தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும்/இஸ்ரவேலில் அடையாளங்களும் அற்புதங்களும்.


Previous Isaiah7


தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும்

ஏசாயா 8 அதிகாரம் 13-15 வசனங்களை தியானிப்போமாக.

இப்போது நாம் சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணவேண்டும். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவேண்டும். கள்ள தீர்க்கத்தரசிகளைப் பின்பற்றி நமது பரிசுத்தத்தை இழந்து போக வேண்டாம்.

அவரே நமக்கு பயமும் அவரே நமது அச்சமுமாயிருப்பார். அவருக்கு பயந்து அவரின் பாதைகளில் நாம் நடப்போமாக!

"இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்து" மக்களைப்போலிருந்தால் ஆண்டவர் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். அவர்களில் அநேகர் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

நீங்கள் வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவர்களா? அல்லது மீட்கப்பட்ட சீயோனின் குமாரத்திகளாக இருக்கறீர்களா? நீங்கள் அசத்தியத்தை நம்பினால் ஆண்டவரே உங்களுக்கு தடுக்கலின் கல்லாக இருப்பார். இடறுதலின் கன்மலையாக இருப்பார். குடிகளான உங்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். ஆசீர்வதிக்கும் தேவன் என்று ஏமாந்து போகவேண்டாம். சாத்தானையும் குற்றப்படுத்தவேண்டாம். தேவனே உங்களுக்கு சத்துருவாக மாறி உங்களை அழிப்பார். நீஙகள் இடறி விழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவீர்கள்.

இஸ்ரவேலில் அடையாளங்களும் அற்புதங்களும்....

ஏசாயா 8 அதிகாரம் 16-18 வசனங்களை தியானிப்போமாக.

“16. சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.

17. நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

18. இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

ஆண்டவரின் சாட்சியான வார்த்தை தான் நமக்கு அருளிய வேதம். இதை பாதுகாத்து விசுவாசிகளுக்கு சரியான முறையில் விளக்கி போதிக்கவேண்டும். இந்த வேதத்தை புரட்டுவதை வேடிக்கைப் பார்த்து சும்மா இருக்கக்கூடாது. இந்த வேதம் நமக்கு முத்திரையிட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முத்திரையை நீக்கிவிட்டால் பொய்யாகிவிடும். பரிசுத்தாவியானவர் இதற்கு முத்திரை வைத்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் இந்த வேதத்தை விளக்கி கூறவேண்டும். இன்று அநேகர் தங்களின் சபைகளில் பரம்பரையாக போதித்த கொள்கைகளை போதித்து வருகின்றனர்.

யாக்கோபின் குடும்பத்துக்கு ஏன் ஆண்டவர் தம் முகத்தை மறைக்கவேண்டும். வணங்கா கழுத்துள்ளவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள். கள்ள போதகத்தால் வஞ்சிக்கப்பட்டு அழிவை நோக்கி போய் கொண்டிருப்பவர்கள்! ஆனால் தீர்க்கதரிசியோ ஆண்டவருக்காக தன்னை தாழ்த்தி ஆண்டவரிடமிருந்து வரும் வார்த்தைக்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.

தானும் அவனுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறார்களாம். பின் வாங்கிப்போன மொத்த இஸ்ரவேல் சமூகம் அல்ல.

சீயோன் குமாரத்திகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறிய கூட்டத்தார் இன்றும் கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருந்து வருகிறார்கள். நீங்கள் ஒரு பெரிய அழிந்துபோகும் கூட்டத்தில் இருக்கிறீர்களா அல்லது இரட்சிக்கப்படும் ஒரு சிறிய கூட்டத்தில் இருக்கிறீர்களா?

அஞ்சனம்பார்க்கிறவர்கள் அஞ்சனம் சொல்கிறவர்கள் முணுமுணென்று ஓதுகிற குறிகாரர்கள்

ஏசாயா 8ம் அதிகாரத்தில் 20-22 வசனங்களை தியானிக்கவும்...

இன்று கிறிஸ்தவர்களில் அநேகர் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வருங்காலத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். உண்மையாகவே தீர்க்கதரிசனம் வரத்தை பெற்றுக்கொண்ட ஊழியர்களும் ஒரு நிமிடத்தில் வஞ்சிக்கப்பட்டு அஞ்சனம்பார்க்கிறவர்களாயும் முணுமுணென்று ஓதுகிற குறிகாரர்களாகவும் மாறிவிடுகிறார்கள். இவர்களை இப்படி கள்ள தீர்க்கத்தரசிகளாக மாற்றுவது அஞ்சனம் பார்க்கின்ற தேவ மக்கள்தான். உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? இப்படி தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள் ஆண்டவரின் பார்வையில் ஆவிக்குரிய ஜீவனில் செத்தவர்கள். வரப்போகும் காரியங்களை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் அறிவிப்பவர்கள் ஆவிக்குரிய ஜீவனில் செத்தவர்கள். இன்று கொரோனா தொற்று வியாதியை குறித்து வரும் தீர்க்கதரிசனங்கள் அஞ்சனம் அறிவிப்பவர்களுக்கு ஒத்தாகும்.

நாம் தேவனிடத்தில் போய் அவருக்கு சித்தமானால் நடக்கயிருக்கும் சில முக்கியமான காரியங்களை வெளிப்படுத்த சொல்லி ஜெபிக்கலாம். ஆண்டவர் தமக்கு சித்தமானால் வெளிப்படுத்தி நாம் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு தெளிவாக காண்பிப்பார்.

நாம் எப்போதும் வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் மாத்திரம் கவனிக்கவேண்டும். ஆண்டவரின் சாட்சியான வார்த்தை தான் நமக்கு அருளிய வேதம். இதை பாதுகாத்து விசுவாசிகளுக்கு சரியான முறையில் விளக்கி போதிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. அப்படி சரியாக விளக்கி கூறாமல் புரட்டி பிரசங்கித்தால் பிரசங்கிப்பவர்களுக்கும் அவைகளை கேட்பவர்களுக்கும் ஆவிக்குரிய ஆசிர்வாதம் கிடைக்காது.

இப்படி செய்கின்றவர்கள் இடுக்கண் அடைந்து ஆவிக்குரிய பட்டினியால் வாடுவார்கள். அவர்கள் ஆவிக்குரிய பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்களை ஆளுகின்ற ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள். இவர்களுக்கு திருப்தி இல்லாமல் அங்கும் இங்கும் ஆசிர்வாதங்களுக்காக அலைமோதுவார்கள். தீர்க்கத்தரசிகளை தேடி அலைவார்கள். தங்களுடைய இடுக்கண்களுக்கு தங்களை சரியான நீதியின் பாதையில் வழிநடத்தாத ஊழியர்களை அடையாளம் கண்டுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆளுனர்களையும் தேவனையும் குறை சொல்வார்கள்.

அவர்கள் அண்ணாந்து தேவனை நோக்கிப் பார்ப்பார்கள், ஆசிர்வாதத்தை கொடுக்காத பூமியிலுள்ள தங்களது தொழிலையும் வியாபாரத்தையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, ஆவிக்குரிய அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.

Next....Isaiah9