மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்

Previous....அப்பொல்லியோனோடு போர் 

மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்

அப்பொல்லியோனிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டு, கிறிஸ்தியான் மரண இருளின் பள்ளத்தாக்கை அடைவதை நான் என் கனவில் கண்டேன். அப்போது இருவர் அவனுக்கு எதிராக ஓடிவந்தார்கள்."ஜயா, நேரே போகாதீர்கள். இந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் ஓரே இருளாக இருக்கிறது. கொடிய மிருகங்களையும், விகாரமான ஜந்துக்களையும் அங்கே கண்டோம். எங்கும் வேதனையில் துடிப்பவர்களின் கூக்குரல்தான் கேட்கிறது", என்று கூறி அவனைத் தடுத்தார்கள்.ஆனால் கிறிஸ்தியானோ, "நான் செல்லவேண்டிய வழி இதுதான். எனவே திடமனதோடு இதில்தான் செல்வேன்", என்று கூறியபடி நேரே சென்றான்.மரண இருளின் பள்ளத்தாக்கின் நடுவே சென்ற பாதை மிகவும் குறுகலாக இருந்தது. அதன் இடதுபுறம் ஆழமான குழி காணப்பட்டது. வலதுபுறம் ஓரே சதுப்பு நிலக் காடாகக் காட்சியளித்தது! இரண்டு புறமும் சறுக்கி விழுந்துவிடாமல் நடுவில் நடந்துசெல்வது கடினமாகவேயிருந்தது!

பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் நரகத்தின் வாசல் இருந்தது. அதிலிருந்து நெருப்பும், புகையும் புறப்பட்டு வந்தது. கர்ணகடுரமான சத்தங்களும் கேட்டன!

கிறிஸ்தியான் தனது பட்டயத்தை உறையில் போட்டு விட்டு ஒரு புதிய ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டான். ஜெபமே (எபே.6:18) அந்தப் புதிய ஆயுதம்! ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என்று தொடர்ந்து ஜெபம் செய்தான்.

துஷ்ட மிருகங்கள் அவனை நெருங்கி வந்தன. ஆண்டவருடைய வல்லமையால் நான் தொடர்ந்து நடப்பேன் என்று விசுவாசத்தோடு சத்தமிட்டான். அந்த மிருகங்கள் விலகி ஓடிப்போயின!

இருள் விலகி காலையில் வெளிச்சம் வந்தவுடன் கிறிஸ்தியான் தான் வந்த பாதையைத் திரும்பிப்பார்த்தான். ஆபத்துக்களுக்கு மத்தியில் மிகவும் குறுகலான பாதையில் தன்னைப் பத்திரமாக வழிநடத்திய ஆண்டவரைத் துதித்தான்!

பள்ளத்தாக்கிலிருந்த ஒரு குன்றுப் பகுதியை அடைந்தான் கிறிஸ்தியான். மேடான இடத்திலிருந்து சுற்றிலும் பார்த்தான். அப்போது சற்றுத் தொலைவில் உண்மையானவன் நடந்துசெல்வதைக் கண்டான்.

"உண்மையானவனே, கொஞ்சம் நில். நானும் உன் கூட வருகிறேன்", என்று குரல்கொடுத்தான் கிறிஸ்தியான்.

"என்னால் நிற்க முடியாது பழிவாங்குபவர்கள் என்னைத் தொடர்ந்து வருகிறார்கள்", என்று கூறிய உண்மையானவன் நிற்காமல் சென்றான்.

இதைக் கண்ட கிறிஸ்தியான் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்ற எண்ணத்தோடு அவன் பின்னே ஓடினான். ஓடிச் சென்ற அவன் உண்மையானவனை மிகச் சுலபமாக தாண்டி விட்டான். தன்னுடைய வேகத்தை எண்ணி பெருமைப்பட்டான் பாதையைக் கவனிக்கவில்லை! கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டான்! உண்மையானவன் ஓடிவந்து அவனைத் தூக்கி விட்டான். இருவருமாகப் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். கிறிஸ்தியான் வழியில் தான் பெற்ற அனுபவங்களையெல்லாம் விவரித்துக் கூறினான்.

கற்றுக்கொள்ளும் பாடம்

அப்பொல்லியனோடு யுத்தம் செய்வது தனிப்பட்ட ஒவ்வொரு விசுவாசிக்குத்தான். சபையின் போதகரோ, சுவிசேஷகரோ இந்த யுத்தத்தை பண்ணமுடியாது. ஒவ்வொரு விசுவாசியையும் ஒரு யுத்த வீரனாக மாற்றுவது தான் ஒரு சபை போதகரின் கடமை. எல்லா ஞாயிறன்றும் போதகர்கள் அவர்கள் விசுவாசிகளின் மீதுக் கைகளை வைத்து ஜெபித்து சாத்தானை விரட்டுவது வழக்கமாகப் போய்விட்டது. இந்நிலை மாறவேண்டுமானால் சபைகளை ஆதி அப்போஸ்தலரின் காலத்துக்கு நேராக கொண்டு செல்லவேண்டும்.

அசுத்த ஆவிகளை துரத்திவிட்டால் மாத்திரம் போதாது. இந்த துரத்தப்பட்ட ஆவிகள் மீண்டும் காலியாக இருக்கும் இடத்திற்கு, மேலும் பொல்லாத ஆவிகளை அழைத்துக்கொண்டு வந்து, பிரவேசிக்க முயற்சிக்கும். சபையின் போதகர் அந்த பாதிக்கப்பட்ட விசுவாசியை ஆவியில் பலப்படுத்தி, அபொல்லியனோடு எதிர்த்து நின்று யுத்தம்பண்ணி அவனை மேற்கொள்ளும்படியான பயிற்சிகள் அளிக்கவேண்டும்.

அப்பொல்லியனோடு யுத்தத்தில் வெற்றி கொண்டபின், கிறிஸ்டியான் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த ரொட்டியைப் பிட்டுச் சாப்பிட்டு, திராட்சை இரசத்தை அருந்தினான். அதன் பிறகு புத்துணர்வு கொண்டவனாக, பட்டயத்தைக் கையிலேந்தியபடி தனது பயணத்தைத் தொடருகிறான். கிறிஸ்தியான், அப்பொல்லோலியனோடு யுத்தம் பண்ணினபின் சபையின் ராபோஜனம் எடுத்தபின் புத்துணர்ச்சி அடைகிறான்.

சபையில் எடுக்கும் திருவிருந்து அல்லது நற்கருணை (Holy communion) ஒரு முக்கியமான ஆவிக்குரிய ஆகாரம். நமது சரீரத்தை அப்பொல்லியன் தாக்கி எப்போதெல்லாம் நமக்கு வியாதிகளை உண்டுபண்ணுகிறானோ, நாம் உடனே ஆண்டவரின் மேஜைக்குப் (Lord's Table) போகவேண்டும். ரொட்டியைப் பிட்டுச் சாப்பிட்டு, திராட்சை இரசத்தை ஜெபத்துடன் பருகவேண்டும். நமக்கு வியாதிகள் வராமல் தடுப்பதற்கும் நற்கருணை உதவுகிறது. நாம் ஆண்டவரின் மேஜையை புறக்கணித்து, தெய்வீக சுகம் கிடைக்க சபையை விட்டுவிட்டு வேறு எங்கேயோ ஓடுகிறோம். நற்கருணையின் மகத்துவத்தை நாம் அறியாமலிருக்கிறோம். ஏதோ ஒரு சடங்காச்சாரமாக இதில் பங்கெடுக்கிறோம். "ஆண்டவரே, எனக்காக அடிக்கப்பட்டு பிட்கப்பட்ட உமது சரீரத்தின் மூலமாக என் பாவத்தை மன்னித்து உமது இரத்தத்தின் மூலம் என்னைச் சுத்திகரித்து என் வியாதியை குணமாக்கும்" என்று ஜெபிக்கவும். உங்களுக்கு அருமையானவர்கள் நோய்வாய்பட்டிருந்தால் அவர்களை நினைத்தும் அவரது மேஜையின் முன்பு முழங்கால் படியிட்டு மன்றாடி ஜெபிக்கலாம். உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நடக்கவும் இந்த இடத்தில் ஜெபிக்கலாம்.

ஒவ்வொரு பரதேசிக்கும், ஒரு உண்மையுள்ளவனின் கூட்டுறவு (Fellowship) அவசியம். இது சபையின் போதகராக இருக்கலாம். ஆனால் இந்த உண்மையுள்ளவன் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களோடு நட்பு வைத்திருக்க வேண்டும். முக முக கூட்டுறவும் (face to facefellowship) நட்பும் இரண்டுபேர்களின் மத்தியில் நிலவவேண்டும். இவர் உங்களுக்கு ஒரு உண்மையான தோழனாகவும் நண்பனாகவும் இருக்க வேண்டும்.

Next....உண்மையானவனின் அனுபவங்கள்