74-பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்

https://youtu.be/ZEk3_SfmpJU

from (/www.lakshmansruthi.com/)

பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்

பாரத நாடு

சரணங்கள்

1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்

மானத்தி லேஅன்ன தானத்திலே

கானத்தி லேஅமு தாக நிறைந்த

கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

2.

தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்

ஈரத்தி லேஉப காரத்திலே

சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு

தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

3.

நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்

பன்மை யிலேமறத் தன்மையிலே

பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்

புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

4.

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய

வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே

காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்

கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

5.

வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்

தண்மையி லேமதி நுண்மையிலே

உண்மையி லேதவ றாத புலவர்

உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

6.

யாகத்தி லேதவ வேகத்திலே-தனி

யோகத்தி லேபல போகத்திலே

ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்

அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

7.

ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்

காற்றினி லேமலைப் பேற்றினிலே

ஏற்றினி லே பயன் ஈந்திடும் காலி

இனத்தினிலே உயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

8.

தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி

ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே

தேட்டத்தி லேஅடங் காத நிதியின்

சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)