தேவனின் வல்லமையும், மீட்பும்

ஏசாயா 59ம் அதிகாரம் தேவனின் வல்லமையை உணர்த்துகிறது.

 

"இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.

 

உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

 

ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது". அநேக நேரங்களில் தேவன் பதிலளிக்க தாமதிக்கும்போது அவரது  வல்லமையை குறை சொல்கிறோம். அவரால் இது முடியாது என்று எண்ணி அவரின் வல்லமையின் மேல் சந்தேகப்படுகிறோம். தேவன் என்றும் மாறாமலும் அவரின் கை குறுகிப்போகமலும் இருக்கிறது. நமது அக்கிரமங்களும் பாவங்களும் ஒரு பிரிவினை சுவராக நமக்கும் அவருக்கும் இடையில் இருக்கிறது. தேவனது சொந்த மக்களாக இருந்தும் நாம் இன்று அக்கிரமங்கள் செய்து வருகிறோம். அவர் விரும்பாத காரியங்களை செய்து வருகிறோம். உதவி செய்யும் திராணி இருக்கும்போது நம்மை உதவி நாடிவரும் மக்களை அலட்சியம் செய்துவருகிறோம். யேசுவின் ரத்தத்தால் மீட்கப்பட்டுவிட்டோம் என்ற அகந்தையால் துணிந்து பாவம் செய்து வருகிறோம். சபை மக்களிடம்/தேவமக்களிடம் பண விஷயத்தில் பொய் கூறிவருகிறோம். இப்படி துணிந்து பாவம் செய்து வரும்போது தேவன் எப்படி நமது ஜெபங்களை கேட்டு மக்களை ஆசீர்வதிப்பார்?

 

"நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்". நீதியைத்  தேடி அலையும் மக்களுக்கு உதவி செய்து நன்மை செய்யவேண்டும். இன்று நமது கிறிஸ்தவ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், நிருபனங்களிலும் அநியாயம் தலைவிரித்தாடுகிறது, தேவ வசன சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை. நீதிமன்றங்களில் அப்பட்டையாக பொய் கூறி நிலத்தையும், பொக்கிஷத்தையும் அபகரிக்க, தேவனின் வழியை விட்டுவிட்டு உலக மாயையை நம்பி அபத்தமானதைப் பேசிவருகிறார்கள். இவ்விதம் அநியாயம் செய்பவர்களுக்கு என்ன நேரிடும்?

 

கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிவர்களின் முட்டைகளைச் சாப்பிடுகிறவர்கள் சாவார்கள்.  அநீதி மூலம் சம்பாதித்த பணத்தை அனுபவிக்கும் மக்கள் தண்டிக்கப்படுவார்கள். அந்த முட்டைகள் பொரித்து விரியன் பாம்பு புறப்படும். இன்று அநேக தேவமக்களின் வீடுகளில் விரியன் பாம்பு குட்டிகள் மறைந்திருக்கிறது. இவைகளை  இயேசுவின் ரத்தத்தின் மூலம் விரட்டமுடியாது. மக்களை ஏமாற்றி அநியாயமாக சொத்து சேர்த்து வைத்து, அந்த சொத்துக்களை அனுபவிக்கும்போது சாத்தானின் கட்டுகள் இருக்கத்தான் செய்யும்.

 

"அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது". அநியாயமாக சம்பாதித்த பணத்தால் செய்த நெசவுகள் நமக்கு உலகப்பிரகாரமான நன்மைகளை கொண்டுவராது. அவர்களின் அக்கிரமக்கிரியைகள், கொடுமையான செய்கைகள் அவர்கள் கைகளிலிருக்கிறது. அவர்களின் கைகள் ஆசிர்வாதத்தைக் கொண்டுவராமல் தேவ சாபத்தைக் கொண்டுவரும்.

 

"அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது.

 

சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்". இவர்கள் காண்பிக்கும் பாதையில் நடக்கிற யாரும் தேவ சமாதானத்தை இழந்துவிடுவார்கள்.

 

"ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்". அக்கிரமத்தையும் பாவத்தையும் செய்யும்போது நியாயம் நமக்கு தூரமாயிருக்கும். யாரும் ஜெபித்தாலும் நியாயம் கிடைக்காது. நீதி நம்மைத் தொடர்ந்து பிடிக்காது. தேவனின் பிரகாசத்துக்குக் காத்திருந்தாலும் மரண இருளின் அந்தகாரம் தான் நம்மை கவ்வும்.


"நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.

 

நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.

 

எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்". என்னதான் உபவாசம் இருந்து ஜெபித்துவிட்டு நியாயத்திற்கு காத்திருந்தாலும் நியாயமோ கிடைக்காது. இரட்சிப்பும் வராது.

 

"கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்".


நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்று பிதற்றி கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி அவரைவிட்டுப் பின்வாங்கிபோகிறோம். நமது வார்த்தைகளில் உண்மை இல்லை. கொடுமை, கலகம் உண்டாகும்படி பேசிவருகிறோம். சமாதானம் உண்டாகும்படி வார்த்தைகளை பேசமாட்டோம். நமது இருதயத்திலிருந்து கபடும், தீங்கும் உருவாகுகிறது. பரிசுத்தாவியானவர் வாசமாயிருக்கும் உள்ளத்தில் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் உருவாகிறது.

 

"நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.

 

சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்". சத்தியத்தையும் நீதியையும் வெறுத்து பொல்லாப்பை அரவணைக்கிறோம். நீதிக்காக போராடுவதுமில்லை. ஏழைகள் ஒடுக்கப்படும்போது குரல் எழுப்புவதுமில்லை.

 

"ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது". மக்கள் ஒடுக்கப்படும்போது அவர்களுக்கு குரல் கொடுத்து அதிகாரிகளிடமும், ஆளுநர்களிடமும் விண்ணப்பம் செய்யாமலிருக்கும்போது தேவன் கவலைகொள்கிறார். தேவன் தாமே இரட்சிப்பாகி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார்.

 

"அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்". ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றும்படி தேவன் இவ்விதமாக அணிகலன்களை அணிந்து அவர்களை இரட்சிக்கிறார்.

 

"கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்". தேவனுடைய சத்துருக்கள் யார்? நீதிமான்களுக்கு தீமை விளைவிக்கும் மக்கள், எளியவர்களை ஒடுக்கும் மக்கள், இவர்கள் யாரும் தேவனின்  பகைஞராகிவிடுகிறார்கள். அவர்களுக்குத்தக்க பலனை  சரிக்கட்டுகிறார். அந்த பகைஞர்களின் பலத்தை அறிந்து அவர்களை சரிக்கட்டுகிறார்.

 

"அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்". தேவனின் சத்துருக்கள் வெள்ளம்போல் வரும்போது அவர்களுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.  தேவனின் பிரசன்னம் வெளியாகும்போது அவர்கள் பயந்துநடுங்குவார்கள்.

 

"மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்". கர்த்தர் சீயோனில் வாசமாயிருக்கும் தன் மக்களை இரட்சிக்கிறார். யாக்கோபில் வாசமாயிருக்கும் மக்கள் மீறுதலைவிட்டுத் திரும்பும் போது அவர்களை ரட்சிக்கிறார். நாம் சீயோனில் குடியிருக்க வாஞ்சிக்கவேண்டும். 

 

"உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்". நமக்கு ஆண்டவர் அருளும் ஆசிர்வாதம்  அவர் அருளும் பரிசுத்தாவியானவரரும், நமது  வாயில் அருளிய அவரின்  வார்த்தைகளும் நம்மை விட்டு நீங்காமல் இருப்பதுதான். உங்களில் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியானவர் இந்த உலகத்தின் ராஜாக்களை விடவும், இந்த உலகத்தை ஆட்டி மக்களை அடிமைப்படுத்தும் உலகத்தின் கடவுளான சாத்தானை விடவும் மேலானவர்.