இயேசுவின் மகிமையும், ஊழியமும் 

ஏசாயா 42ம் அதிகாரம் இயேசுவின் ஆள்தத்துவத்தையும், மகிமையையும், ஊழியத்தையும் குறிக்கிறது.


“இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.

அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.

அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்”.

சத்திய ஆவியானவரின் குரலை வீதியிலோ, உரக்க சத்தமிட்டு தன்னை பின்பற்றும்படி அறைகூவும் சத்தமோ அல்ல.

அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணைக்கவே மாட்டார். எந்த ஊழியம் அவரின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் செயல்படுகிறதோ அந்த ஊழியம் நெரிந்த நாணல் அல்லது மங்கி எரிகிற திரி! நமது கண்களுக்கு பிரகாசிக்கும் தீபமாக காணப்படும். இயேசு இந்த ஊழியத்தை தனது தோட்டத்தில் தான் வைத்து இருக்கிறார். அது தன் காலம் முடியும் வரை அங்கேதான் இருக்கும். பயிர்ச் செடியோடு களையும் வளரும். களைகள் அவர் தோட்டத்தில் வளரத்தான் செய்யும். அவருடைய நாமத்தில் களைகளும் வளரும்.

இயேசுவின் நியாயம் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை பதறுவதுமில்லை... அவருடைய வேதத்திற்க்கு கீழ்ப்படியும் மக்கள், அடைக்கப்பட்ட தீவுகளில் தங்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர் தன்னை வெளிப்படுத்தி, சத்தியத்திற்கு வழி நடத்துவார். ஆங்கிலத்தில் இவர்கள் remnant என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு கூட்டம்.

இயேசுவை பின்பற்றும் கூட்டம் சிறயது தான். ஏமாற்றப்படுவது ஒரு பெரிய கூட்டமே. தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் (Elect) வஞ்சிக்கப்படும் காலம்.

இன்று கூட்டம் கூட்டமாக தங்களின் குருடான கண்களையுடைய (வேதத்திற்க்கு புறம்பான காரியங்களுக்கு நேராக இழுத்துச் செல்லும் கிறிஸ்தவ தலைவர்களை, கண்மூடித்தனமா) பின்பற்றும் மக்கள் அறியாமை என்ற பள்ளத்தில் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தீபகற்பமான, தங்கள் உள்ளில் வாசிக்கும் பரிசுத்தாவியானவரை அவித்துப்போட்டு, அந்தி கிறிஸ்துவின் ஆளுகைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். வேதம் என்ன சொல்கிறது, இப்படி எழுதப்பட்டிருக்கிறதா என்று இயேசுவின் வார்த்தைகளை தேடிப் பார்ப்பது கிடையாது.

பிதாவாகிய தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைக்குறித்து கொடுக்கும் சாட்சியை கிழே  படிக்கலாம்.

 "வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது". பிதாவாகிய தேவன்  சகலதையும்  வார்தையாகிய கிறிஸ்து  மூலமாய் உண்டாக்கினார்; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை (யோவான் 1:3). எல்லா ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருர் கிறிஸ்து . கிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்டவர் இல்லை. 

"நீர் (கிறிஸ்து) குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்", புதிய உடன்படிக்கையின் காலத்தில் இந்த வாக்குத்தத்தம் நிறைவேறியது. 

"கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்".  பிதாவாகிய தேவன் கிறிஸ்துவை மாத்திரம் நமக்கு உடன்படிக்கையாகவும், ஒளியாகவும் வைத்திருக்கிறார். வேறு எந்த தீர்க்கதரிசிக்கோ, பழைய ஏற்பாட்டின் தலைவர்களுக்கோ இந்த அந்தஸ்த்தை கொடுக்கவில்லை. 

"நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்". ஒரே கர்த்தர். இதுவே அவரின் நாமம். அவரின்  துதியை எந்த விக்கிரகங்களுக்கும். விக்கிரங்களின் சாயலான மனிதனுக்கோ கொடுக்கமாட்டார். அவரின் நாமம், மகிமை எல்லாம் கிறிஸ்துவே.

"பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்". பரிசுத்தாவியானவர்

 நமக்கு நடக்கப்போகும் புதியவைகளை அறிவிக்கிறார். தீர்க்கத்தரசிகளை நாடி போகவேண்டாம்.

"சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்". துயரம் துன்பங்கள் நிறைந்த சமுத்திரமாகிய இந்த உலகவாழ்க்கையிலும், சமுத்திரத்தில் நமக்கு  தீவுகள் போல அடைக்கலமாக இருக்கும் வாழ்க்கையிலும் நாம் கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாட வேண்டும். துன்பத்திலும், அடைக்கலத்திலும் நாம் அவரை துதிக்க பழக வேண்டும். துன்பம் துக்கமாக மாறும்.

"வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக". வனாந்தரம் போன்ற வாழ்க்கையிலும்,  கேதாரியர் போன்ற அந்நிய ஜாதி வாழும் இடங்களையும் தேவன் செழிப்புள்ள தேசங்களாக மாற்றி அமைக்க வல்லவர். மக்களின் பார்வை படாமல்  கன்மலைகள் போன்ற இடங்களில் வாழ்க்கை நடத்தும் மக்களையும், பயத்தோடு, பர்வதங்களின் கொடுமுடியிலில் இருப்பவர்களை போல வாழும் மக்களும் தேவனை கெம்பீரித்து ஆர்பரிக்கும்போது அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும்.

"கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக". எப்போது கர்த்தருக்கு மகிமையை செலுத்துகிறமோ அப்போது வனாந்தரம் மாறி புல்லுள்ள இடங்கள் முளைத்துவிடும்.

"கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன்". தேவபிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பும் எந்த அரசனோ, ஜாதியோ அவர்களை இவ்விதம் தேவன் சங்கரிப்பார். அவர்களின் இருப்பிடங்களையும், உடமைகளையும், நிலங்களையும் அழித்துவிடுவார். 

"குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்". குருடரை போல வழி தெரியாமல் கள்ள மேய்ப்பர்களால் அலைக்கழிக்கப்பட்ட ஆடுகளை சரியான வெளிச்சத்தின் பாதையில் வழிநடத்துவார். அவர்களை கைவிடமாட்டார்.

"சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்". மனிதர்களை வணங்கி அவர்கள் தேவனின் சாயல்கள் என்று அவர்களை பின்பற்றும் தேவபிள்ளைகளை வெட்கப்படும்படி செய்வார்.

"செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?

நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்". கர்த்தருக்கு ஊழியம் செய்யும் அவரின் தாசனே குருடனாக இருக்கிறான். செவிடனாகவும் இருக்கிறான். அவன் அந்தகனாகவும்  இருக்கிறான். தேவன் செய்யும் அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறான். தேவன் அவனின் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.  நாம் இந்த ஊழியனை பின்பற்றினால் செவிடனாகவும் குருடனாகவும் இருப்போம். ஜாக்கிரதை

"கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்". தமது நீதியினிமித்தம் அந்த ஊழியனின் மேல் பிரியம் வைத்திருந்தார். தனது வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். தனது வேதத்தை வைத்துதான் அவனை தண்டிப்பார்.

"இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள், தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.

உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்?". இந்த ஊழியன் மூலம் வஞ்சிக்கப்பட்ட மக்கள் இவ்விதம் தண்டிக்கப்படுகிறார்கள்.

"யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.

இவர்கள்மேல் அவர் தமதுகோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதைமனதிலே வைக்காதேபோனார்கள்".  அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போன தேவமக்களைப்பற்றி இவ்விதம் தேவன் கூறுகிறார். 

#அந்திக்கிறிஸ்து #கள்ளப்போதனை #கொரோனா #ஜெபம் #இயேசுவின்மாதிரிஜெபம்