கடைசி கால எழுப்புதல், இரண்டாம் வருகை, நியாயத்தீர்ப்பு 

ஏசாயாவின் இந்த கடைசி புத்தகத்தில் உலகத்தில் உண்டாகும் பெரிய எழுப்புதலைக் குறித்தும், இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், புதிய வானம் புதிய வானம் சிருஷ்டிக்கப்படுவதையும் குறித்தும், இரட்சிக்கப்படாதவர்கள் நரகத்தில் வேதனை அனுபவிப்பதைக் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.

 

"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

 

என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்". இந்த தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டிலே காணப்படுகிறது. அப்போதுள்ள எருசலேமின் தேவாலயத்தில் தேவன் தங்கவில்லை. அங்கேயுள்ள உடன்படுக்கை பெட்டி ஒரு அடையாளமாகத்தான் இருந்ததே, அல்லாமல் தேவனின் பிரசன்னத்தை சுமந்து வந்த ஒரு வாகனமாக இல்லை. ஆனாலோ புதிய ஏற்பாட்டின் கீழே உட்பட்டிருக்கும் நாமோ விண்ணை எட்டும் தேவாலயங்களையும் கட்டிடங்களையும் கட்டி தேவன் இந்த கட்டிடத்தில் வெளிப்படுத்துகிறார், இங்கே வந்து நாம் ஜெபிக்கவேண்டும் என்று கூறி மக்களை திசை திரும்புகிறோம். பழைய ஏற்பாட்டின் எருசலேமின் தேவாலயம் தேவன் சாலமோனுக்கு கொடுத்த கட்டளையின் படி கட்டப்பட்டது. தேவனின் கரம்  இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததாம். எவ்வளவு உயரம், எவ்வளவு தூண்கள், என்று விபரமாக ஆண்டவர் சாலொமோனிடம் கூறினார். ஆனால் அந்த ஆலயத்தில் அவர் தங்கவில்லை. அங்கேயிருந்து ஏறெடுக்கும் ஜெபங்களை அவர் கேட்டு பதிலளித்தார். "சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்" என்று தேவன் சொல்லுகிறார். அந்த பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, அவரின் வசனத்துக்கு நடுங்குகிறவனையே ஆண்டவர் நோக்கிப்பார்ப்பாராம். அந்த காலத்தில் தேவ கட்டளைகள் ஒரு scroll ல் யூதர்களின் ஜெப ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்தது. எல்லோராலும் அதை படிக்க முடியாது. தேவனது தீர்க்கதரிசன சத்தம் அரிதாக காணப்பட்டது. ஆனாலோ, நமக்கு தேவனின் வார்த்தை எழுத்துக்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த தேவனின் வார்த்தையை தியானித்து இன்று நாம் அவருக்கு நடுங்குகின்றோமா?

 

எங்கேயோ தேவ பிரசனத்திற்காக தேடி எந்த பட்டணத்திற்கோ, தேவாலயத்திற்கோ ஓடவேண்டாம். பரிசுத்தாவியானவரை நமக்கு தந்தருளி நம்மில் வாசம் பண்ணுகிறார். ஒரு சபையில் ஒன்றுகூடி ஐக்கியம் வைத்துக்கொள்ளலாம். ஆனால் தேவன் அங்கே தன்னை வெளிப்படுத்துகிறார் என்று நம்பவேண்டாம்.

 

"மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது". தேவபயம் இல்லாமலும், தேவனையும் அவரின் சத்தியத்தையும்  உண்மையாக அறியாமலும் இருந்து, தேவனை பிரியப்படுத்த நாம் நமது உடமைகளை விற்றோ, காணிக்கை கொடுத்தோ பலியிடலாம்; சடங்காச்சாரத்தைப் பின்பற்றி பலி செலுத்தலாம்; மற்ற மனிதர்களின் வாழ்வாரத்தையும், வாழ்வையும் அழித்து நாம் தேவனுக்குக் காணிக்கை கொடுக்கலாம். மாட்டையோ, ஆட்டையோ நாம் பலி செலுத்தினாலும் அந்த பலிகள் மனிதனை கொல்லும் பலியாகவோ, தேவன் வெறுக்கின்ற நாய், பன்றி போன்ற அசுத்த மிருகங்களை பலியிடும் காரியங்களாக தேவன் கருதுவார். தேவனை வழிபட்டாலும் அந்த வழிபாடு விக்கிரக வழிபாடாக தேவன் கருதுவார். தேவன் இந்த மக்களை வெறுக்கிறார் ஏனென்றால் இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.

 

மேலே கூறப்பட்ட மக்களின் கூப்பிடுதலை தேவன் கேட்கமாட்டார். "நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்". அவர்கள் தேவனின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவர்  விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுகிறார். தேவனின் பயங்கரமான நியாயத்தீர்ப்பு! நமது ஆபத்தை தெரிந்துகொள்வாராம். என்ன ஆபத்துக்கு நாம் பயந்து நடுங்கிறமோ அந்த ஆபத்தை தெரிந்துகொண்டு திகில்களை வரப்பண்ணுகிறாராம்.

 

"கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்". நாம் எப்போது கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறோமோ, நம்மை பகைக்கும் நமது சகோதரரை வெட்கப்படும்படி செய்வார். நம்மை பகைக்கும் பகைவரையோ தேவன் அழிப்பார். அதே நேரம் நம்மை பகைக்கும் சகோதரரை வெட்கபடச்செய்வார்.

 

"நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே". தேவன் நமது சத்துருக்களை அழிக்கும்போது நகரத்திலிருந்து அமளியின் இரைச்சல் கேட்கப்படும். இன்று கிறிஸ்தவமக்கள் சிலுவையின் விரோதிகள் துன்புறுத்தும்போது அந்த பட்டணத்திலுள்ள மக்களை தேவன் தண்டிக்கிறார். தேவாலயத்திலிருந்து அந்த ஒடுக்கப்பட்ட தேவமக்களின் சத்தத்தை ஆளும் அதிகாரிகள் கேட்டு நியாயம் செய்வார்கள்.

 

"பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.

 

இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.

 

பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்". இஸ்ரவேல் நாடு உருவாகும் இந்த தீர்க்கதரிசன சம்பவம் சரித்திரத்தில் நிறைவேறிவிட்டாலும், கிறிஸ்துவின் சரீரமான சபைக்கு இப்போதும் பொருந்தும். தேவமக்கள் அதிக பாரத்துடனும் கண்ணீரோடும் கர்ப்பவேதனை அடைவதுபோல விண்ணப்பம் பண்ணும்போது, ஆண்பிள்ளையைப் போல ஒரு கூட்டத்தார் இரட்சிக்கப்பட்டு ஆவியில் பிறக்கிறார்கள். ஒரே ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? ஒரு ஆவிக்குரிய எழுப்புதல் மூலம் ஒரு வல்லமையான தேவ ஊழியரின் கூட்டம் குறிகிய காலத்தில் உருவாக்கப்படுகிறது.  இந்த ஆண் குழந்தையை  பெறப்பண்ணுகிறவர் கிறிஸ்து. இதை கிறிஸ்து தடை செய்வாரா? இந்த தீர்க்கதரிசன வசனத்தை ஆதாரமாக வைத்து நாம் ஜெபிக்கவேண்டும்.

 

"எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.

 

நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்". இன்று கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எல்லா தேசங்களிலும் ஒடுக்கப்பட்டு பிரசவவேதனை அடைந்துவருகிறது. நாம் இந்த சபையை நேசிக்கவேண்டும். எப்போது உயிர் மீட்சி  வருகிறதோ அப்போது நாம் மகிழலாம். அப்போது இந்த சபையின் மகிமையை காண்போம். இந்த உயிர்பிக்கப்பட்ட சபை "ஆறுதல்களின் முலைப்பாலை" ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் கொடுக்கும்.

 

"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.

 

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

 

நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்". மேலே கூறியபடி உயிர்மீட்சி அடைந்த சபையின் மூலம் ஒரு தேசத்திலும்  சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அந்த சபையிலிருந்து  பாயும்படி தேவன் செய்வார். அப்போது அந்த சபையின் மூலம்  ஒவ்வொரு தேவபிள்ளையும் சத்துள்ள ஆவிக்குரிய "முலைப்பால்" குடிப்பார்கள்; "இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவார்கள் ; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவார்கள். அப்போது ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் கிறிஸ்து நம்மைத் தேற்றுவார் ; நாம்  எருசலேமிலே தேற்றப்படுவோம்.

 

"நீங்கள் அதைக் (அந்த உயிரமீட்சியை) காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்". அப்போது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரம் வெளிப்படும். இந்த எழுப்புதலைக்  கொண்டுவருவது தேவனின் செயல் மூலமே. நமது சத்துருக்கள் தேவனின் சினத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.

 

"இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.

 

கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்". யேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அவரை ஏற்றுக்கொள்ளாது உலக மக்கள் தண்டிக்கப்படுவார்கள். கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.

 

"தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்". அந்த இரண்டாம் வருகையில் நடப்பது இதுதான். அருவருப்பான பாவங்களை செய்து வருபவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாக ஒன்று சேர்ந்து மகிமையில் வெளியாகும் குமாரனுக்கு விரோதமாக யுத்தம் செய்து ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள்.


"தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்". பழைய ஏற்பாட்டின் காலத்தில் தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்கள், சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்கள் அருவருப்பான பாவங்களையும் விக்கிர வழிபாடு செய்கிறவர்களாகவும் இருந்தார்கள். அவர்களை தேவன் சங்கரித்தார். புதிய ஏற்பாட்டின் கீழே நம்மை பரிசுத்தப்படுத்துபவர் நம்மில் வாசம் செய்யும் பரிசுத்தாவியானவர். அவரின் ஆளுமைக்கு சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும். மனம் திரும்பாமல், இருதயத்தை கடினப்படுத்தி, பாவத்திலே வாழ்வோமானால் பரிசுத்தாவியானவர் நம்மை சங்கரித்துவிடுவார்.

 

"நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்". ஆண்டவர் எல்லா மக்களின் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறார். அந்த சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்த்து தன் மகிமையை வெளிப்படுத்துவார். அந்த காலம் சமீபமாக  இருக்கிறது இது கடைசி காலத்தில் நடக்கும் எழுப்புதல்.

 

"நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள்". அந்த எழுப்புதல் வரும்போது தனது மக்களின் நடுவே ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவார். அது ஒரு உபத்திரவ காலத்தின் அடையாளம். அந்த உபத்திரவங்களிலிருந்து தப்பிச்  செல்லும் ஊழியர்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்குப்போய் ஊழியம் செய்யும்போது தேவனின் மகிமையை இந்த உலகம் காணும்.

 

"இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்". அந்த கடைசி கால எழுப்புதலில் இரட்சிக்கப்படும் மக்கள் தேவாலயங்களில் கூடி தேவனை ஆராதித்து தங்களின் பொக்கிஷங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்க அது தேவனுக்கு முன்பாக காணிக்கையாகக் கருதப்படும். அந்த பொக்கிஷங்கள்  சுத்தமான பாத்திரத்தில் கொண்டுவருவார்கள் . ஊழல், அநியாயம் மூலம் சம்பாதிக்காமல் தங்களின் சொந்த உழைப்பால் சம்பாதித்து காணிக்கையாக சபைகளுக்கு கொண்டுவருவார்கள். அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போல இப்போதும் நடக்கும்.

 

"அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்". அப்படி சபையில் சேர்க்கப்படும் தேவமக்களில்  சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வார்.

 

"நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

 

அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்".  கர்த்தரராகிய இயேசு  அக்கினியோடும் இந்த உலகில் வந்த பின்பு, தேவன் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் அவருக்கு முன்பாக நிற்கும். இரண்டாம் வருகையில்  இயேசுவோடு சேர்த்துக்கொள்ளப்படும் தேவமக்கள் இந்த புதிய வானத்திலும் புதிய பூமியில் பிரவேசித்து தேவனை மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும் தொழுதுகொள்வார்கள்,

 

இயேசுவை நிராகரித்த, தேவனுக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் இரட்சிக்கப்பட்ட தேவமக்கள் பார்ப்பார்கள். அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டு அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்.