சிலுவைக்காட்சியை காணுதல்

Previous......ஒரு பயங்கரமான கனவு

சிலுவைக்காட்சியை காணுதல்

கிறிஸ்தியான் சிலுவையின் அருகே வந்தவுடன் அவன் முதுகிலிருந்த சுமை படாரென அறுந்து கீழே விழுந்தது! உருண்டுபோய் திறந்திருந்த கல்லறைக்குள் சென்று மறைந்துவிட்டது அதன் பிறகு நான் அந்தச் சுமையையே பார்க்கவில்லை.

அவரது பாடுகளினால் எனக்கு விடுதலை கிடைத்தது! அவரது மரணத்தினால் எனக்கு வாழ்வு கிடைத்தது! என்று கூறி மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தான் கிறிஸ்தியான். வியப்போடு சிலுவையைப் பார்த்தவனாக அங்கையே நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

அப்போது பிரகாசமான ஆடையணிந்த மூவர் வந்து, உனக்கு சமாதானமுண்டாகட்டும் என்று கிறிஸ்தியானை வாழ்த்தினார்கள். முதலாமவர் உன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்றார். இரண்டாமவர் அவனது கந்தையாடைகளைக் களைந்து புதிய வெண்ணங்கியை அவனுக்கு அணிவித்தார். மூன்றாமவர் அவன் நெற்றியில் ஓர் அடையாளத்தைப் பதித்து, அவன் கையில் முத்திரையிடப்பட்ட சுருள் ஒன்றைக் கொடுத்தார். நீ செல்லும் பாதையில் இதைப் படித்துப்பார். நீ மோட்ச வாயிலை அடையும்போது இந்தச் சுருளைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

கற்றுக்கொள்ளும் பாடம்

கிறிஸ்தியான் சிலுவையின் அருகே வந்தவுடன் அவன் முதுகிலிருந்த சுமை படாரென அறுந்து கீழே விழுந்தது! உருண்டுபோய் திறந்திருந்த கல்லறைக்குள் சென்று மறைந்துவிட்டது. உண்மையான இரட்சிப்பின் அனுபவம் இதுதான். மன்னிக்கப்பட்ட பாவங்கள் இயேசு உயிர்த்தெழுந்த கல்லறையில் மறைய வேண்டும். பின்புதான் முதுகின் மேலுள்ள பாவ பாரம் நீங்கும். பாவ பாரம் நீங்கும் வரை கால்வாயின் தரிசனத்திலிருந்து வெளியே வரக்கூடாது. இன்று அநேகர் ஏமாற்றப்பட்டு தங்கள் பாவங்களை தங்களது வாழ்க்கையில் சுமந்து கொண்டு இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். தங்களின் சபைகளின் போதகர்களின் பேச்சை அல்லது போலியான சுவிசேகர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாந்து நிற்கிறார்கள். இவர்கள் திரும்பவும் கால்வாரிக்குச் சென்று பாவமன்னிப்பின் நிச்சயத்தை கிறிஸ்துவிடமிருந்து பெறவும். கிறிஸ்தியானைப் போல உங்கள் கண்களிலிருந்து நீர் வடிய வேண்டும். முதலாவது பாவமன்னிப்பைப் பெற்று, வெண் ஆடையை தரிக்கவேண்டும். வெண் ஆடை என்றால் பரிசுத்தாவினவரை பெற்ற அடையாளம். நெற்றியில் பரிசுத்தாவியானவரின் முத்திரை வரையப்படவேண்டும். தங்கள் இரட்சிக்கப்படும்படியாக வழி நடத்தும் பைபிளை கையில் ஏந்தி முன் செல்ல வேண்டும். இங்கேயே எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்து கள்ள உபதேசிமார்களின் வார்த்தைகளைக் கேட்டு ஏமாந்து போகவேண்டாம். இது தான் ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பம். ஆவிக்குரிய குழந்தையானாவுடன் கிறிஸ்துவின் சாயல் அடையும் வரை மோட்ச பாதையின் முன்னேறிப் போகவேண்டும்.

நீங்கள் செல்லும் பாதையில் இந்த சுருளை படித்துக்கொண்டே போகவேண்டும். நீங்கள் மோட்ச வாயிலை அடையும்போது இந்தச் சுருளைக் கண்டிப்பாகக் கொடுக்கவேண்டும். இந்த சுருளை நீங்கள் பின்பற்றினால் தான் மோட்ச பட்டணத்தை அடைய முடியும். உங்களின் சபைகளில் போதிக்கும் தப்பான உபதேசங்களின் மூலமாகவோ அல்லது ஏமாந்து போன சுவிசேடர்களின் உபதேசங்களைக் கேட்டோ நீங்கள் மோட்சப் பட்டணத்தை அடையவே முடியாது. போகும் பாதையில் அநேக போராட்டங்களும் சாத்தானின் சோதனைகளும் நஷ்ட துன்பங்கள் எல்லாம் வரும்.

பாவமன்னிப்பின் நிச்சயத்தை கொடுப்பவர் பரிசுத்தாவியானவர் தான். அவர் கொடுக்கும் முத்திரை தான் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம். இந்த அனுபவத்திற்கான அடையாளம் என்ன? உங்களின் இந்த அனுபவத்தை குறித்து சாட்சி கொடுப்பது உங்களை சுற்றியுள்ள மக்கள் தான். நீங்கள் கல்வாரியின் சிலுவையில் வந்து மனம் திரும்பி உங்கள் பாவச் சுமை போனவுடன், கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வாசம் பண்ணுவார்; பரிசுத்தாவியானவர் உங்களை எல்லா சாத்தியத்திற்குள்ளும் வழி நடத்துவார். பரிசுத்தாவியானவர் தானாக பேச மாட்டார். கிறிஸ்துவின் வார்த்தைகளை தான் உங்களுக்கு அளிப்பார். சுயமாக பேசவே மாட்டார். பிதா, குமாரன், பரிசுத்தாவியானவர் மூவரும் உங்களின் இருதத்தில் ஒன்றாகவே இருப்பார்கள். தனித்தனியாக வரவோ அல்லது இருக்கவோ மாட்டார்கள். இது தான் சத்தியம். பரிசுத்தாவியானவர் தனியாக வரவே மாட்டார்.

பரிசுத்தாவியானவருக்கு எந்த விதமான அடையாளமோ கிடையாது. கிறிஸ்துவின் அடையாளம் தான். ஏமாந்து போகவேண்டாம். அடையாளத்தைப் பெற, யாரிடமோ போய் ஜெபிக்க ஓடவேண்டாம். வேறு ஒரு ஆவியைப் பெற வேண்டாம். பரிசுத்தாவியானவருக்கு கிறிஸ்துவின் குணாதிசயங்களே காணப்படும். உங்களை கீழே தள்ளி விடமாட்டார். உங்களை தாங்கி வழி நடத்துபவர். உங்களை கூச்சலிட செய்ய மாட்டார்.

" இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்" (ஏசாயா 42:1-3)

வீதியில், அவர் உங்களை சத்தமிட வழி நடத்த மாட்டார். அமைதியாக உங்களிடம் பேசுவார். பக்கத்துக்கு வீட்டிலிருக்கும் மக்களுக்கு எந்த விதமான இடையூறுகளையும் கொடுக்கவே மாட்டார்.

உங்களை ஊளையிட்டு, சிரிக்க வைக்கமாட்டார். உங்களுக்கு ஆத்துமாவில் உலகம் அளிக்காத சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுப்பார்.

ஆராதனை என்ற பெயரில், உங்களை நடனம் ஆட வழி நடத்தமாட்டார். உங்களை பரிசுத்தத்திற்குள்ளும் மற்றவர்களை நேசிக்கும் அன்புக்குள்ளும் வழி நடத்துவார். பரிசுத்த அலங்காரத்துடன் அவரை உள்ளத்தின் அடியிலிருந்து துதிக்க வழி நடத்துவார். அவர் விரும்புவது வெளிப்படையான, மற்றவர்கள் பார்க்கும்படியான ஆராதனை அல்ல. ஒரு அந்தரங்கமான பரிசுத்த ஆராதனை! மற்ற பரிசுத்த தேவ மக்களோடு அவரை துதித்து ஆராதிக்கும்போது உங்களிலுள்ள கிறிஸ்து வெளிப்படுவார். அவரை மனதிலே அமைதியாக துதிக்கலாம். வாயின் மூலம் சத்தமாகவோ துதிக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் ஆராதிக்கக் கற்றுக் கொள்ளவும்.

பரிசுத்தாவியானவருக்கு வேறு ஒரு பெயர் கிறிஸ்துவின் ஆவி. தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல (ரோமர் 8:9).

இன்று அநேகர் உணர்ச்சி வசப்பட்டு கத்தி ஆண்டவரை துதித்தால் தான் பரிசுத்தாவினவரின் கிரியைகள் வெளிப்படும் என்று தப்பான எண்ணத்தில் இருக்கிறார்கள். மாம்சத்துக்குள் உள்ளவர்கள் உணர்ச்சி உலகத்தில் வாழ்கிறார்கள். அநேக போதகமார்கள், "அந்நிய பாஷையில் பேசி ஆவிக்குள்ளாகுங்கள்" என்ற தப்பான உபதேசம் செய்கிறார்கள்.

அந்நிய பாஷையில் பேசுவது தேவனோடு ரகசியம் பேசுவதற்குத்தான். இந்த வரம் உங்களுக்கு கொடுக்கப்படாமலிருந்தால் அதை நாடி ஓடிச் செல்லவேண்டாம். ஆண்டவருக்கு யார்யாருக்கு எந்தெந்த வரங்களை அருளவேண்டும் என்பது தெரியும். பவுல் உரைப்பதுபோல தீர்க்கதரிசன வரங்களை நாடவும்.

பரிசுத்தஆவியானவரின் வழி நடத்தப்பட்டு பரிசுத்தாவியானவர் உங்களது வாழ்க்கையை முற்றிலும் ஆட்கொள்வது தான் உண்மையான சத்தியம். இதுதான் ஆவிக்குள்ளாகும் அனுபவம். இப்படி ஆவிக்குள்ளாகும் போதுதான் பரம தரிசனங்கள் கிடைக்கும். பரத்திலிருந்து ஞானம் வருகிறது. தீர்க்க தரிசன வரங்கள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுகிறது. வெறும் கூச்சல் போட்டு அந்நிய பாஷைகளில் பேசினால் பரிசுத்தாவியானவர் தன்னை வெளிப்படுத்திக் காண்பிக்கவேமாட்டார். பரிசுத்தாவியானவரை நீங்கள் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்தவோ கூடாது. அவர் உங்கள் கைப்பாவை அல்ல.

Next..... மூன்று உறங்கும் மனிதர்கள்