A1-KALKI ON SAKUNTHALAI FILM

http://www.msstribute.org/articles/articles-kalki-on-sakuntalai.php

'சகுந்தலா'வின் பொன்விழா

கல்கி, பிப்ர 16, 1942

''தங்கமான படத்துக்குத் தங்க விழாக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமே'' என்று ஒரு தங்கமான மனுஷர் கூறினார். ''சகுந்தலா''வின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணசாமி ஐயர் அவர்கள் சொன்னதைத்தான் குறிப்பிடுகிறேன். சென்னை நகரில் ஐம்பது வாரம் மேற்படி படம் ஓடியதை முன்னிட்டு, சென்ற வாரத்தில் சினிமா சென்ட்ரலில் பொன்விழாக் கொண்டாட்டம் நடை பெற்றது. விழாவில் தலைமை வகித்த திருப்புகழ் மணி அவர்கள், படத்தின் அருமை பெருமைகளைப் பாராட்டித் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மனமுவந்து ஆசி மொழிகளையும் கூறினார்கள்.

இந்த வைபவத்துக்கு நான் போயிருந்த சமயத்தில், ''சகுந்தலா'' படத்தை முதன் முதலில் நான் பார்த்து விமரிசனம் எழுதியது சம்பந்தமான பழைய ஞாபகங்கள் ஏற்பட்டன. மேற்படி விமரிசனம் நான் சிறையிலிருந்த சமயத்தில் பல பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதே விமரிசனத்தைக் ''கல்கி'' யிலும் வெளியிட வேண்டுமென்று நமது பத்திரிகை ஆரம்பித்த புதிதில் பல நேயர்கள் எழுதியிருந்தார்கள். அதைக் காட்டிலும், மேற்படி விமரிசனத்தை நான் எழுத நேர்ந்த வரலாற்றை வெளியிடுவது ரஸமாயிருக்கலாமென்று கருதினேன். அதற்கு இந்தப் பொன்விழா சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மனிதன் எப்படி உயர்கிறான்?

சென்ற 1941ம் வருஷ ஆரம்பத்தில் நான் சத்தியாக்ரஹம் செய்வதற்குச் சித்தமாகிக் கொண்டிருந்த சமயத்தில் ''சகுந்தலா'' படத்தை எடுத்த ஸ்ரீ. டி. சதாசிவம் என்னைப் பார்க்க வந்தார். அவரும் நானும் பழைய சிறைச்சாலை நண்பர்கள். 1922ல் என்னைத் திருச்சி சென்ட்ரல் ஜெயிலுக்குள்ளே கொண்டுவிட்டு, வெளிக்கதவைச் சாத்தியபோது, நான் திக்குத் திசை புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே ஸ்ரீ சதாசிவம் வந்து, ''நீங்கள் தானே...? கரூரில் கைதியாகி வந்தவர்?'' என்று கேட்டுக் கொண்டே என் கையைப் பிடித்து அரசியல் கைதிகள் இருந்த பகுதிக்கு அழைத்துப் போனார். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு.

மறுபடியும் 1930ல் நாங்கள் தற்செயலாக ஒரே சிறையில் சந்தித்துச் சில காலம் சந்தோஷமாய்க் கழித்தோம்.

இப்போது நான் மறுபடியும் சிறைக்குப் போகிறேன் என்று அறிந்ததும் ஸ்ரீ சதாசிவம் வந்து, ''இந்தத் தடவை நான்தான் ஜெயிலுக்கு வருவதற்கில்லை; உங்களையாவது அனுப்பிவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி, 21 நாள் என் கூடவே இருந்து, சிறைக் கதவு என் பேரில் சாத்தப்பட்ட பிறகுதான் திரும்பிப் போனார்!

சத்தியாக்கிரஹம் செய்வதற்கு மூன்று நாளைக்குமுன் திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை உற்சவத்துக்கு நாங்கள் போயிருந்தோம். ஆராதனைக்குப் பிறகு சதாசிவம் என்னைப் பார்த்து, ''தஞ்சாவூரில் 'சகுந்தலா' படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பார்க்கிறீர்களா?'' என்று கேட்டார். டாக்கி பார்ப்பதற்குரிய சந்தர்ப்பம் இதுவல்ல என்று நான் மனதில் எண்ணியபோதிலும், ''இராத்திரி எப்படியும் மாயவரம் போய்விட வேண்டும்; இப்போது உடனே படத்தைக் காட்டினால் பார்க்கிறேன்'' என்றேன். அந்தப்படியே அவர் ஏற்பாடு செய்தார்.

படம் பார்ப்பதற்கு உட்கார்ந்தபோது நான் அதிகமாய் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படப் பிடிப்பின் போது ஏற்பட்ட இடையூறுகளைப் பற்றி அறிந்திருந்தபடியால், படம் சாதாரணமா இருக்குமென்றுதான் எண்ணினேன். ஆனால், கண்வருடைய ஆசிரமத்தில் 'எங்கும் நிறை நாதப்பிரம்மம்' என்ற பாட்டைச் சகுந்தலை பாட ஆரம்பித்ததும், என் எண்ணம் மாறிவிட்டது. போகப் போக வியப்பும் பிரமிப்புமாயிருந்தது. படம் முழுவதிலும் கானாமுத வெள்ளம் பொங்கிப் பெருகி ஓடியது மட்டுமல்ல; 'சகுந்தலை'யின் நடிப்புத் திறமைதான் அதிகமான பிரமிப்பையளித்தது. உயர்ந்த ஹிந்தி படங்களிலும் இங்கிலீஷ் டாக்கிகளிலும் தோன்றும் நட்சத்திரங்களின் நடிப்புக்கு அவருடைய நடிப்பு எவ்விதத்திலும் குறைவாயிருந்ததாக நான் நினைக்கவில்லை. இன்னும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் எல்லாரும், குழந்தை ராதா வரையில், பெரும்பாலும் நன்றாக நடித்திருப்பதாகவே தோன்றியது.

என்னதான் உயர்ந்த சங்கீதமும் சிறந்த நடிப்புத் திறமையும் இருந்தாலும், கதைப் போக்கையும் சம்பாஷணையையும் கீழ்த்தரமாக்கி, சம்பந்தமில்லாத ஆபாசங்களைப் புகுத்தி, மொத்தத்தில் டாக்கியைப் குட்டிசுவராக்கியிருக்கலாம். அப்படியில்லாமல் நெடுகிலும் எல்லாவிதத்திலும் உயர்தரமாகவே படம் அமைந்திருந்தபடியால் என்னுடைய மகிழ்ச்சி பன்மடங்காயிருந்தது. இவ்வளவு உயர்தரமான தமிழ்ப் படம் ஒன்றைக் கொண்டு வந்ததின் பொருட்டு என் நண்பரை மனதாரப் பாராட்டினேன்.

.......

சிறையிலிருந்து வெளிவந்ததும், நான் தெரிந்து கொள்ள விரும்பிய அநேக விஷயங்களில் ''சகுந்தலா'' படம் எப்படி ஓடிற்று என்பதும் ஒன்று. மாயவரத்தில் என் நண்பர் ஒருவர், ''இங்கே சகுந்தா ஓடுகிறது; படம் அபாரம்'' என்றார். அவர் படித்த மனுஷர்; பொறுப்புள்ள உத்தியோகத்திலுள்ளவர். ''அப்படியா? நீங்கள் பார்த்தீர்களா?'' என்றேன். ''பார்த்தீர்களா என்று கேட்கிறீர்களே! இந்த ஊரில் 45 தடவை பார்த்தேன். அப்புறம் சென்னைக்குப் போனபோது பிரபாத்தில் எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக அங்கே ஒரு தடவை பார்த்தேன்!'' என்றார். நான் இதை நம்பாததைக் கண்டு அவர் சத்தியம் செய்தார்! பொதுவாகத் தமிழ் நாடெங்கும் ''சகுந்தலா'' விஷயத்தில் மக்களின் அபிப்பிராயம் என்னுடைய அபிப்பிராயத்தை யொட்டியே இருந்தது என்று அறிய மிகவும் திருப்தி ஏற்பட்டது.

ஆனால் சென்ற வாரத்தில் நடந்த பொன் விழாக் கொண்டாட்டத்தில் ''சகுந்தலை''யை நான் மறுபடியும் பார்த்தபோது, பழைய அபிப்பிராயத்தை ஓரளவு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமென்று நினைத்தேன். அதாவது இந்தப் படத்துக்கு என்னுடைய பாராட்டுதல் போதாது - இன்னும் அதிகமாய்ச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முக்கியமாக ஸ்ரீமதி எம்.எஸ்.ஸின் நடிப்பைக் குறித்து நான் சொன்னது போதவே போதாதுதான். ''சகுந்தலா'' படத்தில் அவர் பாடியிப்பதைவிட இன்னும் எவ்வளவோ உயர்வாக இப்போது கச்சேரிகளில் அவர் பாடுகிறார். ஆனால், இந்தப் படத்தில் அவர் நடித்திருப்பதைக் காட்டிலும் சிறந்த நடிப்பை நாம் இதுவரையில் எங்குமே பார்த்தது கிடையாது. பேச்சினாலும் பாட்டினாலுங்கூட வெளிப்படுத்த முடியாத இருதய உணர்ச்சிகளையெல்லாம் முகபாவத்தினாலேயே அல்லவா வெளிப்படுத்தி விடுகிறார்? படத்தின் முதற் பகுதியில் வரும் காதல் காட்சிகளில், அவருடைய முகத்தில் வியப்பு, பயம், நாணம், இன்பம் ஆகிய உணர்ச்சிகள் மாறி மாறியும் ஏககாலத்திலும் எவ்வளவு ஆச்சர்யமாகப் பிரதிபலிக்கின்றன! ராஜ சபைக் காட்சியில், ''அடபாவி!'' என்று ஆரம்பிக்கும் போது முகத்தில் கொதிக்கும் கோபம் ஒரு கண நேரத்தில் அளவிறந்த துக்கமாக மாறிவிடும் அற்புதத்தை என்னவென்று சொல்வது? கடைசிக் காட்சியில், துஷ்யந்தன் மனம் மாறியவனாய் வரும்போது, சகுந்தலையின் உள்ளத்தில் சுயகெளரவமும் பதிபக்தியும் ஆத்திரமும் ஆனந்தமும் ரோஸமும் கருணையும் போராடுவதை அவருடைய முகபாவம் எவ்வளவு தெளிவாய்க் காட்டிவிடுகின்றது!

''சகுந்தலை'' ஒரு சிரஞ்சீவிப் படம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தப் படத்தை ஒரு தடவையேனும் பார்த்த ரஸிகர்களின் உள்ளத்தில் அது எப்போதும் நிலை பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.