புதிய ஏற்பாட்டின் ஊழியங்கள்

எரேமியாவின் ஒன்றாம் அதிகாரத்தை தியானிப்போம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவ மக்களை பல அரசர்கள் ஆளும்போது தீர்க்கத்தரசிகளுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகுகிறது. அரசர்கள் அநீதியாக ஆட்சி செய்யும்போது தேவன் தனது தீர்க்கத்தரசிகள் மூலம் அந்த அரசர்களை எச்சரிக்கிறார்.

 

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

 

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்". நமக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகுவது நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்போது. அவர் நம்மிலும் நாம் அவரிலும் வேரூன்றி இருக்கும்போது கிறிஸ்துவின் வார்த்தை வெளிப்படுகிறது. வெறும் கிறிஸ்து உரைத்த வாக்குகளை தியானித்து பிரசங்கம் பண்ணும்போது அல்ல. கிறிஸ்து நம்மில் வெளிப்படவேண்டும்.

 

நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்டு, மனம்திரும்பி ஒரு ஆவிக்குரிய குழந்தையாக பிறக்கும்போது தேவன் உங்களை பரிசுத்தம்பண்ணி  ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிடுகிறார். அதற்கு முன்பே நீங்கள் சரீர பிரகாரமாக தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உங்களை அறிந்திருக்கிறார். இதுபோல இந்த உலகத்தில் கர்ப்பத்திலிருந்து வெளியாகும் எல்லா மக்களையும் அறிந்திருக்கிறார். ஆனால் பாவத்தில் பிறந்த மக்கள் மறுபடியும் ஆவியில் பிறக்கும்போது பரிசுத்தம்பண்ணபடுகிறார்கள். பின்பு இவர்கள் இந்த உலகத்தின் மக்களுக்கு (ஜாதிகளுக்கு) தேவனுடைய சத்தமாக நியமிக்கப்படுகிறார்கள்.

 

"அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன்.

 

ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக.

 

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி,

 

கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்". இன்று அநேக தேவபிள்ளைகள் "நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்" என்று சொல்கிறார்கள். கர்த்தர் உங்களை அனுப்புகிற எல்லாரிடத்திலும் போய் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீங்கள் பேசவேண்டும். நம்மை சுவிசேஷம் பிரசங்கிக்கும் படி கட்டளையிட்டிருக்கிறார். நீங்கள் பயப்படவேண்டாம்; உங்களைக்  காக்கும்படிக்கு தேவன் உங்களுடனே  இருக்கிறார். யாரும் உங்களை தொடமுடியாது. நீங்கள் என்ன பேசவேண்டும் என்பதை அவரின் வார்த்தைகளை உங்கள் வாயிலே வைக்கிறார்.

 

"பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்". எந்த பணியோ, ஊழியமோ, நிறுவனமோ ஆரம்பிக்கவேண்டுமானால் பழையவற்றை பிடுங்கி, இடித்து. அழித்து, கவிழ்ந்து, கட்டவும் நாட்டவும் வேண்டும். பழைய அஸ்திவாரத்தின் மேலே கட்டக்கூடாது. அதை பிடுங்கி, இடித்து, அழித்தபின்பு, புதிதாக அஸ்திவாரம் கட்டவேண்டும். கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலுள்ள மோசேயின்  நியாயப்பிரமாணம் என்ற அஸ்திவாரத்தை சிலுவையில் அழித்துவிட்டு புதிய அஸ்திவாரத்தை  கிருபையும் சத்தியமும் மூலமாகவும் உண்டாக்கினார் (யோ 1:17). அந்த பத்து கட்டளைகளை பிடுங்கி எறிந்துவிட்டு இரண்டு கட்டளைகளை புதிதாக கொடுத்து "கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்" (மத் 22:38-40). பழைய ஏற்பாட்டின் அடையாளமாகிய தேவாலயத்தின் திரைச்சீலையை இரண்டாகக்  கிழித்து "முடிந்தது" எனக்கூறி நமக்கு தேவனை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய வழியை திறந்துவிட்டார்.

 

இன்று அநேகர் ஊழியம் செய்ய ஆரம்பிக்கும்போது ஏற்கனவே கட்டப்பட்ட பழைய அஸ்திவாரமாகிய பழைய ஏற்பாட்டின் அஸ்திவாரத்தின் மேலே கட்டிவருகிறார்கள். தங்கள் மோசேயைப் போல மத்தியஸ்திகராக நின்றுகொண்டு ஒரு பழைய ஏற்பாட்டின் ஆசாரிய ஊழியத்தைத் தொடர்ந்து கட்டிவருகின்றனர். இருதயம் தேவனிடத்தில் இல்லாமல் பழைய ஏற்பாட்டின் ஆராதனையை  (வெறும் வாயிலிருந்து வரும் பாடல்கள்) செய்துவருகிறார்கள். பழைய ஏற்பாட்டின் தசம பாக காணிக்கையை கேட்டுப்  பெற்று வருகிறார்கள்.

 

நியாய பிராமணத்தின் 10 கட்டளைகளைக் கூட்டி இன்னும் அநேக கட்டளைகளைக் ஊழியர்கள் கொடுத்துவருகிறார்கள். இதை செய்யாதே. அதை செய்யாதே.

 

புதிய ஏற்பாட்டின் ஊழியம் வித்தியாசமானது. ஐந்து விதமான வெளிப்படையான ஊழியங்கள் இருக்கிறது. பின்பு யாரும் காணாதபடி சரீரத்தில் அவயங்களாக இருக்கும் அநேக ஊழியங்கள்  இருக்கிறது. நாம் காண்பதெல்லாம் ஆசாரிய ஊழியம் மாத்திரம். மேய்ப்பர்கள் என்ற pastors களை மாத்திரம். பின்பு சில பிரசித்தமான ஊழியர்கள் தங்களை தீர்க்கத்தரசிகள் என்று அழைத்துக்கொண்டு குறி சொல்லும் ஊழியத்தை செய்துவருகிறார்கள். யோவான் ஸ்னானகனைப் போல இவர்கள் வனாந்தரத்தில் இருக்கமாட்டார்கள். தேவ வசனத்திற்கு விரோதமான  கொள்கைகளை எதிர்க்காமல் தங்களுக்கு எங்கே அங்கீகாரம் கிடைக்கிறதோ அங்கே போய் அந்த சபை போதகரையும் மக்களையும் திருப்தி செய்யும்படி ஊழியம் செய்துவருகிறார்கள். அதேபோல சிலர் அப்போஸ்தலர் என்று அழைத்துக்கொண்டு ஒரே சபையில் pastor ஆக பணிபுரிந்து வருகிறார்கள். அநேக சுவிசேஷகர்கள் சில பிரபலமான சுவிசேஷகர்களைப் பார்த்து காப்பியடித்து ஊழியம் செய்துவருகிறார்கள். வெளிநாடு எப்படியாவது போவது இவர்களின் சொந்த ஆசை. 

 

ஒருவர் யூடியூபில் ஊழியம் செய்தால் அதை போல தானும் ஊழியம் செய்வது. ஒருவர் orphanage நடத்தினால் அதே போல ஒரு ஊழியம் செய்வது.

 

இன்று அநேகர் தங்கள் சொந்த கைகளால் ஊழியம் செய்யாமல் ஒரு கார்பரேட் கம்பெனிகள் போல சிலரை தங்களுக்கு கீழே அமர்த்தி தங்களுக்கு யார் பண உதவி செய்கிறார்கள் என்பதை கூட அறியாமல் தங்கள் அலுவலகத்தை நடத்திவருகிறார்கள்.

 

எனக்கு 40 வருடங்களாக கணவனை இழந்த ஒரு சகோதரியை பற்றி எழுத விரும்புகிறேன். இவர்கள் அதிகம் படித்தவர் அல்ல. ஆனால் தமிழில் நன்றாக எழுத முடியும். இவர்களுக்கு பண உதவி செய்வது சிலர் மாத்திரம். தன் சரீரத்தில் நீரழிவு நோயுடன் ஒரு பெரிய ஊழியம் செய்து வருகிறார்கள். வயது 80 வயது நெருங்கி வருகிறது. "டெபோரா" என்ற ஒரு அருமையான தமிழ் பத்திரிகை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களின் பெயர் கிரேஸ் சர்குணம். அநேக உபத்தரவத்தின் பாதையில் சிறு வயது முதல் கடந்து வந்தவர்கள்.

 

"பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார், வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

 

அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்". நீங்கள் எதை தீர்க்கதரிசன கண்களால் உங்களுக்கு ஆண்டவர் காண்பிக்கும்போது அதை நம்பவேண்டும். அப்போதுதான் ஆண்டவர் அவர் கொடுத்த வாக்குத்தத்ததை நிறைவேற்றுவார். 

 

"கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.

 

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்". இரண்டாம் தடவை கண்ட தரிசனத்தில் முதலில் கண்டதை எரேமியா காணவில்லை. இப்போது காண்பது பொங்குகிற பானை. இது காலியான பானை இல்லை. ஏற்கனவே இதில் ஏதோ வெந்துகொண்டிருக்கிறது. அதின் வாய் ஒரு திசையை நோக்கியிருக்கிறது. இந்த சரித்திரத்திலிருந்து நமக்கு வேண்டிய தீர்க்கதரிசனத்தை அறிந்துகொள்ளலாம். இந்த சரித்திர பகுதியில் வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும்" என்று எழுதப்பட்டிருக்கிறது. நமக்கு ஆசீர்வாதமோ அல்லது அழிவோ ஒரு இடத்திலிருந்து வரும். எல்லாவற்றையும் ஆண்டவர் வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.

 

15, 16 ம் வசனங்களில் யூத மக்கள்தேவனை விட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்டதால்  அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் தேவன் அவர்களை தண்டிக்கிறார்.

 

17-19 ம் வசனங்களில் தீர்க்கதரிசியை அரையைக் கட்டிக்கொண்டு நின்று, ஆண்டவர்  கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்கு அஞ்சாமல் தீர்க்கதரிசனம் உரைக்கச் சொல்லுகிறார். எரேமியா தீர்க்கதரிசியை  அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினார்.

 

தீர்க்கதரிசிக்கு விரோதமாக யுத்தம்பண்ணினாலும் அவனை  மேற்கொள்ளமுடியாது. அவனை இரட்சிக்கும்படிக்கு தேவன்  அவனுடனே இருக்கிறார்.

 

நாம் கற்றுக்கொள்ளவேண்டியது : நாம் தேவனின் எச்சரிப்பின்  செய்தியை கொடுக்கும்போது பயமில்லாமல் தைரியமாக கொடுக்கவேண்டும். இன்று தேவமக்களை எச்சரித்து வழிநடத்தும் ஊழியர்கள் மிகவும் கொஞ்சம் பேர் தான்.