திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசக்கட்டை மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேருன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்."
உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், "நீர் உடனே வந்து உணவருந்த அமரும்" என்று உங்களில் எவராவது சொல்வாரா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? மாறாக, "எனக்கு உணவு ஏற்பாடு செய்யும், உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும், அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்" என்று சொல்வாரல்லவா?
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள்."
கடுகளவு நம்பிக்கை சீடர்கள் இயேசுவிடம் தங்களின் நம்பிக்கையை மிகுதியாக்கும்படி கேட்டார்கள். இயேசு கடுகளவு நம்பிக்கை இருந்தால்கூட மரத்தையும் மலையையும் பெயர்க்கமுடியும் என்று அறிவித்தார். எனவே, தம் சீடர்களுக்குத் தேவையானது பணிவும் தாழ்மையுமே என்பதை இந்த உவமையின் வாயிலாக அறிவித்தார்.
பணியாளர்
உழுதல், மந்தையை மேய்த்தல்
பணியாளருக்கு நன்றி கூறுவாரா?
பயனற்ற பணியாளர்
இயேசுவின் சீடர்கள்
நற்செய்தியை விதைத்தல், நம்பிக்கையுள்ளோரை வழிநடத்துதல்
இயேசுவின் சீடர்கள் வெகுமதியையும், ஓய்வையும் எதிர்பார்க்காமல் பணிபுரியவேண்டும்
தாழ்மையுள்ள சீடர்களாக இருக்கவேண்டும்
பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்துவிட்டோ வரும்போது, எவராவது தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? இயேசுவின் காலத்தில் கூலியாள்கள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தலைவரின் வயல்களில் கடுமையாக உழைத்தார்கள். அவர்கள் பணியை முடித்து வரும்போது களைப்பாகவும் பசியோடும் இருப்பார்கள். அப்போதும் அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. தமக்கு உணவை ஏற்பாடு செய்யவும் வேறு பணிகள் இருந்தால், அதை முடிக்கும்படி ஆணையிடுவார்கள். தாம் கூறிய பணிகளைச் செய்துமுடித்த பணியாளருக்குத் தலைவர் எவரும் நன்றி கூறுவதில்லை.
நற்செய்தியின் பணியில் தலைவராகிய இயேசுவும் பணியாளராகவே இருந்தார். திருவிருந்து அளிக்கும்போது இயேசு, "யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்" என்று கூறினார். தம்மைப் போலவே, அவரது சீடர்களும் பணியாளர்களாகவே இருக்கவேண்டும் என்று இயேசு அறிவித்தார். நற்செய்தியை அறியாத மக்களிடையே அவர்கள் இறைவார்த்தையை விதைக்கவேண்டும். நம்பிக்கையுள்ளோரை வழிநடத்தும் மேற்பார்வையாளராக பணிபுரியவேண்டும். அளிக்கப்பட்டப் பணிகளை ஓய்வின்றிச் செய்து முடிக்கவேண்டும். நன்றியையோ, ஒய்வையோ, எதிர்பார்க்காமல் தங்கள் பணியைத் தொடரவேண்டும் என்று இயேசு தம் சீடருக்கு அறிவுரை கூறினார்.
பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், "நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்" எனச் சொல்லுங்கள். இயேசுவின் காலத்தில் பணியாளர்களுக்கு ஒய்வும் இல்லை, பாராட்டும் இல்லை. அவ்வாறே, நற்செய்திப் பணியில் ஈடுபடும் சீடர்கள், அதற்கு எந்தவிதமான கூலியோ, பாராட்டையோ, வெகுமதியையோ எதிர்பார்க்கக் கூடாது. அது அவர்களின் கடமையாக இருப்பதால், தாழ்மையுடனும் செய்யவேண்டும் என்று இயேசு தம் சீடருக்கு அறிவித்தார். கடவுளின் அளவில்லாத இரக்கமே அவர்களுடைய பணிக்குப் பரிசாக அளிக்கப்படுகிறது.
திருத்தூதர் பவுலும், "நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு" என்று அவரின் கடமையை அறிவித்தார்.