உண்மையான தேவனுக்கு உகந்த உபவாசம் 

 

ஏசாயா 58ம் அதிகாரம் உபவாசத்தின் தேவ வார்த்தை என்று கூறலாம்.

 

"சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி". இன்று நாம் மிகவும் தவறிப்போகும் ஊழியம் தீர்க்கதரிசனம் தான். தேவ ஜனத்திற்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் அறிவிக்க எக்காளத்தைப்போல் நம்  சத்தத்தை உயர்த்தாமல், தேவன் பார்த்துக்கொள்வார், நாம் யாரையும் நியாயம் தீர்க்கவேண்டாம், ஜெபித்தால் போதும் என்று மௌனமாக இருக்கிறோம். ஆனால் நம்மிடம் இந்த குறைகளை வைத்துக்கொண்டு அவர்களை நியாயம் தீர்க்கக்கூடாது.

 

"தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்". தேவன் விரும்புவது நாம் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்து, அவரின்  வழிகளை அறிய விரும்புவோம். நீதி நியாயங்களை நாம் விசாரிக்க அவர் என்ன சொல்கிறார் என்பதை அவரின் வார்த்தை மூலம் அறிந்துக்கொள்ளவேண்டும். நாம்தான் நீதி நியாயங்களை விசாரிக்கவேண்டும். எது நமது கடமையாகும்.

 

இன்று நாம் உபவாசம் எல்லோரும் காணும்படி உபவாசக்கூட்டம் ஒழுங்கு செய்கிறோம். அந்தரங்கத்தில் உபவாசம் செய்வது கிடையாது.


"நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்". உபவாசிக்கும் நாளிலே தேவனுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை செய்கிறோம். நமது இச்சையின்படி நடந்து, வேத வசனத்தின் படி நடவாமல், ஆண்டவர் நமது ஜெபங்களை கேட்பதில்லை, நமது துன்பங்களை அறியாமலிருக்கிறார் என்று முணுமுணுப்பு செய்கிறோம்.

 

"இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்". மற்றவர்களை பழிவாங்கவேண்டும் என்றும், நமது விரோதிகளை தேவன் அழிக்கவேண்டும் என்றும், கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய் உபவாசிக்கிறோமா?

 

"மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?". நானும் மற்றவர்கள் 40 நாட்கள் உபவாசம் செய்வதுபோல செய்தால் தான் ஆண்டவர் என் ஜெபத்தைக்கேட்பார் என்று எண்ணி உங்கள் ஆத்துமாவை ஒடுக்கி அறையில் படுத்து இது கர்த்தருக்குப் பிரியமான நாளென்று சொல்கிறோமா?

 

"அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்", என்று நம்மை சுற்றிலும் மக்கள் அக்கிரமத்தின் கட்டுகளுக்கு அடிமையாகி இருப்பதும், அநீதி என்ற கயிற்றால் கட்டப்பட்டு விடுதலை பெறமுடியாமல் மக்கள் இருப்பதும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா. சமூக கொடுமைகளுக்குள் சிக்கப்பட்டு இருக்கும் மக்களை விடுதலை செய்ய முயற்சி எடுத்தீர்களா? இன்று கிறிஸ்தவ சபைகள் பெருகி இருக்கிற காலத்தில் சமூக விரோதமான காரியங்களுக்கு விரோதமாக தெருவில் இறங்கி போராடுகிறோமா? வெறும் உபவாசக்கூட்டங்கள் மாத்திரம் சபைகளில் வைத்து தேவனை பிரியப்படுத்த விரும்புகிறோமா?

 

"பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்". இந்த ஊழியத்தில் நாம் தவறிவிடுகிறோம். சீக்கியர்கள் தங்கள் கோயில்களில் லங்கார் நடத்தி பசியுள்ளவர்கள் 24 மணிநேரமும் அங்கே உணவும் உறைவிடமும் பெருகிறார்களே! நமது சபைகள் ஆறு நாட்கள் அடைக்கப்பட்டு ஏழாவது நாள் மாத்திரம் திறந்து வைக்கின்றோம். துரத்துண்ட சிறுமையானவர்களை நமது சபையில் சேர்த்துக்கொள்ளுகிறது கிடையாது. வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறோமா? எது அல்லவோ தேவனுக்கு உகந்த உபவாசம்.

 

"அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

 

அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.

 

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

 

உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்."

 

 முந்தின வசனங்களில் எப்படி உபவாசம் செய்யவேண்டும் என கூறிய காரியங்களை நாம் கடைபிடிப்போமானால் நாம் கூப்பிடும்போது கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார். உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும். இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.

 

"என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

 

அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று". நமக்கு ஓய்வு நாள் என்றால் வாரத்தில் உள்ள எல்லா ஏழு நாட்களும் தான். நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது ஓய்வு பெறுகிறோம். எந்த எல்லா நாட்களிலும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். வீடாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும்  உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்தும் ஆண்டவர் விரும்பும் காரியங்களை மாத்திரம் செய்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயாக!

 

அப்போது  பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பார்.

 

இந்த வசனங்களை "கர்த்தருடைய வாய் சொல்லிற்று".  கவனமாக பின்பற்றவும்.