முதல் நாள்:
தூய ஆவியே எழுந்தருள்வீர், வானினின்று உமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
வாசகம்: உரோமையர் 8 : 18 – 23, 26
தூய ஆவியார்:
நிலைவாழ்வு மட்டுமே நமக்கு முக்கியமான ஒன்று. பாவத்திற்கு மட்டுமே நாம் பயப்பட வேண்டும். அறியாமை, பலவீனம், அலட்சியம் ஆகியவற்றின் விளைவே பாவம். தூய ஆவியார் – ஒளியின் ஆவி, வலிமையின் ஆவி, அன்பின் ஆவி. அவரது ஏழு கொடைகளால் அவர் நம் மனதை விழிப்பூட்டுகிறார், நம் சிந்தனையை வலுப்படுத்துகிறார், நம் இதயத்தை கடவுளின் அன்பால் பற்றி எரியச் செய்கிறார், நம் மீட்பை உறுதிப்படுத்த நாம் தினந்தோறும் கடவுளின் ஆவியாரைத் தூண்டி எழுப்ப வேண்டும், ஏனெனில் "பலவீனத்தின் உதவி அவரே”. நாம் எதற்காக செபிக்க வேண்டுமென்று நாமே அறியாதிருக்கிறோம். தூய ஆவியாரே நமக்காக செபிக்கிறார்.
செபம்:
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனே, தண்ணீரினாலும் தூய ஆவியாராலும் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வல்லவரே, எங்களது எல்லா பாவங்களையும் மன்னித்தவரே, விண்ணகத்திலிருந்து உமது ஏழு கொடைகளான ஞானத்தின் ஆவி, புரிந்துணர்வின் ஆவி, ஆலோசனையின் ஆவி, மனவலிமையின் ஆவி, அறிவின் ஆவி, இறை பக்தியின் ஆவி, தேவ பயத்தின் ஆவி ஆகியவற்றை எங்கள் மேல் நிறைவாகப் பொழிந்தருளும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
இரண்டாம் நாள்:
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்! நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்! வாழ்வோரின் இருதய ஒளியே வந்தருள்வீர்.
வாசகம்: யோவான் 14 : 15 – 17, 26 – 27
இறை அச்சம் என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் இறை அச்சம் என்னும் கொடை, நாம் கடவுள் மீது இறையாண்மை கொண்ட மரியாதை கொள்ள நம்மை நிரப்பி, நமது கொடிய பாவத்தினால் நாம் கடவுளுக்கு எவ்வித வருத்தமும் விளைவிக்காமல் இருக்கச் செய்கிறது. இது, நமது சிந்தனையிலிருக்கும் நரகத்தைப் பற்றிய அச்சமல்ல. நமது விண்ணகத் தந்தையின் மேலுள்ள இறை பக்தியின் உணர்வினாலும், நாம் அவரது பிள்ளைகள் என்ற மரியாதையினாலும் எழுகின்ற அச்சம். இதுவே நம்மை இவ்வுலகச் சிற்றின்பங்களிலிருந்து பிரித்து, எவ்விதத்திலும் கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது ஞானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் அச்சம். "கடவுளுக்கு அஞ்சுவோர் தங்கள் இதயத்தைத் திடப்படுத்தி, அவருடைய கண்களுக்கு முன்பாகத் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வர்."
செபம்:
ஓ தெய்வீக இறை அச்சத்தின் ஆவியாரே வாரும், வந்து என் உள்மனதை ஊடுருவி, என் கடவுளும் ஆண்டவருமாகிய உம்மை நோக்கி என்றென்றும் என் முகத்தைத் திருப்பி, உம்மை வருந்தச் செய்யும் எல்லா செயல்களைக் களையும்படிச் செய்து, விண்ணகத்தில் உம்முடைய தெய்வீக மகத்துவத்தின் தெளிவான கண்களுக்கு முன்பாக என்னைத் தகுதியுள்ளவராக்கியருளும். மூவொரு கடவுளின் ஒன்றிப்பில், உலகம் முடியும் வரை என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
மூன்றாம் நாள்:
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மையும் தருபவரே வந்தருள்வீர்.
வாசகம்: 1 கொரிந்தியர் 12 : 12 – 14, 27
இறை பக்தி என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் இறை பக்தி என்னும் கொடை, நம் இருதயங்களில் நம் அன்பான தந்தையாம் கடவுளிடம் ஒரு அன்பான பாசத்தை உண்டாக்குகிறது. அது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மக்களையும் பொருட்களையும், அவரது அதிகாரம் பெற்றவர்களையும், இறைவனின் தாயாகிய அன்னை மரியாவையும், புனிதர்களையும், திரு அவையையும், அதன் தலைவர்களையும், நம் பெற்றோரையும், மூத்தோரையும், நம் நாட்டையும், அதன் ஆட்சியாளர்களையும், அன்பு செய்யவும், மதிக்கவும் நம்மை ஊக்குவிக்கிறது. இறை பக்தி என்னும் கொடையால் நிரப்பப்பட்டவர் தனது மதத்தை ஒரு பாரமான கடமையாகப் பார்க்காமல் மகிழ்ச்சியான பணியாக அதை நடைமுறைப்படுத்துகிறார். "எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே செயல்கள் உழைப்பாகக் கருதப்படுவதில்லை."
செபம்:
ஓ தெய்வீக இறை பக்தியின் ஆவியாரே வாரும். வந்து என் இதயத்தைக் பற்றிக் கொள்ளும். நான் கடவுளது பணியில் மட்டுமே திருப்தி அடையவும், அவருக்காக அன்புடன் எல்லா நியாயமான திரு அவையின் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியவும், எனக்குக் கடவுள் மீதுள்ள அன்பின் ஆவலைத் தூண்டிவிடும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
நான்காம் நாள்:
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே வந்தருள்வீர்.
வாசகம் 1: 1 கொரிந்தியர் 3 : 16 – 17
வாசகம் 2: உரோமையர் 8 : 14 – 17
மனவலிமை என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் மனவலிமை என்னும் கொடை, நம்மை எல்லா விதமான இயற்கையின் பயத்திற்கு எதிராக பலப்படுத்தப்பட்டு, நமது கடமைகளைத் திரம்பட நிறைவேற்ற ஆதரவளிக்கிறது. இக்கொடை நாம் மேற்கொள்ளும் மிகக் கடினமான ஆபத்துக்கள் நிறைந்த பணிகளை எதிர்கொள்ள உந்துதலையும் சக்தியையும் தந்து, சிலவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும், மனித அவமரியாதைகளைக் காலால் மிதித்துத் தள்ளி வாழ்நாளில் வரும் துன்பங்களை மெதுவாகத் தியாகம் செய்து சகித்துக் கொள்ளவும் திடம் அளிக்கிறது. "இறுதி வரை நிலைத்து நிற்பவன் மீட்படைவான்”.
செபம்:
ஓ தெய்வீக மனவலிமையின் ஆவியாரே வாரும். வந்து என் துன்ப நேரத்திலும் ஆபத்துக் காலத்திலும் என் ஆன்மாவைத் தூக்கி நிறுத்தி, என் பலவீனத்தை பலப்படுத்தி, என் எதிரிகளின் எல்லா தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் துணிவை அளித்து, நல்லவராகிய என் கடவுளைக்கு எதிராகப் பாவம் செய்து அவரிடமிருந்து என்றும் பிரியாதிருக்க உமது வல்லமை அளித்தருளும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
ஐந்தாம் நாள்:
உன்னதப் பேரின்ப ஒளியே வந்தருள்வீர். உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
வாசகம்: 1 கொரிந்தியர் 12 : 4 – 11, 31, 13 : 13
அறிவு என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் அறிவு என்னும் கொடை, நம் ஆன்மாவைக் கடவுளுடைய தொடர்பில், உண்மையான மதிப்பில் படைக்கப்பட்டவற்றை மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த அறிவு, படைப்புக்களின் பாசாங்குத்தனத்தை மறைத்து, அதன் வெறுமைத்தனத்தை வெளிப்படுத்தி, இறைபணியில் உள்ள கருவிகளின் ஒரே உண்மையான நோக்கத்தைச் சுட்டிக்காட்ட உதவுகிறது. இது கடவுளின் அன்பான கவலையைத் துல்லியமாகக் காட்டி, எல்லா சூழ்நிலையிலும் அவரை மாட்சிப்படுத்த நம்மை வழிநடத்துகிறது. அதன் ஒளியால் வழிநடத்தப்படும் நாம், முதலானவற்றை முதலில் வைத்து, கடவுளின் கொடையான நட்பை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கத் தூண்டுகிறது. "அறிவைக் கொண்டோருக்கு அது வாழ்வின் நீரூற்று”.
செபம்:
ஓ தெய்வீக அறிவின் ஆவியாரே வாரும். வந்து என் தந்தையின் திருவுளத்தை நான் அறிந்து கொள்ளும்படி எனக்கு அருள் தாரும். இவ்வுலகப் பொருட்களின் வெறுமையை எனக்குக் காட்டி, அவற்றின் மாயையை உணர்த்தி, அவற்றை உமது மாட்சிக்காகவும், எனது மீட்புக்காகவும் பயன்படுத்தி, உம்மையும் நீர் அருளும் நிலையான கொடைகளையும் அவற்றுக்கு மேலாகக் காண வரமருளும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
ஆறாம் நாள்:
உமது அருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை. நல்லது அவனில் ஏதுமில்லை.
வாசகம்: உரோமையர் 7 : 15 – 20, 8 : 26 – 27
புரிந்துணர்வு என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் புரிந்துணர்வு என்னும் கொடை, நம் புனித மதத்தின் உண்மைகளின் பொருளை அறியவும், நம்பிக்கையினால் தெரியவும், தெரிதலால் கற்கவும், கற்றலால் அதைப் பாராட்டி அதில் மகிழ்ந்திருக்கவும் உதவுகிறது. வெளிப்படுத்திய உண்மைகளின் உட்பொருளை ஊடுருவி, அவற்றின் வழியாக வாழ்க்கையின் புதுமைக்குள் விரைந்து செல்ல நம்மைத் தூண்டுகிறது. மலடாகவும் செயலற்றதாகவும் இருக்கும் நமது நம்பிக்கையை நலமான சாட்சியமிக்க வாழ்க்கை முறைக்குக் கொண்டு செல்ல ஊக்கமளிக்கிறது. ஆதனால் நாம் "கடவுளுக்குப் பிரியமான செயல்களினால் மனமகிழ்ச்சி அடையவும், கடவுளை நாடும் அறிவை மிகுதியாகப் பெறவும்” தொடங்குகிறோம்.
செபம்:
ஓ தெய்வீகப் புரிந்துணர்வின் ஆவியாரே வாரும். வந்து உமது மீட்பின் மறை உண்மைகளை நாங்கள் நன்கு அறிந்து நம்பிக்கை கொள்ளவும், இறுதியில் உமது ஒளியின் உதவியால் அந்த நித்திய ஒளியைக் காணத் தகுதி பெறவும், அந்த மாட்சியின் பிரகாசத்தில் தெளிவான பார்வை பெறவும் எங்கள் உள்ளத்திற்கு விழிப்பூட்டியருளும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
ஏழாம் நாள்:
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வாசகம்: கலாத்தியர் 5 : 1, 13 – 26
ஆலோசனை என்னும் கொடை:
தூய ஆவியார் அருளும் ஆலோசனை என்னும் கொடை, நம் ஆன்மாவை இயற்கைக்கு முரணானவற்றைக் கடந்து, குறிப்பாகக் கடினமான சூழ்நிலைகளில், செய்ய வேண்டியவற்றை விரைவாகத் தீர்மானித்துச் சரியாகச் செயல்பட வைக்கிறது. பெற்றோர், ஆசிரியர், அரசு அலுவலர், கிறிஸ்தவ குடிமக்கள் என நம் அன்றாடக் கடமையில் எதிர்கொள்ளும் எண்ணற்ற திடமான நிகழ்வுகளுக்குப் பதிலளிக்க ஏற்ற அறிவையும் புரிந்துணர்வையும் வழங்குகிறது. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட பொது அறிவு, மீட்புக்கான தேடலின் விலைமதிப்பற்ற புதையல். "இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னதமானவரை நோக்கிச் செபியுங்கள், அவர் உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.”
செபம்:
ஓ தெய்வீக ஆலோசனையின் ஆவியாரே வாரும். வந்து என் வழிகளிலெல்லாம் உதவி செய்து வழிகாட்டி, நான் என்றும் உமது திருவுளத்தை நிறைவேற்ற உதவியருளும். என் இதயம் என்றும் நன்மையை நாடவும், தீமையை விட்டு விலகவும், உமது கட்டளைகளின் நேரான வழிகளில் என்னை நடத்தி, எனது குறிக்கோளான நிலைவாழ்வைப் பெற என்னை வழிநடத்தியருளும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
எட்டாம் நாள்:
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர்.
வாசகம்: 1 கொரிந்தியர் 2 : 9 – 16
ஞானம் என்னும் கொடை:
எப்படி தானம் மற்ற எல்லா நல்லொழுக்கங்களையும் உள்ளடக்கியுள்ளதோ அதைப் போலவே தூய ஆவியார் அருளும் ஞானம் என்னும் கொடையே மற்ற எல்லாக் கொடைகளையும் நற்பண்புகளையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த கொடை. ‘அவள் வழியாகவே எல்லா நற்செயல்களும், எண்ணிலடங்காத செல்வங்களும் என்னை வந்தடைந்தது” என சாலமோனின் ஞான நூலில் எழுதப்பட்டுள்ளது. இந்த ஞானம் என்னும் கொடையே நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, எதிர்நோக்கைத் திடப்படுத்தி, தானத்தை முழுமைப்படுத்தி, உயர்ந்த அளவில் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க நம்மை ஊக்குவிக்கிறது. இந்த ஞானம் இவ்வுலகைச் சார்ந்த மகிழ்வின் பால் ஈர்ப்பை இழக்கும் தெய்வீக விஷயங்களைப் புரிந்து மகிழ நம் உள்ளத்திற்கு ஒளியூட்டுகிறது. மேலும், "உங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வாருங்கள். என் நுகம் இனிது. என் சுமை எளிது” என்னும் நம் மீட்பரின் வார்த்தை வழியாக கிறிஸ்து இயேசுவின் சிலுவை நமக்கு ஒரு தெய்வீக இனிமையை அளிக்கிறது.
செபம்:
ஓ தெய்வீக ஞானத்தின் ஆவியாரே வாரும். வந்து விண்ணகச் செயல்களின் மறை உண்மைகளையும், அவற்றின் மேலான பெருமைகளையும், வல்லமையையும், அழகையும் என் ஆன்மாவுக்கு வெளிப்படுத்தியருளும். எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை அன்பு செய்து, உலகெல்லாம் கடந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடையக் கற்றுத்தாரும். அவற்றைப் பெற்று என்றும் பற்றிக் கொள்ள உதவியருளும். ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்
ஒன்பதாம் நாள்:
இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர். அழிவிலா இன்பமும் அருள்வீரே. ஆமென்.
வாசகம் 1: யோவான் 20 : 19 – 23
வாசகம் 2: 2 கொரிந்தியர் 5 : 20 – 21, 6 : 4 – 6
தூய ஆவியாரின் கனிகள்:
தூய ஆவியாரின் கொடைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நல்லொழுக்கங்களை முழுமைப்படுத்தி, தெய்வீகத்தை அதிகக் கருத்தோடு ஊக்குவிக்க நம்மைப் பழக்கப் படுத்துகிறது. தூய ஆவியாரின் வழிநடத்துதலில் கடவுளின் அறிவிலும் அன்பிலும் நாம் வளரும்போது, நம்முடைய இறைப்பணி மிகவும் நேர்மையானதாகவும், தாராளமானதாகவும், நல்லொழுக்க முறையில் முழுமையடையும். நமது இதயத்தை மகிழ்ச்சியாலும் ஆறுதலாலும் நிறைவிக்கும் இப்படிப்பட்ட நல்லொழுக்கச் செயல்களே தூய ஆவியாரின் கனிகள். இக்கனிகள் நமது நல்லொழுக்கச் செயல்களை மேலும் கவர்ச்சிகரமானதாக்கி நம்மை ஆண்டு நடத்தும் இறைவனுக்கு அதிகமாகச் சேவை செய்ய வலுவான ஊக்கத்தை அளிக்கின்றன.
செபம்:
ஓ தெய்வீகத் தூய ஆவியாரே வாரும். வந்து உமது விண்ணகக் கனிகளாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றால் என் இதயத்தை நிரப்பி, நான் இறைப்பணியில் என்றும் சோர்ந்து போகாமல், உமது தொடர்ச்சியான வழிநடத்தலுக்கு நம்பிக்கையுடன் கீழ்ப்படிவதன்மூலம், தந்தையிடமும் மகனிடமும் உள்ள அன்பில் என்றென்றும் ஒன்றித்து வாழ அருள்புரியும் ஆமென்.
கர்த்தர் கற்பித்த செபம் (1 முறை)
மங்கள வார்த்தை செபம் (1 முறை)
மூவொரு இறைவன் புகழ் செபம் (1 முறை)
தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்
தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்