Jeremiah 7th Chapter
"கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்":
கர்த்தரின் மூலம் நமக்கு தீர்க்கதரிசனம் அவருடைய வார்த்தை மூலம் கிடைக்கவேண்டும்.
"நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்".
கிறிஸ்துவை இரட்சகராக ஏற்று இரட்சிப்பின் நுழை வாசலில் நிற்கும் தேவமக்களுக்கு வரும் தீர்க்கதரிசன எச்சரிப்பு இதுதான். நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
"இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்".
நமது வழிகளையும் கிரியைகளையும் சீர்ப்படுத்தவேண்டும். நாம் குடியிருக்க வேண்டிய இடம் இந்த வாழ்க்கையியிலுள்ள கானான் தேசம். பாவத்திலிருந்து விடுபட்டு, தேவனின் முழு சித்தத்தை நிறைவாக்க நமக்கு தேவனால் கொடுக்கப்பட்ட பணியை செய்யும் இடம். " நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும் (ஏசாயா 62: 4-5). இந்த தேசத்தில் தானியமும், திராட்சைரசமும் குறைவுபடாது. மோட்சப்பயணிகள் வேண்டியதற்கும் மேலாக ஆசீர்வாதங்கள் இந்த தேசத்தில் அனுபவிக்கிறார்கள். இந்த தேசத்தின் குடிமகன்கள் பரிசுத்த ஜனமென்றும். கர்த்தரால் தேடப்பட்டு, மீட்கப்பட்டவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.
"கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள்".
இன்று அநேக கள்ள தீர்க்கத்தரசிகள் கர்த்தரின் பிரசன்னம் அவர்களின் ஆலயங்களிலும் ஊழியங்களிலும் இருப்பதாக கூறிவருகிறார்கள். ஆனால் அவர்களோ கிறிஸ்துவின் வார்த்தைகளை பின்பற்றுவது கிடையாது. பரிசுத்தாவியானவரின் பிரசன்னத்தை அந்நிய பாஷை பேசியும், இசை வாத்தியங்களை இசைத்து பாட்டுக்கள் பாடியும், துதித்துக்கொண்டும் வரவைப்பதாக கூறி பொய்வார்த்தைகளை கூறிவருகிறார்கள். ஆவியானவரின் பிரசன்னம் கிறிஸ்துவின் வார்த்தையோடு இணைந்திருக்கிறது. ஆவியானவர் நம்மில் வாசம் செய்துவருகிறார். அங்கே நிரந்தரமாக இருக்கிறார். எப்போது நாம் அவரை துக்கப்படுத்தி பாவத்தில் வாழ்ந்து குடியிருப்போமானால் அவர் நம்மைவிட்டு ஒரு நாள் போய்விடுவார்.
"நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து,
பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில்,
அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன்".
முதலாவது நாம் வழிகளையும் நமது கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தவேண்டும். கிறிஸ்து காண்பிக்கும் குறுகலான பாதையில் பிரவேசிக்கிறோமா? நற்கிரியைகளை செய்துவருகிறோமா? நாம் மக்களின் பிரச்சனைகளில் தலையிட்டு வழக்கை நியாயமாய்த் தீர்த்து சமாதானத்தை உண்டுபண்ணவேண்டும். பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலிருக்கிறோமா? இன்று நமது சபைகளிலுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்கிறோமா? திக்கற்றவனையும் விதவையையும் விசாரிக்காமல் இருக்கிறோமா? இன்று சபைகளில் செய்திகளை மாத்திரம் கொடுத்து , காணிக்கைகளை வாங்கிக்கொண்டு தேவனை பிரியப்படுத்த விரும்புகிறோமா? அப்படி செய்வோமானால் நமக்கு தேவன் அருளிய கானான் தேசத்தில் பிரவேசிக்கமுடியாது. மக்களுக்கு செய்யும் பணிவிடைகள் மூலமாகத்தான் அவர்களின் வாழ்க்கையை நாம் மாற்றமுடியும். போதகர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலமாக தேவனின் ஆட்டு மந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைக்கமுடியும்.
"இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள்.
நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,
பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?"
இன்று நடப்பது. ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை தேவனின் பெயரில் கூறும்போது அப்படியே நம்புகின்றோம். அந்த பொய் வார்த்தைகள் நிறைவேறாமல் போகும்போது தேவனை குறைகூறுகிறோம். தேவபிள்ளைகளான நாம் மற்றவர்களுக்கு போய் சேரவேண்டிய சொத்தையோ, நிலத்தையோ நீதிமன்றத்தில் பொய் வழக்குகள் போட்டு அபகரிக்கிறோமா? நமக்கு பிடிக்காதவர்களின் பெயரை இழிவு படுத்தி அவர்களின் புகழை கொலை செய்கிறோமா? இந்த உலக ஆடம்பர வாழ்க்கையை விரும்பி இந்த உலகத்தோடு விபச்சாரம் பண்ணுகிறோமா? மக்கள் கஷ்டப்பட்டு கொடுக்கும் காணிக்கை மூலம், ஆஸ்தி, நிலம், சொத்து, ஆடம்பர வாகனங்கள், உல்லாசமான வாழ்க்கை போன்ற அந்நிய தேவர்களைப் பின்பற்றுகிறோமா? இப்படி செய்து பாகாலுக்குத் தூபங்காட்டுகிறோமா?
இப்படிப்பட்ட காரியங்களை செய்துவிட்டு தேவனின் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே அவருக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வோமா? இயேசுவின் ரத்தத்தின் மூலம் மன்னிப்பு கிடைக்க இந்த அருவருப்புகளிலிருந்து விடுபெற மனம்திரும்புவோமாக.
"என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
அன்று இயேசு எருசலேம் தேவாலயத்தில் வியாபாரம் செய்து கள்ளர் குகையாக்கினவர்களை சாட்டையை வைத்து அடித்து விரட்டினார். இன்று அவரின் பெயரில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறோமா? ஒருவன் சுவிசேஷத்தால் பிழைப்பு நடத்தலாம். youtube channel நடத்தி பிழைப்பு நடத்தலாம். ஆனால் அந்த ஊழியம் மூலம் வியாபாரம் நடத்தக்கூடாது. பாவத்தைக்கண்டித்து செய்தி கொடுக்காமல் எப்போதுமே செழிப்பைக்குறித்து பிரசங்கம் செய்யக்கூடாது.
அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய சுகமளிக்கும் கூட்டத்திற்கு பணம் தேவைப்பட அந்த மைதானத்தில் புத்தகம், பைபிள் போன்றவைகளை விற்பனை செய்யும் கடைக்காரங்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. அப்போது ஒரு சரீரத்தில் குறைவுபட்ட சிறுவன் ஒரு stickers stall வைத்திருந்தான். அவனிடமிருந்து பணம் கேட்கப்பட்டது. இங்கே யார் வியாபாரம் செய்தார்கள் என்பதை நீங்களே நிதானிக்கலாம்.
"நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்".
சங்கீதம் 78:58-60 படித்து பார்க்கவும். தேவன் சிலோ பட்டணத்தை அழித்தார் என்று அறியலாம். தொல்லியல் ஆய்வு இந்த பட்டணத்தின் அழிவை இன்றும் அறிவித்துக்கொண்டிருக்கிறது.
"நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால்,
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்".
தேவன் இப்படிப்பட்ட கிரியைகளையெல்லாம் செய்த மக்களை தேவன் எச்சரித்தும் உத்தரவுகொடாமலும் போனபடியினால், தேவன் இந்த மக்களின் இருப்பிடத்தை சிலோவை போல அழித்துவிடுவார்.
"நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை".
இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை. இவர்களை தன் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாம் ஜாக்கிரதையாக இருந்து உடனே மனம்திரும்புவோமாக!
"யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?
எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள்.
நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும்,
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன்.
அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.
உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.
ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்பு செய்தார்கள்.
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள்.
ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற, ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல்.
நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார்.
யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.
தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.
ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப்பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள்.
இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள்.
நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்".
மேலே கூறப்பட்ட வார்த்தைகளை தியானித்து தேவன் எப்படி மனவேதனை அடைந்து தாம் நேசித்த மக்களின் மேலே வரப்போகும் நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்திருக்கிறார் என்பதை நாம் அறியவேண்டும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன வார்த்தைகள் தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படியாமலிருக்கும் நமக்குப் பொருந்தும்.