எழுப்புதல்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

’எழுப்புதல்’

’எழுப்புதல்’ இன்று கிறிஸ்தவ உலகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை. முன் எப்போதயும் விட சமீப காலங்களில் இன்னும் அதிகமாகப் எழுப்புதலைப் பற்றிப் பேசப்படுவதைக் கேட்கிறோம். எழுப்புதல் கூட்டங்கள், எழுப்புதல் செய்திகள், எழுப்புதல் பாடல்கள், எழுப்புதல் நடனம் என்று பயன்படுத்துகிற எல்லா சொற்களுக்கும் முன்பாக எழுப்புதல் என்ற வார்த்தையை இனிஷியல் போல பயன்படுத்துவது இப்போது பேஷனாகி விட்டது.

எழுப்புதல் அல்லது உயிர்மீட்சி என்றால் என்ன?

எழுப்புதல் என்பது முழுக்க முழுக்க பரிசுத்த ஆவியானவரால் நிகழும் ஒரு காரியமாகும். பரிசுத்த ஆவியானவரையும் எழுப்புதலையும் பிரிக்க முடியாது. ஒரு எழுப்புதல் நிகழும் விதத்தை அறிய வேண்டுமென்றால் பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் 37ஆம் அதிகாரத்தைப் புரட்டிப் பாருங்கள். உலர்ந்த எலும்புகள் உயிரடைவதே எழுப்புதல். அப்படி உயிரடைந்த எலும்புகள் என்ன செய்வார்கள் என்பது அந்த அத்தியாயத்தில் இல்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துப் பாருங்கள்.

ஒரு குறிப்பிட்ட சபை மீதோ, அல்லது பல சபைகள் மீதோ பரிசுத்த ஆவியானவர் பலமாக இறங்கி அவர்களை உலுக்கி, உயிரூட்டி தங்கள் ஆதிமகிமையில் மீண்டும் கொண்டு வந்து அவர்களை நிறுத்துவதுதான் எழுப்புதல். நாம் முதலாவது அறிந்துகொள்ள வேண்டியது எழுப்புதல் பிரதானமாக பாவிகளுக்கல்ல, இரட்சிக்கப்பட்டோருக்கே என்ற உண்மையைத்தான். ஆனால் எழுப்புதல் அத்தோடு முற்றுப் பெறுவதில்லை. அவ்வாறு தேவனால் எழுப்பப்பட்ட சபைகள் வெளி உலகத்தைப் பாதிக்கத் தொடங்கும். உயிர்மீட்சி பெற்ற சபை காந்தம் போல உலக மக்களை தன் வசம் இழுக்க ஆரம்பிக்கும். பரலோகத்திலிருந்து சபைப் பீடத்தில் விழுந்த அக்கினி ஊரின் தெருக்களில் பற்றி எரியத் துவங்கும். பட்டி தொட்டியெல்லாம் பற்றிப்பரவும். பாவத்தோடு ஒட்டி உறவாடி வந்த மக்களோடு மகாப்பரிசுத்த தேவன் நேரடியாக இடைப்படுவார். எங்கும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வுகள் நிகழும். ஒரு ஊரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சபையில் தேவன் எழுப்புதலை ஊற்றியிருப்பாரானால் அந்த ஊர் முன்னிருந்தது போல இருக்காது. இருக்கவும் முடியாது.

பிரியமானவர்களே! எழுப்புதலோடு சம்பந்தப்பட்ட அதிமுக்கியமான காரியங்களை இனிமேல்தான் சொல்லப்போகிறேன் கவனமாகக் கேளுங்கள். எழுப்புதல் காலங்களில் இரண்டு விதமான சத்தங்களை எங்கும் அதிகமாகக் கேட்கலாம். ஒன்று மகிழ்ச்சியான ஆராதனையின் குரல் மற்றொன்று மனம் குத்தப்பட்டு மனம் திரும்புகிறவர்களின் அலறுதல். இந்த இரண்டு சத்தங்களும் என்று அடங்குகிறதோ அன்று எழுப்புதல் அக்கினியும் அவிந்துவிட்டது என்று அர்த்தம். குருடர் பார்ப்பதும் செவிடர் கேட்பதும் சப்பாணிகள் நடப்பதும் ஒருபக்கம் இருந்தாலும் அதைவிட மகா முக்கியமாக உலக மக்கள் ஏன் பல கிறிஸ்தவர்களும் சபைகளும் கூட தாங்கள் இடைவிடாமல் ஆராதிக்கும் மேமன் அல்லது பணம் என்கிற கடவுளிடம் இருந்து விடுதலை பெறுவார்கள். இதை அப்போஸ்தலர் 4ஆம் அதிகாரம் 32 ஆம் வசனத்தில் பார்க்கலாம். அது மாத்திரமல்ல புகை, மது விபச்சாரம் போன்ற அடிமைத்தன நுகங்கள் உடைக்கப்படும். சபைகளுக்குள்ளே சகோதர சிநேகம் பொங்கி வழியும். உடைந்த குடும்பங்கள் ஒன்றிணையும். ஏழைகள் மீதும் திக்கற்றவர்கள் மீதும் சபைக்கு கரிசனை பெருகும். தரித்திரருக்கு உதவி செய்வது சபையின் முக்கியக் கடமைகளுள் ஒன்றாக எண்ணப்படும். கலாத்தியர் 2:10 இல் இதைக் காணலாம். சகோதரி ஹெய்தி பேகர் தனது செய்தி ஒன்றில் கூறிய வாசகத்தை என்னால் உயிருள்ளவரை மறக்க முடியாது. அவர்கள் சொன்னது “ எழுப்புதலுக்கு ஒரு முகம் இருக்கிறது அது எப்பொழுதும் தரித்திரரையே நோக்கிக் கொண்டிருக்கிறது” என்பதுதான். மேலும் உயிர்மீட்சி அடைந்த ஊரில் மதுபானக்கடைகள் வருமானமின்றி நிரந்தரமாக மூடப்படும். இரவும் பகலும் ஆராதிக்கக் கூட்டம் அலைமோதுவதால் தேவாலயங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். மொத்ததில் எழுப்புதல் என்பது “உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக” என்ற ஜெபத்தின் நிறைவேறுதலாக இருக்கும்.

எழுப்புதலையும் மனந்திரும்புதலையும் எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படியே எழுப்புதலையும் உபத்திரவத்தையும் பிரிக்க முடியாது. ஆம், எழுப்புதல் காலங்களில் உயிர்மீட்சி பெற்ற சபைத்தலைவர்களும் விசுவாசிகளும் அந்த உயிர்மீட்சியைப் பெற்றுக்கொள்ளாத அல்லது பெற்றுக்கொள்ள விரும்பாத சபைத்தலைவர்களாலும் விசுவாசிகளாலும் சொல்லொண்ணா உபத்திரவங்களுக்கு ஆளாவார்கள் என்பது வேதமும் வரலாறும் நமக்குத் தெரிவிக்கும் உண்மை. மட்டுமல்லாது உலகத்தார் தங்கள் வாழ்வாதாரத்திலும் வருமானத்திலும் மண் விழுவதால் எழுப்புதலுக்குக் காரணமான கூட்டத்தார் மீது கொலை வெறியோடு பாய்வார்கள் என்பதும் வேதமும் வரலாறும் கூறும் உண்மை. முதலாம் நூற்றாண்டு எழுப்புதலில் ஆசியாவில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்துக்குக் காரணம் அங்கு ஏற்பட்ட உயிர்மீட்சியானது அங்கு இருந்த “டயானா” எனப்பட்ட அவர்களுடைய தெய்வத்தின் கோவிலையும் அந்தக் கோவிலைச் சுற்றி அமோகமாக நடந்து கொண்டிருந்த சிலை வியாபாரத்தையும் பாதித்ததுதான். அந்த சம்பவம் அப்போஸ்தலர் 19:23-41 இல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

எழுப்புதலடைந்த சபைக்கு மற்ற கிறிஸ்தவர்களாலேயும் பிற மதத்தாராலும் தாக்கப்படும் அபாயம் எப்பொழுதும் உள்ளது. அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையால் அரசாங்கமும் இதில் தலையிட்டு சபையை நசுக்க முயலவும் வாய்ப்புகள் பல உள்ளன. உயிர்மீட்சி பெற்ற சபை செத்த சபைகளால் “துர் உபதேசக்காரர்கள்” எனவும் உலகத்தாரால் “மனநோயாளிகள்” என்றும் அரசாங்கத்தால் “தேசவிரோத சக்திகள்” என்றும் அழைக்கப்படுவது வரலாறு.

சபை வரலாற்றில் எழுப்புதல்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டு சபையானது தனது இரண்டாயிர வருட நீண்ட பயணத்தில் பல்வேறு எழுப்புதல்களைக் கண்டிருக்கிறது. நான் அதிகமான வரலாற்றுச் சான்றுகளுக்குள்ளும் புள்ளி விவரங்களுக்குள்ளும் போக விரும்பவில்லை. அப்படிச் செய்தால் இது ஒரு வேதாகமக் கல்லூரியின் பாடம் மாதிரி ஆகிவிடும். இந்தத் தொடரின் நோக்கம் உங்களை ஒரு பரீட்சைக்கு ஆயத்தப் படுத்துவதல்ல. ஒரு எழுப்புதலுக்கு ஆயத்தப் படுத்துவதுதான். இருந்தாலும் சில வரலாற்றுக் குறிப்புகளை மேலோட்டமாகப் பார்த்துச் செல்வது நமக்கு நல்லது என நினைக்கிறேன்.

முதலாம் நூற்றாண்டில் ஆசியாவையே குலுக்கிய ஆதித் திருச்சபையின் எழுப்புதல் எழுப்புதல்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி எனக் கொள்ளலாம். புதிய ஏற்பாட்டில் உள்ள அப்போஸ்தலர் நடபடிகள் முழுவதிலும் இதை நீங்கள் விளக்கமாக வாசிக்கலாம். கி.பி நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அரசாங்க மதமாக அறிவிக்கப்படும் வரைக்கும் நிலவிய உபத்திரவத்தினால் எந்த கிறிஸ்தவ இலக்கியத்தையும் பாதுகாக்க முடியாத சூழல் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதனாலெயே முதல் நான்கு நூற்றாண்டுகளில் இருந்த சபைகள் பற்றியும் சபைத்தலைவர்கள் பற்றியும் நமக்கு அதிகமான சான்றுகள் இல்லை. ஆனாலும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜஸ்டின் மார்ட்டைர் (கி.பி 100-165) என்பவர் எழுதிய “Dialogue with Trypho” என்ற நூலில் அந்த காலத்திலேயும் கூட ஆவியின் அபிஷெகமும் வரங்களும் கனிகளும் நிறைந்த விசுவாசிகள் அநேகர் இருந்ததாகச் சொல்கிறார்.

ஆனால் அந்த அனல் சபைக்குள்ளே பிற்காலங்களிலே ரோம ஆதிக்கம் வந்த பின்பு படிப்படியாக மங்கி பின்னர் ஒரேயடியாக இருண்டு விட்டது. இந்த சூழலிலும் கூட தேவன் புனித அசிசியின் பிரான்சிஸ் போன்ற வல்லமையான தேவ மனிதர்களை எழுப்பி சாதாரண மக்களையும் ஏன் இஸ்லாமிய சுல்தான்களையும் கூட சந்தித்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி 15 ஆம் நூற்றாண்டுகளில் திருச்சபையில் காணப்பட்ட ஒழுக்கக்கேடுகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிரலாமோ சவோனொரோலோ இவர் தனது பிரசங்களில் “ ஆதித்திருச்சபையில் பாத்திரங்கள் மரத்தாலானவையாக இருந்தன ஆனால் சபை ஊழியர்களோ சொக்கத் தங்கங்களாக ஜொலித்தார்கள். ஆனால் இக்காலத் திருச்சபைகளிலோ பாத்திரங்கள் பொன்னாக மின்னுகின்றன ஊழியர்களோ மரக்கட்டை போல உணர்வற்று இருக்கிறார்கள்”என்று கூறுவாராம். இப்படிப்பட்ட பிரசங்கங்களை அந்த கால கட்டத்தில் செய்வது அரிதானது. ஆபத்தானதும் கூட. இறுதியில் சவோனொரோலோ உயிரோடு எரிக்கப்பட்டு இரத்த சாட்சியாக மரித்தார் என்கிறது சரித்திரம்.

இப்படி இருண்டு கிடந்த சபைக்குள் தீப்பந்தமாக எழும்பி இருளை விரட்டியவர்தான் மார்ட்டின் லூதர் (கி.பி 1483-1546) . பதினாறாம் நூற்றாண்டில் இவரைக்கொண்டு தேவன் ஒரு யுகப்புரட்சியே நடத்தினார் என்றால் மிகையாகாது. இவரும் இவருக்குப்பின் வந்த ஸ்விங்லி மற்றும் ஜான் கால்வின் போன்றோர்தான் இன்று இருக்கும் புராட்டஸ்டாண்டு சபைகள் உருவாகக் காரணமானவர்கள். எனவே திருச்சபை வரலாற்றில் கி.பி பதினாறாம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையான நூற்றாண்டாகும். அடுத்ததாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 17ஆம் நூற்றாண்டிலும் பலமடைந்த “ப்யூரிட்டன்” இயக்கத்தை பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த ப்யூரிட்டன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனி மனிதனுடைய பரிசுத்தத்தை அதிகமாக வலியுறுத்தினார்கள். இவர்கள் அடிக்கடி நரகத்தைப் பற்றிப் பற்றி பிரசங்கித்து ஜனங்களை எச்சரிப்பார்கள். நாம் அனைவருக்கும் தெரிந்த “மோட்சப் பிரயாணம்” நூலை எழுதிய ஜான் பன்யன் இந்த ப்யூரிட்டன் இயக்கத்தைச் சார்ந்தவர்தான்.

1727 ஆம் ஆண்டு ஜெர்மனியில் வாழ்ந்த மொரேவியன் மக்களிடையே வெடித்துக் கிளம்பிய எழுப்புதல் வரலாற்றில் பதிவான ஒரு குறிப்பிடத்தக்க எழுப்புதலாகும். கிறிஸ்துவின் சபையானது இரண்டாகப் பிரிந்து ஒருவரையொருவர் குற்றம்சாட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜின்செண்டார்ஃப் என்ற தேவமனிதன் எழும்பி அவர்களிடையே சமாதானம் செய்து வைத்து அவர்களை ஒன்றிணைத்து ஜெபித்த வேளையிலே ஆவியானவர் அளவில்லாமல் அவர்கள் மத்தியில் ஊற்றப்பட்டார். அன்று ஊற்றப்பட்ட எழுப்புதலானது அந்த நூற்றாண்டின் மாபெரும் மிஷனரிகளை உலகுக்கு உருவாக்கிக் கொடுத்தது. இப்போது நான் இந்த நிகழ்வுகளை மேலோட்டமாக எழுதிக் கொண்டு போனாலும் வருகிற தொடர்களில் ஒவ்வொரு முக்கியமான எழுப்புதல்களையும் பற்றி விலாவாரியாகப் பார்க்கப் போகிறோம். இந்த நூற்றாண்டில்தான் ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, ஜோனத்தான் எட்வர்ட்ஸ், ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் போன்ற மாபெரும் தேவமனிதர்கள் கர்த்தரால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டார்கள். இவர்கள் ஊழியம் செய்த இந்த கால கட்டத்தைத்தான் The first great awakeing என்று அழைப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கை மற்றும் இறைப்பணி குறித்து பின்வரும் தொடர்களில் விரிவாகப் பார்க்கலாம். இந்தத் தொடரின் நோக்கம் எது எழுப்புதல் யார் எழுப்புதல் வீரன் என்ற சரியான புரிதலை விசுவாசிகளுக்கு தருவதாகும். இதன் மூலம் இன்றைய கள்ளப் பிரசங்கிகள் தங்கள் மாம்சத்தில் உருவாக்கும் போலி எழுப்புதல் என்கிற அந்நிய அக்கினிக்குத் தப்பலாம்.

19 ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற எழுப்புதல்களை The second great awakeing என்பார்கள். இதில் தேவனால் பயன்படுத்தப் பட்ட பாத்திரங்களுள் முக்கியமானவர் சார்லஸ் ஃபின்னி என்பவராவார். இந்த 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் டி.எல்.மூடி, வில்லியம் பூத், ஹட்சன் டெய்லர், ஜார்ஜ் முல்லர் போன்ற மகத்தான தேவ மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரண்டு மாபெரும் எழுப்புதல்களை உலகம் சந்தித்தது. ஒன்று ஐரோப்பாவில்வேல்ஸ் தேசத்தில் உருவான எழுப்புதல். இந்த எழுப்புதலில் தேவன் பயன்படுத்திய பாத்திரம் இவான் ராபர்ட்ஸ்என்ற இளைஞன். மற்றொரு எழுப்புதல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அசுசா ஸ்ட்ரீட்எனப்படும் இடத்தில் உருவான எழுப்புதல். இந்த எழுப்புதலே பெந்தேகொஸ்தே சபைகள் உருவாகக் காரணமான எழுப்புதலாகும். இந்த எழுப்புதலில் தேவன் பயன்படுத்திய பாத்திரங்கள் சார்லஸ் பர்ஹாம் மற்றும் வில்லியம் சைமூர் ஆகிய இருவர். இந்த எழுப்புதல் மூலம்தான் சபை இழந்துபோன அந்நிய பாஷை அடையாளம் திரும்பக் கிடைத்தது என்று நம்பப்படுகிறது.

இனி வருகிற தொடர்களில் ஒவ்வொரு எழுப்புதல்கள் குறித்தும் அது உருவாகக் காரணமாயிருந்த சூழ்நிலைகள் யாவை?, எழுப்புதலில் தேவன் பயன்படுத்திய மனிதர்கள் யார்? அதற்காக அவர்கள் செலுத்திய விலைக்கிரயம் என்ன? என்பதை விலாவாரியாகப் பார்போம்.

இன்று எழுப்புதல் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களைப் பார்க்கும்போது;

”அக்கா! அக்கா! என்றாய், அக்கா வந்து கொடுக்க, சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!”

என்ற ஒரு பாரதிதாசனின் தமிழ் கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு நாட்டுக்கு அரசியல் சுதந்திரம் என்பதே அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அதற்காக எத்தனையோ தலைமுறைகளாக ஜீவமரணப் போராட்டம் நடத்தி இரத்தம் சிந்தி பல உயிர்களைத் தியாகம் செய்து அடைய வேண்டியதாய் இருக்கிறது.

”தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் வளர்த்தோம் கருகத்திருவுளமோ”

என்று நாம் பெற்ற அரசியல் சுதந்திரத்துக்குக்காகக் கொடுத்த விலைக்கிரயத்தை நினைவுகூர்ந்து பாரதியார் பாடுகிறார். நீங்கள் பள்ளியில் படித்த இந்தக் கவிதைகளை நான் ஏன் இங்கு நினைவுபடுத்துகிறேன் என்றால் ஒரு நாட்டின் அரசியல் விடுதலைக்கே இவ்வளவு விலைக்கிரயம் செலுத்த வேண்டுமானால். உன்னதமான தேவன் அருளும் ஆவிக்குரிய விடுதலையான எழுப்புதல் என்பது எவ்வளவு மகிமையானது, விலையேறப்பெற்றது என்பதை நாம் உணரவேண்டும். இன்று எழுப்புதல் கடைச்சரக்கு போல சிலரால் கூறுகட்டி விற்கப் படுகிறது.

இந்த மகிமையான எழுப்புதலுக்கென்று விலை ஒன்று உண்டு அந்த விலையை எழுப்புதலை வாஞ்சிக்கும் ஒவ்வொரு ஊழியரும், விசுவாசியும் சபையும் செலுத்த வேண்டும் என்பதை மறக்கக் கூடாது. அந்த விலை மெய்யான மனந்திரும்புதல் மற்றும் ஒன்றுபட்ட ஜெபமென்பதாகும். அதற்கும் மேலாக எழுப்புதல் என்பது முழுக்க முழுக்க தேவ சித்தம் சம்பந்தப்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும். அதை ஊற்ற வேண்டிய நேரத்தில் ஊற்ற வேண்டிய இடத்தில் ஊற்றுவது அவரது உரிமை. அதை இறைஞ்சி மன்றாடுவது மாத்திரமே நம் கடமையாகும். நாம் தேவனை நமது கிறிஸ்தவக் கலாச்சாரத்துக்குள் இழுத்து உட்கார வைக்க முயல்கிறோம். தேவனோ நம்மை தமது வேதத்துக்குள் இழுத்து உட்கார வைக்க விரும்புகிறார். இந்த இருவருக்குமான போராட்டமே நாம் அடையவேண்டிய உன்னதமான கடைசிகால எழுப்புதலைத் தாமதப்படுத்துகிறது.

இந்தத் தொடரில் கடந்த காலத்தில் அருளப்பட்ட மாபெரும் எழுப்புதல்கள் தணிந்துபோன காரணங்களையும் எழுப்புதல் வீரர்கள் சிலரது தோல்விகளையும் கூட ஆராயப் போகிறோம். தேவமனிதர்களது வெற்றிகளிலிருந்து மாத்திரமல்ல தோல்விகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது அதனால்தான் வேதத்தில் தேவமனிதர்களது வெற்றியும் தோல்வியும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நமது நன்மைக்காக எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தொடரில் “போலி எழுப்புதல்கள்” குறித்து ஆராய்வோம்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

(இது ”எழுப்புதல் தொடரின்” இரண்டாம் அத்தியாயம். நீங்கள் கடந்த அத்தியாயத்தைப் படிக்காவிடில் அதைப் படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)

முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்

கடந்த அத்தியாயத்தில் எழுப்புதல் என்றால் என்ன? என்பது பற்றியும் சபை வரலாற்றில் நடந்த சில குறிப்பிட்ட எழுப்புதல்கள் பற்றியும் ஆராய்ந்தோம். இந்த அத்தியாயத்தில் போலி எழுப்புதல்கள் பற்றி ஆராய்வோம்.

கடைசி நாட்களுக்கும் இயேசுவின் வருகைக்கும் அடையாளம் என்ன? என்று சீடர்கள் இயேசுவை நோக்கிக் கேட்ட போது பஞ்சம், கொள்ளைநோய்கள், போர்கள், இவை எல்லாவற்றையும் குறிப்பிடும் முன்பு அவர் பிரதானமாகக் குறிப்பிட்ட அடையாளம் “வஞ்சகம்” என்பதாகும் (மத்தேயு 24:5,5). ஆம், அந்த இறைவாக்கின் நிறைவேறுதலையே இன்று நாம் எங்கும் காண்கிறோம். பிசாசானவன் ஆண்டவர் உண்டாக்கின ஒவ்வொன்றுக்கும் மாற்றாக ஒரு போலியை உண்டாக்கி அதற்கு ஒரு மினுமினுப்பான வெளிப்பூச்சைப் பூசி விசுவாசிகளுக்குக் கொடுத்து அவர்களை ஏமாற்றும் பணியை திறம்பட செய்து வருகிறான்.

இன்று சுவிசேஷ மேடைகளில் நம் பாவத்தை மன்னித்து இந்த பொல்லாத பிரபஞ்சத்தினின்று நம்மை விடுதலையாக்குபவராக, பாவத்தின் மேல் ஜெயங்கொள்ளச் செய்கிறவராக இயேசு காட்டப்படுவதில்லை, மாறாக வியாதியை சுகமாக்குபவராகவும், வேலை தருபவராகவும், வரன் பார்த்துக் கொடுக்கும் எலியேசராகவும், கார், பங்களா கொடுக்கும் கொடைவள்ளலுமாகவே காட்டப் படுகிறார். பாவம்! ஆவியானவருடைய நிலையோ இன்னும் பரிதாபம், நமது உள்ளான மனிதனை கிறிஸ்துவுக்காக பலப்படுத்தி நம்மை சாட்சிகளாக மிளிரச் செய்யும் ஆவியானவர் வெறும் கிச்சுக் கிச்சு மூட்ட மாத்திரமே என்று விசுவாசிகள் நம்ப வைக்கப் பட்டுவிட்டனர். விசுவாசிகளை ஊதியும் கைவைத்தும் மல்லாக்கச் சாய்க்கும் ஊழியங்கள் கன ஜோராக நடைபெற்று வருகின்றன. ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தி உலகத்தோடும், மாம்சத்தோடும், பிசாசோடும் மல்லுக்கு நிற்க வைப்பவர், மல்லாக்கச் சாய்ப்பவர் அல்ல.

நானும்கூட இப்படிப்பட்ட காரியங்களை நம்பி வந்தவன் தான். ஆனால் கர்த்தர் கிருபையால் என் கண்கள் திறக்கப் பட்டது. இயேசுவும் அப்போஸ்தலரும் செய்யாத அல்லது போதிக்காத எதையும் நம்புவதில்லை என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டேன். வேதம் கையில் கிடைக்காத நாட்களில் ஜனங்கள் வஞ்சிக்கப் பட்டார்கள் சரி, ஆனால் சொந்த மொழி வேதாகமத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏமாறுவோமானால் அது யார் குற்றம்?

இன்று சாத்தான் உருவாக்கிய வேறொரு இயேசுவும், வேறொரு ஆவியானவரும் (II கொரிந்தியர் 11:4) சபையை சீரழிப்பது போலவெ வேறொரு எழுப்புதலும் சபைகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த எழுப்புதல் வேறொரு ஆவியானவரால் தரப்படுவது. மாம்சத்தில் பிறப்பது மாம்சமாயிருக்கும் (யோவான் 3:6) என்ற வசனம் இந்த போலி எழுப்புதலுக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஏனெனில் இது முழுக்க முழுக்க உணர்ச்சிப் பரவசம் சம்பந்தப்பட்டது. ஆவியானவரின் ஒத்தாசையையும் சுவிசேஷத்தின் வல்லமையையும் சார்ந்து நிற்பது அல்ல உணர்ச்சியைத் தூண்டும் இசையையும் நயவசனிப்பான வார்த்தைகளையும் சார்ந்து நிற்பது. ஜனங்கள் அழுவதும் ஆல்டர் காலுக்கு (Altar call) முன்வருவதும் போன்ற இதன் கனிகள் நிஜ எழுப்புதலின் கனிகள் போலவே தோற்றமளிக்கக் கூடியதாகையால் யாரும் எளிதாக ஏமாந்து விடக்கூடும்.

ஆவியானவர் தரும் உண்மை எழுப்புதலின் கனிகள் பலர் மாபெரும் மிஷனரிகளாகவும், சபைத்தலைவர்களாகவும் ஏன் இரத்த சாட்சிகளாகவும் கூட பரிமளித்திருக்கிறார்கள். சபை வரலாற்றில் நிகழ்ந்த ஒவ்வொரு எழுப்புதலில் ஏற்பட்ட விளைவுகளையும் இனிவரும் தொடர்களின் ஒவ்வொன்றாக நான் சுட்டிக் காட்டிக் கொண்டு வரும்போது அதை விளங்கிக் கொள்ளுவீர்கள். ஆனால் இந்த போலி எழுப்புதலின் கனிகளிடம் ஆழமான அர்ப்பணிப்பை எதிர்பார்க்க முடியாது. இவர்களில் பலர் ஒன்று மதவாதிகளாக, கிறிஸ்தவப் பரிசேயராக வளர்வார்கள் அல்லது தாங்கள் விட்டு வந்த உலக இன்பங்களுக்கே திரும்பி விடுவார்கள். பின்னர் தாழ்மையைக் கற்றுக்கொள்ளும் சிலர் மாத்திரமே தப்பிப் பிழைத்து தேவ கிருபையால் கரையேறுகிறார்கள்.

போலி எழுப்புதல்கள் உருவாகக் காரணம் என்ன?

போலி எழுப்புதல்கள் உருவாகக் காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்தால் அதற்கு சாத்தானை மாத்திரம் குறை கூற முடியாது. ஊழியர்களும் விசுவாசிகளுமே முக்கியக் காரணம். அதிலும் மிக முக்கிய காரணம் “அறிவில்லாமையால் சங்காரமாகும் விசுவாசிகளே (ஓசியா 4:6)”

சகோ.சகரியாபூணன் அவர்கள் தனது ”கொடிய வஞ்சகமும் போலி எழுப்புதலும்” என்ற கட்டுரையில் போலி எழுப்புதல்களை உருவாக்கும் காரணிகளாக கீழ்கண்ட 10 சாத்தியக் கூறுகளைத் தருகிறார்.

    1. இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், புதிய ஏற்பாடு என்ன போதிக்கிறது? என்பதைக்கூட அறியாதிருக்கிறார்கள்! அது ஏனென்றால், புதிய ஏற்பாட்டை இவர்கள் கவனமாய்ப் படிக்கவில்லை. ஆகவேதான் புதிய ஏற்பாடு போதிப்பதைப் பின்பற்றுவதற்குப் பதிலாக தங்கள் தலைவர்களின் போதகங்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்.

    2. தங்களின் குணாதிசயத்தை விட (இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவியம்). இவர்களுக்கு ‘அற்புதங்கள்’ (இயற்கைக்கு அப்பாற்பட்ட வரங்கள்) அதிக முக்கியமாய் மாறிவிட்டது!

    3. ஆவிக்குரிய சம்பத்தைக் காட்டிலும் பொருளாதார சம்பத்துகளே இவர்களுக்கு அதிக முக்கியமாய் மாறிவிட்டது!

    4. பரிசுத்த ஆவியின் உண்மையான அசைவாடுதலுக்கும். உணர்ச்சி வசப்படுதலுக்கும் ஆத்துமப் பரவசம் அல்லது மனோதத்துவ செயலாற்றத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை! இதற்கும் இவர்களது “புதிய ஏற்பாட்டு சத்தியத்தின் அறியாமையே” காரணம் எனலாம்.

    5. மனதை திடப்படுத்தி, அதன் மூலமாய் “மனோதத்துவ அடிப்படையில்” நிகழச் செய்யும் சுகத்திற்கும், இயேசுவின் நாமத்தில் நிகழும் அற்புத சுகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் இவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.

    6. இருதயத்தின் ஆழத்தில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதைக் காட்டிலும் உணர்ச்சிப் பரவசமும் நூதனமான சரீர அசைவுகளுக்குரிய நிஷ்டாந்தங்களுமே அதிக முக்கியத்துவமுள்ளதாய் மாறிவிட்டது.

    7. தலைவர்களாய் இருப்பவர்களுக்கு, அந்தரங்கத்தில் தேவனோடு இசைந்து நடப்பதைக் காட்டிலும், ஜனங்களுக்குச் செய்திடும் ஊழியமே அதிக முக்கியமாய் மாறிவிட்டது.

    8. இந்தத் தலைவர்களுக்கு “தேவனுடைய அங்கீகாரத்தைக் காட்டிலும்” மனுஷர்களுடைய அங்கீகாரமே அதிக முக்கியமானதாக மாறிவிட்டது!

    9. இந்தத் தலைவர்களுக்கு, தங்களுடைய ஜனங்கள் கிறிஸ்துவுக்கு முழுமையாய் தங்களை அர்பணித்திருக்கிறார்களா? என்பதைக் காட்டிலும், கூட்டங்களில் பங்கு பெறும் ஜனத்தினுடைய எண்ணிக்கையே அதிக முக்கியமாக மாறி விட்டது!

    10. இந்தத் தலைவர்களுக்கு, ஒரு ஸ்தல சபையைக் கட்டி, அந்த சபையில் தங்களையும் ஒரு பணிவிடைக்காரராய் வைத்துக் கொள்ளுவதைக் காட்டிலும், தங்களின் சமஸ்தான தனி சாம்ராஜ்ஜியமும் தங்களது பொருளாதார உயர்வின் சிம்மாசனமுமே அதி முக்கியமாக இவர்களுக்கு மாறிவிட்டது!

(சகோதரர் எழுதிய இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளது. இந்தக் கட்டுரையை ஆன்லைனில் தமிழில் படிக்க இங்கேசுட்டவும்)

போலி எழுப்புதலின் இருண்ட பக்கம்

வெறும் உணர்ச்சிவசப்படுதலை மையமாகக் கொண்ட போலி எழுப்புதல்களை சாதாரண பிரச்சனையாக கருதிகொண்டு வாளாவிருந்து விட முடியாது. இதை எதிர்த்து போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். ஏனெனில் இது நம் தேவனுடைய துப்புரவான மணவாட்டி சபைக்குள் அந்தகார ஆதிக்கத்தைக் கொண்டு வருவதாக இருக்கிறது. கீழ்க்கண்ட வீடியோவைப் பாருங்கள் பரிசுத்த ஆவியின் எழுப்புதல் என்ற பெயரில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அப்படியே மற்ற மதங்களிலும் சாமியாடுதல், தீட்சை, குண்டலினி யோகம் இன்னும் பற்பல பெயர்களிலும் அதே விதமாக செய்யப் படுவதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள்.

இது எதைக் காட்டுகிறது? இத்தகைய சபைகளிடமும் ஊழியக்காரர்களிடமும் காணப்படுவது எத்தகைய ஆவி? இன்று பிற மதங்களில் செய்யப்படும் ஆழ்நிலை தியானம் Soaking Prayer என்ற பெயரில் சபைகளுக்குள் வந்துவிட்டது. இவைகளை நானும் ஒரு காலத்தில் நம்பினேன் என்றும் அவைகளை செய்தேன் என்றும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பெரேயா பட்டணத்தார் போல பிரசங்க மேடையில் சொல்லப் படுபவைகளையெல்லாம் வேதத்துக்குட்பட்டவையா? என்று ஆராய்ந்து பார்க்காமல், எல்லாவற்றையும் நம்பி ஏற்றுக்கொள்ளும் குருடனாயிருந்தேன். பிரியமானவர்களே! வஞ்சிக்கப்படாதிருங்கள். இத்தகைய கிரியைகளில் வேதம் போதிக்கும் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியானவரா வெளிப்படுகிறார்? (II தீமோ 1:7) என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

இயேசு மற்றும் ஆதி அப்போஸ்தலர்களின் வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும் போதனைகளுக்கும் இது எத்தனை முரண்பட்டதாகக் காணப்படுகிறது! இந்த மாதிரியான மாம்சீக அனுபவங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியையும் கிறிஸ்துவின் சுபாவத்தையும் நம்மில் உண்டாக்குமா? இது கிறிஸ்துவை அறியாதவர்களிடம் நம்மைக் குறித்து என்ன விதமான கருத்தை உண்டாக்கும்? கீழே மற்றுமொரு வீடியோவைத் தந்திருக்கிறேன். இப்படிப்பட்ட வீடியோக்களைத் தரக் காரணம் உங்களுக்கு நல்ல ஒரு Entertainment-ஐக் கொடுக்க அல்ல. இது பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு அல்ல அப்பட்டமான அந்நிய அக்கினி (லேவி 10:1) என்பதை வெளிப்படுத்தவே. இத்தகைய ஊழியக்காரர்களைப் பின்பற்றும் ஊழியர்கள் பலர் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.

இந்த மாதிரி அனுபவங்களுக்குள் உங்களை நடத்த முயற்சிக்கும் எந்த ஊழியக்காரரைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள். அவர் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும், அற்புத அடையாளம் நிகழ்த்துபவராக இருந்தாலும், தேர்ந்த வேத பண்டிதராக இருந்தாலும், உங்களுடன் இனிமையாகப் பழகுபவராக இருந்தாலும் அவரைப் பின்பற்றாதிருங்கள். நமக்குள் கிறிஸ்துவின் சிந்தையை விதைக்காத, நம்மை கிறிஸ்துவைப் போல மாற்ற வழிநடத்தாத யாருமே அவர் எவ்வளவு புகழ் பெற்ற ஊழியராக கிறிஸ்தவ உலகத்தால் மதிக்கப்பட்டாலும் நமக்கு அவர் தேவை இல்லை.

இன்று ஆவியில் சிரிப்பது, ஆவியில் அழுவது, பாம்பு போல நெளிவது, தவளை போல கத்துவது, குரங்கு போல குதிப்பது, வாந்தி எடுப்பது, ஆழ்நிலைத் தியானம் இன்னும் என்னென்னெவோ எழுப்புதல் என்ற பெயரில் அணிவகுத்து வருகின்றன. அவை மேற்கத்திய நாட்டு அறிவு ஜீவிகளிடமிருந்து நூதனமான விளக்கங்களோடு வருவதால் பல சபைகளில் இத்தகைய அனுபவங்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. ஆதித் திருச்சபைகளிலும் கள்ளப் போதகர்கள் இருந்தார்கள், ஆனால் பவுல் போன்ற விழிப்பான சபைத்தலைவர்கள் பலர் இருந்ததால் இந்த ஓநாய்கள் சபைகளுக்குள் எளிதாக வரமுடியவில்லை.

”ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.

நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

ஆனபடியால், நான் மூன்றுவருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்.” (அப் 20: 28-31)

விழித்திருக்க வேண்டிய நமது முற்பிதாக்கள் அன்று கோட்டை விட்டதால் இன்று நாம் தேவனுடைய வீட்டிலிருந்து அந்நிய அக்கினியைத் துரத்த ஒரு மாபெரும் ஆவிக்குரிய யுத்தத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த வாய்ப்பை நம்முடைய தலைமுறையும் தவறவிட்டால் எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியாது. நமது இளைய தலைமுறை இன்னும் மோசமான வஞ்சகத்தில் சிக்கிவிடாதபடி ஜாமக்காரனாய் கண்ணும் கருத்துமாய் உப்பரிகையின் மேல் காவல் நிற்பது நமது கடமை. மீண்டும் அடுத்த அத்தியாத்தில் சந்திப்போம்.

இது ”எழுப்புதல் தொடரின்” மூன்றாம் அத்தியாயம். நீங்கள் கடந்த இரண்டு அத்தியாயங்களையும் படிக்காவிடில் அவைகளைப் படித்து விட்டு பின்னர் இந்த அத்தியாயத்தைத் தொடரும்படி அன்புடன் வேண்டுகிறேன்)

இதற்கு முந்தய அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

இத்தொடரின் முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த அத்தியாயத்தை எழுதும் எனது நம்பிக்கை பற்றி ஒரு காரியத்தை ஆணித்தரமாக சொல்லிவிட்டு தொடரலாம் என்று வாஞ்சிக்கிறேன். வேதம் சொல்லுகிறபடி “கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் கர்த்தர் ஆவியை ஊற்றுவார் என்று விசுவாசிக்கிறேன். தரிசனங்களையும் சொப்பனங்களையும், அற்புத அடையாளங்களையும், தெய்வீக சுகமளித்தலையும், பிசாசுகளைத் துரத்துவதையும், அந்நிய பாஷைகளையும் முழுமையாக நம்புகிறேன். அவைகள் நமக்கு இன்றும் உண்டு எனவும் விசுவாசிக்கிறேன்.

ஆனால் இந்த அனுபவங்களுக்கு தரவேண்டிய இடத்துக்கும் அதிகமான இடத்தைத் தரும்போதும் இத்தகைய அனுபவங்களை தேவனுடைய வார்த்தைக்கும் மேலாக உயர்த்திப் பிடிக்கும் போதும்தான் ஓநாய்க்கூட்டம் ஆவிக்குரிய அனுபவங்கள் என்னும் ஆட்டுத்தோலைப் போர்த்திக் கொண்டு வேட்டையாட சபைக்குள் வருகிறது.தேவன் தனது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார் என்ற சங்கீதக்காரனின்(138:2) கூற்றை நாமும் ஆமோதிப்போமானால் கள்ள உபதேசிகளும், கள்ள உபதேசங்களும் சபை எல்லைக்குள்ளேயே நுழைய முடியாது. ஆனால் என்ன செய்ய? ஏவாளின் பிள்ளைகளாகிய நம்மை தேவனுடைய வார்த்தையை விட பார்வைக்கு புதுமையானதாகவும், அனுபவிக்கப் பரவசமானதுமாய்த் தோன்றுகிற எத்தனையோ காரியங்கள் சுண்டி இழுக்கிறபடியால் வஞ்சகம் நம் வாசற்படியிலேயே படுத்திருக்கிறது.

கடந்த அத்தியாயத்தின் தொடர்ச்சியாக போலி எழுப்புதல்களைக் குறித்து தொடர்ந்து ஆராய்வோம்.

போலி எழுப்புதல்களின் நோக்கங்கள்:

சாத்தானின் நோக்கம்:

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் (யோவான் 10:10) என ஆண்டவர் சொன்னது போல எழுப்புதல் போல தோற்றமளிக்கும் போலிகளை சாத்தான் உருவாக்கித் தரக்காரணம் சபைகளைச் சீரழிப்பதே!

புகழ் மயக்கம்:

எழுப்புதல் வீரர்களது புகழும் அவர்கள் அடைந்த வெற்றியும் மந்திரவாதி சீமோன் போல பலரை இச்சிக்க வைக்கிறது (அப்8: 5-24). ஆனால் அந்த எழுப்புதல் வீரர்கள் கடந்து சென்ற பாதையைப் பின்பற்றவோ மனதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சாத்தான் காட்டும் மாற்றுதான் போலிகள்.

’எழுப்புதல், எழுப்புதல்’ என்று ஒரு ஊழியக்காரர் மேடையில் முழங்குகிறார் என்பதற்காகவும், எழுப்புதலைக் குறித்து அதிகம் பாடுகிறார் என்பதற்காகவும் அவர் ஒரு ”எழுப்புதல்வீரர்” என்று நம்பிவிடக்கூடாது. மரமானது அதின் கனியினால் அறியப்படும் என்று ஆண்டவர் சொன்னதை மறவாதிருங்கள். அந்த ஊழியர் எழுப்புதல் என்று எதைச் சொல்லுகிறார், எழுப்புதல் வீரர்கள் என்று யாரை அடையாளம் காட்டுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

சில வேளைகளில் சார்லஸ் பின்னி, இவான் ராபர்ட்ஸ் மாதிரியான சரியான எழுப்புதல் வீரர்களை அடையாளம் காட்டிவிட்டு Soaking Prayer மாதிரி சில தவறான அனுபவங்களையும் கூட முன் வைக்கக்கூடும். ஒவ்வொரு எழுப்புதலிலும் தேவன் ஒரு புதுமையைச் செய்கிறார். அசுசா ஸ்ட்ரீட் எழுப்புதலில் அந்நியபாஷை புதுமைபோல இந்த கடைசி கால எழுப்புதலில் “இந்த” அனுபவம் புதுமை என்பார்கள். ஒவ்வொரு எழுப்புதலிலும் தேவன் ஒரு புதுமை செய்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புதுமை நம்மை மீண்டும் ஆதித்திருச்சபை அனுபவத்துக்கு அழைத்துச் செல்வதாய் இருக்கும். அசுசா ஸ்ட்ரீட் எழுப்புதலில் மீளக் கிடைத்த அந்நிய பாஷை அப்படிப் பட்டதுதான். ஆனால் இவர்கள் முன்வைக்கும் குண்டலினியை ஒத்த அனுபவங்களுக்கும் ஆதித்திருச்சபைக்கும் சம்பந்தமில்லை.

பொறுமையின்மை:

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. (எபிரெயர் 10:36)

எழுப்புதலுக்காகக் ஜெபிக்கும் அநேகர் வாக்குப்பண்ணப்பட்ட எழுப்புதல் வரும்வரை பொறுமையாய்க் காத்திருப்பதில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆபிரகாம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஈசாக்கு வரும்வரைக் காத்திருக்காமல் தேவனுக்கு உதவி செய்வதாக நினைத்து அவசரப்பட்டு “இஸ்மவேலைப்” பெற்றெடுத்தார். மாம்சத்துக்கு அடையாளமாக உள்ள இந்த இஸ்மவேல் “போலி எழுப்புதலுக்கு” நிழலாட்டமாய் இருக்கிறான். அநேக சபைகளும், விசுவாசிகளும் வாக்குப் பண்ணப்பட்ட எழுப்புதல் வரும் முன்னரே அவசரப்பட்டு மாம்சீகமாக முயற்சி செய்து சில மேற்கத்திய ஊழியக்காரர்கள் செய்யும் வித்தைகளைக் காப்பி அடித்து அந்நிய அக்கினியை உருவாக்கி தங்களைத் தாங்களே கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.

சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாயிருங்கள்:

இன்றைய சபைகளை ஊடுருவியுள்ள குண்டலினி அனுபவங்கள்:

1990 களுக்குப் பின்னால் உருவாகி இன்று அமெரிக்கா, கனடா முதலான மேற்கத்திய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் இந்த போலி எழுப்புதலானது. முழுக்க முழுக்க மனோத்துவ முறையில் தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிப் பரவசத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த எழுப்புதலை நடத்திச் செல்லும் தலைவர்கள் “இதை தேவனிடத்திலிருந்து வந்த புதிய அசைவாடுதல் (A new move from God)” என்று வர்ணிக்கிறார்கள். வேதத்தின் அடிப்படையைக் காட்டி இவர்களது செயலை ஏற்றுக் கொள்ளாதவர்களை ”ஆவியானவருடைய அசைவாடுதலுக்கு குறுக்கே நிற்கும் பழம்பரிசேயர்கள்” என்று சாடுகிறார்கள்.

இதை விடக் கொடுமை அந்தத் தலைவர்கள் ”இதுவே கடைசி கால எழுப்புதல்” என்றும், இந்த எழுப்புதலின் விளைவாக இவர்களது சபை ஆதித் திருச்சபையை விட சிறந்ததாக மிளிரும் என்றும் தாங்கள் ஆதி அப்போஸ்தலரைவிட அதிகமாக சாதிக்கப் போவதாகவும் ஏராளத்துக்கு அள்ளி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையில் சாதித்ததோ விசுவாசிகளைப் பாம்பு போல நெளிய வைத்ததும், பைத்தியம் போல சிரிக்க வைத்ததும், தவளைபோல கத்த வைத்ததும்தான். இவர்களுக்கு பரலோகத்திலிருந்து தூய ஆவி ஊற்றப்படுவதை விட தங்கத் துகள்கள் ஊற்றப்படுவதே முக்கியமானதாக மாறிவிட்டது. இன்று மேலை நாடுகளில் இருந்து ஒளிபரப்பாகும் சில ஆங்கில கிறிஸ்தவத் தொலைக்காட்சிகளை இங்கு தடை செய்தால் கூட நல்லது என்று தோன்றுமளவுக்கு இவர்கள் தங்கள் கேவலமான சரக்குகளையெல்லாம் அந்தத் தொலைக்காட்சிகள் வழியாக இந்தியாவுக்குள்ளும் இறக்கிவிடுகிறார்கள்.

உண்மை எழுப்புதலிலும் கூட பரவச அனுபவங்கள் காணப்படுவது உண்டுதான் ஆனால் உண்மை எழுப்புதலானது ஆழமான மனந்திரும்புதலை ஏற்படுத்தும். அன்பும் பரிசுத்தமும் அளவில்லாமல் பெருகும். உண்மை எழுப்புதல் அந்தந்த நகரங்களையும் சுற்றியுள்ள பகுதிகளையும் கூட பாதிக்கும். ஆனால் இவர்கள் சொல்லும் எழுப்புதலில் ஆழமான மனந்திரும்புதல் அனுபவங்கள் இல்லை. அன்பும் பரிசுத்தமும் பெருகவில்லை. இவர்கள் எழுப்புதல், எழுப்புதல் என்று பிரகடனப்படுத்தியும் பற்பல இடங்களில் இருந்து விசுவாசிகள்தான் அந்த சபைக்கு சென்று குவிகிறார்களே தவிர, அந்த நகரங்களிலோ ஒரு பாதிப்பும் இல்லை. இவர்கள் எழுப்புதலைப் பிரகடனப்படுத்தி பல ஆண்டுகள் ஆகியும் அந்தந்த நகரங்களில் பாவக்கட்டுகள் இன்னும் உடைக்கப்படவில்லை. இந்தத் தொடரில் கடந்த நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எழுப்புதல்களைப் பற்றி ஆராய்ந்துவிட்டு சில நிகழ்கால எழுப்புதல்கள் மற்றும் போலி எழுப்புதல்கள் பற்றி ஒவ்வொன்றாக கடைசியில் ஆராய்வோம்.

பொதுவாக மேற்கத்தியர்கள் இந்தியா, சீனா முதலிய கிழக்கத்திய நாடுகளின் மதங்களில் சொல்லப்படும் சில ஆழமான காரியங்களால் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். ஏனென்றால் இங்கு காணப்படும் நூதனமான விஷயங்களைக் கற்றுக் கொண்டு அதைத் தங்கள் நாட்டில் போய்ப் பரப்பி விளம்பரம் தேடிக்கொள்ளும் போங்கு அவர்களிடையே காணப்படுகிறது. எல்லாரும் ஒன்றைச் சொன்னால் தான் மட்டும் வித்தியாசமான ஒன்றைச் சொல்லி தனித்து நின்று அனைவர் கவனத்தையும் கவரவேண்டுமென்பது படித்த அறிவு ஜீவிகளுக்கே உள்ள மோசமான ஒரு வியாதி. நமக்கோ “MADE IN USA” என்று எழுதி குப்பையைக் கொடுத்தால் கூட அதை ஆயிரக்கணக்கான ரூபாய்கள் போட்டு வாங்கி வீட்டு ஷோகேசில் கொட்டி வைக்கும் அளவுக்கு ஆட்டிப் படைக்கும் அந்நியமோகம். இப்படியாக கிழக்கு மேற்கையும், மேற்கு கிழக்கையும் வஞ்சிக்கிறது. மேற்கத்தியர்கள் நமது நாட்டிலுள்ள குண்டலினி யோகம், சாமியாடுதல், போன்ற காரியங்களை உள்வாங்கி அதை கிறிஸ்தவமயமாக்கி நமக்கே திருப்பித் தருகிறார்கள்.

மனோதத்துவமும் போலி எழுப்புதலும்

தனியாக இருக்கும் ஒரு மனிதனிடம் ஒரு கருத்தைத் திணிப்பதைவிட கூட்டத்தோடு இருக்கும் மக்களிடம் திணிப்பது எளிது என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்லுகிறார்கள். இதுதான் Crowd Psychology எனப்படுகிறது. இந்த உண்மையைத்தான் மேடை மந்திரவாதிகளும், அரசியல்வாதிகளும், பேச்சாளர்களும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளுகிறார்கள். பற்பல கலகங்களும் புரட்சிகளும் வெடித்து சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டது இப்படித்தான்.

Suggestion எனப்படுவது ஹிப்னோட்டிசத்தில் ஒருவகை. உங்களுக்குள் ஒரு எண்ணத்தை விதைத்து அதை நம்ப வைப்பதுதான் ”சஜஷன்”. இந்த “சஜஷன் டெக்னிக்” தனியாக உள்ள ஒரு மனிதனிடம் ஏற்படுத்தும் விளைவை விட கூட்டமாக உள்ள மக்களிடையே ஏற்படுத்தும் விளைவு பல மடங்கு அதிகம். சஜஷன் மூலம் ஒருவருடைய மனதை எளிதாக வளைக்க முடியும். இதற்கு ஒரு ஆபத்தில்லாத எளிய உதாரணம், கீழ்க்கண்ட படத்திளுள்ள கரும் புள்ளியை உற்றுப் பாருங்கள், ஆழமாக, இன்னும் ஆழமாக கண் சிமிட்டாமல் பாருங்கள். சுற்றியுள்ள வண்ணங்கள் அனைத்தும் அப்படியே மறைந்து போய் கரும் புள்ளி மட்டுமே இருப்பதாகக் காண்பீர்கள்.

ஆச்சரியமாக உள்ளதா? உண்மையில் சுற்றியுள்ள வண்ணங்கள் மறைந்தனவா, இல்லை. பார்த்தீர்களா! உங்கள் மனம் எவ்வளவு எளிதாக வளைக்கப்படக் கூடியது!!

சார்லஸ் பாடோயின் என்ற உளவியலாளர் சொல்லுகிறார் Suggestion எனப்படும் கருத்துத் திணிப்பை சரியாகப் பயன்படுத்தினால் ஜனங்களை மிருகங்களைப் போல, முட்டாள்களைப் போல செயல்படவைத்து அப்படி செயல்பட்டதனிமித்தம் அவர்களைப் பெருமைகொள்ளவும் வைக்க முடியும் என்கிறார். இந்த Suggesion மூலம் கூட்டத்திலுள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் காரணமின்றி சிரிக்க வைக்கவும் முடியும் ஒருவர் மாற்றி ஒருவராக எல்லோரையும் கொட்டாவி விடவும் வைக்க முடியும் என்கிறார்.

Lawrence of Arabia என்று ஒரு ஆங்கிலப் படம். வறண்ட அரேபியப் பாலைவனத்தையும் அதன் மணற்புயலையும் வேனல் தகிப்பையும் அற்புதமாக எடுத்துக் காட்டிய ஒரு படம். அதன் இடைவேளைப் பொழுதில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குளிர்பானங்கள் வாங்கிப் பருகி தங்கள் தாகங்களைத் தீர்த்துக் கொண்டார்களாம். அதுவும் ஏசி தியேட்டரில், அதை விட்டுத்தள்ளுங்கள், நம்ஊரில் தியேட்டரில் “ஆத்தா” படம் பார்க்கும் சில பெண்கள் படத்தில் உடுக்கை அடிக்க ஆரம்பித்தவுடன் “ஆத்தா” வந்து ஆட ஆரம்பிப்பது இல்லையா? இப்படித்தான் பிரசங்கியார் கையில் தேவனுடைய வல்லமை இறங்கியிருப்பதாக நம்பும் ஒருவரும் அவர் கையை நீட்டும் முன்னே ’பொத்’ என்று விழுகிறார். பிரசங்கியார் மைக்கில் ஊதியவுடன் அல்லது கோட்டைக் கழற்றி வீசியவுடன் முன் வரிசையில் இருப்பவர் விழுவதைப்பார்த்து தானும் விழுகிறார். இது கருத்துத் திணிப்புதானே (Suggesion) அன்றி கர்த்தரின் அசைவாடுதல் அல்ல. இப்படித்தான் சுகமளிக்கும் கூட்டங்களில் அநேகர் சுகம் பெற்றதாக மேடையேறி சாட்சி சொல்லிவிட்டு வீட்டுக்குப் போவதற்குள் தங்களுக்கு இன்னும் அந்த வியாதியின் அடையாளங்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து குழம்பிப் போகிறார்கள் (பின்பு தனக்கு போதுமான விசுவாசம் இல்லையோ என்று தங்களைத் தாங்களே (ஏமா)ஆற்றுப்படுத்திக் கொள்வது தனிக்கதை).

முகத்திலும் தலையிலும் உள்ள சில நரம்புகளை தொடுவது அல்லது தட்டுவதன் மூலமாக ஒருவிதமான மின்சாரம் தாக்குவது போன்ற அனுபவத்தை உண்டாக்க முடியும். கீழ்கண்ட வீடியோ இதை தெளிவாக விளக்குகிறது. வேதத்தில் ஆதி அப்போஸ்தலர்கள் தலையில் கைவைத்தார்கள் ஆவியானவர் இறங்கினார் என்று வாசிக்கிறோம், ஆனால் இன்றைய ஊழியர்கள் சிலர் தலையில் தட்டியும், இரண்டு காதுகளிலும் கைவைத்து கீழே தள்ளுவதையும், கன்னத்துக்கு மேலே உள்ள எலும்புப் பகுதியில் கைவைத்து கீழே தள்ளுவதையும் கவனித்திருக்கிறீர்களா? இந்த வீடியோவைப் பாருங்கள்:

திரும்பத் திரும்பப் பாடப்படும் ஒரு பாடலின் வரியும், ஒவ்வொரு முறை அந்த வரி பாடப்படும் போதும் ”டெம்போ” அதிகரிக்கப் படும் டிரம் சப்தமும் உரக்கப் பேசப்படும் அந்நிய பாஷைகளும் ஆவியானவர் நம் மத்தியிலே பொங்கிப் பொங்கி வந்து விட்டார் என்ற “மாஸ் சஜஷனை (Mass suggestion)” உங்களுக்குள் தோற்றுவிக்கக் கூடும். பாடப்படும் பாடல்களை நான் குறைகூறவில்லை. அது அற்புதமான அருமையான பாடல்கள்தான். ஆனால் அது ஒரு தவறான நோக்கத்துகாக பயன்படுத்தப் படுவதைத்தான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தேவன் என்னை அளவில்லாமல் ஆவியால் நிறைத்து அந்த ஆவியானவர் தரும் உன்னத பெலத்தினால் கிறிஸ்துவுக்காக ஜெயங்கொண்டவனாக ஜீவிக்க வேண்டும் என்ற தணியாத வாஞ்சையும், மான்கள் நீரோடை வாஞ்சித்துக் கதறுவது போல என் தேவனுடைய சமூகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற தாகமும் நமக்குள் இருந்தால் ஆவியானவர் தண்ணீரூற்றாக அல்ல காட்டாற்று வெள்ளமாகவே நம் மத்தியில் பாய்ந்து வந்து நம்மை மூழ்கடித்து நீச்சல் ஆழம் நடத்திச் செல்லமாட்டாரா என்ன? அந்த அனுபவத்துக்குள் நம்மை நடத்திச் செல்ல தாழ்மையும் தாகமுமே அவசியம் தாரை தப்பட்டை அல்ல. இவர் உடுக்கை அடித்தால் இறங்கும் ஆவி அல்ல, உடைந்த உள்ளங்களுக்குள் இறங்கும் ஆவி.

மீண்டும் சொல்லுகிறேன் நான் ஆவியின் அபிஷேகத்தையும், அந்நிய பாஷையையும் நம்புகிறேன். அற்புத அடையாளங்களையும், தெய்வீக சுகத்தையும் நம்புகிறேன். அதை ஆண்டவர் இன்றும் செய்கிறார் என்றும் நம்புகிறேன். ஆனால் நிஜத்தையும் போலியையும் இனங்காணுதல் அவசியம். நாம் சரியாகப் பகுத்தறியத் தக்கவர்களாயிருந்தால் தேவன் மகிழுவார்.

நீ… அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்… அறிந்திருக்கிறேன். (வெளி 2:2) என்று எபேசு சபையாரை அவர் பாராட்டுவதை மறந்துவிடக்கூடாது.

சில நல்ல சபைகளும் ஊழியக்காரர்களும் கூட இத்தகைய அனுபவங்களை தழுவிக்கொள்ளுவதைப் பார்க்கும் போது துக்கமாக இருக்கிறது. பெரும்பாலான நல்ல ஊழியர்கள் கூட வேதத்தை சரிவர ஆராயாமல் பிரபல ஊழியக்காரர்கள் செய்கிறார்கள் அதனால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதற்காகவும், தாங்கள் விட்டுவந்த சபைகளின் வழக்கத்தின் படியேயும் இத்தகைய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். விசுவாசிகளும் மேய்ப்பன் எவ்வழியோ மந்தை அவ்வழி என கண்ணை மூடிக்கொண்டு அதை பின்பற்றுகிறார்கள்.

புறாக்களைப் போல கபடற்றவர்களாயும் இருங்கள்:

கடைசியாக என் எழுத்துக்கள் நான் எதிர்பார்ப்பதற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற பயத்தோடு கீழ்கண்டவற்றை உங்களுக்கு எழுதுகிறேன். இத்தகைய அனுபவங்களை விட்டு விலகி இருக்கும்படியும், இந்த அனுபவங்களை பிரதானமாக்கி கடைவிரிக்கும் ஊழியக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் இந்தக் கட்டுரை உங்களை வலியுறுத்துகிறதே தவிர இந்த அனுபவங்களைக் கொண்டுள்ள சபைகளையும் விசுவாசிகளையும் விரோதிக்கவோ, நியாயந்தீர்க்கவோ அல்ல. நம்மை விட ஆவிக்குரிய வாழ்க்கையில் சிறந்த விசுவாசிகள், சபைகளில் கூட இத்தகைய அனுபவங்களைக் காணலாம். இப்படிப்பட்ட நம் அன்புக்குரிய சகோதர சகோதரிகளுக்காக கண்ணீரோடு தேவ சந்நிதியில் முறையிட்டு அவர்கள் கண்கள் தெளியவும் மீண்டும் வார்த்தைக்குத் திரும்பவும், ஆதிநிலை ஏகவும் கருத்தோடு மன்றாடுவதைத்தவிர நாம் செய்ய வேண்டியது வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலிருந்தால் அவர்களோடு இந்தக் காரியங்கள் பற்றி எடுத்துக் கூறலாம். மற்றபடி நமது சக விசுவாசியை வெறுக்கவோ அருவருக்கவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை.

ஆவியானவர் பெயரில் இப்படிச் செய்யப்படும் கூத்துக்களையெல்லாம் நம்பாதவர்கள், பின்பற்றாதவர்கள் என்பதற்காக நானும் நீங்களும் சிறந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஒருவர் சரியான உபதேசத்தை அறிந்து வைத்திருக்கிறார் என்பதற்காக அவர் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார் என்று பொருள் அல்ல.“கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (Iசாமு 16:7)” என்ற நடுக்கமூட்டும் ஆணித்தரமான உண்மையை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.