தன் ஜனத்தை மீட்டு ஆசிர்வதிக்கும் யாக்கோபின் தேவன்

ஏசாயா 48ம் அதிகாரம் பின்மாறிப்போன தேவ மக்களுக்காக எழுதப்பட்டிருக்கிறது. அந்த பின்மாறிப்போன மக்களை தேவன் உபத்தரவத்தின் குகையில் சந்தித்து மீட்டெடுக்கிறார்; யாக்கோபின் தேவன் அவர்களை முடிவில் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறார்.

 

"இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்". கிறிஸ்தவர்கள் என்று நாமம் தரித்து உண்மையும் நீதியும் இல்லாமல் தேவனை வெறுமனே அறிக்கையிடுகிறோமா?

 

"அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்". நாம் பரிசுத்த நகரத்தார் என்று மேன்மை பாராட்டி தேவன்மேல் பற்றுதலாயிருக்கலாம்.

 

"பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.

 

நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்". நாம் கடின இதயமுள்ளவர்கள் என்றும் நமது பிடரி நரம்பு இரும்பென்றும் அறிந்தும் ஆண்டவர் நம்மேல் இரக்கம் வைத்து அநேக காரியங்களை முன்னறிவித்து சடிதியாய் நடப்பித்திருக்கிறார்.

 

"ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்". ஆண்டவரே நமக்கு நடக்கப்போகும் காரியங்களை முன்னமே அறிவித்து வெளிப்படுத்திவருகிறார். ஆனால் நாம் இந்த காரியங்கள் நடப்பது, யாரோ நமக்காக ஜெபித்துவருவதால் என்றோ, நாம் காணிக்கை கொடுத்து  வார்ப்பித்த விக்கிரகமுமான ஊழியரின் ஜெபத்தின் மூலம் தான் அறிய வந்தோம் என்று சொல்லாதபடிக்கு ஆண்டவரே நமக்கு வெளிப்படுத்திவருகிறார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே தேவன் தனது மக்களுக்கு நேரடியாக வெளிப்படுத்தி வரும்போது, இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் நம்மில் வாசிக்கும் ஆவியானவர் மூலமாக நம்முடன் ஆண்டவர் நேரடியாக தொடர்பு கொண்டு வரும் காரியங்களை நமக்கு முன்னமே அறிவித்து வெளிப்படுத்துவது எவ்வளவு உண்மையாக விளங்குகிறது. ஆண்டவர் நம்முடன் ஒரு நண்பனைப் போல உறவாடி தம்மையும், நடக்கப்போகும் காரியங்களையும் வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறார். ஆனால் நாமோ தனித்து ஜெபம் பண்ணுவதோ, வேதத்தை ஆராய்ந்து அவரின் சத்தத்தை கேட்க தயாராக இல்லை. நமக்கு ஆண்டவருடன் தனி உறவு மிகவும் அவசியம்.

 

"அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்".

 

"அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை (1-8).


நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்". நாம் ஆண்டவருக்கு துரோகம் பண்ணியும், தாயின் கர்ப்பந்தொடங்கி அவரை மீறுகிறவர்கள் என்றும் பெயர் பெற்றிருக்கிறோம். ஆதிமுதல் நாம் கேள்விப்படாத காரியங்களையும், நமது செவிகள் அடைக்கப்பட்டிருந்தபோதிலும் தேவன் நமக்கு மறைமுகமான காரியங்களை இயேசுவின் மூலமாக வெளிப்படுத்திவருகிறார்.  

 

"என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்". யேசுக்கிறிஸ்துவின் நாமத்தினால் நாம் வேண்டும்போது தேவன் தனது கோபத்தை நிறுத்தி நம்மை சங்கரிக்காதபடிக்கு அவரின் (இயேசுவின்) புகழ்ச்சியினிமித்தம் நம்மேல் பொறுமையாயிருக்கிறார்.

 

"இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

 

என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்". நம்மை கஷ்ட துன்பங்கள் மூலமாக தேவன் நமது விசுவாசத்தைப் புடமிடுகிறார். உபத்திரவத்தின் குகையிலேதான் நாம் ஆண்டவரைச் சந்திக்கிறோம். நம்மை புடமிடுவது வெள்ளியைப்போலல்ல. விலை மதிக்கப்படாத பொன்னைப்போல புடமிட்டு நம்மைத்  தெரிந்துக்கொள்கிறார். அவரின் நிமித்தமே அப்படி புடமிட்டு நம்மை தமக்கென்று  மீட்டுக்கொள்கிறார். பரிசுத்தம் குலைக்கப்பட்டு நாம் பாவத்தில் ஜீவிக்கும்போது தேவன் நம்மை உபத்திரவத்தின் குகையிலே புடமிடுகிறார். நாம் நமது வாழ்க்கையில் நாமே நமக்கென்று உண்டாக்கப்பட்ட விக்கிரகங்களை ஆண்டவர் வெறுக்கிறார். பணம் , அந்தஸ்து, ஜாதிப்பெருமை, புகழ், ஆண்டவரின் ஊழியர்கள்  போன்ற விக்கிரகங்களை நாம் வழிபடும்போது தன் மகிமையை வேறொருவருக்குக் கொடுக்க விரும்பமாட்டார் (9-11)

 

"யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே". நம்மை அழைத்திருக்கிற தேவனுக்கு நாம் செவிகொடுக்கவேண்டும். அவர் நமக்கு நடக்கப்போகும் காரியங்களை அறிந்து இருக்கிறார். அவைகளைக்குறித்து எச்சரிக்கை  செய்கிறார். 

 

"என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்". சிருஷ்டி கர்த்தரின் கரமே நமக்கு வேண்டிய எல்லா நன்மைகளையும் செய்கிறது. இல்லாதவைகளை இருக்கிறது போல அழைக்கிறார். அவர் கட்டளையிட அவைகள் உண்டாகி நிற்கும். "நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?". பாபிலோனிய நாடு இந்த உலகில் நமக்கு விரோதமாய் செயல்பட்டு வருகிறது. அங்கே வசிக்கும் கல்தேயரின் மேலே நமது கரம் இருக்க, நம்மைக்  கண்டு அவர்கள் நடுங்குவார்கள்.  ஆவியானவர் நம்மோடிருந்து கர்த்தருக்கு சித்தமான காரியங்களை செய்வோம். எந்த சத்தியத்தை நமக்கு ஆவியானவர் அறிவிக்கிறார். நாம் அவருக்கு செவிக்  கொடுப்போம் (12-14).

 

"நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்". தேவனே உன்னை அழைத்து வெளிப்படுத்துகிறார். உனது வழி வாய்க்கும். கண்டிப்பாக அவர் கூறியது நிறைவேறும்.

 

"நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்". பழைய ஏற்பாட்டின் காலத்திலே தேவன் அவரிடம் சமீபத்தில் வருகிறவர்களிடம் பேசி வந்தபோது, புதிய ஏற்பாட்டின் கீழே, பரிசுத்தாவியானவரை பெற்ற நாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள். தேவன் நம்மிடம் அந்தரங்கத்தில் பேசுவதும், வேறு ஒரு மனிதன் மூலமாகவும்  பேசுவதும் இல்லை. பிதாவாகிய தேவனின்  ஆவியானவர் நம்மிலும் நம்மோடும் இருந்துவருகிறார்.

 

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே". மீட்பரான இஸ்ரவேலின் தேவன் பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம்  நடக்கவேண்டிய வழியிலே நடத்துகிறார் (15-17).

 

"ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்". தேவன் நமக்குக் கொடுத்த கற்பனைகள் அவரின் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாம் கவனிக்காமலிருந்தபடியால் நாம் சமாதானத்தையும் ஆசீர்வாதங்களையும்  இழந்திருக்கிறோம். அவைகளைப் பின்பற்றுவோமானால் நமது நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போல இருக்கும். தேவன் தனது நீதியை கிறிஸ்துவின் மூலம் நமக்கு அருளியிருக்கிறார். இந்த நீதியின் மூலம் நாம் இந்த உலகில் ஆளுகை செய்வோம்.

 

அப்படி தேவ கற்பனைகளைக்கைகொண்டு  நீதியின் மூலம் ஆளுமை செய்யும்போது,  "(அப்பொழுது} உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்". நமது சந்ததிக்கும், எண்ணி அளவிடமுடியாத  நமது கர்ப்பப்பிறப்புகளுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதம் கிடைக்கிறது. உங்களின் பெயர் அவர்களின் மேலே அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும் (18-19).

 

"பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்". இந்த உலகத்தை நேசித்து வாழும் பாபிலோனிய நாட்டின் கல்தேயரைவிட்டு விலகி, தேவமக்களோடு ஐக்கியம் வைக்கவேண்டும். தேவன் மீட்டுக்கொண்ட யாக்கோபின் வம்சத்தார் நாம். யாக்கோபை ஆசிர்வதித்த இஸ்ரவேலின் தேவன் நம்மையும் யாக்கோபைப் போல ஆசீர்வதிக்கிறார் என்று நாம் பிரசித்தப்படுத்தவேண்டும்.

 

"அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது". நமது வனாந்திர வாழ்க்கையிலும் கன்மலையிலிருந்து தண்ணீரை சுரக்கப்பண்ணுவார். நீங்கள் ஆசிர்வாதத்திற்கு ஏங்கி நிற்கும்போது, ஒரு கன்மலையைக் காண்பீர்கள். அது பிளக்கப்பட்டுத் தண்ணீர் ஓடிவரும்.

 

"துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்". நாம் எப்போது துன்மார்க்கரைபோல வாழ்கிறோமோ சமாதானத்தை இழந்துவிடுவோம். ஜாக்கிரதை (20-22).