தேவனின் மகத்துவமான காரியங்கள் 

ஏசாயா 64ம் அதிகாரம் தேவன் நமக்கு செய்யும் அதிசயங்களை வெளிப்படுத்துகிறது. வனாந்தரமாக மாறிய சீயோனையும் பாழாய்க்கிடக்கும்  எருசலேமையும் சீரமைக்கவேண்டும் என்றும் கூறுகிறது.

 

"ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,

 

தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்குமுன்பாக உருகும்படி செய்யும்.

 

நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின".  நமது சத்துருக்களுக்கு முன்பாக தேவனின் நாமத்தை தெரியப்படுத்தவேண்டும். தேவனை அறியாத ஜாதிகள் அவரின் சந்நிதிக்கு முன் தத்தளிக்க வேண்டும். நமக்காக தேவன் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை செய்கிறார். பரிசுத்தாவியானவர் ஏற்கனவே வானங்களைக் கிழித்திறங்கி நமது மத்தியில் இறங்கி வந்துவிட்டார். இப்போது அவர் நம்முள்ளில் வாசம் பண்ணுகிறார். பர்வதங்கள் போல தடையாக இருக்கும் காரியங்களை அவர் உருகிப்போக  செய்கிறார். நமக்கு அவர் செய்யும் பயங்கரமான காரியங்களை இந்த உலகத்திலுள்ள நமது சத்துருக்கள் கண்டு தத்தளிப்பார்கள்.

 

"தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை". தேவனின் வாக்களித்த அற்புதத்திற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்கிறோம். அப்படி காத்திருப்போருக்காக தேவன் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லாமல், செவியால் உணர்ந்ததுமில்லாமல் யாரும் கண்டதுமில்லாமல் அற்புதத்தை செய்கிறார்.

 

நாம் "மகிழ்ச்சியாய் நீதியைச்" செய்கிறவர்களாகவும், அவருடைய  வழிகளில் அவரை நினைக்கிறவர்களாகவும் இருக்கும்போது அவர் நம்மை  சந்திக்கிறார். ஆனால் நாமோ  அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்வோமானால், தேவரீர் கடுங்கோபங்கொள்வார். அப்படி பாவம் செய்து இப்போதும் உயிரோடு இருப்போமானால் நாம் "இன்னமும் தப்பியிருக்கிறோம்".

 

நாம் நமது பார்வையில் பரிசுத்தமானவர்கள் போல காணப்பட்டாலும் அவருடைய கண்களில் "தீட்டானவர்கள்போல இருக்கிறோம்". நம்முடைய "நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது". "நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது".

 

"உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களினிமித்தம் எங்களைக் கரையப்பண்ணுகிறீர்.

 

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

 

கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே". மேலே கூறியபடி, நம்மை தாழ்த்தி, நம்மை தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யவேண்டும். நாம் அவரின் கைகளில் உருவாக்கப்படும் களிமண், அவரின் கரத்தின்  கிரியை என வாயின் மூலம் அறிக்கை பண்ணவேண்டும்.

 

"உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க்கிடக்கிறது.

 

எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.

 

கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?". நமது முன்னோர்களின் பாவங்களை மன்னிக்கும்படி நாம் வேண்டுதல் செய்யவேண்டும். நாம் இப்போது வாழும் இருப்பிடம் தேவனால் சபிக்கப்பட்டு அழிக்கப்பட்ட வாசத்தலங்கள். நமக்கு வாசத்தலமோ சீயோன். கல்வாரியின் மூலம் நாம் பிரவேசிக்கும் தேசம் நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட சீயோன் நகரமாகும். ஆனால் "சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க்கிடக்கிறது" என தீர்க்கதரிசன வசனம் கூறுகிறது. நாம் சீயோனில் வாசம் பண்ணுவதற்கு நம்மை தகுதி ஆக்கிக்கொள்ளவேண்டும். யேசுவைப்போல வாழவேண்டும். பாழாய்ப்போன எருசலேமை (கிறிஸ்துவின் சரீரமான சபையை) சீர்படுத்தவேண்டும்