நம்மை ஆசிர்வதிக்கும் தேவன் 

 

ஏசாயா 60ம் அதிகாரத்தில் தேவன் நம்மை எப்படி இந்த உலகத்தில் ஆசிர்வதித்து வழிநடுத்துகிறார் என்பதை அறியலாம்.

 

"எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

 

இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

 

உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

 

சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

 

அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்". தேவனுக்காக அநேக ஆண்டுகள் காத்திருந்து, மனம் சோர்ந்து, விசுவாசத்தை இழந்து நிற்கும் உன்மேல் கிறிஸ்துவின் ஒளிவந்தது. அவரின் மகிமை உதித்தது. இந்த உலகத்திலுள்ள மனிதர்களின் மேலே இருள் சூழ்ந்திருக்க உன்மேல் அவரின் மகிமை வெளிப்படும்போது உன்னிடம் ராஜாக்கள் நடந்து வருவார்கள். உன்னைத்தேடி அவர்கள் வருவார்கள். உன்னிடம் நீ அறியாத குமாரர் குமாரத்திகள் உன்னை சேவிக்க வருவார்கள். அவர்கள் வளர்ந்து, ஆசிர்வதிக்கப்படுவது உன் நிழலில் தான். இயேசுவை உன் மூலமாக கண்டுக்கொள்வார்கள். உன்னிடம் கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும். ஆகவே எழும்பி பிரகாசி.

 

"ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.

 

கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.

 

மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?" நீ தேவனுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவருக்கு சாட்சியாக ஜீவிக்கும்போது இந்த உலகத்தின் பொக்கிஷங்களை தேவன் தருவார். அவைகளை நீ தேவனின் பலிபீடத்தின்மேல் வைத்து மக்களுக்கு சேவை பண்ணும்போது தேவனின் ஆலயத்தை அவர் மகிமைப்படுத்துவார். உனக்கென்று இந்த பலிபீடத்திலிருந்து எதையும் அபகரிக்காதே.

 

"தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்து கொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்". இந்த உலகத்தின் தூரமான மக்கள் முதல் எல்லா ஜாதிமக்களும் அவருக்குக் காத்திருப்பார்கள். இந்த உலகத்தின் பொன்னும் வெள்ளியும் அழிந்து போகும் ஆத்துமாக்களை இரட்சிக்கும்படி அநேகக் கப்பல்களை தேவன் உண்டுபண்ண அந்த கப்பல்கள் (ஊழியங்கள்) கிறிஸ்துவுக்காக தயாராக காத்திருக்கும். உனது கப்பல் இந்த யுத்தத்திற்காக தயாராக இருக்கிறதா? 


"அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன்".

 

தேவனை அறியாத மக்கள் நமக்கு பாதுகாப்பு அளிக்க மதில்களைக் கட்டி அவர்களின் ஆளுநர்கள் நம்மை சேவித்து ஊழியம் பண்ணுவார்கள். ஒரு காலத்தில் தேவன் நம்மை கடுங்கோபத்தினால் அடித்தார். ஆனாலும் அவரின் மட்டற்ற கிருபையினால் நமக்கு  இரங்குகிறார்  இதுதான் தேவன் நம்மேல் வைக்கும் அன்பு.

"உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்".

 

நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும்போது நம்மிடம் உலக ஆளுநர்களிடமிருந்து எல்லா அதிகாரங்களும் நமக்கு கொடுக்கப்படும். எந்த தடைகளும் இருக்காது.

 

"உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும்".

 

நம்மை சேவிக்காத எந்த மக்களும் அவர்களின் ராஜ்ஜியங்களும் நிச்சயமாய்ப் பாழாகும். இது நமக்கு கிடைக்கும் பெரிய சிலாக்கியம்.

 

"என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாரு விருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்".

 

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை நாம் அலங்கரிக்கும்படி தேவைக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் தேவன் கொண்டுவந்து அதை மகிமைப்படுத்துவார்.

 

"உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்".

 

உங்களை ஒடுக்கினவர்களின் சன்னதியார் முதல் அசட்டைபண்ணின யாவரும் உங்கள்  காலடியில் பணிந்து, உங்களை கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். என்ன பாக்கியம்.

 

"நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.

 

நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்". நாம் ஒரு காலத்தில் இந்த உலகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் எல்லாராலும் வெறுக்கப்பட்டிருந்தாலும் நாம் நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் தேவன் வைப்பார்.

 

"நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்". தேவன் நமக்கு ஆவிக்குரிய பொன்னும் வெள்ளியும் கொடுத்து அவரின்  வல்லமையும் கொடுத்து நமது தலைவர்களையும் நம்மை பாதுகாக்கும் அதிகாரிகளையும் தேவன் உயர்த்தி நீதியுள்ளவர்களாக மாற்றுகிறார்.

 

"இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்". உங்கள் வீட்டில் நோயின் கொடுமையோ சத்துருக்களின் கொடுமையோ, நோயின் அழிவோ, நாசமோ அல்லது சத்துருக்களின் அழிவோ, நாசமோ உங்கள் வீட்டின் எல்லைகளில் கேட்கப்படமாட்டாது. உங்களது இரட்சிப்பு உங்கள் வீட்டில் எப்போதும் தங்கும். உங்கள் வாசல்களில் தேவதூதர்களின் துதி இருந்துகொண்டே இருக்கும்.

 

"இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்".  துன்பங்களை அனுபவித்து வரும் தேவமக்களுக்கு சுகம் கொடுப்பது தேவனின் கதிர்களின் வெளிச்சத்திலிருந்து வரும் ஆரோக்கியமே. இயற்கைக்கு அப்பாற்பட்ட அவரின் கையின் கிரியையே.

 

"உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்". யேசுவே நமது சூரியனும் சந்திரனும் ஆக இருந்து நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறார். இந்த உலகத்திலே வரும் எந்த கொடிய வியாதியாக இருந்தாலும் நமக்கு நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக்கொடுத்து நமது துக்க நாட்களை முடிவுக்கு கொண்டுவருகிறார்.

 

"உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்". நம்மை மாத்திரம் அல்ல, நமது ஜனங்கள் யாவரையும் நீதிமான்களாக மாற்றி பூமியைச் சுதந்தரிக்க வழிநடத்துகிறார். நீங்கள்  நட்ட ஊழியங்கள் சேவைகள் தேவன் மகிமையடியும்படி அவரின்  கரங்களின் கிரியைகளுமாயிருக்கும்.

 

"சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்". ஆண்டவரின் கரத்தில் உங்களை தாழ்த்தி பெருமை பாராட்டாமல் சின்னவனாக இருக்கும்போது நீங்கள் ஆயிரமாக பெருகி உங்கள் தேசத்தில் பலத்த ஜாதியுமாவீர்கள். இதை தீவிரமாய் நடப்பிப்பது தேவன் மாத்திரமே. எந்த மனிதனையும் நம்பியிருக்க வேண்டாம். வாக்களித்த தேவன் தாமே தனது கரங்களின் மூலமாக உங்களுக்கு யாவையும் செய்துமுடிப்பார்.