புனித அமிர்தநாதர் (அம்புரோஸ்) (340 – 397)
இவர் பிரான்ஸ் நாட்டில் 340-ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தை உயர்ந்த பதவியில் இருந்தவர். இவர் சிறுவனாய் இருக்கும் பொழுது தந்தை இறந்து போனார். தாயுடன் இவர் உரோமைக்குச் சென்றார். இவருக்கு நல்ல கல்விப்பயிற்சி அளிக்கப்பட்டது. கிரேக்க மொழியிலும் இவர் பயிற்சி பெற்று கவிஞரும், சிறந்த பேச்சாளருமானார். பின்னர் இவர் தம் சகோதரனோடு மிலான் நகருக்குச் சென்றார். லிகூரியா, எமிலியா இம்மாகாணங்களின் ஆளுநராக இவரை நியமித்தார்கள். 374-ஆம் ஆண்டில் மிலான்நகர் ஆயர் இறந்தபின் புதிய ஆயரைத் தேர்ந்தெடுப்பதற்காக குருக்களும், மக்களும் கூடியிருந்தனர். தேர்தலை மேற்பார்க்கும்படி இவர் போயிருந்தார். அப்பொழுது ஒரு சிறு குழந்தை “அம்புரோஸ் நம் ஆயர்” என்று கத்தியது. கத்தோலிக்கர்களும், ஆரியத்தலைவர்களும் சேர்ந்து இவரை ஆயர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார்கள். மனதின்றி இவர் இப்பதவியை ஏற்றார். இவரோ இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை. ஞானஸ்நானம் பெற்று ஆயராக திருநிலைப்படுத்தப்பட்ட பொழுது இவருக்கு வயது 34.
தமது சொத்துக்களையெல்லாம் கோவிலுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து விட்டு வேதாகமத்தையும் திருச்சபையின் எழுத்தாளர்களது நூல்களையும் படித்து ஆராயத் தொடங்கினார். சிம்பிளியானுஸ் என்னும் குரு இதில் இவருக்கு உதவியாக இருந்தார். ஆரிய பதிதக் கொள்கைகளை இவர் எதிர்த்துப் போராடியமையால் இவரது மறை மாவட்டத்தில் ஒரு சிலரே இக்கொள்கையைப் பின்பற்றினர். 381-ல் மிலான் நகரில் ஒரு சங்கத்தை இவர் கூட்டி அப்பொலினாரிஸ் என்பவரது தவறான போதனையைக் கண்டித்தார். அடுத்த ஆண்டில் உரோமையில் ஒரு சங்கம் நடந்தது. அதற்கும் இவர் போயிருந்தார். மாக்சிமுஸ் என்னும் பேரரசன் பிரான்ஸ் நாட்டில் பதவி ஏற்ற போது இவர் அங்கு சென்று அவருடன் ஒரு சமாதான உடன்படிக்கை செய்தார். 387-ஆம் ஆண்டில் இரண்டாம் மறையாக இவர் தூது சென்றும் முயற்சிகள் அத்தனை பலனளிக்கவில்லை. மாக்சிமுஸ் இத்தாலி நாட்டின் மீது போர் தொடுத்தான். தெயதோசியுஸ் என்னும் பேரரசன் அவனைத் தோற்கடித்தான். அம்புரோஸ் பட்சமுள்ளவர், சாந்தமுள்ளவர். அனுதாபமுள்ளவர் ஏழைகள் மீதும் துன்புறுத்தப்பட்டவர் மீதும் மிகுந்த இரக்கம் காண்பிப்பார். கிறிஸ்துநாதருடைய போதனைகள், கடவுளது சட்டங்கள் கடவுளது உரிமைகள் இவற்றில் இவர் விட்டுக் கொடுக்க மாட்டார். ஜஸ்தீனா என்னும் பேரரசி கோவில் ஒன்றை பதிதர்களுக்குக் கொடுப்பதை இவர் அச்சமின்றி தடுத்து நிறுத்தினார். தெயதோசியுஸ் பேரரசன் மாசற்றவர்களை அநியாயமாக கொன்றான். அவனை அம்புரோஸ் கோவிலுக்குள் நுழைய விடவில்லை. தாவீதரசனும் தவறு செய்தாரே என்று பேரரசன் சாக்குப்போக்குச் சொன்னான். அப்பொழுது அம்புரோஸ், “தவறு செய்த தாவீது பரிகாரமாக தவம் செய்தார் அல்லவா?” என்றார். பேரரசனும் பகிரங்க தவம் செய்து தன் அக்கிரமத்துக்கு பரிகாரம் செய்யலானான்.
சிந்தனை:
தவறு செய்த தலைவர்களிடம் இவர் கண்டிப்பாய் இருந்தார். தமது கடமையைச் செய்ய பின்வாங்கியவரல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டானார்.
செபம்:
ஆண்டவரே, ஆர்வமும் ஆற்றலும் நிறைந்த ஆயர்களையும், குருக்களையும், துறவிகளையும், பொது நிலையினரையும் திருச்சபைக்குத் தாரும்.