பரிதானமும் நியாயத்தைப் புரட்டுவதும்
Previous......Isaiah5part2
ஏசாயா 5 அதிகாரம் வசனங்கள் 21 – 30 வரை தியானிப்போம்.
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!
இன்று நாம் சற்று யோசித்தித்துப் பார்ப்போம். நமது பார்வைக்கு நாம் ஞானிகளாக தோன்றுகிறோமா? மற்றவர்கள் தான் நம்மை ஞானிகள் என்று தீர்ப்பு கூறவேண்டும். அபிஷேகம் பெற்று வரம் பெற்றவர்கள் என்று விளம்பரம் செய்கிறோமா? நாம் தான் வேத அறிவு பெற்றவர்கள் என்று புகழுகிறோமா? நமக்கு ஐயோ!
"சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!"
நாம் இந்த வசனங்களை புற ஜாதியினருக்கோ அல்லது ஆண்டவரை அறியாத மக்களுக்கு பொருந்தும் என எண்ணுகிறோம். இவைகள் நமக்குத்தான் முதலாவது பொருந்தும். இன்று நமது கிறிஸ்தவ மத தலைவர்களான பிஷப்புக்கள் ஆயர்மார்கள் மதுபானத்திற்கும் பரிதானம் வாங்குவதற்கும் குற்றவாளிகளாக இருக்கிறார்களா? நமது டயோசீசன்களின் கீழ் அநேக பள்ளிகளும் கல்லூரிகளும் இருக்கின்றன. இவைகளில் பணிகளில் அமர்த்துவதற்கு பரிதானங்கள் நன்கொடைகள் என்ற பெயரில் வாங்கப்படுகிறதா? கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்கான ஒதுக்கீடத்தில் லஞ்சம் வாங்கப்படுகிறதா? பள்ளிகளில் இட மாற்றம் கிடைப்பதற்கும் டயோசீசன் secretary ஐ அணுகி "நன்கொடை" கொடுக்கவேண்டுமாம்.
நமது கிறிஸ்தவ நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்கிறதா? எத்தனை பேர்கள் நீதிமன்றத்திற்கு போய் நீதிக்காக போராடுகிறார்கள். அவர்களின் நியாயத்தை தடுக்க அதிகாரிகளுக்கும் வக்கீல்களுக்கும் பணத்தை அள்ளிக் கொடுத்து குற்றவாளிகளான நிறுவனத்தாரை நீதிமான்களாக தீர்க்கிறோமா?
"இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள வசனத்தை அசட்டைபண்ணினார்களே.
ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது".
நாம் எங்கே நியாயத்தை புரட்டுகிறோமா அங்கே தேவக்கோபம் வெளிப்படுகிறது. இன்று பெந்தேகோஸ்தே சபைகளிலும் பணிபுரியும் போதகர்களுக்கு அந்த சபைகளின் தலைவர்கள் நியாயம் செய்வது கிடையாது. அந்த பணியாளர்களை சபைகளிலிருந்து நீக்கம் செய்து அந்த குடும்பங்களை தெருவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்? அவர்களின் குற்றங்களை மன்னிக்க மனதில்லாமல் அவர்களை dismiss செய்திருக்கின்றார்கள்?
இன்று இந்த கிறிஸ்தவ தலைவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள வசனத்தை அசட்டைபண்ணினார்களே! அவரது கைகள் இவர்களுக்கு விரோதமாய் நீட்டி இவர்களை தண்டிக்கின்றார். இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
26 - 30 வசனங்கள் வரை கர்த்தர் அவரின் வேதத்தை அசட்டை பண்ணிய தலைவர்களை எப்படி தண்டிக்கிறார் என்பதை அறியலாம். பெலமான அந்நிய ஜாதி மக்களின் மூலம், அதாவது கெர்ச்சிப்பு சிங்கம், பாலசிங்கங்கள் இரையைப் பிடித்து தப்புவிக்கிறவன் இல்லாமலிருப்பதுபோல , தனது ஜனங்களை அந்த பொல்லாத மனிதர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார்.
பின்வாங்கிப்போன சீயோனின் குமாரத்திகளை தேவன் அவர்களின் எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். இன்று ஒரு தேவ மனிதனுக்கு அநியாயம் விளைவித்த எந்த ஸ்தாபனமும் நிலைத்து இருக்காது. ஆண்டவர் ஒரு தப்பிப்போன ஆட்டை தேடிவந்து அந்த ஒரு ஆட்டிற்கு நியாயம் வழங்குகிறார். ஆண்டவரின் கோபம் அந்த ஆட்டிற்கு நீதி வழங்கும்வரை தணியாது. இன்று நமது கிறிஸ்தவ இயக்கங்கள் சபைகள் எல்லாம் அரசாங்கத்தின் scanner க்கு கீழே வருகிறது. ஒரு கிறிஸ்தவ NGO தனது ஊழியர்களுக்கு தீங்கு விளைவித்திருந்தால் ஆண்டவர் அந்த ஊழியர்களுக்காக போராடுவார்.
Next....Isaiah6 When will be revival