிகரமாக வந்துவிட்டீர்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். ஆனாலும் இனிமேல்தான் உங்களுக்குப் பெரிய ஆபத்துக்கள் இருக்கின்றன. சற்றுத் தொலைவில் மாயாபுரி என்ற நகரம் இருக்கிறது. அங்குள்ள விரோதிகள் உங்களைக் கொல்ல முயலுவார்கள். நீங்கள் இரத்தச் சாட்சிகளாக மரிக்க நேரிட்டாலும் நேரிடலாம். என்றாலும் மரணபரியந்தம் உண்மையாக இருங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவார் (வெளி.2:10) என்று கூறிய நற்செய்தியாளர் ஜெபத்தோடு அவர்களை வழியனுப்பிவைப்பார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இவர்களின் சம்பாஷணையை கவனத்தோடுக் கவனிக்கவேண்டும். இவர்களின் நெருங்கிய உறவு இந்த சம்பாஷணையில் வெளிப்படும். இவ்வாறு அவர்கள் பேசியபடி சென்றபொழுது, நற்செய்தியாளரைச் சந்திக்கிறார்கள். நற்செய்தியாளர் இவர்கள் மத்தியில் சரியான சமயத்தில் வந்து அவர்களை வழி நடத்துகிறார். இன்று இதுபோல நம்மை வழி நடத்தும் உண்மையான நற்செய்தியாளர்கள் மிகவும் குறைவு. நம்மிடமிருந்து ஏதாவது தங்களின் சுவிசேஷக ஊழியங்களுக்கு ஆதாயம் கிடைக்குமா என்று தான் இவர்கள் நம் மத்தியில் கடந்து வருகிறார்கள். பணத்தை எதிர்பார்க்கவில்லையென்றாலும் நமது ஜெபத்தை எதிர்பார்க்கின்றனர். அவர்களை நாம் கனம்பண்ண விரும்புகிறார்கள். அவர்களின் செய்திகளை கேட்டு 'ஆமென்' என்றும் 'அல்லேலூயா' என்றும் ஆர்ப்பரிக்க விரும்புகிறார்கள். நாம் அவர்களின் ஊழியங்களுக்கு பண உதவி செய்தால் ஆசீர்வாதங்கள் வரும் என்று நமக்கு போதிக்கிறார்கள்.

உங்களை தனியாக மோட்ச பாதையில் நடத்துவது ஒரு சில போதகர்கள் மாத்திரம் தான். பெரும்பாலானோர், அவர்களின் கூட்டத்திற்கு வந்து அவர்களின் செய்திகளை கேட்கும்படி விரும்புவார்கள்.

"சற்றுத் தொலைவில் மாயாபுரி என்ற நகரம் இருக்கிறது. அங்குள்ள விரோதிகள் உங்களைக் கொல்ல முயலுவார்கள்", என்று உங்களுக்கு எச்சரிப்பு கொடுக்கும் உண்மையான நற்செய்தியாளர்கள் எங்கே? மாயாபுரியின் சந்தைக்கு நேராக நடத்தும் கள்ள சுவிசேஷகர்கள் தான் நம் மத்தியில் உண்டு. அற்புதங்களுக்காவும் தெய்வீக சுகம் கிடைப்பதற்கு மாத்திரம் ஜெபித்து, உங்களுக்கு ஆண்டவர் எல்லா ஆசீர்வாதங்களையும் கட்டளை இடுவார் என்று சொல்வார்கள். உங்களுக்கு இந்த அழிந்து போகும் நகரத்தில் வீடும், பங்களாக்களும், கார்களும் கிடைப்பதற்கு ஜெபித்து அல்லது தீர்க்கதரிசனம் சொல்லி கடந்து செல்வார்கள்.

"இனிமேல்தான் உங்களுக்குப் பெரிய ஆபத்துக்கள் இருக்கின்றன .....மாயாபுரியில் விரோதிகள் உங்களைக் கொல்ல முயலுவார்கள். நீங்கள் இரத்தச் சாட்சிகளாக மரிக்க நேரிட்டாலும் நேரிடலாம், என்றாலும் மரணபரியந்தம் உண்மையாக இருங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கு ஜீவ கிரீடத்தைத் தருவார் (வெளி.2:10)", என்று உங்களுக்க உண்மையாய் ஜெபித்து வழிநடத்தும் உண்மையான நற்செய்தியாளர்கள் எங்கே?

வாயடியைச் சந்தித்தல்

கிறிஸ்டியானும் உண்மையானவனும் ஒருவரோடடொருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும்போது வாயாடி என்ற பெயருடைய ஒருவன் அவர்களுடன் வந்து சேர்ந்துக் கொண்டான். அவன் தானும் பரலோகத்துக்குப் போவதாக கூறினான்.

அலப்புத் தெருவிலிருக்கிற வீண்பேச்சாளனின் மகன். பார்த்தால் நல்லவன் போல் தெரிகிறான். இந்த வாயாடியின் குணாதிசயங்கள், நடத்தைகள் எல்லாம் இந்த சம்பாஷணையில் வெளிப்படுகிறது. "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." (I கொரிந்தியர் 4:20). வாயாடி போன்றவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். ஜெபமோ, விசுவாசமோ, மனம்திரும்புதலோ எதைப்பற்றி வேண்டுமானாலும் அவனால் பேச முடியும். ஆனால் எதையுமே அவன் மனதில் ஏற்றுக்கொள்ளமாட்டான் முட்டையின் வெள்ளைக்கரு தானாக எந்தவிதச் சுவையுமற்று இருப்பதைப் போல அவன் வீடும் விசுவாசமற்ற வீடாகவே இருக்கிறது. அங்கே உத்தம மனஸ்தாபமும் கிடையாது! ஜெபமும் கிடையாது. மிருகத்தைவிட கீழான நிலையில் அவன் பக்தியற்ற வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். கிறிஸ்தவ விசுவாசத்திற்கே அவன் நிந்தையையும் அவமானத்தையும் கொண்டுவரக் கூடியவனாக இருக்கிறான் என்று அவனைப்பற்றி அறிந்தவர்கள் கூறுவார்கள். அவனால் அந்தப்பகுதியிலேயே கிறிஸ்து நிந்தனைக்குள்ளாகிறார் என்றுதான் சொல்லவேண்டும்! அவனைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? வெளியில் தூய்மையானவன். வீட்டிலோ சாத்தான்.

பணியாளர்களை அநியமாய் திட்டுகிறான்! வீண் வாய்ச்சண்டைக்குச் செல்கிறான்! இதனால் அவனுடன் எப்படிப் பேசுவதென்றே தெரியாமல் அவர்கள் விலகிச்சென்று விடுகிறார்கள்! அவனோடு வாணிபம் செய்பவர்கள் பாடோ இன்னும் பரிதாபமாயிருக்கிறது! இவனோடு வாதாடுவதற்குப் பதில் திருடர் கையில் பொருட்களை எடுத்துக் கொடுத்துவிடுவது மேல் என்று எண்ணுகிறார்கள்! ஏனென்றால் முடிந்தால் இவன் தந்திரம் பண்ணி அவர்களையே ஏமாற்றிவிடுவான்! தகப்பன் என்றால் பிள்ளைகளுக்கு தற்போதனைகளை அளிப்பார்கள் என்றுதானே படித்திருக்கிறோம்? ஆனால் இவனோ அவர்களை எத்தர்களாக்கப் பயிற்சிக் கொடுக்கிறான்! இவர்களில் யாராவது இளகிய மனமுள்ளவர்களாகவோ. பயந்தவர்களாகவோ காணப்பட்டால் அவர்களை அறிவீனவர்கள் என்று திட்டுகிறான்; பெரிய பொறுப்புக்களை அவர்களிடம் கொடுப்பதில்லை; மற்றவர்களிடமும் அவர்களைப் பாராட்டிப் பேசுவதில்லை! நமக்குத் தெரிந்தபடி இவன் அநேகர் பாவத்தில் விழுந்து போகவும், பின்வாங்கிப் போகவும் காரணமாக இருந்திருக்கிறான். ஆண்டவர்தாம் அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் அவன் இன்னும் அநேகரை அழிவுக்கு இட்டுச் சென்றுவிடுவான்.

நற்செய்தியைக் கேட்பதும் பேசுவதுமே போதுமானது என்று நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான். கேட்பது என்பது விதையை விதைப்பது போன்றதே! ஆனால் விதை முளைவிட்டு மரமாக வளர்ந்து கனிகொடுக்க வேண்டாமா? நற்செய்தியெனும் விதையை நம் இதயத்தில் வேரூன்றி ஆவியின் கனிகளாகப் பலன் கொடுக்க வேண்டும். தமது கனிகளைக் கொண்டே நாம் நியாயத்தீர்க்கப்படுவோம் என்பதை மறந்துவிடக்கூடாது. விசுவாசம் என்பது செயல்மூலம் வெளிப்பட்டதா என்பதே கண்டறியப்படும். நமக்குள் இருக்கும் பயிர் அறுவை செய்யப்படுவதே இறுதி முடிவு! அறுப்பில் தானியத்தைத்தானே விவசாயி எதிர்பார்க்கிறான்! எனவே உண்மையான விசுவாசமில்லாத எதுவும் இறுதி நியாயத்தீர்ப்பில் பயனற்றதாகி விடும். வாயாடியின் விசுவாசப் பேச்செல்லாம் அன்று ஒன்றுமில்லாதாகிவிடும்.

இவன் அப்போஸ்தலர் பவுல் கூறுவதுபோல "சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" ( 1 Cor 13:1) இருக்கிறான். இவன் உயிரற்ற வெறும் ஓசை எழுப்பும் இசைக் கருவியைப் போலவே இருக்கிறான். இவனின் வாயின் வார்த்தைகள் தேவதூதனின் வார்த்தைக்கு ஒத்ததாக இருந்தாலும்கூட அவர்கள் நித்திய ஜீவனைப் பெறும் ஆண்டவருடைய பிள்ளைகளின் பாக்கியத்தைப்பெற முடியாது.

கடைசியில் கிறிஸ்தியானும் உண்மையுள்ளவனும் வாயடியை வழியனுப்பி விட்டனர்.

கற்றுக்கொள்ளும் பாடம்

வாயடியைப்போல அநேக கிறிஸ்தவர்கள் நம் மத்தியிலிருக்கிறார்கள். இவர்கள் சத்தியத்தை தனது தலை அளவில் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் ஒரு மயமால வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சபைகளுக்கு ஒழுங்காக செல்கிறார்கள். ஆராதனையில் கலந்துக்கொள்கிறார்கள். காணிக்கை கொடுக்கிறார்கள். இவர்கள் வேத அறிவில் தேர்ச்சிப்பெற்றவர்கள். இவர்களைப்போல போதகர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மணிக்கணக்காக ஆண்டவரைப் பற்றி பேசுவார்கள். ஆனால் ஆண்டவரை தங்கள் வாழ்க்கையின் மூலம் வெளிப்படுத்தமாட்டார்கள். இவர்கள் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டாலும் நாளடைவில் அழிந்து போகும் உலகத்தால் கவரப்பட்டு வெறும் வாயடிகளாக மாறிவிடுகிறார்கள்.

மாயாபுரியில் பயணிகள்

கிறிஸ்தியான், உண்மையானவன் இருவரும் மாயாபுரியை அடைவதை நான் என் கனவில் கண்டேன்.

மாயாபுரியில் மாயக் கண்காட்சி என்ற கண்காட்சி நடை பெற்றுக் கொண்டிருந்தது. எங்கும் மக்கள் கூட்டம்.இந்தக் கண்காட்சி எப்போதுமே தொடர்ந்து நடை பெற்றுவரும் கண்காட்சியாகும். பெயெல்செபூல். அப்பொல்லியோன், லேகியோன் என்ற சாத்தானின் கூட்டத்தினரே இந்தக் கண்காட்சியை நடத்திவந்தார்கள்! மோட்சத்துக்குச் செல்லும் பயணிகளைக் கவர்ந்திழுக்கவே அந்தப் பாதையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது! இங்கு உலகப்பிரகாரமான புகழ், மாம்சத்துக்கடுத்த இன்பங்கள் இவற்றை விலைகொடுத்து வாங்க முடியும்! சூதாட்டம், நடனங்கள், போக்கிரிகளின் சபை இவை எப்போதுமே நடந்துகொண்டிருக்கும்!கிறிஸ்தியானும், உண்மையானவனும் கண்காட்சிக்குள் நுழைந்தவுடன் எல்லோரும் அவர்களை வெறித்துப் பார்த்தார்கள். அவர்களுடைய உடை வித்தியாசமானதாயிருந்தது. பயணிகள் இருவரும் கானானின் மொழியைப் பேசியதைக் கேட்ட மற்றவர்கள் அவர்களைக் கேலி செய்தார்கள்.

அங்குள்ள வணிகர்கள் இவர்களிடம் வீண்பெருமைகளை விற்க முயன்றார்கள். அவர்களோ காதுகளைப் பொத்திக்கொண்டு, இந்த வீண்பெருமைகள் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

அப்படியானால் எதைத்தான் வாங்குவீர்கள்? என்று ஒரு வணிகன் அவர்களைக் கேலி செய்தான். பயணிகளோ சற்றும் தயங்காமல், நாங்கள் உண்மையைத்தான் வாங்குவோம் என்று கூறினார்கள்.

இந்தப் பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். சிலர் அவர்களைப் பரியாசம் செய்தார்கள். ஆனால் மற்றவர்களோ அவர்களை அடிக்கத்துவங்கினார்கள்! எங்கும் ஓரே கூச்சலும், குழப்பமுமாகிவிட்டது!

கண்காட்சியின் தலைவன் இதைக் கேள்விப்பட்டான். அவர்களைக் கைது செய்து அழைத்து வருமாறு கட்டளையிட்டான்! அவர்களை விசாரிக்கும் குழுவினர் பல கேள்விகளைக் கேட்டனர்.

நாங்கள் மோட்சத்துச் செல்லும் பயணிகள். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்றே இருவரும் திரும்பத் திரும்ப சொல்;லிக்கொண்டிருந்தார்கள்.

இந்தப் பதில் விசாரிப்புக் குழவினருக்கு எரிச்சல் மூட்டியது. புத்தி சுயாதீனம் இல்லாதவர்கள் என்று திட்டினார்கள், அடித்து உதைத்தார்கள். பிறகு அவர்களை ஓர் இரும்புக் கூண்டுக்குள் அடைத்து, எல்லோரும் அவர்களைப் பார்க்கும்படி கண்காட்சியின் நடுவே அந்தக் கூண்டை வைத்தார்கள்.

கண்காட்சியில் இருந்தவர்கள் அனைவரும் அவர்களைக் கேலிசெய்து காறித் துப்பினார்கள். ஆனால் பயணிகள் இருவருமே ஒன்றுமே பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

இதற்கிடையே பயணிகளை என்ன செய்யலாம் என்ற பதில் மற்றவர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது, விவாதம் வலுத்தது! பின்னர் அடிதடியில் சென்று முடிந்தது! அவர்களே ஓருவருக்கொருவர் அடித்துக் கொண்டார்கள்.

இந்தக் கலகத்துக்குக் காரணம் கிறிஸ்தியானும், உண்மையானவனுமே என்று குற்றம் சாட்டி அவர்களைத் தலைவனின் முன்னே அழைத்துச் சென்றார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

"மோட்சத்துக்குச் செல்லும் பயணிகளைக் கவர்ந்திழுக்கவே அந்தப் பாதையில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது! இங்கு உலகப்பிரகாரமான புகழ், மாம்சத்துக்கடுத்த இன்பங்கள் இவற்றை விலைகொடுத்து வாங்க முடியும்! சூதாட்டம், நடனங்கள், போக்கிரிகளின் சபை இவை எப்போதுமே நடந்துகொண்டிருக்கும்!" இது எவ்வளவு உண்மையாய் இருக்கிறது. ஆராதனை என்ற பெயரில் நமது சபைகளில் நடனங்கள் நடந்துகொண்டிருக்கிறது. வானத்தை உச்சி எட்டும் அளவில் குளிர் அறைகளுடன் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. விலை உயர்ந்த கார்கள், உல்லாச நகர், 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கும் அறைகள் எல்லாம், இன்று நமது ஊழியக்காரர்களிடமும், அவர்களது சபைகளின் கட்டிடங்களிலும் காணலாம். ஒரு புதிய விசுவாசிக்கு இவைகளெல்லாம் இடையூறு உண்டுபண்ணுகிறது. இவைகளை எல்லாம் எனக்குத் கர்த்தர் தரவேண்டும் என்ற எண்ணம் இந்த விசுவாசியை மாயாபுரி சந்தையை நோக்கி இழுக்கிறது. கிறிஸ்தியானும், உண்மையானவனும் "நாங்கள் உண்மையைத்தான் வாங்குவோம்", என்று கூறினார்கள். இன்று நமக்கு கள்ள உபதேசங்கள் போதிக்கப்பட்டு எப்படி ஊழியக்காரர்களின் பலவிதமான திட்டங்களில் பணத்தை விதைத்தால் அநேக மடங்காக பணம் அறுவை செய்யப்படும் என்றும், இந்த பணத்தை வைத்து நிலம், பங்களா வாங்கலாம் என்றும் போதிக்கப்படுகிறது.

மாயாபுரியின் வணிகர்கள் நமக்கு அவர்களின் ஊழியத்தால் சம்பாதித்த வீண்பெருமைகளை விற்கமுயல்வார்கள். கர்த்தர் அவர்களின் கைகளின் மூலமாக செய்த காரியங்களை வீண்பெருமைகளாக நமக்கு அறிவிப்பார்கள். அந்த வீண்பெருமைகளை (அவர்களின் பெயர்களை மிகைப்படுத்தி) சாட்சியாக அறிவிக்க நம்மை ஏவுவார்கள். அதாவது அவர்களது ஊழியங்களை நம் மூலம் மார்க்கெட்டிங் செய்ய விரும்புவார்கள். நாம் அவர்களை குறித்தோ அவர்களின் ஊழியப் பெருமைகளை குறித்தோ மேன்மை பாராட்டக்கூடாது. நாம் அப்படி மேன்மை பாராட்டினால் தற்பெருமைகளால் அவர்கள் விழுந்துவிட நேரிடும்.

நமது சாட்சியானது உண்மையுள்ளதாக (Truthful testimony) இருக்கவேண்டும். மனிதர்களைப் புகழ்ந்து முகஸ்துதி செய்யவே கூடாது. நமது சாட்சி கூட்டியோ குறைத்தோ இருக்கக்கூடாது.

"நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்". (காலத்தியர் 6:14). "......மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக...." ( I கொரிந்தியர் 1:30). "..... ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக " (I கொரிந்தியர் 3 :21).

பண ஆசையை கண்டித்து ஒரு புகழ் பெற்ற சுவிசேடகர் (celebrity evangelist) பண ஆசை எப்படி வருகிறது என்று வேதவசனங்களை சில சம்பவங்களோடு ஒப்பிட்டு பிரசிங்கித்தார். இவர் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து "தேவனுக்கு" ஒரு வீடு கட்டினார். இந்த பணம் கொடுத்தது தேவ மக்களே! இதுபோல அடுக்கு கட்டிடம் அல்லது கோபுரம் கட்டுவதை பார்க்கும் ஒரு ஏழை ஊழியருக்கு பணம் சேர்த்து தானும் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்ற ஒரு எண்ணம் வராதா! இந்த கோடிக்கணக்கான பணத்தில் கட்டிய "தேவனுடைய வீடு" ஒரு ஏழை ஊழியனுக்கு இடையூறாக இருக்கிறது. இதை காணும்போது அவரது உள்ளத்தில் எப்படியாவது பணம் சேகரிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதா? பணம் வைத்து எப்படியாவது தனது சபைக்கு ஒரு கட்டிடம் கடன் வாங்கியோ நற்கொடையாகவோ பெறவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதா? சிந்திக்க வேண்டும்.

இன்று தமிழ் நாட்டில் அநேக ஊழியகர்களுக்கு பெரும் கூட்டம் அல்லது செமினார் நடத்துவதற்கு கட்டிடங்கள் கட்ட கோடி கோடியாய் பணம் தேவைப்படுகிறது. இந்த கட்டிடங்கள் எல்லாம் மாயாபுரியை சேர்ந்தது தான். இந்த ஊழியர்களது விற்பனை பொருட்கள் (செய்திகள், பத்திரிகைகள், சீடிக்கள்) இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விற்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களோ அல்லது நமது கிறிஸ்தவ உலகத்தில் பணிபுரிந்த ஊழியர்களான ஜான் வெஸ்லி, வில்லியம் கேரி, போன்றவர்கள் பிரமாண்டமான கட்டிடங்களைக் கட்டி ஊழியம் செய்யவில்லை. நமது நாட்டிற்கு வந்து ஊழியம் செய்த மிஷனரிகள் பெரிய கோபுரங்கலுள்ள ஆலயங்களை நமக்கு கட்டிக்கொடுத்தார்கள். ஆனால் அதேபோல நாமும் இன்று கட்டவேண்டுமென்றால் அநேக கோடிகள் பணம் அவசியம். இதேபோல நமக்கு பணம் இருக்குமானால் ஆலயங்கள் இல்லாத இடங்களில் ஆலயங்கள் கட்டிக்கொடுப்போம். கிராமங்களிலும், பட்டணத்தில் குடிசைப்பகுதியில் வசிக்கும் ஏழை கிறிஸ்தவர்களுக்கு ஆலயங்கள் கட்டிக்கொடுப்போம். சுவிசேட ஊழியங்களுக்கு அலுவலகம் அமைக்க அவசியமானால் சிறய கட்டிடங்கள் கட்டலாம் அல்லவா! தேவ மக்கள் நமக்கு கொடுத்த காணிக்கைகளை கவனமாக செலவழிக்கவேண்டும்.

நமது மத்தியில் கட்டிடங்கள் தங்கள் பெயர்களில் இருந்தாலும், பண விஷயத்தில் உண்மையாக இருந்து ஊழியம் செய்யும் சில உத்தம போதகர்களும் உண்மையான சுவிசேடர்களும் நம் மத்தியில் இருக்கிறார்கள். எல்லா கட்டிடம் வைத்து ஊழியம் செய்யும் ஊழியர்களையோ, எல்லா வசதிகளோடும் வாழும் ஊழியர்களையோ கள்ள ஊழியர்கள் என்று நான் குறிப்பிடவில்லை.

"The cross is going to judge everything in your life-- your eating, your drinking, your sleeping, your spending, your talking. Everything is cross examined!" Leonard Ravenhill

லியோனார்ட் ராவன்ஹில் என்ற எழுப்புதலின் ஊழியர் இவ்விதமாக எழுதினார். "சிலுவையானது உங்களது ஜீவியத்தில் நடக்கும் எல்லா காரியங்களையும் நியாயம் தீர்க்கும். உங்களின் உணவையும் குடிப்பையும், உங்களது நித்திரையும், உங்கள் பேச்சையும் சிலுவை நியாயம் தீர்க்கும்". ஒரு மனிதன் அல்ல. நாம் என்னத்தை உண்ணுகிறோம், என்னத்தை கட்டுகிறோம், என்னத்தை போதிக்கிறோம், எங்கே தங்குகிறோம், எதில் பிரயாணம் செய்கிறோம், எவ்விதம் பணத்தை செலவழிக்கிறோம், எவ்விதம் கொடுக்கிறோம் என்பவைகளை கிறிஸ்துவின் சிலுவை தான் நம்மை நியாயம் தீர்க்கும்.

இந்த மாயாபுரியில் தேவனின் நாமத்தில் அநேக ஊழியங்கள் நடைபெறுகிறது. இங்கே நடக்கிறது எல்லாம் ஒரு மேடையில் காட்டப்படும் ஷோக்களாகவே அமைந்திருக்கிறது. இங்கே ஒரு மேடை இருக்கிறது. அந்த மேடையை சுற்றி ஜனங்கள் உட்காருவார்கள். சில மேடைக்காரர்கள் அதை தீர்க்கதரிசன அரங்கு (Prophetic seminar) என்று அழைப்பார்கள். இந்த மேடைகளுக்கு நேராக தேவ ஜனங்கள் கவரப்பட்டு இழுக்கப்படுவர். இந்த மேடைகளிலிருந்து போதனை செய்யும் மனிதர்களின் வேத அறிவும் அவர்களின் ஞானமும் வெளிப்படும். அவைகளை கேட்டு நாம் அசந்துபோய்விடுவோம். ஏதேன் தோட்டதிலிலிருந்த கேருபாக அபிஷேகம் பண்ணப்பட்ட லூசிபரிடம் எல்லா வேத ஞானங்கள் இருந்தாலும் பெருமை ஆட்கொண்டு சாத்தனாக மாறிவிட்டதை ஒருபோதும் மறந்து போகவேண்டாம்.

இந்த தீர்க்கதரிசன அரங்கம் ஒரு வழி ஊடகம் (one way media) தான். நீங்கள் ஒரு வழியாக உங்கள் காதுகளில் செய்திகளை பெறுவீர்களோ தவிற உங்களிடமிருந்து ஒரு செய்தியோ, எச்சரிப்போ, மேடைகளிலிருப்பவர்களிடத்தில் போகாது. உங்களுக்குள் பரிசுத்தாவினவர் இருப்பார் என்றால் நீங்கள் இந்த உயர்ந்த மேடைகளிலிருந்து வரும் செய்திகளைப் பகுத்தறிந்து வேதத்திற்கு புறம்பாக இருந்தால் கேள்விகள் கேட்கலாம் அல்லவா! ஆனால் இது நடப்பதற்கு ஒரு வழியும் இல்லை. எல்லாம் ஒரு மேடையிலிருந்து தான் கீழே வரும். மேடையிலிருந்து பேசுபவர்க்கு தான் எல்லாமே தேவன் வெளிப்படுத்துவார் என்று ஒரு எண்ணம் நிலவுகிறது. ஒரு சிறிய ஒரு செமினாராகவோ, குழுவாகவோ இருந்தால் அந்த ஊழியரோடு முகம் முகம் தொடர்பு கொண்டு பேசலாம் அல்லவா!

உண்மையான ஒரு தீர்க்கதரிசன அரங்கு நடக்கவேண்டுமானால் அது ஒரு நேர் முகம் முகம் தொடர்பு கொள்ளும் ஒரு கல்விக் கூடமாக (Interactive session) இருக்கவேண்டும். அதில் எல்லோரும் பங்குகொள்ளவேண்டும்.

இப்படி நடக்கும் மேடை கூட்டங்கள் மாயாபுரியின் சந்தையில்தான் நடைபெறும்.

இந்த செமினாரில் செலவுக்கான ஒரு பீஸ் வசூலிக்கப்படும். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அருமையான ஊழியர் டெல்லி பட்டணத்தில் ஒரு அரங்கை நடத்த தேவன் வழி நடத்தப்படுவதாகவும், தியதிகளையும் குறிப்பிட்டு ஆரம்பித்தார். பின்பு போதிய ஆட்கள் வராததால், அதை ரத்து செய்தார். தேவன் வழி நடத்தப்படுவதாகவும், தியதிகளை முன்குறித்து விட்டபின்பு பெரிய கூட்டம் வரவில்லை என்று ரத்து செய்தாராம்! ஏன் ஒரு சிறிய குழுவிற்கு கூட்டம் நடத்தக்கூடாது?

எப்போது பெருமைக்கு இடம் கொடுத்து 'எனக்குத்தான் எல்லா ஞானமும், வெளிப்படுத்தலும்' இருக்கிறது' என்று நினைத்து மோசம் போனார்களோ, அன்றே லூசிபரின் ஆவி அவர்களை வஞ்சித்து விட்டது. எப்போது புகழ் வந்து இவர்களை அழகுபடுத்தியதோ, அன்றே அவர்கள் விழுந்துவிட்டார்கள். எப்போது ஒரு பெரிய கூட்டமாக வந்து மக்கள் அந்த ஊழியக்காரர்களை மகிமை படுத்தினார்களோ, அன்றே அவர்கள் விழுவதற்கு இடம் கொடுத்து விட்டனர்.

இவர்கள், தங்களின் தலைவரான இயேசு கிறிஸ்து எப்படி வனாந்தரத்தில் போய் தன்னை ஒளித்துக்கொண்டாரோ, அதேபோல் தங்களை வனாந்தரத்தில் ஒளித்துக் கொள்ள தவறிவிட்டார்கள். பணம் குவிய, உல்லாசமான வாகனங்களும் அடுக்கடுக்கான கட்டிடங்களையும் கட்ட, தங்களை சிலுவை பாதையிலிருந்து விலக்கி விட்டு, மாயாபுரியின் சந்தைக்குள் நுழைந்து, தங்களது மேடைகளை அங்கே வைத்து, மோட்சப் பயணிகளை தங்களுக்கு நேராக இழுத்து, மோட்சப் பாதையிலிருந்து வழி விலக செய்துவிடுகிறார்கள்.

இந்த மாயாபுரியின் சந்தையில் தேவ மக்களை கவர்ந்து இழுக்கும் நடனத்துடன் நடக்கும் ஆராதனை கூடாரங்களும் இருக்கிறது. ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய பெந்தேகோஸ்தே சபையில் பிசெல்லேரி பாட்டில்களை தித்திக்கும் தண்ணீராக மாற்றி, யேசுகிறிஸ்து கானான் ஊரின் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாகவும் பணப்பைகளில் பணம் வரும்படியாக மந்திர ஜாலங்களை உண்டுபண்ணும் அற்புதங்கள் நடத்தி, இயேசு இந்தவிதமான அற்புதங்கள் செய்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த போதகர் ஆண்டவரை நேசிப்பவர்தான். ஆனால் இந்த மாதிரியான ஒரு ஆவியை கிரியை செய்ய அனுமதித்துவிட்டார். இந்த சம்பவத்தை குறித்து தீர்க்கதரிசன குரல் எழும்பி அவருக்கு எச்சரிக்கை கொடுத்தது. நாம் கொஞ்சம் தவறினால் வலுசர்ப்பமாகிய சாத்தான் நம்மை ஏமாற்றிவிடுவான்.

கள்ள போதகர்களின் செயல்களை வெளிப்படுத்தி உண்மையை சொல்லும் தேவ ஊழியர்களுக்கு உபத்திரவம் உண்டாகும். உண்மையை சொல்பவர்கள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு "தேவ ஊழியர்களை நியாயம் தீர்க்கும் இவர்கள் (இந்த தீர்க்கதரிசன ஊழியர்கள்) சாத்தானின் பிள்ளைகள்" என்று அறிவிக்கப்படும். இவர்களை எந்த சபைகளிலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அறிவிக்கப்படும்.

இப்போது, எசேக்கியேல் 13 அதிகாரம், வசனங்கள் 2-16, தியானிக்கவும்.

"இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.

கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்".

(4-6).

நமது மத்தியிலிலுள்ள இந்த கள்ள தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். இவர்கள் நமக்காக ஜெபிப்பது இல்லை. இவர்கள் தங்களுக்கு உதவி செய்யும்படி ஏற்படுத்திய ஊழியர்கள் (Subordinate employees) மூலம்தான் நமக்கு திறப்புகளில் நிற்பார்கள். இவர்கள் நமது வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. நமக்கு இவர்கள் மூலம் எந்த பாதுகாப்பும் இல்லை. நமது பணம் தான் அவர்களின் குறி. ஆனால், இவர்கள் கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் (வரும் காலத்தை குறித்து ஜோதிடம்) அறிவித்து, அந்தி கிறிஸ்துவை (another Christ) தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.

இவர்களை அடையாளம் கண்டு பிடித்து கொண்டு, விலகி ஓடி மோட்சப் பயணத்திலுள்ள கிறிஸ்தியானைப்போல தப்பி ஓடவும். அவர்களின் கூட்டங்களில் அல்லது தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால் உட்காரமல் உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும். இவர்களின் கள்ள வெளிப்படுத்தல்கள் உங்கள் முதுகில் ஒரு சுமையை உண்டு பண்ணும். இந்த சுமையை போக்க கல்வாரி அண்டைதான் நீங்கள் ஓடவேண்டும். கைகளில் வேதத்தை எடுத்து தியானம் செய்து மோட்சப்பாதையை நோக்கி ஓடவும்.

"கர்த்தர் ஆசீர்வதிக்கிறார் உங்களை பெருகபெண்னுவார் நீங்கள் செழித்திருப்பீர்கள்" என்று கூறி பாவத்தைக் குறித்தோ அல்லது நியாயத்தீர்ப்பைக் குறித்தோ தேவ மக்களுக்குப் பிரசங்கம் பண்ணாமல், கள்ளதரிசனங்கள் காண்கிற இஸ்ரவேலின் (நமது சபைகளிலுள்ள கள்ள தீர்க்கதரிசிகள்) இல்லாமற்போவார்கள். ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்துக் கொடுக்கிறார்கள். தேவனுடைய ஆசிர்வதிப்பின் ஆசீர்வாத வசனங்களை மாத்திரம் கொடுத்து, பாவத்தை குறித்தோ எச்சரிக்காமல், வெறும் தழுவணைகளை (நமது விசேஷித்த சரீர ஆசிர்வாதங்களுக்கான கூட்டங்கள்) கொடுப்பவர்கள். இவர்கள் மோட்சப்பயணத்திலுள்ள சுவிசேகனை போல அல்ல. மாயாபுரியின் சந்தையை நோக்கி வழிநடத்துபவர்கள். வியாபாரிகள், மாணவர்கள், சிறு குழந்தைகள், போன்றவர்களுக்கு ஏற்றவாறு தலையணைகளை உண்டுபண்ணுகிறார்கள். இவர்கள் நமக்கு அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைகளுக்குப் பொருந்தும்படி தலையணைகளை உண்டுபண்ணி நம்மை மாயாபுரியின் எல்லைகளின் உள்ளே நம்மை வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மாயாபுரியின் சந்தையில் அவர்களுது விற்பனை பொருட்களை நம்மை பணம் கொடுத்து வாங்க விரும்புகிறார்கள். மோட்சப்பயணத்திலுள்ள கிறிஸ்தியனைப் போல, நாம் இவர்களின் வலைகளில் விழாமல் தப்பி ஓடவேண்டும்.

"சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள், ஒருவன் மண்சுவரை வைக்கிறான், இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.

சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி "அது இடிந்துவிழுமென்று சொல், வெள்ளமாகப் பெருகுகிற மழைபெய்யும், மகா கல்மழையே, நீ சொரிவாய், கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும். இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?"

ஒரு சுவிசேடகன் தனது அற்புதம் தெய்வீக கூட்டத்தின் மூலமாக சில ஆத்துமாக்களை கிறிஸ்துவண்டை வழி நடத்துகிறான். ஆனால் இந்த ஆத்துமாக்களை மனம்திரும்புதலுக்கு ஏதுவாக வழி நடத்தாமல், கிறிஸ்துவே ஒரே வழி என்று அறிவிக்காமல், வெறும் சரீர நன்மைகளுக்கு மாத்திரம் வழி நடத்தினால், அந்த சுவிசேடகன் வெறும் மண் சுவரைத்தான் காட்டுகிறான். இந்த ஆத்துமாக்கள் மனம்திரும்பி பாவத்திலிருந்து இரட்சிக்கப்படாமல் தாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தப்பான மனநிலையில் ஒரு சபையில் சேரக்கூடும். இந்த சபையின் போதகரோ இந்த ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டார்கள் என கருதி அவர்களை "பரிசுத்தாவியின் அபிஷேகம்" என்ற ஆவிக்குரிய அனுபவத்திற்கு கடந்துவரும்படி செய்து அந்த ஆத்துமாக்களை ஒரு பெரிய ஏமாற்றத்திற்குள் வழி நடத்தினால், அந்த சபை போதகர் சாரமில்லாத சாந்தை அந்த மண் சுவருக்கு பூசுகிறான் என்று அர்த்தமாகும். ஒரு மனிதனுக்கு உண்மையான இரட்சிப்பின் அனுபவம் இருக்குமானால், அவன் தனது பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு ஒரு புதிய வாழ்க்கையை எல்லாரும் காணும்படியாக வாழவேண்டும். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17).

ஆலயத்தில் வந்து ஆராதித்து, வெறும் பக்தி வாழ்க்கை நடத்தினால் போதாது. இன்று அநேகர் வெறும் சன்மார்க்க ஜீவன் வாழ்ந்துகொண்டு ஆலயத்தில் ஒழுங்காக ஆராதனையில் கலந்துகொண்டு தாங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற ஒரு தப்பான மனப்பாவனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு விதமான ஊழியர்களும் கட்டுவது ஒரு இடிந்து விழும் கட்டிடம்தான். இவர்கள் கட்டுவது, மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய இயேசு கிறிஸ்துவிடம் சேர்ந்தவர்களாகி, அவர் மேலே கட்டப்படும் "ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகை" அல்ல (I பேதுரு 2 :4-5). இன்று இதைப்போல மண்சுவரின் கட்டப்பட்டு சாந்தம் பூசப்பட்ட கட்டிடங்களாக விளங்குகிறது.

இன்று நம் மத்தியில் சமாதானம் இல்லாதிருந்தும், சமாதானமென்று சொல்லி, தேவ ஜனத்தை மோசம்போக்குகிற, ஊழியர்கள் அனேகர் உண்டு. இவர்கள் மோட்சப் பயணத்தில் காணும் கிறிஸ்தியானை மாய சந்தையில் வழி நடத்தி மோட்சப் பாதையிலிருந்து திசை திருப்பும் கள்ள ஊழியர்கள்! இவர்களில் ஒருவன் மண்சுவரை வைக்கிறான். இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். ஒரு ஊழியன் ஒரு மண் சுவரை போல ஊழியம் செய்தால் அவனோடு சேர்ந்து அந்த மண் சுவரின்மேல் சாரமில்லாத சாந்தை வேறு ஊழியன் ஒரு பூசுகிறான். இந்த இரண்டுவிதமான ஊழியர்களும் தேவ ராஜ்யத்தை அவரின் சித்தத்தின்படி கட்டாமல் தங்களது சுய சித்தத்தால் கட்டுகிறார்கள்.

இந்த இரண்டுவிதமான ஊழியர்களும் மோட்சப் பயணத்திலுள்ள சுவிசேக்ஷகனைப்போன்ற ஊழியர்கள் அல்ல! இவர்கள் வெறும் மண்சுவரை கட்டி இவர்கள் சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்கள். "அது இடிந்துவிழுமென்று சொல், வெள்ளமாகப் பெருகுகிற மழைபெய்யும், மகா கல்மழையே, நீ சொரிவாய், கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்". இந்த இடிந்து விழும் மண் சுவரை நம்பி ஏமாற்றம் அடையவேண்டாம். இந்த மாய சந்தையிலிருந்து தப்பி ஓடி, இந்த மண் சுவரை இடித்து பொடியாக்கி கையிலுள்ள தேவ புத்தகத்தை தியானம் செய்து, இந்த அழிந்து போகும் பட்டணத்தை (City of Destruction) கடந்து போகவும்.

"நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும், அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை, இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை, அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்".

கர்த்தர் உரைத்தார் என்று உரைக்கும் தங்களை தீர்க்கதரிசிகள் என்று அறிவித்து தங்களை பிரபலபடுத்தும் யெசபேல் போன்ற கள்ள ஊழியர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். பொய்க்குறியைத் தீர்க்கதரிசினம் என்று கூறி தேவ நாமத்தை வீணில் வழங்கும் இவர்களை அடையாளம் கண்டு பிடித்து அப்பாவி விசுவாசிகளை எச்சரிக்கை செய்ய வேண்டும். இவர்கள் நமது சங்கத்தில் இருப்பவர்கள் அல்ல. நமது அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை. தேவ ராஜியத்தில் பிரவேசிப்பதுமில்லை. இவர்களிடமிருந்து தப்பி செல்ல வேண்டும்.

உண்மையானவின் ரத்த சாட்சி

முதலில் இவர்களைப் பிரம்பினால் அடித்து சங்கிலியால் கட்டுங்கள் என்று தலைவன் கட்டடையிட்டான். அப்படியே செய்யப்பட்டது!

கிறிஸ்தியானும் உண்மையானவனும் மிகவும் அடக்கத்துடன் அனைத்தையும் சகித்துக் கொள்வதைப் பார்த்தவுடன் அனைத்தையும் சகித்துக் கொள்ளவதைப் பார்த்தவுடன் கூட்டத்தில் சிலர் அவர்கள் மீது இரக்கப்பட்டு அவர்களை விடுதலை செய்யும்படி கோரினார்கள்! இதைக் கண்ட எதிர்த்தரப்பினர் அவர்களைக் கண்டிப்பாக்கக் கொன்றுபோட வேண்டும் என்று கூச்சலிடத் துவங்கிவிட்டார்கள். எனவே தலைவன் அவர்களை நீதிபதியிடம் அனுப்பினான்.நன்மையை வெறுப்பவன் என்பவன்தான் நீதிபதி! இவர்கள் வியாபாரம் செய்வதைத் தடுக்கிறார்கள். அமைதியைக் குலைத்துவிட்டார்கள். நகரத்திலுள்ளவர்களை இரு பிரிவினராகப் பிரித்துவிட்டார்கள். இவை நமது இளவரசரின் சட்டங்களுக்குப் புறம்பானவை என்று அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது!உடனே உண்மையானவன் எழுந்து, நாங்கள் எல்லாவற்றிற்க்கும் மேலான ஆண்டவருடைய சட்டங்களுக்குத்தான் கீழ்படிவோம். நீங்கள் சொல்லும் இளவரசன் சாத்தான். அவன் எங்கள் ஆண்டவருக்கு எதிரியானவன். அவனையும் அவனுடைய பிசாசுக் கூட்டத்தினரையும் நாங்கள் வெறுக்கிறோம் என்று மனத்திடத்தோடு கூறினான். உடனே கூடியிருந்தவர்கள் இன்னும் அதிக ஆத்திரத்தோடு கத்தத் துவங்கிவிட்டார்கள்

பொறாமை, மூடநம்பிக்கை, புகழ்விரும்பி என்ற மூவரும் அவர்களுக்கு விரோதமாகச் சாட்சிகூற எழும்பினார்கள். கிறிஸ்தவ சமயம் இந்தக் கண்காட்சியின் வழக்கத்துக்கு விரோதமானது என்று கூறி தங்கள் விற்பனையைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டினார்கள்.

உண்மையானவன் எழுந்து ஆண்டவருடைய வார்த்தைக்கு விரோதமானவை அனைத்தும் கிறிஸ்துவுக்கு விரோதமானவை என்றுதான் நான் கூறினேன். சுhத்தானும் அவனுடைய கட்டளைகளும் நரகத்துக்குத் தான் ஏற்றவை. அவை நமக்கு ஏற்றவை அல்ல என்று கூறியவுடன் மீண்டும் பெரிய கூக்குரல் கேட்டது!

அவனுக்குக் கொலைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று கத்தினார்கள் அநேகர்!

நன்மையை வெறுப்பவன் என்ற நீதிபதி உண்மையானவனுக்கு மரண தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறி விட்டான்.

காவலாளிகள் உண்மையானவனைச் சாட்டையினால் அடித்தார்கள்! கூடியிருந்தவர்கள் அவன்மீது கற்களை எறிந்தார்கள்! சிலர் வாளினால் அவன் உடலைத் துளைத்தார்கள்! இவ்வாறு சித்தரவதை செய்தபின்பு ஒரு கம்பத்தில் அவனைக் கட்டி நெருப்பு மூட்டிவிட்டார்கள்! உண்மையானவன் ஆண்டவரைத் துதித்தபடியே உயிரை விட்டான்.

உடன்தானே அவன் ஒரு பறக்கும் இரதத்தில் ஏற்றப்பட்டு நேரடியாக மோட்சத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதை நான் என் கனவில் கண்டேன்.

கிறிஸ்தியான் சிறையில் அடைக்கப்பட்டான்! ஆனால் சில நாட்களுக்குள்ளாக அவன் தப்பிச் செல்வதற்க்கு ஆண்டவர் கிருபை செய்தார்!

கிறிஸ்தியான் மாயாபுரியைவிட்டு வெளியேறும்போது நம்பிக்கை என்ற பெயரையுடைய ஒருவன் அவனுடன் வந்து சேர்ந்துகொண்டான். கிறிஸ்தியான், உண்மையானவன் இவர்களுடைய திட விசுவாசத்தைக் கண்டு மனம் திரும்பியவன் அவன்! இருவருமாக மோட்சத்தை நோக்கித் தங்கள் பயணத்தைக் தொடர்ந்தார்கள்.

கற்றுக்கொள்ளும் பாடம்

இன்று உண்மையாக சத்தியத்தை அறிவிக்கும் தேவதாசர்களுக்கு உபத்திரவம் அந்திக்கிறிஸ்துவின் ஆவியிடமிருந்துதான் வருகிறது. விழுந்து போன ஊழியர்களை அந்திக்கிறிஸ்து தன்னண்டை வைத்துக்கொள்கிறான். ஆனால் தேவனின் மகாபெரிய கிருபையினாலும், இரக்கத்தினாலும், அறிந்துகொள்ளமுடியாத தேவ ஞானத்தாலும் சுவிசேஷம் இவர்களின் அமைப்புகளின் மூலம் அறிவிக்கப்படுகிறது. அற்புதங்களினால் மக்கள் தொடப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த அமைப்புகளில் உண்மையாக பணி புரியும் ஆயிரக்கணக்கான, தங்கள் பெயர்கள் வெளிவராமல் தேவ ஊழியம் செய்யும் கிறிஸ்துவின் சரீரத்தில் மறைந்து இருப்பவர்களே! இவர்களை நாம் மறக்கக் கூடாது.

இந்த விழுந்து போன ஊழியர்களுக்கு நாம் பாரத்தோடு ஜெபிப்போமாக! அவர்களை எச்சரிப்பும் செய்வோமாக!

"காவலாளிகள் உண்மையானவனைச் சாட்டையினால் அடித்தார்கள்! கூடியிருந்தவர்கள் அவன்மீது கற்களை எறிந்தார்கள்! சிலர் வாளினால் அவன் உடலைத் துளைத்தார்கள்! இவ்வாறு சித்தரவதை செய்தபின்பு ஒரு கம்பத்தில் அவனைக் கட்டி நெருப்பு மூட்டிவிட்டார்கள்! உண்மையானவன் ஆண்டவரைத் துதித்தபடியே உயிரை விட்டான...."

சரீரப்பிரகாரமாக, இன்றுள்ள உண்மையாவனவர்களுக்கு உபத்திரவம் வராது. ஆனால் அவர்களைப் புரிந்து கொள்ளாமல் வேதத்தை சரியாக படித்து சத்தியத்தை அறிந்து கொள்ளாதவர்கள் கற்களை எறிவார்கள். கற்கள் என்றால் குற்றச்சாட்டுக்கள். இந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதும் நியாத்தீர்ப்பை அளிப்பதும் ஒரு வெளிரங்கமாக இருக்கும். இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மனிதர்கள் அப்போஸ்தலர்களோ அல்லது தீர்க்கத்தரசிகளோ அல்ல. இவர்கள் சத்தியத்தை அறியாத போதகர்கள். இவர்கள், எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிற ஆவிக்குரியவர்கள் அல்ல. ஜென்மசுபாவமான மனிதர்கள்!

" ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். (I கொரிந்தியர் 2 :14-15).

இவர்கள் உபயோகிக்கும் வார்த்தை இதுதான். "Judge Not" . "மற்றவர்களை நியாயம் தீர்க்காதே" என்று சொல்வார்கள். நாம் பகுத்தறிந்து சத்தியத்தை அறிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.

நமக்கு கொடுக்கப்பட்ட அளவுகோலை எடுத்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்க்கலாம். அந்நிய ஜாதி மக்களை அல்ல, கிறிஸ்தவ சபைகளையும் அங்கே நடக்கும் ஊழியங்களையும், இயேசுவின் நாமத்தில் நடத்தப்படும் எல்லா காரியங்களையும் அளந்து பார்க்கலாம். பலிபீடத்தில் வைக்கும் காணிக்கைகளையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்க்கலாம் (வெளி. 11 :1-2).

அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நான் அநேக தீர்க்கதரிசன சொப்பனங்ளை (space)வியாக்கினம் செய்து வெளியிட்டேன். அதில் சில வெளிப்படுத்தல்களின் மூலம், தீர்க்கதரிசன குழந்தைகளை எவ்விதம் அந்திகிறிஸ்து அழிக்கிறான் என்றுகுறிப்பிட்டிருக்கிறேன்.

வேறு ஒரு வெளிப்படுத்தலில் , 2005 ம் ஆண்டில், ஒரு வெளிநாட்டு சகோதரி காணும் தரிசனத்தில் ஒரு பிறந்த ஆண் குழந்தையை பரிசுத்தாவியானவர் காண்பிக்கிறார். அவற்றின் தொப்புள் கொடி அறுக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும்

சுருங்கவில்லை; அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் பிறந்திருந்தாலும் அதின் தோல் உரிந்துகொண்டிருந்தது. அந்த குழந்தையை அங்கேயுள்ள பெண்கள் கவனம்செலுத்தி பராமரித்தல் செய்யாததால் அந்த குழந்தை மரிக்கும் தருவாயில் வருகிறது. உடனே இந்த தரிசனத்தைக் கண்ட சகோதரி அங்கேயுள்ள ஒரு பெண்ணை அழைத்து இந்த குழந்தையை ஊட்டும்படியாவுகம், அதற்கு ஒரு தொட்டில் உண்டுபண்ணும்படியாவும் கட்டளை இடுகிறார். பின்பு இந்த சகோதரி அந்த குழந்தையை கைகளில் எடுத்து அதன் நாசியில் தன் வாயை வைத்து சுவாசத்தை (space) ஊதி உயிர் கொடுக்கிறாள்.

இதன் அர்த்தம் இவ்வருமாறு. "பெண்கள்" என்பது தாயைப்போல இளம் விசுவாசிகளை ஆத்மீக ஆகாரமும் ஆவிக்குரிய பாலும் கொடுத்து வளர்க்கும்

சபைபோதகர்களாகும். இந்த பிறந்த குழந்தையின் மேல் அக்கறை காட்டாததால், இந்தகுழந்தை மரிக்கும் தருவாயில் வந்தது. இந்த ஆண் குழந்தை, ஒரு தீர்க்கதரிசனகுழந்தையாகும். இந்த தீர்க்கதரிசன குழந்தை வளர்வது ஒரு சபையில்தான். சபையில்தான் அதற்கு ஒரு தொட்டிலும் (bed), ஆவிக்குரிய உணவும் கொடுக்கப்படவேண்டும். தீர்க்கதரிசிகள் நமது குறைகளை உணர்த்தி, வேதத்திற்கு முரணான வாழ்க்கையை கண்டித்து, நம்மை ஆவிக்குரிய வாழ்க்கையில் பூரணராகும்படி வழி நடத்துகிறார்கள். இவர்கள் சபையில் தேவ வசனத்திற்கு மாறாக நடக்கும் காரியங்களை சுட்டிக்காட்டும் போது சபை போதகர்கள் தாழ்மையாக அவர்களது எச்சரிப்பை ஏற்றுக்கொண்டு, அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும். அந்த குழந்தைகள் வளரும்படி தொட்டில்கள் கொடுக்கப்படவேண்டும். அவர்களை சபை போதகர்கள் அங்கீகரிக்காமல் போனால், அவர்களின் தீர்க்கதரிசன ஆவி அவிந்துபோகும். நாளடைவில் அவர்கள் தங்களின் ஆத்மீக ஊழியத்தில் மரணமடைந்து போவார்கள். இந்த குழந்தைகளுக்கு குறைவுகள் இருக்கலாம். பூரணமானவர்கள் அல்ல. ஆனாலும், அவர்கள் வளர்வதற்கு சபைகளில் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படவேண்டும். இல்லாவிடில் அவர்கள் சபைகளை விட்டு விலகி தனியாக ஊழியம் செய்வார்கள். இது நல்லதல்ல.

ஆறாம் அதிகாரம்

சந்தேகக் கோட்டையில் பயணிகள்