தேவகுமாரனின் ஊழியமும், தேவமக்களின் இரட்சிப்பும்,ஆறுதலும் 


ஏசாயா 49ம் அதிகாரம் பிதாவாகிய தேவன், அதாவது இஸ்ரவேலின் தேவன், தனது ஒரேபேறான குமாரனை வெளிப்படுத்தி, அவர் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரை இரட்சிக்கும்படிக்கும், பின்பு புறஜாதியரை இரட்சிக்கும்படிக்கும், அனுப்புகிறார். 1-12 வசனங்கள் குமாரனின் ஊழியத்தைக்குறிக்கிறது. 10-26 வசனங்கள் சீயோன் நகரவாசிகளுக்காக எழுதப்பட்டிருக்கிறது.

 

மாமிசத்தில் வெளிப்பட்ட  தேவக்குமாரனை வெளிப்படுத்தும்போது அவரின் ஆள்தத்துவத்தை சித்தரித்து ஒரு விடுதலை நாயகனாக ஆவியானவர் வெளிப்படுத்துகிறார்.

 

"தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்". குமாரனின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வெளிப்பட்டதாக தீர்க்கதரிசி கூறுகிறார். உலகத்திலுள்ள எல்லா தூரத்திலிருக்கிற ஜனங்களும், தீவுகளில் வசிக்கும் மக்களும் யேசுவின் சுவிசேஷத்திற்கு செவி கொடுக்கவேண்டும் என தீர்க்கதரிசனம் கூறுகிறது.  ஆனால் சுவிசேஷத்தில் இயேசு இந்த வார்த்தைகளைக் கூறியதாக எழுதப்படாமலிருந்தும், இது தீர்க்கதரிசன வார்த்தைகள். மேலும் தியானிப்போம்.

 

"அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்". பிதாவாகிய தேவன் குமாரனின் வாயைக் கூர்மையான பட்டயமாக்கினார். கிறிஸ்து தன் சீடருக்கும், தன்னிடம் உதவியை நாடி வரும் மக்களுக்கும், தன் எதிரிகளான சதுசேயர் பரிசேயர்களுக்கும், சாத்தானுக்கும் பதிலளித்த விதம் இந்த தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. தேவன் தமது கரத்தின் நிழலினால் குமாரனை மறைத்து சத்துருக்களின் கைகளிலிருந்து அவரைக் காத்து, எப்போது  சத்துருக்களின் ஒப்படைக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தார். குமாரனை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பி, சாத்தானுக்கு விரோதமாக ஒரு  அம்பாக உபயோகித்தார். அந்த அம்பு எறியப்படும்வரை அவரது அநாதி திட்டத்தை தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.

 

"அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்". இந்த பிதாவின் சாட்சி இயேசுவை அவரின் ஊழியத்தில் பலப்படுத்தியிருக்கும். இயேசு ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தை நன்கு அறிந்திருந்தார்.

 

"அதற்கு நான் (இயேசு): விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்". இயேசு மாமிச பலவீனத்தால் அநேகத்தரம் சோர்ந்துபோயிருக்கக்கூடும். இயேசு 100 சதவீதம் நம்மைப்போல பாடுள்ள மனிதனாகக்  காணப்பட்டார். அவர்  தன்னை மற்றவர்கள் குற்றப்படுத்தும்போது, அவரின் நியாயமும் பலனும்  பிதாவினடத்தில்  இருக்கிறது என்று என விசுவாசித்தார்.

 

"யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்". அவர் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாராகிய யாக்கோபைத்  தம்மிடத்தில் திருப்பும்படி குமாரனை தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் பிதா தமக்குத் தாசனாக அவரை  உருவாக்கினார். தேவதூதன் சொப்பனத்தில் தாயாகிய மரியாளிடம் "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்று பிறப்பதற்கு முன்பு தீர்க்கதரிசனமாக அறிவித்தான். ஆனால் இஸ்ரவேலோ கிறிஸ்துவாகிய மேசியாவை ஏற்றுக்கொள்ளாமல் தேவனிடம் சேராதே போய்விட்டது. ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் குமாரன் கனமடைந்து அவர் "என்  பெலனாயிருப்பார்" என்று குமாரன் உரைத்ததாக தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துகிறது (1-5).

 

"யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்". பிதா குமாரனைப் பார்த்து இந்த  வார்த்தையைக்  கூறியதாக தீர்க்கதரிசி எழுதுகிறார். முதலாவது காணாமற்போன ஆடுகளாகிய யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பி இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு கொண்டுவரவும் குமாரன் பிதாவிற்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது. ஆனால் இதற்கும் மேலாக, பூமியின் கடைசிபரியந்தமுள்ள புற ஜாதிகளுக்கும் குமாரன் தேவனுடைய இரட்சிப்பாயிருக்கும்படி அவரை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைத்திருக்கிறார். பிதாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் யேசுவின் ஊழியத்திற்கு அச்சாரமாக இருக்கிறது. 

 

மேலும் பிதாவாகிய தேவன் குமாரனை பற்றி கூறுவது இதுதான் "இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்". இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய தேவனாகிய கர்த்தர் யேசுக்கிறிஸ்து, மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டார், ஜாதியாரால் அருவருக்கப்பட்டார்.  அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவர் அந்த தேவகுமாரன்.  உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், தேவகுமாரனை  தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் அந்த தேவகுமாரனை பணிந்துகொள்வார்கள் என்று பிதா உரைத்ததாக தீர்க்கதரிசி எழுதுகிறார்.

 

"பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்". யேசுக் கிறிஸ்து மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்  (எபி 5:7-8). குமாரன் பாவத்தால் பாழாய்ப் போன பூமியைச் சீர்ப்படுத்தி பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுவிசேஷம் மூலம் நாம் சுதந்தரிக்கிறோம்.

 

"கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும்". பிதா குமாரனை மரணத்தினின்று காப்பாற்றி குமாரனை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்தியிருக்கிறார். பிதாவாகிய தேவன் பாவத்தில் கட்டுண்டவர்களை விடுதலை செய்யவும். இருளில் இருக்கிறவர்களை எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற அந்த குமாரனின் மெய்யான ஒளியிடத்தில் கொண்டுவரும்படி உடன்படிக்கையாக ஏற்படுத்தியிருக்கிறார்.

 

குமாரனின் இரட்சிப்பின் மூலமாக நாம் எல்லா இடங்களிலும் ஆசீர்வாதங்களைச்  சுதந்தரித்துக்கொள்வோம். எங்கே ஆசிர்வாதம் பெறமுடியாமல் மேடுகள் இருக்கிறதோ அங்கே நாம் மேய்ச்சலை கண்டடைவோம்.


"அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார்". இயேசுவின் மூலம் இரட்சிக்கப்படும் மக்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை. உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை. அவர்களை இந்த வனாந்தரத்தில் நடத்திச் செல்பவர் இயேசுவின் ஆவியானவர். ஒவ்வொரு இடங்களிலும் நாம் நீரூற்றுக்களைக் காண்போம்.

 

"என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும்". தேவன் இந்த உலகத்தில் எங்கேயெல்லாம் மலைகள் நமக்கு முன்பாக இருக்கிறதோ அங்கே மலைகளை இடித்து வழிகளை உண்டுபண்ணி பாதைகளை உயர்த்துவார். நாம் இந்த உலக மக்கள் காணும்படி உயர்ந்த பாதைகளில் நடப்போம்.

 

"இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார்". குமாரனால் இரட்சிக்கப்படுவர்கள் உலகத்தில் எல்லா பகுதிகளிருந்தும் இன்று வந்துக்கொண்டிருக்கிறார்கள். சீனீம் தேசம் என்பது உலகத்தில் இன்னும் யாரும் அறியப்படாத ஜாதிகள் (1-12).

 

" வானங்களே, கெம்பீரித்துப் பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்". தேவன் துன்பத்தால் வாடும் சிறுமைப்பட்டிருக்கிற தம் மக்களுக்கு ஆறுதல் செய்துவருகிறார். வானங்களும் பூமியும் இந்த தேவனின் செயலுக்கு சாட்சியாக இருக்கிறார். இயற்கையே தேவனின் கட்டளைக்கு தலை வணங்குகிறது. நாம் பெரிய பாக்கியவான்கள்.

 

ஆனால் "சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள்.

 

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

 

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது".  என்ன ஆறுதலான வாக்குத்தத்தம்!

 

"உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.

 

உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

 

அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்". ஆண்டவரின் பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பும் எந்த கூட்டமோ, அதிகாரமோ அவர்களைக் கண்டு பயந்து ஓடுவார்கள். அந்த விரோதிகளை ஆபரணமாகத் தரித்துக்கொள்வார்களாம். தேவனின் கோபம் எப்படி வெளிப்படுகிறது!

 

"பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்". தேவன் தன் ஜனங்களை  ஆசிர்வதித்து பெருக்கும்போது உங்களால் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரின் மந்தையில் சேர்ந்த தேவப்பிள்ளைகளை தேவன் அபரீதமாக இடம் கொள்ளாமல் பெருக்கி ஆசீர்வதிப்பார். அவர்களின் சாட்சிகளை நீங்கள் கேட்பீர்கள் (13-20).

 

"அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்". உங்களின் ஊழியத்தின் மூலம் இரட்சிக்கப்படும் ஆயிரமாயிரம் மக்கள் உங்களை ஆச்சரியத்தில் உட்படுத்துவார்கள். நீங்கள் ஒன்றியாய் விடப்பட்டிருந்த நிலையிலும் ஆத்தும ஆதாயம் செய்யும்போது நீங்கள் அநேக ஆவிக்குரிய பிள்ளைகளை பெற்றெடுப்பீர்கள். இந்த பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து ஒரு பெரிய சேனையாக உருவாகுவார்கள். இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உங்கள்  இருதயத்தில் கூறுவீர்கள்.

 

"இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்". தேவன் தானே தன் கரத்தின் மூலம் ஒரு உண்மையான உயிர்மீட்சியை  அல்லது எழுப்புதலை  கொண்டுவருவார். அப்போது உங்கள் மூலமாக அநேக ஆவிக்குரிய  குமாரர்கள், குமாரத்திகள், உங்களின் தோளின்மேல் ஏற்றப்பட்டு வருவார்கள்.  தேவன் தன் கொடியை ஜாதிகளுக்கு நேராக உயர்த்தும்போது இப்படி ஒரு உயிர்மீட்சி நடக்கும்.

 

தேவன் உங்களை உயர்த்தி மகிமைப்படுத்தும்போது, "ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்". தேவனின் ஆசிர்வாதத்திற்கு வேண்டி காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை.

 

"பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்ககூடுமோ?

 

என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்". நீதியாய்ச் சிறைப்பட்டுப்போன ஆண்டவரின் மக்களை தேவன் விடுவிப்பார். எந்தவிதமான பராக்கிரமனனோ,  பெலவந்தனோ உங்களுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக வழக்காடும் போது ஆண்டவர் அவர்களை இரட்சித்துக்கொள்கிறார்.

 

"உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்". உங்களை ஆண்டவரின் ஒடுக்கினவர்களை ஆண்டவர் அவர்களை தங்கள் தம்மில் வெறிகொண்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள். மாம்சமான யாவரும் இந்த அழிவை அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய அவசியமில்லை. தேவனே அவர்களை இவ்விதம் அழித்துப்போடுவார் (21-26).