மகா வல்லமையுள்ள உலக இரட்சகர் 


ஏசாயா 45ம் அதிகாரத்தில் 1-8 வசனங்களில் எழுதப்பட்ட தீர்க்கதரிசன வாக்குத்தத்தங்கள் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோரேசைப் போல ஒரு உண்மையான மேய்ப்பனுக்குப் பொருந்தும். 9-25 வசனங்கள் எல்லா தேவமக்களுக்கும் பொருந்தும்.

 

"கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது". தேவனுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்த ஒரு தனிப்பட்ட தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதனின் முன்னால் ஆண்டவர் ஜாதிகளைக் கீழ்ப்படுத்துவார். ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவன் அவிழ்ப்பான். அநீதியான அரசர்களின் சூழ்ச்சிகளை அவன் முறியடிப்பான். அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும் தேவன் கட்டளையிட்டு அவனின் கரத்தைப்பிடித்து இவ்விதம் உரைக்கிறார் (1-8).

 

"மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?" களிமண்ணான நாம் தேவன் நமது வாழ்க்கையில் தனது கிரியைகளை நடத்தும்போது அவர் நமது நன்மைக்காகவே எல்லாவற்றையும் செய்கின்றார். நாம் பொறுமையாக காத்திருந்து முடிவில் என்ன நன்மை செய்கிறார் என்பதை காணவேண்டும். ஆனால் அவர் தன் செயல்பாடுகளை வாழ்க்கையில் துடங்கும்போதே நாம் அவருடன் வழக்காடுகிறோம். நமக்கு உடனே அவர் பதிலளிக்காமல் இருக்கும்போது அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?

 

"தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!" நம்முடைய வாழ்க்கையில் தேவன் பதிலளிக்காமல் மௌனமாக இருக்கும்போது நாம் வாழ்க்கையில் விரக்தியடைந்து ஏன் இந்த உலகத்தில் பிறந்தோம் என்று சொன்னால் நமக்கு ஐயோ. நம்மை தாயின் வயித்தில் உருவாக்கின தேவனை குறை கூறுகிறோம்.

 

"இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்". வருங்காரியங்களை நாம் நம்மை  உருவாக்கினவருமாகிய தேவனிடத்தில் கேட்போமா. நாம் அவருடைய பிள்ளைகள். நாம் நமக்கு அவர் கரங்களின் மூலம் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு தைரியமாக கட்டளை இடலாம்.

 

"நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

 

நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்".

 

அவரின் நீதியின்படி உன்னை  எழுப்பியிருக்கிறார். உனது  வழிகளையெல்லாம் அவர் செவ்வைப்படுத்துவார். நீ தேவனின் ராஜ்யத்தைக்கட்டி பாவத்திற்கு  சிறைப்பட்டுப்போன தேவனுக்கு சொந்தமான மனித வர்க்கத்தை அவருடையவர்களாக மாற்றமுடியும். சுவிசேஷத்தை இலவசமாக மக்களுக்கு அறிவித்து பரிதானம் மக்களிடமிருந்து வாங்காமல் நீ அவருக்கு ஊழியம் செய்யவேண்டும். இன்று அநேகர் ஊழியம் செய்தவுடன், ஆசிர்வதிக்கப்பட்ட மக்களிடமிருந்து பரிதானம் வாங்குகிறார்கள். சேனைகளின் கர்த்தர் கொடுத்த கட்டளையை மீறாதே. 

 

"நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்".  உங்களுடைய வாழ்க்கையில் அற்புதம் நடக்கமுடியாமல் கோணலான பாதைகள் இருக்கிறதா? அந்த அரசியல் செல்வாக்குள்ள மனிதனைப்போய் பார்க்கவேண்டும். போகும் பாதை வெகு குழப்பமாக இருக்கிறதா. கர்த்தர் தாமே முன் சென்று கோணலானவைகளைச் செவ்வையாக்குவார். நீங்கள் சும்மா இருந்தால் போதும். அவரே எல்லாவற்றையும் செய்துமுடிப்பார்.  

 

"உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்".  இஸ்ரவேலின் தேவன் தான் உன்னைப்  பெயர்சொல்லி அழைக்கிறவர். எந்த ஊழியனமும் அவருக்குப்பதிலாக உன்னைப் பெயர்சொல்லி அழைக்க அவசியமில்லை. உனக்கு தடையாக இருக்கும் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்துபோடுவார். உனக்கென்று யாருமே அறியாமல் அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பார். வேறு யாருக்குமே கிடைக்காத ஆசீர்வாதங்களை உனக்கு கட்டளை இடுவார். இந்த தேவனை இஸ்ரவேலின் கர்த்தர் என்றும் நீ விசுவாசிப்பாயா?

 

 "நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை". இன்று நாம் இஸ்ரவேலின் தேவனை நன்கு அறியாமலிருக்கிறோம். இந்த தேவனை அறிந்துகொள்ளாத போதகர்கள் பிரசங்கிக்கும் வேறு ஒரு தேவனை கர்த்தர் என்று விசுவாசிக்க வேண்டாம்.

 

"என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை". இந்த இஸ்ரவேலின் தேவனைத் தவிர வேறு ஒரு தேவன் உங்களுக்கு உண்டாயிருக்கவேண்டாம். இன்று இந்த தேவனைப்பற்றிய அறிவு இல்லாமலே அவர் "உனக்கு இடைக்கட்டு கட்டியிருக்கிறார். பிதாவாகிய தேவனை இஸ்ரவேலின் தேவன் என்று அறிந்துகொண்டால் அளவில்லாத ஆசீர்வாதங்களை யேசுக்கிறிஸ்துவின் மூலமாக நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். 

 

"ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்". ஒளியை நமக்காக படைக்கிறார். இருளை நமது சத்துருக்களுக்காக உண்டுபண்ணுகிறார். அவரை பின்பற்றும் மக்களுக்கு சமாதானத்தைக் கட்டளையிடுகிறார். நமது விரோதிகளுக்கு தீங்கை உண்டாக்குகிறார். 

 

"வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்". நம்மை ஆசிர்வதிக்கும்படி வானங்களுக்கு கட்டளையிடுகிறார். மழை பெய்யாமல் நமது வாழ்க்கையில் வறட்சியிருந்தால் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும்போது ஆசீர்வாத மழை (showers) பெய்கிறது.  பாவத்தைப் போக்கி நீதியைப்பொழிகிறது. இஸ்ரவேலின் தேவனை ஆராதிக்கும் மக்கள் யேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் கூடிவரும்போது அந்த நாட்டில் நீதி மழையைப்போல ஊற்றப்படுகிறது. பூமி அந்த ஆசிர்வாதத்தின் மழையை பெற்றுக்கொண்டு நமது வாழ்க்கையில் ஆவிக்குரிய கனிகளைக்கொடுக்கிறது.

 

தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தம ஊழியனே! மேலே தேவன் உரைத்த வாக்குத்தத்தங்கள் உனக்குத்தான். உன்னுடைய தேவப்பணியில் இவைகளை ஞாபகப்படுத்திக் கொள்வாயாக. சோர்ந்து போகும்போது இந்த வசனங்களை மறுபடி மறுபடி வாசித்து தியானிக்கவும் (9-13).

 

"எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனேமாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்". தேவப்பிள்ளைகளை பகைத்துவரும் உலக மக்களின் சம்பாத்தியமும், வர்த்தகலாபமும் எல்லாம் உன்னிடமே வரும். நீ தேவனுக்கு உத்தமனாக இருக்கும்போது உலக பொருட்களைத்தேடி ஓடவேண்டாம். ஊழியத்திற்காக யாரிடமும் போய் கெஞ்சி நிற்க அவசியமில்லை. விலங்கிடப்பட்டு அவர்கள் உன் பின்னால் வந்து பணிந்து கொண்டு இஸ்ரவேலின் தேவன் உன்னுடனேமாத்திரம் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சாட்சி சொல்வார்கள். என்ன பெரிய பாக்கியம்!

 

"இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்". இந்த உலகில் இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய கர்த்தர் தன்னை மறைத்துக்கொண்டாலும், நீ அவரை நன்றாக அறிந்துக்கொள்ளலாம்.


"விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் (கிறிஸ்தவர்கள் உள்பட) வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.

 

ஆண்டவரின் நித்திய இரட்சிக்கப்படுகிற "நீங்கள்  என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்"  (14-17).

 

"வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை". நமது கர்த்தர் யார் என்று அறிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். இந்த பூமியில் நமது குடியிருப்புக்காக எல்லாவற்றையும் நமக்காக படைத்திருக்கிறார். உங்களது விசுவாசக் கண்களால் மாத்திரம் பார்த்தால் போதும். இந்த உலகத்தின் எல்லா ஆளுமைகளும் நமக்கு கீழ்ப்பட்டிருக்கிறது.

 

"நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்". அவர் நமக்கு மறைமுறமாக எதையும் தன் வார்த்தையில் எழுதிக்கொடுக்கவில்லை. விருதாவாக என்னைத் தேடுங்களென்று அவர் நமக்கு சொன்னதுமில்லை. கேளுங்கள் அப்போது கொடுக்கப்படும். தட்டுங்கள் அப்போது திறக்கப்படும்.

 

"ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்" நம்மை எகிப்தியரைப் போல கொடுமைக்கார ஜாதிகளிடமிருந்து தப்பிக்கப்பண்ணினார். நாம் எல்லோரும் ஒரே கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் ஓன்று சேர்ந்து கூட்டங்கூடி வருவோம். நமக்கு விரோதமாக விக்கிரங்களை வணங்கி இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள் (17-20).

 

"நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை". பழைய ஏற்பாட்டின் காலத்திலே ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் பூர்வகாலமுதற்கொண்டு தன்னை மறைத்துக்கொள்ளாமல் நமக்கு வெளிப்படுத்திக்காட்டியிருக்கிறார். அவரைத் தவிர வேறு ஒரு நீதிபரரும் இரட்சகருமாகிய தேவனும் இல்லையே.

 

"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை". சுவிசேஷத்தின் முக்கிய அம்சம் இந்த வசனம் தான்.

 

"முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்". எல்லா உலக ஆளுநர்களும் அவருக்கு முன்பாக முழங்காலில் நிற்பார்கள். எந்த நாவும் உங்களுக்கு விரோதமாக எழும்பாது. எந்த அதிகாரியையோ, ஆளுநரையோ சந்திக்கப்போகும் முன்பு இந்த தீர்க்கதரிசன வார்த்தையைத்  தியானித்து கடந்துபோகவும். இந்த நீதியான வார்த்தை தேவனின் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லை.

 

"கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்". இந்த உலகத்தில் நீதியையும், வல்லமையையும் தேடி அலையவேண்டாம். உங்களுக்கு நீதி கிடைக்க அவர் போராடுவார். எல்லா உலகத்தின் வல்லமையைகள், அதிகாரங்கள், அவரிடமிருந்து புறப்படுகின்றது. 

 

"இஸ்ரவேலின் சந்ததியாகிய (நாம்) யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மை" பாராட்டுவோம். யேசுக்கிறிஸ்துவின் மூலமே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். சுயநீதியின் மூலமாக நாம்  நீதிமான்களாக்கப்படுவது முடியாத காரியம். நாம் அவரிலும் அவர் நம்மிலும் இருக்கும்போது நாம் இந்த உலகத்தில் நீதிமான்கள் (21-25).